Headlines News :
முகப்பு » » ஒரு அரசமரமும் சில வெளவால்களும் - பிரமிளா பிரதீபன்

ஒரு அரசமரமும் சில வெளவால்களும் - பிரமிளா பிரதீபன்


“இன்னு கொஞ்ச நாள்ல வீட்டுக்குள்ளயும் வேர் வந்து வீடெல்லாம் வெடிக்கப்போகுது பாரு…” அம்மா பேசிக்கொண்டிருப்பது மரத்துடன்; என்பதையறியாமல் நான் பதில் பேசிக்கொண்டிருந்தேன். “அதுக்காக வேர் எங்கெல்லாம் போகுதுன்னு தேடி வெட்ட முடியுமா என்ன…?”

“பின்ன என்னடி, அரச மரமாச்சே வெட்ட கூடாதுன்னு பாதுகாத்துவச்சா முழுசா அபகரிச்சிடும் போலிருக்கே…!”

என்னதான் அடிக்கடி இப்படி திட்டினாலும் இந்த அரசமரத்தின் மீதான ஈர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்தப்படியேதான் இருந்தது.

பெருத்த தன் உடலுடன் கிளைகளையும் இலைகளையும் இயலுமானவரைக்கும் விஸ்தரித்துக் கொண்டு என் வீட்டு பின்வாசலுக்கு நேராக சற்றே எட்டி நின்றதந்த மரம்.

இளைப்பாற வந்தமரும் பெயர்த்தெரியா பட்சிகள் பகற்பொழுதுகளிலும், எண்ணிக்கொள்ளவியலா வெளவால்கள் இராப் பொழுதுகளிலும் மரத்தை தன்வசப்படுத்திக் கொண்டன. போதாகுறைக்கு

மரத்தின் ஆளுயர தண்டுப்பகுதியில் தென்பட்ட இருளக் வ்;விய சிறு பொந்தொன்றுக்குள் காவிநிறம்

படிந்த உடும்பொன்றும் தன்னை பதுக்கி பாதுகாத்துக்கொண்டிருந்தது.

மரத்தினடியை கடந்து செல்வோர் மாத்திரமின்றி தூரத்தேயிருந்து மரத்தின் குளிர்ச்சியை அவதானிப்போர் வரை எல்லோராலும் மரம் பற்றியதான ஏதோ ஒரு கருத்து அன்றாடம் பரப்பப்பட்டுக்கொண்டேயிருந்தது.

பௌத்த மக்கள் நிரம்பிய என் வீட்டு சூழலில் அந்த அரசமரத்திற்கென்று தனித்ததொரு மரியாதை கிடைத்ததெனினும், அம்மரத்தினடியில் கௌதமபுத்தரின் சிலையொன்று வைக்கப்படாமைக்கு காரணம் எதுவாக இருக்கமுடியுமென்று தெரிந்துக்கொள்ள நான் ஒருபோதும் முயற்சித்ததில்லை. என்றாலும், நாங்கள் பிற மதத்தவர்களாய் இருப்பதாலும், எங்கள் வீட்டு வாசலில் அம்மரம் நிற்பதுவும் அதற்கு காரணங்களாக இருக்கக்கூடுமென என்னால் ஊகிக்க முடிந்தது.

என்னதான் நாங்கள் வேறானவர்களாய் இருந்திட்ட பொழுதிலும் அம்மரத்தின் புனிதமும் வரலாற்றுச்சிறப்புகளும் எங்கள் உணர்வுகளிற்குள்ளும் பரவியேதான் இருந்தன.

கூடவே எங்கள் மூத்த பரம்பரையினரது அரசமரத்துடனான தொடர்புகள் பற்றிய அம்மாவின் நினைவு மீட்டல்களையும் தவிர்க்க இயலாமலிருந்தது.

அம்மாவிற்கும் அரச மரத்திற்குமிடையிலான உறவு விசித்திரமானது. மரத்தின்மீது எவரையும் ஏற விடவோ ஒரு கிளையைத்தானும் முறிக்கவோ மறுக்கும் அவள், காலைப்பொழுதுகளில் வாசலை சுத்தம் செய்கையில் மாத்திரம் இடையறாது திட்டிக்கொண்டேயிருப்பாள்.

அவளது வசவுகள் அம்மரத்தின் பருத்த தண்டிலேயே பட்டு மீண்டு வந்து எங்கள் காதுகளுக்குள்ளும் விழும்.

“தூருல நோண்டி பெருங்காயத்த வச்சாலும் பரவால்ல…” “எழவெடுத்த மரம் உசுர வாங்குது…”

தொலஞ்சுபோன வெளவாலுக்கெல்லாம் வேற எடமே இல்லயா…” “கருமம்.. கருமம்…. செத்து தொலையுதுகளா பாரு…!”

இரவுப்பொழுதில் மரத்தை முழுதாய் ஆட்சி செய்யும் வெளவால்களுடன் அம்மா படும் துயரம் அவளை என்னவெல்லாமோ பேச வைத்தது.

தினமொரு விதமான எச்சங்கள். சில பொழுதுகளில் வாசலெங்கும் பச்சையிலைகளை மென்று துப்பினாற் போல சக்கை சக்கையாய் சிதறிக்கிடக்கும். சில நாட்களில் அடர்பச்சை நிற அல்லது

 கபிலநிறம் கலந்த எச்சங்கள். வேறு சில பொழுதுகளில் மரத்தின் காய்ந்த கிளைகள் ஒருமித்து விழுந்து வாசலெங்கும் நிரம்பி வழியும்.

இவற்றை தாண்டிய அடுத்தக்கட்டமாய் மரத்தில் பழங்கள் பழுக்கும் இடைவெளியை கடப்பதுதான் அறவும் முடியாத காலமாகிப்போகும். பழவிதைகள் எச்சங்களாகி பசைத்தன்மையுடன் ஆங்காங்கு குவியலாய்… ஒரு விதமான துர்மணத்துடன்… சுத்தப்படுத்தி முடிப்பதற்குள் கைகள் இரண்டும் நோவெடுத்து குமட்டிக்கொண்டு வருவதாய் அம்மா நொந்துக்கொள்வாள்.

 எப்படியோ, இந்த வெளவால்கள் மீதான அத்தனை கோபமும் மரதத்தின் மீதான கோபமாக மாறத்தொடங்கியிருந்தது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அரசமரத்து நிழலில் பிள்ளையார் விரும்பி உறைவார் என்ற நம்பிக்கையையும், அதன் கிளைகளுக்கிடையே தெரியும் வெளிகளுக்கூடான மாலைநேர மஞ்சள் வெயிலை தினமும் ரசிப்பதையும் அம்மா நிறுத்திக்கொள்ளவில்லை.

எனக்கென்றால் அரச மரத்தைவிட அதன் இலைகள் மீதான விருப்பமே அதிகமாக இருக்கிறது.

இவ்விலைகளுக்கு ஒப்பானதொரு அழகான இலை இதுதானென, வேறொரு இலையை காட்டி நிரூபித்துவிட அதிகளவு பிரயத்தனப்பட வேண்டியிருக்குமென்றே தோன்றுகிறது.

தடித்துப் புடைக்காத மென்மையான நரம்புகளைக்கொண்டு இலையின் நுனிப்பகுதியில் சற்றே நீண்டு வளைந்த மெல்லிய வால் போன்றதொரு இணைப்புடன், இதய வடிவினதான சமச்சீர் அச்சுடன், ஒற்றை விரலால் மெதுவாய் அவ்விலையை தடவிப்பார்க்கும் போதுதான் புரிகின்றது அரசிலைகள் பெண்தன்மையினதென்று…

இத்தகையதொரு மிருதுத்தன்மையும், தோற்றத்தின் பளபளப்பும் நிச்சயமாய் ஆண்தன்மையுடனான தாவரங்களுக்கு அரசிலைகளின் பாலொரு ஈர்ப்பை உருவாக்குமென்று…

பல்லாயிரம் இலைகள் மரக்கிளைகளுடன் பிண்ணிப்பிணைந்து கிடந்தாலும், உற்று அவதானித்தால் அவ்விலைகள் ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று ஒட்டாமலும், தவறுதலாக ஓரிரண்டு இலைகள் பிரிதொன்றுடன் மோதுண்ட போதும் அவை தனித்து நின்று தனக்கெனவொரு தனித்துவம் பேணியே தம்மை அசைத்துக்கொள்வதையும் காண்கையில் அளவற்றதொரு ஆச்சர்யம் பெருகிக்கொண்டேப் போகிறது.

தேசியக்கொடியில் கம்பீரமாக நிற்கும் சிங்கத்தின் நான்கு புறத்தேயும் நான்கு அரசிலைகள் உள்ளன. அதற்கு காருண்யம், இரக்கம், திருப்தி, பற்றின்மை என்பவைகளே பொருளாக கொள்ளப்படுகிறதென தெரிந்தபின், ஒருபடி அதிகமாய் அதிசயிக்கிறேன்.

ஓரிலையை கையில் எடுத்து பார்த்துக்கொண்டேயிருக்க, ஆதிகால கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருப்பதையொத்த எழுத்து வடிவம் இலை முழுவதுமாய் விரவியிருக்கிறது. அவை ஏதோ ஒன்றை புரிய வைக்க முயற்சிக்கும் நவீன ஓவியமாகவும் தோற்றமளிக்கிறது.

அவை எழுத்துக்களாக இருக்கும் பட்சத்தில், நிச்சயமாய் ஒவ்வொரு இலையும் துளியளவேனும் அறக்கருத்துக்களை போதிக்கவே உருவாக்கப்பட்டிருக்கும். அப்படியெனின் எத்தனை ஆயிரம்

இலைகள…; ? எத்தனை விதமான அறச்சிந்தனைகள்…?

மரத்தில் வந்தமரும் பகற்பொழுது பட்சிகளால், அதனை இனங்கண்டிருக்க முடியுமாயிருக்க வேண்டும். பிறரை துன்பிக்காத பக்குவம் அவைகளுக்கு உண்டெனில் அவை இந்த அரசிலைகள்

கூறும் அறநெறிகளை கடைப்பிடிக்கும் ஒரு வர்க்கத்தினராகின்றன. ஆனால் இந்த வெளவால்கள் !

தமக்கு பார்வைத்தெரியும் மொத்த நேரத்திலும் முழுதாய் மரத்தை ஆக்ரமித்துக் கொள்கின்றன.

இரவு முழுவதும் அவற்றின் ஓலங்களும் கொண்டாட்டங்களுமாய், மரத்தின் மீதான பற்று துளியளவும் இன்றி, இந்த மரம் தாம் சார்ந்ததென்றும் தமக்கு மட்டுமே உரியதென்றும் ஒரு மாயையை உருவாக்கி மிதப்பில் திரிகின்றன.

தூரத்தேயிருந்து அரசமரத்தின் அழகினை வியந்து பேசும் எவரொருவராயினும் அருகில் வந்து

இந்த வெளவால்களின் துர்நடத்தையை அனுபவிப்பாராயின் அரசமரத்தையே வெறுத்து ஒதுக்கக்கூடும்.

 தவறு அரசமரத்தினது அல்ல… அதனை தனக்கு மட்டுமேயென கொண்டாடும் வெளவால்களது என்ற புரிந்துணர்வு இல்லாமல் போகக்கூடும்.

மரத்தை அத்தனையளவு நேசித்த அம்மாவே, சதா இந்த வெளவால்களினது எச்சம் அள்ளி துவண்டவளாய் ஒரு கட்டத்தில் சோர்ந்து போகிறாள். மரத்தை வெட்டிவிடுவதென முடிவெடுக்கிறாள்.

“எத்தன தடவ சொல்லிட்டேன்…? இந்த மரத்த வெட்டி தொலைங்ளே…” என்று யார்யாரிடமோ சண்டையிடுகிறாள்.

இந்த அரசமரத்தின் தொடர்பற்று தள்ளி வாழவேண்டும். தம்மையும் தம் பிள்ளைகளையும் பாதுகாக்க வெண்டுமென்பதை தனது கொள்கையாக்கிக் கொள்கின்றாள்.

மரத்தை வெட்ட அனுமதியில்லையென்றும். அரசிடம் அனுமதி எடுக்க வேண்டுமென்றும் தெரியவருகின்றது.

அப்படியே போராடி அனுமதி எடுத்தாலும், அம்மரத்தில் ஏறி வெட்டும் துணிவு எவருக்கும் வர முடியாத அளவிற்கு அரசமரத்தின் புனிதம் பாதுகாக்கப்படுவது தெளிவாகின்றது.

வீட்டை சூழவும் ஆழ ஊடுருவி பரந்து வேர்விட்ட அரசமரத்தின் பகுதிகளை என்னவென்று எளிதில் அகற்றிவிட இயலும்…? அல்லது மொத்த வெளவால்களையும் ஒரேயடியாய் அழித்து இல்லாமல்

ஆக்குதல் எங்கனம் சாத்தியமாகக்கூடும…; ? அம்மாவிற்கு அது புரியவில்லை.

தொடர்ச்சியான இடைஞ்சல்கள் சலிப்பையே மிதமாக்கின.

காலப்போக்கில் வெளவால்களை விடுத்ததொரு அரசமரம் பற்றியதான எண்ணமே இல்லாமல் போகத் தொடங்கியது. மரத்தின் மீதான இரசணை உணர்வும் மொத்தமாய் மங்கிப் போயிருந்தது.

வழமைப்போல நான் மரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதே தனித்துவத்துடன் அந்தரத்தில் தொங்குவதையொத்து இலைகள் மினுங்கி அசைகின்றன. மெலிதான ஒரு சலசலப்பு காற்றோடு சேர்ந்து பரவுகிறது.

மரப்பொந்துக்குள்; பதுங்கியிருந்த காவிநிறத்தையொத்த அந்த உடும்பு அக்கம் பக்கம் பார்த்தபடி மெதுவாய் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

-----0-----
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates