Headlines News :
முகப்பு » , , , » சிம்மாசனப் பிரசங்கத்தால் தோற்கடிக்கப்பட்டவர்கள் - என்.சரவணன்

சிம்மாசனப் பிரசங்கத்தால் தோற்கடிக்கப்பட்டவர்கள் - என்.சரவணன்


இந்த நாட்களில் ஆட்சிக் கவிழ்ப்பு, சதி, அரசியல் துரோகம் என்பன பற்றி அரசியல் களத்தில் காரசாமாக உரையாடப்படுகிறது. வரலாற்றில் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது எதிர்பாராதவிதமாக ஆட்சி கவிழ்க்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இரண்டு நிகழ்ந்துள்ளன. அது என்ன சிம்மாசனப் பிரசங்கள் அது பற்றிய கதை தான் இது.

பொதுத்தேர்தலொன்றின் பின் அமைக்கப்படும் அரசாங்கம் அதன் முதல் பாராளுமன்ற அமர்வில் ஆற்றப்படும் உரையைத் தான் சிம்மாசனப் பிரசங்கம் என்று அழைக்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் என்பன உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஒரு நிகழ்வு அது. அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனும் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போதும், அப்போதைய தேசாதிபதி (Governor General),  சிம்மாசன உரையை (throne speech) நிகழ்த்துவார். பின்னர், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கம் பதவி துறப்பது மரபாகும். 1960, 1964 ஆகிய இரண்டு ஆண்டுகள் அடுத்ததடுத்து அரசாங்கங்கள் இரண்டும் தோற்கடிக்கப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது அப்படித்ததான்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி முதல் அமர்வில் ஆற்றப்படுவதை சிம்மாசனப் பிரசங்கமாக கருதும் மரபு வழக்கொழிந்து போய்விட்டது என்றே கூறவேண்டும். அந்த சிம்மாசன உரையின் மரபின்படி இப்போதும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் - நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு, சபை மீண்டும் கூடும்போது, ஜனாதிபதியால் கொள்கை விளக்க உரையொன்று நிகழ்த்தப்படுகிறது. இப்போதெல்லாம் உரைமீதான விவாதமோ அல்லது வாக்கெடுப்போ நடத்துவது கட்டாயமல்ல. அப்படி விவாதம் நிகழ்ந்தாலும் வாக்கெடுப்பு நடைபெறுவதில்லை. அந்த பழைய மரபு, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பை அடுத்துக் கைவிடப்பட்டது.

சிம்மாசனப் பிரசங்கம் என்பது பிரித்தானிய பாராளுமன்ற மரபு. நமது ஆட்சி – நிர்வாக அமைப்பு முறை நீண்ட காலம் பிரித்தானிய மரபைப் பின்பற்றியே இருந்தது. இன்றும் அவற்றின் பல அம்சங்கள் பேணப்பட்ட வருகின்றது. சிம்மாசனப் பிரசங்கம் ஆரம்பத்தில் மேலும் அதிக சம்பிரதாயங்களைக் கொண்டிருந்தது.


சிம்மாசனப் பிரசங்கத்தின் மரபு

சிம்மாசனப் பிரசங்கம் செய்யப்படும் நாளை அரசாங்கம் தீர்மானிக்கும். அந்த அறிவித்தல் ஆளுனரால் பிரதிநிதிகள் சபை மண்டபத்தில் வைத்து வாசிக்கப்படும். சிம்பிரதாயபூர்வமான சடங்குகள் முற்பகல் பத்து மணிக்கு ஆரம்பமாகும். பாராளுமன்றப் பிரதிநிதிகள், சபாநாயகர், செனட் உறுப்பினர்கள், சபைத் தலைவர் ஆகியோர் ஒழுங்குடன் சென்று உரிய ஆசனங்களில் அமர்வார்கள். உரிய நேரத்தில் ஆளுநர் வருகை தருவார். வாசலில் வைத்து பிரதமர் அவரை மரியாதையாக அழைத்துச் செல்வார். இந்த நேரத்தில் பாராளுமன்றத்துக்கு வெளியில் இராணுவ அணிவகுப்பும், 21 தடவை பீரங்கி முழக்கமுட்டும் மரியாதை செலுத்தப்படும்.  அந்த சமிக்ஞையுடன் ஆளுநரின் செயலாளர் சபையைக் கூட்டும் அறிவித்தலைச் செய்வார். (இந்தப் பதவியில் நீண்டகாலம் என்.டபிள்யு.அத்துகோரல இருந்தார்.)

அதன் பின்னர் சிம்மாசனப் பிரசங்க உரையை ஆளுநரிடம் பிரதமர் கையளிப்பார். அது சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் பிரதமரிடம் கையளிக்கப்படும். இது முடிந்ததும் சபையை ஒத்திவைக்கும் பிரேரணை கொண்டுவரப்படும். அவ்வாறு ஒத்திவைக்கப்படும் தினத்திற்குள் ஒரு நாளில் சிம்மாசனப் பிரசங்கத்தின் மீதான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். பாராளுமன்றத்தில் அந்த சிம்மாசனப் பிரசங்கத்திற்கு நன்றிநவிலும் ஒரு பேச்சும் இடம்பெறும். இதற்காக பெயர் குறிக்கப்படும் இருவர் தமக்கான கௌரவமாக அதனைக் கருதுவர். “நன்றிநவிலும் உரை” என்று அது அறியப்பட்டாலும் அது சிம்மாசன உரையின் மீதான விமர்சனங்களையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கிய உரையாகவே அமைவது வழக்கம். அந்த உரையின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோற்றால் பாராளுமன்றம் கலைக்கப்படுவது வழக்கம்.

டட்லி தோல்வி

19.03.1960 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க -50, ஸ்ரீ.ல.சு.க – 46, ல.ச.ச.க. -10, மக்கள் ஐக்கிய முன்னணி - 10, தமிழரசுக் கட்சி -15, இலங்கை ஜனநாயகக் கட்சி -04,  கொம்யூனிஸ்ட் கட்சி - 03, ஜாதிக்க விமுக்தி முன்னணி -02, அகில இலங்கை ஜனநாயக சங்கம் -01, போசத் பண்டாரநாயக்க பெரமுன – 01, சோஷலிச மக்கள் முன்னணி -01, இலங்கை தேசியக் கட்சி – 01, சுயாதீன உறுப்பினர்கள் 07. ஆக மொத்தத்தில் 151 உறுப்பினர்களில் 50 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஐ.தே.க அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்கிற அடிப்படையில் ஆட்சியை அமைத்துக்கொண்டது. ஆனால் டட்லி தலைமையிலான ஐ.தே.க பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக் காட்டியாக வேண்டும். (வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்ற சபாநாயகராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த (டி.பீ.சுபசிங்க தெரிவானார்) ஒருவர்.)

06.04.1960 அன்று மேற்குறிப்பிட்ட சம்பிரதாயங்களுக்கு இணங்க 10மணிக்கு ஆரம்பமாக வேண்டிய ஆரம்ப வைபவம் பி.ப 2.30க்குத் தான் ஆரம்பமானது. ஆளுநர் ஒலிவர் குணதிலக்கவின் கையில் பிரதமர் டட்லி சிம்மாசனப் பிரசங்கத்தைக் வழங்கினார். அதனை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஆளுநர் வாசித்தார். தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும், வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஏனைய தமிழ் உறுப்பினர்களும் அதனை தமிழிலும் வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆளுநர் தனக்கு தமிழில் வாசிக்க முடியாததைக் கூறி அவர்களுக்கு தமிழில் அச்சடிக்கப்பட்ட உரையை வழங்கினார்கள்.

இந்த உரையைத் தொடர்ந்து ஒத்திவைப்பிப் பிரேரணைக்காக மீண்டும் பாராளுமன்றம் கூடியது. ஒத்திவைப்புப் பிரேரணையும், நன்றி கூறும் உரையும் அதுவரை 20 நிமிடங்களுக்கு மேல் நீண்டதில்லை. ஆனால் அன்றைய நாள் முதற்தடவையாக பிற்பகல் 3.30யிலிருந்து மாலை 8.30 வரையான ஐந்தரை மணித்தியாலங்கள் நீண்டது என்று அன்றைய லங்காதீப பத்திரிகை பதிவு செய்தது. (07.04.1960). அன்றைய தினம் 53 பேர் உரையாற்றியிருக்கிறார்கள். ஒத்திவைப்பு பிரேரனையை சபைத்தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன (முதற் தடவையாக சிங்களத்தின்) முன்மொழிய ஜஸ்டின் சீ விஜயவர்தன அதனை ஆமோதித்திருக்கிறார்.

1960 ஏப்ரல் 22ந் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பு நடந்தது. அரசாங்கத்துக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 93 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சிம்மாசனப் பிரசங்கத்துக்கு முன்னதாகவே டட்லி சேனநாயக நியமன உறுப்பினர்கள் ஆறு பேரையும் நியமித்திருந்தார். அவர்களும் சில சுயேச்சை உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அரசாங்கம் பெரும்பானையை நிரூபிக்கத் தவறியதாலும், வாக்கெடுப்பில் தோல்வியுற்றதாலும்  பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி டட்லி சேனநாயக ஏப்ரல் 23ஆம் திகதி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினார்.

அதே வேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சி தமக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு இருப்பதால் அரசாங்கம் அமைப்பதற்கு உரிமை கோரியது. இக் கோரிக்கை தொடர்பாக இடதுசாரிக் கட்சிகளினதும் தமிழரசுக்கட்சியினதும் நிலைப்பாட்டைக் கேட்டறியும் நடைமுறையை ஆளுநர் ஆரம்பித்தார்.

அன்றைய ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க ஒரு குள்ள நரி. மேலும் அவர் ஐ.தே.கவைச் சேர்ந்தவர். எனவே ஐ.தே.கவை ஏதாவது வழியில் ஆட்சியிலமர்த்த முடியுமா என்று வழி தேடினார். 1960 ஏப்ரல் 27 எதிர்க்கட்சிகளை இராணி மாளிகைக்கு தனித்தனியாக பேச அழைத்தார். செல்வநாயகம் கவர்னரை சந்திக்க செல்லு முன்னர் கொள்ளுபிட்டியிலுள்ள பீலிக்ஸ் இன் வீட்டுக்குச் சென்று சீ.பி.டீ.சில்வா, ஏ,பி.ஜெயசூரிய ஆகியோரிடம் “நான் இப்போது சேர் ஒலிவரிடம் உங்களை ஆதரிக்கப் போவதாகச் சொல்லப் போகிறேன். நீங்கள் பதவிக்கு வந்தால் எம்முடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவீர்களா என்பதை உறுதி செய்வதற்காக வந்தேன்” என்றார். அங்கிருந்த இருவரும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். “நீங்கள் உறுதிமொழிப்படி நடப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று செல்வநாயகம் கேட்ட போது அதற்கு சீ.பி.டி.சில்வா “நான் மிகவும் கறாராகப் பேரம் பேசுபவன். ஓர் உடன்படிக்கைக்கு வந்து விட்டால் அதனை பேணுபவன்” என்றார்.

இதன் விளைவாக செல்வநாயகம் சேர் ஒலிவரை சந்தித்தார். “தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எதிர்க்கட்சியினால் அரசாங்கம் அமைக்க முடியாது. சீ.பி.டீ சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஆதரவளிப்பீர்களா?” என்று பீடிகை போட்டார் ஆளுநர் ஒலிவர். அதற்கு பதிலளித்த செல்வநாயகம் “சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம் எனவே இரண்டு வருடத்துக்கென்னே, பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முழுவதும் ஆதரிப்போம்” என்றார்.

இந்த பதிலை எதிர்பார்க்காத சேர் ஒலிவர் அந்த சந்திப்பு நிகழ்ந்து சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்தார். சுதந்திரக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதைவிட இன்னொரு தேர்தலை ஏற்படுத்தி ஐ.தே.க பெரும்பான்மையை பெற சந்தர்ப்பத்தை உருவாக்குவது அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் சேர் ஒலிவர் தான் கலைத்ததற்குக் கொடுத்த காரணம் தமிழரசுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகக் கூறவில்லை. ஆகவே அது ஸ்திரமான அரசாங்கமாக அமையாது என்று பசப்புக் காரணங்களைக் கூறினார். இந்த இடத்தில் ஆளுநர் ஒலிவர் குணதிலக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நினைவுபடுத்திகிறாரா?

பிரதமரின் அதிகார எல்லை!?

டட்லி சேனநாயக பிரதம மந்திரியாகப் பெயர் குறிப்பிடப்பட்டவர் (Prime Minister Designate) மாத்திரமே என்றும் சபையில் நம்பிக்கை வாக்கைப் பெற்ற பின்னரே அவர் பிரதம மந்திரி என்ற சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறுவார் என்றும் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி சிபார்சு செய்யும் அதிகாரம் அதுவரை அவருக்கு இல்லை என்றும் கலாநிதி என்.எம்.பெரேரா சுட்டிக்காட்டியதை ஆளுநர் கவனத்தில் எடுக்கவில்லை. இலங்கைப் பாராளுமன்றம் அக்காலத்தில் பின்பற்றிய பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகவே ஆளுநர் இவ்விடயத்தில் நடந்தார்.

அரசியலமைப்பு விடயம் பற்றிய தலைசிறந்த நூலாக “Wade and Phillips - Constitutional Law” என்கிற நூல் கருதப்படுகின்றது. பாராளுமன்றத்தில் ஒருபோதும் பெரும்பான்மையைப் பெற்றிருக்காத பிரதமர் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஆலோசனை வழங்கும் உரிமை உடையவரல்ல என்று 1965 ம் ஆண்டு வெளியாகிய இதன் ஏழாவது பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது. முந்திய பதிப்புகளில் இக் கருத்து இருக்கவில்லை. இலங்கையில் 1960ம் ஆண்டு இடம் பெற்ற சம்பவத்தை நினைவில் வைத்தே ஏழாவது பதிப்பில் இது திருத்தப்பட்டிருக்க வேண்டும்..

இந்த விடயத்தில் பிரித்தானிய மரபைப் பின்பற்றும் அங்கு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தையும் முன்னுதாரணமாக கூறமுடியும். பிரித்தானியாவில் 1923 டிசம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிங் கட்சி 258இடங்களையும் தொழிற் கட்சி 191 இடங்களையும் லிபரல் கட்சி 151 இடங்களையும் கைப்பற்றின. கன்சர்வேடிங் கட்சியின்தலைவர் பால்ட்வின் (Baldwin) பிரதமராகப் பதவியேற்றார். சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் அவரது அரசாங்கம் தோல்வியடைந்தது. அவர் இராஜினாமா செய்தாரேயொழியப் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி சிபார்சு செய்யவில்லை. லிபரல் கட்சியின் ஆதரவுடன் தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.

சீ.பீ.டிசில்வா “சாதி”க்குப் பலி

பாராளுமன்றத்தைக் கலைப்பது என்ற முன் முடிவுடனேயே ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக மற்றைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர் என்பது ஒரு காரணம். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அப்போது தலைமை வகித்தவர் சீ.பீ.டிசில்வா. அவர் பிரதமராக ஆவதற்கு பலர் ஆதரவுகொடுக்க தயாராக இருந்தார்கள். ஆனால் “சாதியில் குறைந்தவரான” அவர் பிரதமராக ஆவதை உயர் சாதிக்காரரான சேர் ஒலிவர் குணதிலக விரும்பியிருக்கமாட்டார் என்பது மற்றைய காரணம். இந்த காரணம் பரவலாக அப்போது பேசப்பட்டது. ஆராயப்பட்டது, உணரப்பட்டது.

1956 தேர்தலில் பண்டாரநாயக்கவின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர் சீ.பீ.டிசில்வா. 1960 ஜூலை தேர்தலில் சீ.பீ.டிசில்வா தான் பிரதமராகக் கூடிய வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு சிறிமா பண்டாரநாயக்கவை பிரதமராக ஆக்குவதில் முன்னின்றார். அவரின் அந்த விட்டுக்கொடுப்பால் தான் உலகின் முதலாவது பெண் பிரதமர் இலங்கையில் உருவான வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது. சீ.பீ.டிசில்வா “சலாகம” என்கிற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்ததால் அவரை பிரதமாராக்குவதற்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் இருந்ததை அவர் அறிந்திருந்தார்.

சிறிமாவின் ஆட்சியில் ஊடகங்கள் மீதான அடக்குறையை எதிர்த்து சிறிமாவை ஆட்சியில் அமர்த்த பிரதான பாத்திரம் வகித்த சீ.பீ.டி.சில்வா அதிருப்தியுற்று அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவருக்கு கட்சியில் இருந்த அநீதியின் காரணமாக அவர் அமைச்சுப் பதவி, சபைத் தலைவர் போன்ற பதவிகளையும் கட்சியின் உப தலைவர் பதவியையும், கட்சியையும் விட்டு விலகி ஸ்ரீ லங்கா சுந்திர சோசலிசக் கட்சி என்கிற ஒரு கட்சியையும் ஆர்ம்பித்தார். பின்னர் ஐ.தே.க வில் இணைந்து கொண்டதுடன் 1965இல் அமைக்கப்பட்ட ஐ.தே.க ஆட்சியிலும் சபைத்தலைவராக தெரிவானார்.

சிறிமா ஆட்சி

அடுத்த பாராளுமன்றத் தேர்தல் 1960 ஜூலை 20ந் திகதி நடைபெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையில் இத் தேர்தலுக்கு முகங்கொடுத்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி 75 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கு 16 ஆசனங்களும் கிடைத்தன. நியமன உறுப்பினர்கள் ஆறு பேரையும் சேர்த்து ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையைச் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக பிரதமராகப் பொறுப் பேற்றார். அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததால் செனற் சபை உறுப்பினராக நியமனம் பெற்றே அரசாங்கத்துக்குள் கொண்டுவரப்பட்டார். இன்னொரு வகையில் கூறப்போனால் உலகின் முதலாவது பெண் பிரதமர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பிரதமரானவர் அல்ல. பிரதமர் பதவி மாத்திரமின்றி தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய இரண்டு அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.

1964 தோல்வி

சிறிமாவின் ஆட்சி ஒன்றரை வருடத்திலேயே இராணுவ சதிப்புரட்சியை எதிர்கொண்டது. அது வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அடுத்த உட் சதியிலிருந்து அவரால் அடுத்த இரண்டு வருடங்களில் மீள முடியவில்லை.

லேக் ஹவுஸ் நிறுவனத்தை அரச உடமையாக்கும் முடிவு தனது ஆட்சிக்கே முடிவைத் தேடித்தரும் என்று சிறிமா அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. ஐ.தே.க வுக்கு ஆதரவாகவும் சுதந்திரக் கட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து இயங்கி வருவதாக கருதியது சிறிமா அரசாங்கம். ஐ.தே.கவுக்கும் லேக்ஹவுசுக்கும் இடையில் இருந்த குடும்ப உறவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த தீர்மானத்துக்கு உடனடிக் காரணமாக இருந்தது ஒப்சர்வர் பத்திரிகை வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரம். சமசமாஜ கட்சி அப்போது சுதந்திரக் கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பம் அது. அது பற்றிய கேலிச்சித்திரத்தில் என்.எம்.பெரேராவால் பிரதமர் சிறிமா  கர்ப்பிணியாக ஆக்கப்பட்டிருப்பதாக அந்தக் கேலிச்சித்திரம் அமைத்திருந்தது. இந்த கார்ட்டூன் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

1964 நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று சபை கூடியபோது, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினது சிம்மாசன உரை ஆளுனரால் வாசிக்கப்பட்டது. அதன் மீதான விவாதம், அதே ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதியன்று நடைபெற்றது. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து பலர் உரையாற்றினார்கள். வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, ஆளும் கட்சியிலிருந்து சீ.பீ.டி சில்வா தலைமையிலான 14 உறுப்பினர்கள் கட்சித் தாவி சிம்மாசனப் பிரசங்கத்தை தோற்கடித்ததால் 1 வாக்கு வித்தியாசத்தால், அரசாங்கம் தோல்வியடைந்தது.

சாதி காரணமாக கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டிருந்த சீ.பீ.டீ. சில்வா அன்றைய தினம் அவர் உரையாற்றும் போது. “முதுகில் குத்தி விட்டார்கள்” என்று வேதனையுடன் உரை நிகழ்த்தினார். சுதந்திரக் கட்சியில் இருந்து அவருடன் வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் அவரது சாதியைச் சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும். இதன் போது குடும்ப உறவு எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பது பற்றி திவிய்ன (14.01.2014) பத்திரிகையில் அனுர யசமின் சுவாரசியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

இந்த வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராகத் தான் வாக்களித்தது. நிதியமைச்சராக இருந்த கலாநிதி என்.எம்.பெரேராவும் லங்கா சமசமாஜக் கட்சியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான பேர்னாட் சொய்சாவும் வெளிநாடு சென்றிருந்தனர். லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேறிப் புரட்சிகரப் பிரிவாகச் செயற்பட்ட எட்மன்ட் சமரக்கொடியும் மெரில் பெர்னாண்டோவும் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். இதன் விளைவாக அந்த அரசாங்கமும் பதவி விலக நேர்ந்தது.

சபாநாயகரின் வாக்கையும் சேர்த்தே வாக்கெடுக்கப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிராக 74வாக்குகளும் ஆதரவாக 73 வாக்குகளுள் கிடைத்தன. ஒரு வாக்கால் தான் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. 1965 தேர்தல் நிகழ்ந்தது இதன் காரணமாகத்தான். 

வாக்களிப்பு நிகழ்வதற்கு சற்று முன்னர் வரை ஆட்சியைக் கவிழ்த்தி விட வேண்டாம் என்று கண்ணீர் மல்க பல உறுப்பினர்களை மன்றாடியவர் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வில்லியம் பெர்னாண்டோ. இப்படி செய்துவிட்டால் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது போய் விடும் எனவே தோற்கடித்து விடாதீர்கள் என்று கெஞ்சியவர் அவர். இந்திய வம்சாவளியினரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கியவர் அவர். மலையகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி; குடியேற்றப்பட்டவர்களின் வாக்கிலேயே பாரளுமன்றம் சென்றவர் அவர்.

அரசாங்கமொன்று பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலம் இல்லாவிட்டால் தாமாக பதவிவிலகுவது, அல்லது பெரும்பான்மையைக் கொண்ட எதிர்த்தரப்பு வாக்கெடுப்பு நடத்தி தோற்கடிப்பது என்கிற பாராளுமன்ற ஜனநாயக மரபு கடந்த காலங்களில் கட்டிக்காக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றம் பல சதிகளையும், சூழ்ச்சிகளையும் சேர்த்துக்கொண்டு தான் தனது அரசியல் பயணத்தை நிகழ்த்தி வந்திருக்கிறது. அரசியல் தலைவர்கள் அந்த மரபை மதித்து வந்திருக்கிறார்கள். இன்றைய நிலைமையோடு அவற்றை ஒப்பீடு செய்வது தவிர்க்க இயலாது இருக்கிறது.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates