“ஐரோப்பாவில் மட்டுமல்ல உலகின் அத்தனை உடமை வர்க்கங்களும் தங்களின் ஒரு பொது எதிரியை வீழ்த்த துடிக்கின்றன. அந்த போது எதிரிக்கு அவர்கள் இட்ட பெயர் கம்யூனிச பூதம்.”
இவ்வாறு கார்ல் மாக்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்படப்படுகிறது
இலங்கையில் தற்போதைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக தேசிய மக்கள் சக்தியை (தே.ம.க) சேர்ந்த அனுர குமார திசாநாயக்கவின் வெற்றியை உலகம் முழுவதும் காண்கின்றனர். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை ஒரு முழுமையான கொம்யூனிஸ்ட் கட்சியாக நாம் காண இயலாத போதும் இலங்கையில் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் சிதைந்து அழிந்துவிட்ட நிலையில் எஞ்சியிருக்கும் ஒரு சில கட்சிகளில் பலமான இடதுசாரிக் கட்சியாக ஜே.வி.பி. இருக்கிறது.
“கொம்யூனிச பூத”க் கதைகளை பிரச்சாரம் செய்தே ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகள் சிதறடித்து விடுவார்கள் என்கிற அச்சமானது ஒரு உலக அச்சமே. எனவே உலகளாவிய ரீதியில் கொம்யூனிச பெயர்களைத் தாங்கிய கட்சிகள் அரிதாகி விட்டன. அதற்குப் பதிலாக வெகுஜன ஜனநாயக மக்கள் இயக்கங்களாக மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்றுவதை கான முடியும். அந்த வகையில் தேசிய மக்கள் கட்சியும், அதன் வேலைத்திட்டங்களும், வியூகமும் சிறந்த மூலோபாய, தந்திரோபாய உள்ளடக்கங்களைக் கொண்டது எனக் கொள்ளலாம்.
தற்போதைய தே.ம.க.வின் மீது எந்தளவு நம்பிக்கை கொள்வது என்பதே தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னரும் அதனை ஆதரிக்காத பலரிடமும் பரவலாக இருக்கிற கேள்வி.
மக்களுக்கு இருந்த தெரிவு
ஏலவே முடிவு செய்யப்ட்டிருப்பவர்களில் இருந்து தான் நமக்கான தெரிவை செய்ய முடியும். வெற்றி சாத்தியப்படக் கூடியவர்களில் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதே மக்களுக்கு இருந்த தெரிவு. ஆக மொத்தத்தில் இந்தத் தேர்தலில் நம்மை மீட்க தேவதைகள் நிறுத்தப்படவில்லை. நிறுத்தப்பட்டிருக்கின்ற வேட்பாளப் பிசாசுகளில் குறைந்த அளவு ஆபத்தை விளைவிக்க கூடிய பிசாசு ஒன்றை தெரிவு செய்வதே நமக்கு மிஞ்சி இருந்த ஒரே தெரிவு.
இவர்களில் இதற்குமுன்னர் அதிக இழப்பை ஏற்படுத்தியவர்கள், அல்லது அதிக இழப்புக்கு காரணமாக இருந்தவர்கள், அதிக இழப்பை செய்யக் கூடியவர்கள் என்போரை கணித்து அவர்களை தோற்கடிப்பதும் வாக்காளர்களுக்கு கிடைத்த ஜனநாயக வாய்ப்பு. எப்போதும் புதிய பரிசோதனைகளுக்கு ஒரு விலை உண்டு. அது முன்னைய வரலாற்று அனுபவங்களை விட மோசமானது அல்லவே என்றே தோன்றியது.
இவர்கள் செய்வார்களா? நாட்டை ஆளக்கூடிய அனுபவம் உண்டா? போன்ற கேள்விகள் தொடக்கம் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் வயதானவர்களைக் கொன்று விடுவார்களே. அதனால் தான் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்கிற பாமரத்தனமான விளக்கங்களைக் கொண்டிருந்த பலரைக் கண்டேன்.
வாக்கை தெரிந்த பிசாசுகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக... தெரியாதது பிசாசு தானா என்று அடையாளம் காண்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வாக்காளர்களுக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பென்றே கூற முடியும்.
இந்த அளவுகோளின்படி அனுர குமார திசாநாயக்க ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ஊழலற்ற, இலங்கை பற்றிய அதிக விபரங்கள் அறிந்த, தர்க்க வல்லமை உள்ள, கோட்பாட்டு ரீதியில் சிக்கல்களை அணுகுகிற, பாமர மக்களுக்கும் விளங்கக் கூடிய வகையில் நிலைமையை விளக்கத் தெரிந்த ஒருவராக இருந்தார். இதெல்லாவற்றையும் விட அவர் ஒருவரே வரலாற்றில் கிராமப்புறத்தில் இருந்தும் அடிமட்ட வர்க்கத்தில் இருந்தும் இலங்கையின் உயர் அரசியல் அதிகாரப் பதவியான நிறைவேற்று ஜனாதிபதிப் பதவிக்கு வந்தவர் எனலாம்.
இந்தத் தேர்தலில் செல்வாக்கு செலுத்திய அரசியல் சுலோகங்களில் முக்கியமானது பொருளாதாரம் பற்றியது. ஈராண்டுகளுக்கு முன்னர் வரலாறு காணாத நிதி நெருக்கடிக்குள் சிக்கி, விலை அதிகம் கொடுத்தாலும் வீதிகளில் அத்தியாவசியத் தேவைகளைப பெற முடியாமல் நீண்ட வரிசைகளில் மக்கள் பட்ட திண்டாட்டங்கள் உலகமறிந்தது. இறுதியில் மக்கள் இன, மத, மொழி, சாதி, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து “அரகலய” போராட்டத்தை நடத்தி கோட்டபாய தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தார்கள்.
எனவே நாட்டு மக்களின் மையப் பிரச்சினையாக பொருளாதாரப் பிரச்சினை மாறி இருந்தது. எந்தவொரு நாட்டின் பிரச்சினைகளையும் வரிசைப்படுத்தினால் அந்த வரிசையில் முன்னிலை வகித்த சிக்கல்கள் காலத்துக்கு காலம் மாறும். இது பொது விதி. மையப் பிரச்சினை என்று வெகுஜன அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படுகிற பிரச்சினையானது படிநிலை வரிசையில் இடம் மாறிக்கொண்டிருக்கும்.
இலங்கையில் இனப்பிரச்சினையானது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக “தேசியப் பிரச்சினை” என்றே அழைக்கப்பட்டு வந்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் யுத்தத்திற்குப் பின்னர் படிப்படியாக அதன் சாரமிழக்கப்பட்டு தேசியப் பிரச்சினை என்கிற நிலையில் இருந்து கீழிறக்கப்பட்டுவிட்டிருக்கிறது. குறிப்பாக நாடு தழுவிய பொருளாதார நெருக்கடி இதற்கு முக்கிய காரணியாக அமைந்தது.
வரலாற்றில் முதற் தடவையாக பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞாபனங்களில் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துமளிக்கப்படாத தேர்தலாக வந்தமைந்தது இதன் நீட்சியாகத் தான். போதாதற்கு தமிழ் மக்களின் தரப்பில் பேரம் பேசும் ஆற்றலை குறைக்கிற நிலைமைகள் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததும் முக்கியமான காரணி எனலாம். பல தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தும் பொது வேட்பாளராக அரியநேந்திரனை இறக்கி வடக்கு கிழக்கில் தமது செல்வாக்கை 13.91% வீதத்தால் மட்டுமே உறுதி செய்துகொள்ள முடிந்தது. இது தென்னிலங்கைக்கு தமிழ் மக்களின் பலத்தை மோசமாக சித்திரித்து விட்டிருக்கிற நிலைமையாகவே காண வேண்டியிருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் எதிரிகளாகக் கருதுகிறவர்களுக்கே ஏனைய அதிகப்படியான வாக்குகளை தமிழ் மக்கள் அள்ளி வழங்கியிருக்கிறார்கள் என்பதை குறிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இத்தகைய சூழலில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாடாளாவிய ரீதியில் வெறும் 3.16 vவீதத்தை மட்டுமே பெற்ற தேசிய மக்கள் கட்சியின் இம்முறை 42.31% வீதைத்தை பெற்று வெற்றியீட்டியிருப்பது பெரும் பாய்ச்சல் என்றே வர்ணிக்க முடியும். இது தேசிய மக்கள் கட்சியின் வெற்றி என்பதை விட பாரம்பரியக் கட்சிகளின் தோல்வியென்றே இனங்கான முடியும். பாரம்பரிய கட்சிகளுக்கு விடைகொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே இன்னொருவகையில் கூற முடியும். இந்தக் கட்சிகளின் மீதான வெறுப்பை கடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே காண முடிந்தது. இலங்கையின் பாரம்பரிய பழமையான தேசியக் கட்சிகளாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் சாவு மணி அடித்திருந்தார்கள். புதிய வகையிலான கட்சிகளை மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பதும் அந்த இடைவெளியை நிரப்பும் சக்தியாக தே.ம.க வை பார்க்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்பதையே முடிவுகள் பறைசாற்றுகின்றன.
ஆனால் தமிழ் பிரதேசங்களில் சற்று விதிவிலக்கு. அவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கிய வாக்குகள் சஜித்தை ஆதரிப்பதற்காக வழங்கிய வாக்குகளா அல்லது அனுர குமார திசாநாயக்கவை தோற்கடிக்க வழங்கிய வாக்குகளா என்கிற விவாதங்கள் இன்னமும் தொடர்கின்றன. எவ்வாறிருந்த போதும் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி போதிய அளவு தமது அரசியலை முன்னெடுக்காததே அவர்கள் அங்கே அடைந்த தோல்விகளுக்கு காரணம் என்று கூறலாம்.
தே.ம.க. ஜனாதிபதித் தேர்தலில் மற்றவர்களை விட பெரும்பான்மை பெற்றிருக்கிற போதும் நாடளாவிய ரீதியில் பெரும்பான்மை வாக்காளர்களின் வாக்குகளை சுவீகரித்துக் கொள்ள முடியவில்லை என்பது மறு புறத்தில் உண்மையே. இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் தே.ம.க.வுக்கு எதிராக மிஞ்சிய 58% சத வீத மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்கிற உண்மையையும் நாம் கடந்து விட முடியாது. அதாவது பெரும்பான்மை மக்களின் விருப்பற்ற தெரிவாக இது இருக்கிறது என்பதே மறுபுற உண்மை.
தேசிய மக்கள் சக்தியின் தோற்றம்
2019 ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், பெண்கள் குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட 21 வெவ்வேறு அரசியல் கட்சிகளையும் குழுக்களையும் கலைஞர்கள் அறிஞர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தேசிய மக்கள் சக்தி (NPP)
இலங்கையின் இடதுசாரிக் கட்சிப் பாரம்பரியத்துக்கு சுமார் 85 ஆண்டு கால வரலாற்று நீட்சியுண்டு. 1935 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பதிவு செய்யப்பட்ட கட்சியும், முதலாவது இடதுசாரிக் கட்சியுமான லங்கா சமாஜக் கட்சி தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அதிலிருந்து பிரிந்து கொம்யூனிஸ்ட் கட்சி உருவானது அதனைத் தொடர்ந்து பிளவுக்கு மேல் பிளவென பல தடவைகள் பிரிந்து பல இடதுசாரிக் கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளன.
காலத்துக்கு காலம் அத்தகைய இடதுசாரிக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான பல முயற்சிகளும் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. அவ்வாறான ஐக்கிய முன்னணிகள் கட்டப்பட்டுள்ளன. பின்னர் அவையும் பிரிந்து சுக்குநூறாகி சுருங்கின. இது இலங்கைக்கே உரித்தான பண்பல்ல. உலகம் முழுவதும் இத்தகைய ஒன்றிணைவையும், உடைவுகளையும் காணமுடியும். வேகமாக பிளவடையும் பண்புகள் இடதுசாரி இயக்கங்களுக்கே உரிய தனித்துவமான பண்போ என எண்ணத் தோன்றும். இன்னும் உண்மையைச் சொல்லப்போனால் பூர்ஷுவாக் கட்சிகள் கூட எண்ணிக்கையில் இந்த அளவு பிளவுகளைக் கண்டிருக்காது.
இதன் நீட்சியாகவே இன்றைய தே.ம.ச. வைப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தக் கூட்டானது வரலாற்றில் புதிய வடிவமென்றே கூறவேண்டும்.
ஜே.வி.பி யை விரும்புகிற பல தனி நபர்களும், அமைப்புகளும் நெடுங்காலமாக அதனுடன் எவ்வாறு சேர்ந்து இயங்குவது என்கிற கேள்வி இருந்து கொண்டே இருந்தன. கட்சி விதிகளுக்கு உட்பட்டு கட்சியின் அங்கத்தினர் ஆகாமலே கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தர முடியாதா? கட்சியுடன் நேரடியாக தொடர்பில் இருந்து கொண்டு அதன் பணிகளில் பங்கெடுக்க முடியாதா? விரும்பிய போது சினேகபூர்வமாகவே விலகும் வாய்ப்பு இல்லையா? என்கிற கேள்விகள் பலருக்கும் நெடுங்காலமாக இருந்தன. தற்கான பொறிமுறையின் அவசியத்தை ஜே.வி.பி.யும் உணர்ந்திருந்தது. அதன் விளைவே தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச)
மிகவும் முற்போக்கான இலங்கையை உருவாக்குவதற்காக கூட்டுசேரும் நோக்கத்தை தே.ம.க நெறிப்படுத்தியது. ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குதல், உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், வளங்களை சமமாகப் பகிர்ந்தளித்தல், பொருளாதார ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய ஜனநாயக இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்குவதே அதன் நோக்கம் என அதனை ஆரம்பிக்கும் போது தே.ம.க அறிவித்தது.
இனப்பிரச்சினையின் மீதான அணுகுமுறைகள்
தற்போதைய தே.ம.க.வின் பிரதான தலைமைக் கட்சியான ஜே.வி.பியின் கடந்த காலங்களில் இனப்பிரச்சினை குறித்த அணுகுமுறைகளை தமிழ் பேசும் மக்கள் மறந்துவிடவில்லை.
1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் அரசு மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி,பி) தடை செய்வதற்காக வசதியாக போட்ட பழி ‘83 கலவரங்களுக்கு ஜே.வி,.பி.யே பொறுப்பு’ என்பது தான். அக்கலவரத்தில் ஜே.வி.பிக்கு கிஞ்சித்தும் பொறுப்பு இல்லை என்பதை அனைவரும் அறிந்த போதும் ஜே.வி.பி.யின் மீது குற்றம் சாட்டினால் அது எடுபடும் என்று ஏன் ஜே.ஆர். உறுதியாக நம்பினார். அன்றைய நிலையில் ஒரு தமிழர் விரோத சக்தியாக குற்றம்சுமத்த இலகுவாக இருந்த ஒரு கட்சியாக ஜே.வி.பி. இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும். மேலும் கூடவே கொம்யூனிஸ்ட் கட்சியையும், நவ சம சமாஜக் கட்சியையும் சேர்த்தே ஜே.ஆர். தடை செய்தார்.
ஜே.வி.பியின் மீது அத்தகைய பழியைப் போடுவதற்கு உடனடி, நேரடி ஆதாரங்கள் எதுவும் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் ஜே.வி.பி மீது அந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு சாதகமான சித்தாந்தப் பின்னணியை ஜேவிபி கொண்டிருந்தது என்பது உண்மை.
இன்றைய ஜேவிபி தலைமையின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிகிற போதும் அம்மாற்றங்கள் அடிமட்டத் தொண்டர்கள் வரை கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் எலவே செய்யும். இது வரை ஜேவிபி இனப்பிரச்சினை தொடர்பில் தமது கடந்தகால நிலைப்பாடு பற்றிய சுயவிமர்சனம் பகிரங்கமாக வெளியிட்டதில்லை.
சண்முகதாசன் தலைமையிலான சீன கொம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விஜேவீர நீக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று விஜேவீரவின் இனவாதப் போக்கு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 1966 இல் டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து சிங்கள இனவாத அணியினர் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது விஜேவீரவும் சகாக்களைக் கூட்டிக்கொண்டு அவ்வொப்பந்தத்துக்கு எதிராக ஊர்வலம் சென்றது குறித்து கட்சி விசாரணை நடத்தி அவரை வெளியேற்றியது.
ஜே.வி.பி 1971 கிளர்ச்சியைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த போது ஜேவிபியில் இணைந்தவர்களுக்கு இரகசியமாக நடத்தப்பட்ட பிரதான ஐந்து வகுப்புகளில் ஒன்று இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றியது. அதில் மலையகத் தொழிலாளர்களை சக பாட்டாளி வர்க்கமாக இனங்கண்டு போராட்டத்தில் இணைத்துக்கொள்வதற்குப் பதிலாக சிங்களத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிரித்து அவர்களை எதிரிகளாக சித்திரித்தது ஜேவிபி.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும், இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வான 13ஆம் திருத்தச் சட்டத்தையும், மாகாண சபை முறைமையையும் எதிர்த்தது, வடக்கு கிழக்கை நீதிமன்ற வழக்குக்குக்கு ஊடாக நிரந்தரமாக பிரித்தது, சுனாமி பொதுக் கட்டமைப்புக்கு தடை விதிக்க வைத்தது, சமாதானப் பேச்சுவார்த்தையை இனவாத சக்திகளுடன் கூட்டு சேர்ந்து குழப்பி எதிர்த்துக்கொண்டே இருந்தது. யுத்தத்தில் மகிந்த அரசுடன் கைகோர்த்தது, இராணுவ ஆட்சேர்ப்பில் பங்கெடுத்தது, அவசரகால சட்டத்துக்கு தொடர் ஆதரவை வழங்கியது என தமிழ் மக்களுக்கு எதிராக பல வகைகளிலும் தமது நிலைப்பாட்டை வெளிக்காட்டி வந்திருக்கிறது ஜேவிபி.
ஜேவிபியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பாரிய கட்சிப் பிளவின் பின் உருவானது. கட்சியில் இருந்து வெளியேறி முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கிய தோழர்கள் குறைப்பாடுகளுடன் என்றாலும் ஒரு விரிவான சுயவிமர்சனத்தை வெளியிட்டார்கள். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகவும், கடந்த காலங்களில் தமது நிலைப்பாடு தவறு என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். பல்வேறு தளங்களிலும் தத்துவார்த்த விவாதங்களை முன்னெடுத்தார்கள். அவர்களின் அந்த விவாதத்தின் தாக்கம் ஜேவிபியை சற்று சுயசுத்தம் செய்யத் தள்ளியிருந்தது என்பதை மறுக்க முடியாது.
எவ்வாறிருந்த போதும் ஜே.வி.பி. இனவாத அணிகளுடன் இப்போது இல்லை. இனவாதக் கருத்துக்களையும் அது வெளிப்படுத்துவதில்லை. கூடவே இன ஐக்கியம், இனப்பிரச்சினைத் தீர்வு என்பவற்றில் தமது அக்கறையையும் வெளிக்காட்டி வருகின்றனர். இனப்பிரச்சினை மீதான தமது கொள்கை மாற்றத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினால் அது பெரும்பான்மை வாக்குகளை கிடைக்காமல் செய்து விடுமோ, அதுவே தமது வெற்றியை பாதித்து விடுமோ என்கிற பீதி அவர்களிடம் உண்டு.
தே.ம.க வை இம்முறை வெல்ல வைக்க விரும்பும் பல தமிழ், முஸ்லிம் மக்களும் மேற்படி காரணிகளால் அவர்கள் தற்போதைக்கு வெளிப்படையாக இனப்பிரச்சினை பற்றிய அவர்களின் கொள்கையையும், வேலைத்திட்டத்தையும் பகிரங்கப் படுத்தத் தேவையில்லை என்றும், அதிகாரம் கைக்கு வரும்வரை பொறுத்திருப்போம் என்றும் விட்டுக்கொடுத்து இயங்குவதைக் கான முடிகிறது.
குறிப்பாக நவம்பரில் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்; அது நடந்து முடியும் வரையாவது இனப்பிரச்சினை குறித்த அழுத்தங்களை கொடுக்காது இருப்போம் என்று உரையாடுவதை கவனிக்க முடிகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் வெகுஜன அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முன்னர் முன்னர் ஜேவிபி வெளிப்படையாக தமது சுயவிமர்சனத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். சிங்களச் சூழலில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் தான். முக்கியமாக தமிழ் மொழியிலும் இதனை மேற்கொள்ள வேண்டும்.
இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் இலங்கையில் எந்த கட்டமைப்பு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை தேசிய மக்கள் சக்தி உணர வேண்டும். அல்லது நாம் உணர்த்த வேண்டும்.
புதிய மாற்றங்களால் கதி கலங்கிப் போயிருப்பவர்கள் யார்?
தற்போது புதிய ‘ஜனாதிபதி அரசாங்கம்’ பதவி ஏற்ற நாளிலிருந்து வேகமாக பல நல்ல மாற்றங்களை மேற்கொண்டு வருவது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அனுரவை எதிர்த்தவர்கள் கூட வியப்புடன் வரவேற்பதைக் காண முடிகிறது.
அமைச்சரவை மாற்றங்கள், ஆளுநர் மாற்றங்கள், பொலிசாருக்கு அரசியல் தலையீடு இருக்காது என்கிற உத்தரவாதம், ஊழல் லஞ்சம் பற்றிய விசாரணைகளை தொடக்கியிருப்பது, அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலைகளை உடனடியாக குறைத்து, மின்சாரம், எரிபொருள் போன்றவற்றின் விலைக்குறைப்பு, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தைகளின் மூலம் மீள் ஓப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள், தே.ம.ச. மீதான சர்வதேச நாடுகள் கொண்டிருந்த சந்தேகங்களை நீக்கும் வகையில் அவர்களுடன் நல்லெண்ண நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல மாற்றங்கள் அதி வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையின் எல்லைக்குள் மாற்றக் கூடியவற்றையே அனுர திசாநாயக்க அரசாங்கம் செய்ய முடியும். கட்டமைப்பு மாற்றம் என்பது அவ்வளவு சுலபமாக ஏற்படுத்தக் கூடியதல்ல. அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுத்தாக வேண்டும்.
தற்போதைய அரசாங்கமானது வரலாற்றில் முதல் பரிசோதனை. இந்த அரசாங்கத்தை ஆதரிக்காதவர்கள் மட்டுமன்றி ஆதரித்தவர்கள் கூட மாற்றம் எப்படி இருக்கும் என்பதை அறிய பேராவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
முதலில் அரச துறைகளில் காணப்படும், கால விரயம், அரச சொத்து விரயம், இழுபறி, லஞ்சம், ஊழல், பொறுப்பின்மை என்பவற்றை நீக்கினாலே நாட்டில் முதுகெலும்பை கணிசமான அளவு நிமிர்த்தி விடலாம். அரச ஊழியர்கள் துஷ்பிரயகங்களுக்கு பழக்கப்பட்டிருப்பது இன்று நேற்று உருவானதல்ல. அதற்கு ஒரு நீட்சி இருக்கிறது. துஷ்பிரயோகம் செய்வதை தமது உரிமையாகவும், கடமையாகவும் கருதுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு துஷ்பிரயோகம் நிறுவனமயப்பட்டிருக்கிறது. சிவில் நிர்வாகத் துறைகளில் உள்ள அரச ஊழியர்களை மேலிருந்து கீழ் வரை அறவொழுக்கத்துக்கு கொண்டு வந்து விட்டால் போதும். புதிதாக அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்பு சில காலத்துக்கு செய்யவே வேண்டியதில்லை.
அரச துறைகளில் இருந்து தான் இவற்றைத் தொடங்க வேண்டும். கட்டமைப்பு மாற்றம் என்பது அங்கிருந்து தான் தொடங்கும்.
அடிப்படை, அத்தியாவசிய தேவைகளின் மீதான நெருக்குவாரங்களை தளர்த்துவதை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். இந்த அரசாங்கத்தை நிறுவியவர்கள் பெரும் தனவந்தர்கள் அல்லர். சாமானியர்கள் என்பதை நினைவிற் கொள்வோம்.
இதுவரை காலம் தனவந்தர்களுக்கும், வரி ஏய்ப்பு செய்து நாட்டின் சாமானிய மக்களுக்கு சேர வேண்டிய அரச கஜானாக்களை தமது தனிப்பட்ட பைகளுக்குள் சுருட்டிக்கொண்டவர்கள் அரசியல் வாதிகளின் தயவில் தான் அதனை செய்தார்கள். இந்த அரசாங்கத்தில் அதை செய்ய முடியாது என்பதை இந்த அரசாங்கத்தை நிறுவிய வாக்காளர்கள் நம்புகிறார்கள்.
இது வரை வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து சட்ட ரீதியில் வலுக்கட்டாயமாக குறுகிய காலத்தில் பணத்தை மீட்டெடுத்தாலே தற்போதைய கடனில் பெரும்பங்கை சரி செய்து விட முடியும். அதை முதலில் செய்ய வேண்டும்.
மொத்தத்தில் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஊடாக மக்களையும் பிரக்ஞைக்கும், பொறுப்புக்கும், அறத்துக்கும் பழக்கி எடுத்து விடலாம். இத்தகைய மாற்றங்களுக்கு ஊடாக ஒரு பண்பாட்டு மாற்றத்தையே படிப்படியாக ஏற்படுத்திவிட முடியும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தே.ம.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்பதை பலரும் நம்புகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த சகல தே.ம.க. வுக்கு வெளியில் இருக்கும் பாரம்பரியக் கட்சிகளும், இனவாரிக் கட்சிகளும் அணிதிரள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை கான முடிகிறது.
தே.ம.க.வின் வெற்றியானது பல பாரம்பரிய கட்சிப பிரமுகர்களை அரசியலில் இருந்து ஓய்வு பெற வைத்திருக்கிறது. இனி தமது அடுத்த ஆட்சியொன்று அமைவதற்கான காலம் அருகில் இல்லை என்பதை பலர் நம்புகிறார்கள். இவர்ஜ்களில் பலர் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சுப் பதவியை சுவீகரித்து விடுபவர்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரே தடவையில் தமது அதிகாரங்களையும், சுகபோகங்களையும், அதன் சுவையையும் இழந்து விட்டிருக்கின்றனர். ஒரு வகையில் அவர்களுக்கு இதுவோர் அதிர்ச்சி மட்டுமன்றி, விரக்தியின் உச்சமும் கூட.
இவ்வாட்சியை எந்த விலைகொடுத்தேனும் கவிழ்க்கா விட்டால் தமது எதிர்காலம் முடிந்துவிடும் என்று நம்புகிறார்கள். போதாததற்கு இவர்களில் பலர் ஊழல், லஞ்சம், பதவி துஷ்பிரயோகம் என்பவற்றுடன் தொடர்புடையவர்கள். கடந்த அரசாங்கங்களில் பேரம் பேசி சமாளித்ததைப் போல தற்போது செய்ய முடியாது என்கிற புதிய நிலை. அது மேலும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே ஒரு புறம் மோசடிமிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு சக்திகள், மறுபுறம் உள்நாட்டில் காலை வாறுவதற்கு தயாராகிவரும் சக்திகள் என பல்முனை எதிர்ப்புகளையும் மீறி இவ்வாட்சி தாக்கு பிடிக்குமா என்பதே பலருக்கும் இருக்கிற அடிப்படிக் கேள்வி.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...