Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மகாவம்சத்தின் 6வது தொகுதி – (1978-2010) குறித்து அதன் தலைவி பேரா. மாலனி எந்தகம, பேரா.சி.பத்மநாதன்

 

மகாவம்சத்தின் 6வது தொகுதியில் உள்ள தமிழர் விரோதப் போக்குகள் குறித்து ஆராய்கிறபோது அதை ஆக்கியவர்களைப் பற்றியும், ஆக்கியவர்களின் தரப்பு கருத்துக்களையும் அறிவதே தார்மீக பொறுப்பு. மேலும் அதுவே ஆய்வு முறையியலுக்கு உகந்த அறிவியல் மார்க்கமும் கூட.

6வது மகாவம்ச தொகுதிக்கான குழுவின் தலைவியாக செயல்பட்டவரும், சுமார் 45 வருடகால மகாவம்ச எழுத்தாக்கத்தில் ஈடுபட்டுவருபவருமான பேராசிரியர் மாலனி எந்தகமவின் நேர்காணலை இங்கே பதிவிடுகிறோம். நூறுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட இந்த மகாவம்ச குழுவுக்கு தலைவராக இருப்பவர் இலங்கையின் தொல்லியல் சக்கரவர்த்தி என்று கொண்டாடப்படும் பேராசிரியர் எல்லாவல மெத்தானந்த தேரர். இன்று தமிழர் பிரதேசங்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தொல்லியல் போரின் சிருஷ்டியாகவும், வழிகாட்டியாகவும் அவரைக் கூறலாம். அவரின் தலைமையில் வெளியான மகாவம்சம் எப்பேர்பட்ட ஒன்றாக இருக்கக் கூடும் என்பதை நாம் கணிக்கலாம். அவர் தற்போது சுகவீனமுற்றிருப்பதால் அவரின் பணியையும் சேர்த்து ஆற்றி வருபவர் மகாவம்சம் 6 வது தொகுதியாக்கக் குழுவின் செயலாளரான பேராசிரியர் மாலனி எந்தகம.

மகாவம்சத்தின் 5ஆம் தொகுதியிலும் அங்கம் வகித்தவர் மாலனி எந்தகம. 1956 ஆம் ஆண்டிலிருந்து 1978 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை பதிவு செய்த 5வது தொகுதியை எழுதுவதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன குழுவை அமைத்த வேளை அதன் ஆக்கக் குழுவில் பணியாற்றியவர். பின்னர் 6வது மகாவம்ச ஆக்கக்குழுவை தலைமையேற்று வழிநடத்தியவர். அவர் ஒரு சிரேஷ்ட வரலாற்று அறிஞராக கருதப்படுவதால் அவரை பயங்கரவாதம் பற்றிய குழுவில் சேர்த்துக்கொண்டதாகத் தெரிகிறது. சிங்களத்தில் பல வரலாற்று நூல்களை எழுதியிருப்பவர். அவரின் நூல்கள் பாடப்புத்தகங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகாவம்சம் தொடர்பிலான அறிஞராக கருதப்படுவதால் மகாவம்சம் பற்றிய பல்வேறு உரையாடல்களுக்கும் அழைக்கப்படுபவர். அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தினால் அமைக்கப்பட்ட பௌத்த உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளராக இயங்கியவர்.

அவரின் சிங்கள பௌத்த தேசியவாத சார்புப் பின்புலம்; அவர் பக்கசார்பான போக்குக்கு தலைமையேற்றிருக்கிறார் என்றே விமர்சிக்க முடிகிறது. இதனை அவர் நேர்காணலில் கொடுக்கின்ற பதில்களில் இருந்து உறுதி செய்து கொள்ளவும் முடியும்.

சுமார் ஒரு வருடத்துக்கும் மேல் காத்திருந்து பேராசிரியர் மாலனி எந்தகம அவர்களுடன் 15.05.2023 ஒரு பின்னேரப் பொழுது வட்ஸ்அப் மூலம் தொலைவழியில் மேற்கொண்ட உரையாடல் இது. அவரின் கருத்து நமது இந்த ஆய்வுகளுக்கு மிகவும் அவசியமான விளக்கங்களைத் தருவதுடன் பல முடிச்சுகளையும் அவிழ்க்கின்றன. இந்த நேர்காணலுக்கு முன்னர் அவர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறிய விபரங்கள் நாம் கவனிக்க வேண்டிய பல விடயங்கள் இருந்தன. அதனை அடியாகக் கொண்டே அவரிடம் பின்னர் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமன்றி அவர் இந்த நேர்காணல்களில் பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் பற்றி குறிப்பிட்ட விபரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தியதால் இறுதியில் அவரிடமும் இக்கருத்துக்களின் மீதான எதிர்வினைகளை நேர்காணலாக பெற்றுக்கொண்டேன். அதுவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நவீன மகாவம்ச உருவாக்கம் பற்றி?

1936 வரையான மகாவம்சம் மூன்று தொகுதிகளாக அதுவரை எழுதப்பட்டிருந்தது. அதுவரை காலம் பௌத்த பிக்குகளால் எழுதப்பட்டுவந்த மகாவசத் தொடர் தொகுதிகள் அதற்குப் பின்னர் மகாவசமத்தை உருவாக்கும் குழுவொன்றை அரசு நியமித்து அதற்கு ஊடாக இவை மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பொறுப்பை கலாசார அமைச்சின் கீழ் இயங்கிய கலாசார திணைக்களமே மேற்கொண்டது. இவ்வாறு நான்காவது தொகுதி 1936 தொடக்கம் 1956 வரை மேற்கொள்ளப்பட்டது. 1956ஆம் ஆண்டு தான் முதன்முதலில் கலாசார அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தன பதவிக்கு வந்த போது; முன்னர் எழுதப்பட்டுவந்த மகாவம்சத்தை ஏன் தொடர்ந்தும் எழுத முடியாது என்று, கலாசார அமைச்சின் கீழ் மகாவம்ச ஆக்கக் குழுவை ஏற்படுத்தினார். 1956 தொடக்கம் 1978 வரையான காலப்பகுதியைக் கொண்ட 5வது தொகுப்பை எழுதுவதற்கான குழு பல பௌத்த பிக்குமார்களையும் கொண்டு அமைக்கப்பட்ட போது அதன் ஆக்கக் குழுவில் கட்டுரை சமர்ப்பிக்கும் பணியில் நானும் இடம்பெற்றேன்.

பின்னர் 1978 இலிருந்து 2010 வரையான காலப்பகுதியைக் கொண்ட 6ஆவது தொகுப்பை எழுதுவதற்கான குழு அமைக்கப்பட்டபோது அதில் நானும் முக்கிய அங்கம் வகித்தேன்.

தமிழில் மகாவம்சம்?

தமிழில் மொழிபெயர்க்கும் பணியை செய்வதற்கு சரியான அறிஞர்கள் கிடைக்கிறார்கள் இல்லை. இறுதியில் தற்போது களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் யோகராஜா அவர்கள் அதனை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். அவரின் தலைமையில் தான் அந்தக் குழு அப்பணியை மேற்கொண்டு வருகிறது.

6வது தொகுதி முடிந்த நிலையில் அடுத்த கட்ட தொகுதியை ஆக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்னமும் வெளியிடப்படாததால் அப்பணிகளைத் தொடங்காமல் இருக்கிறோம். அது வெளியிடப்பட்டதன் பின்னர் அதன் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியும் தொடங்க முடியும்.

முதலாவது தொகுதியை மாத்திரம் இதுவரை தமிழில் ஐந்து பேர் மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.

உண்மையாகவா. நான் அறிந்திருக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பௌத்தத் துறவி தமிழுக்கு மொழிபெயர்த்த ஒரு பிரதி எங்களிடம் உள்ளது. ஆனால் அது இதுவரை வெளியிடப்படவில்லை. அதை சரிபார்த்து திருத்தும் பணிகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதை திருத்துவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்த பௌத்த துறவி அதனை பழைய தமிழ் மொழியில் எழுதி இருக்கிறாராம். இன்றுள்ளவர்களுக்கு அது சிரமமாக இருக்கிறதாம். அதை அப்படியே வெளியிடுவதில் அர்த்தமில்லை என்பதே பேராசிரியர் யோகராஜா அவர்களின் கருத்தும் கூட. இதுவரை அவர்கள் இரண்டு அத்தியாயங்களைத் தான் முடிக்க முடிந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.

இறுதியாக வெளிவந்த 6வது மகாவம்சத் தொகுதியை மொழிபெயர்ப்பதன் அவசியத்தை உணர்ந்து நான் மொழிபெயர்க்க முற்பட்டேன். ஆனால் கலாசார திணைக்களத்தினர் அதனை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்த கிடைத்த தகவலில் காரணமாக அம்முயற்சியைக் கைவிட்டேன். ஆனால் முன்னைய தொகுதிகளை மொழிபெயர்ப்பதைவிட 6வது தொகுதியை மொழிபெயர்ப்பது இலகுவானதும் கூட என்பதை நான் அடையாளம் கண்டேன்.

உண்மை. அத் தொகுதியில் மொழிப் பாவனை மிகவும் எளிமையானது. முன்னைய மூன்று தொகுதிகளிலும் பாலி கலப்பு அதிகம் என்பதும் ஒரு காரணம்.

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். முதல் மூன்று தொகுதிகளும் முதல் தொகுதி ஆக்கும் போது அக்காலத்தில் ஆட்சி செய்தவர்களை மையப்படுத்தியே எழுதுவது மகாவம்ச மரபு. அரசர், ஆளுநர், பிரதமர், ஜனாதிபதி என்கிற அடிப்படையில் தான் எழுதப்பட்டது. ஆனால் நான்காவது தொகுதியில் இருந்து அந்த மரபில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. உதாரணத்துக்கு ஆட்சியாளரை மையப்படுத்தாமல் ஒரு பண்பாட்டுக் கட்டுரைகளின் தொகுதி போல அது ஆக்கப்பட்டிருந்தது. நாங்கள் மீண்டும் அம்முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தோம். மகாவம்ச மரபின் படியே நாங்கள் இப்போது எழுதி வருகிறோம். அதுபோல நான்காவது தொகுதியையும் அம்மரபுப் பிரகாரம் கொண்டு வருவதற்காக திருத்தும் பணிகளையும் தற்போது செய்து வருகிறோம். குறிப்பாக அத் தொகுதியில் கட்டாயம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதை அடையாளம் காண்கிறோம். அதையும் முடித்ததன பின்னர் தான் தமிழுக்கு அதனை மொழிபெயர்க்க முடியும்.

ஏற்கெனவே வெளிவந்த மகாவம்சத்தை பின்னர் திருத்துவது சரியா? அவ்வாறு இதற்கு முன்னர் திருத்தப்பட்டிருக்கிறதா?

மகாவம்சம் என்பது அதில் உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும்படி சொல்லும் நூலல்ல. அதன் மீது விமர்சனம் வைக்க முடியும். அதனைத் திருத்தவும் முடியும். நீங்கள் அறிவீர்களா தெரியாது; முதலாவது மகாவம்சத்தை 12ஆம் நூற்றாண்டில் திருத்தப்பட்டு மொக்கலான மகாவம்ச பிரதி என்று என்கிற ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் சிறப்பு என்னவென்றால் முன்னைய பிரதியை விட மேலதிகமான பல விபரங்களைக் கொண்டிருக்கிறது மொக்கலான பிரதி.

நீங்கள் குறிப்பிடுவது கம்போடிய மகாவம்சத்தைத் தானா?

சரியாக சொன்னீர்கள் அதே தான். 

அடுத்த மகாவம்சத் தொகுதியை ஆக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதா?

இதில் ஒரு சிக்கல் உண்டு. இதற்கு முனனர் எல்லாம் ஆட்சித் தலைவர்கள் இறந்தததன் பின்னர் தான் அவர்களின் ஆட்சிக் காலத்தை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தொகுதி தான், ஆட்சியாளர் உயிருடன் இருக்கும்போதே எழுதப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு விதி இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் போது இவற்றை சேர்க்கவில்லை, அவற்றை சேர்க்கவில்லை என்று பலவித விமர்சனங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளாக நேரிடும்.

எனவே இப்போது எமது குழு தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிகளையும், நான்காவது தொகுதியை திருத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

பல ஆண்டுகளாக அரசே பொறுப்பேற்று கலாசார திணைக்களத்தின் கீழ் அதற்கென ஒரு பிரிவையும் உருவாக்கி மேற்கொள்ளப்படும் மகாவம்சத்தை அரசின் அறிக்கையாக, அல்லது அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா?

இல்லை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நான் வரலாற்றுத் துறையை சேர்ந்தவர். அதுபோல இதன் ஆக்கக் குழுவில் இருந்த அத்தனை பெரும் பல்வேறு துறைகளில் புலமையாளர்கள். முதலில் அவர்களை அழைத்து நாங்கள் கருத்தரங்கொன்றை ஒழுங்கு செய்தோம். மகாவம்ச ஆக்க மரபு என்னவென்பது குறித்து முதலில் வழிகாட்டினோம். அதில் அவர்களுக்கு கொடுத்த வழிகாட்டல் என்னவென்றால், அவர்கள் தகவல்களைத் தான் திரட்ட வேண்டும். ஒருபோதும் அவர்களின் சொந்தக் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் அதனை செய்யக் கூடாது. எனவே அரச தலையீடுகள் எங்களுக்கு கிடையாது.

அப்படியென்றால் இந்தக் குழுவுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வது யார்? ஏதேனும் புலமைசார் நிறுவனமா? அல்லது குழுவா?

இல்லை, கலாசார அமைச்சின் செயலாளர், இயக்குனர் ஆகியோரால் கலாச்சார அமைச்சரின் அங்கீகாரத்துடன் தான் இக்குழுவினர் நியமிக்கப்படுகின்றனர்.

அப்படிப்பட்ட மகாவம்சக் குழுவில் ஏன் சிங்கள பௌத்தர்களை மாத்திரம் கொண்டிருக்கிறது. ஏன் பன்முகத்தன்மைகொண்டவாறு மற்ற இன மதத்தவர்களை உள்ளடக்கப்படவில்லை?

நான் ஏற்கெனவே கூறியது போன்று இக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் தமது கருத்துக்களை எழுதவில்லை. தகவல்களைத் தான் தொகுத்து தந்திருக்கிறார்கள். அதன் பின்னர் மூன்று மொழியிலும் மொழியாக்கம் செய்யப்படும். பின்னர் தேவைப்படும் விமர்சனங்களை எவரும் வெளியிடலாம்.

வெவ்வேறு இனத்தவர்களை இணைத்துக் கொண்டால் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். பௌத்தத் துறவிகளால் எழுதப்படுகிற மரபொன்று தான் மகாவம்சத்துக்கு அதுவரை இருந்து வந்தது. இப்போது அதற்கென ஒரு சபை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் எழுதப்பட்ட எதுவும் பக்கசார்பாக எழுதபட்டதில்லையே.

மகாவம்ச உள்ளடக்கத்தின் மீது ஏற்கெனவே இருக்கிற குற்றச்சாட்டுகளின் காரணமாகவே இந்தக் கேள்வியை எழுப்பினேன்!?

நீங்கள் அறிந்தீர்களா தெரியவில்லை. இறுதியாக வெளிவந்த மகாவம்சம் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா; தன்னைப் பற்றி போதிய அளவு எழுதவில்லை என்று பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு என்ன பதிலைக் கூறுவது என்று என்னிடம் அமைச்சின் செயலாளர் கேட்டிருந்தார். மகாவம்சம் என்பது நபர்களைப் பற்றி எழுதுவதல்லவே. அது சம்பவங்களைப் பற்றியா பதிவு. நபர்கள் ஆற்றிய பாத்திரம் பற்றிய பதிவுகள் வரும் ஆனால் அப்பாத்திரங்களின் பணிகள் சரியா பிழையா என்பதைப் பற்றிய விமர்சனங்களை பதிவதில்லை. தகவல் பிழைகள் இருந்தால் எவரும் சுட்டிக்காட்ட முடியும். அப்படி இருந்தால் அதனை நாங்கள் பரிசீலிக்க முடியும். ஆனால் அவரைப் பற்றி குறைவாக எழுதபட்டிருக்கிறது, ஷவேந்திர சில்வா பற்றி அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

யுத்தம் நடத்தப்பட்ட அந்த ஒழுங்கில் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கிறோம். யுத்தத்துக்கு தயாரான விதம், திட்டமிடப்பட்ட விதம், வடக்கை நோக்கிய படை நடவடிக்கைகள் என்பவற்றை கவனமாக பதிவு செய்திருக்கிறோம்.

உங்களுக்கு தெரிந்திருக்கும், முதலாவது விஜயபாகு அரசரின் போர்த்தந்திரோபாய வழிமுறைகளைத் தான் இறுதி யுத்தத்தில் பயன்படுத்தபட்டிருக்கிறது. அதாவது மேற்குப் பக்கத்தில் இருந்தும் நுழைந்தார்கள். கிழக்குப் பக்கத்திலிருந்தும் நடுவிலிருந்தும் ஊடறுத்து நுழைந்தார்கள். விஜயபாகுவின் போர்ப் பாதை பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளிலும் தெளிவாக உள்ளன. சோழர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக விஜயபாகு அரசன் முதலாவது தடவை போர்தொடுத்து வெற்றி ஈட்டினார். ஆனால் தக்கவைக்க முடியவில்லை. மீண்டும் பின் வாங்கி திரும்பவேண்டி வந்தது. இவ்வாறு மூன்று முறை கைப்பற்றியும் தக்கவைக்க முடியாமல் பின் வாங்க நேரிட்டது. இது தான் இங்கே நம்மவர்களுக்கும் ஏற்பட்டது. இதற்கு தீர்வு என்னவென நிதானமாக சிந்தித்தார் மன்னர் விஜயபாகு இறுதியில் அவர் தீட்டிய திட்டத்தின் படி படைகளை வழிநடத்தினார். அனுராதபுரத்துக்கு இடது பக்கத்தில் ஒரு படையை நிலை நிறுத்தி அங்கிருந்த நகர்த்தினார். வடக்கிலிருந்து படைகள் வந்தால் அதை தடுத்து நிறுத்தி சமர் புரிவதற்காக வவுனியா பக்கத்தில் ஒரு படையை நிறுத்தினார். அதன் பின்னர் சோழப் படைகள் தென்னிந்தியாவில் இருந்து வந்த இன்னொரு கடல் மார்க்கமான கிழக்கில் திருகோணமலை பகுதியில் அவர்களைத் தடுப்பதற்காக அங்கே ஒரு படையையும் நிலை நிறுத்தினார். இந்த தயாரிப்புகளுடன் நடுவில் ஊடறுத்து சென்றதுடன், சுற்றிவளைத்து சோழர்களை வெற்றிகொண்டு விரட்டியடித்தார் விஜயபாகு மன்னர்.

அத தெரண நேர்காணலில் பேராசிரியர் மாலனி எந்தகம

அத தெரண தொலைக்காட்சியில் “Talk with Chathura” என்கிற வாராந்த உரையாடல் நிகழ்ச்சியில் மகாவம்ச உருவாக்கக் குழுவின் பிரதம செயலாளர் பேராசிரியர் மாலனி எந்தகமவுடன் ஒரு மணித்தியாலமும் 12 நிமிடங்களைக் கொண்ட ஒரு உரையாடல் நிகழ்ந்தது.  அதில் இப்படி ஒரு கருத்தை கூறுகிறார்.

கீழ் வகுப்புகளில் அதிக ஆழமான, விரிவான வரலாற்றுக் கதைகளைச் சொல்ல முடிவதில்லை. இப்படித்தான் எல்லாள மன்னனைப் பற்றிய விபரங்கள் குறைவு என்கிற குற்றச்சாட்டை தமிழர் தரப்பில் இருந்து அரசியல் தலைவர்களும், பல்கலைக்கழக மட்ட விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார்கள்.

மகாவம்சத்திலும் துட்டகைமுனுவின் அத்தியாயத்தில் தான் எல்லாளனின் விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட குற்றச்சாட்டை அமைச்சருக்கு ஊடாக பரிந்துரைகளாக மகாவம்ச கமிட்டியிடம் சேர்க்கப்பட்டது. சுமார் பதினைந்து பேரைக் கொண்ட அக்குழுவில் நானும் இருந்தேன். பிரபல தமிழ் பேராசிரியர் பத்மநாதனும் எம்முடன் இருந்தார். அவர்கள் குறிப்பிட்ட அந்த 6 ஆம் ஆண்டுக்கான நூலில் சிறு பகுதி தான் எல்லாளன் பற்றி இருக்கிறது. 6 ஆம் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அதற்கு மேல் நாம் அதிகமாக உள்ளடக்கவும் முடியாது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவர் பரிந்துரையாக இரண்டு பக்கங்களுக்கு எல்லாளனைப் பற்றிய விபரங்களை எழுதிக் கொண்டு வந்திருந்தார். அப்போது அங்கிருந்த பேராசிரியர் பத்மநாதன் “இவற்றை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? இங்கே துட்டகைமுனுவைப் பற்றியும் இந்த அளவே இருக்கிறது. அப்படியிருக்கும் போது எல்லாளனைப் பற்றி அதைவிட அதிகமாக புகுத்துவது எப்படி. மேலும் 6 ஆம் வகுப்புக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் அதில் உள்ளது..” என்று அப்பேராசிரியர் அவருக்கு விளங்கப்படுத்தி அந்தப் பிரச்சினையைத் தீர்த்தார். எனவே சில குற்றச்சாட்டுக்கள் அந்தளவு பொருத்தமானதல்ல. அத்தமிழ் பேராசிரியர் இதனை சரியாகக் கையாண்டதால் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து நாம் தப்பித்தோம்... தமிழினத்தைப் பற்றி அதிகமாக பதிவு செய்வது தமிழர்களுக்கு விருப்பம், அதுபோல சிங்களவர்களுக்கும் அதிகமாக தம்மை பற்றி பதிவு செய்வது விருப்பம். முஸ்லிம்களும் அதுபோலவே விரும்புவார்கள். ஆனால் மாணவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அவ்வளவு தான் கொடுக்கலாம்” என்கிறார். 

அடுத்த இரு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இவை.

“கடந்த மகாவம்சத் தொகுதிகளில் ஒரு முக்கிய பாத்திரம் கதாநாயகராக முன்னிறுத்தும் போக்கைக் காண்கிறோம். மகாவம்சத்தின் 6 ஆம் தொகுதியில் யார் அப்பேர்பட்ட கதாநாயகன்? இறுதிப்போரை முடித்து வைத்தவர்கள் யார்? பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உரிய இடம் என்ன?”

இதை ஒரு இனப்பிரச்சினையாக நாங்கள் பதிவு செய்யவில்லை. இது ஒரு பிரிவினைவாதப் பிரச்சினையாகத் தான் பதிவு செய்திருக்கிறோம். பயங்கரவாதப் பிரச்சினைகளைத் தான் வரைவிலக்கணப்படுத்திக்கொண்டு எழுதினோம்.

மகாவம்சத்தின் முதல் பகுதியில் துட்டகைமுனு பற்றி கூறுகையில் அந்தப் போரில் பிரதான பாத்திரம் வகித்த தளபதிகளான பத்து இராட்சகர்கள் குறித்து விரிவாக இருக்கிறது. அதுபோல இறுதி யுத்தத்தை வெள்ளவைத்தவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவா?

ஆம், நிச்சயம் இருக்கிறது. மகாவம்சத்தின் 6வது தொகுப்பை ஆக்கும் போது அதற்கான அத்தனை கூட்டங்களிலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன். யுத்தம் பற்றிய விடயங்களை எழுதும்போது இராணுவத் தரப்பைச் சேர்ந்த பல முக்கிய அதிகாரிகளுடனும் நாங்கள் உரையாடியிருக்கிறோம். அவர்களின் பல ஆவணங்களைத் பரிசீலித்தோம். அதன்படி

மகிந்த ராஜபக்ஷ : அவர் தான் இந்த யுத்தத்துக்கு தேவையான வளங்களையெல்லாம் பெற்றுக் கொடுத்தவர். அதை அவர் சரியாகச் செய்தார். பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய இராஜபக்ச மிகவும் திறம்பட யுத்தத்தை திட்டமிட்து வழிநடத்தினார். இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒரு சிறந்த இராணுவ வீரர். அவர் தான் இராணுவத்தினரைக் கொண்டு யுத்தத்தை நடத்தினார். வளப் பகிர்வு, திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் இந்த மூன்று தளத்திலும் இம்மூவரின் கூட்டுப் பலத்துடன் தான் இந்த யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது.

மாவிலாறில் இருந்து இந்த யுத்தம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக முக்கிய மேஜர் ஜெனரல் ஒருவர் எம்மோடு எப்போதும் இந்தப் பணியில் ஒத்துழைத்திருந்தார். அவர் கூறும்போது இந்த யுத்தத்தை துட்டகைமுனு மன்னன் பொலன்னறுவை கைப்பற்றிய பாணியல் தான் யுத்த வியூகங்களை வகுத்ததாகக் குறிப்பட்டிருந்தார்.

விஜயபாகு மன்னர் சோழர்களிடம் இருந்து பொலன்னறுவயைக் கைப்பற்ற முயற்சித்து பல தடவைகள் பின்வாங்கி வர நேரிட்டது. இறுதியில் விஜயபாகு மன்னர் மூன்று படைகளை உருவாக்கி பொலன்னறுவைக்கு மேற்கினூடாக ஒன்று படையையும் கிழக்குக்கு ஊடாக அடுத்த படையையும், நடுவில் ஊடறுத்து ஒரு படையையும் அனுப்பினார். அதற்கூடாக இந்தியாவில் மேற்குக்கு படையுதவிகள் வருவதும் தடுக்கப்பட்டன. கிழக்கில் இருந்தும் சமர்களால் நடுவுக்கு வர முடியவில்லை. நடுவில் ஊடறுத்துச் சென்ற விஜயபாகு மன்னர் இறுதியில் பொலன்னறுவையில் கைப்பற்றினார். அதே வழியில் அந்த முன்னுதாரணத்தை வழிகாட்டலாகக் கொண்டு தான் இறுதி யுத்தம் வெல்லப்பட்டது.


மகாவம்சத்துடன் எனக்கு தொடர்பில்லை

பேராசிரியர் சி.பத்மநாதன்

பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களிடம் மேற்படி கருத்துக்கள் குறித்து உறுதி செய்வதற்காக ஒரு நேர்காணலைக் கண்டேன். அவர் தான் அக் குழுவில் இருக்கவில்லை என்றும் ஆனால் கட்டுரைகளை சமர்பித்தேன் என்று கூறினாலும், அவர் எழுதிய பகுதிகளை மகாவம்சம் எங்கும் தனியாக பதிவு செய்யவில்லை. மாறாக அவர் கொடுத்ததாகக் கூறுகின்ற கட்டுரைகளையும் மகாவம்சக் குழு தமக்குத் தேவையானவற்றைத் தரம்பிரித்து எடுத்தாண்டிருக்கிறது என்றே நாம் பொருள்கொள்ளலாம். அதன் அடிப்படையில் பேராசிரியர் பத்மநாதன் அவர்களும் இந்த மகாவம்சத் தொகுதியின் பங்காளராகவே பதிவு செய்துள்ளது மகாவம்சம். ஏற்கெனவே மனோ கணேசன் 2017ஆம் ஆண்டு அரச கரும மொழிகள் அமைச்சராக இருந்த காலத்தில் வெளியிட்ட People of Sri lanka என்கிற நூலில் முதல் கட்டுரை மாலனி பேராசிரியர் எந்தகம எழுதிய “சிங்கள சமூகம்” (The Sinhala Community) என்கிற கட்டுரை. இக்கட்டுரை குறித்து ஏற்கெனவே பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் தனது விசனத்தை தெரிவித்திருக்கிறார்.

பேராசிரியர் பத்மநாதன் அவர்களுடனான இந்த நேர்காணல் 2021 ஆம் ஆண்டு யூலை 26 ஆம் திகதி தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டது. நீண்ட நேர்காணலில் இந்த விடயத்துடன் சம்பந்தமில்லாத விடயங்கள் நீக்கப்பட்டு சுருக்கப்பட்ட நேர்காணல் இது.

மகாவம்சம் குழுவில் நீங்கள் அங்கம் வகித்ததாக அந்நூலில் காணக்கிடைகிறது அது சரிதானா?

இல்லை நான் அக்குழுவில் இருக்கவில்லை.

அந்நூலில் காணப்படுகிற பேராசிரியர் பத்மநாதன் நீங்கள் இல்லையா?

நான் அந்தக் குழுவில் இருக்கவில்லை. மகாவம்சத்தை அவர்கள் இப்போதும் எழுதி வருகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதிக்குள் சைவ சமயம் பற்றி அவர்கள் என்னிடம் எழுதச் சொல்லி கேட்டதற்கிணங்க அதற்கு நானும் கட்டுரைகளை எழுதிக் கொடுத்தேன்.

இந்து சமயத்தைத் தவிர வேறெதைப் பற்றியும் நீங்கள் எழுதிக் கொடுக்கவில்லையா? 

மகாவம்சக் குழுவில் அங்கம் வகிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் அதற்கு உடன்படவில்லை. மகாவம்சத்தோடு தொடர்புபட்ட ஆவணங்கள் பல்வேறு இலங்கை, பிரித்தானியா, நெதர்லாந்து, கோவா, ஜகார்த்தா போன்ற ஆவணக்காப்பங்களில் பரந்து உள்ளன. அங்கெல்லாம் பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் உள்ளன. அனால் இவர்கள் எழுதுவது ஒரு அரசாங்கத்தின் வரலாற்றை எழுதுவது போன்றது. இதைப் போய் பழைய மகாவம்சத்தொடு தொடர்புபடுத்தக் கூடாது.

எல்லாள மன்னனைப் பற்றிய விபரங்கள் குறைவு என்கிற குற்றச்சாட்டை தமிழர் தரப்பில் இருந்து அரசியல் தலைவர்களும், பல்கலைக்கழக மட்ட விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார்கள் என்றும் அவர்களே இரண்டு பக்கங்களுக்கு எழுதிக் கொண்டு வந்து தந்ததாகவும் பத்து பதினைந்து பேரைகொண்ட தமது குழுவில் வைத்து இதனை ஆராய்ந்ததாகவும் அந்தக் குழுவில் நீங்களும் இருந்ததாக பேராசிரியர் மாலனி எந்தகம தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார்?

பாடப்புத்தகங்களில் உள்ளவை பற்றி டக்ளஸ் தேவானந்தாவுக்கு முறையிட்டதைத் தொடர்ந்து அவர் தான், தேசிய கல்வி நிருவகத்துடனும், கல்வி அமைச்சுடனும் உரையாடலை ஏற்படுத்தினார்.

அப்படியென்றால் நீங்கள் மகாவம்ச குழுவின் சார்பாக கலந்துகொள்ளவில்லையா?

இல்லை இல்லை. டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டின் பேரில் அதில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் கலந்துகொண்டோம். மகாவம்ச குழுவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இது பாட நூல் பற்றியது.

இந்த உரையாடலில் என்னோடு பேராசிரியர் கிருஷ்ணராஜாவும் பேராசிரியர் புஷ்பரட்ணமும் வந்திருந்தார்கள். புஷ்பரட்ணம் அவ்வளவு பேசவில்லை ஆனால் கிருஷ்ணராஜா அதிகம் கதைத்தார். அதில் அவர் பிழையாக சில விடயங்களை கூறிவிட்டார்.

மாலனி எந்தகமவை ஒரு சரியான வரலாற்று ஆசிரியர் என்று கூற முடியாது. அவர் சிஹல உறுமய இயக்கத்தின் முக்கிய ஆதரவாளர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் இருக்கிற போதும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் இவரைத் தான் இதில் வைத்திருக்கிறார்கள். வரலாற்றை புரட்டி பிழையாக எல்லாம் எழுதுகிறார்.

இவற்றை எதிர்த்து நீங்கள் ஒருபோதும் குரல் கொடுத்ததில்லையா?

கூட்டங்களுக்குப் போனால் தானே அதைப் பற்றி கதைக்க.

பாடப்புத்தகங்களில் சரியான அளவு கணக்குகளில் தான் எல்லாளனுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் விளக்கியதாக மாலனி எந்தகம கூறுகிறாரே.

அங்கே கதைத்த விடயம் அதுவல்ல. எல்லாளனுக்கு ஒதுக்கிய இடம் போதும் என்றும் நான் கூறவில்லை. கிருஷ்ணராஜா சில பிழைகளை சொல்லி இருந்தார். எள்ளங்குளம் என்று ஒன்று வடமாராட்சியில் இருக்கிறதென்றும் அது எல்லாளனுடைய கட்டுமானம் என்றும் கூறினார். அதைத் தான் நான் அவ்வாறு எழுதப்படாது என்று மறுத்தேன். அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் எல்லாளன் ஆண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லையே. துட்டைகைமுனு ஆண்டதற்கான ஆதாரமும் அங்கு இல்லை. ஆனால் துட்டகைமுனு தான் இந்த தேசத்தை ஒரே நாடாக ஆக்கினார் என்கின்றனர்? இது வெறும் ஐதீகம் அல்லவா. எங்கே கல்வெட்டுண்டு? எங்கே வரலாற்று ஆதாரம் இருக்கிறது? அவர் ருகுணவையும், அனுராதபுரத்தையும் இணைத்து ஆண்டார் சரி, மலைநாட்டை ஆண்டதற்கு என்ன ஆதாரம் உண்டு? மேற்கு கரையோரத்தை ஆண்டதற்கான ஆதாரம் என்ன இருக்கு? வடக்கிலே என்னே ஆதாரம் இருக்கிறது? இவையெல்லாம் புத்தகத்தில சொல்றது அல்லோ... நீங்கள் அவர்களின் மாகாவம்சத்தை பொருட்படுத்தப்படாது!

தமிழருக்கு தாயகம் இல்லையென்று காசு கொடுத்து தான் எழுத வைக்கினம். தமிழர்கள் வரலாறு படிப்பதுமில்லை. ஈடுபாடு காட்டுவதுமில்லை. வரலாறு படிக்காவிட்டால் எமது தாயகத்தை நிரூபிக்கவும் முடியாது.

அதற்கு டச்சு, ஆங்கில ஆவணங்களையெல்லாம் படிக்கவேண்டும். அன்றைய அறிக்கைகள், குடித்தொகை அறிக்கைகள் போன்ற அறிக்கைகளையெல்லாம் படிக்க வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இதில் எதையும் செய்யவில்லை. 

ஒரு மூத்த வரலாற்று அறிஞராக மகாவம்சம் பற்றிய உங்கள் எதிர்வினைகளை நீங்கள் செய்ததில்லையா?

எங்களிடம் கேட்டால் தானே அதைப் பற்றி சொல்லலாம். மகாவம்சத்தை இப்படி எழுதுவது பொருத்தமில்லை என்பதால் அதைச் சொல்லி அந்தக் குழுவில் இடம்பெறுவதை நான் மறுத்துவிட்டேன். 

நேர்காணல் - என்.சரவணன்

நன்றி - ஜீவநதி

மகாவம்ச மாலனி எந்தகம by SarawananNadarasa on Scribd

NPP யின் வெற்றியும் சவால்களும் - என்.சரவணன்

“ஐரோப்பாவில் மட்டுமல்ல உலகின் அத்தனை உடமை வர்க்கங்களும் தங்களின் ஒரு பொது எதிரியை வீழ்த்த துடிக்கின்றன. அந்த போது எதிரிக்கு அவர்கள் இட்ட பெயர் கம்யூனிச பூதம்.”

இவ்வாறு கார்ல் மாக்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்படப்படுகிறது

இலங்கையில் தற்போதைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக தேசிய மக்கள் சக்தியை (தே.ம.க) சேர்ந்த அனுர குமார திசாநாயக்கவின் வெற்றியை உலகம் முழுவதும் காண்கின்றனர். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை ஒரு முழுமையான கொம்யூனிஸ்ட் கட்சியாக நாம் காண இயலாத போதும் இலங்கையில் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் சிதைந்து அழிந்துவிட்ட நிலையில் எஞ்சியிருக்கும் ஒரு சில கட்சிகளில் பலமான இடதுசாரிக் கட்சியாக ஜே.வி.பி. இருக்கிறது.

“கொம்யூனிச பூத”க் கதைகளை பிரச்சாரம் செய்தே ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகள் சிதறடித்து விடுவார்கள் என்கிற அச்சமானது ஒரு உலக அச்சமே. எனவே உலகளாவிய ரீதியில் கொம்யூனிச பெயர்களைத் தாங்கிய கட்சிகள் அரிதாகி விட்டன. அதற்குப் பதிலாக வெகுஜன ஜனநாயக மக்கள் இயக்கங்களாக மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்றுவதை கான முடியும். அந்த வகையில் தேசிய மக்கள் கட்சியும், அதன் வேலைத்திட்டங்களும், வியூகமும் சிறந்த மூலோபாய, தந்திரோபாய உள்ளடக்கங்களைக் கொண்டது எனக் கொள்ளலாம்.

தற்போதைய தே.ம.க.வின் மீது எந்தளவு நம்பிக்கை கொள்வது என்பதே தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னரும் அதனை ஆதரிக்காத பலரிடமும் பரவலாக இருக்கிற கேள்வி.

மக்களுக்கு இருந்த தெரிவு

ஏலவே முடிவு செய்யப்ட்டிருப்பவர்களில் இருந்து தான் நமக்கான தெரிவை செய்ய முடியும். வெற்றி சாத்தியப்படக் கூடியவர்களில் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதே மக்களுக்கு இருந்த தெரிவு. ஆக மொத்தத்தில் இந்தத் தேர்தலில் நம்மை மீட்க தேவதைகள் நிறுத்தப்படவில்லை. நிறுத்தப்பட்டிருக்கின்ற வேட்பாளப் பிசாசுகளில் குறைந்த அளவு ஆபத்தை விளைவிக்க கூடிய பிசாசு ஒன்றை தெரிவு செய்வதே நமக்கு மிஞ்சி இருந்த ஒரே தெரிவு.

இவர்களில் இதற்குமுன்னர் அதிக இழப்பை ஏற்படுத்தியவர்கள், அல்லது அதிக இழப்புக்கு காரணமாக இருந்தவர்கள், அதிக இழப்பை செய்யக் கூடியவர்கள் என்போரை கணித்து அவர்களை தோற்கடிப்பதும் வாக்காளர்களுக்கு கிடைத்த ஜனநாயக வாய்ப்பு. எப்போதும் புதிய பரிசோதனைகளுக்கு ஒரு விலை உண்டு. அது முன்னைய வரலாற்று அனுபவங்களை விட மோசமானது அல்லவே என்றே தோன்றியது.

இவர்கள் செய்வார்களா? நாட்டை ஆளக்கூடிய அனுபவம் உண்டா? போன்ற கேள்விகள் தொடக்கம் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் வயதானவர்களைக் கொன்று விடுவார்களே. அதனால் தான் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்கிற பாமரத்தனமான விளக்கங்களைக் கொண்டிருந்த பலரைக் கண்டேன்.

வாக்கை தெரிந்த பிசாசுகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக... தெரியாதது பிசாசு தானா என்று அடையாளம் காண்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வாக்காளர்களுக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பென்றே கூற முடியும்.

இந்த அளவுகோளின்படி அனுர குமார திசாநாயக்க ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ஊழலற்ற, இலங்கை பற்றிய அதிக விபரங்கள் அறிந்த, தர்க்க வல்லமை உள்ள, கோட்பாட்டு ரீதியில் சிக்கல்களை அணுகுகிற, பாமர மக்களுக்கும் விளங்கக் கூடிய வகையில் நிலைமையை விளக்கத் தெரிந்த ஒருவராக இருந்தார். இதெல்லாவற்றையும் விட அவர் ஒருவரே வரலாற்றில் கிராமப்புறத்தில் இருந்தும் அடிமட்ட வர்க்கத்தில் இருந்தும் இலங்கையின் உயர் அரசியல் அதிகாரப் பதவியான நிறைவேற்று ஜனாதிபதிப் பதவிக்கு வந்தவர் எனலாம்.

இந்தத் தேர்தலில் செல்வாக்கு செலுத்திய அரசியல் சுலோகங்களில் முக்கியமானது பொருளாதாரம் பற்றியது. ஈராண்டுகளுக்கு முன்னர் வரலாறு காணாத நிதி நெருக்கடிக்குள் சிக்கி, விலை அதிகம் கொடுத்தாலும் வீதிகளில் அத்தியாவசியத் தேவைகளைப பெற முடியாமல் நீண்ட வரிசைகளில் மக்கள் பட்ட திண்டாட்டங்கள் உலகமறிந்தது. இறுதியில் மக்கள் இன, மத, மொழி, சாதி, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து “அரகலய” போராட்டத்தை நடத்தி கோட்டபாய தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தார்கள்.

எனவே நாட்டு மக்களின் மையப் பிரச்சினையாக பொருளாதாரப் பிரச்சினை மாறி இருந்தது. எந்தவொரு நாட்டின் பிரச்சினைகளையும் வரிசைப்படுத்தினால் அந்த வரிசையில் முன்னிலை வகித்த சிக்கல்கள் காலத்துக்கு காலம் மாறும். இது பொது விதி. மையப் பிரச்சினை என்று வெகுஜன அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படுகிற பிரச்சினையானது படிநிலை வரிசையில் இடம் மாறிக்கொண்டிருக்கும். 

இலங்கையில் இனப்பிரச்சினையானது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக “தேசியப் பிரச்சினை” என்றே அழைக்கப்பட்டு வந்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் யுத்தத்திற்குப் பின்னர் படிப்படியாக அதன் சாரமிழக்கப்பட்டு தேசியப் பிரச்சினை என்கிற நிலையில் இருந்து கீழிறக்கப்பட்டுவிட்டிருக்கிறது. குறிப்பாக நாடு தழுவிய பொருளாதார நெருக்கடி இதற்கு முக்கிய காரணியாக அமைந்தது.

வரலாற்றில் முதற் தடவையாக பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞாபனங்களில் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துமளிக்கப்படாத தேர்தலாக வந்தமைந்தது இதன் நீட்சியாகத் தான். போதாதற்கு தமிழ் மக்களின் தரப்பில் பேரம் பேசும் ஆற்றலை குறைக்கிற நிலைமைகள் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததும் முக்கியமான காரணி எனலாம். பல தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தும் பொது வேட்பாளராக அரியநேந்திரனை இறக்கி வடக்கு கிழக்கில் தமது செல்வாக்கை 13.91% வீதத்தால் மட்டுமே உறுதி செய்துகொள்ள முடிந்தது. இது தென்னிலங்கைக்கு தமிழ் மக்களின் பலத்தை மோசமாக சித்திரித்து விட்டிருக்கிற நிலைமையாகவே காண வேண்டியிருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் எதிரிகளாகக் கருதுகிறவர்களுக்கே ஏனைய அதிகப்படியான வாக்குகளை தமிழ் மக்கள் அள்ளி வழங்கியிருக்கிறார்கள் என்பதை குறிப்பாகக் கவனிக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாடாளாவிய ரீதியில் வெறும் 3.16 vவீதத்தை மட்டுமே பெற்ற தேசிய மக்கள் கட்சியின் இம்முறை 42.31% வீதைத்தை பெற்று வெற்றியீட்டியிருப்பது பெரும் பாய்ச்சல் என்றே வர்ணிக்க முடியும். இது தேசிய மக்கள் கட்சியின் வெற்றி என்பதை விட பாரம்பரியக் கட்சிகளின் தோல்வியென்றே இனங்கான முடியும். பாரம்பரிய கட்சிகளுக்கு விடைகொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே இன்னொருவகையில் கூற முடியும். இந்தக் கட்சிகளின் மீதான வெறுப்பை கடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே காண முடிந்தது. இலங்கையின் பாரம்பரிய பழமையான தேசியக் கட்சிகளாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் சாவு மணி அடித்திருந்தார்கள். புதிய வகையிலான கட்சிகளை மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பதும் அந்த இடைவெளியை நிரப்பும் சக்தியாக தே.ம.க வை பார்க்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்பதையே முடிவுகள் பறைசாற்றுகின்றன. 

ஆனால் தமிழ் பிரதேசங்களில் சற்று விதிவிலக்கு. அவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கிய வாக்குகள் சஜித்தை ஆதரிப்பதற்காக வழங்கிய வாக்குகளா அல்லது அனுர குமார திசாநாயக்கவை தோற்கடிக்க வழங்கிய வாக்குகளா என்கிற விவாதங்கள் இன்னமும் தொடர்கின்றன. எவ்வாறிருந்த போதும் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி போதிய அளவு தமது அரசியலை முன்னெடுக்காததே அவர்கள் அங்கே அடைந்த தோல்விகளுக்கு காரணம் என்று கூறலாம்.

தே.ம.க. ஜனாதிபதித் தேர்தலில் மற்றவர்களை விட பெரும்பான்மை பெற்றிருக்கிற போதும் நாடளாவிய ரீதியில் பெரும்பான்மை வாக்காளர்களின் வாக்குகளை சுவீகரித்துக் கொள்ள முடியவில்லை என்பது மறு புறத்தில் உண்மையே. இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் தே.ம.க.வுக்கு எதிராக மிஞ்சிய 58% சத வீத மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்கிற உண்மையையும் நாம் கடந்து விட முடியாது. அதாவது பெரும்பான்மை மக்களின் விருப்பற்ற தெரிவாக இது இருக்கிறது என்பதே மறுபுற உண்மை.

தேசிய மக்கள் சக்தியின் தோற்றம்

2019 ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், பெண்கள் குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட 21 வெவ்வேறு அரசியல் கட்சிகளையும் குழுக்களையும் கலைஞர்கள் அறிஞர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தேசிய மக்கள் சக்தி (NPP)

இலங்கையின் இடதுசாரிக் கட்சிப் பாரம்பரியத்துக்கு சுமார் 85 ஆண்டு கால வரலாற்று நீட்சியுண்டு. 1935 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பதிவு செய்யப்பட்ட கட்சியும், முதலாவது இடதுசாரிக் கட்சியுமான லங்கா சமாஜக் கட்சி தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அதிலிருந்து பிரிந்து கொம்யூனிஸ்ட் கட்சி உருவானது அதனைத் தொடர்ந்து பிளவுக்கு மேல் பிளவென பல தடவைகள் பிரிந்து பல இடதுசாரிக் கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளன.

காலத்துக்கு காலம் அத்தகைய இடதுசாரிக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான பல முயற்சிகளும் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. அவ்வாறான ஐக்கிய முன்னணிகள் கட்டப்பட்டுள்ளன. பின்னர் அவையும் பிரிந்து சுக்குநூறாகி சுருங்கின. இது இலங்கைக்கே உரித்தான பண்பல்ல. உலகம் முழுவதும் இத்தகைய ஒன்றிணைவையும், உடைவுகளையும் காணமுடியும். வேகமாக பிளவடையும் பண்புகள் இடதுசாரி இயக்கங்களுக்கே உரிய தனித்துவமான பண்போ என எண்ணத் தோன்றும். இன்னும் உண்மையைச் சொல்லப்போனால் பூர்ஷுவாக் கட்சிகள் கூட எண்ணிக்கையில் இந்த அளவு பிளவுகளைக் கண்டிருக்காது.

இதன் நீட்சியாகவே இன்றைய தே.ம.ச. வைப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தக் கூட்டானது வரலாற்றில் புதிய வடிவமென்றே கூறவேண்டும்.

ஜே.வி.பி யை விரும்புகிற பல தனி நபர்களும், அமைப்புகளும் நெடுங்காலமாக அதனுடன் எவ்வாறு சேர்ந்து இயங்குவது என்கிற கேள்வி இருந்து கொண்டே இருந்தன. கட்சி விதிகளுக்கு உட்பட்டு கட்சியின் அங்கத்தினர் ஆகாமலே கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தர முடியாதா? கட்சியுடன் நேரடியாக தொடர்பில் இருந்து கொண்டு அதன் பணிகளில் பங்கெடுக்க முடியாதா? விரும்பிய போது சினேகபூர்வமாகவே விலகும் வாய்ப்பு இல்லையா? என்கிற கேள்விகள் பலருக்கும் நெடுங்காலமாக இருந்தன. தற்கான பொறிமுறையின் அவசியத்தை ஜே.வி.பி.யும் உணர்ந்திருந்தது. அதன் விளைவே தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச)

மிகவும் முற்போக்கான இலங்கையை உருவாக்குவதற்காக கூட்டுசேரும் நோக்கத்தை தே.ம.க நெறிப்படுத்தியது. ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குதல், உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், வளங்களை சமமாகப் பகிர்ந்தளித்தல், பொருளாதார ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய ஜனநாயக இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்குவதே அதன் நோக்கம் என அதனை ஆரம்பிக்கும் போது தே.ம.க அறிவித்தது.

இனப்பிரச்சினையின் மீதான அணுகுமுறைகள்

தற்போதைய தே.ம.க.வின் பிரதான தலைமைக் கட்சியான ஜே.வி.பியின் கடந்த காலங்களில் இனப்பிரச்சினை குறித்த அணுகுமுறைகளை தமிழ் பேசும் மக்கள் மறந்துவிடவில்லை.

1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் அரசு மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி,பி) தடை செய்வதற்காக வசதியாக போட்ட பழி ‘83 கலவரங்களுக்கு ஜே.வி,.பி.யே பொறுப்பு’ என்பது தான். அக்கலவரத்தில் ஜே.வி.பிக்கு கிஞ்சித்தும் பொறுப்பு இல்லை என்பதை அனைவரும் அறிந்த போதும் ஜே.வி.பி.யின் மீது குற்றம் சாட்டினால் அது எடுபடும் என்று ஏன் ஜே.ஆர். உறுதியாக நம்பினார். அன்றைய நிலையில் ஒரு தமிழர் விரோத சக்தியாக குற்றம்சுமத்த இலகுவாக இருந்த ஒரு கட்சியாக ஜே.வி.பி. இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும். மேலும் கூடவே கொம்யூனிஸ்ட் கட்சியையும், நவ சம சமாஜக் கட்சியையும் சேர்த்தே ஜே.ஆர். தடை செய்தார்.

ஜே.வி.பியின் மீது அத்தகைய பழியைப் போடுவதற்கு உடனடி, நேரடி ஆதாரங்கள் எதுவும் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் ஜே.வி.பி மீது அந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு சாதகமான சித்தாந்தப் பின்னணியை ஜேவிபி கொண்டிருந்தது என்பது உண்மை.

இன்றைய ஜேவிபி தலைமையின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிகிற போதும் அம்மாற்றங்கள் அடிமட்டத் தொண்டர்கள் வரை கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் எலவே செய்யும். இது வரை ஜேவிபி இனப்பிரச்சினை தொடர்பில் தமது கடந்தகால நிலைப்பாடு பற்றிய சுயவிமர்சனம் பகிரங்கமாக வெளியிட்டதில்லை.

சண்முகதாசன் தலைமையிலான சீன கொம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விஜேவீர நீக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று விஜேவீரவின் இனவாதப் போக்கு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 1966 இல் டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து சிங்கள இனவாத அணியினர் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது விஜேவீரவும் சகாக்களைக் கூட்டிக்கொண்டு அவ்வொப்பந்தத்துக்கு எதிராக ஊர்வலம் சென்றது குறித்து கட்சி விசாரணை நடத்தி அவரை வெளியேற்றியது.

ஜே.வி.பி 1971 கிளர்ச்சியைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த போது ஜேவிபியில் இணைந்தவர்களுக்கு இரகசியமாக நடத்தப்பட்ட பிரதான ஐந்து வகுப்புகளில் ஒன்று இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றியது. அதில் மலையகத் தொழிலாளர்களை சக பாட்டாளி வர்க்கமாக இனங்கண்டு போராட்டத்தில் இணைத்துக்கொள்வதற்குப் பதிலாக சிங்களத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிரித்து  அவர்களை எதிரிகளாக சித்திரித்தது ஜேவிபி.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும், இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வான 13ஆம் திருத்தச் சட்டத்தையும், மாகாண சபை முறைமையையும்  எதிர்த்தது, வடக்கு கிழக்கை நீதிமன்ற வழக்குக்குக்கு ஊடாக நிரந்தரமாக பிரித்தது, சுனாமி பொதுக் கட்டமைப்புக்கு தடை விதிக்க வைத்தது, சமாதானப் பேச்சுவார்த்தையை இனவாத சக்திகளுடன் கூட்டு சேர்ந்து குழப்பி எதிர்த்துக்கொண்டே இருந்தது. யுத்தத்தில் மகிந்த அரசுடன் கைகோர்த்தது, இராணுவ ஆட்சேர்ப்பில் பங்கெடுத்தது, அவசரகால சட்டத்துக்கு தொடர் ஆதரவை வழங்கியது என தமிழ் மக்களுக்கு எதிராக பல வகைகளிலும் தமது நிலைப்பாட்டை வெளிக்காட்டி வந்திருக்கிறது ஜேவிபி.

ஜேவிபியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பாரிய கட்சிப் பிளவின் பின் உருவானது. கட்சியில் இருந்து வெளியேறி முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கிய தோழர்கள் குறைப்பாடுகளுடன் என்றாலும் ஒரு விரிவான சுயவிமர்சனத்தை வெளியிட்டார்கள். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகவும், கடந்த காலங்களில் தமது நிலைப்பாடு தவறு என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். பல்வேறு தளங்களிலும் தத்துவார்த்த விவாதங்களை முன்னெடுத்தார்கள். அவர்களின் அந்த விவாதத்தின் தாக்கம் ஜேவிபியை சற்று சுயசுத்தம் செய்யத் தள்ளியிருந்தது என்பதை மறுக்க முடியாது.

எவ்வாறிருந்த போதும் ஜே.வி.பி. இனவாத அணிகளுடன் இப்போது இல்லை. இனவாதக் கருத்துக்களையும் அது வெளிப்படுத்துவதில்லை. கூடவே இன ஐக்கியம், இனப்பிரச்சினைத் தீர்வு என்பவற்றில் தமது அக்கறையையும் வெளிக்காட்டி வருகின்றனர். இனப்பிரச்சினை மீதான தமது கொள்கை மாற்றத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினால் அது பெரும்பான்மை வாக்குகளை கிடைக்காமல் செய்து விடுமோ, அதுவே தமது வெற்றியை பாதித்து விடுமோ என்கிற பீதி அவர்களிடம் உண்டு. 

தே.ம.க வை இம்முறை வெல்ல வைக்க விரும்பும் பல தமிழ், முஸ்லிம் மக்களும் மேற்படி காரணிகளால் அவர்கள் தற்போதைக்கு வெளிப்படையாக இனப்பிரச்சினை பற்றிய அவர்களின் கொள்கையையும், வேலைத்திட்டத்தையும் பகிரங்கப் படுத்தத் தேவையில்லை என்றும், அதிகாரம் கைக்கு வரும்வரை பொறுத்திருப்போம் என்றும் விட்டுக்கொடுத்து இயங்குவதைக் கான முடிகிறது.

குறிப்பாக நவம்பரில் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்; அது நடந்து முடியும் வரையாவது இனப்பிரச்சினை குறித்த அழுத்தங்களை கொடுக்காது இருப்போம் என்று உரையாடுவதை கவனிக்க முடிகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் வெகுஜன அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முன்னர் முன்னர் ஜேவிபி வெளிப்படையாக தமது சுயவிமர்சனத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். சிங்களச் சூழலில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் தான். முக்கியமாக தமிழ் மொழியிலும் இதனை மேற்கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் இலங்கையில் எந்த கட்டமைப்பு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை தேசிய மக்கள் சக்தி உணர வேண்டும். அல்லது நாம் உணர்த்த வேண்டும்.

புதிய மாற்றங்களால் கதி கலங்கிப் போயிருப்பவர்கள் யார்?

தற்போது புதிய ‘ஜனாதிபதி அரசாங்கம்’ பதவி ஏற்ற நாளிலிருந்து வேகமாக பல நல்ல மாற்றங்களை மேற்கொண்டு வருவது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அனுரவை எதிர்த்தவர்கள் கூட வியப்புடன் வரவேற்பதைக் காண முடிகிறது.

அமைச்சரவை மாற்றங்கள், ஆளுநர் மாற்றங்கள், பொலிசாருக்கு அரசியல் தலையீடு இருக்காது என்கிற உத்தரவாதம், ஊழல் லஞ்சம் பற்றிய விசாரணைகளை தொடக்கியிருப்பது, அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலைகளை உடனடியாக குறைத்து, மின்சாரம், எரிபொருள் போன்றவற்றின் விலைக்குறைப்பு, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தைகளின் மூலம் மீள் ஓப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள், தே.ம.ச. மீதான சர்வதேச நாடுகள் கொண்டிருந்த சந்தேகங்களை நீக்கும் வகையில் அவர்களுடன் நல்லெண்ண நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல மாற்றங்கள் அதி வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையின் எல்லைக்குள் மாற்றக் கூடியவற்றையே அனுர திசாநாயக்க அரசாங்கம் செய்ய முடியும். கட்டமைப்பு மாற்றம் என்பது அவ்வளவு சுலபமாக ஏற்படுத்தக் கூடியதல்ல. அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுத்தாக வேண்டும்.

தற்போதைய அரசாங்கமானது வரலாற்றில் முதல் பரிசோதனை. இந்த அரசாங்கத்தை ஆதரிக்காதவர்கள் மட்டுமன்றி ஆதரித்தவர்கள் கூட மாற்றம் எப்படி இருக்கும் என்பதை அறிய பேராவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் அரச துறைகளில் காணப்படும், கால விரயம், அரச சொத்து விரயம், இழுபறி, லஞ்சம், ஊழல், பொறுப்பின்மை என்பவற்றை நீக்கினாலே நாட்டில் முதுகெலும்பை கணிசமான அளவு நிமிர்த்தி விடலாம். அரச ஊழியர்கள் துஷ்பிரயகங்களுக்கு பழக்கப்பட்டிருப்பது இன்று நேற்று உருவானதல்ல. அதற்கு ஒரு நீட்சி இருக்கிறது. துஷ்பிரயோகம் செய்வதை தமது உரிமையாகவும், கடமையாகவும் கருதுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு துஷ்பிரயோகம் நிறுவனமயப்பட்டிருக்கிறது. சிவில் நிர்வாகத் துறைகளில் உள்ள அரச ஊழியர்களை மேலிருந்து கீழ் வரை அறவொழுக்கத்துக்கு கொண்டு வந்து விட்டால் போதும். புதிதாக அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்பு சில காலத்துக்கு செய்யவே வேண்டியதில்லை.

அரச துறைகளில் இருந்து தான் இவற்றைத் தொடங்க வேண்டும். கட்டமைப்பு மாற்றம் என்பது அங்கிருந்து தான் தொடங்கும்.

அடிப்படை, அத்தியாவசிய தேவைகளின் மீதான நெருக்குவாரங்களை தளர்த்துவதை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். இந்த அரசாங்கத்தை நிறுவியவர்கள் பெரும் தனவந்தர்கள் அல்லர். சாமானியர்கள் என்பதை நினைவிற் கொள்வோம்.

இதுவரை காலம் தனவந்தர்களுக்கும், வரி ஏய்ப்பு செய்து நாட்டின் சாமானிய மக்களுக்கு சேர வேண்டிய அரச கஜானாக்களை தமது தனிப்பட்ட பைகளுக்குள் சுருட்டிக்கொண்டவர்கள் அரசியல் வாதிகளின் தயவில் தான் அதனை செய்தார்கள். இந்த அரசாங்கத்தில் அதை செய்ய முடியாது என்பதை இந்த அரசாங்கத்தை நிறுவிய வாக்காளர்கள் நம்புகிறார்கள்.

இது வரை வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து சட்ட ரீதியில் வலுக்கட்டாயமாக குறுகிய காலத்தில் பணத்தை மீட்டெடுத்தாலே தற்போதைய கடனில் பெரும்பங்கை சரி செய்து விட முடியும். அதை முதலில் செய்ய வேண்டும்.

மொத்தத்தில் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஊடாக மக்களையும் பிரக்ஞைக்கும், பொறுப்புக்கும், அறத்துக்கும் பழக்கி எடுத்து விடலாம். இத்தகைய மாற்றங்களுக்கு ஊடாக ஒரு பண்பாட்டு மாற்றத்தையே படிப்படியாக ஏற்படுத்திவிட முடியும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தே.ம.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்பதை பலரும் நம்புகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த சகல தே.ம.க. வுக்கு வெளியில் இருக்கும் பாரம்பரியக் கட்சிகளும், இனவாரிக் கட்சிகளும் அணிதிரள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை கான முடிகிறது.

தே.ம.க.வின் வெற்றியானது பல பாரம்பரிய கட்சிப பிரமுகர்களை அரசியலில் இருந்து ஓய்வு பெற வைத்திருக்கிறது. இனி தமது அடுத்த ஆட்சியொன்று அமைவதற்கான காலம் அருகில் இல்லை என்பதை பலர் நம்புகிறார்கள். இவர்ஜ்களில் பலர் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சுப் பதவியை சுவீகரித்து விடுபவர்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரே தடவையில் தமது அதிகாரங்களையும், சுகபோகங்களையும், அதன் சுவையையும் இழந்து விட்டிருக்கின்றனர். ஒரு வகையில் அவர்களுக்கு இதுவோர் அதிர்ச்சி மட்டுமன்றி, விரக்தியின் உச்சமும் கூட.

இவ்வாட்சியை எந்த விலைகொடுத்தேனும் கவிழ்க்கா விட்டால் தமது எதிர்காலம் முடிந்துவிடும் என்று நம்புகிறார்கள். போதாததற்கு இவர்களில் பலர் ஊழல், லஞ்சம், பதவி துஷ்பிரயோகம் என்பவற்றுடன் தொடர்புடையவர்கள். கடந்த அரசாங்கங்களில் பேரம் பேசி சமாளித்ததைப் போல தற்போது செய்ய முடியாது என்கிற புதிய நிலை. அது மேலும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே ஒரு புறம் மோசடிமிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு சக்திகள், மறுபுறம் உள்நாட்டில் காலை வாறுவதற்கு தயாராகிவரும் சக்திகள் என பல்முனை எதிர்ப்புகளையும் மீறி இவ்வாட்சி தாக்கு பிடிக்குமா என்பதே பலருக்கும் இருக்கிற அடிப்படிக் கேள்வி.

நன்றி - தாய்வீடு - ஒக்டோபர் - 2024

Download


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates