Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

71 ஏப்ரல்! கிளர்ச்சி, எழுச்சி, வளர்ச்சி! - என்.சரவணன்

சோவியத் புரட்சியின் ஆரம்பம் அரோரா கப்பலின் பீரங்கிக் குண்டிலிருந்து ஆரம்பித்தது. 71 எழுச்சி வெல்லவாயவிலிருந்து ஆரம்பித்தது. 1818 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்ட அதே ஊவா பிரதேசத்தில் வெள்ளவாய போலிஸ் நிலையத்தின் மீது திட்டமிடப்பட்டபடி அந்தத் தாக்குதல் 1971 ஏப்ரல் 5 அன்று ஆரம்பமானது.

சுதந்திர இலங்கையின் முதலாவது ஆயுதப் போராட்டம் அது. இலங்கையின் வரலாற்றில் வடக்கிலும் தெற்கிலும் ஆயுதப் போராட்டத்துக்கு தள்ளப்பட்ட இரு தரப்பினரும் அரச பயங்கரவாத போக்கின் அடாவடித்தனங்களில் இருந்து பிறந்தவை. 

ஜனநாயக வெளியில் கிடைக்கிற அரசியல் அவகாசத்துக்குள் அரசியல் செயற்பாடுகளை செய்யவிடாது இயக்கங்களைத் தடை செய்தததன் விளைவே இரகசிய தலைமறைவு அரசியலுக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட அரசியலாகும். ஜேவிபி 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடத்திய மாபெரும் கூட்டத்தைக் கண்டு பயந்தது சிறிமா அரசாங்கம். அக்கூட்டத்தில் ஜேவிபியின் தலைவர் ரோகண விஜேவீர ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஆற்றிய உரை அக்கூட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. அது ஒரு வரலாற்று சிறப்பம்சம் கொண்ட உரை. இந்த கூட்டம் நடத்தப்பட்டு 20 நாட்களில் அதாவது மார்ச் 16ஆம் திகதி சிறிமாவோ அரசாங்கம் ஜேவிபி மீதான தடையை பிரகடனப்படுத்தியது.

சிறிமா அரசு தடை செய்ததன் விளைவு 71' ஏப்ரல் கிளர்ச்சி. அதுபோல 1983 கலவரங்களுக்கு ஜேவிபியே பொறுப்பு என்று குற்றம்சுமத்தி ஜேவிபியை  தடை செய்து தலைமறைவுக்கு தள்ளியதன் விளைவு 87-89 கிளர்ச்சிகள்.

71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற  எடுக்கப்பட்ட முயற்சி அது. இளைஞர்கள் பலர் மோசமாக அரச பயங்கரவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட அக்கிளர்ச்சி நிகழ்ந்து நேற்றைய தினத்துடன் 54 ஆண்டுகளை எட்டிவிட்டன. 

பாம்பரிய இடதுசாரிகளின் வீழ்ச்சி 

ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலங்கையின் வரலாற்றில் முற்போக்கு பாத்திரம் வகித்து வந்த இடதுசாரிகட்சிகள் ஒரு காலக்­கட்டத்தின் பின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை காரணிகளாலும் துண்டு துண்டாக பிளவுபட்டன. ஆளும்கட்சிகளோடு சேர்ந்து கரைந்தே போயின. 

1960இல் இறுதிக்காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்டிரு­ந்த வேலையில்லாத் திண்டாட்டப் பெருக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, விவசாயிகளின் வருமானத் தேக்கம், சம்பளக் குறைப்பு போன்ற உடனடிக்காரணங்கள் அரசை எதிர்த்து நிற்கின்ற அணியினை உருவாக்கியது. இவ்வணிக்கு ஜே.வி.பி. தலைமை கொடுத்தது.


ஜே.வி.பி.யின் உருவாக்கம் 

சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1966இல் ரோஹண விஜேவீர உள்ளிட்ட குழுவினர் வெளியேற்றப்பட்டனர். ஏற்கெனவே அக்கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் மாணவர் பிரிவை கட்டியெழுப்பி அதனை தலைமை தாங்கி நடத்தி வந்த விஜேவீர, அம்மாணவர் பிரிவில் அங்கம் வகித்த இளைஞர்களைக் கொண்டு கட்சிக்கும் தெரியாமல் இரகசிய அரசியல் வேலைகளில் ஈடுபட்டார். குறிப்பாக அரசியல் கலந்துரையாடல் நடத்தச் சென்ற இடங்களில் பண்ணைகளை அமைத்தார். பின்னொரு காலத்தில் ஆயுதங்களை அங்கு களஞ்சியப்படுத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை கட்சித் தலைமை அறிந்தது. இதனால் விஜேவீரவுக்கும் சண்முகதாசனுக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டு இறுதியில் விஜேவீரவின் அரசியல் பணிகள் கட்சிக்குள் தடைசெய்யப்பட்டதுடன் முழுநேர ஊழியத்திலிருந்தும் விலக்கப்பட்டார். இறுதியில் கட்சியின் அனுமதியின்றி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி டட்லி-செல்வா உடன்படிக்கைக்கு எதிராக ஊர்வலத்தில் கலந்து கொண்டதன் காரணமாக கட்சியிலிருந்து விஜேவீர விலக்கப்பட்டார். 

விலக்கப்பட்ட விஜேவீர தன்னுடன் கட்சியிலிருந்த தோழர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டு 1967இல் ஜே.வி.பி.யை (மக்கள் விடுதலை முன்னணியை) உருவாக்கினார். 


ஏனைய இடதுசாரிக் கட்சிகளோடு ஒப்பிடும் போது ஆயுதப் போராட்டத்தை முற்றாக ஜே.வி.பி. மட்டுமே அங்கீகரித்தது. ஆயுதப் போராட்டமின்றி தமது இலக்கை அடைய முடியாது என்பதை ”அரசியல் வகுப்புகள் 5” மூலமாக இளைஞர்களுக்கு ஊட்டியது. அரசியல் வகுப்பை முடித்த இளைஞர்களுக்கு முதற் கட்டமாக உடற்பயிற்சி வழங்கப்பட்டது. 1969 காலப்பகுதியில் ஆயுத சேகரிப்பில் ஈடுபடும்படி முன்னணி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. 

இதே காலப்பகுதியில் ஏனைய பாராளுமன்ற இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி போன்றவை ஜே.வி.பி.யை காட்டிக் கொடுக்கத் தொடங்கின. குறிப்பாக அக்கட்சிகளின் பத்திரிகைக்கு ஊடாக ஜே.வி.பி.யின் இரகசிய செயற்பாடுகள் பகிரங்கப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அப்போதைய டட்லி அரசாங்கம், ”சேகுவரா பியுரோ” (Chegura Bureau) எனும் பெயரில் ஜே.வி.பி.யைக் கண்காணிப்பதற்காக விசேட பிரிவொன்றை உருவாக்கியது. இப்பிரிவின் செயற்பாடுகள் காரணமாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இடப்பட்டார்கள். தலைமறைவாக இருந்த விஜேவீரவும் 1970 மே மாதத்தில் கைது செய்யப்பட்டார். அதே மாதம் நடந்த பொதுத் தேர்தலின் மூலம் ஆட்சியும் மாறியது. 


ஒடுக்குவதற்கான தயாரிப்புகள்

ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது. இவ் ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி ,லங்கா சமசமாஜக் கட்சி கூட்டு சேர்ந்திருந்ததையும் இங்கே கவனிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து யூலையில் விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். விஜேவீரவின் விடுதலையால் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் விரிவடைந்தன. இரகசிய வேலைகளுக்கு முன்னுரிமை அளித்த அதே வேளை பகிரங்க அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதாக கட்சி முடிவெடுத்தது. கட்சியின் அரசியல் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டபோது அதில் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக மக்கள் பெருந்தொகையாக கலந்து கொண்டார்கள்.

ஜே.வி.பி.யின் வளர்ச்சி குறித்து ஆளும் கட்சி கலக்கமுற்றது. அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த இரத்தினவேல் ”சேகுவாரா இயக்கம் அரசின் பிரதான எதிரியாக தலை தூக்கியுள்ளது. அதனை ஈவிரக்கம் இன்றி கலைத்து அழித்தொழிக்க வேண்டும். அதற்கேதுவாக சட்டதிட்டங்கள் கொண்டு வருவதில் அரசு கவனம்செலுத்த வேண்டும்” என 1970 ஒகஸ்டில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து (அவசரகால சட்டத்தின் கீழ்) மரண பரிசோதனையின்றி சடலங்களை எரிப்பதற்கான சட்டத்திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட்டது.

பாரிய அடக்கு முறைக்கான ஆயத்தங்களை அரசு செய்து வருவதை இனம் கண்ட ஜே.வி.பி, ஆயுத சேகரிப்பு வேலைகளையும் துரிதப்படுத்தியது. வெடி குண்டு தயாரிப்புக்கான தீர்மானத்தையும் அரசியல் குழு எடுத்தது. வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் ஜே.வி.பி. விநியோகித்தது.


புரட்சியும் எதிர்ப்புரட்சியும் 

1971 ஜனவரியில் விஜேவீர தொடர்ச்சியாக நாடு பூராவுமுள்ள மாவட்ட கமிட்டி முழு கூட்டத்தில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் ஒன்றையொன்று எதிர் நோக்கியுள்ள தருணம் இதுவென்றும் மார்ச் மாத இறுதியில் உறுப்பினர்களை ஆயுதபாணிகாளாக்கும் வேலைகளைப் பூரணப்படுத்தும் படியும் கூறினார். தான் அடுத்ததாக அரச அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி பேச வருவதாகவும் கூறிச் சென்றார். 

1971 பெப், 27ம் திகதி ஹைட்பார்க்கில் நடத்தப்பட்ட பகிரங்கக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போரெச்சரிக்கை விடப்பட்டது. மார்ச் 13ம் திகதி விஜேவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு விட்டார். 1971 மார்ச் 16ம் திகதி நாடு முழுவதும் அவசரக்காலச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபடி தாக்குதலுக்கான தீர்மானத்தை எடுக்கும் படி விஜேவீரவிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டது. அதன்படி மத்தியக்குழு (அப்போது முரண்பட்டு இருந்த தரப்பும் கூட்டாகச் சேர்ந்து ) ஏப்ரல் 5ம் திகதி விடியற்காலை 11.30க்கு நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் தீர்மானத்தை எடுத்தது. ஆனால் அத்தீர்மானம் 5ஆம் திகதி இரவு தாக்குதலை ஆரம்பிப்பதென மாற்றப்பட்டது.

ஆனால் அத் தீர்மானம் மாற்றப்பட்ட தகவல் மொனறாகலைக்கு போய்ச் சேரவில்லை. எனவே தான் ஏப்.5ம் திகதி 5.20க்கு மொனறாகலை-வெல்லவாய பொலிஸ் நிலையம் முதலில் தாக்கப்பட்டது. இது ஒரே நேரத்தில் நாடு பூராவும் உள்ள பொலிஸ் நிலையங்களை தாக்கும் திட்டத்தை குழப்பியது. இதற்கிடையில் தாக்குதல் பற்றி அறிந்த பாதுகாப்புப் படையினர் உசாராயினர். ஏப்.5ம் திகதி 92 பொலிஸ் நிலையங்கள் கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டன. பல பொலிஸ் நிலையங்களை கைவிட்டு விட்டு பொலிஸார் பின்வாங்கினர். இக்கிளர்ச்சியை எதிர்கொள்ள பலமில்லாத நிலையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் உலக நாடுகளிடம் உதவி கோரியது. 


அடக்குமுறை 

இவ்வேண்டுகோளைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய படையினர் பெருமளவு ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் அனுப்பினர். 18 யுத்த பீரங்கிகளையும் 6 ஹெலிகப்டர்களையும் அமெரிக்கா வழங்கியது. எகிப்தும் பெருந்தொகையான ஆயுதங்களை வழங்கியது. இந்தியா விமான ஓட்டிகள் உள்ளிட்ட 7 விமானங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் 159 கூர்க்கா படைகளையும் அனுப்பியது. சோவியத் யூனியன் அன்டோனோவ் எனப்படும் இராட்சத விமானங்களையும் மிக்-15 ரக விமானம் ஒன்றையும் இரு ஹெலிகப்டர்களையும் சிறந்த விமான ஓட்டிகளையும் அனுப்பியது. 

எந்தவித ஈவிரக்கமுமின்றி 15,000 தொடக்கம் 20,000 வரையிலான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 40,000த்துக்கும் மேற்பட்டோர் பிடிக்கப்பட்டு சிறைச்சாலைக்கும் வதை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையை 1972 யூனிலிரு­ந்து 1974 டிசம்பர் வரை விசேட ஆணைக்குழு மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் விஜேவீர உள்ளிட்ட பலர் சிறைத் தண்டனை பெற்றனர்.

மீளுருவாக்கம். 

தண்டனை அனுபவித்து வந்தவர்களில் மூன்று பிரிவினர் இருந்தனர். அமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டு அரசியலில் இருந்து முற்றாக வெளியேறியவர்கள், தம்மால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சரியான பதில் கிடைக்காத நிலையில் மாற்று அரசியல் ஸ்தாபனத்தை கட்டியெழுப்புவதாகக் கூறி வெளியேறியவர்கள். எஞ்சிய மிகச் சொற்பமான சிலர் தத்துவார்த்த கருத்தாடலில் ஈடுபட்டு வந்தார்கள். மூன்றாவது தரப்பினர் ஜே.வி.பி.யின் அரசியலில் எந்தத் தவறுமில்லை என்ற கருத்துடையோரும், ஒருசில விடயங்களை திருத்திக் கொண்டு முன்செல்லலாம் என்ற கருத்து­டையோரும் அடங்கிய குழு. இக்குழுவே பின்னர் விஜேவீர தலைமையில் ஜே.வி.பி.யை மீளக் கட்டியெழுப்பியது. ஜே.வி.பி. சிறைக்குள்ளேயே மீளுருவாக்கம் பெற்றது. 

1977 முற்பகுதியில் பொதுத் தேர்தல் நெருங்கியதால் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜே.வி.பி. யினர் பலர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை அடைந்ததுமே ஜே.வி.பி. முதல் தடவையாக சட்டபூர்வமாக அரசியல் ஸ்தாபனமாக இயங்கத் தொடங்கியது. பதிவு செய்யப்படாததன் காரணமாக 1977ல் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டது.

1979 உள்ளூராட்சி தேர்தலின் போது அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்த போதும் அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத் தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டது. 1981 மாவட்ட சபைத் தேர்தலிலும், 1982 ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டது. ஜனாதிபதி தேர்தலின்போது ஜே.வி.பி. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தலின் மூன்றாவது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக ஜே.வி.பி. திகழ்ந்தது. ஜே.வி.பி.யின் இவ்வளர்ச்சியானது ஆளும் ஐ.தே.க.வை கலக்கமடையச் செய்த விடயமாக அமைந்தது ஆனாலும் இத் தேர்தலின் மூலம் ஜே.வி.பி.யின் பலத்தின் அதிகரிப்பை காண முடிந்ததே ஒழிய அதிகார பிரதிநிதித்துவம் வளர்ச்சி காணவில்லை. 

தடையும் தலைமறைவும் 

1983 மே தின கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தி விஜேவீர உரையாற்றியிருந்தார். 1983 யூலைக் கலவரத்தைத் தூண்டி தலைமையேற்று நடத்திய அன்றைய ஆளும் ஐ.தே.கட்சி அக்கலவரத்தின் பழியை ஜே.வி.பி. மீதும் ஏனைய இடதுசாரி கட்சிகள் மீதும் சுமத்தியது. 1983 யூலை 30 ம் திகதி ஜே.வி.பி, கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகிய மூன்றையும் 83 கலவரத்துக்கு காரணமெனக் குற்றம் சுமதி ஐ.தே.க அரசாங்கம் தடைசெய்தது. இத்தடையின் காரணமாக ஜே.வி.பி.யை தலைமறைவு அரசியலுக்குத் தள்ளியது.


இந்நியாயமற்ற தடையை நீக்கும் படி ஜனாதிபதி உட்பட சர்வதேச ஸ்தாபனங்கள் பலவற்றுக்கு வேண்டுதல் விடுக்கப்பட்ட போதும் அது சாத்தியமற்றுப் போனது. தலைமறைவு அரசியல் தற்காப்புக்கான தேவையையும் ஏற்படுத்தியது. அரசியல் அழுத்தங்களை பகிரங்கமாக செலுத்த வாய்ப்பில்லாத நிலையில் ஆயுத ரீதியான செயல்களுக்கும் வித்திட்டது. கிடைத்த தலைமறைவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிகள், குண்டுகள் தயாரித்தல், ஆயுத சேகரிப்பு என்பவற்றில் ஈடுபட்டது. அரசியல் வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தியது. 

வடக்கு கிழக்கு பிரச்சினை காரணமாக இராணுவத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்ட போது அத்தருணத்தைப் பயன்படுத்தி அமைப்பின் உறுப்பினர்களை இராணுவத்திற்குள் ஊடுருவ விட்டது. இதற்கூடாக இராணுவ பயிற்சியையே ஜே.வி.பி. பிரதான நோக்காக கொண்டிருந்தது. ஆயுத சேகரிப்புக்காக சில படை முகாம் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 1987ல் இலங்கை-இந்திய உடன்படிக்கையும் அதனைத் தொடர்ந்து வந்த இந்திய அமைதி காக்கும் படையையும் ஜே.வி.பி. வன்மையாக எதிர்த்தது. அதனை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் போக்காகக் கருதியது. தமது இராணுவ நடவடிக்கைகாக அன்று தேச பக்த மக்கள் இயக்கம் (D.J.V.P.) என்ற ஒன்றை ஜே.வி.பி. உருவாக்கியது. அதில் வேறு சில அரசியல் ஸ்தாபனங்களும் இணைந்திருந்தன. D.J.V.P. யின் பேரில் ஆயுத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை தக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம், (ஜே.ஆர், ஜே.ஆரைத் தொடர்ந்து பிரேமதாசா) அதே D.J.V.P. பேரில் அரசியல் படுகொலைகளைப் புரிந்தது. இப்படுகொலைகள் பற்றிய விபரங்கள் பட்டலந்த ஆணைக்குழு விசாரணைகளின் போது பல உண்மைகள் அம்பலமாகின.


மீண்டும் வன்முறை 

1987-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி. பயங்கரவாதம் என்னும் பெயரில் ஏறத்தாள ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் டயர்களுக்கும், ஆறுகளுக்கும், புதைகுழிகளுக்கும் பலியாகினர். அரசாங்க தகவல்களின் படி 60,000 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர் என்றே கூறப்படுகின்றது. பலர் வதைபுரியப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். 1989ல் விஜேவீரவும் பிடிக்கப்பட்டு கொலை செய்யபட்டார். மோசமான முறையில் ஒடுக்கப்பட்ட ஜே.வி.பி. மீள எழப்போவதில்லை எனப் பலர் எதிர்ப்பார்த்தனர். ஆனால் 90களின் ஆரம்பத்தில் பலர் விடுதலையாகி வந்ததும் கட்சி புனரமைக்க­ப்பட்டது. மீண்டும் பகிரங்க அரசியல் பணிகளைத் தொடங்கினர். 

மீண்டும் மீளுருவாக்கம் 

நாடெங்கிலும் சந்திரிக்கா அலையும் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்களும் நடந்து கொண்டிருந்தன. ஜே.வி.பி.யும் இலங்கை முற்போக்கு முன்னணியும் இணைந்து தேச மீட்பு முன்னணியை கட்டியெழுப்பின. இலங்கை முற்போக்கு முன்னணியின் பேரில் தேர்தலிலும் இறங்கியது. ஒரு உறுப்பினர் பதவியையும் வென்றெடுத்­தது. 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலிலும் தமது வேட்பாளரையும் நிறுத்தியது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்காகவே தாம் அத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் நீக்குவதாக சந்திரிகா வாக்குறுதி அளித்தால் தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்தது. சந்திரிகா தாம் பதவிக்கு வந்தால் 1995 ஆம் ஆண்டு யூன் 15 ம் திகதிக்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதி அளித்தார். இதனால் ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் நிஹால் கலப்பத்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

1997 உள்ளூராட்சித் தேர்தலில் 101 உறுப்பினர்களை வென்றது. 98 மாகாண சபைத் தேர்தலில் 25 உறுப்பினர்களை வென்றது. 2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேர்தலில் 10 உறுப்பினர்களை வென்றது. 2001 தேர்தலில் அது 16 ஆக உயர்ந்தது. 2004 ஆம் ஆண்டு அது 39 ஆக உயர்ந்தது. 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிட்டதில் 4 உறுப்பினர்களை மட்டுமே வெல்ல நேரிட்டது. கட்சிப் பிளவைத் தொடர்ந்து பலவீனமடைந்திருந்த நிலையில் 2015 தேர்தலில் 6 உறுப்பினர்களாக ஆனது. 2020 தேர்தலிலும் 3ஆக அது குறைந்தது. ஆனால் நான்கே ஆண்டுகளில் மீண்டும் மக்கள் சக்தியாக எழுந்து ஜாந்திபதித் தேர்தலிலும் வென்று பாராளுமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களை வென்று மொத்தம் 152 ஆசனங்களை வென்றது.


அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக 71 ஏப்ரலிலும் 87-89 இலும் கொடுக்கப்பட்ட விலைக்கு இன்று உரிய வெற்றி கிடைத்திருக்கிறது. 71 ஆயுதக் கிளர்ச்சியிலிருந்து ஜனநாயகப் பாதை வரையான கடினமான பயணம் பல வடுக்களைக் கொண்டது. பல தவறுகளையும் கொண்டது. பல சாதனைகளையும் கொண்டது. ஆனால் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் வெளியில் அதற்கேயுரிய அமைப்பை ஏற்றுக்கொண்டு லட்சிய மாற்றங்களை நிகழ்த்துவதன் சவால்களை இன்றைய ஜேவிபி அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.

"கஜபாகு கப்பல் அரோராவாக ஆகட்டும்! எடலின் சதுக்கம் ஒரு பெட்ரோகார்ட் முகாமாக ஆகட்டும்!"

என்று அன்று ஹைட்பார்க் மைதானத்தில் ஆற்றிய ஆக்ரோஷம் நிறைந்த விஜேவேரவின் உரை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கான அறைகூவல். அந்த பிரபலமான உரை ஏப்ரல் எழுச்சிக்கான பலமான வித்து. 

நன்றி - தினகரன் 06.04.2025

மகாவம்சம் எவ்வாறு உலக மரபுரிமையானது? - என்.சரவணன்

உலகிலேயே தொடர்ச்சியாக வரலாற்றைப் பதிவு செய்துவரும் இரு முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்று. முதல் நாடாக சீனாவைக் குறிப்பிடலாம் சுமார் மூவாயிரத்துக்கு அதிகமான ஆண்டுகளாக சீன இவ்வாறு வரலாற்றைப் பதிவு செய்து வருகிறது. இலங்கை 2500 வருடகாலமாக வரலாற்றைப் பாரம்பரியமாகப் பதிவு செய்துவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. 

அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன மகாவம்ச ஓலைச்சுவடிகளை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் ஒரு உலக மரபுரிமையாக 2023ஆம் ஆண்டு அறிவித்தது.

இதற்கான விண்ணப்பம் இலங்கை அரசால் தேசிய நூலக சேவைகள் சபைக்கு ஊடாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டிருந்தது. அதனை பரிசீலித்த யுனெஸ்கோ நிறுவனத்தின் சர்வதேச நடுவர்கள் மகாவம்சத்தை உலக மரபுரிமையாக அங்கீகரித்து பிரகடனப்படுத்தினார்கள்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மகாவம்சம் இப்போது அந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கி.பி. 1849ல்  குடியேற்ற நாடுகளுக்குப் பொறுப்பு வகித்த எமர்சன் டெனன்ட் (James Emerson Tennent) இலங்கையைப் பற்றிய முக்கிய நூல்களை எழுதியவர். Ceylon An Account of the Island என்கிற நூலில் இலங்கையைப் பற்றி மிக முக்கியமான இரண்டு விஷயங்களை அவர் சுட்டிக் காட்டினார். அவர் "சிங்களவர்கள் தான் உலகில் தங்கள் வரலாற்றை தொடர்ச்சியாக எழுதி வருகிறார்கள்" என்று அந்நூலில் கூறுகிறார். அடுத்ததாக, நீர்ப்பாசன தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஒரு சமூகம் உண்டென்றால் அது சிங்களவர்களாகத்தான் இருக்கும் என்றும் அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.   

இலங்கையின் வரலாற்றை உறுதிப்படுத்தும் பிரதான நூல் மகாவம்சமாகும். மகாவம்சத்தின் முதலாவது பிரதி கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு உரியது. அதுவே இன்று நம்மிடம் உள்ள மிகப் பழமையான வரலாற்றுச் சான்றாகும். மகாவம்சத்தை எழுதுவதற்கு மூலாதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக அதில் சில மூல நூல்கள் குறிப்பிடபடுகிற போதும் அவை அனைத்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மகாவம்சமே நமக்கு கிடைக்கிற பிரதான பழமையான நூலாக கொள்ளப்படுகிறது. “வம்ச” கதைகளை பதிகிற மரபொன்று அனுராதபுர ராஜ்ஜிய காலத்தில் இருந்திருக்கிறது. மகாவம்சம் எழுதப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தீபவம்சம் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. இது அனுராதபுர கால பிக்குகளால் எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றை உள்ளடக்கிய ஒரு நூலாகும். ஆனால் மகாவம்சம் தரும் விபரங்கள் அளவுக்கு அதில் இல்லை. 

மகாவம்சம் எழுதப்படுவதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னுமொரு மகாவம்சம் எழுதப்பட்டிருப்பதாக பல பதிவுகள் உள்ளன. அதை 'சிஹல அத்த கதா மகாவம்சய' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவற்றின் பிரதிகள் எதுவும் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால், அநுராதபுரம் திக்சந்த பிரிவெனாவில் வசித்து வந்த மகாநாம தேரர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சத்தை எழுதியபோது ‘சிஹல அத்த கதா மகாவம்சம்’ பயன்படுத்தப்பட்டதாக மகாவம்ச உரையில் (Tika) குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் அதிலும் மகாவம்சம் அளவுக்கு விபரங்கள் கிடையாது.

மகாவம்சம் எழுதப்பட்ட அதே காலப்பகுதியில் அபயகிரி விகாரையைச் சேர்ந்த பிக்குகளால் “உத்தர வங்ச கதா” என்கிற ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. மகாவம்சத்தை எழுதும் போது மகாநாம தேரர் இதையும் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அதுவும் இதுவரை கிடைத்ததில்லை.

இலங்கையின் புராதன ஓலைச்சுவடிகள் பல காலனித்துவ காலத்தில் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. போர்த்துக்கல், ஒல்லாந்து, ஜெர்மன், இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளில் இன்றும் இலங்கையில் கூட இல்லாத இலங்கையின் முக்கிய வரலாற்று ஆவணங்களாக கருதக் கூடிய ஓலைச்சுவடிகள் அங்குள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. 

பொலன்னறுவை காலத்தில் கலிங்க மாகன் ஆட்சி செய்த போது, பாரிய அளவிலான ஓலைச்சுவடிகளின் கட்டுக்களை அவிழ்த்து அனைத்தையும் தீயிட்டு அழித்தான் என்கிற செய்தி உண்டு. அச்சம்பவத்தின் மூலமும் ஏராளமான வரலாற்று ஆவணங்களை இழந்திருக்கிறோம். 

மகாவம்சம் எந்த மொழியில் எழுத்தப்பட்டது என்பது பற்றிய குழப்பங்களை இன்றும் சில இடங்களில் காண்கிறோம். மகாநாம தேரர் அதனை பாளி மொழி உச்சாடனத்தை சிங்கள எழுத்துக்களைப் பயன்படுத்தி  எழுதினார் என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மகாநாம தேரர் எழுதிய மகாவம்ச மூலப் பிரதிகள் இதுவரை கிடைத்ததில்லை. பிற்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மகாவம்ச பிரதிகள்; அந்த மூலப்பிரதியிலிருந்து பிரதி பண்ணப்பட்ட பிரதிகளே. அவ்வாறு படியெடுக்கப்பட்ட மிகப் பழமையான மற்றும் முழுமையான ஓலைச்சுவடியே தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருப்பதாக இனங்காணப்பட்டு அது உலக மரபுரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.   

இலங்கையில் உள்ள மகாவம்சத்தில் 2915 பாலி மொழி செய்யுள்கள் உள்ளன. 12ஆம் நூற்றாண்டில் பொலன்னறுவை மன்னன் பராக்கிரமபாகு மன்னனின் மகளை கம்போடிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அப்போது இலங்கையில் மகாவம்சத்தின் பிரதி ஒன்று கம்போடியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்நாட்டு நாட்டு மொழியில் அது எழுதப்பட்டது. இந்த மகாவம்சம் 'கம்போடிய மகாவம்சம்' என்றும் விட்டாரிக்க மகாவம்சம் என்றும் அழைக்கப்படுகிறது.  இதில் 5772 செய்யுள்கள் உள்ளன. இதற்குக் காரணம் வெவ்வேறு காலங்களில் அந்த மகாவம்சப் பிரதியில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிற விபரங்கள் எனலாம்.   

தற்போது இலங்கையில் காணப்படும் மிகப் பழமையான மகாவம்ச பிரதிகள் எனப்படுவது இரண்டாவது தொகுதியையும் உள்ளடக்கிய முதலாவது அத்தியாயத்திலிருந்து 99 வரையிலான பகுதியாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மகாவம்சத்தின் வெவ்வேறு ஏழு பிரதிகள் உள்ளன, அவற்றில் ஒன்று மிகப் பழமையான மகாவம்சமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த மகாவம்சமே உலக மரபுரிமையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மகாவம்ச நூல் மிகத் தெளிவாக ஓலைச்சுவடிகளை எழுதுவதில் தேர்ச்சிபெற்ற ஒரு மகாதேரர் ஒருவரே அப்போது நகலெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதைச்  செய்ய அவருக்கு சுமார் 15-20 ஆண்டுகள் எடுத்திருக்கும் என்று கருதக் கூடிய அளவுக்கு மிகவும் நுட்பமாக இது எழுதப்பட்டிருக்கிற பிரதி இது.

மகாநாம தேரருக்குப் பின்னர் மகாவம்சம் எழுதும் மரபு தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்திருக்கிறது. 1956 இல் அது அரசாங்கத்தின் பணியாக பொறுப்பேற்கப்பட்டு கலாசார அமைச்சினால் மகாவம்ச உருவாக்க பணியகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ச்சியாக அது எழுதப்பட்டு வருகிறது.

மகாவம்சப் பிரதியின் நம்பகத் தன்மை குறித்த கேள்விகள் பல இருந்தபோதும் மறுபுறம் அதில் உள்ள விபரங்களே வரலாற்றை மீள் கண்டுபிடிப்பதற்கும் உறுதுணையாக பிற்காலத்தில் இருந்திருக்கிறது. இலங்கையிலும், இந்தியாவிலும் நடத்தப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சிகளின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சமானது தெற்காசியாவில் ஒரு முக்கியமான வரலாற்று ஆதாரமாகும், புத்தர், அசோக சக்கரவர்த்தி, புத்த மதம் என உலகம் மதம் என பல விபரங்களை தென்னாசிய வரலாற்றுக்குத் தந்திருக்கிறது. இலங்கையர்கள் பெரும்பாலும் அதை தமது தேசத்தின் தோற்றம், பரிணாமம், என்பவற்றின் பிரதிபலிப்பாகவும் பண்பாட்டு அடையாளத்திற்கான சான்றாகவும் கருதுகிறார்கள்.

இலங்கையில் பௌத்த பண்பாட்டு மரபில் பௌத்த துறவிகளின் அன்றாடப் பணிகளாக தியானம், வாசிப்பு, எழுத்து போன்றவையே பிரதானமாக இருந்திருக்கின்றன. எனவே எழுதுதல், ஓலைச்சுவடிகளை பிரதி செய்து பரப்புதல் அதனைப் பேணிப் பாதுகாத்தல் என்பனவும் அவர்களின் கடமைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.  

இலங்கையின் வரலாற்றுக் காலத்தில் இலக்கியங்களை பனையோலைகளில் பதிவு செய்கின்ற பாரம்பரியமே நீடித்து வந்திருக்கிறது. ஆனால் பனையோலைச் சுவடியொன்றின் ஆயுட்காலம் அதிகபட்சம் 500 அல்லது 600 ஆண்டுகளே. பனையோலைச் சுவடிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை வழிவழியாக பல தடவைகள் பல நகல்களை எடுத்து ஏனைய பௌத்த ஆறாமயக்களுக்கும், விகாரைகளுக்கும் அனுப்பப்பட்டன. அதாவது இன்றுள்ள அச்சடித்து விநியோகிப்பது போன்ற பணி. இப்படியான மரபொன்று இருந்ததனாலேயே இலங்கையில் இன்றும் ஆயிரக்கணக்கான சிங்கள இலக்கியங்கள் எஞ்சியுள்ளன. மகாவம்சமும் அவ்வாறு கிடைக்கப்பெற்றவை தான்.

இன்றும் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற பல பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவ்வாறு பௌத்த, சமண, ஜைன துறவிகளால் எழுதப்பட்டு, பிரதி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டவையே. இலங்கையில் ஏன் இலக்கியங்கள், வரலாறுகள் தமிழில் சிங்களத்துக்கு நிகராக கிடைக்கவில்லை என்பதற்கான உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

எனவே, கி.பி 5 ஆம் நூற்றாண்டில் எழுதத் தொடங்கப்பட்ட மகாவம்சத்தின் பல பிரதிகள், இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புத்த விகாரைகளிலும், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் இன்னும் தப்பிப்பிழைத்து பாதுகாக்கப்படுகின்றன. அந்த வகையில் யுனெஸ்கோவுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள், மகாவம்சத்தின் அனைத்து அத்தியாயங்களையும் மற்றும் அனைத்து செய்யுள்களையும் முழுமையான, சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றாகும். இவை ஒன்றரை ஆயிரம் ஆண்டுகளாக; உரையை நகலெடுத்து மீண்டும் நகலெடுக்கும் தொடர்ச்சியான பாரம்பரியத்தின் மூலம் தப்பிப்பிழைத்துள்ளது. இவ்வோலைச்சுவடி, கே.டி.சோமதாசா நூலகராகப் பணியாற்றிய காலகட்டத்தில் (1964 - 1970) ஆராய்ச்சிக்காகவும் காப்பக நோக்கங்களுக்காகவும் வரலாற்று கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தால் கையகப்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம்

“மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அதுமுதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

2வது தொகுதி கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்கிறது. அது மூன்று பாகங்களைக் கொண்டது.

1. முதலாவது பாகம் - மன்னர் கித்சிரிமேவன் அரசரின் காலம் தொடக்கம் மகாபராக்கிரமபாகுவின் காலம் (302-1186) வரையான 884 ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. மொத்தம் 42 அத்தியாயங்களைக் கொண்டது அது.

2. இரண்டாவது பாகம் – 1186-1357 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஸ்ரீ ஐந்தாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலம் வரை 171 வருட காலத்தைப் பதிவு செய்கிறது.

3. மூன்றாவது பாகம் – 1357-1815 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலப்பகுதிவரை 441ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. ஆட்சி முழுமையாக அந்நியர் கைகளில் சிக்கும் வரையான காலப்பகுதி இது.

மகாவம்சம் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய அறிஞர்களினதும் பொது வாசகர்களின் கவனத்திற்கும் முதன்முதலில் வந்தபோது, மகாவம்சம் குறித்த ஆர்வம் பரவலாக எழுந்தது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் சிவில் அதிகாரியாக இருந்தவரும் வரலாற்றாசிரியருமான ஜோர்ஜ் டேர்னர் தென்னிலங்கையில் உள்ள முல்கிரிகலவில் அமைந்திருந்த ஒரு புத்த விகாரையிலிருந்து மகாவம்சத்தின் (முதல் பகுதி) பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடித்தார். இலங்கையின் பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன், அக்கையெழுத்துப் பிரதியை ஐரோப்பாவிற்கு வெளியீட்டிற்காக அனுப்பினார். யூஜின் பர்னூஃப் ஆரம்பத்தில் ரோமானியமயமாக்கப்பட்ட ஒலிபெயர்ப்பை உருவாக்கி பின்னர் அதை 1826 இல் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். ஆனால் இவை ஒப்பீட்டளவில் சிறிய கவனத்தையே பெற்றன.

பின்னர் கண்டெடுக்கப்பட்ட மூல கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பணியாற்றி, எட்வர்ட் உப்ஹாம் 1833 இல் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பு விளக்கத்தில் பல பிழைகள் காணப்பட்டன. எனவே முதலில் அச்சிடப்பட்ட பதிப்பாகவும் பரவலாக வாசிக்கப்பட்ட ஆங்கிலம் மொழிபெயர்ப்பு பிரதியானது 1837 ஆம் ஆண்டு ஜார்ஜ் டேர்னர் வெளியிட்ட பிரதியே.

வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிள்ளையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜோர்ஜ் டர்னர் 1811 இல் இங்கிலாந்தில் மேற்கல்விக்காக சென்று அவர் 1820 இல் இலங்கை திரும்பும்போது இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசமாகியிருந்தது. அவர் இலங்கை திரும்பியதும் ஒரு சிவில் அதிகாரியாக பதவியேற்றார். ஆங்கிலேயர்களால் அப்போது கண்டி கைப்பற்றப்பட்ட்பின்னர் அப்பிரதேசத்தைப் பரிபாலிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களில் ஒருவராக டர்னர் சில காலம் கடமையாற்றினார். பின்னர் அவர் சப்பிரகமுவாவுக்கு அரசாங்க அதிபராக நியமனம் பெற்றார். அங்கு பணியாற்றியபோது அவர் முழுமூச்சாக பாளி, சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்றார். அதன் பின்னர் கண்டி அரசாங் ஆதிபராக பொறுப்பேற்றார். அங்கிருந்தபோது மகாவம்சத்தின் முதலாவது தொகுதியைக் கண்டெடுத்து அவற்றைத் தொகுத்து அதன் செய்யுள் தொகுதியாக கொள்ளப்படும் வங்சத்தப்பகாசினி தொகுதிகளையும் சேகரித்துக்கொண்டு அவற்றை ஒழுங்ககமைத்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டார். அது முதலாவது தடவை 1836 ஆம் ஆண்டு கோட்டை கிறிஸ்தவ அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன்போது அவருக்கு கண்டி அஸ்கிரிய மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குமார் ஒத்துழைத்திருக்கின்றனர். இதே காலத்தில் அவர் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியையும் மொழிபெயர்க்க முயற்சித்த போதும் அவருக்கு அன்று இருந்த பாளி மொழிப் புலமை போதாது என உணர்ந்துகொண்டார்.

1866 இல் பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவரக்சித்த பண்டிதர் மகாவம்சத்தின் இரண்டாம் பாகத்தை தொகுத்து வெளியிட 1871 ஆம் ஆண்டு அன்றைய தேசாதிபதி ரொபின்சன் ஆதரவளித்தார். தேசாதிபதியின் அனுமதியும் ஆதரவும் இருந்தபோதும் அவர் அதே ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததால் இந்தப் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. ஆனால் 1872 இல் புதிய தேசாதிபதியாக நியமனமான கிரகெரி டர்னரின் மகாவம்சப் பிரதியைப் பார்த்து வியந்ததுடன் இரண்டாம் தொகுதியை மொழிபெயர்க்கும் பணியை 1874 இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடமும், பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவ ரக்சித்த பண்டிதரிடமும் ஒப்படைத்தார்.

இவர்கள் இருவரும் இதற்கான மூல நூல்களைத் தொகுப்பதற்காக சத்கோறளை ரிதி விகாரை, செங்கடகல நுவர, கிருவாயே முல்கிரிய, மாத்தறை, காலி, பெந்தோட்டை, பாணந்துறை, சல்பிடிகோறளை போன்ற பிரதேசங்களில் இருந்த புராதன விகாரைகளில் பாதுகாக்கப்பட்டுவந்த பதினோரு மகாவம்சப் பிரதிகளை கண்டுபிடித்தனர். அவற்றை அவர்கள் முறையாக சரிபார்த்து தொகுத்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்து இரண்டாம் பாகமாக வெளியிட்டதுடன், அவர்கள் டர்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த மகாவம்சத்தின் முதலாம் பாகத்தையும் ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்து முடித்தனர். ஆக மகாவம்சத்தின் முதலாவது தொகுதியும், இரண்டாவது தொகுதியும் ஒரே காலத்தில் சிங்களத்தில் முதன்முதலில் வெளியானது.

மகாவம்சத்தின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு 1905 ஆம் ஆண்டு “தீபவம்சம், மகாவம்சம்” (Depavamsa und Mahavamsa) என்கிற தலைப்பில் வெளிவந்தது. அப்பிரதியை ஆங்கிலத்தில் முதற் தடவை மொழிபெயர்த்தவர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமியின் மனைவி எதேல் குமாரசுவாமி. 1908 ஆண்டு அப்பதிப்பு  வெளிவந்தது. துரதிர்ஷ்டவசமாக மகாவம்சத்தின் ஆக்கவரலாறு பற்றி பேசுபவர்கள் எவருமே எதேல் குமாரசுவாமியை பதிவு செய்ய மறந்துவிடுகிறார்கள்.

5ஆம் நூற்றாண்டில் மகாவம்சம் எழுதப்பட்டபோதும் அது அதற்கு முன்னைய சுமார் பத்து நூற்றாண்டு கால வரலாற்றைப் பதிவு செய்கிறது. அதற்கான மூலாதரங்களாக அதற்கும் முந்திய தீபவம்சம் போன்ற வரலாற்று ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படிப் பாருக்கும் போது முறிவடையாமல் தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக எழுதப்பட்டு வந்த வரலாற்று மரபுக்கு சான்றாக இலங்கை இருந்து வருகிறது.

பௌத்த மதப் பரவல், இலங்கையில் புத்தரின் வகிபாகம், அசோகனின் பணிகள், இலங்கை அரசர்கள் பௌத்தத்துக்கு ஆரிய பங்களிப்பு என்பன பதிவு பெற்றிருப்பதால் மகாவம்சம் பௌத்த செல்வாக்குள்ள ஆசிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் காரணமாக இந்த நாடுகளிலும் மகாவம்சம் மொழிபெயர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மகாவம்சத்தை மேலும் விரிவாக்கி இலங்கையில் கூட இல்லாத மேலதிக தகவல்களுடன் கம்போடியாவில் வெளியான ஒரு மகாவம்சம் கூட உண்டு. அதற்கு “கம்போடிய மகாவம்சம்” என்று அழைக்கிறார்கள்.

"உலகின் மிக நீண்ட – இடையறாத வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றான மகாவம்சம் ஒரு முதிர்ச்சியடைந்த வரலாற்று மரபைத் தொடக்கி, கி.மு.  6 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் வரலாற்றை காலவரிசைப்படி  தந்திருக்கிறது. தெற்காசியாவில் அத்தகைய முதலாவது வரலாற்றுப் பதிவாக அது திகழ்கிறது.” என்று உலக மரபுரிமையாக மகாவம்சத்தை யுனெஸ்கோ 2023 இல் பிரகடனப்படுத்திய போது அறிவித்தது.

எவ்வாறிருந்த போதும் இங்கு “மூலப்பிரதி” என்கிற ஒன்று கிடையாது என்கிற முடிவுக்கே வர முடியும். முழுமையானது என்று எதுவும் இல்லை. திரிபு இல்லாதது எதுவும் இல்லை ஈற்றில் உண்மையானது என்றும் ஒன்று இல்லை.

ஆனால் மகாவம்சம் ஈழத்தீவில் இன்றும் பெரும் அரசியலை நிகழ்த்தி வருகிறது.

நன்றி - தினகரன். 30.04.2025

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates