Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

களுத்துறையில் முதலாவது தமிழ் நூலகம்; ஏமாற்றமடைந்த மக்கள்!


வாசிப்பு மனிதனை பூரணமாக்குகின்றது. வாசிப்பு பழக்கம் ஒவ்வொருவரி-டமும் இருக்க வேண்டியது அவசியமாகும் வாசிப்பு மூலம் தகவல்களை அறிந்து கொள்ளவும். அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடியும். இதற்கு வசதியாகவே நாட்டின் பல பிரதேசங்களிலும் பொது நூலகங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்-றன.

ஆனால், இன்று தமிழ் மக்களைப் பொருத்தவரையில் குறிப்பாக, களுத்துறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. ஏன் பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரிடம் கூட இது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

பாடசாலைகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவை முறை-யாக இயங்குவதில்லை. இன்று சிறுவர் முதல் பெரியோர் வரையில் பல தரப்பி-னரும் தொலைக்காட்சி மோகத்திலும், கையடக்கத் தொலைபேசி புழக்கத்திலும் மூழ்கிக் கிடக்கின்றனரே தவிர, பத்திரிகை வாசித்து, நாட்டு நடப்பு, உலக நடப்புக்-களை அறிந்துகொள்வதிலும் நூல்களை வாசித்து அறிவுத்திறனை விருத்தி செய்து கொள்வதிலும் ஆர்வமற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் நூல்களை வாசிக்கும் பழக்கம் அற்றுப் போய்விட்டதென்றே கூற வேண்டும். மாறாக, அவர்களின் கைகளில் கையடக்கத் தொலைபேசி வைத்திருப்பதையே காணமுடிகிறது.

பொது நூலகங்களில் இயங்கிவரும் தமிழ்ப் பிரிவுகளில் தினசரிப் பத்திரிகை மற்றும் நூல்கள் வைக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் வாசகர்கள் அங்கு சென்று வாசித்தலில் ஈடுபடுவதைக் காணமுடிவதில்லை.

இதன் காரணமாகவே பொது நூலகங்களில் இயங்கிவரும் தமிழ்ப் பிரிவுகள் எவ்வித அபிவிருத்தியும் காணாது கவனிப்பாரற்ற நிலையிலேயே இருந்து வருகின்-றமை குறிப்பிடத்தக்கதாகும். நேரத்தை ஒதுக்கி நூலகத்துக்குச் சென்று வாசித்து, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்வதிலும் பத்திரிகை வாசித்து நாட்டுலக நடப்புக்களை அறிந்து கொள்வதிலும் ஆர்வமற்றவர்களாக தோட்ட மக்கள் தோட்-டங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையை மாற்றியமைத்து தமிழ் மக்கள் வாழும் தோட்டப்பகுதிகளி-லேயே தமிழ் நூலகம் அமைத்துக் கொடுத்து, அவர்கள் வாசித்தலில் ஈடுபட்டு பயன் பெறுவதற்கான ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த காலத்தில் ஹொரணை பிரதேச சபையினால் ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சபையின் முன்னாள் தலைவர் யாமித் சந்தன ஹத்துருசிங்க மேற்கொண்ட முயற்சியினால் இங்கிரிய, றைகம் தோட்டம், கீழ்ப்பிரிவில் தோட்ட பாடசாலை அமைந்திருந்த காணியைப் பெற்று களுத்துறை மாவட்டத்தில் தோட்டமொன்றில் உருவாகப் போகும் முதலாவது தமிழ் நூலகம் எனக் கூறி 2013.05.22 இல் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்து சமய ஆசாரப்படி கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னாள் அமைச்சர் நிர்மல கொத்தலாவ தலைமையில் கோலாகலமான முறையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போதைய அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்ட-மானின் அமைச்சினூடாக உதவியைப் பெற்று நூலகம் அமைக்கப்பட்டு யாழ்ப்-பாணம் மற்றும் இந்தியாவிலிருந்து நூல்கள் பெற்றுக்கொள்ளப்படும் என சபையின் முன்னாள் தலைவர் யாமித் சந்தன ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.

ஆனால், அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்டபோ-திலும் இன்று வரையில் அந்த இடத்தில் உறுதியளித்தவாறு தமிழ் நூலகம் ஒன்று உருவாக வில்லை. அங்கு எந்த ஒரு பணியும் கூட ஆரம்பிக்கப்படாததுடன், அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமைக்கான எந்த ஒரு அறிகுறியுமே காணாது காணியில் புல் பூண்டுகள் வளர்ந்து வெறும் காணி மட்டுமே காட்சியளித்த வண்ண-மாக உள்ளது.

தமிழ் நூலகம் உருவாகப் போகின்றது என சந்தோஷத்தில் இருந்த தமிழ் மக்-களின் எதிர்பார்ப்பை நிறைவேறாமல் வைக்காமல் போனமை குறித்து மிகுந்த அதி-ருப்தியும், கவலையும் அடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் தோட்ட மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றி வைக்கப்படுவதில்லை. அத்த-கைய வாக்குறுதிகளில் ஒன்று தான் இதுவும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட மறுதினமே அங்கு நாட்டி வைக்-கப்பட்டிருந்த நினைவுப் பலகை இனந்தெரியாத சிலரினால் உடைத்து சேதப்படுத்தப்-பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட அன்றைய தினத்தில் இங்கிரிய நகரில் உலக வங்கியின் உதவியுடன் சுமார் 3 ½ கோடி ரூபா செலவில் சகலவசதிகளுடன் அமைக்கப்பட்ட பொது நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நூலகம் குறித்து ஏற்கனவே சுட்டிக் காட்டப்-பட்டிருந்ததையடுத்து அமைச்சர் மனோ கணேசன் கடந்த ஜுலை 19 அன்று குறித்த தோட்டத்துக்கு வருகை தரவிருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் கே.ரீ.குரு-சாமி பத்திரிகைச் செய்தி மூலம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, அமைச்சரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தோட்ட மக்கள் அமைச்சர் வருகை தராமற்போனமை குறித்து மிகுந்த ஏமாற்றம-டைந்துள்ளனர்.

இதேவேளையில் நூலகம் அமைப்பதற்கென ஒதுக்கப்பட்ட காணி சுமார் ஆறு பேர்ச் அளவில் இருப்பதால் நூலகம் அமைப்பதற்கு போதுமானதாக இல்லையென்பதுடன், நூலகம் அமையப் பெறுவதற்கு பொருத்தமான சூழலைக் கொண்டிருக்கவில்லையெனத் தெரிவிக்கும் தோட்ட மக்கள், றைகம் கீழ்ப்பிரிவில் நூலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான காணியை அங்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, அமைச்சர் மனோ கணேசன் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி - வீரகேசரி

சூறையாடப்படும் பெருந்தோட்ட வளங்கள்! - ஜோன்சன்


இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கி வருகின்ற தேயிலை தொழிற்றுறை இன்று நலிவுப் போக்கை நோக்கி நகர்ந்து வருகின்றது. இற்றைக்கு இருநூறு வருட கால வரலாற்றை தொட்டுள்ள பெருந்தோட்ட தொழிற்துறையில் தேயிலை பயிர்ச்செய்கை இந்திய வம்சாவளி மலையக மக்களின் கறை படிந்த வரலாற்றினையும் அந்நிய செலாவணி வருமானத்தின் மூலம் இலங்கை பொருளாதாரம் கண்டுள்ள எழுச்சியினையும் எமக்கு எடுத்துக் கூறுகின்றது.

மலையகத்திலுள்ள பெருந்தோட்டங்களை அரசாங்கம் குத்தகை அடிப்படையில் தனியார் கம்பனி நிர்வாகங்களின் கீழ் கையளித்த நாளிலிருந்து தேயிலை பயிர்ச்செய்கையும் பெருந்தோட்டங்களில் தொழில் பார்த்து வரும் தொழிலாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலாப நோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனி நிர்வாகங்கள் வருமானம் ஈட்டும் வழிகளை கண்டறிந்து பெருந்தோட்ட வளங்களை சுரண்டி வருகின்றன.

தேயிலை தொழிற்றுறையில் கடின உழைப்பை வெளிப்படுத்தி தேயிலை உற்பத்திக்கு வலு சேர்த்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் தோட்டங்களை விட்டு வெளியேறி வேறு தொழில்களுக்கு செல்வது அதிகரித்து வருகின்றது. சில தோட்டங்களில் ஆண், பெண் தொழிலாளர்கள் நூறிற்கு குறைவாகவே உள்ளனர். இவ்வாறான தொழிலாளர் வெளியேற்றத்திற்கு காரணமாக கம்பனி நிர்வாகங்கள் அவர்கள் மீது மேற்கொள்ளும் கெடுபிடிகள் உள்ளன. இந்த நிலைமை தொடர்கின்ற பட்சத்தில் இன்னும் சில வருடங்களில் அதிகமான பெருந்தோட்டங்கள் மூடுவிழா காணும் நிலைக்குத் தள்ளப்படும்.

கம்பனி நிர்வாகங்களின் கீழ் மலையக பெருந்தோட்டங்கள் வந்த நாளிலிருந்து தோட்டங்களில் இருக்கும் கருங்கற்கள் தொடக்கம் பல்வகையான விலைதரு மரங்களும் ஒப்பந்தக்காரர்களுக்கு விலைபேசி விற்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை தோட்ட நிர்வாகங்கள் முன்னெடுக்கும் வேளையில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு சட்ட ரீதியான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.

இதன் காரணமாக தோட்டங்களில் உள்ள பெறுமதியான மரங்களை ஒப்பந்தக்காரர்கள் வெட்டி அகற்றும் போது தொழிலாளர்கள் அதற்கெதிராக எதிர்ப்புக் காட்டினாலும் அது பயனற்றுப் போகிறது. தொழிலாளர்கள் தங்களது குடியிருப்புகளில் திருத்தங்களை மேற்கொள்ள முனையும் போது பல்வேறு கெடுபிடிகளை கையாள்கின்றனர். எனினும் நூற்றாண்டு காலமாக பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்த குடியிருப்புக்களுக்கு முன்னால் வளர்ந்து நிற்கின்ற பலா மரங்கள் உட்பட பயன்தரு மரங்கள் தோட்ட நிர்வாகங்களால் சட்ட ரீதியான முன்னெடுப்புகளுடன் வெட்டித் தரிக்கப்படுகின்றன.

தேயிலை செய்கைக்குப் பதிலாக மலையகத்தில் பெரும்பாலான தோட்டங்களில் இறப்பர், கருவா, மிளகு, கமுகு மற்றும் வாழை போன்ற செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர் குறைப்பு மறைமுகமாக இடம்பெற்று வருகின்றது. ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வேலைநாட்கள் குறைக்கப்பட்டு வருவதால் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு சுயமாக தோட்டங்களை விட்டு வெளியேறுகின்றனர். குறிப்பாக பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று பணிப்பெண்களாக செல்கின்றனர். இது மலையக குடும்பங்களில் சமூக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

காணி, வீட்டுரிமை அற்று காணப்படுகின்ற மலையக மக்களுக்கு தாங்கள் வாழ்கின்ற இடத்திலே எதுவுமே சொந்தமில்லை என்ற எண்ணக்கருவை ஏற்படுத்துவதில் தோட்டங்களில் உள்ள “குடும்ப நல உத்தியோகத்தர்கள்” முக்கிய பங்காற்றுகின்றனர். எமது சமூகத்திலே பிறந்த இவர்கள் கம்பனிகளின் கைக்கூலிகளாக செயற்பட்டு எமது சமூகத்தின் இனவிருத்தி தொடக்கம் அபிவிருத்தி விடயங்களில் பாரிய முட்டுக்கட்டையாக இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும். இவர்களின் நடவடிக்கை தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் (டிரஸ்ட் நிறுவனம்) தலைவர் வீ.புத்திரசிகாமணி முறையான ஆய்வுகளை மேற்கொண்டு சில முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

கம்பனி நிர்வாகங்கள் தோட்டத்தில் உள்ள வளங்களை அதிக லாபத்தில் ஒப்பந்தக்காரர்களுக்கு விற்கும் போது முறையான சட்டதிட்டங்களைக் கடைபிடித்து வருகின்றன. இதன் காரணமாக தொழிலார்கள் மத்தியில் இருந்து வரும் எதிர்ப்புகளை இலகுவில் சமாளித்து விடுகின்றன. இச்சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கங்களும் முறையான சட்ட ஏற்பாடுகளுடன் அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கையை விரித்து விடுகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

மலையகத்தில் உள்ள இயற்கை வளங்கள் பல்வேறு வழிகளில் சூறையாடப்படுவது எதிர்காலத்தில் புவியியல் சமூகம் சார் பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் எமது சமூகத்தின் இருப்பையும் கேள்விக்குறிக்குள்ளாக்கும். எனவே மலையக தொழிற்சங்கங்களும் கூட்டு ஒப்பந்த தரப்பினரும் மக்கள் பிரதிநிதிகளும் பெருந்தோட்டங்களில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக சில நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கம்பனி நிர்வாகங்களுக்கு அனைத்து மட்டங்களிலும் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசரமான அவசியமாகும்.

நன்றி - veerakesari

லயன்கள் ஒழிப்பு எப்போது? வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்!


'ஏழு பேர்ச்சஸ் காணி தனி வீட்டுத்திட்டம்' நல்லாட்சியின் கீழ் வெகு முனைப்புடன் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் நாள் ஒரு அடிக்கல்லும் பொழுதொரு தனி வீட்டுத் திறப்பும் என பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார். பெருந்தோட்டங்கள் என்றில்லாமல் மாவட்ட நகரங்களுக்கும் அவரது பார்வை நீண்டு வருவது பாராட்டுக்குரியது. அண்மைய பணியாக ஹட்டன் நகர அபிவிருத்திக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த தகர வேலி அகற்றப்பட்டு வயர் மெஸ் வேலி இப்போது அழகுடன் மிளிர்கிறது. சொல்வதைச் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்ற பாணியில் அமைச்சர் திகாம்பரம் செயலாற்றுகிறார்.

அவரது அடிப்படை எண்ணக்கருவான லயன் முறை ஒழிக்கப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஹட்டனில் தகர வேலி அகற்றப்பட்டு வயர்மெஸ் வேலி அமைக்கப்பட்டதைப் போல பெருந்தோட்ட லயன்கள் உடைத்து நொறுக்கப்பட்டு தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அமைச்சர் செயற்பட வேண்டும். ஓரிரு இடங்களில் மட்டும் இவ்வாறான லயன் அகற்றும் பணி இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. தனி வீட்டுத் திட்டம் சந்திரசேகரன் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. முற்றுமுழுதாக இலவசமாக இல்லாமல் மக்களின் பங்களிப்புடன் இது செயற்படுத்தப்பட்டது. பொருட்களும் நிதியும் வழங்கப்பட்டு சிரமதான அடிப்படையில் மக்களே வீடுகளை அமைத்துக் கொள்ளும் வகையில் அப்போது வீடுகள் உருவாகின. ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் வீட்டுத் திட்டங்கள் உருவாகின. அன்றைய காலகட்டத்தில் நிதி மட்டுப்படுத்தப்பட்டதாகவே வழங்கப்பட்டது. இன்று அமைச்சர் திகாம்பரம் நல்லாட்சி அரசின் மூலமாக பாரியளவு நிதியினை பெறக்கூடியவராக இருக்கிறார். எவ்வளவு விரைவாக லயன்கள் ஒழிக்கப்படுகிறதோ எமது மக்களுக்கும் விரைவில் விடிவு கிடைக்கும்.

மலையகத்தில் வீட்டுத் திட்டங்கள் அவ்வப்போது நிறைவேற்றப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. லயன்கள் தான் மாறாமல் இருக்கின்றன. நீண்ட லயன்கள் நடுநடுவில் பிரிக்கப்பட்டு தனி வீடுகளாக்கப்பட்டன. இடையில் உடைக்கப்பட்ட காம்பராக்களில் குடியிருந்தவர்களுக்கு தனிவீடுகள் அல்லது இரட்டைக் குடியிருப்புகள் கொடுக்கப்பட்டன. சிறிதுகால இடைவெளியில் நடுவில் பிரிக்கப்பட்ட காம்பராக்களும் மக்களால் விஸ்தரிக்கப்பட்டு மீண்டும் லயன்களாகின. இதற்கு தனிவீடுகள் அமைக்கப்படாமையே காரணமாகும்.

மகாவலித் திட்டம் அமுலாக்கப் பட்டபோது வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கு மகாவலி வீடுகள் என்றே பெயரிருந்தன. பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது தான் மாடிவீட்டுத் திட்டங்கள். பல்வேறு விமர்சனங்களோடு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாடி லயன் திட்டம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் முன்னர் இருந்த லயன் முறை ஒழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு பேர்ச்சஸ் காணி, தனிவீடு என்ற குறைபாடு இருந்தபோதும் வாழ்க்கைத்தரம் ஓரளவு மாற்றத்திற்குள்ளானது என்பதை மறுக்க முடியாது. இவ்வாறான மாடி வீடுகள் சில இடங்களில் சுதந்திரத்திற்கு முன்னரும் கட்டப்பட்டு இருந்தன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

எனவே, எத்தகைய புதிய வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை லயன்களை ஒழித்துக்கட்டுவதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். தீயினால் லயன்கள் அழிகின்றன. மண்சரிவால் லயன் புதைந்துப் போகின்றன. நீர் மின் திட்டங்களால் லயன்கள் இல்லாமல் செய்யப்படுகின்றன. வேறு எந்த திட்டங்களாலும் லயன்களை ஒழிக்க முடியவில்லை. ஏழு பேர்ச்சஸ் காணியுடன் தனிவீட்டுத் திட்டங்களும் இவ்வாறு லயன்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

மேல் கொத்மலை மின் திட்டத்தால் தலவாக்கலை நகரமும் சூழவுள்ள இடங்களும் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்பது நிதர்சனமாகும். எதிர்காலத்தில் நுவரெலியாவிற்கு அடுத்த உல்லாசப் பயணிகளை கவரும் ஓர் இடமாக தலவாக்கலை விளங்கப்போகிறது. இங்கு இருந்த லயன்கள் அழிக்கப்பட்டு சுமார் 500 வீடுகளில் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் எமது சமூகத்தவர் என்பது கவனத்திற்கொள்ளத்தக்கது. அவர்கள் அனைவரின் வாழ்க்கைத் தரமும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றமடைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களைப் பார்த்து இன்னமும் லயன்களில் வாழும் எம்மக்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். லோகி, சென்கிளயர், டெவன், ஹொலிரூட் போன்ற நீர்த்தேக்கத்தை சூழவுள்ள எம்மக்களின் லயன்கள் திருஷ்டி கழிப்பவைகளாக காட்சி தருகின்றன. சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கவாவது இந்த லயன்கள் உடைத்தெறியப்பட வேண்டும்.

பெருந்தோட்ட மக்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகம் என்ற பொறாமை இனவாதிகளுக்கு இன்றும் இருக்கிறது. கடந்தகால வரலாற்றைப் பார்த்தால் இது விளங்கும். அமரர் தொண்டமான் காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பெருந்தோட்ட அமைச்சு பின்னர் படிப்படியாக பிடுங்கப்பட்டு வலுவிலக்கச் செய்யப்பட்டது. எதிர்காலத்திலும் இது நடக்காது என எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே அரசு மந்தமாக செயற்பட்டாலும் நாம் அசட்டையாக இருந்து விடக்கூடாது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். அமைச்சரின் துடிப்புக் கேற்ப அவரது தொண்டரடிப்படையும் ஈடு கொடுத்து செயற்படுவார்களா-?

நன்றி - தினக்குரல்

பிரேசரின் திட்டமும், பிடிபட்ட கள்வர்களும்! (1915 கண்டி கலகம் –46) - என்.சரவணன்

ஏ.ஜீ.பிரேசர் (A. G. Fraser)
பொய் சாட்சிகளால் குற்றவாளிகளாக்கப்பட்டவர்கள் பற்றிய பல சம்பவங்கள் பதிவாகின. இவை குறித்து விரிவாக போன்ன்னம்பலம் இராமநாதன், ஆர்மண்ட் டீ சூசா போன்றோர் விளக்கியுள்ளனர்.

பண்டாரநாயக்க
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ள பிரெடெரிக் டயஸ் பண்டாரநாயக்க கலவரம் நிகழ்ந்தபோது தனது ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்தார். பல முஸ்லிம்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காகவும், கலவரத்தை அடக்குவதற்காகவும் அவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். ஆனால் ஜூன் 13 அன்று அவரும் கைதானார். அவரின் வேட்டை சோதனையிட்ட பஞ்சாப் படையினர் அங்கிருந்த பல ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். அப்படி சோதனையிட்டவேளை ஒரு பஞ்சாப் படையினன் அவரின் கைக்கடிகாரத்தையும், தங்க மாலை ஒன்றையும் களவாடினான். இது குறித்து அங்கு வந்திருந்த கட்டளை அதிகாரியிடம் பண்டாரநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்ததும் அந்த பஞ்சாப் படியினனை சோதனை இட்டார்கள். இறுதியில் தலைப்பாகைக்குள் மறைத்து வைத்திருந்த அந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மூன்று நாட்களாக நடந்த விசாரணையின் இறுதியில் அவர் மீது எதுவித குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் ஆணையாளர் ஒல்னட் அவரை விடுவிப்பதற்கு முன்வந்தார். ஆனால் இன்னொரு ஆணையாளரான முவர் பண்டாரநாயக்கவை இராணுவ நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தொடர்ந்து ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நான்கு நாட்களில் இராணுவ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஜூன் 15ஆம் திகதி வழக்கின் போது அவருக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவர் அளித்த சாட்சிகளைத் தவிர மேலதிக சாட்சியங்கள் எதுவும் இல்லை. தேசத்துரோகம், கடைகள் இரண்டை உடைத்தது என்கிற மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கு நான்கு நாட்கள் போதுமானது அல்ல என்று அவர் ஆணையாளரிடம் வேண்டினார். அதன் விளைவாக அவருக்கு ஓகஸ்ட் 19 வரை காலக்கெடு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கால இடைவெளிக்குள் பண்டாரநாயக்கவின் நண்பர்கள் ஆதாரங்களைத் திரட்டினார்கள். சாட்சியமளித்த அந்த இருவரும் சம்பவ தினத்தன்று தொம்பவின்ன தோட்டத்தில் தோட்ட அதிகாரியின் பாதுகாப்பிலேயே இருந்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்தார்கள் அவர்கள். பண்டாரநாயக்க விடுதலை செய்யப்பட்டார். ஆனால் பொய் சாட்சி கூறிய இருவருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொலிஸ் அல்லது விசேட ஆணையாளரால் இரண்டு மாதங்களுக்கு முன்னரே எளிமையாக விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிந்திருக்க முடியும். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அதேவேளை இந்த பாதகச் செயல்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பட்டவேளை அதற்கு பதிலளித்த தேசாதிபதி “இராணுவ நீதிமன்றத்துக்கு அனுப்பட்ட அத்தனை வழக்குகளும் தீர விசாரணை செய்யப்பட்டவை தான்” என்று புளுகினார். 

சிவில் நீதிமன்றங்கள் குறைந்தபட்சம் நியாயமாகவே நடந்துகொண்டது. அதற்கான முக்கிய காரணம், சிவில் நீதிமன்றங்கள் துறைசார் நிபுணத்துவத்துடன் அதனை மேற்கொண்டது தான். பெரும்பாலும் இத்தகைய குற்றச்சாட்டுகளில் மாட்டப்பட்டோர் தனவந்தர்களாகவோ, சமூக அந்தஸ்துடையவர்களாகவோ இருந்தார்கள் என்பது இங்குகவனிக்கத்தக்கது.

கலவரம் செய்தது, கடயுடைத்தது, கொள்ளையடித்தது போன்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு நீதிமன்றத்தில் நால்வருக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. ஒருவர் கிராமத்தளைவரான எம்.ஜே.ரொத்ரிகோ, இன்னொருவர் அரசாங்க கன்ராக்டரான டீ.சீ.லூயிஸ், கேபிரியல் டி சில்வா, கிரினேலிஸ் ஆகியோரே அவர்கள். இவர்கள் நால்வரும் செல்வந்தர்கள். சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்ட இடத்தில் அவர்கள் இருக்கக்கூட இல்லை என்பது சாட்சியங்களில் தெரியவந்தது. சாட்சியமளித்தவர்கள் பொய் சாட்சியளித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த நீதிபதி நால்வரையும் விடுதலை செய்தார். இதே வழக்கு இராணுவ நீதிமன்றத்தில் நடந்திருந்தால் நிச்சயம் இவர்கள் நால்வரும் குற்றவாளிகளாக்கப்பட்டிருப்பார்கள்.

கண்டியில் பெரஹர நிகழ்ந்த போது தொடங்கிய கலவரத்தில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு நடந்தது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பீ.பீ.ரத்னாயக்க அந்த கலவரத்திற்கு தலைமை தாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். ஐரோப்பியர்களை கொலை செய்ய சதி செய்தது, கலவரம் மேற்கொண்டது, கடையுடைப்பு, கலவரத்துக்கு மக்களை தூண்டியது உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன. ஜூனிலிருந்து ஒக்டோபர் வரை அவர் சிறையிலிருந்தார்.

இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிபதியால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.  ஆனால் அந்த ஆவணங்கள் எதுவும் இந்த வழக்குடம் சந்மபதப்பட்டதில்லை என்றும் வழக்கை திசைதிருப்பும் நோக்குடன் இப்படி கூறப்பட்டிப்பதாகவும் பகிரங்கமாக நீதிபதியால் கண்டிக்கப்பட்டது. நீதிபதி ரத்னாயக்கவை விடுவித்தார். அதற்கான இன்னொரு காரணம் கலவரம் நிகழ்ந்த அடுத்த நாள் அந்த கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 28 பேர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியளை பொலிஸ் விசாரணையாளரால் சமர்ப்பிக்கப்பட்டது அல்லவா. அந்த பட்டியலில் ரத்நாயக்கவின் பெயர் எங்கும் இருக்கவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். மேலும் அவரை குற்றவாளியாக்க போலியாக முற்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மூவர் குறித்தும் அவர் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

“இந்த மூன்று சாட்சியாளர்கள் குறித்தும் நான் கொஞ்சமும் நம்பவில்லை. அவர்கள் குறித்து நீண்ட விளக்கம் அளிக்கத் தேவையில்லை.” என்றும் அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

100 பவுன்
கலவரம் நிகழ்ந்த போது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் பலமுள்ள சிங்களவர்களிடம் தஞ்சமடைந்தார்கள். இன்னும் பலர் தமது குடும்பங்களுடன் பாதுகாப்பு தேடி நகரை விட்டு வெளியேறி காடுகளுக்குள் இருந்தார்கள். ஏனையோர் வந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்வரை அவர்கள் இருந்தார்கள். கலவரம் தனிந்தபோதும் கொள்ளையர் மற்றும் காடையர்களை இராணுவ சட்டத்தால் அடக்கியதன் பின்னர் தைரியமாக வெளியில் வந்தவர்கள்; அந்த இடைவெளிக்குள் நிகழ்ந்தவற்றை காணாதபோதும் நேரடியாகக் கண்டதைப் போன்று வெளியில் தெரிவித்தார்கள். தமக்கு தொந்தரவு செய்தவர்கள் குறித்தும், தமது அதிருப்தியாளர்கள் குறித்தும் சத்தியம் செய்து கற்பனாபூர்வமாக சாட்சியமளித்தனர் என்கிறார் சூசா. இவர்களில் பலர் நீதிமன்ற விசாரணைகளை துஸ்பிரயோகம் செய்தனர். இதன் மூலம் பணம் வசூலிக்க எத்தனித்தனர்.

கண்டியில் நிகழ்ந்த ஒரு வழக்கை ஆர்மண்ட் டீ சூசா ஒரு உதாரணமாக காட்டுகிறார். கண்டியில் இருந்த முஸ்லிம் கடையொன்றின் சொந்தக்காரரான லெப்பை முகமது இஸ்மாயில் சிங்களவர்கள் குறித்த பீதி, முஸ்லிம்களின் மீதான அனுதாபம் என்பவற்றை வஞ்சகமாக துஷ்பிரயோகம் செய்து பலன்பெற பலமுறை முற்பட்டார்.  ஒரு முறை ஜூன் மாத நடுப்பகுதியில் அவர் தேசிய வங்கியில் (நேஷனல் பேங்க்) காசாளராக பணிபுரிந்த வல்லிபுரம் என்பவரை தொடர்புகொண்டார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி கூறிய கருத்தை இங்கு பகிர்வது நல்லது.

“வல்லிபுரத்தை சாட்சியொன்றை அளிக்கும்படி கேட்டுள்ளார். வல்லிபுரத்திடம் பணத்தைக் கொடுத்து 100 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டதாக கூறும்படி கேட்டுள்ளார். இதன்படி தன்னிடம் இருந்து அந்த 100 பவுன் தங்க நகை கொள்ளயடிக்கப்பட்டுவிட்டதாக கலவரத்தில் ஏற்பட்ட நட்டங்கள் குறித்து ஆராய்ந்த விசேட  ஆணையாளரை நம்பச் செய்ய முற்பட்டுள்ளார். வல்லிபுரம் தன்னால் இதனை செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த இஸ்மாயில் வல்லிபுரமும் கொள்ளையர்களில் ஒருவரென்று பெயர் பட்டியளைக் கொடுப்பேன் என்று மிரட்டியுள்ளார்.”

இது போன்ற உண்மைகள் பல இராணுவ ஆணையாளரால் மேற்கொண்ட மீள் விசாரணையில் வெளிக்கொணரப்பட்டது.

இப்படி இன்னும் சில சம்பவங்களை குறிப்படலாம்

கையும் களவுமாக
மேர்கன்டைல் வங்கியில் காசாளராக பணிபுரிந்த ரத்வத்தே பலரும் அறிந்த பௌத்தர். அவரின் தகப்பனாரும் ஒரு பௌத்த விகாரையின் அறங்காவலர். ஜூலை 20 அன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் வந்து அவரின் (ரத்வத்தே) பெயரை கலவரக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தன்னை சாட்சிக்கு அழைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட அசிங்கச் செயலை தான் செய்ய மாட்டேன் என்றும் என்றாலும் தான் ஒரு வருமயானவன் என்பதால் தனக்கு ஏதாவது தந்தால் தான் அமைதியாக இருப்பேன் என்றும் ரத்வதேயிடம் கூறியிருக்கிறார். இது குறித்து நீதிபதி இப்படி தெரிவிக்கிறார்.

“இதனை இன்னொரு வகையில் சொல்லப்போனால் அவர் பணம் வழங்காவிட்டால் பொய் வழக்கொன்றில் சிக்கவைபதாக ரத்வத்தே மிரட்டப்பட்டுள்ளார். ரத்வத்தே இதனால் பீதியுற்றார். முஸ்லிம்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் எந்தவொரு அப்பாவியும் பொய் வழக்கில் சிக்கவைப்படலாம் என்கிற கதை நாடெங்கும் ஏற்கெனவே பரவியிருந்தது. ரத்வத்தே பணத்தை கொடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அதேவேளை இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுத்தார்.

அன்றைய ட்ரினிடி வித்தியாலயத்தின் அதிபர் வணக்கத்துக்குரிய பிதா ஏ.ஜீ.பிரேசர் (A. G. Fraser) உடன் இது குறித்து உரையாடினார். அவரின் ஆலோசனைப்படி அந்த வஞ்சகத்தனத்தை கையும் களவுமாக பிடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. ரத்வத்தே பணத்தை கொடுப்பதை அவதானிப்பதற்காக தனது மாணவர்கள் இருவரை ஏற்பாடு செய்தார் பிரேசர். குறித்த நபர் வங்கிக்கு வந்தார். ரத்வத்தே அவருக்கு 20 ரூபாவை கொடுத்தார். அப்பணம் கொடுக்கப்படுவதை அங்கிருந்தோர் பலர் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த முஸ்லிம் நபர் வங்கியிலிருந்து வெளியேறும்போது கைதுசெய்யப்பட்டார். வழக்கின் போது அந்த நபர் தனது வீட்டில் ரத்வத்தே உட்பட இன்னும்சிலர் தனது வீட்டை கொள்ளையடித்ததாகவும் கூறினார். நீதிபதி தனது தீர்ப்பில் இப்படி குறிப்பிட்டார்.

“இந்த குற்றச்சாட்டு வெட்கம்கெட்ட பொய். இந்த நபர் கலவரத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சித்துள்ளார். இந்த நபர் மிரட்டியபடி செய்திருந்தால் அந்த சாட்சி நம்பப்பட்டிருந்தால் ஒரு அப்பாவி முகம்கொடுத்திருக்கக்கூடிய விளைவை நினைத்தால் எவரும் நடுங்குவார்கள். சிலவேளை ஒரு அப்பாவி மரண தனடைக்கும் உள்ளாகியிருக்கக்கூடும். இது போன்றே இன்னும் சில சாட்சியாளர்கள் சில அப்பாவிகளை மாட்டிவிட முற்பட்டுள்ள போதும் அது நிறைவேறவில்லை. இது போன்றவை நிகழ்ந்திருந்தால் உலகில் அப்பாவித்தனத்துக்கு இடமில்லாது போய்விடும்....”

நீதிபதி அந்த பொய் சாட்சியாளருக்கு நான்கு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டையை நிறைவேற்றினார். குற்றவாளி மேன்முறையீடு செய்தபோதும் உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

வழக்குகள் தள்ளுபடி
அரச கல்வித் திணைக்களத்தில் பாடத்திட்ட ஆய்வாளரான ரணசிங்கவின் மனைவியும், சொபியா சில்வா எனும் இன்னொரு பெண்ணும் கண்டி நகரைச் சேர்ந்த ஆராச்சியான மொகிதீன் மீரா லெப்பையால் 1000 ரூபா கோரி மிரட்டப்பட்டிருக்கிறார். ரணசிங்கவின் பெயர் கலவரக்காரராக பெயர் குறிப்பிடப்பட்டிக்கிறது என்றும் இந்தப் பணத்தைத் தந்தால் அதனை மூடிவிட முடியும் என்றும் கூறியுள்ளார். ரணசிங்கவால் மேலும் 100 ரூபாவும் வழங்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த இருவரும் ட்ரினிட்டி கல்லூரியின் அதிபர் வணக்கத்துக்குரிய பிதா பிரேசர் அவர்களை அணுகியிருக்கிறார்கள். பிரேசர் தனது கல்லூரியில் கற்பிக்கும் ஐரோப்பியரான ஹோல்டர் என்பவரை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தினார். மொகிதீன் மீரா லெப்பை பணம் வாங்குவதை கையும் களவுமாக பிடித்தார்கள். மிரட்டிப் பணம் பறிக்க முற்பட்டமைக்காக வழக்கு தொடரப்பட்டது. நவம்பர் 9 இந்த வழக்கு ஆரம்பமானது. ஆனால் வழக்கு நாள் கிட்டிய வேலையில் ஆளுநர் வெளியேறும்போது வழங்கிய மன்னிப்பான “அதுவரை கால கலவரம் குறித்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யும் வகையில்” கட்டளை பிறப்பித்தார். அதன் பிரகாரம் இது போன்ற வழக்குகளில் சிக்கிய பலர் விடுதலையானார்கள். ஆனால் பொய் சாட்சிகளின் மூலம் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் தண்டனையை தொடர்ந்தும் அனுபவிக்க நேரிட்டது.

12 சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியின்படி மொகிதீன் மீரா லெப்பை வழக்கிலிருந்து தப்பியபோதும் அவர் அரச சேவையிலிருந்து நீக்கப்பட்டார். 

தொடரும்..

நன்றி - தினக்குரல்


வன்முறைக்கு முகம் கொடுக்கும் மலையகம்


ஒரு குறிப்பிட்ட இனத் தொகுதியினரின் அடிப்டை வாழ்வுரிமைகள், அவர்களின் தொழில் உரிமைகள் மிக நீண்டகாலமாக மறுக்கப்படுவதும் இனி வருங்காலங்களிலும் அது அவர்களுக்கு கிடைக்கவோ, அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் சக்தி ஒன்று திரள்வதையோ திட்டமிட்டு அதை தடுக்கவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, வன்முறையை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடுவதாகவும் பொருள் கொள்ளலாம். அம்மக்கள் ஆரவாரமின்றி சிதைப்பதற்கு அப்பிரதேசத்திலிருந்து அவர்களை புலம்பெயர வைப்பதற்கும் முன்னெடுக்கப்படும் செயல் எனலாம்.

மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்கூறிய வகையில் மிக நீண்டகாலமாக தொடர்ச்சியாக வன்முறைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அரசியல், சமூக, கலாச்சார ரீதியிலான சக்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரச பின்புலத்துடனான ஆதரவு சார்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறலற்றவர்களாகவும், வலுவற்றவர்களாகவும், பிளவுண்ட மக்களாகவும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலைக்கு தொழிற்சங்கங்களும், பெருந்தோட்டக் கம்பனிகளும், அரசும் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தனித்தும் செயற்படுகின்றன. மக்கள் மேற்சொன்ன சக்திகளிடத்து தமது நம்பிக்கையை தொழில் ரீதியாகவும் சந்தாவாகவும், வாக்குகளாகவும் வெளிப்படுத்திய போதும் அவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு மக்கள் வாழ்வுக்காக ஏங்கி நிற்கின்றனர்.

தொழிற்சங்க ரீதியாகவும், அரசியல் கட்சி சார்ந்தும் தலைவர்களுக்கிடையே நிகழும் போட்டி நேரடியாகவும் மறைமுகமாகவும், தொழிலாளர்களை பாதிக்கின்றது. இந்நிலை நீடிக்கின்ற போதும், சுயநல, கபட, அரசியல் காய்நகல்த்தல்களின் காரணமாக தொழிலாளர் சமூகம் வன்முறைக்கு முகம் கொடுக்கின்றது.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இலவசக் கல்வி 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதனை சுதந்திரமாக சுவாசிக்க 40 ஆண்டு காலம் இடம் கொடுக்கப்படவில்லை. 1980ஆம் ஆண்டிற்கு பின்னரே இலவசக் கல்விக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உள்வாங்கப்பட்டனர். 40 ஆண்டு காலம் கல்வி மறுக்கப்பட்டமை பின்தள்ளப் பட்டவை வன்முறையின் மாற்று வடிவம் எனலாம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் ஈட்டப்பட்ட அந்நிய செலாவணியால் நாடு பல்வேறு துறைகளில் அபிவிருத்தி கண்டது. கட்டடங்கள் எங்கும் எழுந்தன. பாடசாலைகள், வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆசிரியர்களும், அரச பணியாளர்களும் அரசத் துறைக்கு உள்வாங்கப்பட்டனர். ஆனால், பெருந்தோட்டங்களில் இவைகள் ஒன்றும் உருவாக்கப்படவில்லை. தற்போது ஆங்காங்கு பாடசாலை சார்ந்து கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டாலும், அரச பணிக்கு உள்வாங்கப்பட்டாலும் அவை எல்லாம் கட்சி அரசியல் சக்திகளுக்கான சலுகைகளாக கொடுக்கப்படுகின்றனவே தவிர மலையக மக்களின் வளர்ச்சிக்காகவும், அபிவிருத்திக்காகவும் செய்யப்படுவதாக தோன்றவில்லை. இதுவும் வன்முறையே (1990களில் ஜனசவிய திட்டத்தின் கீழ் ரூ. 1000 சம்பளத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதும், 35 ஆண்டுகளின் பின்னர் தற்போது அடிப்படை சம்பளமற்ற ஆசிரியர்களாக உயர்தரம் படித்தவர்கள் உள்வாங்கப் படுவதும் ஒன்றே).

மலையகத்தின் பல்வேறு மலைகளிலிருந்து நதிகள் ஊற்றெடுத்துப் பாய்கின்றன. இந்நீரை தடுத்து பல பாரிய நீர்த் தேக்கத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுவதோடு, பல பிரதேசங்களில் விவசாயத்திற்கும் நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், மலையகப் பெருந்தோட்டத் துறைக்கு முழுமையான மின்சார வசதியோ குடிக்க மற்றும் ஏனைய சுகாதாரத் தேவைகளுக்கு நீர் பெற்றுக் கொடுப்பதில் தயக்கம் காட்டப்படுகின்றது. இது கம்பனிகளின் செயற்பாடா? அல்லது உள்ளூராட்சி நிறுவனங்களின் பராமுகமா? இதுவும் வன்முறையே.

மலையகப் பிரதேசங்களில் பொதுப் போக்குவரத்து, பொது சுகாதாரம், பாதைகள், வைத்தியசாலைகள், பணியாளர் பற்றாக்குறை, வைத்தியசாலைகளில் போதுமான அளவு மருந்தின்மை, வேலைவாய்ப்பின்மை என பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை மலை போல் குவிந்து விடும். அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தும் பிரச்சினைகளை அணுகாமல் இருப்பது, தீர்வை ஒத்தி வைப்பது அதனை பாராது இருப்பது, பாதிக்கப்படும் மக்கள் மீது வன்முறையை அவிழ்த்து விடுவதற்கு ஒத்ததாகும்.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தோடு முற்றுப்பெற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்குமான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது தொழிலாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர். கண்காட்சி போராட்ட நாடகமொன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரங்கேற்றப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் அடுத்த தேர்தலுக்கு தம்மை உசார்படுத்துவதற்காக முகம் காட்டிக் கொண்டார்கள். தொழிலாளர்களும் அவர்கள் பிள்ளைகளும் வறுமைக்குள் தள்ளப்பட்டு போசாக்கின்மையால் கல்வி, தொழில், நோய்கள் போன்றவற்றிக்கு தினம் முகம் கொடுக்கின்றார்கள். இத்தகைய ஏமாற்றம் வன்முறையும் வேறொரு வடிவமே.

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் ஆட்சியாளர்களால் நிலம் இனவாத கண்ணோடே நோக்கப்பட்டது, பொருளாதாரமும் அவ்வாறே நோக்கப்பட்டது. சிங்களவர்கள் தவிர்ந்த வேறு இனத்தவர்களின் நிலமும், பொருளாதாரமும் பறிப்பதற்காக பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு திட்டங்கள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கெங்கும் அப்பிரதேசத்திற்கு பரிட்சையமற்ற விவசாய மக்கள் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர். அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவைக் காண வீட்டுக்காணி விவசாயக் காணியென ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரையிலான காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதோடு நீர்ப்பாசன வசதிகளும் மின்சாரமும், பெற்றுக் கொடுக்கப்பட்டதோடு வீடுகட்டவும் விவசாயத்திற்குமாக மானியங்கள் வழங்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த நிமால் சிரிபால டி சில்வா முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமங்களை உருவாக்கி அப்பிரதேசத்திற்கு அந்நியமானவர்களை குடியேற்றினார். அன்று குடியேறிவர்களுக்கு தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் பண உதவி அளித்துள்ளது.

1971ஆம் ஆண்டு தெற்கிலே ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியைத் தொடர்ந்து, 1972ஆம் ஆண்டு தனியார் பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டன. சங்குவாரி போன்ற சில தோட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் துரத்தப்பட்டனர். கிராமங்களோடு ஒட்டியிருந்த பல தோட்டங்கள், கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. ஒன்றுமற்றிருந்த கிராமத்து சிங்கள அடிநிலை மக்கள் நில உரிமையாளராக்கப்பட்டனர். ஆனால், தொழிலாளர்கள் தொடர்ந்து உழைக்கும் அரை அடிமை கூலிகளாகவே வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து 1994ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மலையகத் தொழிலாளர்களுக்கும் 7 பேர்ச் காணி கொடுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போதைய நல்லாட்சியிலும் அதேநிலை தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகின்றது. மலையக மக்களுக்கு பொருளாதாரத்தில் வளர்ச்சிக் காண்பதற்கு ஏற்ற வகையிலான போதுமான அளவுக் காணிகள் கொடுக்காது, கூலித் தொழிலாளர்களாகவே தொடர்ந்து இருக்கச் செய்வது வன்முறையே. மலையகத் தமிழ் மக்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், அரச காணிகள் பெற்று பொருளாதாரத்தில் தன்னிறைவு காணக் கூடாது என திட்டமிடுவதும், அதனைப் பாதுகாப்பதும் வன்முறையே.

தொழிலாளர்களைத் தவிர்த்து பாடசாலையை விட்டு இடை விலகியோரும், பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டோரும் தொழில் செய்யக்கூடிய முதிர்ந்தோரும், சுயமாகவே தம் வாழ்விடங்களை விட்டு நகர் புறங்களை நோக்கி புலம் பெயர்வதற்கான சூழல் மறைமுகமாக மேற்கொள்ளப் படுகின்றது. பிறந்த மண்ணை விட்டு அம்மண்ணின் மக்களையும் வெளித் தள்ளுவது வன்முறையாகும்.

மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் காலத்தில் 1994இல் தலவாக்கலை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் “மலையக கலைகளின் காப்பகம்” உருவாக்கப்படல் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரண்டு தசாப்தங்களைக் கடந்தும் எல்லா அரசுகளிலும் பல மலையகத் தலைவர்கள் அமைச்சரவையை அலங்கரித்து தமது சுகபோக கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டார்களே தவிர மலையகக் கலையை வளர்க்க அதனைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்காதிருப்பது மலையக மக்கள் கலாச்சார ரீதியாகவும் அழிய வேண்டும் எனும் நோக்கமே.

கடந்த ஆட்சி காலத்தில் மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் என அப்போதைய அமைச்சர் டிலான் பெரெரா கருத்து முன்வைத்த போதும் அதற்கான ஆதரவுத் தளம் மலையக முற்போக்கு சக்திகளாலும், அரசியல்வாதிகளாலும் முன்னெடுக்கப்படாது மௌனித்திருப்பதும் அடித்தள மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையல்லவா?

கடந்த வருடம் உருவாக்கப் பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி மலையகத் தேசியம் தமது உயிர்நாடி எனக் குறிப்பிட்டது. 2015 ஜூன் 14ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களின் ஒருவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தினக்குரலுக்கு வழங்கியிருந்த செவ்வியில் தமது பரந்துபட்ட வேலை திட்டத்தில் மலையகத் தேசியம் பிரதான அம்சம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்க வேண்டியதே. ஆயினும், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கான 7 பேர்ச் காணி விடயத்தில் விடாப் பிடியாக நிற்பதும், சுய பொருளாதார வளர்ச்சிக்காக போதுமான காணிகளைப் பெற்றுக் கொடுக்க செயற்படாதிருப்பதும், ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் வீடுகளைக் கட்ட அடிக்கல் நடுவதும் (இரண்டு வருடங்களுக்கு முன்பு மண்சரிவால் பாதிக்கப்பட்ட பண்டாரவல, மீரியபெத்த மக்களுக்கு வீடுகள் கட்ட முடியாதிருப்பதும், கட்டப்பட்ட வீடுகள் கொடுக்கப்படாதிருப்பதும் காரணம் தெரியவில்லை) அமைச்சரின் குறைபாடல்ல. முதலாளித்துவ அரசாங்கத்தின் செயற்பாடே அது. முதலாளித்துவம் எப்போதும் நிலம் தமக்குச் சொந்தமானது என்றே நினைக்கும். கொல்லை இலாபம் ஈட்டலுக்கு இதுவே வழி வகுக்கும். தொழிலாளர்களை நசுக்கும். இதுவும் வன்முறையே.

இருநூறு ஆண்டுகளை தமதாக்கி நாட்டின் பொருளாதாரத்திற்காக, வளர்ச்சிக்காக உயிரீந்தவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது என்பது ஒடுக்கப்படும் அனைத்து சமூகங்களிலும் மேற்கொள்ளப்படும் வன்முறையாகும். இனம் கடந்து மொழி கடந்து, பிரதேசம் கடந்து ஒடுக்கப்படும் மக்கள் விழிப்படைந்தால் மட்டுமே நாட்டுக்கு விடுதலை, ஒடுக்கப்படும் மக்களுக்கு விடுதலை.

அருட்தந்தை. மா சத்திவேல்

நன்றி - மாற்றம்

பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?


போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த 65,000 இரும்பு பொருத்து வீடுகள் எதிர்ப்பு காரணமாக செயலிழந்துள்ள நிலையில் அது மலையகத்திற்குப் பொருத்தமானதா என்பது பற்றி பரிசீலிக்கும் படி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ கணேசன் பிரதமரிடம் சிபாரிசு செய்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

“அடுத்த ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் தனி வீடுகள் மலைநாட்டில் கட்டப்படுவது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இலக்குகளில் ஒன்றாகும். இதன் மூலமாகவே தோட்டத்துறை வாழ் தமிழ் மக்களின் லயன் வாழ்க்கை முறைமையை முழுமையாக ஒழித்து, வீடில்லா பிரச்சினையை தனி வீடுகள் மூலம் தீர்க்க முடியும். இந்நிலையில், தனி வீடுகளை அமைப்பதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை வீடுகள் கட்டப்படுவதற்கான மூலப்பொருட்களை மலைநாட்டில் திரட்டுவதாகும். இதனால், பாரிய தாமதம் ஏற்படுகிறது. ஆகவே, மாற்று மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உதிரிப் பாகங்களை  தொழிற்சாலைகளில் செய்து, அவற்றைக் கொண்டு வந்து பொருத்தி வீடுகளை சடுதியாகக் கட்டும் திட்டத்தை நாம் ஆராய வேண்டும். உலகின் பல குளிர்வலய பகுதிகளில் சடுதியாக வீடுகள் கட்டப்பட வெற்றிகரமாக வழி ஏற்படுத்தியுள்ள பொருத்து வீட்டுத் திட்டம், மலைநாட்டில் நடை முறையாக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை நாம் ஆலோசித்து பார்க்கவேண்டும். இத்திட்டம் மலையக சீதோஷ்ண நிலைமைகளுக்கு பொருந்துமா என்பது விஞ்ஞானபூர்வமாக பரிசீலிக்கப்பட்டு நடைமுறையாக்கப்படுமானால் அடுத்த ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் தனிவீடுகள் என்ற எங்கள் திட்டம் மலையகத்தில் வெற்றி பெற பெரும் வாய்ப்பு உள்ளது.”
அமைச்சர் மனோகணேசன் மேற்கண்டவாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பொருத்து (இரும்பு) வீட்டுத்திட்டம் அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து, ஆலோசித்து, ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்போம் என்ற தீர்மானத்துக்கு அமைச்சர் மனோ கணேசன் வர முன்னர் உண்மையிலேயே இந்த வீட்டுத்திட்டம் 200 வருடங்களுக்கும் மேலாக லயன் அறைகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு பொருந்துமா? என்பது குறித்து சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது.

வடக்கு – கிழக்கு பகுதிகளில் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுத்தமை வெறுமனே சீதோஷ்ண நிலைமையை மட்டும் காரணமாக முன்வைத்து அல்ல என்பது அமைச்சர் மனோ கணேசனும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சீதோஷ்ண நிலைமையைத் தவிர ஏனைய அனைத்து பிரச்சினைகளும் மலையகத்துக்கும் பொருந்தும் என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.

இந்தப் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பான பின்னணியை கொஞ்சம் பார்த்துவிட்டு வருவோம்.

‘ஆர்சிலர் மிட்டல்’

வடக்கு கிழக்கில் நிறுவப்படவிருந்த பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆர்சிலர் மிட்டல் எனும் பல்தேசிய நிறுவனம்தான் அமுல்படுத்தப் போவதாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதில் பல குளறுபடிகள் இருப்பதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை கட்டுரைகள் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் சர்வதேச பங்குசந்தையில் ஆர்சிலர் மிட்டலின் பங்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதனால், தனது இலாபப்பங்கை இரத்துச்செய்து, நிறுவன விஸ்தீகரிப்புக்கான திட்டங்களை நிறுத்தி, ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை மூடி நிறுவனத்தின் மொத்த கடன் தொகையாகிய 15.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளக்கட்டுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில், தனது இருப்பில் இருக்கின்ற – விற்கமுடியாமல் இருக்கும் இரும்புகளை இலங்கையில் குவிப்பதனால் இலாபத்தை ஈட்ட முடியும் என்றும், இதனாலேயே இலங்கை அரசுக்கு சில சலுகைகளை வழங்குகிறது என்றும், இதே திட்டத்தை கல்வீடுகளாக கட்டித்தருமாறு கேட்டிருந்தால் இச்சலுகைகள் கிடைத்திருக்காது என்றும் பொறியியலாளர் கலாநிதி. முத்துகிருஷ்ண சர்வானந்தன் குறிப்பிடுகின்றார்.

ஆகவே, விற்கமுடியாமல் இருக்கின்ற இரும்புகளை கொட்டும் இடமாக இலங்கையின் வடக்கு கிழக்கை மீள்குடியேற்ற அமைச்சு முதலில் தெரிவுசெய்திருந்தது. அவர்கள் விழித்தெழ தற்போது மலையகத்தை தெரிவுசெய்திருக்கிறது தமிழ் முற்போக்குக் கூட்டணி.

ஏனைய பிரச்சினைகள்

இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் வீடுகள் இரும்பிலான கட்டமைப்புக்களினையும், ஏற்கனவே தொகுதியாக்கப்பட்ட அமைப்புக்களினையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டுக்குமான செலவு ரூபாய் 2.18 மில்லியன் ஆகும் (ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மலையகத்தில் கட்டப்படும் வீட்டின் பெறுமதி ரூபா 1.2 மில்லியன் என்றும், இராணுவத்தினரைக்  கொண்டு மீரியாபெத்தை மக்களுக்காக நிறுவப்படும் வீட்டின் பெறுமதி ரூபா 1.3 மில்லியன்  என்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது).

ஒரு கொங்கிரீட் வீட்டிற்கு அதிகபட்சம் ரூபாய் 1 மில்லியன் மாத்திரமே செலவாகும் என துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, பொருத்து வீடு ஒன்றிற்கு ரூபா 2.18 மில்லியன் என்ற அடிப்படையில் மொத்தம் ரூபா 141 பில்லியன்கள்  இந்த வீட்டுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், தொகுதியாக்கப்பட்ட இரும்புகளைப் பொருத்தி வீடுகள் அமைப்பதற்கு குறைந்த செலவே செல்கிறது. முன்தயாரிக்கப்பட்ட இரும்புத் தகடுகளை வீடு கட்டப்படும் இடத்தில் பொருத்துவதனால் வீடுகட்டுவதற்கான கூலித்தேவை இல்லாதுபோகிறது. எனவே, கல்வீடொன்று கட்டுவதை விடவும் இரண்டு மடங்கு பொருத்து வீட்டுக்கு செலவாகிறது என்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

உலோகத்தினால் வீட்டின் முழுக்கட்டமைப்பும் உள்ளதால் வீட்டை புதுப்பிக்கவோ, திருத்தவோ முடியாத நிலை காணப்படுகிறது. பொருத்திய நிறுவனத்தை நாடி செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

ஒவ்வொரு வீடும் 520 சதுர அடி பரப்பைக் கொண்டிருக்கும் எனவும், ஒவ்வொரு வீட்டிற்கான நிதியில் தொலைக்காட்சி, சில தளபாடங்கள் மற்றும் சூரியஒளிச் சேகரிப்பான் (சோலர்) போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், வடக்கே அமைக்கப்பட்டிருந்த வீடொன்றைச் சென்று பார்வையிட்டவர்கள், பின்வருமாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்:

அத்திவாரம் பலமாகப்போடப்படவில்லை. கொங்கிரீட் ஒரு படை அளவே அத்திவாரத்திற்கு போடப்பட்டுள்ளது. யன்னல்களுக்கு கம்பிகள் போடப்படவில்லை. வீட்டு யன்னல்களை பொருத்தும் ஆணிகள் வீட்டின் வெளிப்புறமாகவே காணப்படுகின்றன. வீட்டின் சுவர்கள் வீட்டை பொருத்தி  ஒரு மாதத்திற்குள்ளேயே பிளவுபடத் தொடங்கிவிட்டதாகவும் அவதானிப்புக்கள் உள்ளது. வீட்டினுள் புகை போக்கிகளோ அடுப்புகளோ அமைக்கப்படவில்லை. இதற்குப் பதிலாக வாயு அடுப்பு (கேஸ்) வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ் வீடுகளில் வாழும் குடும்பங்கள் எரிபொருளுக்கு வாயு சிலிண்டர்களையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

60 ஆண்டு ஆயுள்காலம்

ஆகவே, இன்னும் 5 ஆண்டுகளில் 50,000 வீடுகளை எப்படியாவது, என்ன செய்தாவது, இரும்பு வீட்டையாவது கட்டிமுடித்து அடுத்துவரும் தேர்தலில் மக்கள் முன் சென்று நிற்பது மட்டும்தானா முற்போக்குக் கூட்டணியின் இலக்கு? 200 ஆண்டுகளுக்கும் மேலாக லயன் அறைகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தரமான வீடுகளை அமைத்துக்கொடுக்காமல் 60 ஆண்டுகள் ஆயுள்காலத்தைக் கொண்ட பொருத்து வீட்டுத் திட்டத்தை கொடுக்க முனைவது எந்தளவு நியாயமாகும்…?

பொருளாதார ரீதியில் வளமில்லாமல் இருக்கும் தோட்டத்  தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் என்ன செய்வது…? அதற்கு இந்த லயன் அறை வாழ்க்கை சிறந்தது எனலாம்.

மூலப்பொருள் கிடைப்பதில் தாமதமா?

கல்வீடுகளை அமைக்க மலையகத்தில்  மூலப்பொருட்களை திரட்ட முடியாத காரணத்திற்காக பொருத்து வீட்டுத்திட்டத்தை பரிசீலிக்கச் சொல்வது மலையக மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தோற்றப்பாட்டையே காட்டுகிறது. ஒரு கல்வீடு கட்டுவதற்கான மூலப்பொருட்களாக கருங்கல், மணல், செங்கல் அல்லது சீமேந்துக் கல், சீமேந்து, கூரை வேய மரங்கள் தேவைப்படுகின்றன. இங்கு அமைச்சர் மூலப்பொருட்களாக கருங்கல், மணல், செங்கல் அல்லது சீமேந்துக் கல்லையே குறிப்பிடுகின்றார். வெறும் 50,000 வீடுகளைக் கட்டிமுடிக்க மூலப்பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறும் அமைச்சர் மனோகணேசன் இலங்கையின் ஏதாவது அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றில் இவ்வாறு தாமதம் ஏற்பட்டிருக்கின்றது என்று கூறுவாரா?

அத்தோடு, சீன அரசாங்கத்துடன் நல்லாட்சி அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி நிதிநகரம் (துறைமுக நகரம்) 695 (2011) இலிருந்து 670 ஏக்கராக விஸ்தீரமடைந்திருக்கிறது. 670 ஏக்கர் கடல்பகுதியையும் நிரப்பி நிலமாக்க பெரும்பாலும் மலையகப் பகுதிகளில் உள்ள கருங்கல் மலைகளே குடைந்தெடுக்கப்படவுள்ளன. அங்குள்ள ஆறுகளிளே மணலும் அள்ளப்படவிருக்கிறது. இந்த அபிவிருத்தித் திட்டத்தில் மூலப்பொருளால் தாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்பதை அமைச்சரும் அறிந்திருப்பார். ஆனால், மலையகத்தில் செறிந்து கிடக்கும் மூலப்பொருட்கள் மக்களது அபிவிருத்திக்காக மட்டும் தாமாக தாமதிக்கிறதா?

65,000 பொருத்து வீட்டுத் திட்டத்திற்காக செலவாகும் ரூபா 141 பில்லியனில் அதைவிட இரண்டு மடங்கு கல் வீடுகளை மலையகத்தில் அமைக்கலாம் என்ற விடயத்தை புரிந்துகொண்டு அதனை அமுல்படுத்த பிரதமரின் ஆலோசனையைக் கேட்டிருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல், பசித்தவனுக்கு கஞ்சியைக் காட்டிவிட்டு வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால்… இதையும் விட்டால் ஒன்றும் கிடைக்காது என்ற நிலையில் பொருத்து வீட்டையும் மக்கள் ஏற்கத்தான் செய்வார்கள்.

இவை யாவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் பிரதமரிடம் கிரீன் சிக்னல் கிடைக்கப்பெற்று பொருத்து வீட்டுத் திட்டம் மலையகத்தில் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் அது ஏமாற்றுவதற்கான திட்டம் என்பதை தோட்டத் தொழிலாளர்கள் அறிந்திருப்பது அவசியம்.

செல்வராஜா ராஜசேகர்

நன்றி - மாற்றம்

பதுளை மாவட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு - ஜோன்சன்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் வேட்டபாளர்களான அ . அரவிந்குமாரும் வடிவேல் சுரேஷும் தலா 50 ஆயிரத்திற்கு அதிகமான விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர்.

இப் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் பதுளை மாவட்டம் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் போட்டியிட்ட தமிழ் பேசும் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியிருந்தனர். இதன் காரணமாக ஊவா மாகாணத் தமிழர்கள் தமது பிரச்சினைகளை தேசிய அரசாங்க மட்டத்திற்குக் கொண்டு செல்வதில் கடும் சவால்களை எதிர்நோக்கியிருந்தனர். அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளும் வரப்பிரசாதங்களும் இல்லாமல் போயிருந்தன.

பதுளை மாவட்டத்திலிருந்து இரு தமிழ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக வடிவேல் சுரேஷ், தற்போதைய ஊவா மாகாண சபை உறுப்பினரான எம். சச்சிதானந்தன் ஆகியோர் இ. தொ. கா. சார்பில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர் பின்னர் இ. தொ.கா. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததோடு, வடிவேல் சுரேஷ் இ. தொ. காவிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து கொண்டு பிரதி சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றார். எம். சச்சிதானந்தன் பிரதி கல்வி அமைச்சராக நியமனம் பெற்றிருந்தார். ஆக இரு உறுப்பினர்களும் பிரதியமைச்சர்களாக பதவி வகித்திருந்த ஆரோக்கிய நிலைமை அக்காலப்பகுதியில் நிலவியது.

நடந்து முடிந்து பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ஆட்சி மாற்றத்தை நோக்கியதாகக் காணப்பட்டது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியில் யானை சின்னத்தில் போட்டியிட்ட மலையகப் பிரதிநிதிகள் பெரும்பாலான மாவட்டங்களில் வெற்றி கண்டனர். பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னராக தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மலையக அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாடுகளுக்கு மலையக மக்கள் வழங்கிய அங்கீகாரமாகவும் இத்தேர்தல் வெற்றி பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக தற்போதைய அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள எம். திலகராஜ், அ. அரவிந்குமார், வேலுகுமார் ஆகியோர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். கூட்டணி சார்பாக இரு அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் பதவியில் உள்ளனர். அவர்களில் இருவர் மத்திய மாகாணத்திலும் ஒருவர் மேல் மாகாணத்திலும் உள்ளார்கள்.

ஐ. தே. கவின் தேர்தல் வெற்றிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கின்றது. எனினும், தேர்தலுக்கு முன்னர் ஐ. தே. க தலைமையுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய அமைச்சுப் பதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கூட்டணி 6 உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் கொண்டிருந்தாலும் அது எவ்வித போனஸ் ஆசனத்தையும் பெற்றக் கொள்ள முயலவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

பதுளை மாவட்டத்தில் கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய அரவிந்குமார், ஐ. தே. க வின் நேரடி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தெரிவாகிய வடிவேல் சுரேஷ் ஆகிய இருவர் இன்று வரை பாராளுமன்ற உறுப்பினர்களாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். வடிவேல் சுரேஷ் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் நெருக்கமான உறவை பேணி அவர்களின் அபிவிருத்தி பணிகளில் பங்கு கொண்டு கிட்டதட்ட கூட்டணியின் உறுப்பினர் போலவே அண்மைக் காலங்களில் செயற்பட்டிருந்ததை காண முடிந்தது.

மத்திய மாகாணத்திற்கு அடுத்தப்படியாக மலையக தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக பதுளை மாவட்டம் உள்ளது. இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் குறித்த இரு உறுப்பினர்களின் பாராளுமன்றத் தெரிவை பெரும் எதிர்பார்ப்புடனேயே மேற்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்காவது பிரதி அல்லது இராஜங்க அமைச்சு பதவி வழங்கப்படும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். இதுவரையும் அதற்கான சாதக சமிக்ஞை எதுவும் தென்படாததால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அமைச்சு பதவிகளை வகிக்க கூடிய அனுபவத்தையும் திறமையையும் இரு உறுப்பினர்களும் தன்னகத்தே கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமாரை பொறுத்தவரையில் 20 வருடத்திற்கு மேற்பட்ட அரசியல் அனுபவத்தை கொண்டுள்ளார். ஊவா மாகாண சபையின் உறுப்பினராக பல வருடங்களாக பதவி வகித்த அனுபவமும் முன்னாள் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவருமான அமரர் பெ. சந்திரசேகரனின் பிரத்தியேகச் செயலாளராக பணியாற்றிய அனுபவமும் கொண்டுள்ளார். பதுளை மாவட்ட மக்களால், நிதானமாக தான் எடுத்துக் கொண்ட விடயங்களில் செயற்பட்டு வெற்றி காணக் கூடியவர் என்ற பெயரை பெற்றுள்ளார். மண்வெட்டி சின்னத்தில் ஊவா மாகாண சபையை அதிக தடவை அலங்கரித்ததவர், மும்மொழி புலமையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இ. தொ. கா. மூலம் அரசியல் பிரவேசம் செய்து தான் எதிர்கொண்ட முதல் பாராளுமன்றத் தேர்தலிலேயே வெற்றி பெற்று பிரதி சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்ததை தொடர்ந்து தொகுதி அமைப்பளராகவும் ஊவா மாகாண சபை உறுப்பினராகவும் பின்னர் மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்து, தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் புறம்பாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பதவியேற்றுள்ளார். இவரும் மும்மொழிகளிலும் புலமைமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில் ஐ. தே. க. பட்டியலில் பாராளுமன்றம் சென்ற இவ்விரு உறுப்பினர்களிடமும் பதுளை மாவட்ட மக்கள் அதிகமான சேவைகளை எதிர்பார்க்கின்றனர். எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களாக மாத்திரம் இருந்து செயற்பட்டு வருவதால் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி என்ற வரம்புக்குள்ளேயே இருந்து கொண்டு தமது திட்டங்களை செயற்படுத்த வேண்டிய நிலையில் இவர்கள் உள்ளனர். மாவட்ட தோட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய ஏனைய பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு, விடயத்திற்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சர்களை தங்கியிருக்கும் நிலைக்கு இவ்விருவரும் மறைமுகமாகத் தள்ளப்பட்டுள்ளனர்.

 நன்றி - வீரகேசரி 

மலையகத்தின் வறுமை எந்தெந்த விதங்களில் பாதித்துள்ளன - விண்­மணி


மலையக பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்களே மிகவும் வறிய சமூகப் பிரிவினராக இருக்கின்றனர் என ஐ.நா. அமைப்புக்கள், சர்வதேச தொழில் நிறுவனம் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்களின் ஆய்வறிக்கைகளும் பல உள்நாட்டு அமைப்புக்களின் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இவ்வாய்வுகளைப் புறந்தள்ளி, ‘இல்லை இப்போது முன்னரைப் போல் அவ்வளவு வறியவர்களாக இல்லை; ஓரளவு நல்ல முறையில் வாழ்கின்றார்கள்’ என்று வாதிடுவோர்களும் உள்ளனர். மலையக மக்கள் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை சற்று அலசி ஆராய்ந்து பார்த்தோமானால் வறுமை அவர்களை எவ்வெவ்விதங்களில் பாதித்துள்-ளது என்பது தெரியவரும்.

தீராத நோய்கள்

வறிய மக்கள் எப்போதும் தீராத நோய்களையுடையவர்களாயிருக்கின்-றார்கள். மலையகத்தில் தீராத நாட்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் அதிகள-வாகக் காணப்படுகின்றார்கள். நம்மக்கள் வாயில் அடிக்கடி வெளிவரும் வார்த்தை-கள்தான் “மேலுக்கு சரியில்லைங்க”. வறுமை சோர்வை ஏற்படுத்துகின்றது. மலை-யக மக்களில் பெரும்பாலானோர் எவ்போதும் சோர்ந்தவர்களாகத்தான் இருக்கின்-றார்கள். இதனால் அதிகளவில் ஆஸ்த்மா, நீரிழிவு ஆகிய நோய்களினால் பாதிக்-கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.

மாரடைப்பு ஆபத்தும் அதிகரித்தே காணப்படுகின்றது. நோய்க்கான உரிய மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதை வறுமை நிலை தடுக்கின்றது.

குறைவான ஆயுட்காலம்

நாட்டின் ஏனைய பகுதியினரை விடவும் மலையக மக்கள் குறைவான ஆயுட்காலம் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். சராசரியாக ஏனையோரை-விட ஐந்தாண்டு காலம் குறைவான ஆயுட்காலம் கொண்டவர்களாயிருக்கின்-றார்கள் என்று புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. பெண்களைப் பொறுத்தவரை ஆண்களைவிட குறைவான ஆயுட்காலம் கொண்டவர்களாகவேயிருக்கின்றார்கள்.

மிக மெதுவான சமூக அசைவியக்கம்

சமூகத்தின் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வேறு வகைகளில் வகைப்ப-டுத்தக்கூடிய மனிதர்கள், சமூக அடுக்குக்களின் இடையிலோ அதற்கு அப்பாலோ இயங்குவது சமூக அசைவியக்கம் எனப்படுகின்றது. இவ்வகைவியக்கமே ஒரு சமூகத்தில் வசதிபெற்ற மத்தியதர வர்க்கத்தை உருவாக்குகின்றது. தேவைகள் பற்-றிய விருப்பத்தைத் தூண்டுகின்றது. கண்டு பிடிப்புகளையும் கடின உழைப்பையும் போட்டியையும் வளர்க்கின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் மலையகத்தில் சமூக அசைவியக்கம் மிக மெதுவாகவே நிகழ்கிறது. இதனால் மேற்குறிப்பிட்டவைகளின் வளர்ச்சியும் மெதுவாகவே இருக்கின்றது. சமூகவளர்ச்சி காரணமாக ஏற்படும் விருப்பங்களை வறுமை மலையகத்திலிருந்து முற்றாகவே களைந்து விட்டிருக்கிறது.

இடம்பெயர்தல்

வறுமை குறித்த ஆய்வாளர்கள் தெரிவிக்கும் ஒரு விஷயம், வறுமை சில பிரதேசங்களில் குவிகின்றது, பீடித்திருக்கிறது என்பது. நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர், எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், என்ன தொழில் புரிபவர் என்பதைவிட நீங்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்கின்றீர்கள் என்பது உங்களை வறுமைக்கு உள்-ளாக்கக்கூடும். இந்த வகையில் பெருந்தோட்டப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் என்ப-தனாலேயே மக்கள் வறியவர்களாயிருக்கின்றார்கள்.

பெருந்தோட்டப் பிரதேசங்களிலிருந்து பெருந்தொகையான 15 24 வயதிற்-குட்பட்ட இளைஞர்கள் கிராமப்புறங்களுக்கு அல்லது நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளமை சமீபகாலத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி வருடாந்தம் 8%, 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் பெருந்தோட்டங்களிலிருந்து இடம்பெயர்கின்றார்கள்.

தமது வறுமை நிலையிலிருந்து நீங்கி வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே இவர்கள் நோக்கமாகும். இனக்கலவரங்கள் மற்றும் தனிப்-பட்ட காரணங்களுக்காகவும் சிலர் இடம் பெயர்கின்றார்கள்.

குடும்பத்தோடு இடம்பெயர்வதே அவர்களுக்கு பெரும் செலவான காரிய-மாகும். இவ்வாறு இடம்பெயரும் அனைவருமே வறுமையிலிருந்து நீங்கி நல்-வாழ்வை அமைத்துக் கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதமேதுமில்லை.

இத்தகையவர்கள் ‘புவியியற்சார் வறுமை வலையில் சிக்கியவர்கள்’ எனப்ப-டுகின்றார்கள். புதிய இடங்களில் இவர்கள் தம் நல்வாழ்விற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

மோசமான குடியிருப்பு வசதிகள்

பெருந்தோட்டத்துறை மக்களுக்கு சுமார் இரண்டு இலட்சம் வீடுகள் தேவை-யென்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓராண்டுக்கான நிதியின் கணக்கில் பார்த்தால் தேவையான வீடுகளை அமைத்து முடிக்க 800 ஆண்டுகள் ஆகுமென்று சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்திருந்தது.

இன்னமும் பெரும்பாலான மக்கள் ஆரம்பகாலங்களில் அமைக்கப்பட்ட லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். பெருகி வந்த சனத்தொகைக்-கேற்ப மலையகத்தில் ஒரு போதும் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவே இல்லை. வீடமைப்புத்திட்டங்கள் என்ற பெயரில் அவ்வப்போது அமைக்கப்பட்ட நூறும் இருநூறுமான வீடுகள் இவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. எந்தவொரு திட்டமும் வெற்றிகரமாகவும் முழுமையாகவும் நிறைவு செய்யப்பட்டதாகவும் தெரியவில்லை.

மிகச் சிலர் லயன் அறைகளை நவீனமயப்படுத்தி வசதியான வீடுகளை அமைத்துக் கொண்டிருப்பதென்னவோ உண்மைதான். மிகப் பெரும்பாலானோர் லயன் அறைகளில் இடவசதி போதாததன் காரணமாக சிறு அறைகள், கொட்-டில்கள், குடிசைகள் அமைத்து வாழ்வதை பெரும்பாலான தோட்டங்களில் காணலாம்.

பெருந்தோட்டங்களில் 61 வீதமான வீடுகள் வாழ்வதற்குத் தகுதியற்ற மிக மோசமான வீடுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வறுமை நிலைதான் இதற்குக் காரணம்.

வாழ்நாள் கடனாளிகள்

தோட்டத்தொழிலாளர்கள் எப்போதும் முடிவுறாத கடனாளிகளாகவே இருக்கக் காண்கின்றோம். கடன் வாங்காமல் தமது வாழ்வின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள். திருமணம், மரணம், மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்பா-ராத செலவுகள் போன்ற எல்லா விடயங்களுக்குமே அவர்கள் கடன்பட்டே தீர-வேண்டியிருக்கின்றது. வட்டிக்குக் கடன் வாங்கி, அந்த வட்டியைக் கட்டுவதற்காக மேலும் கடன்வாங்கி, இப்படி வாழ்நாள் பூராகவுமே கடன்பட வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் வாழ்வின் ஒரேயொரு உத்தரவாத-மாக இருக்கின்ற ஊழியர் சேமலாப நிதியினையும் பெற்று தமது கடன்களைச் செலுத்தப்பயன்படுத்தியவர்களும் இருக்கின்றார்கள். தமது தீயபழக்கங்களினால் வீணாகக் கடன்படுகிறவர்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் மிகக் குறைவான வீதத்தினரே. (தொடரும்)

மனித உரிமைகளற்ற ஒரு சமூகம்

மனித உரிமைகள் உலகளாவியவை. அனைத்து மக்களுக்கும் பொதுவா-னவை ஆனால் வறியவர்கள் என்று வரும் பொழுது அவர்கள் மனித உரிமைக-ளுக்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதப்படுகின்றார்கள். இலங்கை பெருந்தோட்டத்-துறையைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு இந்நிலையே காணப்படுகின்றது. இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும். காலம் காலமாக அவர்களு-டைய அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு வருவதே இதற்கு சிறந்த உதாரண-மாகும். சில காலங்களுக்கு முன்பு நாடற்ற பிரஜைகள் என்றொரு பிரிவினர் இருந்து வந்தது நாமறிந்ததே. இது, ஒவ்வொருவருக்கும் நாட்டின் குடியுரிமை உரித்துடையது என்ற மனித உரிமையை மீறுவதாகும். இப்போது இந்த நிலை இல்லாத போதும், பெருந்தோட்டத் துறையில் நாளாந்தம் எவ்வளவோ மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றைக் கண்டு கொள்வோர் இல்லை.

பெண்கள் நிலை

எந்தவொரு வறிய சமூகத்திலும் அதன் மோசமான பாதிப்புக்கள் அச்சமூ-கத்தின் பெண்களையே சாரும். நாட்டில் புரதச்சத்துக்கள் குறைந்த உணவை உண்-போரில் பெருந்தோட்டத் துறைப் பெண்களே முதலிடம் வகிக்கின்றார்கள். அதனால் மூன்றிலொரு பங்கினரான பெண்கள் மந்த போஷணத்தினால் பாதிக்கப்பட்டிருக்-கின்றார்கள். குருதிச் சோகையுடையோரும் அதிகளவில் உள்ளன பெருந் தோட்டத்-துறையிலேயே இவர்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றார்கள். பல்வேறு துஷ்பிர-யோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். வறுமையின் காரணமாக வீட்டில் போதியளவான உணவு இன்மையினால்தான் இவர்கள் இறுதியாக மிஞ்சிய உணவை உண்பவர்களாக இருக்கின்றார்கள் என்ற உண்மை போலியான சம்பிரதா-யங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றது.

குழந்தைகள் நிலை

நாட்டின் எந்தப் பகுதியினரையும் விட பசியால் வாடும் குழந்தைகள் மலை-யகத்திலேயே மலிந்திருக்கின்றார்கள். ஐந்து வயதிற்குக் குறைந்தோரில் 30% வீத-மானோர் நிறை குறைந்தவர்களாகவே இருக்கின்றார்கள். 13 வயது குழந்தைகளில் புரதச் சத்துடைய உணவுகளை மிகக் குறைவாக உண்போர் மலையகத்திலேயே அதிகமாக உள்ளனர். இதனால் மலையகக் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லை. பசியினால் குழந்தைகள் நச்சுசார் அழுத்தத்திற்கு உள்-ளாகின்றனர். இது உளரீதியான பிரச்சினைகள், சோர்வு, வாழ்க்கையின் வாய்ப்புக்-களை உக்கிரமாகக் குறைத்துக் கொள்ளல் ஆகியவற்றைத் தோற்றுவிக்கின்றது.

அடிப்படையில் இக்குழந்தைகள் வறுமையிலும் பட்டினியிலும் பிறக்கின்-றன. வளர்ந்து அழுத்தம் நிறைந்த குறுகியகால வாழ்வினை வாழ்கின்றன. வறு-மையிலும் பட்டினியிலும் இறக்கின்றன. இதுவோர் நச்சுவட்டம். எவரும் இது குறித்து எதுவும் செய்வதில்லை.

இவை எல்லாவற்றையும் விட வருந்தத்தக்கது என்னவென்றால் நாட்டின் ஏனைய பிரதேசங்களையும் விட குழந்தைகள் குறுகிய ஆயுளுடன் இறப்பது மலையகத்திலேயே. வறுமையின் காரணமாக பெற்றோர்கள் போதிய கல்வியறிவற்று இருப்பதும் இதற்கோர் காரணமாகச் சொல்லப்படுகின்றது. வறுமை பெருந்தோட்ட மக்களின் ஆத்மாவை தொழில் வாய்ப்புக்களை ஆரோக்கியத்தை மட்டும் அழிக்கவில்லை. அது அவர்களுடைய குழந்தைகளையும் எடுத்துச் செல்கின்றது.

மலையக மக்களை வறுமை எவ்வெவ் விதங்களில் பாதிக்கின்றது என்பது குறித்த சில விடயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டு அவை குறித்த சிறு அறிமுகம் மாத்திரமே இங்கு தரப்பட்டுள்ளது. இவையும் இவையோடு இணைந்த பல்வேறு விடயங்களும் புள்ளி விவரங்களும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியவைகளாகும். அப்போது மேலும் விரிவான படப்பிடிப்பைப் பெறலாம்.

பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் இவையொன்றும் இல்லாதது போல் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இதற்குக் காரணம், சமூகப்பிரச்சினைகள் குறித்து அவர்கள் எந்தவிதமான பிரஞையுமில்லாதிருப்பதோடு, சில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எந்த விதமான ஆய்வுகளுக்கும் கணக்கெடுப்புகளுக்கும் உட்படாதிருப்பதே பெரும்பாலான ஆய்வுகள் குறிப்பிட்ட பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளைக் (SAMPLE) கொண்டே செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - வீரகேசரி

நுவரெலியா மாவட்டத்தில் தனித்தமிழ் கல்வி வலயம்! காலத்தின் கட்டாயத் தேவை - கௌஷிக்


மலையகத்தில் தரம் ஐந்து வரையும் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களை மட்டுமே கொண்டு இயங்கி வந்த பெருந்தோட்டப் பாடசாலைகள் 1977, 1980 காலப்பகுதியில் தான் தேசியக் கல்வி நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டன என்பது வரலாறு. நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் இருநூறு, இருநூற்றைம்பது ஆண்டுகள் வளர்ச்சி கண்ட நிலையில் பெருந்தோட்டப் பாடசாலைகள் வெறும் முப்பது ஆண்டுகள் வரலாற்றை மட்டுமே கொண்டுள்ளன. எனவே, எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சி நூறு வீத வேகத்தை தொட வேண்டும்.

ஒற்றை வகுப்பறை கட்டடங்களை மட்டுமே கொண்டிருந்த பாடசாலைகள், SIDA, GTZ போன்ற வெளிநாட்டு நிறுவனங்களாலேயே இன்றைய வளங்களைப் பெற்றன. அரசாங்கங்களின் பங்கு மிகவும் சொற்ப அளவிலேயே இருந்தன, இருக்கின்றன என்பதே வேதனை அளிக்கும் உண்மைகளாகும்.

அரசு பொறுப்பேற்ற பாடசாலைகளில் இருந்த 598 ஆசிரியர்கள் முதல் தடவையாக கல்வி அமைச்சால் நிரந்தர நியமனம் பெற்றனர். இவர்களுடன் 402 ஆசிரியர்கள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இவ்வாறுதான் ஆயிரம் ஆசிரியர்கள் அமைச்சில் உள்ளீர்க்கப்பட்டார்கள். அதன்பின் பெருந்தோட்ட கல்வி அபிவிருத்தி பிரிவால் பயிற்றப்பட்டும் தொலைக்கல்வி பயிற்சி பெற்றும் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன. இதேவேளை, ஊவா மற்றும் மத்திய மாகாண சபைகளில் தமிழ்க் கல்வி அமைச்சுகள் உருவாக்கப்பட்டன. மேலதிகத் தமிழ்க் கல்வி பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தனி ஒருவராக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மேற்சொன்னவைகளை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் பணி புரிந்தார். மேலும், ஆசிரியர் பயிற்சி கலாசாலை மற்றும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி போன்றவை உருவாகவும் அவர் காரணமாகத் திகழ்ந்தார். இவர் தனது செல்வாக்கைச் செலுத்த முக்கியமான காரணம் ஒன்றிருந்தது. எழுபதுகளில் ஆட்சியில் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆருடன் தோளோடு தோள் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு ஐ.தே.க. ஆட்சியைக் கொண்டு வர உறுதுணையாக இருந்தவர் அவர். முஸ்லிம் மக்கள் சார்பில் அமரர் ஏ.சி.எஸ். ஹமீட்டும் சத்தியாக்கிரகம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

இப்போது சரித்திரம் மீண்டும் திரும்பியிருக்கிறது. அதே கட்சி ஆட்சியை அகற்ற ஐ.தே.க.வுடன் கரம் கோர்த்த எம்மவர்கள் ஏழு பேர் பாராளுமன்றத்திற்கு போய் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகிய இருவரும் எமது மக்கள் சார்பாக பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். அன்று தனி ஒருவராக சௌமியமூர்த்தி தொண்டமான் செய்த சாதனைகளை விடவும் பல மடங்கு அதிகமாக இவர்கள் செய்து காட்ட வேண்டும். அன்று போராடி பெற்ற பலவற்றை இன்று இழந்து நிற்கும் நிலையையாவது உடன்போக்க செயலில் இறங்க வேண்டும்.

யதார்த்தத்தில் நிலைமை பாராட்டும் படியாக இல்லை. தொழிலாளர்களின் சம்பள உயர்வு, கூட்டு ஒப்பந்தம் மற்றும் பல்கலைக்கழகம் என அனைத்து பிரச்சினைகளும் தீர்வுகள் இல்லாமலேயே இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் நுவரெலியா மாவட்ட கல்வி நிலை உள்ளது. முழுநாட்டிற்கும் கல்வி இராஜாங்க அமைச்சராக எம்மவர் ஒருவர் இருக்கும் போது இவ்வாறான ஒரு நிலை இருப்பது வேதனைக்குரியதாகும்.

பல்கலைக்கழகம், பல்கலைக்கழக கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகம் என பலவாறு பேசப்பட்டாலும் உருப்படியாக எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. எம்மவர்கள் பலமான நிலைமையில் இருக்கும் போதே நுவரெலியா மாவட்டத்தில் தனியான தமிழ்க் கல்வி வலயம் ஒன்றை அமைப்பது முக்கியமான தேவையாகும். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். வடகிழக்கிற்கு புறம்பாக தமிழ் மக்கள் இங்குதான் அவ்வாறான ஒரு நிலைமையில் இருப்பது பெருமைக்குரியது. ஆனால், கல்வி நிலையில் வடகிழக்கு மக்கள் பெற்றுள்ள உரிமைகளும் சலுகைகளும் இங்கு இல்லை. இருந்த உரிமைகள் படிப்படியாக இல்லாமல் செய்யப்படுகின்றன. அடுத்த மூன்றாண்டுகளில் எமது தலைமைகள் கல்வியில் மாற்றத்தைக் காண உதவ வேண்டும்.

பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்லூரி அமைப்பதற்கு முன்பதாக தனித் தமிழ் கல்வி வலயம் ஒன்றை நுவரெலியாவில் ஏற்படுத்தி தமிழ்க் கல்வி துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்கேடுகளைப் போக்க வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலைகளின் நிலையை இங்கு பார்ப்பது சிறந்தது.

நுவரெலியா மாவட்டம் ஐந்து கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, ஹட்டன், வலப்பன, ஹங்குராங்கெத்த மற்றும் கொத்மலை ஆகியவைகளே அவை. தமிழ்ப் பாடசாலைகளைப் பொறுத்தளவில் நுவரெலியாவில் 116, ஹட்டனில் 106, வலப்பனையில் 26, ஹங்குராங்கெத்தவில் 11, கொத்மலையில் 37 என்ற அளவில் மொத்தமாக 296 இருக்கின்றன. வலப்பன, ஹங்குராங்கெத்த மற்றும் கொத்மலை வலயங்களில் சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் பெரும்பான்மையாக உள்ளன. நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் 222 இருக்கின்றன. சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் சுமார் 75 தான் இவ்விரு வலயங்களிலும் உள்ளன. எழுபது சதவீத தமிழ்மொழிப் பாடசாலைகள் உள்ள போதும் நுவரெலியா கல்வி வலயத்தில் பெரும்பான்மை சமூக கல்விப்பணிப்பாளரின் கீழேயே நிர்வாகம் நடக்கிறது. ஹட்டன் வலயத்தில் தமிழ் கல்விப் பணிப்பாளர் இருக்கின்ற போதும் எந்த வேளையிலும் அங்கு தமிழல்லாதவர் பதவிக்கு வரும் சூழலே நிலவுகிறது.

நுவரெலியா கல்வி வலயத்தில் மேலதிக கல்விப் பணிப்பாளராக தமிழர் ஒருவர் பதவியில் இருப்பது பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்தது. கடந்த சில வருடங்களாக அந்தப் பதவி இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. சகல கருமங்களிலும் சிங்கள மொழியிலேயே இடம்பெறுகின்றன. தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு சிங்களப் பணிப்பாளர்களும் சிங்கள ஆசிரிய ஆலோசகர்களும் சென்று மேற்பார்வை செய்யும் நிலைமை காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். சில தமிழ் அதிபர்கள் தங்கள் சுயலாபத்திற்காக மேலதிக தமிழ்க் கல்விப் பணிப்பாளர் நியமனம் இடம் பெறாமல் இருக்க பின்னணியில் செயற்படுகின்றார்கள்.

நுவரெலியா கல்வி வலயத்திற்கு வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் உதவி பெருமளவு கிடைப்பதாகக் கூறப்படுகிறது. விடுமுறை தினங்களில் செயலமர்வுகள், மேற்பார்வைகளுக்காக ஐந்தாயிரம் ரூபாவரை வழங்கப்படுவதாகத் தெரிகிறது. கிழமை நாட்களில் அலுவலகத்திற்கு கடமையில் இல்லாதவர்களும் வார இறுதி நாட்களில் தவறாது கடமைக்கு வந்து மேலதிகக் கொடுப்பனவுகளை தாராளமாகப் பெற்றுக்கொள்வதாகத் தெரிகிறது. தமிழ்ப் பாடசாலைகளுக்கும் தமிழ் அதிகாரிகளுக்கும் கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் சம்பந்தமில்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறதாம். மொழி புரியாதவர்களால் எவ்வாறு தமிழ்க் கல்வி நிலையை உயர்த்த முடியும் என கேள்வி எழுப்பப்படுகிறது.

நுவரெலியாவிலும் ஹட்டனிலும் தனித் தமிழ் மொழி மூல கல்வி வலயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பதவிக்காலத்தில் இது நிறைவேற்றப்படுமானால் காலம் அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும். மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் கல்வி வலயங்கள் வடகிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் தமிழ் மொழி மூல பாடசாலைகள் சிறப்பாக இயங்குகின்றன.

இதே நிலைமை தான் நுவரெலியா கல்வி வலயத்திற்கும் ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இருந்து டயகம, கொட்டகலை, எல்ஜின், ரகன்வத்தை, கந்தப்பளை, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை போன்ற தொலை தூரங்களில் இருந்து அலுவலகம் Aகல்வி வலயம் என்ற பெயரில் 100% முஸ்லிம் பாடசாலைகளைக் கொண்ட வலயம் ஒன்றும் உருவாக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் திகாம்பரம் ஃபுருட்ஹில் கிராமத்தில் றோயல் கல்லூரி ஒன்றை நிறுவப்போவதாக கூறியிருக் கிறார். திறந்த பல்கலைக்கழக நிர்மாணத்துக்கு திலகராஜ் எம் .பி. உதவ முன்வந்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், தொழில் நுட்பக் கல்லூரி, பல்கலைக்கழகம்,பல் கலைக்கழக கல்லூரி என்றும் 5 ஆண்டு திட்டம், 10ஆண்டு திட்டம் என நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை ஒருபுறம் வைத்துக்கொண்டு உடன டி டியாக நிறைவேற்றக்கூடிய தனித் தமிழ் கல்வி வலயத்தை நிறுவ முயற்சிகள் வேண்டும் என நலன் விரும்பிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி - veerakesari

சம்பள உயர்வுக்காக என்ன செய்யப் போகிறார் வடிவேல் சுரேஷ் - என்­னென்ஸி



இ.தொ.கா.தலைமையை பகைத்துக் கொண்டு, இ.தொ.கா.விலிருந்து வெளியேறிய எவரும் அரசியல் செய்யமுடியாது என்றதொரு காலம் இருந்தது. அதற்கேற்றாப்போல், இ.தொ.கா.விலிருந்து வெளியேறி தனிக்கட்சிகள் ஆரம்பித்த பலர் காணாமல் போயுள்ளனர்.

இ.தொ.கா.வின் அசைக்கமுடியாத தூண், தளபதி சொல்லின் செல்வர் என்றெல்லாம் போற்றப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றிய எம்.எஸ்.செல்லச்சாமி இ.தொ.கா.விலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தார். அவருடன் பலமுக்கியஸ்தர்களும் கூட சென்றனர். ஆனால் என்ன நடந்தது? கட்சியும் அவர்களும் காணாமல் போயினர்.

பின்னர் மீண்டும் இ.தொ.கா.வில் இணைந்தார் செல்லச்சாமி. ஆனால் அவரால் பிரகாசிக்க முடியவில்லை. அவரைப் பின்பற்றிச் சென்றவர்களுக்கு கூட முகவரி இல்லாமல் போனார்கள். பலம்பொருந்திய இ.தொ.காவை. பகைத்துக் கொண்டு எதுவும் செய்யமுடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்தது.

ஆனால், இ.தொ.கா.வை எதிர்த்துக் கொண்டு அரசியல் செய்ய முடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் அமரர்.பெ.சந்திரசேகரன். இ.தொ.கா.விலிருந்து வெளியேறி மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்த போது அவர் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சநஞ்மல்ல.

தன்னலம் கருதாத சமூக சிந்தனை கொண்ட தோழர்கள், விடுதலை வேட்கைகொண்ட சமூக மக்கள் போன்றவர்களின் துணையினால் இ.தொ.கா.வுக்கே சவால்விடும் வகையில் அரசியல் செய்துகாட்டினார். இன்று மலையகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சி மலையக மக்கள் முன்னணி ஆரம்பித்தது முதலே உருவானதென்பதை எவரும் மறுக்க முடியாது.

இ.தொ.கா.வை பகைத்துக் கொண்டு வெளியேறி வெற்றிகரமாக அரசியல் செய்யும் மற்றுமொருவர்தான் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன். தனியான கட்சியொன்றை சிரமப்பட்டு ஆரம்பிக்காவிட்டாலும் சந்திரசேகரனின் மறைவையடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த ம.ம.மு.யின் தலைமைப் பொறுப்பை ஏற்று அந்தக் கட்சிக்கு முகவரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி கல்வி இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்று மலையகத்துக்கு மட்டுமின்றி முழு நாட்டுக்கும் சேவைசெய்யக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். நுவரெலியா பிரதேச சபை தலைவராக நுவரெலியா மக்களுக்கும், மத்திய மாகாண கல்வி அமைச்சராக முழு மாகாணத்துக்கும், சேவை செய்து தற்போது முழு நாட்டுக்கும் இராஜாங்க கல்வி அமைச்சராக பதவி வகிப்பது அவரது வளர்ச்சியின் பரிணாமத்தையும், வேகத்தையும், காட்டுகிறது. இது இ.தொ.கா. எதிர்பாராத ஒன்றுதான்.

அந்தவகையில் மூன்றாவதாக இ.தொ.கா. தலைமையை பகைத்துக் கொண்டு இ.தொ.கா.வை விட்டு வெளியேறி பெரும் சோதனைகளை சந்தித்து அவற்றை இன்று சாதனையாக்கிக் கொண்டிருப்பவர்தான் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இப்படியெல்லாம் நடக்குமென்று இ.தொ.கா.வே நினைத்துப் பார்த்திருக்காது.

வடிவேல் சுரேஷுக்கு இ.தொ.கா.வின் நிர்வாகச் செயலாளர் பதவியை வழங்கி படிப்படியாக பல்வேறு நிலைகளுக்கு உயர்த்தி பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடச் செய்து வெற்றியடையச் செய்தது. இ.தொ.கா.தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து வெளியேறி அரசுடன் இணைந்து பிரதி சுகாதார அமைச்சரானார்.

பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தனியான தொழிற்சங்கத்தையும் ஆரம்பித்தார். ஊவா மாகாண சபையில் போட்டியிட்டு வெற்றிபெற்றதுடன் அம்மாகாண அமைச்சராகவும் செயற்பட்டார். ஊவாவில் இ.தொ.கா. பலம் பொருந்திய நிலையில் இருந்தபோதும் அதனையும் மீறி கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இவை ஒரு புறமிருக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கா ஆகியோரது காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் தோட்டத் தோழிலாளர்களுக்கான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இ.தொ.காவே மிகப் பெரும் பலம்வாய்ந்த தொழிற்சங்கமாக இருந்து வந்தது.

பல்லாயிரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட இ.தொ.கா.ஆசியாவிலேமே மிகப் பெரிய தொழிற்சங்கம் என்ற பெயரைப் பெற்றது. இதுவே இ.தொ.கா.வுக்கு ஆசிய தொழிற்சங்க சம்மேளனத்திலும் ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் உள்ளிட்ட பல அமைப்புக்களில் உறுப்புரிமை கிடைக்கக்காரணமாக அமைந்தது.

தவிர இலங்கையின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக பெருந்தோட்டத்துறை இருந்ததுடன் அதன் தலைமை இ.தொ.கா.விடம் ஏகபோகமாக இருந்ததை இல்லாமல் செய்வதற்காகவே இ.தே.தோ.தொ.ச.(LJWEU) திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆளும் அரசின் தொழிற்சங்கமாக இருந்ததால் சங்கத்தை வளர்ப்பதற்கான அனைத்து வளங்களும் வசதிகளும் தாராளமாக கிடைத்தன. இது ஒரு கட்டத்தில் இ.தொ.கா.வையே அச்சுறுத்தும் அளவுக்கு அசுர வளர்ச்சியடைந்தது.

அவ்வாறான பெரிய பாரம்பரியமிக்க தொழிற்சங்கத்தின் பொறுப்புவாய்ந்த பதவியான பொதுச் செயலாளர் பதவியில் வடிவேல் சுரேஷ் எம்.பி. அமர்த்தப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தோட்டத்தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் இ.தொ.கா., இ.தே.தோ.தொ.ச.மற்றும் தொழிற்சங்கக்கூட்டுக்கமிட்டி ஆகிய மூன்று அமைப்புக்களும் அங்கிகாரம் பெற்றுள்ளன.

கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்படும் காலத்திலிருந்தே இந்த மூன்று அமைப்புக்களும் ஒன்றாக செயல்பட்டு வந்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் இ.தே.தோ.தொ.சங்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் வடிவேல் சுரேஷ் எம்.பி.க்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

முதலாவது, சுமார் ஒன்றரை வருடமாக செய்து கொள்ளாதிருக்கும் கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட வேண்டும். அதற்கு இ.தொ.கா.இணைந்து செயற்பட வேண்டியதொரு கட்டாயம் உள்ளது. எனவே, தனது பகையாளியான இ.தொ.கா.வுடன் இணைந்து செயற்படுவாரா? சிலவேளை அதற்கு வடிவேல் சுரேஷ் தயாராக இருந்தாலும் இ.தொ.கா.முன்வருமா?

கூட்டு ஒப்பந்தத்தின்மூலம் பெற்றுக் கொடுக்க வேண்டிய சம்பள உயர்வாக 1000 ரூபா பெற்றுக் கொடுக்கப்படுமா? இவ்விடயத்தில் இ.தொ.கா.வுடன் ஒத்துப்போவாரா அல்லது வேறொரு சம்பளத் தொகையைக் கேட்பாரா?

2500 கொடுப்பனவுக்காக பாராளுமன்றத்தில் தீக்குளிக்க முற்பட்ட வடிவேல் சுரேஷ் 1000 ரூபா சம்பள உயர்வுக்காக இன்னொரு தடவை தீக்குளிப்பாரா? அல்லது வேறு நடவடிக்கைகளை எடுப்பாரா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் மட்டுமின்றி பல்வேறு சவால்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் வடிவேல் சுரேஷ் இருக்கிறார்.

எவ்வாறாயினும் ஐ.தே.க.தலைமை பல்வேறு உள்நோக்கங்களை வைத்தே இந்த முக்கிய பதவியை வடிவேல் சுரேஷ் எம்.பிக்கு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. அதில் இ.தொ.கா.வை பெருந்தோட்ட தொழிலாளர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கும் திட்டமும் ஒன்றாக இருக்கலாம்.

வடிவேல் சுரேஷ் எம்.பி.தனக்கும் கிடைத்துள்ள புதிய பொறுப்புக்கள்மூலம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பது உண்மை.


நன்றி - veerakesari
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates