Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அ"நீதி" இழைக்க வந்த இராணுவ "நீதி"மன்றம்! (1915 கண்டி கலகம் –38) - என்.சரவணன்


இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது இந்த 1915 கலவரத்தின் போது தான். மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய அரச இயந்திரம் அநீதியிழைத்து “இராணுவ நீதிமன்றமொன்றின்” தவறான முன்னுதாரணமாக வரலாற்றில் பதிய வைத்தது இந்த நீதிமன்றம். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை வேகமாக விசாரணை செய்து தண்டனை வழங்குவதற்காக இராணுவச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது இந்த இராணுவ நீதிமன்றம்.

இராணுவச் சட்டமும், இந்த இராணுவ நீதிமன்றமும் இலங்கைக்கு பழக்கப்பட்ட ஒன்றல்ல. அப்படிப்பட்ட இராணுவ நீதிமன்றம் பற்றியும் (Court Martial), “மாஸ்லோ” என்று பேச்சு வழக்கில் அன்று மக்களால் அழைக்கப்பட்ட இராணுவச் சட்டம் (Martial Law) என்பவற்றைப் பற்றி சில படித்தவர்கள் மட்டுமே பத்திரிகைகள், நூல்கள் வாயிலாக அறிந்திருந்தார்கள். சாதாரண பிரஜைகள் இராணுவ அதிகாரிகளால் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு நிலைமையை அதற்கு முன்னர் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நீதிமன்றம் பற்றிய கலக்கமும், பீதியும் மக்களுக்கு உண்டானதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சாதாரண நீதிமன்றங்கள் கலவரம் நிகழ்ந்த வாரம் கூட எந்த தங்கு தடையுமின்றி இயங்கிக் கொண்டு தான் இருந்தன. அது மட்டுமன்றி கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் கூட கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்களாக கருதப்பட்ட ஆயிரகனக்கானவர்களின் வழக்குகள் சிவில் நீதிமன்றங்களில் நிகழ்ந்தன. கலவரம் குறித்து தொடரப்பட்ட 8428 வழக்குகளில் 8016 வழக்குகள் சாதாரண சிவில் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டன. அதாவது 95 வீத வழக்குகள் விசாரிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 412 வழக்குகளை விசாரிக்கும் தகுதி அந்த சிவில் நீதிமன்றங்களுக்கு இருந்த நிலையில் ஒரு இராணுவ அதிகாரிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் தேவை ஏன் உருவானது.

1915 கலவரம் இலங்கையின் நீதி நிர்வாகத்தைப் பாதிக்கும் அளவுக்கு நிகழவில்லை என்பது வெளிப்படை. அதுமட்டுமன்றி இராணுவ சட்டமும், இராணுவ நீதிமன்றமும் அநாவசியமாக அனைத்தும் நிகழ்ந்துமுடிந்த பின்னர் பயன்படுத்தப்பட்டன. சாதாரண சிவில் மக்களுக்கு கலவரத்தை விட பீதி தந்ததாக அமைந்தது இந்த இராணுவ சட்டம் தான்.

இராணுவ நீதிமன்றத்தின் முதலாவது அமர்விலேயே அதன் கடும் போக்கின் காரணமாக பீதியையும் கலக்கத்தையும் உருவாக்கினர். கடுமையான தீர்ப்புகளினால் ஐரோப்பியர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர். கலவரம் நிகழ்ந்து முடிந்து 12 நாட்களின் பின்னர் ஜூன் மாதம் 17 அன்று “தேசத் துரோகம்”, சொத்துக்களை சேதப்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 9 பேருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் எவரும் எந்த கொலைக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத போதும் நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. இவர்களில் 6 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தவர் ஆளுநர் சாமஸ். அந்த 9 பெரும் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்கள். அதே நீதிமன்றத்தில் மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கொழும்பில் தொடரப்பட்ட இன்னொரு வழக்கில் அதே வகை குற்றச்சாட்டின் பேரில் 13 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த 13 பேரில் ஒருவர் எந்த குற்றமும் இழைக்காத இளம் நகர பாதுகாப்புப் படையைச் சேர்ந்த படித்த, சமூக செல்வாக்குள்ள எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ். அவர் பற்றி இந்த தொடரில் ஏற்கெனவே விரிவாகப் பார்த்தோம். ஒரு மரண தண்டனையை உறுதி செய்யும் பொறுப்பும் அதிகாரமும் ஆளுநரிடமே இருந்தது. ஆனால் ஹென்றி பேதிரிசின் விடயத்தில் அப்படி ஆளுநரின் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. ஹென்றி பேதிரிஸ் மரண தண்டனைக்கு உள்ளக்கப்பட்டதன் அடுத்த நாள் காலை காலனித்துவ செயலகத்துக்கு கடிதமொன்றின் மூலம் “இந்த தண்டனை குறித்து என்னிடம் அபிப்பிராயம் கோரப்பட்டிருக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு பதிலளித்த பிரிகேடியர் ஜெனரல் மல்கம் (Brigadier General H. H. L. Malcolm) சற்றும் சளைக்கவில்லை. “தண்டனை நிறைவேற்றப்பட்டது.” என்று திமிராகவே ஆளுனருக்கே பதிலளித்தார். இந்த இராணுவ சட்ட காலத்தில் இந்த இருவருக்கு இடையில் ஒரு அதிகாரப் போட்டி நிகழ்ந்து கொண்டிருந்ததாக குமாரி ஜெயவர்தனா “இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி” என்கிற நூலில் விளக்குகிறார். இந்த இருவருமே இறுதியில் பதவி துறக்கப்பட்டு திருப்பியழைக்கப்பட்டார்கள் என்பது தனிக்கதை.

ஆனாலும் இதன்போது ஆளுநரின் அனுமதிபெறாமல் நீதிமன்ற தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரே தண்டனை இது தான். அதற்கான காரணம் ஹென்றி பேதிரிஸ் ஒரு இராணுவ வீரர் என்பதால் அவரை விசாரித்து தண்டனை வாங்கும் அதிகாரம் இயல்பாகவே இராணுவ நீதிமன்றத்திடம் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அதேவேளை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமல் நேரடியாக கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் இவற்றில் அடங்காது.

1915 ஜூன் 3ஆம் திகதியன்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் டவ்பிகின் (H. L. Dowbiggin) ஆயுதம் தாங்கிய பஞ்சாப் படையினரையும் அழைத்துக் கொண்டு கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி ரயிலில் புறப்பட்டு வந்தார். எப்போது மீரிகமைக்கும் வேயங்கோடவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தெருவோரோத்தில் இருந்து குழுமி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி கிராமவாசிகள் மீதி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

உத்தியோகபூர்வமாக அரசாங்கம் எதனையும் இது குறித்து வெளியிடவில்லை. ஆனால் ஜூன் 5 வெளியான சிலோன் மோர்னிங் லீடர் (Ceylon Morning Leader) பத்திரிகையில் ரயிலில் டவ்பிகின்னோடு 28 பஞ்சாப் படையினர் இருந்தார்கள் என்றும் சுற்றிவர கண்மூடித்தனமாக மேகொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 35 அப்பாவி கிராமவாசிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பலர் காயப்பட்டதாகவும் அந்த செய்தியில் இருந்தது. அதுமட்டுமன்றி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிட மேலதிகமாக இருக்கக்கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஜூலை 18 அன்று ஹங்வெல்ல பிரதேசத்தில் நடந்த இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது தேசத்துரோகம், சொத்துக்களை சேதப்படுத்தல், கொள்ளையடித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 பேருக்கு எதிரான வழக்கில் 11 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனையளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனையளிக்கப்பட்ட எஞ்சிய இருவரும் முஸ்லிம்கள் ஆவர். இவ்வாறு இராணுவ நீதிமன்றம் மட்டும் 83 மரண தண்டனைகளை வழங்கியது. 60 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதில் உள்ள வேதனை மிகுந்த வேடிக்கை என்னவென்றால் இவர்களில் பலர் இந்த கலவரத்தில் பாதிப்பட்டவர்களாகவோ, தப்பி வந்து தஞ்சம் கோரியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களாகவோ இருந்தது தான்.

இந்தளவு நீதிவழங்கும் நிறுவனம் அநீதியிழைத்து அப்பாவிகளை படுகொலை செய்யும் அரசு இயந்திரமாக ஆனது பற்றி சமூகத் தலைவர்கள் பலர் சட்டசபை உறுப்பினர்களுக்கு ஊடாக ஆளுனரை சந்தித்து முறையிட்டனர். அவை எதுவும் சாத்தியப்படவில்லை. இந்த இராணுவ நீதிமன்றத்தைக் கலைத்துவிட்டு சாதாரண சிவில் நீதிமன்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளையும், ஜூரி சபையையும் கொண்ட விசேட நீதிமன்றத்தை உருவாக்கி வழக்குகளை விசாரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டன. சேர்.பொன் இராமநாதன் இது குறித்து தொடர்ச்சியாக குரல் கொடுத்தார். ஆனால் அவை எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லை. மாறாக இராணுவ நீதிமன்றம் 1915ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 வரை இயங்கியது.

இராணுவ நீதிமன்றத்தில் நடந்த வழக்குகள் அத்தனையும் எதேச்சதாதிகாரத்துக்கு சிறந்த உதாரணங்களாக விளங்கின. அவரவர் விரும்பியபடி முறையிடும் வாய்ப்புகள் இருந்தன. அவற்றை தீர விசாரிப்பதற்கான எந்த பொறிமுறையையும் அவர்கள் கையாளவில்லை. வெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் உடனடி தீர்ப்பு வழங்கும் அராஜக நீதிமன்றங்களாகவே அவை செயல்பட்டன. எனவே தனி நபர்களுக்கு எதிரான பழிவாங்கல் நிறையவே நிகழ்ந்தன என்பதை ஆர்மண்ட் டி சூசா, பொன்னம்பலம் இராமநாதன், ஈ.டபிள்யு பெரேரா போன்றோர் இக்கலவரம் குறித்து எழுதிய நூல்களில் விளக்குகின்றனர். இராணுவ நீதிமன்றம் வழங்கிய எந்தத் தீர்ப்புகளையும் எதிர்த்து மேன்முறையீடு செய்யமுடியாது. மரண தண்டனை உள்ளிட்ட தீர்ப்புகள் உடனடியாகவே வழங்கப்பட்டு, வேகமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அனைவரும் சுயேட்சையாக இராணுவத்தில் இணைத்துக்கொண்ட இராணுவத்தினர். நீதித்துறையின் செயற்பாடுகள் குறித்து எந்த அனுபவமும் அற்றவர்கள். ஆர்மண்ட் டி சூசா இப்படி குறிப்பிடுகிறார்.

“இந்த வழக்குகளில் சாட்சியமளித்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இலக்கு வைக்கப்பட்ட சில சிங்களவர்களுக்கு எதிராக பாடம்படிப்பிக்கும் நோக்குடன் சாதாரண அப்பாவிகள் பலரை மாட்டிவிட்டனர். நீதிபதிகள் தம்மீதான அனுதாபத்தை வென்றெடுக்க முயன்றனர்.”

இராணுவ நீதிமன்ற வழக்குகளில் கலந்துகொண்ட அர்ட்லி நோர்டன் தான் கண்டதை இப்படி எழுதினார்.
“நியாயம் வழங்கும் எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள முடியாத சாட்சிகளால் அப்பாவிகள் குற்றவாளிகளாக்கப்பட்டதை நான் நேரடியாகக் கண்டேன்.

நான் அறிந்தளவில் இந்தியாவில் அடிக்கடி கலகங்கள் வெடிக்கும், அந்த கலகங்கள் பெரும்பாலும் இரத்தம் சிந்துவதில் தான் போய் முடிந்திருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் அந்த கலகக் காரர்களை அடக்குவதற்காக சுடக்கூடிய படையை வரவழைப்பது உண்டு. ஆனால் ஒருபோதும் இராணுவம் தம்மிஷ்டப்படி நடந்துகொள்ள அனுமதித்து விட்டு நீதித்துறை தமது கைகளை கழுவிக்கொல்வதில்லை.

சாட்சிகளின் நம்பகத்தன்மையை போதிய விசாரணைக்குட்படுத்தகூடிய பயிற்சியோ அனுபவமோ இந்த நீதிமன்றத்துக்கு கிஞ்சித்தும் இல்லை. அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறுத்தப்படுவதே அவரின் சிவில் உரிமையை விலங்கிடுவதற்கு சமம். ஏனெனில் இவர்கள் எவருக்கும் அநீதியான தீர்ப்பை எதிர்த்து முறையிடும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. சாதாரண நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பிலும், சாட்சிகளை உரிய வகையில் விசாரிப்பதற்காகவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இங்கு எதுவும் கணக்கில் எடுக்கப்படவில்லை...”

களுத்துறையில் நிகழ்ந்த வழக்கில் ஆதர் டயஸ் என்பவருக்கு எதிரான வழக்கு இப்பேர்பட்ட அநீதி இழைக்கப்பட்ட உதாரணங்களில் ஒன்று. அந்த வழக்கில் சட்ட உரிமைகளை எடுத்துகூறியபோது “வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் எழுந்து ஏனைய நீதிபதிகள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது பற்றி எங்களுக்கு சொல்லித்தர முற்படுகிறார்கள். வேறு நீதிபதிகளின் அணுகுமுறைகள் பற்றி நாங்கள் கொஞ்சமும் மதிக்கப்போவதில்லை.” என்று அவர்களுக்கு பதிலளிக்கப்பட்டது. வழமையாக நீதிபதிகள் பெற்றுக்கொள்ளவேண்டிய சட்ட பரிந்துரைகளை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. 

சட்டசபையில் இவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை, ஆளுநர் சாமஸ் ஒரு உறுதிமொழி கொடுத்தார்.
“இராணுவ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கலவரத்துக்கு தலைமை தாங்கியவர்கள் மட்டுமே. அதுவும் நன்றாக விசாரணை செய்து விசேட ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்டு நீதிபதியால் உறுதிசெய்யப்பட்டவர்கள்.”

ஆனால் ஆளுநர் கூறியது அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பது வெளிப்படை.

கலவரத்தின் போது சிங்களவர்கள் தம்மை எப்படி பாதுகாத்தனர் என்று முஸ்லிம்கள் கூறிய சந்தர்ப்பங்களும் பதிவாகின. அதேவேளை தமது சொந்தப் பழிவாங்களுக்காக சில சிங்களவர்களை சோடனையாக முறைப்பாடு செய்த சந்தர்ப்பங்கள் பலவற்றையும் காணலாம். ஆதர் டயஸ் வழக்கில் இராணுவ நீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது என்பது ஒரு சிறந்த உதாரணம். அடுத்த வாரம் அதனைப் பார்ப்போம்.
தொடரும்...

நன்றி - தினக்குரல்

சுயநலம் + பொறாமை + ஏமாற்று + வெட்டுக்குத்து = மலையக அரசியல் - தேசியன்


இலங்கையில் தமிழர் அரசியல் வித்தியாசமானது என்றால் அதிலும் மலையக அரசியல் சுயநலம்,ஏமாற்று,பொறாமை, மோசடி,வயிற்றெரிச்சல்கள், கபடநாடகங்கள், போட்டுக்கொடுத்தல்,வெட்டுகுத்து இப்படி நிறைந்ததாக இருக்கின்றது. கடந்த வாரத்தில் இதை கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை புதுப்பித்து கொண்டுள்ளது இ.தொ.கா.அது தொடர்பான உடன்படிக்கை ஒன்றிலும் அது கைச்சாத்திட்டுள்ளது. அதற்கு பிரதிபலனாக அமைச்சுப்பதவிகளை இ.தொ.கா கேட்டிருக்கலாம். அல்லது இவர்கள் கேட்காமலேயே தருகிறோம் என ஜனாதிபதியோ ரணிலோ கூறியிருக்கலாம். அதற்கிடையில் இ.தொ.காவுக்கு அமைச்சுப்பதவி வழங்கக்கூடாது என தொழிலாளர் தேசிய சங்கமும் கிடைத்து விட்டால் பாருங்களேன் நடப்பதை என இ.தொ.கா ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு மோதலை ஆரம்பித்திருக்கின்றனர்.

இ.தொ.காவும் பதவிகளும்

இ.தொ.காவின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஆரம்பத்திலிருந்து அக்கட்சி எப்போதுமே எதிரணி வரிசையில் அமர்ந்ததில்லை, அமைச்சுப்பதவிகள் இல்லாது வலம் வந்ததில்லை, ஆனால் இறுதியாக இடம்பெற்ற தேர்தல்களில் அந்நிலைமை மாறியது. எப்படியாவது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைமையில் அமைச்சுப்பதவிகளுக்கு இ.தொ.கா முயற்சித்தாலும் பிரதமர் ரணில் உட்பட தமிழ் முற்போக்குக்கூட்டணியினர் அதற்கு எதிராகவே காய்களை நகர்த்தினர். இருப்பினும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பிசுபிசுத்தாலும் மகிந்தவின் செயற்பாடுகளை நிரந்தரமாக முடக்குவதற்கு ரணிலுக்கும் மைத்ரிக்கும் சில வேலைத்திட்டங்கள் தேவைப்பட்டன. அதன் ஒரு கட்டமே மகிந்தவின் எதிரணியில் இருப்போருக்கு வலை வீசுவது. அதில் கிட்டத்தட்ட 20 பேர் வரை சிக்கிக்கொண்டனர் ஏனெனில் பொது எதிரணியில் இருந்து கத்திக்கொண்டு இருப்பதில் பிரயோசனம் இல்லை என்பதை அதில் உள்ள பெரும்பான்மையோனோர் விளங்கிக்கொண்டனர். அது அரசியல்வாதிகளின் பண்பு ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருப்பதில்லை. அவர்களுக்கு பதவி,அதிகாரம்,செல்வாக்கு தேவை. 

இந்நிலையிலேயே இ.தொ.காவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் அரசாங்கத்திற்கு நிரந்தரமாக ஆதரவு தர முடிவு எடுத்துள்ளனர். உண்மையில் இரண்டு பேர் என்றாலும் இவர்களின் ஆதரவு அரசாங்கத்திற்குத்தேவை. ஏனெனில் இ.தொ.காவின் பாரம்பரியம் அப்படியானது. அதற்கு நிரந்தர வாக்குகள் மலையகத்தில் இருக்கின்றன. 

தோல்வி கண்டவர்களே அமைச்சர்களாகும் போது இ.தொ.காவுக்கு கிடைத்தால் என்ன?

இந்நிலையில் இ.தொ.காவுக்கு அமைச்சுப்பதவிகள் கிடைப்பதை முற்றும் முழுதாக எதிர்க்கும் நடவடிக்கையில் தமிழ் முற்போக்குக்கூட்டணி இறங்கியிருந்தாலும் அதன் தலைவர் மனோ கணேசனோ அல்லது அதன் சிரேஷ்ட உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனோ பகிரங்கமாக கருத்துக்களைகூறவில்லை. மாறாக அமைச்சர் திகாம்பரம் இ.தொ.காவுக்கு பதவிகள் கொடுப்பது பற்றி ஜனாதிபதி கூட்டணியிடம் பேச்சு நடத்த வேண்டும் எனக்கூறியிருக்கிறார். இது தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத பண்பு. பெரும்பான்மை இனத்தவர்கள் இப்படி சண்டையிட்டுக்கொள்வதில்லை ஏனென்றால் யார் குற்றினாலும் அரிசி கிடைத்தால் சரி என சமூகம் சார்பாக சிந்திப்பவர்கள் இவர்கள். தற்போதைய அரசாங்கத்தில் பாராளுமன்ற அரசியலில் தோல்வி கண்டவர்கள் கூட தேசிய பட்டியலின் மூலம் உள்ளீர்க்கப்பட்ட அமைச்சுப்ப தவிகளையும் பிரதி அமைச்சுப்பதவிளையும் வகித்து வருகின்றனர். உதாரணமாக எஸ்.பி.திசாநாயக்க, மகிந்த சமரசிங்க,மற்றும் சரத் பொன்சேக்கா ஆகியோரை கூறலாம். பாராளுமன்ற தேர்தல் காலத்தில் எஸ்.பியின் சர்ச்சைக்குரிய அநாகரிகமான கருத்துக்கள் விமர்சிக்கப்ப ட்டன, எனினும்தோல்வி கண்ட அவர் இப்போது அமைச்சர். 

அவரை விடவா ஆறுமுகன் நாகரிகமற்றவர்? ஆகவே இப்போ தைய தேவை சிறுபான்மை பிரதிநி திகளுக்கு அதிகாரமே. அதை இ.தொ.காவுக்கு கொடுப்பதில் தவறுகள் இல்லை.ஆனாலும் தாம் பதவிகள் குறித்து அரசாங்கத்திடம் எதுவுமே கதைக்க வில்லை என இ.தொ.கா தெரிவி க்கிறது.கடந்த காலங்களில் இ.தொ.கா சில தவறுகளை விட்டிருக்கலாம்.

ஆனால் தற்போதைய நாட்டின் சூழ்நிலையை கருத்திற் கொண்டு மலையக மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை அதிகம் உள்ளதை யதார்த்தமாக அது உணர்ந்து ள்ளது என்று கூறலாம். இ.தொ.காவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்தால் பயப்பட வேண்டியது எதிர்ப்பு அரசியல் செய்பவர்களே ஒழிய சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் அல்லர். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் தாம் விரும்பும் தலைவருக்கு ஆதரவு அளித்தல் என்பது அரசியலில் சகஜமான ஒன்று ஆனால் வெற்றிக்கு பக்கபலமாக நாமே இருந்தோம் என்றும் இ.தொ.காவுக்கு மைச்சுப்பதவிகளை வழங்கக்கூடாது என்றும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கம் கூறுவதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை ஏனெனில் அவர்களும் மகிந்த பக்கம் இருந்து விட்டு தான் மைத்ரி ரணிலுக்கு ஆதரவு அளிக்க வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி - தேசியன் (சூரியகாந்தி 22/06/2016)

ஆயிரம் ரூபா சம்பளம் : இலக்கு நோக்கிய பயணமா? அமைச்சுப்பதவிக்கான பணயமா? - கபில்நாத்



தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் கடந்த கால்நூற்றாண்டு காலப்பகுதியில் அதிக இழுபறிநிறைந்த ஒரு விடயமாக இந்த முறை மாற்றம் பெற்றுள்ளது. இதனை ஆழமாக பாரத்தால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தனியே தொழிற்சங்க பிரச்சினை மாத்திரமல்ல அது அரசியல் பின்புலங்களையும் கொண்டது என்பது புலப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சமபந்தப்படுவோர் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் ஆயினும் அவர்களுக்கு வெளியே இந்த விடயம் தொடர்பில் அக்கறைபடுவோர் அல்லது அனுதாபப்படுவோர் அநேகம் பேர். இதில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகத்துறைசார்ந்தோர், அரசியல் விமர்சகர்கள், தூய்மைமிக்க தொழிற்சங்கவாதிகள், முகநூல் போராளிகள் என பலதரப்பினர் உள்ளனர்.

இவர்களின் கருத்துப்பகிர்வுகள் மற்றும் நடைமுறையில் சம்பளவிடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அவதானிப்புகள் பின்வருமாறு அமைகின்றன.

*தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 'கூட்டு ஒப்பந்தத்தினால்' மாத்திரமே தீர்மானிக்கப்படல் வேண்டும் என்பதாக சிலர் கருதுகின்றனர். 1992 ம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோதுதான் இந்த 'கூட்டு ஒப்பந்த முறை' மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நடைமுறைக்கு வந்தது என்பது இங்கு நினைவுபடுத்தத் தக்கது. இதன் மூலம் 'வாழ்க்கைச் செலவு புள்ளி அடிப்படையில் (Cost of Living Allowance- COLA) வருடாந்தம் அதிகரிக்கப்படக்கூடிய ஊதிய அதிகரிப்பு தொகையை தொழிலாளர்கள் இழந்து விடுகின்றனர்.

* இரண்டு வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுவதாக புரிந்துணர்வுக்கு உட்பட்ட நிலையில் கைச்சாத்திடப்பட்டுவரும் நிலையிலும் கடந்த கால் நூற்றாணடு காலமாக ஒவ்வொரு இரண்டு வருட ஒப்பந்த முடிவிலும் நிச்சயமான கால இடைவெளியில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. அத்தகைய நிச்சயமான இடைவெளி காலம் ஒன்றை பிரதான ஒப்பந்த தருணத்தில் ஒப்பந்த தரப்பினர் தீர்மானித்துக்கொண்டதாகவும் தெரியவில்லை. ஒவ்வொரு ஒப்பந்த கால முடிவிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் ஒப்பந்தம் செய்யாத தரப்பினர் அதற்கு தலைமை கொடுப்பதன் ஊடாக அதற்கு அழுத்தம் கொடுப்பது எனும் போக்கை கடைபிடித்து வந்தன.

*ஒப்பந்தம் செய்யும் தரப்பில் பிரதான தரப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த கால் நூற்றாண்டு முழுவதும் ஆளும் கட்சியில் அங்கம் வகித்து வந்துள்ளதுடன் ஒப்பந்த தரப்பின் இரண்டாம் நிலையினரான ஐ.தே.க சார்பான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) இருந்து வந்துள்ளது. மூன்றாவது தரப்பான கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் பாரிய செல்வாக்கு செலுத்த முடியாத சில சிறு தொழிற்சங்ககங்களின் கூட்டு என்றவகையில் ஒப்பந்த பிரதான சங்கத்தின் ஒத்தோடிகளாகவே இருந்து வந்துள்ளனர்.

*ஆளும் கட்சியில் அங்கம் வகித்த இ.தொ.கா தனது அமைச்சுப்பதவி தோரணைகளைக் காட்டி இந்த ஒப்பந்த செயற்பாட்டில் செல்வாக்கு மிக்க சக்தியாக இருந்து வந்துள்ளது. ஐ.தே.க சார்பான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) எதிர்கட்சி பக்கத்தில் நின்று பாரிய செல்வாக்கு செலுத்த முடியாத நிலையில் இ.தொ.காவுடன் இணக்கப்போக்குடன் பேச்சுவார்த்தைகளின்போது நடந்துகொண்டே ஒப்பந்தத்ததை செய்து வந்துள்ளது.

*2015 மார்ச் 31 ம் திகதி முடிவடையவிருந்த ஒப்பந்தை புதுப்பிக்க வேண்டிய தருவாயிலும் அதற்கு பின்னரும் மேலே குறிப்பிட்ட காட்சிகளில் மாற்றங்கள் தலைகீழ் நிலையை அடைந்தன. 2015 மார்ச் 31 ஒப்பந்தம் முடிவடையவிருந்த நிலையில் ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இந்த காட்சி மாற்றத்துக்கு காரணமாகியது. மகிந்த அணியினருக்கு ஆதரவாக செயற்பட்ட இ.தொ.கா அணியினர் தமது அணி வெற்றிபெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்க போவதாக அறிக்கை விட்டனர். மாற்றுத் தரப்பினர் குழப்பாமல் இருந்தால் தாங்கள் அதனைச் சாத்தியப்படுத்துவோம் என்றும் கோரிக்கை வைத்தனர். மாற்றுத்தரப்பினரும் இந்த அறிவிப்பை வரவேற்றனர். இது பாரிய கவர்ச்சிகரமான அறிவிப்பாக மாறியது. 450ரூபாவிலிருந்து 1000ரூபாவை நோக்கிய இந்தப்பாய்ச்சல் மிகுந்த அறிவிப்பு மேலே சொன்ன தூய்மைமிக்க அரசியல் தொழிற்சங்க தரப்புகளான இடதுசாரி சிந்தனையாளர்களிடமும் கூட ஒரு மாயையை உண்டாக்கியது. எதனையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் நோக்கும் இவர்கள் 1000ஃ- ஆதரவாளர்கள் ஆகிப்போனார்கள். அதன் நடைமுறைச்சாத்தியம் பற்றி சிநத்திக்காததது அவர்களது அரசியல் செயற்பாடுகள் போன்றே தூரநோக்கற்றதாக அமைந்ததுஃஅமைகின்றது

* எனினும், இந்த 1000ஃ- கவரச்சி அறிவிப்பையும் தாண்டி மலையக மக்கள் மாற்றுத்தீர்மானம் ஒன்றை ஜனாதிபதி தேர்தலில் எடுக்க மகிந்த அணி தோல்வியடையவும் இ.தொ.கா எதிர்தரப்பானது. மைத்திரி அணிக்கு ஆதரவளித்த கூட்டு ஒப்பந்த எதிர் தரபபான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசியல் ரீதியாக பலம்பெறத் தொடங்கினர். ஐ.தே.க ஆளும் கட்சியானது. எனவே அதன்சார்பு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (டுதுநுறுரு) இ.தொ.கா வை பின்தொடர்வதை விடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இசைந்து கொடுக்க வேண்டியதாயிற்று.

* பொதுத் தேர்தல் காலத்தில் இந்த அறிவிப்புகள் இன்னும் அரசியல் மயப்பட்டதாக மாறியது. இ.தொ.கா 1990களுக்குப்பின்னான கால்நூற்றாண்டு காலத்தில் பாரிய ஒரு சரிவினை 2015 பாராளுமன்ற தேர்தலில் சந்திக்க நேரிட்டது. அவர்களின் குறைந்தபட்ச 3 ஆசனங்களைக் கூட நுவரெலியா மாவட்டத்தில் உறுதிப்படுத்த முடியாமல் போனது.

மேலே சொல்லப்பட்ட அக்கறையுடைய தரப்புகளில் ஒரு அங்கத்தினரான ஊடகத்துறை சார்ந்தோர் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று தமிழ் முற்போக்கு கூட்டணி இப்போது ஆளும் தரப்பாக தானே இருக்கிறது. இ.தொ.கா ஆளும் தரப்பில் இருந்து சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டது என்பதாகும். இந்த தவறான புரிதலுக்கு காரணம் மலையக மக்கள் அனைவருமே தோட்டத்தொழிலாளர்கள் அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த உயர்ந்த பட்ச ஒரு லட்சம் வாக்குகள் தனியே தொழிலாளர்களுடையது என்பதாகக் கொள்வது. கடந்த கால நூற்றாண்டு காலமாகவும் இ.தொ.கா அரசதரப்பு அல்லது அமைச்சராக இருந்த காரணத்தால் சம்பளதொகையை தீர்மானிக்கும் சக்தியாக திகழவில்லை. மாறாக தென்னாசியாவிலேயே பாரிய தொழிற்சங்கம் எனும் நிலையில் இருந்த அளவுக்கு பாரிய தொழிற்சங்க சகதியாக இ.தொ.கா இருந்து வந்துள்ளது. இப்போது அந்த கட்டமைப்பிலும் இ.தொ.கா பாரிய வீழ்ச்சி போக்கைக் கண்டுள்ளது என்பது ஒரு புறமிருக்க தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1992 ஆண்டு தனியார் மயப்படுத்தப்பட்டதன் பி;ன்னர் 5 லட்சத்தில் இருந்து 1 லட்சத்து அறுபது ஆயிரமாக குறைந்துள்ளார்கள் என்கின்ற விடயமும் பிரதானமானது.

* எனவே அரசியல் ரீதியாக பலம் பெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ஒப்பநதத்தில் கைச்சாத்திடுகின்ற அளவிலான தொழிற்சங்க பலத்தை பெறாமலேயே (தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்) தமது அரசியல் முன்னெடுப்புகள் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஒரு உள்நுழைவைச் செய்திருக்கிறது.

*2015 பொதுத் தேர்தலுக்குப்பின்னர் சம்பள விவகாரத்தில் நடைபெற்றுள்ள மிக முக்கியமான காட்சி மாற்றம் கூட்டு ஒப்பந்த முறை மூலம் நாட் சம்பளம் தீர்மானிக்கப்படுவதை எதிர்த்து வந்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்த கால் நூற்றாண்டு காலம் முழுவதும் பேச்சுவார்த்தை மேசையில் சந்தித்திராத தோட்ட கம்பனிகளை (தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தை) பேச்சுவார்த்தை மேசையில் சந்தித்தது. எனவே இத்தனைக்காலம் வெளியில் இருந்து அழுத்தம் என்ற நிலைமையை மாற்ற pஉள்ளே சென்று தோட்ட முதலாளிகளை பேச்சுவார்த்தையில் மேசையில் சந்தித்து அவர்களது அழுத்தத்தை நேரடியாக பிரயோகிக்கும் சூழ்நலையை தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கியமை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அவர்கள் அடைந்த பாரிய பாய்ச்சல் என்பதனை மறுப்பதற்கில்லை. இந்த பாய்ச்சலை 2500- நிவாரணக் கோரிக்கையினூடாக 'அரசியல்' தமிழ் முற்போக்கு கூட்டணி சாத்தியப்புடுத்தியிருக்கிறது.

* மறுபுறத்தில் கூட்டு ஒப்பந்த தரப்பில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய ஐ.தே.க தரப்பினரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில ஒரு முக்கிய புள்ளிக்கு கொண்டுவந்திருக்கிறது. ஐ.தே.க வின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முக்கிய புள்ளிகளாக இருந்த இரண்டு தொழிற்சங்க வாதிகளின் மறைவு ஐ.தே.க தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் எத்தகைய முடிவினை எடுப்பது என்பது தொடர்பாக ஐ.தே.க தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை இந்த காட்சிக்குள் கொண்டு வந்திருக்கினறது. அந்த தொழிற்சங்கத்தின் சிரேஷ்ட உறப்பினர்களான மொஹிதீன் அதன் பின்னர் கே.வேலாயுதம் ஆகிய இருவரின் அளவுக்கு குறித்த விடயத்துடன் பரிச்சயமான யாரும் இப்போது ஐ.தே.கவில் இல்லை. ஓரளவுக்கு தொடர்புமிக்கவர் என்று அடையாளப்படுத்த கூடிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவருமான ரவீ சமரவீரவும் தொழில் ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நியமிக்கப்பட்டிருப்பது அரசாங்க தரப்பில் இருந்துகொண்டு ஐ.தே.கவினர் பொறுப்படன் செயலாற்ற வேண்டிய ஒரு நிலைமையை உருவாக்கியுள்ளது.

* 2500ரூபா மதாந்த சம்பளம் பெறுவோருக்கான வரவு செலவுத்திட்ட நிவாரணப்படியை பெற்றுக்கொடுப்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரேரணை முன்வைப்பும் அரசியல் அழுத்தமும் ஒரு புறமிருக்க ஐ.தே.க தனது பங்கிற்கு ஏதாயினும் செய்தாகவேண்டும் என்ற நிலைப்பாடும் ஒரு காரணமாகியது. எனவேதான் 'கூட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசாங்க நிவாரணப்படி அறிவிப்பு பொருந்தது' என்ற சட்ட வரையறை இருந்தும் கூட 2015 மார்ச் மாதத்துடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக காரணம் காட்டி தொழில் அமைச்சரும் தொழில் ராஜாங்க அமைச்சரும் முன்னின்று சட்ட ஏற்பாடுகளை செய்து தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணத்தொகையை நாளொன்றுன்னு 100ரூபா வீதம் பெற்றுக்கொடுக்க முன்வந்தமையாகும். இதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் அழுத்தமும் ஆதரவும் அமைச்சர்களுக்கு இருக்கின்றது.

இந்த நகர்வினை எதிர்பார்க்காத இ.தொ.கா தான் முன்வைத்த 1000 ரூபா தொகையை அடைவதற்கான இலக்கு நோக்கிய பயணமாக அல்லாமல் அதனை ஒரு நிபந்தனையாக மாற்றி எப்படியாயினும் ஆளும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதவியைப் பெறுவதற்கான மூலோபயமாக மாற்றி வருவதனை அவதானிக்க முடிகின்றது. தனது அரசியல் பலத்தை இழந்துள்ள நிலையில் கடைசி ஆயுதமாக தமது பாரம்பரிய தொழிற்சங்க பலத்தை பிரயோகித்து சம்பளப்பிரச்சினையை தீர்க்க தாம் வழங்க வேண்டிய ஒத்துழைப்பை நிபந்தனையாக மாற்றி 'அமைச்சுப்பதவியைப்' பெறுவது தற்போதைய இறுதி உபாயமாக மாறியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு அமைச்சுப் பதவி வழங்க முன்வந்தால் 1000 கோரிக்கை எவ்வித காரணங்களுமின்றி 800 ரூபாவு க்கு உட்பட்ட ஒரு தொகைக்கு கீழிறக்கப்படும் என்பது நிச்சயமான உண்மை. இந்த சமிக்ஞையை உறுதிப்படுத்தும் மூன்று விடயங்களை இ.தொ.கா காட்டியுள்ளது.



புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் எதிர்கட்சி வரிசையில் அமரந்தவாறே மூன்று தடவைகள் அரசாங்கத்திற்க ஆதரவாக பாராளுமன்றில் வாக்களித்துள்ளது. (அமைச்சர்களின் எண்ணிக்கை தீர்மானம், வரவு செலவுத்திட்டம், நிதி அமைச்சர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை).

*தமது மகளிர் தின விழாவிற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை பிரதம அதிதியாக அழைத்து 1000 க்கு குறைந்த ஒரு தொகைக்கு தாம் தயார் என்ற அறிவிப்புக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளமை. அமைச்சர் நவீன் திசாநாயக்க 770 ரூபாவுக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் அறிவித்துள்ளமையை இங்க நினைவுபடுத்துவது பொருந்தும்.

*தமிழ் முற்போக்கு கூட்டணியின் 2500 மாதாந்த நிவாரணப்படி கோரிக்கை ஏதோ ஒரு வடிவத்தில் இரண்டு மாதங்களுக்கு அரச கடன் அடிப்படையிலாவது வழங்கப்படும் எனும் உத்தரவாதம் வழங்கப்படும் நிலையில் இரண்டு மாத்திற்கு அப்பாலும் அதனை வழங்குவதில் உள்ள சிக்கலை அiடாளம் இட்டு காட்டும் வகையல் தான் வெளிநாட்டில் இருநது நாடு திரும்பினாலம் கூட பாராளுமன்றத்திற்க சமூகமளிக்காமல் இருக்க விடுமுறை விண்ணப்பித்து எச்சரிக்கை செய்திருத்தல்.

* இ.தொ.கா அரசாங்கத்தில் இல்லாதபோதும் இன்னும் கூட தொழிற்சங்க பலத்துடன் இருப்பதன் காரணமாக கம்பனிகள் 'இ.தொ.கா'வின் அறிவிப்புகளுக்கு அஞ்சுகின்ற ஒரு நிலைமையை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கத்தின் அறி;விப்பை நடைமுறைப்படுத்துவதிலும் கூட கம்பனிக்ள தயக்கம் காட்டுவதற்கும் இதுவே காரணமாக அமைகின்றது. கடந்த வாரம் கம்பனிகளின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த பிரதமர் கடும்தொணியில் உத்தரவிட்டு 2500 நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக அறியக்கிடைக்கின்;றது. கம்பனிகளும் ஜீன் 15-20 க்கு இடைப்பட்ட காலத்தில் அதனைப்பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.

* மறுபுறத்தில் நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்த முறைமை ஒரு தோல்வியடைந்த முறைமை என உறுதிபடத் தெரிவிக்கும் 'தோட்ட முதலாளிமார் சம்மேளனம்' வெளியக பயிரிடல் முறை (ழுரவ புசழறநச ளலளவநஅ) அல்லது லாபப் பகிர்வு முறை (Pசழகவை ளூயசiபெ அநவாழன) எனப்படும் முறையில் பெருந்தோட்டங்களை நிர்வகிப்பதனை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளன. இந்த முறைமை பற்றி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கூட்டு ஒப்பந்த தரப்பினருடன் (குறிப்பாக இ.தொ.காவுடன்) கலந்துரையாடியுள்ளதாகவும் அடுத்த முறை ஒப்பந்தம் செய்யுமபோது பார்க்கலாம் என இரண்டு தவணைகளும் காலம் கடத்தப்பட்டுவிட்டதாகக் கூறும் கம்பனிகள் இம்முறை தாம் இந்த புதிய முறைமைக்கு இணங்கினாலே எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடுவோம் எனும் நிபந்தனை முன்வைப்பதாக தெரிகிறது.

* இப்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் இரண்டு மாத கால இடைவெளியில் இந்த முறைமைக்குள் பெருந்தோட்டங்கள் தள்ளப்படுமானால் அது மலையக தொழிலாளர் சமூகத்தின் எதிர்காலத்தை எவ்வாறு தீர்மானிக்கப்போகின்றது எனும் கேள்விக்குறி மலையக சமூகத்தின் மீது மக்களை கொண்ட அனைத்து தரப்பினரினதும் கடப்பாடாகும். இந்த நிலைமைகளை தீர ஆராயமால் 1000 ரூபா அல்லது 2500 ரூபா 100 ரூபா என தொகைப்பெறுமானங்களில் ஆய்வுகளையும் நிபந்தனைகளையும் முன்வைக்காமல் கம்பனிகளால் திணிக்கப்படப்போகும் புதிய முறைமைபற்றி ஆய்வு செய்ய அனைவுரும் குறிப்பாக ஊடகத்துறை சார் தரப்பினர், தூய்மைமிக்க தொழிற்சங்க தரப்பினர் தலைப்படல் வேண்டும்.

* இ.தொ.கா தாம் அறிவித்த 1000 தொகையை இலக்கு நோக்கிய பயணமாக அல்லாமல் தமது அமைச்சு பதவியைப் பெறுவதற்கான பணயமாக மாற்றுவதனைக் கைவிடல் வேண்டும். தமது அற்ப நலன்களுக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழக்கையோடு விளையாடுவதை முடிவுக்கு கொண்டுவரல் வேண்டும்.

* தமிழ் முற்போக்கு கூட்டணியினர் 2500 நிவாரணப்படியை இரண்டு மாதத்துக்கு பெற்றுக்கொடுப்பதோடு (கிடைக்கும் வரை இதில் உறுதிப்பாடு இல்லை) தங்களது பணி நிறைவடைந்ததாக எண்ணாமல், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் அரசாங்கத்தை தலையிடச் செய்தது போல கம்பனிகள் முன்வைக்கும் புதிய முறைமை தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்ப தங்களது அரசியல் பலத்தை பிரயோகிக்க வேண்டும். ஆனாலும், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கூட்டணியாக அல்லாதபோது தனித்தும் ஒன்றாக சேர்ந்தும் சம்பள விடயம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்ததுபோல் ஆளும் தரப்பாக இருந்துகொண்டும் கூட்டணியாக இயங்குகையில் 'அழுத்தம் கொடுக்கும்' போராட்டத்தை முன்னெடுத்த போது 'இலக்கு' எது? அல்லது யார்? என்ற தெளிவில்லாமல் முன்னெடுத்த தமது போராட்டத்தை பிசுபிசுப்பான ஒன்றாக மாற்றிக் கொண்டமை அவர்களது தொழிற்சங்க நிலையிலான பலவீனத்தை வெளிப்படுத்தி நின்றமையை மறுப்பதற்கில்லை. அது பற்றி அவர்கள் தம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டு மீளமைத்துக் கொள்ளும் கடப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.

* அக்கறையுடைய ஏனைய தரப்பினர் கூட்டு ஒப்பந்த தரப்பினர், அதனை எதிரக்கும் அணியினரின் அரசியல் காய்நகர்த்தல்களின் ஊடாக நிகழும் காட்சி மாற்றங்களை கட்டுரைகளாக்கி சுவாரஷ்யம் காண்பதோடு தங்களது சமூக பணி நிறைவடைந்துவிட்டதாக எண்ணிவிடாமல் மலையக தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையோடு யதார்த்தபூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு தமது கருத்துக்களால் மக்களிடையே 'கருத்துருவாக்கம்' செய்வதாகவும் பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

ஏனெனில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் என்பது வெறுமனே ஒரு தொழிற்சங்க பிரச்சினை மாத்திரமல்ல, இதன் பின்னணியில் மலையகத்தின் அரசியல் செல்நெறிகளும் தீர்மானிக்கப்படுகின்றன. மலையக அரசியலின் வேர்களாக இந்த தொழிலாளர்களாக திகழ்கின்றனர் என்றவகையில் அவர்களது ஜீவனோபாயம் குறித்து முன்வைக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் அவரகளது வாழ்வாதாரத்தை மாத்திரமல்ல மலையக அரசியலின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதாகவும் அமையும். 

நன்றி - தினக்குரல்

தேசாதிபதியின் சொந்தப் பிரச்சினை இலங்கையில் ஏற்படுத்திய பயங்கரம் (1915 கண்டி கலகம் –37) - என்.சரவணன்


நான்கரை நூற்றாண்டு காலனித்துவத்தின் கீழ் தேசாதிபதியின் பதவிக் காலம் முடியுமுன் அவரது பதவியைப் பறித்த நிகழ்வு இந்த 1915 கலவரத்தையே சாரும். பீதியின் நிமித்தம் அவருக்கு ஏற்பட்ட கலக்கம் அவரை பாரிய அடக்குமுறையைக் கட்டவிழ்ப்பதற்கு வழிவகுத்தது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் அதிகமாகக் கொண்ட பஞ்சாப் படையினரை உதவிக்கு கொணரச் செய்தார். இராணுவச் சட்டத்தை தன்னிஷ்டப்படி நிறைவேற்றி கிட்டத்தட்ட 100 நாட்கள் அமுலில் வைத்து அடக்குமுறைப் புரிந்திருந்தார் அவர். கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரும் மிலேச்சத்தனமான படுகொலை, சித்திரவதை, கைது என போதிய ஆதாரமின்றி கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. சந்தேகத்துக்கிடமானவர்களை கண்ட இடத்தில்  சுடும்படி உத்தரவிட்டதில் பலர் கொல்லப்பட்டனர். கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பினர், சம்பந்தமே இல்லாத அப்பாவிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள்.

பொலிஸ் நீதிமன்றங்களில் 9600 வழக்குகளும், இராணுவ நீதிமன்றத்தில் 412 வழக்குகளும் பதிவாகின. 

தேசாதிபதி சேர் ரொபர்ட் சாமர்ஸ் (Sir Robert Chalmers) இலங்கையின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றத்தற்கு பெருமளவு காரணங்கள் இருக்கின்றன.

யார் இந்த சாமர்ஸ்.
லண்டனில் பிறந்த சாமஸ் (1858 – 1938) ஒரு சிறந்த கல்விமான் மட்டுமன்றி பல்வேறு அரச துறைகளில் தலைமைப் பதவிகளை வகித்த அனுபவமுடையவர். எட்வர்ட் ஸ்டப்ஸ்க்குப் பின்னர் 1913 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அவர் இலங்கையில் இங்கிலாந்துக்கான 21வது தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பதவி வகித்த இரண்டே ஆண்டுகளுக்குள் (1915 டிசம்பர் வரை) கறைபடிந்த ஆட்சிக்காலமாக வரலாற்றில் பதிவானார்.

இங்கிலாந்தில் திறைசேரியின் நிரந்தச் செயலாளராக கடமையாற்றி வந்த சாமர்ஸ் அந்த பணியில் சோர்வுற்றிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் 1915 செப்டம்பர் அவரை இலங்கைக்கான தேசாதிபதியாக பதவி வகிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

பாலி மொழியில் பாண்டித்தியம் பெற்ற அவர் பௌத்த நாகரிகம், பௌத்த இலக்கியம் என்பனவற்றை கற்று அது பற்றிய ஆழமான அறிவைப் பெற்றவர். அது மட்டுமன்றி பௌத்த ஜாதகக் கதைகள் குறித்தும், பௌத்தம் குறித்தும் மொழிபெயர்ப்புகள் பல செய்தவர். ஆய்வு நூல்களையும் எழுதியிருப்பவர். The Jātaka; (“or, Stories of the Buddha's former births”, “Further dialogues of the Buddha” போன்ற நூல்களை உதாரணத்திற்குக் கூறலாம். ஏறத்தாள 2000 க்கும் மேற்பட்ட பக்கங்களை பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்திருக்கிறார். எனவே இலங்கைக்கு ஆளுநராக போவதில் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தார். அடுத்த மாதமே (ஒக்டோபர்) இலங்கைக்கும் வந்துவிட்டார்.

இலங்கையில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பௌத்த மனநிலையானது கிறிஸ்தவ எதிர்ப்பையும் சேர்த்தே இருப்பதை அவர் வந்ததும் அறிந்துகொண்டார். இலங்கையில் கிறிஸ்தவ எதிர்ப்பு அதிகரித்து அது நிருவனமயப்பட்டிருந்த காலம் அது. கிறிஸ்தவ எதிர்ப்பு நூல்கள், அமைப்புகள், பிரச்சார இயக்கங்கள் என்பன உக்கிரம் பெற்றிருந்த காலம். பௌத்த மறுமலர்ச்சி முகிழ்த்திருந்த காலம் அது. ‘மதுவொழிப்பு இயக்கம்” போன்ற பெயர்களில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களை அவர் நேரடியாகக் கண்டார். 

மதுவொழிப்பு இயக்கத்தின் செயற்பாடுகள் ஆங்கிலேயர்களின் மது உற்பத்திக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டன. இதனால் வரும் வருவாய் தனது காலத்தில் பாதிக்கப்படுவதை சார்மஸ் விரும்பவில்லை. ஒரு தேர்ந்த பொருளாதார அறிஞர் அவர். “பிரித்தானிய காலனியின் கீழ் நாணயங்களின் வரலாறு” (A History of Currency in the British Colonies by Robert Chalmers) என்கிற பிரசித்த நூலை எழுதியவர் அவர் அல்லவா. மதுவொழிப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்கும் இந்த இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளளலாம் என்று அவர் நம்பினார்.

அநகாரிக தர்மபாலாவை சந்திப்பதற்காக ஒரு முறை அவருக்கு தூது அனுப்பி தர்மபாலாவை இரண்டு மணித்தியாலங்கள் காக்க வைத்ததனால் ஆத்திரமுற்ற தர்மபால “நீ சொன்ன நேரத்திற்கு நான் வந்துவிட்டேன். நீ உண்டு படுத்துவிட்டாய். எனது பெறுமதிமிக்க காலத்தை வீனடித்துவிட்டாய். எனவே நீ போய் படு. உன்னோடு நான் கதைக்க விரும்பவில்லை. கவர்னர் பதவிக்கு மட்டுமில்லை. ஒரு சில்லறைக் கடைக்குக் கூட நீ லாயக்கு இல்லை” என்று சூழ இருந்த ஊழியர்கள் முன்னிலையில் திட்டி விட்டு சென்றதை பெரும் அவமாரியாதயாகக் கருதினார். இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி தர்மபால இலங்கையில் இல்லாத நிலையில் அவரது இரு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். இந்தியாவுக்கு தூது அனுப்பி தர்மபாலவையும் சில வருடங்களுக்கு வீட்டுச் சிறையில் வைத்திருந்தார். தர்மபாலாவின் சகோதரர்களில் ஒருவர் சிறையிலேயே இறந்துபோனார்.

கைது செய்யப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களின் விடுதலை கோரி வந்த இராமநாதன் போன்றோரை துப்பாக்கி முனையில் விரட்டியனுப்பியவர்.

கலவரம் தொடங்கிய முதல் மூன்று நாட்களும் தேசாதிபதி சாமர்ஸ் நுவரெலியாவிலுள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இருந்தார். கலவரம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் பின்னர் தான் அவர் செயலில் இறங்கினார்.

போரில் மாண்ட மகன்மார்
இந்தக் கலவரத்தின் பின்னணியில் ஜெர்மனி இருக்கிறது என்றும், ஜெர்மன் உளவுத் துறையினரே பிரித்தானியாவுக்கு எதிரான சதியில் இலங்கையர்களைப் பயன்படுத்திவருகிறார்கள் என்று நம்பினார். பொலிசார் ஊதிப்பெருப்பித்து வெளியிட்டிருந்த உளவுத் தகவல்களை அவர் நம்பினார்.

ஜெர்மன் மீது அவர் ஆத்திரம் கொள்ள காரணங்கள் இருந்தன. அவருக்கு ஒரு மகளும் இரு மகன்களும் இருந்தனர். முதலாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருக்கையில் 1915 மே மாதம் இரு மகன்களும் வெவ்வேறு போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்.  (Captain Ralph Chalmers, Lieutenant Robert Chalmers) அந்த இழப்பு அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அதே மாதம் தான் இலங்கையில் கலவரமும் நிகழ்ந்தது குறிப்படத்தக்கது.

ஆட்சியில் நல்லவை
சாமர்ஸ் பதவி வகித்த இரண்டாண்டுகளுக்குள் கொழும்பில் பெரிய நெற்களஞ்சியம் உருவாக்கப்பட்டது. கோட்டையில் இன்று அமைந்துள்ள புதிய சுங்கத் திணைக்களக் கட்டடமே பல்வேறு இன்னல்கள் காரணமாக 1914இல் உருவாக்கப்பட்ட நெற்களஞ்சியமாகும். இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பரவிய பிளேக் நோய்க்குப் பலர் பலியானார்கள். சிறிய சிறிய களஞ்சியங்களில் எலிகளின் பெருக்கத்தின் காரணமாக மாற்று வழித் திட்டமாக சாமர்சால் 100 வருடங்களுக்கு முன்னர் 17 மில்லியனில் செய்து முடிக்கப்பட்டது தான் அந்த களஞ்சியம். அதற்கு மிகச் சமீப காலம் வரை சாமர்ஸ் களஞ்சியம் “Chalmers Granaries” என்றே அழைக்கப்பட்டது.

அதுபோல கொழும்பு பல்கலைக்கழகத்தின் தோற்றத்திற்குப் பின்னணியிலும் சாமசின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது. சாம்ரசின் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த அபிவிருத்திப் பணிகள் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

பதவி துறப்புக்கு அழுத்தம்
சாமர்சை பதவி துறக்கச் செய்ததில் பல்வேறு தரப்புக் காரணிகள் தொழிற்பட்டிருந்தன.

  • சேர் பொன் இராமநாதன், ஈ.டபிள்யு பெரேரா போன்றோறின் பிரித்தானிய பயணமும் அவர்களது முறைப்பாடுகளும்.
  • சேர் பொன் இராமநாதன், ஆர்மண்ட் டீ சூசா போன்றோரின் விளக்கமான நூல்கள்.
  • இலங்கையர்கள் மத்தியில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்கிய தினமின, டைம்ஸ் ஒப் சிலோன், மோர்னிங் லீடர் போன்ற பத்திரிகைகளின் பாத்திரம்,
  • பிரித்தானிய அடக்குமுறையை வெளிக்கொணர்ந்த Nation, Review of the Reviews, Globe, London Daily News, New Statesman, Manchester Guardian, போன்ற ஐரோப்பிய பத்திரிகைகள் மற்றும் Ceylon Committee in London, Irish Women's League, London Buddhist Society, Humanitarian League, Lodon Temperance Society'' போன்ற அமைப்புகள்,
  • தியோடர், டெய்லர் போன்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு


என சகல மட்டங்களிலும் சாமசுக்கு பிரித்தானிய ஆட்சியதிகாரத்தில் இருந்த செல்வாக்கு சற்று சரிந்தது. சாமசின் சிவில் சேவை அனுபவத்தாலும், புலமைத்துவ சேவை என்பவற்றால் சாமசின் ஆளுநர் பதவியை தக்க வைக்க இயலவில்லை. இலங்கையின் வரலாற்றில் முதலாவதாகவும் இறுதியாகவும் பதவி பறிக்கப்பட்டு திருப்பி அழைக்கப்பட்ட ஒரே ஒருவர் சாமர்ஸ் பிரபு என்று பரவலாக வாசித்தறிந்திருக்கிறோம்.

அவரை பதவி விலக்கியதாக வரலாற்றில் பதிவாகியபோதும், அவர் திருப்பி அனுப்பட்டார் என்றே கூற வேண்டும். ஏனெனில் ஒரு சிவில் அதிகாரி என்கிற வகையில் அவர் வேறு ஒரு உயர் பதவிக்கு மாற்றப்பட்டார். இன்னொரு வகையில் சொல்லப்போனால் அவர் மேற்கொண்ட பிரித்தாளும் தந்திரத்துக்காகவும், இலங்கையின் முதல் இனக்கலவரத்தை உருவாக்கியதாலும் பதவி உயர்த்தப்பட்டார் என்றே கூற முடியும்.

எனவே  பிரித்தானிய ஆட்சி தனது தரப்பு தவறை ஏற்றுக்கொள்ளவில்லை. வழிமுறை பிழையாக இருந்தபோதும் அடக்குமுறைக்கு நியாயமான காரணங்கள் இருந்தன என்றே முடித்தது. ஆனால் சாமஸ் திருப்பி அனுப்பப்பட்டதே தமது பெரிய வெற்றியென்று இலங்கை தரப்பு பெருமிதம் கொண்டது. பிரித்தானிய ஆட்சியாளர்களின் கண்துடைப்பு நாடகம் எளிமையாக வெற்றி கண்டது.

தொடரும்

நன்றி - தினக்குரல்


1000 ரூபா சம்பள உயர்வு: அரசியல் போட்டியா? தொழிற்சங்க போராட்டமா? - எஸ். இராமையா


தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை வெல்ல முடியாத ஒரு போராட்டமாகி விட்டது. இது தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வியாகும். 

கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து பதினான்கு மாதங்களாகியும் சரியான முடிவை எடுக்க முடியாமல் தொழிற்சங்கங்கள் திணறுவதை ஊகிக்க முடிகிறது. இது தொழிற்சங்கங்களின் பிடிவாதமா இல்லை அரசியல்போட்டியா என்பதும் விளங்கவில்லை. 

இக்கூட்டு ஒப்பந்தத்தை பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்த போது எவரிடமும் எதையும் கேட்காமல் 100 ரூபா சம்பள உயர்வாக பெற்றுக்கொடுக்கப்பட்டது. 

அப்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களைத் தவிர மற்றவர்கள் 750 ரூபா சம்பள உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது அதை கவனத்தில் எடுக்காது நூறு ரூபாவிற்கு கைச்சாத்திட்ட வர்கள் தற்போதும் ஆயிரம் ரூபா கோரிக்கையிலிருந்து கீழிறங்கி வராத காரணம் என்ன? 

தமது கோரிக்கையான ஆயிரம் ரூபா சம்பள உயர்வை மீளாய்வு செய்து ஒரு முடிவுக்கு ஏன் வர முடியாது? இந்த பிரச்சினையை இழுத்தடிப்பதன் காரணம் என்ன? ஒன்றும் புரியாத புதிராக இருக்கின்றது. 

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை எந்த தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்பதும் விளங்கப்படுத்தப்படாத கோரிக்கையாகும். 

எமக்கு தெரிந்த வகையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும் அதன் பிறகு வந்த பாராளுமன்ற தேர்தலையும் இலக்காக வைத்த கோரிக்கையாகவே அறிய முடிகின்றது. 

முதலாளிமார் சங்கம் ஆயிரம் ரூபா சம்பளத்தை தர முடியாது என்ற போது இறுதியான ஒரு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வராதது ஏன் என்றும் தெரியவில்லை. 

நாளொன்றிற்கு 150 ரூபா சம்பள உயர்வாக பெற்றுக் கொடுக்க முன்வந்திருந்தால் தொழிலாளர்கள் நன்மை அடைந்திருப்பார்கள். 

உதாரணமாக நாள் சம்பள உயர்வு 150 ரூபாவாக உயர்ந்திருந்தால் 25 வேலை நாட்களுக்கு 3,750 ரூபா மாதமொன்றிற்கு கிடைத்திருக்கும். 

தொழிற்சங்கம் 

தொழிற்சங்கம் என்பது பேரம் பேசும் சக்தியை கொண்ட ஓர் அமைப்பாகும். கோரிக்கைகள் வைக்கும் போது அதிக அளவான, பெற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கமாகும். கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். விட்டுக்கொடுக்கும் முறையிலும் (Give and Take) என்ற முறையிலும் வென்றெடுக்க முடியும். 

தொழில் தருநர்களின் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்து இரு பக்க நியாயங்களையும் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு எட்ட முடியும். 

இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருப்பது கூட்டு செய்யும் தொழிற்சங்கங்களையும் வெகுவாக பாதிக்கும். 

கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆன போதும் தொழிலாளர்களின் போராட்டம் இழுத்தடிக்கப்படுவது ஏன்? 

அப்படியென்றால், எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள் தலைதூக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம். 

தற்போதைய கூட்டு ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு கூட்டு ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனால் இதற்குப் பிறகு தொழிலாளர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க முடியும்? 

அப்படி கூட்டு ஒப்பந்தம் செய்ய முடியாவிடின், சம்பள சபையை உருவாக்கி மீண்டும் பழைய முறைக்கு சட்டம் கொண்டுவர அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். 

முடியாத பட்சத்தில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் தமது கருத்து முரண்பாடுகளை தவிர்த்து தொடர்ச்சியான போராட்டத்தில் இறங்க வேண்டும். 

ஒற்றுமையாக இருந்து போராட முடியாமல் போனால் தொழிற்சங்கங்கள் யாவும் பலனற்று செயலிழந்து போகும் நிலை ஏற்பட நேரிடும். 

தொழிற்சங்க பலம் இல்லாது போனால் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மீண்டும் காலனித்துவ ஆட்சிக்குள் முடக்கப்படுவார்கள். 

இங்கு பதியப்பட வேண்டியது மலையக மக்களுக்காக ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் மூன்று அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு ஒரு சம்பள பிரச்சினையை தீர்க்க முடியாமல் போவது இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் அவமானமாகும். 

போராட்டங்கள் நடத்துவதும் காலக்கெடு விதிப்பதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. தீர்க்க தரிசனமாக திடகாத்திரமான போராட்டங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். 

எனவே, மலையக தலைவர்கள் ஒருவருக்கொருவர் குறை கூறி அறிக்கை விடுவதோ அல்லது விமர்சிப்பதோ பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்பதை புரிந்து கொண்டு செயலில் இறங்குங்கள். வெற்றி நிச்சயம். 

நன்றி - வீரகேசரி

இயற்கை அனர்த்தங்கள்: மலையக மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் - ஆ. புவியரசன்



இயற்கை எழிலிற்கும் வளங்களுக்கும் பெயர்போன இலங்கை திருநாடு அண்மித்த சில வருடங்களாக இயற்கையின் சீற்றத்தால் பாரிய பேரழிவுகளை சந்தித்து வருகின்றது. நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையுடன் கூடிய அனர்த்தங்களின் பின்னரான காலநிலை மாற்றம் முழு இலங்கையினது இயற்கை ஒரு சீர்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காலநிலை மாற்றத்தின் காரணமாக பல மாகாணங்களின் சீதோஷ்ண நிலையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமைகள் காரணமாக நாட்டு மக்கள் கடந்த சில வருடங்களாக பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து உயிரிழப்புக்களையும் உடைமை இழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர். 

இம்முறை ஏற்பட்ட மழையுடன் கூடிய அசாதாரண காலநிலை முழு நாட்டையும் பதம் பார்த்துள்ளதென்றே கூற வேண்டும். கொழும்பு தொடங்கி அரநாயக்க மற்றும் கேகாலை களுப்பானை தோட்டம் வரை மக்கள் உயிர், உடைமை இழப்புக்களை சந்தித்து இன்றும் அகதி முகாம்களில் இருந்து கொண்டு நிவாரணம் பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட மீரியபெத்தை தோட்ட மண் சரிவு முழு உலகத்தையும் சோகத்திற்கு உள்ளாக்கி இருந்த வடு காய்வதற்குள் மீண்டும் அரநாயக்க மற்றும் கேகாலை களுப்பானை தோட்டங்களில் ஏற்பட்ட பேரழிவுகள் முழு நாட்டையும் சோகத்திற்குள் உள்ளாக்கி இருப்பதுடன் மக்கள் மனதில் தங்களது வாழ்விடங்களின் பாதுகாப்பு தொடர்பான ஒருவித அச்ச நிலைமையையும் தோற்றுவித்துள்ளன. 

நாடு அடிக்கடி இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருவதால் அவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் அதனையும் தாண்டி மழை, காற்று, வெள்ளம், நிலச்சரிவு என பல்வேறு வடிவங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலை தொடருமானால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையே ஏற்படும். 

கடந்த மாதத்தில் பெய்த அடை மழை காரணமாக அதிகமான மாவட்டங்களுக்கு அனர்த்த அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது. 

அதில் மலையக மக்கள் அதிகமாக வாழ்கின்ற நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை உட்பட ஏனைய மாவட்டங்களும் உள்ளடங்கி இருந்தன. 

மலையகம் அடிக்கடி நிலச்சரிவுகளை சந்திப்பதற்கு காரணம் அதன் புவியியல் அமைப்பு மட்டுமின்றி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடியிருப்பு முறைகளும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மலையகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொடர் லயன் குடியிருப்புக்களின் ப.ைழமை அமைவிடம் அவற்றிற்கு அண்டியதாக அமைக்கப்பட்டுள்ள புதிய வீடுகள் அல்லது சிறு கட்டிடங்கள் என்பனவும் நிலம் தாழிறங்குவதற்கு காரணமாகி உள்ளன. 

பதுளை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையின் போது சுமார் 2500 இற்கும் மேலான இடங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் அதிர்ஷ்ட வசமாக பதுளை மாவட்டம் இம்முறை பாரிய அனர்த்தங்கள் எதனையும் சந்திக்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் அனர்த்தத்தை சந்திக்காத பிரதேசங்கள் இம்முறை பாரிய அழிவுகளை சந்தித்துள்ளன. இதனால் அரசாங்கத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. 

தொடரும் இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்ட அனர்த்த நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்திருந்தார். 

முறையற்ற கட்டட நிர்மாணங்களே பாரிய அனர்த்தங்களுக்கு காரணமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குற்றம் சுமத்தியிருந்தார். 

இவ்வாறான சூழ்நிலையில் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள கட்டட நிர்மாணங்கள் தொடர்பாக முழுமையான ஆய்வறிக்கைகள் தேவை என்ற விடயம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். 

மலையகத்தில் தொடர் லயன் குடியிருப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தனி வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எனினும், மலையகத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் தனி வீட்டுத்திட்டத்தை எதிர்பார்க்கின்ற வேகத்தில் விரிவுபடுத்துவதென்பது சவாலான விடயமாகும். கடந்த வருடங்களில் நிலம் தாழிறங்கும் அபாயம் நில வெடிப்பு மற்றும் சிறியளவிலான மண் சரிவு அனர்த்தம் என்பவற்றிற்கு முகங்கொடுத்த மக்கள் அனர்த்த காலங்களில் அகதிகளாக பாடசாலைகள் வணக்க ஸ்தலங்கள் என்பவற்றில் தஞ்சமடைந்திருந்தனர். 

அனர்த்த நிலைமை குறைவடைந்ததும் அவர்களில் அனேகமானோர் தமது பழைய குடியிருப்புக்களுக்கே திரும்பி விட்டனர். அவர்களுக்கான மாற்று குடியிருப்புகள் வழங்கப்படும் என உறுதி மொழி வழங்கப்பட்ட போதிலும் அதிகமான இடங்களில் உள்ள மக்கள் அனர்த்த அச்சத்துடன் தமது பழைய குடியிருப்புக்களிலே வசித்து வருகின்றனர். பதுளை மாவட்டத்தில் இவ்வாறான நிலைமை ஹாலி எல ரொசட் தோட்டம், கவரகலை தோட்டம், எல்வட்டன தோட்டம், மீதும்பிட்டிய சீ பிரிவு, கோலண்டஸ் உட்பட பல தோட்டங்களில் காணப்படுகின்றது. இப்பகுதியில் இயங்கி வரும் பாடசாலைகளும் இவ்வாறான அனர்த்தத்தை சந்தித்து வருகின்றன. 

நிலத்திற்கு கீழான பகுதியில் அடிக்கடி கட்டமைப்பு மாற்றம் ஏற்படுவதால் தாம் எதிர்பார்க்காத பகுதிகளிலும் நிலம் தாழிறங்குவதாக புவிச்சரிதவியல் ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறான நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தமது குடியிருப்பு பிரதேசம் எந்தளவிற்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

நன்றி - வீரகேசரி

பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறுவது உண்மையா? - என்னென்ஸி


மலையக பெருந்தோட்டங்களில் தற்போது தேயிலைக்கொழுந்தின் அறுவடை அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதென்றே கூற வேண்டும். 

மழை, குளிர், இடைக்கிடையே வெயில்  இந்தக் காலநிலை தேயிலை விளைச்சலை அதிகரிக்கும் என்பது அனுபவமாகும். சில மாதங்களுக்கு முன்னர் நிலவிய கடும் வரட்சி காலநிலை மாறி தற்போது மழையுடனான காலநிலை காணப்படும் நிலையில் தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. 

சில தோட்டங்களில் தொழிலாளர்கள் வழமையான நேரத்தை விட ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே (காலை 6.00 மணி) வேலைக்குச்சென்று விடுகின்றனர். 

அதேபோன்று மாலை 6.00 மணிக்கே வேலை முடிந்து வீடு திரும்புகின்றனர். மேலதிக நேரத்தில் பறிக்கப்படும் கொழுந்துக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதேவேளை, இவ்வாறான தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகமும் தமது பங்குக்கு (தற்போது) உணவுப் பொதிகளையும் தேனீர், கோப்பி போன்றவற்றையும் மேற்படி தொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறதாம். ஒரு சில தோட்டங்களில் மட்டுமே இவ்வாறு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொழுந்து உற்பத்தி அதிகரித்துள்ள இந்தக்காலத்தில் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்துக் கொடுப்பதற்கு கம்பனிகள் முன்வருமா என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நியாயமான கேள்விதானே? 

தோட்டத்தொழிற்சங்கங்கள் நாளொன்றுக்கான சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று கடந்த 14 மாதங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றன. பல போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளன. ஆனால் இதுவரை 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. சம்பள உயர்வை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை. 

உலகச்சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதனால் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் கம்பனிகள் கடந்த 14 மாதங்களாக கூறி வருவதுடன், அதனால் தோட்டத்தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றன. உண்மையில் தொடர்ச்சியாக 14 மாத காலமாக உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டு வருகிறதா ? ஒரு போதும் விலை உயரவில்லையா? 

ஆனால் மலையக பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பதில் எந்தவித உண்மையும் இல்லை என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். 

தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும் என்றும் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் கூறுமானால் அனைத்துத்தோட்டங்களையும் பொறுப்பேற்க அரசாங்கம் தயார் என்றும் அமைச்சர் ல்க் ஷ்மன் கிரியெல்ல பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். 

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று அமைச்சர் கம்பனிக்கு அறிவித்திருந்தார். ஆனால் எந்தவொரும் கம்பனியும் குறிப்பாக நட்டத்தில் தோட்டங்கள் இயங்குவதாகக் கூறிய கம்பனிகள் அமைச்சரின் அறிவிப்புக்கு பதிலளிக்கவே இல்லை. 

எல்லா பெருந்தோட்டக்கம்பனிகளும் வாயை மூடிக்கொண்டு மௌனிகளாக இருந்து விட்டன. 

அத்துடன் அமைச்சர் மேலும் பல விடயங்களை தெரிவித்துள்ளார். பெருந்தோட்டக்கம்பனிகள் அனைத்தும் இலாபத்தில் இயங்குகின்றன. அவ்வாறு கிடைக்கும் இலாபங்கள் அனைத்தும் இரகசியமாக சேமிக்கப்படுகின்றன. இலாபத்தை மறைத்து நஷ்டம் என கம்பனிகள் பொய் கூறுகின்றன. 

பெருந்தோட்டக்கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதென்றால் அவையனைத்தையும் பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கிறது. அத்துடன் வெளிநாட்டுக்கம்பனிகள் தோட்டங்களைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தயாராக உள்ளன. எனவே தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் கம்பனிகள் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனடிப்படையில் நோக்கும் போது தோட்டக் கம்பனிகள் தமது இலாபத்தை மறைத்து நட்டம் ஏற்படுவதாக பொய் கூறி வருகின்றன என்பதைக் காண முடிகிறது. 

உண்மையில் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குமானால் அவற்றை தொடர்ந்தும் தமது பிடிக்குள் கம்பனிகள் ஏன் வைத்திருக்க வேண்டும்? நட்டத்தில் ஒரு நிறுவனம் இயங்குவதை யார்தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? அதனை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு வெளியேறி வேறு வேலையைப் பார்க்கலாமல்லவா? இதிலிருந்து கம்பனிகளின் நட்டக்கணக்கு தொடர்பான உண்மையை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? இதனையே அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். 

தற்போது மலையக தோட்டங்களில் கொழுந்து அறுவடை அதிகரித்துள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு உணவு,  கோப்பி மற்றும் மேலதிக வேலைக்கான வேதனங்களை வழங்கும் கம்பனிகள் ஏன் அவர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த முடியாது. அல்லது 100 ரூபாவை நாள் சம்பளமாக வழங்க முடியாது? இது மிகவும் சிந்தனைக்குரிய விடயமாகும். 

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் இனிமேலும் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் அமைச்சர் ல்க் மன் கிரியெல்ல தெரிவித்திருந்த விடயங்கள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் 1000 ரூபா சம்பள உயர்வைக் கேட்க வேண்டும். 

கடந்த 14 மாதங்களாக மெளனமாக இருந்தது போதும் தவறாமல் நீண்ட அறிக்கைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பதும் தாம் எதனையும் பேசாமல் தமது உபதலைவர்கள், உப செயலாளர்களை கொண்டு அறிக்கை அனுப்புவதையும் இனிமேலும் தொடரக்கூடாது. அறிக்கை விடுவதில் மன்னர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். 

எனவே, தற்போதாவது செயற்படுவதற்கு முன்வர வேண்டும். தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கம்பனிகளுக்கு நிச்சயமாக அதிக இலாபம் கிடைக்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தொழிலாளருக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நன்றி - veerakesari

இராமநாதன் : “இலங்கையின் முதிய நாயகன்”? (1915 கண்டி கலகம் –36) - என்.சரவணன்


எம்.எம்.போல் லெகாட் (M.M.Paul Lecat)  என்கிற அந்தக் கப்பல்  உயர்ந்தெழும் அந்த அலைகளை எதிர்கொண்டு இங்கும் அங்குமாக பெரும் ஆட்டத்துடன் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கெனவே அந்தக் கப்பல் ஐஸ் பாறைகளுடன் மோதி சரிசெய்யப்பட்ட ஒன்று. மேலும் கப்பலை இடதும் வலதுமாக திருப்பிக்கொண்டு செள்ளவேண்டியிருந்ததன் காரணம் கற்பாறைகளில் இருந்து கப்பலைப் பாதுகாப்பதற்காக. முதலாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்ததால் நடுக்கடலில் கப்பல்கள் மாறி மாறி மூழ்கடிக்கப்பட்டு வந்த காலம் அது. ஜேர்மன் எண்ணெய்க் கப்பலொன்றும் சமீபத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்ததால் அதிலிருந்து வெளியான எண்ணைக் குமிழ்களைக் காட்டி கப்டன் பயணிகளுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார். ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலால் தமது கப்பலுக்கும் ஆபத்து நேரிடும் என்பதால் பல சந்தர்ப்பங்களில் இசட் வடிவில் (zig-zag) அந்தக் கப்பல் பயணித்தது. ஆம் அந்தக் கப்பலில் தான் சேர் பொன் இராமநாதனும் பயணித்துக்கொண்டிருந்தார்.
இராமநாதன் லண்டன் பயணம் செய்த M.M.Paul Lecat கப்பல்

இந்தக் கப்பல் இங்கிலாந்தை நோக்கி 30 ஒக்டோபர் 1915 அன்று கொழும்பிலிருந்து கிளம்பியது. (1928ஆம் ஆண்டு இந்தக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது என்பது இன்னொரு செய்தி) உயிராபத்து நிறைந்த அந்தப் பயணத்தை இராமநாதன் அந்த வயதில் மேற்கொண்டது மேலும் பல இலங்கையர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே. கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், கைதுக்குள்ளாகியிருந்த அப்பாவிகளின் விடுதலையைக் கோரியும் மேற்கொள்ளப்பட்ட பயணம் அது. சுகவீனமாக இருந்த இராமநாதனின் உடல் நிலையின் காரணமாக அவரை அந்த பயணத்தை மேற்கொள்ளவேண்டாம் என்று அவரது துணைவியார் கேட்டுக்கொண்டார். அவர் அதனை புறக்கணித்து விட்டு சென்ற பயணம் அது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பயணம் இலங்கையின் அரசியல் திசைவழியில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஒன்று என்றால் அது மிகையாகாது.

இதே காலத்தில் டீ.பீ.ஜயதிலக, ஈ.டபிள்யு.பெரேரா சேர்.ஜேம்ஸ் பீரிஸ் போன்றோரம் இங்கிலாந்து பயணமாகி அவர்களும் இராமநாதன் போன்றே முறைப்பாடுகளை முன்வைத்தனர். இவர்களில் ஈ.டபிள்யு பெரேரா தனது சப்பாத்துக்கடியில் வைத்து ஆதாரங்களைக் கொண்டு போய் சேர்த்தவர். அவரும் கைது செய்யப்பட்டு விடுவிப்பட்டவர் தான். ஆனால் சில சிங்கள நூல்கள் இராமநாதனின் பெயரை தவிர்த்து விட்டு ஏனைய மூவரின் முயற்சியால் தான் விடுதலை சாத்தியமானது என்று முடிப்பதையும் வாசிக்கக் கிடைக்கிறது.

இவர்களில் இரமானாதனின் பாத்திரம் இவர்களில் இருந்து வேறுபட்டது. அவர் இங்கிலாந்தில் மேற்கொண்ட சந்திப்புகளும், முறைப்பாடுகளும் உரியவகையில், உரிய இடங்களுக்கு காத்திரமாக கொண்டு போய் சேர்க்கப்பட்டன என்பது தான் நிதர்சனம். காலனித்துவ செயலாளரையும், முக்கிய பல அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அவர் சந்தித்தார். அதனை உணர்ந்திருந்ததால் தான் சிங்களத் தலைவர்கள் இராமனாதனைக் கொண்டாடினார்கள். சில வேளை இராமநாதனின் இந்த முயற்சி நடக்காதிருந்தாலோ, அல்லது தோல்வியடைந்திருந்தாலோ பல சிங்களத் தலைவர்கள் மரணத்தை சந்தித்திருக்கக் கூடும். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான டீ.எஸ்.சேனநாயக்க தான் இலங்கையின் முதல் பிரதமராகத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

1915 கலவரத்தைக் காரணமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு அரசியல் ரீதியில் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக கருதப்பட்ட கலவரத்துடன் தொடர்பே இராத சிங்களத் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள்.

டீ.எஸ்.சேனநாயக, எப்.ஆர். டீ.பீ.ஜயதிலக, லடிபில்யு, ஏ.டீ.சில்வா, டீ.ஆர்.விஜேவர்தன, எப்.ஆர்,டயஸ் சேனநாயக்க, டொக்டர் கேசியஸ் பெரேரா, ஈ.டீ.டீ.சில்வா, எச்.அமரசூரிய, ஏ.எச்.மொலமூரே, சீ, டீ, பட்டுவன்தொட்டுவ, ஜோன்.எம்.செனவிரத்ன, டபிள்யு.எச்.டபிள்யு.பெரேரா, மார்டினஸ் பெரேரா, ஜீ.டீ.லேநேரோல், ஜோன் டீ.சில்வா,பத்தரமுல்ல தேரர், எட்மன்ட் ஹேவா விதாரண, டொக்டர் சீ, ஏ.ஹேவா விதாரண (இருவரும் அநகாரிக தர்மபாலாவின் சகோதரர்கள்)  போன்றோர் அப்படி கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

தந்தி அனுப்பி அழைப்பு
இராமநாதனின் இங்கிலாந்து பயணித்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் 1915 மே மாதம் நிகழ்ந்த கலவரத்தின் போது இராமநாதன் இந்தியாவில் – கொடைக்கானலிலுள்ள அவரது ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சொத்துக்கள் இருந்தன. அந்த சூழலில் அவரது சிங்கள நண்பர்கள் அவருக்கு நிலைமையை விளக்கி அவசரத் தந்தி அனுப்பி அவரை அவசரமாக கொழும்பு புறப்பட்டு வரும் படி அழைப்புவிடுத்தனர். இராமநாதன் அவசரமாக இலங்கை வந்து சேர்ந்தார். இலங்கையின் நிலைமை என்றும் கண்டிராத சூழலை விளங்கிக் கொண்டார். சீர்குலைந்த சிவில் வாழ்க்கை, இராணுவ சட்டதின் பேரால் எங்கும் அடக்குமுறை, அப்பாவிகள் கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டமை, வெறிச்சோடிய பாதைகள், சீர்குலைந்திருந்த பாதைகள் என்பனவற்றைக் கண்டார். சிறையில் இருக்கும் தனது நண்பர்களைச் சென்று சந்தித்தார். சட்டப்படி மேற்கொள்ளக்கூடியவை அனைத்தும் இராணுவச் சட்டதத்தின்பேரால் மறுக்கப்பட்டது. எனவே அவர் நேரடியாக தேசாதிபதியையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்து தன்னால் முடிந்தவற்றை மேற்கொள்ள முயற்சித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கே துப்பாக்கி முனையைக் காண்பித்து எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

வரவேற்புக் கொண்டாட்டம்
இந்த நிலையில் தான் இராமநாதனின் அந்தப் பயணம் நிகழ்ந்தது. நான்கு மாதங்களின் பின்னர் அவர் P. & 0. Malwa என்கிற கப்பலில் 17.பெப்ரவரி 1916 அன்று கொழும்பு வந்தடைந்தார். 21.02.1916 வெளியான “The Ceylonese” பத்திரிகையில் இப்படி வெளியானது.

“அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் பற்றி வரவேற்புக்காக அமைக்கப்பட்ட குழுவொன்றைச் சேர்ந்த ஒரு இளைஞர் அணி வந்து விளக்கமாக எமக்கு கூறினர்... “மால்வா” என்கிற அந்தக் கப்பல் 8 மணிக்கு வந்தடைவதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாலை வெளிச்சம் தொடங்கும் போது பெருமளவு மக்கள் துறைமுகத்தைச் சூழ குவிந்துகொண்டிருந்தனர். நேரம் கடந்துகொண்டிருந்தது. ஆனால் கூட்டமோ மேலும் பெருகிக்கொண்டிருந்தது. ஏற்பாட்டை செய்தவர்கள் அனைவரும் வெள்ளை உடையணிந்து தயார் நிலையிலிருந்தனர். அவரை கொழும்பு ஜெட்டியிலிருந்து வீடு வரை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் வேளைக்கே வந்து விட்டது. மதியத்தைக் கிட்டிக் கொண்டிருந்த போது கப்பல் கரையை அடைந்தது. குழுமியிருந்தவர்களின் உணர்ச்சியும், அவாவும் மேலும்  அதிகரித்திருந்தது. அங்கிருந்த பொலிஸ் எவரையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. பின்னர் வரவேற்புக் குழுவைச் சேர்ந்த சிலர் மட்டும் உள்ளே சென்றார்கள். ஏ.ஈ.குணசிங்க, அ.டபிள்யு.பி.ஜயதிலக. ஆர்.ஈ.டபிள்யு.பெரேரா, பீ.என்.ஜெயநெட்டி ஆகியோரே அவர்கள்.

மக்கள் வெள்ளம் மேலும் பெருகியது. உள்ளேயிருந்து வெளியே வந்த இராமநாதனின் உருவத்தை தூரத்தில் இருந்து கண்டவுடன் மக்கள் வெள்ளம் பெரும் ஆரவாரத்துடன் சத்தமெழுப்பி வாழ்த்தினர். “நீடூழி வாழ்க இலங்கையரே”, “எங்களை மரியாதைப் படுத்தியவருக்கு கனம் செய்கிறோம்”, “இளம் இலங்கையர் கழகம் முதிய நாயகனை வரவேற்கிறது” போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாகைகள் சூழ காணப்பட்டன. ஊர்வலம் தயாரானது. முதலில் கொடிகள் தாங்கிய பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, அதன் பின்னர் தாள வாத்திய அணிகள், பின்னர் நடனக் கலைஞர்கள் அதன் பின்னர் இராமநாதனை அழைத்து வருவதற்கான தேர். அதன் பின்னால் மீண்டும் நடன கலைஞர்கள். பின்னர் மக்கள் ஊர்வலம்.

ஆனால் அங்கிருந்த உணர்ச்சியும், உற்சாகமும் மிகுந்த நிலையில் தேரின் குதிரைகளைக் கழற்றிவிட்டு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 30 பேர் அந்தத் தேரை தமது தோளில் மாறி மாறி சுமந்தனர். கொழும்பு கோட்டைப் பகுதியில் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. அவரை நோரிஸ் வீதி வழியாக, டெக்னிக்கல் கல்லூரி, ரயில்வே களஞ்சிய பகுதியில் ட்ராம் வண்டி பாதை வழியாக மருதானைச் சந்தியினூடு, டீன்ஸ் வீதி பின்னர் வார்ட் பிளேஸ் வீதிக்கு வந்து அங்கு அவரது “சுகாஸ்டன் இல்லம்” (Sukhastan) வந்தடைந்தபோது பிற்பகல் 4.30 மணியானது.

ஊர்வலத்தில் சிங்களத் தலைவர்களால் இராமநாதன் தூக்கிக் கொண்டாடப்பட்ட இந்த சந்தர்ப்பம் குறித்து அன்றைய பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. இராமநாதனின் இல்லத்தை சூழ கூடியிருந்த மக்கள் மத்தியில் கூட்டமும் பேச்சும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இராமநாதனும் உணர்ச்சிமிகுந்த அந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
ஏ.ஈ.குணசிங்க
ஏ.ஈ.குணசிங்காவின் பேச்சானது மிகவும் முக்கியமானது. அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் இருந்த அரசியல் சிக்கல்களைப் பற்றி விளக்கினார். முதலில் கப்பலுக்கு சென்ற லயனல் கொத்தலாவல (பிற் காலத்தில் சேர் ஜோன் கொத்தலாவல) மற்றும், ஏ.ஈ.குணசிங்க ஆகியோர் வரவேற்பு ஏற்பாடு பற்றி இராமநாதனிடம் விளக்கியபோது அந்த ஏற்பாட்டை இரத்து செய்யும்படி கூறினார். “அப்போதைய பதட்ட நிலையில் வெளியில் இருந்து சில திட்டமிட்டு கற்களை வீசி குழப்பினால் கூட நிலைமை மோசமாகிவிடும் என்று. ஊர்வலம் போவதற்கான மாற்று திட்ட வரைவையும் கூறினோம். கூட்டத்தை அமைதிகாக்கும் படி எர்பாட்டாளர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு இராமநாதனை வெளியில் அழைத்து வந்தோம். அவர் ஆரம்பத்தில் இந்த கூட்டத்தை விரும்பியிருக்கவில்லை. ஆனால் வண்டிக்கு அருகில் வந்ததும் கண்டி நடனம் ஆடி அவரை வரவேற்கத் தொடங்கியதும் அவர் அதனை ஏற்று வண்டியில் வந்து அமர்ந்தார்.” என்றார் ஏ.ஈ.குணசிங்க.

இராமநாதனை சுமந்துவரும் காட்சிகொண்ட ஓவியத்தை இன்றும் பல இடங்களில் காணலாம். இராமநாதன் கட்டிய கொழும்பு - கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மண்டபத்திலும் அந்த ஓவியம் புகைப்படமாக சுவரில் இன்றும் தொங்குகிறது.

ராமநாதன் ஏற்படுத்திய விளைவு
இங்கிலாந்தில் அவர் இராணுவச் சட்டத்தின் பேரால் நடந்த அநீதிகளையும், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டதையும் விரிவான தரவுகளுடன் ஆங்கிலேய அதிகாரிகளிடம் விபரித்தார். தகுந்த நீதி விசாரணைக் கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். அதன் விளைவாக இலங்கையில் விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது. பல சிங்களத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இலங்கைக்கான ஆங்கில தேசாதிபதி சேர் ரொபர்ட் சார்மர்சம், இராணுவத் தளபதியும் திருப்பி அழைக்கப்பட்டனர். அவருக்குப் பதிலாக புதிய ஆளுநர் அனுப்பட்டார். இலங்கையின் வரலாற்றில் குற்றச்சாட்டொன்றின் விளைவாக தேசாதிபதி ஒருவர் நீக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமும் இறுதி சந்தர்ப்பமும் அது தான்.

இராமநாதன் நாடு திரும்பிய பின்னர் இலங்கையில் நடந்தவற்றை தொகுத்து வெளியிட்ட நூல் தான் “இலங்கையில் 1915 கலவரமும் இராணுவச் சட்டமும்” ("Riots and Martial Laws of Ceylon, 1915") என்கிற நூல். இன்றும் அந்தக் கலவரம் பற்றி அறிபவர்களுக்கு மூலாதாரமாக விளங்கும் முக்கிய நூல் அது.

இந்த கலவரத்தின் காரணமாக இராமநாதன் உள்நாட்டில் மேற்கொண்ட நீதிகோரிய முயற்சிகள் ஆங்கிலேயர்களை ஆத்திரத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது. உள்நாட்டில் நீதி சாத்தியமாகாத நிலையிலேயே அவர் இங்கிலாந்துக்கு நேரடியாக சென்று நீதி கோரி, அதில் வெற்றியும் பெற்று வந்தார். அவரது பயணம், அவர் மேற்கொண்ட முறைப்பாடுகள் என்பன முக்கிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்திய காரணிகள்.  அவர் எழுதிய நூல் ஆங்கிலேயர்களுக்கு என்றென்றும் வரலாற்றுக் களங்கத்தை பதிவு செய்த நூல். சிங்களத் தலைவர்களின் வெற்றிக்களிப்பு, தேசாதிபதியும், இராணுவத் தளபதியும் திருப்பியழைப்பு. புதிய தேசாதிபதி நியமிப்பு, அதன் பின்னர் மேற்கொண்ட நீதி விசாரணைகள் என்பன இராமநாதனின் வரலாற்றுப் பாத்திரத்துக்கு மிகப் பெரும் சான்றுகள். இலங்கையின் வரலாற்றில் இராமநாதனின் பாத்திரத்தை இருட்டடிப்பு செய்கின்ற இனவாதப் போக்கையும் மீறி வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகனாக இலங்கையர்களுக்கு அவர் என்றும் இருக்கின்றார். சிங்களவர்களை மீட்ட இன்னொரு துட்டகைமுனு என்று அவரை இன்றும் புகழ்கின்றனர்.
குறிப்பு:
இந்த இதழில் இராமநாதன் பற்றி தொகுக்கப்பட்ட சில தகவல்கள் எம்.வைத்திலிங்கம் எழுதிய “சேர் பொன்னம்பலம்இ ராமநாதனின் வாழ்க்கை சரிதம்” (The Life of Sir Ponnambalam Ramanathan) என்கிற நூலில் இருந்து பெறப்பட்டவை. இராமநாதன் பற்றி வெளிவந்த நூல்களில் முக்கிய நூலாக கருதப்படுபவை எம்.வைத்திலிங்கம் அவர்களின் நூல்கள். இந்த நூல் இரண்டு பாகங்களாக (பாகம் 1 - 605 பக்கங்கள்), (பாகம்  2- 760 பக்கங்கள்) 1977 இல் வெளிவந்தது.
சேர் பொன் இராமநாதன் பற்றி அரச தொலைக்காட்சியில் சிங்களத்தில் வெளியான ஒரு ஆவணப்படம்.

சம்பளப் பிரச்சினை குறித்து நேற்று அலரி மாளிகையில் எடுக்கப்பட்ட முடிவுகள் - மனோ கணேசன்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நேற்று அலரி மாளிகையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மனோ கணேசன் தனது முகநூல் பதிவொன்றின் மூலம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற பொருளாதார முகாமை குழு கூட்டத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, நவீன் திசாநாயக்க மற்றும் திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கம் உட்பட அரச அதிகாரிகள் இடையில் இடம்பெற்ற தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. 2016 ஏப்ரல் முதல் கணக்கெடுக்கப்பட்டு ரூ. 2500/= இடைக்கால நிவாரண கொடுப்பனவு தோட்ட தொழிலாளருக்கு, புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும்வரை வழங்கப்படும்.

2. இதன் மூலம் தோட்ட தொழிலாளருக்கான இன்றைய நாட்சம்பளம் ரூ. 620 உடன் ரூ. 100 மேலதிகமாக சேர்க்கப்பட்டு ரூ. 720 நாட்சம்பளம் வழங்கப்படும்.

3. இந்த மேலதிக தொகையை வழங்க, தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களுக்கு, அரச வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து கொடுக்கப்படும். இந்த பொறுப்பு திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

4. வெகு விரைவில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, புதிய தொகை சம்பளமும், 2015 மார்ச் 31ம் திகதியிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு நிலுவை சம்பளமும் வழங்கப்படும்.

5. கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை நடவடிக்கையை நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்நடத்துவார்.

6. விரைவில் தொழிலாளருக்கு பயிர் காணிகள் பிரித்து வழங்கும் புதிய தொழில் முறைமையான, வெளி ஒப்பந்த முறைமை பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முகாமை நிறுவனங்களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்படும்.

தேயிலை மலைகளில் வாழும் மிருகங்களிடமிருந்து தொழிலாளருக்கு பாதுகாப்பு கிடைக்குமா? - செழியன் நல்லதம்பி


மலையகத்தில் சிறுத்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, மலையக தோட்டத்தொழிலாளர்களை காட்டு மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தேயிலை மலைகளில் சுதந்திரமாக வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தற்போது சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், நச்சுப்பாம்புகள், அட்டைகள் என அனைத்துக்கும் பயந்து அச்சத்துடன் தொழில் செய்ய வேண்டியதொரு நிலையிலேயே உள்ளனர்.

சிலதோட்டங்களில் காலையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பட்டாசுகளையும் எடுத்துச்செல்கின்றனர். தேயிலை மலைக்குள் இறங்குவதற்கு முன்னர் பட்டாசுகளை கொளுத்திப்போட்டு விட்டு வேலையைத் தொடங்குவதையே தற்போதைய வழக்கமாகக் கொண்டுள்ளனர். பட்டாசு கொளுத்துவது கொண்டாட்டங்களுக்காக அல்ல. தேயிலை செடிகளுக்கிடையில் வாழ்விடங்களை அமைத்துக்கொண்டிருக்கும் சிறுத்தைகள், பன்றிகள் போன்ற மிருகங்களை விரட்டுவதற்காகத்தான்.

பட்டாசைக் கொளுத்தி போட்டால் மிருகங்கள் ஓடி விடுகிறதாம். இதனால் தினமும் பட்டாசு வாங்குவதற்கென தனியாக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. தோட்ட நிர்வாகம் பட்டாசு வாங்க பணம் கொடுப்பதுமில்லை. வேலை செய்யும் இடங்களில் பதுங்கியிருக்கும் மிருகங்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதுமில்லை.

இந்த நிலையில் தோட்டப்புறங்களில் நடமாடும் சிறுத்தைகளை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுத்தைகளை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கையை வரவேற்கும் அதேவேளை, தமக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தோட்டத்தொழிலாளர்கள் கோருகின்றனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மலையகத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. சிறுத்தைகளினால் தோட்டத்தொழிலாளர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் அவர்களின் வளர்ப்புப்பிராணிகள் காணாமல் போவதும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, தற்போது சிறுத்தைகள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு சில மாத காலத்தில் குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் ஏழு சிறுத்தைகள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் அக்கரப்பத்தனை பிரஸ்டன் தோட்டத்தின் தேயிலை மலையில் அடுத்தடுத்த தினங்களில் இரண்டு சிறுத்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைகள் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விஷம் கலந்த உணவை உட்கொள்ளச்செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே அந்த சந்தேகம்.

ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்னர் நோர்வூட் பகுதியில் தொழிலாளர்களின் குடியிருப்புப்பகுதியில் சிறுத்தை வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, கடந்த மாதம்10 ஆம் திகதியன்று பொகவந்தலாவை கியூ தோட்டத்தில் தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே, டிக்கோயா ஒஸ்போன் தோட்டத்திலும் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறுத்தைகளின் நடமாட்டம் பொகவந்தலாவ, நோர்வூட், டயகம, அக்கரப்பத்தனை பொகவத்தை, மேபீல்ட் போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சிறுத்தைகளின் நடமாட்டம் அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, தொழிலாளர்கள் வேலைக்கு தற்போது செல்வதற்கு இதனால் பயந்து கொண்டிருக்கின்றார்கள்.

முன்பெல்லாம் காடுகளில் வசித்து வந்த சிறுத்தை, காட்டுப்பன்றி போன்றவை தற்போது தேயிலை மலைகளில் வாழத்தொடங்கியுள்ளதுடன், தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் நடமாடத்தொடங்கி விட்டன. தொழிலாளர்களின் வளர்ப்புப் பிராணிகளான நாய்கள், பூனைகள், கோழிகள் போன்றவற்றை இந்த சிறுத்தைகள் பிடித்துச் சென்று விடுகின்றன.

முன்னர் ஆங்கிலேயர் காலத்திலும் அதன் பின்னரும் தேயிலைத் தோட்டங்கள் புற்கள், காடுகள், செடிகொடிகளின்றி மிகவும் சுத்தமாக காணப்படும். ஆனால், தற்போது அப்படியல்ல, தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. தேயிலைச் செடியை விட புற்கள் உயரமாக வளர்ந்து காணப்படுகின்றன. புதர்களும் காடுகளும் மண்டிக்கிடக்கின்றன. இந்த நிலைமை சிறுத்தை போன்ற மிருகங்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. அதனால்தான் சிறுத்தைகள் அதிகமாக தேயிலை மலையை வாழ்விடங்களாக்கிக் கொண்டுள்ளன.

தோட்டத்தொழிலாளர்கள் இதனால் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் அண்மையில் குறித்த அக்கரப்பத்தனை தோட்டப்பகுதி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கை தோட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, சிறுத்தைகள் நாட்டில் அருகி வரும் மிருக இனமென்றும் அதனை பாதுகாக்க வேண்டுமென்றும் இலங்கை வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.

இது பற்றி தகவல் தருவோருக்கு சன்மானம் தருவதாகவும் அறிவித்துள்ளது.

ஆனால், தொழிலாளர்கள் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறுத்தைக்கு பயந்து தொழிலை கைவிட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். அச்சத்துக்கு மத்தியில் வேலை செய்ய முடியாது. பாதுகாப்புத்தேவை!

எனவே, சிறுத்தைகளுக்காக தொழிலாளர்களை தோட்டங்களிலிருந்து வெளியேற்றுவதா? அல்லது சிறுத்தைகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு அப்புறப்படுத்துவதா? எதைச் செய்யப்போகிறது அரசு என்கின்றனர் தோட்டத்தொழிலாளர்கள்.

நன்றி - veerakesari

முகாம்களிலுள்ள மக்களுக்கான வீடமைப்பு விரைவுபடுத்த வேண்டும் - என்னென்ஸி எஸ். கமலதாஸ்


நாட்டில் மண் சரிவு அபாயம் நிலவும் நூற்றுக்கணக்கான இடங்கள் அடை-யாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலும் இவ்வாறான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்-ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி பணியகத்தின் நீண்ட கால ஆராய்ச்சியின் பின்னரே மண்சரிவு ஏற்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்-ளது.

பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, களுத்துறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலேயே அதிகளவில் மண் சரிவு அபாயம் நில-வுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரட்சி மற்றும் வெயில் காலங்களில் மண் சரிவுக்கான எந்தவிதமான அறி-குறிகளும் காணப்படுவதில்லை. எனினும் மழைகாலங்களில் அதுவும் மழை பெய்யத் தொடங்கி மண் ஈரலிப்பானவுடன் மண்சரிவுகள் ஏற்படத்தொடங்கி விடுகின்-றன. ஒவ்வொரு மழைகாலங்களிலேயே அதிகளவில் மண்சரிவுகள் ஏற்படுகின்றன.

கடந்த சில வருடங்களை விட இந்த வருடத்தில் அதிகளவிலான மண்சரி-வுகள் இடம்பெற்றுள்ளதுடன் தொடர்ந்தும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயங்கள் நில-வுகின்றன. எனவே மழைகாலங்களில் ஏற்படும் மண்சரிவுகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டிய நிலையில் மலையக மக்கள் இருக்கின்றனர்.

மீரியபெத்தையில் ஏற்பட்ட மண் சரிவினை நாம் மறக்கவில்லை. இன்னும் அதனை நினைவு கூரக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது அரநா-யக்க, புளத்கொஹூபிட்டிய, களுபான தோட்டம் முதல் மலையகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் மிக மோசமானவையாகும். பெரும் உயிர்ச்-சேதங்களையும் பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

தொடர்ந்தும் வேறு சில இடங்களில் மண்சரிவு அபாயங்கள் நிலவுவதாகவும் மண்சரிவு அச்சத்தால் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருவதா-கவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்-டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தொழிலாளர்கள் தமது குடியிருப்புக்களை விட்டு வெளியேறியுள்ளனர். 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் குடியிருப்புக்களை விட்டு வெளியேறி கலாசார மண்டபத்தில் தங்கியுள்ளனர்.

இந்த 130 பேரில் முதியோர் உட்பட 35 சிறுவர்களும் குழந்தைகளும் அடங்கி-யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுவ-தாகவும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டளவில் குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் எனவே மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலை லிந்துலை பகுதியிலுள்ள ஊவாக்கலை தோட்டத்தின் 3 ஆம் இலக்க பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமது குடியிருப்புக்களிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் மேற்படி தோட்டத்தின் வேறொரு பகுதியில் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்-ளனர். பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்-பினர் எம்.திலகராஜ் சென்று பார்வையிட்டுள்ளார். இவர்களுக்கு விரைவில் வீடு-களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் அங்குள்ள மக்க-ளிடம் தெரிவித்துள்ளார்.

பெல்மதுளை பொரணுவ தோட்ட மேற்பிரிவில் தொழிலாளர்கள் குடியிருப்-புகள் அமைந்துள்ள பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டதையடுத்து 35 குடும்பங்-களைச் சேர்ந்த 130 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன் அவர்கள் தற்காலிக-மாக பொரணுவ தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தெல்தொட்ட மற்றும் கலஹா ஆகிய தோட்டங்களிலும் சீரற்ற காலநியை காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர். 166 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெல்தொட்டையைச் சேர்ந்த 25 குடும்பங்கள் திருவள்-ளுவர் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புளத்கொஹுபிட்டிய களுப்பான தோட்டத்தில் நிலவிய மண்சரிவு அபா-யத்தால் அங்கிருந்த 60 குடும்பங்களை சேர்ந்த 330 பேர் புளதகொஹுபிட்டிய லக்கல சீலானந்த சிங்கள வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்த மண்சரிவு அனர்த்தத்தோடு கேகாலை மாவட்டத்தில் பல தோட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

களுப்பான தோட்ட மக்களோடு லெவல தோட்டத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேரும் எதிராபொல தோட்டத்தைச் சேர்ந்த 17 குடும்பங்களைச்சேர்ந்த 96 பேருமாக மொத்தம் 604 பேர் தற்பொழுது லக்கல சீலானந்த சிங்கள வித்தியால-யத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான நிவாரண உதவி-களை புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேற்படி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்-ளதால் கிராமவாசிகள் அந்த மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறும் பாடசாலையை மீள ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அசாதாரண காலநிலை காரணமாகவும் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவ-தாலும் அந்த மக்களை உடனடியாக அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத சூழ்நிலை பிரதேச செயலகத்திற்கு ஏற்பட்டது. அவர்களை வேறு இடத்தில் தங்க வைக்க முடியாத காரணத்தினால் தொடர்ந்தும் அப்பாடசாலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பாடசாலையில் தங்க வைக்க முடியாத நிலையில் அவர்கள் நிச்-சயம் தத்தமது தோட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதில் பாதிக்கப்-பட்ட களுப்பான தோட்ட மக்களுக்கு மலையக புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் 100 வீடுகளை கட்டித்தருவதாக உறுதி-யளித்துள்ளார். இந்த வீடுகள் 6 மாதத்தில் கட்டித்தருவதாகவும் வாக்குறுதியளிக்கப்-பட்டிருக்கின்றது.

அதேநேரம் வீடுகள் கட்டிகொடுக்கப்படும்வரை அவர்கள் தற்காலிகமாக வசிப்-பதற்கு கூடாரங்கள் வழங்கப்பட்டன. களுபான தோட்டத்திற்கும் டெனிஸ்வர்த் தோட்டத்திற்கும் 130 கூடாரங்கள் வழங்கப்பட்டன.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே குறித்த தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த தவறியதன் விளைவாகவே இன்று 16 உயிர்கள் காவு கொள்ளப்பட்-டுள்ளன. இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் அசமந்த போக்கும் இவர்களின் உயிர்ப்பலிக்கு காரணம் எனலாம். அபாய எச்சரிக்கையின் போதே அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுத்திருப்பின் இந்த அனர்த்தம் ஏற்பட்டி-ருக்காது.

நன்றி - veerakesari
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates