Headlines News :
முகப்பு » , , , » மகாவம்சம் எவ்வாறு உலக மரபுரிமையானது? - என்.சரவணன்

மகாவம்சம் எவ்வாறு உலக மரபுரிமையானது? - என்.சரவணன்

உலகிலேயே தொடர்ச்சியாக வரலாற்றைப் பதிவு செய்துவரும் இரு முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்று. முதல் நாடாக சீனாவைக் குறிப்பிடலாம் சுமார் மூவாயிரத்துக்கு அதிகமான ஆண்டுகளாக சீன இவ்வாறு வரலாற்றைப் பதிவு செய்து வருகிறது. இலங்கை 2500 வருடகாலமாக வரலாற்றைப் பாரம்பரியமாகப் பதிவு செய்துவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. 

அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன மகாவம்ச ஓலைச்சுவடிகளை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் ஒரு உலக மரபுரிமையாக 2023ஆம் ஆண்டு அறிவித்தது.

இதற்கான விண்ணப்பம் இலங்கை அரசால் தேசிய நூலக சேவைகள் சபைக்கு ஊடாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டிருந்தது. அதனை பரிசீலித்த யுனெஸ்கோ நிறுவனத்தின் சர்வதேச நடுவர்கள் மகாவம்சத்தை உலக மரபுரிமையாக அங்கீகரித்து பிரகடனப்படுத்தினார்கள்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மகாவம்சம் இப்போது அந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கி.பி. 1849ல்  குடியேற்ற நாடுகளுக்குப் பொறுப்பு வகித்த எமர்சன் டெனன்ட் (James Emerson Tennent) இலங்கையைப் பற்றிய முக்கிய நூல்களை எழுதியவர். Ceylon An Account of the Island என்கிற நூலில் இலங்கையைப் பற்றி மிக முக்கியமான இரண்டு விஷயங்களை அவர் சுட்டிக் காட்டினார். அவர் "சிங்களவர்கள் தான் உலகில் தங்கள் வரலாற்றை தொடர்ச்சியாக எழுதி வருகிறார்கள்" என்று அந்நூலில் கூறுகிறார். அடுத்ததாக, நீர்ப்பாசன தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஒரு சமூகம் உண்டென்றால் அது சிங்களவர்களாகத்தான் இருக்கும் என்றும் அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.   

இலங்கையின் வரலாற்றை உறுதிப்படுத்தும் பிரதான நூல் மகாவம்சமாகும். மகாவம்சத்தின் முதலாவது பிரதி கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு உரியது. அதுவே இன்று நம்மிடம் உள்ள மிகப் பழமையான வரலாற்றுச் சான்றாகும். மகாவம்சத்தை எழுதுவதற்கு மூலாதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக அதில் சில மூல நூல்கள் குறிப்பிடபடுகிற போதும் அவை அனைத்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மகாவம்சமே நமக்கு கிடைக்கிற பிரதான பழமையான நூலாக கொள்ளப்படுகிறது. “வம்ச” கதைகளை பதிகிற மரபொன்று அனுராதபுர ராஜ்ஜிய காலத்தில் இருந்திருக்கிறது. மகாவம்சம் எழுதப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தீபவம்சம் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. இது அனுராதபுர கால பிக்குகளால் எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றை உள்ளடக்கிய ஒரு நூலாகும். ஆனால் மகாவம்சம் தரும் விபரங்கள் அளவுக்கு அதில் இல்லை. 

மகாவம்சம் எழுதப்படுவதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னுமொரு மகாவம்சம் எழுதப்பட்டிருப்பதாக பல பதிவுகள் உள்ளன. அதை 'சிஹல அத்த கதா மகாவம்சய' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவற்றின் பிரதிகள் எதுவும் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால், அநுராதபுரம் திக்சந்த பிரிவெனாவில் வசித்து வந்த மகாநாம தேரர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சத்தை எழுதியபோது ‘சிஹல அத்த கதா மகாவம்சம்’ பயன்படுத்தப்பட்டதாக மகாவம்ச உரையில் (Tika) குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் அதிலும் மகாவம்சம் அளவுக்கு விபரங்கள் கிடையாது.

மகாவம்சம் எழுதப்பட்ட அதே காலப்பகுதியில் அபயகிரி விகாரையைச் சேர்ந்த பிக்குகளால் “உத்தர வங்ச கதா” என்கிற ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. மகாவம்சத்தை எழுதும் போது மகாநாம தேரர் இதையும் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அதுவும் இதுவரை கிடைத்ததில்லை.

இலங்கையின் புராதன ஓலைச்சுவடிகள் பல காலனித்துவ காலத்தில் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. போர்த்துக்கல், ஒல்லாந்து, ஜெர்மன், இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளில் இன்றும் இலங்கையில் கூட இல்லாத இலங்கையின் முக்கிய வரலாற்று ஆவணங்களாக கருதக் கூடிய ஓலைச்சுவடிகள் அங்குள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. 

பொலன்னறுவை காலத்தில் கலிங்க மாகன் ஆட்சி செய்த போது, பாரிய அளவிலான ஓலைச்சுவடிகளின் கட்டுக்களை அவிழ்த்து அனைத்தையும் தீயிட்டு அழித்தான் என்கிற செய்தி உண்டு. அச்சம்பவத்தின் மூலமும் ஏராளமான வரலாற்று ஆவணங்களை இழந்திருக்கிறோம். 

மகாவம்சம் எந்த மொழியில் எழுத்தப்பட்டது என்பது பற்றிய குழப்பங்களை இன்றும் சில இடங்களில் காண்கிறோம். மகாநாம தேரர் அதனை பாளி மொழி உச்சாடனத்தை சிங்கள எழுத்துக்களைப் பயன்படுத்தி  எழுதினார் என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மகாநாம தேரர் எழுதிய மகாவம்ச மூலப் பிரதிகள் இதுவரை கிடைத்ததில்லை. பிற்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மகாவம்ச பிரதிகள்; அந்த மூலப்பிரதியிலிருந்து பிரதி பண்ணப்பட்ட பிரதிகளே. அவ்வாறு படியெடுக்கப்பட்ட மிகப் பழமையான மற்றும் முழுமையான ஓலைச்சுவடியே தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருப்பதாக இனங்காணப்பட்டு அது உலக மரபுரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.   

இலங்கையில் உள்ள மகாவம்சத்தில் 2915 பாலி மொழி செய்யுள்கள் உள்ளன. 12ஆம் நூற்றாண்டில் பொலன்னறுவை மன்னன் பராக்கிரமபாகு மன்னனின் மகளை கம்போடிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அப்போது இலங்கையில் மகாவம்சத்தின் பிரதி ஒன்று கம்போடியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்நாட்டு நாட்டு மொழியில் அது எழுதப்பட்டது. இந்த மகாவம்சம் 'கம்போடிய மகாவம்சம்' என்றும் விட்டாரிக்க மகாவம்சம் என்றும் அழைக்கப்படுகிறது.  இதில் 5772 செய்யுள்கள் உள்ளன. இதற்குக் காரணம் வெவ்வேறு காலங்களில் அந்த மகாவம்சப் பிரதியில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிற விபரங்கள் எனலாம்.   

தற்போது இலங்கையில் காணப்படும் மிகப் பழமையான மகாவம்ச பிரதிகள் எனப்படுவது இரண்டாவது தொகுதியையும் உள்ளடக்கிய முதலாவது அத்தியாயத்திலிருந்து 99 வரையிலான பகுதியாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மகாவம்சத்தின் வெவ்வேறு ஏழு பிரதிகள் உள்ளன, அவற்றில் ஒன்று மிகப் பழமையான மகாவம்சமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த மகாவம்சமே உலக மரபுரிமையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மகாவம்ச நூல் மிகத் தெளிவாக ஓலைச்சுவடிகளை எழுதுவதில் தேர்ச்சிபெற்ற ஒரு மகாதேரர் ஒருவரே அப்போது நகலெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதைச்  செய்ய அவருக்கு சுமார் 15-20 ஆண்டுகள் எடுத்திருக்கும் என்று கருதக் கூடிய அளவுக்கு மிகவும் நுட்பமாக இது எழுதப்பட்டிருக்கிற பிரதி இது.

மகாநாம தேரருக்குப் பின்னர் மகாவம்சம் எழுதும் மரபு தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்திருக்கிறது. 1956 இல் அது அரசாங்கத்தின் பணியாக பொறுப்பேற்கப்பட்டு கலாசார அமைச்சினால் மகாவம்ச உருவாக்க பணியகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ச்சியாக அது எழுதப்பட்டு வருகிறது.

மகாவம்சப் பிரதியின் நம்பகத் தன்மை குறித்த கேள்விகள் பல இருந்தபோதும் மறுபுறம் அதில் உள்ள விபரங்களே வரலாற்றை மீள் கண்டுபிடிப்பதற்கும் உறுதுணையாக பிற்காலத்தில் இருந்திருக்கிறது. இலங்கையிலும், இந்தியாவிலும் நடத்தப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சிகளின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சமானது தெற்காசியாவில் ஒரு முக்கியமான வரலாற்று ஆதாரமாகும், புத்தர், அசோக சக்கரவர்த்தி, புத்த மதம் என உலகம் மதம் என பல விபரங்களை தென்னாசிய வரலாற்றுக்குத் தந்திருக்கிறது. இலங்கையர்கள் பெரும்பாலும் அதை தமது தேசத்தின் தோற்றம், பரிணாமம், என்பவற்றின் பிரதிபலிப்பாகவும் பண்பாட்டு அடையாளத்திற்கான சான்றாகவும் கருதுகிறார்கள்.

இலங்கையில் பௌத்த பண்பாட்டு மரபில் பௌத்த துறவிகளின் அன்றாடப் பணிகளாக தியானம், வாசிப்பு, எழுத்து போன்றவையே பிரதானமாக இருந்திருக்கின்றன. எனவே எழுதுதல், ஓலைச்சுவடிகளை பிரதி செய்து பரப்புதல் அதனைப் பேணிப் பாதுகாத்தல் என்பனவும் அவர்களின் கடமைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.  

இலங்கையின் வரலாற்றுக் காலத்தில் இலக்கியங்களை பனையோலைகளில் பதிவு செய்கின்ற பாரம்பரியமே நீடித்து வந்திருக்கிறது. ஆனால் பனையோலைச் சுவடியொன்றின் ஆயுட்காலம் அதிகபட்சம் 500 அல்லது 600 ஆண்டுகளே. பனையோலைச் சுவடிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை வழிவழியாக பல தடவைகள் பல நகல்களை எடுத்து ஏனைய பௌத்த ஆறாமயக்களுக்கும், விகாரைகளுக்கும் அனுப்பப்பட்டன. அதாவது இன்றுள்ள அச்சடித்து விநியோகிப்பது போன்ற பணி. இப்படியான மரபொன்று இருந்ததனாலேயே இலங்கையில் இன்றும் ஆயிரக்கணக்கான சிங்கள இலக்கியங்கள் எஞ்சியுள்ளன. மகாவம்சமும் அவ்வாறு கிடைக்கப்பெற்றவை தான்.

இன்றும் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற பல பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவ்வாறு பௌத்த, சமண, ஜைன துறவிகளால் எழுதப்பட்டு, பிரதி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டவையே. இலங்கையில் ஏன் இலக்கியங்கள், வரலாறுகள் தமிழில் சிங்களத்துக்கு நிகராக கிடைக்கவில்லை என்பதற்கான உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

எனவே, கி.பி 5 ஆம் நூற்றாண்டில் எழுதத் தொடங்கப்பட்ட மகாவம்சத்தின் பல பிரதிகள், இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புத்த விகாரைகளிலும், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் இன்னும் தப்பிப்பிழைத்து பாதுகாக்கப்படுகின்றன. அந்த வகையில் யுனெஸ்கோவுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள், மகாவம்சத்தின் அனைத்து அத்தியாயங்களையும் மற்றும் அனைத்து செய்யுள்களையும் முழுமையான, சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றாகும். இவை ஒன்றரை ஆயிரம் ஆண்டுகளாக; உரையை நகலெடுத்து மீண்டும் நகலெடுக்கும் தொடர்ச்சியான பாரம்பரியத்தின் மூலம் தப்பிப்பிழைத்துள்ளது. இவ்வோலைச்சுவடி, கே.டி.சோமதாசா நூலகராகப் பணியாற்றிய காலகட்டத்தில் (1964 - 1970) ஆராய்ச்சிக்காகவும் காப்பக நோக்கங்களுக்காகவும் வரலாற்று கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தால் கையகப்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம்

“மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அதுமுதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

2வது தொகுதி கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்கிறது. அது மூன்று பாகங்களைக் கொண்டது.

1. முதலாவது பாகம் - மன்னர் கித்சிரிமேவன் அரசரின் காலம் தொடக்கம் மகாபராக்கிரமபாகுவின் காலம் (302-1186) வரையான 884 ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. மொத்தம் 42 அத்தியாயங்களைக் கொண்டது அது.

2. இரண்டாவது பாகம் – 1186-1357 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஸ்ரீ ஐந்தாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலம் வரை 171 வருட காலத்தைப் பதிவு செய்கிறது.

3. மூன்றாவது பாகம் – 1357-1815 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலப்பகுதிவரை 441ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. ஆட்சி முழுமையாக அந்நியர் கைகளில் சிக்கும் வரையான காலப்பகுதி இது.

மகாவம்சம் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய அறிஞர்களினதும் பொது வாசகர்களின் கவனத்திற்கும் முதன்முதலில் வந்தபோது, மகாவம்சம் குறித்த ஆர்வம் பரவலாக எழுந்தது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் சிவில் அதிகாரியாக இருந்தவரும் வரலாற்றாசிரியருமான ஜோர்ஜ் டேர்னர் தென்னிலங்கையில் உள்ள முல்கிரிகலவில் அமைந்திருந்த ஒரு புத்த விகாரையிலிருந்து மகாவம்சத்தின் (முதல் பகுதி) பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடித்தார். இலங்கையின் பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன், அக்கையெழுத்துப் பிரதியை ஐரோப்பாவிற்கு வெளியீட்டிற்காக அனுப்பினார். யூஜின் பர்னூஃப் ஆரம்பத்தில் ரோமானியமயமாக்கப்பட்ட ஒலிபெயர்ப்பை உருவாக்கி பின்னர் அதை 1826 இல் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். ஆனால் இவை ஒப்பீட்டளவில் சிறிய கவனத்தையே பெற்றன.

பின்னர் கண்டெடுக்கப்பட்ட மூல கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பணியாற்றி, எட்வர்ட் உப்ஹாம் 1833 இல் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பு விளக்கத்தில் பல பிழைகள் காணப்பட்டன. எனவே முதலில் அச்சிடப்பட்ட பதிப்பாகவும் பரவலாக வாசிக்கப்பட்ட ஆங்கிலம் மொழிபெயர்ப்பு பிரதியானது 1837 ஆம் ஆண்டு ஜார்ஜ் டேர்னர் வெளியிட்ட பிரதியே.

வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிள்ளையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜோர்ஜ் டர்னர் 1811 இல் இங்கிலாந்தில் மேற்கல்விக்காக சென்று அவர் 1820 இல் இலங்கை திரும்பும்போது இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசமாகியிருந்தது. அவர் இலங்கை திரும்பியதும் ஒரு சிவில் அதிகாரியாக பதவியேற்றார். ஆங்கிலேயர்களால் அப்போது கண்டி கைப்பற்றப்பட்ட்பின்னர் அப்பிரதேசத்தைப் பரிபாலிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களில் ஒருவராக டர்னர் சில காலம் கடமையாற்றினார். பின்னர் அவர் சப்பிரகமுவாவுக்கு அரசாங்க அதிபராக நியமனம் பெற்றார். அங்கு பணியாற்றியபோது அவர் முழுமூச்சாக பாளி, சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்றார். அதன் பின்னர் கண்டி அரசாங் ஆதிபராக பொறுப்பேற்றார். அங்கிருந்தபோது மகாவம்சத்தின் முதலாவது தொகுதியைக் கண்டெடுத்து அவற்றைத் தொகுத்து அதன் செய்யுள் தொகுதியாக கொள்ளப்படும் வங்சத்தப்பகாசினி தொகுதிகளையும் சேகரித்துக்கொண்டு அவற்றை ஒழுங்ககமைத்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டார். அது முதலாவது தடவை 1836 ஆம் ஆண்டு கோட்டை கிறிஸ்தவ அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன்போது அவருக்கு கண்டி அஸ்கிரிய மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குமார் ஒத்துழைத்திருக்கின்றனர். இதே காலத்தில் அவர் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியையும் மொழிபெயர்க்க முயற்சித்த போதும் அவருக்கு அன்று இருந்த பாளி மொழிப் புலமை போதாது என உணர்ந்துகொண்டார்.

1866 இல் பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவரக்சித்த பண்டிதர் மகாவம்சத்தின் இரண்டாம் பாகத்தை தொகுத்து வெளியிட 1871 ஆம் ஆண்டு அன்றைய தேசாதிபதி ரொபின்சன் ஆதரவளித்தார். தேசாதிபதியின் அனுமதியும் ஆதரவும் இருந்தபோதும் அவர் அதே ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததால் இந்தப் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. ஆனால் 1872 இல் புதிய தேசாதிபதியாக நியமனமான கிரகெரி டர்னரின் மகாவம்சப் பிரதியைப் பார்த்து வியந்ததுடன் இரண்டாம் தொகுதியை மொழிபெயர்க்கும் பணியை 1874 இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடமும், பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவ ரக்சித்த பண்டிதரிடமும் ஒப்படைத்தார்.

இவர்கள் இருவரும் இதற்கான மூல நூல்களைத் தொகுப்பதற்காக சத்கோறளை ரிதி விகாரை, செங்கடகல நுவர, கிருவாயே முல்கிரிய, மாத்தறை, காலி, பெந்தோட்டை, பாணந்துறை, சல்பிடிகோறளை போன்ற பிரதேசங்களில் இருந்த புராதன விகாரைகளில் பாதுகாக்கப்பட்டுவந்த பதினோரு மகாவம்சப் பிரதிகளை கண்டுபிடித்தனர். அவற்றை அவர்கள் முறையாக சரிபார்த்து தொகுத்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்து இரண்டாம் பாகமாக வெளியிட்டதுடன், அவர்கள் டர்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த மகாவம்சத்தின் முதலாம் பாகத்தையும் ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்து முடித்தனர். ஆக மகாவம்சத்தின் முதலாவது தொகுதியும், இரண்டாவது தொகுதியும் ஒரே காலத்தில் சிங்களத்தில் முதன்முதலில் வெளியானது.

மகாவம்சத்தின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு 1905 ஆம் ஆண்டு “தீபவம்சம், மகாவம்சம்” (Depavamsa und Mahavamsa) என்கிற தலைப்பில் வெளிவந்தது. அப்பிரதியை ஆங்கிலத்தில் முதற் தடவை மொழிபெயர்த்தவர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமியின் மனைவி எதேல் குமாரசுவாமி. 1908 ஆண்டு அப்பதிப்பு  வெளிவந்தது. துரதிர்ஷ்டவசமாக மகாவம்சத்தின் ஆக்கவரலாறு பற்றி பேசுபவர்கள் எவருமே எதேல் குமாரசுவாமியை பதிவு செய்ய மறந்துவிடுகிறார்கள்.

5ஆம் நூற்றாண்டில் மகாவம்சம் எழுதப்பட்டபோதும் அது அதற்கு முன்னைய சுமார் பத்து நூற்றாண்டு கால வரலாற்றைப் பதிவு செய்கிறது. அதற்கான மூலாதரங்களாக அதற்கும் முந்திய தீபவம்சம் போன்ற வரலாற்று ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படிப் பாருக்கும் போது முறிவடையாமல் தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக எழுதப்பட்டு வந்த வரலாற்று மரபுக்கு சான்றாக இலங்கை இருந்து வருகிறது.

பௌத்த மதப் பரவல், இலங்கையில் புத்தரின் வகிபாகம், அசோகனின் பணிகள், இலங்கை அரசர்கள் பௌத்தத்துக்கு ஆரிய பங்களிப்பு என்பன பதிவு பெற்றிருப்பதால் மகாவம்சம் பௌத்த செல்வாக்குள்ள ஆசிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் காரணமாக இந்த நாடுகளிலும் மகாவம்சம் மொழிபெயர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மகாவம்சத்தை மேலும் விரிவாக்கி இலங்கையில் கூட இல்லாத மேலதிக தகவல்களுடன் கம்போடியாவில் வெளியான ஒரு மகாவம்சம் கூட உண்டு. அதற்கு “கம்போடிய மகாவம்சம்” என்று அழைக்கிறார்கள்.

"உலகின் மிக நீண்ட – இடையறாத வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றான மகாவம்சம் ஒரு முதிர்ச்சியடைந்த வரலாற்று மரபைத் தொடக்கி, கி.மு.  6 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் வரலாற்றை காலவரிசைப்படி  தந்திருக்கிறது. தெற்காசியாவில் அத்தகைய முதலாவது வரலாற்றுப் பதிவாக அது திகழ்கிறது.” என்று உலக மரபுரிமையாக மகாவம்சத்தை யுனெஸ்கோ 2023 இல் பிரகடனப்படுத்திய போது அறிவித்தது.

எவ்வாறிருந்த போதும் இங்கு “மூலப்பிரதி” என்கிற ஒன்று கிடையாது என்கிற முடிவுக்கே வர முடியும். முழுமையானது என்று எதுவும் இல்லை. திரிபு இல்லாதது எதுவும் இல்லை ஈற்றில் உண்மையானது என்றும் ஒன்று இல்லை.

ஆனால் மகாவம்சம் ஈழத்தீவில் இன்றும் பெரும் அரசியலை நிகழ்த்தி வருகிறது.

நன்றி - தினகரன். 30.04.2025

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates