Headlines News :
முகப்பு » » வரலாற்றை விசாரிக்கும் கூட்டு ஒப்பந்தம் - கபில்நாத்

வரலாற்றை விசாரிக்கும் கூட்டு ஒப்பந்தம் - கபில்நாத்


இலங்கையின் தேயிலைக்கு 150 வயதாகிறது. அதனை அடையாளப்படுத்தும் முகமாக 'முத்திரை' யும் வெளியிடப்பட்டுவிட்டது.  இந்த 150 வருட கால வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் இலங்கையில் தேயிலைக் கைத்தொழிலை நிர்வகித்த பெரும்பாலான காலப்பகுதி பிரித்தானியர் வசமே இருந்திருப்பதனை அவதானிக்கலாம். 1867 ஆம் ஆண்டு வர்த்தக பயிராக தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 1972ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்படும் வரையான 100 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதி பிரித்தானியர் வசமே தேயிலைப் பெருந்தோட்ட நிர்வாகம் இருந்து வந்துள்ளது. 

1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்துடன் 50 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவை தனியார் கொண்டிருக்க முடியாது எனும் நிலைமையில் பிரித்தானியர் பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறினர். அதாவது இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் பெருந்தோட்டப் பகுதிகளில் பிரித்தானியர் ராஜ்ஜியமே இருந்தது. அதுவரை காலமும் பெருந்தோட்ட தொழில் நிர்வாகம் மாத்திரம் அல்ல அதனையொட்டி வாழும் சமூகத்தினை நிர்வகிப்பதையும்  பிரித்தானியரே தம்வசம் கொண்டிருந்தனர். ஒருபுறம் இலங்கை பிரஜாவுரிமை இல்லாதிருந்த மலையக மக்களை அந்த நாட்களில் கேள்வி கேட்க யாருமற்ற நிலையில் பிரித்தானியர்களின் அடிமை போலவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகம் வைக்கப்பட்டார்கள். 

1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசானபோதுதான் பெருந்தோட்டங்களையும் அதுசார்ந்து வாழ்ந்த மக்களின் நிர்வாகப் பொறுப்புக்கள் சிலதையும் கூட அரசாங்கம்  பொறுப்பேற்றது. 1964 ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் அந்த ஒப்பந்தப்படி இந்தியா செல்ல விண்ணப்பித்தவர்கள் தவிர ஏனையோர் இலங்கையிலேயே வசிப்பர் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவர்களை இலங்கை அரச நிர்வாகத்துக்குள் உள்வாங்க வேண்டிய கடப்பாடு அப்போதைய ஸ்ரீமாவோ அரசுக்கு ஏற்பட்டது. பெருந்தோட்டங்களை பிரித்தானியரிடம் இருந்து பொறுப்பெற்ற அரசு மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (ஜனவசம), இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் (எஸ்.பி.சி) போன்ற அரச நிறுவனங்களின் ஊடாக அதன் நிர்வாகத்தை மேற்கொள்ள நேரிட்டது. 

150 வருட தேயிலை வரலாற்றை முன்னிட்டு
  வெளியிடப்பட்ட முத்திரை
அதன்படி, உள்நாட்டு நியதிச்சட்டங்கள் பெருந்தோட்டக் கைத்தொழில் துறைக்குள் அதிக செல்வாக்கு செலுத்தத்தொடங்கின. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப்பணம், குறைந்தபட்ச சம்பளம், சம்பள சபையின் ஊடாக சம்பள நிர்ணயம் என சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் பெருந்தோ ட்டக்கைத்தொழில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த காலப்பகுதியில் அநேக தொழிற்சங்கப் போராட்டங்கள் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல வாரலாற்று சான்றுகள் உண்டு. அதேநேரம் வாக்குரிமை இல்லாத காரணத்தினால் தொழிற்சங்க கட்டமைப்பையே தங்களது அரசியல் இயக்கமாகவும் கொண்டிருந்த மக்கள் தமது தொழிற்சங்க பலத்தையே நம்பியிருந்தனர். 

மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்றபோது அது அரசாங்கத்தின் நேரடியான ஏற்றுமதி வருமானத்தை பாதிப்பதாக அமைந்தது. எனவே அரசு அத்தகைய தொழிற்சங்க போராட்டங்களுக்கு முகம் கொடுத்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எனினும் 1992 ஆம் ஆண்டு ஆகும் போது பொது நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கையின் அடிப்படையில் பெருந்தோட்டங்களை   தனியார் மயப்படுத்த அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்தது. அன்றைய நாட்களில் அரசாங்கத்திற்கு இருந்த பெரும் சுமையாக அவர்கள் கருதியது, தோட்டங்களை நிர்வகிப்பது மாத்திரம் அன்றி அங்குள்ள சமூக நிர்வாகத்தை கொண்டிழுப்பதாகும். தொழிலாளர் குடியிருப்புகளை பராமரித்தல், தோட்டங்களுக்குள் பாதை வலையமைப்பை பராமரித்தல்.

1987 ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டமே தோட்டப்பகுதி குடியிருப்பு பகுதிக்கு சேவையாற்றுவதில் இருந்து தம்மை விலக்கிக்கொண்டிருந்தது. அதனை தோட்ட நிர்வாகமே முன்னெடுக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இன்றும் கூட அந்த சட்டமே நடைமுறையில் உள்ளது. அண்மைய காலத்தில் அதனை திருத்துவதற்கான பிரேரணைகள் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டன, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் சட்டத்திருத்தம் இன்னும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.) எனவே தோட்டங்களையும் அத சார்ந்த சமூகத்தையும் பராமரிப்பதை சுமையாக எண்ணிய அரசாங்கம் அதனை தனியாருக்கு ஒப்படைக்கத் தீர்மானித்தது. அதுநாள் வரை இருபது வருடங்களாக ஜனவசம, எஸ்பிசி, தோட்டங்களாக இருந்தவற்றுள் பெரும்பகுதி 23 பிராந்திய கம்பனிகளாக வகைப்படுத்தப்பட்டது. தேயிலைக்காணிகள் அரசின் உடமையாகக் கருதப்பட்டு அதன் நிர்வாகம் பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. எனவே அரசாங்கம் பொன்பங்குதாரர் (Golden share holder) என நிலம் தொடர்பான உரிமையை மாத்திரம் கையில் வைத்துக்கொண்டது. 

நிர்வாக விடயங்களில் இருந்து இயலுமானவரை விலகிக்கொண்டது. பெருமளவு பங்குகளும் முழுமையான நிர்வாகமும் தனியார் வசமாகின. தொழிலாளர்களுக்கு சிறுஅளவில் பங்குகள் வழங்கப்பட்டன.  ஆனால், அது தனியார் மயமாதல் ஊடாக தொழிலாளர்கள் தோட்டத்தின் பங்குதாரர்கள் ஆகிறார்கள் என பெருமெடுப்பில் பேசப்பட்டது. காலப்போக்கில் அந்த பங்குகளின் எண்ணிக்கை மிகசொற்பமானது என வெளிப்பட்டது. தொழிலாளர்கள் ஆரம்பத்தில் அந்த பங்கு பத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு நிலைமையும் காணப்பட்டது. பின்னர் அது மறுக்கபட்ட ஒரு விடயமாக மாறிப்போனது. அதேநேரம் தொழிலாளர் நலன் பேண் விடயங்களை கவனிப்பதற்கு என பிராந்திய கம்பனிகள் ஒரு நிதியத்தை உருவாக்கி செய்ற்படுவது என்றும் மாதாந்தம் சமூக நலன் பேண் விடயங்களுக்காக தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை இந்த நிதியத்துக்கு தோட்டக்கம்பனிகள் வழங்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்தகைய தீர்மானத்தின்படி உருவானதே 'பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்' எனும் ட்ரஸ்ட். இந்த ட்ரஸ்ட் நிறுவனத்தின் இயக்குனர் சபையில் தொழிற்சங்க தரப்பில் இருவரும் திறைசேரி தரப்பில் ஒருவரும் அங்கம் வகித்தபோதும் பெரும்பாலான இயக்குனர்கள் கம்பனிகளின் பிரதிநிதிகாளகவே காணப்பட்டனர். எனவே அவர்கள் பலமே அங்கு ஓங்கியிருந்தது. தலைவர் பதவிக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம். அது ஒரு நாமநிர்வாகிப் பதவி மாத்திரமே. திறைசேரி அங்கத்தவர் கணக்கீட்டு ஒழுங்ககளை சரிபார்க்கும் பொறுப்பையே வகிப்பார். எனவே அரசாங்கத்தின் பிடி என்பது ட்ரஸ்ட் நிறுவனத்தின் மிகவும் பலவீனமானது. இதனை அரசாங்கம் திட்டமிட்டே மேற்கொண்டுள்ளது. காரணம் தோட்ட சமூகத்தைப் பராமரிக்கும் சுமையை அரசு தவிர்த்துக்கொள்ள எண்ணியது. 

தனியார் மயப்படுத்தப்பட்டு ஆறு வருடங்களின் பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த முறைப்படி சம்பளத்தை தீர்மானிக்கும் முறைமையை தனியார் பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகள் அறிமுகம் செய்தன. கூட்டு ஒப்பந்த முறை சர்வதேச ரீதியாக எற்றுக்கொள்ளப்பட்ட முறையாயினும் மலையகப் பெருந்தோட்டத்தில் அது நடைமுறைப்படுத்தப்பட்டவிதம் ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது. காரணம் அரச பொறுப்பில் தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டபோது இருந்த பல்வேறு சட்டப்பாதுகாப்பை இந்த கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் செய்தது. கூட்டு ஒப்பந்தத்தினால் உள்வாங்கப்படும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுவார்கள் எனும் சரத்து சட்டத்தில் காணப்பட்டமை இதற்கு பிரதான காரணமாகியது. 

தவிரவும் இரண்டாண்டுக்கு ஒரு முறை இந்த கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதும் அந்த ஒவ்வொரு காலத்தின்போதும் கூட்டு ஒப்பந்த விதிமுறைகள் மாற்றத்திற்கு உள்ளாவதும் பெரும் சர்சசைக்கும் போராட்டங்களுக்கும் உட்பட்டிருக்கின்ற ஒரு விடயமானது. குறிப்பாக மலையக சம்பளப்பிரச்சினை என்பதுபோன்ற தோற்றப்பாடே என்பதை வெளியுலகுக்கு காட்டுவதாக 'கூட்டு ஒப்பந்த' சலசலப்பு அமைந்தது. 

கூட்டு ஒப்பந்தத்ததுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடாத்தப்பட்டிருக்கின்றது. அந்தப் பேராட்டங்கள் எல்லாமே தனியார் கம்பனிகளுக்கு எதிராக இருந்ததே அன்றி அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையவில்லை. இது 1992 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைமைக்கு மாறானதாகும். எனவே தோட்டத் தொழிற்சங்க போராட்டங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கவில்லை. அரசாங்கம் மத்தியஸ்தம் வகிக்கும் ஒரு நிலைப்பாட்டில் மாத்திரம் இருந்துகொண்டு தொழிற்சங்கங்களினதும் முதலாளிமார் சம்மேளனத்தினதும் கைகளுக்கு பிரச்சினையை விட்டிருக்கிறது.
தொழிற்சங்கள் பல இருக்கின்றபோதும் அதிகளவான உறுப்பின ர்களைக்கொண்ட தொழிற்சங்கங்களே கூட்டு ஒப்பந்த பேரம் பேசுதலில் பங்கேற்க முடியும் என்ற நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் சிறு தொழிற்சங்கங்களின் கூட்டான தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டி ஆகியன தொடர்ச்சியாக கூட்டு ஒப்பந்த பேரம் பேசுதலில் ஈடுபட்டு கையொப்பம் இட்டு வந்தன.
இந்த மூன்று தொழிற்சங்கங்கள் தவிரந்த ஏனையவை இரண்டு விதமான போராட்டங்களை முன்னெடுத்தன. ஒன்று கம்பனிக்கு எதிரானது. இன்னொன்னு கூட்டு ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்களுக்கு எதிரானது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களை எதிர்த்ததன் பிரதான காரணம் கூட்டு ஒப்பந்த முறை அல்லது கூட்டு ஒப்பந்த சரத்துகள் முறையற்றது என்றும் அதில் இருந்து விலகக்கோரியமாக அமைந்தது. 

ஒவ்வொருமுறை போராட்டங்களின்போதும் இந்த எதிர்ப்புகள் வெளிப்படும். அதேநேரம் சில தொழிற்சங்கங்கள் தாங்கள் கூட்டு ஒப்பந்த முறைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதாக அறிவிக்கும். எனினும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்ட பின்னர் எல்லாம் மறந்த கதையாகிவிடும். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பதாக எஸ்.சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஒரு தொழிலாளியைக் கொண்டு வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தது. அந்த காலப்பகுதியில் கூட்டு ஒப்பந்தம் மீளப்புதிப்பக்கப்படடது. அந்த மீளப்புதுப்பித்தலை காரணம் காட்டி குறிப்பிட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

எனினும் 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை ரத்துச்செய்யுமாறு கோரி மக்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் இ.தம்பையா தாக்கல் செய்த மனு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வருகின்றது. 

மக்கள் தொழிலாளர் சங்கம் முன்வைத்துள்ள மனுவில் நிலுவைச்சம்பளம் என்பது தொழிலாளர்கள் தொடர்ந்துபெற்றுவந்துள்ளமையால் அது தொழிலாளர்கள் எற்கனவே பெற்றுவந்த உரிமை என்றும் , அத்தோடு சம்பள கூட்டு ஒப்பந்தங்கள் இரண்டு வருடங்களுக்க ஒரு முறை இடம்பெற்று வந்த நிலையில் அதுவும் எற்கனவே அனுபவித்து வந்த உரிமை என்றும் அவைகள் மீறப்பட முடியாததென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு கொடுப்பனவுகள் உள்ளிட்ட மொத்த சம்பாத்தியத்துக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான பங்களிப்பு வழங்கப்படாமை அந்த நியதிச்சட்டங்களை மீறும் நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் முன்வைக்கப்படும் யோசனைகள் 300 நாள் வேலை வழங்கும் ஆரம்ப ஒப்பந்தத்தினை மீறுகின்றமையையும் காரணம் காட்டி 2016 ஆம் அண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ரத்துச்செய்யப்படவேண்டும் என கோரியிருக்கிறது. 

இதற்கு பதிலாக ஆட்சேபனை மனுவை கையளித்திருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் அம்சங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இதுவரைகாலம் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை ஆமோதிப்பதுபோல உள்ளது. எனெனில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் செய்யப்படல் வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ ஏற்பாடுகளோ அல்லது தேவைப்பாடுகளோ இல்லை. அத்துடன் இதுவரை செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி சட்டத்திற்கு உட்பட்ட சம்பாத்தியத்தில் இணைக்கப்படவில்லை என்பதால் 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக அவை செலுத்தப்பட வேண்டியதில்லை. எனவே மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ரிட் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என இ.தொ.கா.கோரியிருக்கிறது. 

ஆக 20 வருடங்களுக்க மேலாக நடைமுறையில் இருக்கின்றபோதும் காலம் தாழ்த்தியேனும் நீதிமன்றத்திற்கு முன்கொண்டு செல்லப்பட்டுள்ள 'கூட்டு ஒப்பந்த' விடயம் இப்போது பல்வேறு உட்கிடைக்கைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள, எதிர்வரும் மாதங்களில் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய எனைய தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் தமது ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யும் போது இன்னும் பல கோணங்களில் விடயங்களில் வெளிவரக்கூடும். தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்த புதிய முறையொன்றுக்கான தேவையை இது வலியுறுத்துவதோடு மட்டுமல்லாது புதிய  மாற்று சிந்தனைகளுடனான தொழிற்சங்க கட்டமைப்பின் தேவையையும் உணர்த்துவதாக உள்ளது. இப்போது கூட்டு ஒப்பந்தமும் வரலாற்றை விசாரிக்கும் நிலைக்கும் உட்பட்டுவிட்டது.

நன்றி தினக்குரல்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள பிரதான தொழிற்சங்கமான இ.தொ.க வின் ஒப்பந்த அறிக்கை...
CWC's Objection by jeeva on Scribd
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates