Headlines News :
முகப்பு » , , , , » இலங்கையின் பெண்ணுரிமை முன்னோடி மேரி ரட்னம் - என்.சரவணன்

இலங்கையின் பெண்ணுரிமை முன்னோடி மேரி ரட்னம் - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 18


மேரி ரட்னம் இலங்கையின் பெண்கள் உரிமைக்காக போராடிய முக்கிய முன்னோடியாக அறியப்படுபவர். 

02.06.1873ஆம் ஆண்டு கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாநிலத்தில் பிறந்த மேரி ஏர்வின் ஐரிஷ்-ஸ்கொட்டிஷ் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். திருச்சபைக் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் சமூக சீர்திருத்தங்களில் பங்குபற்றி சமூகத் தீமைகளை அகற்றும் நோக்குடன் மிஷனரி பணிகளில் ஈடுபடுபட்டு வந்த காலம்.  மேரி ரட்னத்தின் இள வயது காலத்தில் இப்படியான பணிகளில் ஈடுபட்டார். அவர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சிபெற்று 1896இல் பட்டம் பெற்றார். வைத்திய சமூகப் பணிகள் செய்யும் “உலக சகோதரத்துவம்” என்கிற கிறிஸ்தவ இலட்சியத்தால் ஈர்க்கப்பட்ட அவர் வெளிநாட்டில் மிஷன்களுக்கான பணியில் ஈடுபட நியுயோர்க்கில் பயிற்சி பெற அனுப்பப்பட்டார்.
எஸ்.சீ.கே.ரட்னம், மேரி ரட்னம் தம்பதிகள் 1898
நியுயோர்க்கில் மேரி ஏர்வின் யாழ்ப்பாணத்து வேலணையைச் சேர்ந்த கிறிஸ்தவரான சாமுவேல் கிறிஸ்மஸ் கனக ரட்னத்தை சந்தித்து நட்பானார். கிறிஸ்தவ பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரட்னம் இலங்கையிலும், இந்தியாவிலும் மிஷனரிக் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று பம்பாயிலிருந்த லண்டன் மிஷனரி சங்கத்தின் உயர்நிலைப் பாடசாலையின் அதிபராகவும் ஆனவர். மெய்யியலிலும், தர்க்கவியளிலும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்ற அவர் உலக நாடுகள் பலவற்றுக்கு விரிவுரைச் சுற்றுப்பிரயாணங்களை செய்து வந்தார். மேரி ஏர்வின் யாழ்ப்பாண மிஷன் வைத்தியசாலைக்கு நியமனம் பெற்றத்தைத் தொடர்ந்து அவரை சந்தித்த ரட்னம் மேரிக்கு தமிழ் கற்பிக்கவும் முன்வந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் 16.07.1896 இல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இணுவிலில் பெண்களுக்கான மக்லியோட் வைத்தியசாலையை நிறுவும் பொறுப்பு மேரிக்கு வழங்கப்பட்டு இலங்கை வந்தடைந்தார். அவர் திருமணமான செய்தியை மிஷன் அறிந்திருக்கவில்லை. இலங்கையில் வைத்து அந்த தகவலை அறிந்த மிஷன் மேரி ரட்னத்தை கனடாவுக்கு திருப்பி அழைத்துக்கொண்டது. அவரது கணவர் ரட்னம்; மிஷனின் இந்த மோசமான முயற்சியைக் கண்டித்து பத்திரிகையில் எழுதினார். அமெரிக்க மிஷனில் இருந்தும் விலகிய ரட்னம் கொழும்பு வந்தார். 1897இல் மேரி ரட்னமும் கனடாவிலிருந்து கொழும்பு வந்தடைத்தார். தன்னை விலக்கியமைக்குப பின்னால் நிறவாதத்தின் வகிபாகம் இருந்தததையும் கண்டு நொந்தாராயினும் அதனை அவர் விமர்சிக்கவில்லை. ஆனால் கணவர் ரட்னம் பகிரங்கமாக நிரவாதத்தைக் கண்டித்தார்.

மேரி ரட்னம் பல்வேறு சமூக சீர்திருத்த வேலைகளில் தன்னை ஈடுபடுத்தினார். குறிப்பாக வர்க்கம், சாதி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பெண்களது சமூக அரசியல் உரிமைகள் தொடர்பான மேரி ரட்னத்தின் பணிகள் மக்களைக் கவர்ந்தது.

மேரி ரட்னம் கனடாவில் தனது குடும்பத்துடன்
கூடவே அவர் கொழும்பில் பெண்களுக்கான லேடி ஹெவ்லொக் அரச வைத்தியசாலையில் தற்காலிகமாக கடமையாற்றிக்கொண்டிருந்தார். கனேடிய பட்டத்தை அங்கீகரிக்காமல் அவருக்கு நிரந்த நியமனத்தையும் வழங்க மறுத்து வந்தது. இதற்கு எதிராக கணவரும் சேர்ந்து போராடிய போதும் தீர்வு கிட்டவில்லை. இறுதியில் மகப்பேற்று மருத்துவராக தனியார் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டார். இதேவேளை 1899 இல் ரட்னம் புறக்கோட்டையில் ஆண்களுக்கான பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார். 1900இல் அது மத்திய கல்லூரி என்று பெயர் மாற்றம் பெற்று கொட்டாஞ்சேனைக்கு இடம்மாற்றப்பட்டது. ரட்னம் அதன் அதிபராக ஆனார். அவர் ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கைப் பல்கலைக் கழகச் சங்கத்துக்கு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.


மேரி ரட்னம் 1904-இல் யுவதிகள் நட்புறவுச் சங்கத்தை (Girls Friendly Society) நிறுவினார். அதே வருடம் இலங்கைப் பெண்கள் சங்கத்தையும் (Ceylon Women's Union) ஆரம்பித்தார். சகல இனத்து பெண்களும் அங்கம் வகித்ததுடன் பல கிளைகளும் உருவாக்கப்பட்டு இயங்கி வந்தது. அந்த சங்கத்தின் மூலம் பெண்களின் உடல் நலம், சுகாதாரம் , மருத்துவம், போன்ற விடயங்களில் அதிக பிரசாரங்களையும், கூட்டங்களையும், விரிவுரைகளையும் நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொண்டார். அவர் 1923இல் வெளியிட்ட பாடசாலைகளுக்கான உடல்நலக் கைநூல் (A Health Manual for Schools), 1933 இல் வெளியான இலங்கைப் பாடசாலைகளுக்கான வீட்டுப் பனிக் கைநூல் (Home Craft Manual for Ceylon Schools) என்பன ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டவை. சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய சமூக விமர்சனங்களையும் உள்ளடக்கியது இந்த நூல். இலங்கையின் பாலியல் கல்வியின் முன்னோடியாக மேரி ரட்னத்தை குறிப்பிடுகிறார் கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா. குடும்பத் திட்டமிடல் பற்றிய பிரசாரங்களை மேற்கொண்ட மேரி அதன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசாங்கத்துக்கு அவர் வற்புறுத்தியும் பாடத்திட்டத்தில் அதனை சேர்க்க அரசாங்கம் மறுத்துவிட்டது. பின்னர் அவரே மாநாடுகள், கருத்தரங்குகளை மேற்கொண்ட வேளை பலத்த எதிர்ப்புக்கும் உள்ளானார். இலங்கையின் “குடும்பத் திட்டமிடலின் தாய்” என மேரி ரட்தினத்தைக் குறிப்பிடுகிறார் குமாரி ஜெயவர்த்தன. மதுவிலக்கு இயக்கத்தின் முக்கிய பிரமுகராகவும் முக்கிய பேச்சாளராகவும் மேரி ரட்னம் இயங்கினார்.


1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் (Women's Franchise Union) ஸ்தாபகர்களில் ஒருவர் மேரி ரட்னம். இந்த அமைப்பு மேற்கொண்ட போராட்டங்களின் விளைவு தான் 1931 இல் டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் இலங்கையின் சர்வஜன வாக்குரிமை அளிக்கப்பட்டபோது பெண்களும் ஆண்களுக்கு நிகராக வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டார்கள். டொனமூர் குழுவின் முன் இந்த சங்கத்தைச் சேர்ந்த மேரி ரட்னம் உள்ளிட்ட பல பெண்கள் அளித்த சாட்சியம் வரலாற்றுப் பதிவுமிக்க கருத்துக்கள். இதன் விளைவாக 1931 இல் நடந்த தேர்தலில் எடலின் மொலமூரே, நேசம் சரவணமுத்து ஆகியோர் சட்டசபைக்கு முதலாவது பெண்களாக தெரிவானார்கள். பின்னர் இந்த சங்கம் “பெண்கள் அரசியல் சங்கம்” (Women’s Political Union) என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த இதுவே 1944 இல் அகில இலங்கை பெண்கள் சங்கம் (All Ceylon Women’s Conference) உருவாக காரணமானது. இந்த சங்கத்தின் முதலாவது கூட்டத்தில் அதன் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான மேரி ரட்னம் “சீதனத்தை சட்டபூர்வமாக ஒழிக்கவேண்டும்”  என்று விபரமாக உரையாற்றினார்.

1920 களின் பிற்பகுதியில் மேரி ரட்னம் கனடா சென்று கிராமியப் பெண்கள் மத்தியில் உள்ள பெண்கள் நிறுவனங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக கல்விச் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டார். அங்கு பெற்ற அனுபவத்துடன் திரும்பி 1930 இல்“லங்கா மஹில சமித்தி” என்கிற அமைப்பை ஆரம்பித்தார். அதன்  இந்த அமைப்பு கிராமியப் பெண்களையும், நகர்ப்புறப் பெண்களையும் இணைத்து பல்வேறு வேலைத்திட்டக்னலை முன்னெடுத்தது. 1948 இல் நாட்டின் பல பகுதிகளிலும் 125 கிளைகளுடனும் 6000 அங்கத்தவர்களுடனும் அது இயங்கியிருந்தது. 1959 இல் 1400 கிளைகளும் 150,000 அங்கத்தினர்க்களுமாக அது உயர்ந்தது. பிற்காலத்தில் உலகில் முதல் பிரதமராக தெரிவான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 1941 இல் இதில் இணைந்ததன் மூலம்தான் பொதுப்பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தார். அந்த அமைப்பின் பொருளாளராகவும், உப தலைவராகவும் சிறிமா இருந்து வந்தார். 1960இல் பிரதமாராகும் வரை அதில் தீவிர செயற்பாட்டாளராக இருந்தார் சிறிமா.

மேரி ரட்னத்தின் பிறந்தநாளின் போது சிறிமாவோ பண்டாரநாயக்க

சூரியமல் இயக்கம், மலேரியா ஒழிப்பியக்கம் என்பவற்றில் இடதுசாரிகளுடன் இணைந்து அவர் பணியாற்றினார். 1934-1935 காலப்பகுதியில் இலங்கையில் மலேரியா நோய் பரவி ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டது. அதிகமாக பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்தில் மேரி ரட்னமும் அவரது மகன் ரொபினும் மேலேறிய ஒழிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.  

1937இல் அவர் பம்பலப்பிட்டி தொகுதியில் முனிசிபல் கவுன்சிலரானார். இலங்கையில் முதலாவது பெண் முனிசிபல் கவுன்சிலர் மேரி ரட்னம் தான். அந்தத் தேர்தலில் மேரியை “அந்நியர், கொம்யூனிசத்தைப் பிரசாரம் செய்பவர்; சமயப்பற்றற்ற வெளிநாட்டவர், குடும்பத் திட்ட பிரச்சாரகர்” என்றெல்லாம் அவமதிக்கப்பட்டார்.
“நான் கனடாவில் பிறந்தேன் என்பது உண்மைதான். ஆனால் நாற்பது வருடங்களாக இந்நாட்டு மக்களில் ஒருவராக வாழ்ந்துள்ளேன். எனது நலன்களும் அவர்களது நலன்களும் ஒன்று எனவே கருதினேன். எனது நீண்ட காலச் சேவையானது எனது எதிர்ப்பாளரின் குரலை விடப் பலம் மிக்கது." என்றார் மேரி ரட்னம்
லங்கா சம சமாஜக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக ரொபின் ரட்னம் விளங்கியமையாலும் அக்காலத்தில் மேரி ரட்னத்துக்கு என். எம்.பெரெரா அளித்த ஆதரவின் காரணமாகவும் மேரி ரட்னத்தின் மீது தமது எதிர் பிரசாரத்தை மேற்கொண்டனர்.

இவ்வளவு எதிர்ப்பின் மத்தியிலும் அவர் 540 வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். அவருடன் போட்டியிட்டவர்களான பிபின் சில்வாவும், ரொபின் சொய்சாவும் முறையே 261, 233 வாக்குகளையே பெற்றனர். நகர சபை மண்டபத்திற்கு வெளியே தேர்தல் முடிவுக்காகக் காத்து நின்ற பெருந்தொகையான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது "முதலாவது பெண் கவுன்சிலரை முனிசிப்பல் கவுன்சிலுக்கு அனுப்பியமைக்காகப் பம்பலப்பிட்டி பெருமைப்பட வேண்டும்" எனக் கூறினார்.

அவர் பதவி வகித்த காலத்தில் சுகாதாரம், சந்தைகள், வீட்டுவசதிகள், நகர முன்னேற்றம், பொது நுாலகம், நெருக்கடி நிவாரணம் போன்ற விடயங்களில் அதிக சேவைகளைச் செய்தார். ஆனால் அவரை அரசியலிலிருந்து துரத்துவதற்கு எதிரிகள் விடாப்பிடியாக முயற்சி செய்தனர்.

1938 இல் அவரது முகவரி மாற்றம் தொடர்பாக, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற தவறு காரணமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதனால் மூன்று வருடங்களும் முழுமையாக அவரால் சேவையாற்ற இயலவில்லை. அதன் பின்னர் அவர் தேர்தலில் போட்டியிட வில்லை.

1949 தேர்தலில் விவியன் குணவர்த்தன, ஆயிஷா ரவுப் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். "நான் தொடங்கிய பணியைத் தொடர்வதற்குக் கவுன்சிலில் ஒரு பெண் வேண்டும், அனுபவம், அறிவு, ஆற்றல் கொண்ட இவ்வேட்பாளரை நான் முழு மனதுடன் சிபார்சு செய்வேன்" என்றார்.

மேரி ரட்னத்துக்கு நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகள் இருந்தனர். மூன்றாவது மகன் ரொபின் ரட்னம் (1904-1968) கனடாவில் இடைநிலைக் கல்வி பயின்று மக்ஹில் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுமாணிப்பட்டம் பெற்றார். பின்னாளில் கனேடியப் பிரதமரான லெஸ்டர் பிபர்சன் அவரது நண்பராகவும் ஆசிரியராகவும் இருந்தார். 1920 களின் பிற்பகுதியில் லண்டனில் வசித்த ரொபின் தேசியவாதிகளும், சோசலிஸ்டுகளுமான இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்த மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இலங்கை திரும்பிய பின் யூத் லீக் (youth league) இயக்கத்தில் சேர்ந்தார்.இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் ஸ்தாபகர்களில் ரொபினும் ஒருவர் அதன் செயலாளராகவும் கடமையாற்றியிருக்கிறார்..

பிலிப்பைன்சில் வருடாந்தம் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்காக வழங்கப்படும் “ரமோன் மக்சேசே” விருது (Ramon Magsaysay Award) 1958ஆம் ஆண்டு தொடக்கப்பட்டபோது அதே ஆண்டு முதல் விருது மேரி ரட்னத்துக்குத் தான் வழங்கப்பட்டது. இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மேரி ரட்னம் ஒரு இலங்கையர் அல்ல, ஆசிய நாட்டைச் சேர்ந்தவரும் அல்ல. இலங்கையராக வாழ்ந்த ஒரு கனேடியர்.

மேரி ரட்னம் 15.05.1962 இல் மரணமானார். இலங்கையர்களுக்காகவே வாழ்ந்து மடிந்த அந்நிய நாட்டவர் வரிசையில் மேரி ரட்னம் தனித்துத் தெரிபவர்.

உசாத்துணை:

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates