Headlines News :
முகப்பு » , , , , » மகாவம்சத்தின் 2ஆம் பாகத்தை (சூளவம்சம்) எழுதியவர் தமிழரா? - என்.சரவணன்

மகாவம்சத்தின் 2ஆம் பாகத்தை (சூளவம்சம்) எழுதியவர் தமிழரா? - என்.சரவணன்

இலங்கையின் புனித வரலாற்று நூலாக கருதப் படுகிற மகாவம்சம் கி.மு. 483 தொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரை சுமார் 25 நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக பதிவுசெய்து 6 தொகுதிகளாக பதிப்பிக்கட்டிருக்கிறது. இன்றும் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகில் வேறெங்கும் வரலாறு இப்படி தொடர் வரலாறு பதிவுசெய்யப்பட்டிருக்கும் இன்னொரு நாடு சீனா. சீனா கி.மு 1250 க்கு முன் இருந்து வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கிறது. சீனாக்கு அடுத்ததாக சொல்லக் கூடிய நாடு இலங்கை தான்.

தீபவம்சம் என்ற நூலின் மிகத்திருத்தமான வடிவமே மகாவம்சம் (Mahavamsa) என்றும் கூறலாம். அந்த தீபவம்சமும், மகாவம்சமும் அதற்கு முன்னர் வெளியாகியிருந்த “சீஹல அததகத்தா” என்கிற பனுவலைத் தழுவியே எழுதப்பட்டது என்பதை பல ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். 

மகாவம்சத்தின் மூல ஆசிரியர் மகாநாம தேரர். தீபவம்சத்தில் அடங்கியிருப்பது போல் 37 அத்தியாயங்கள் மகாவம்சத்தில் உள்ளடங்கியுள்ளன. அந்த 37 அத்தியாயங்களையும் பாளி மொழியிலிருந்து மொழி பெயர்த்த வில்லியம் கைய்கர் (Wilhelm Geiger) முதல் 37 அதிகாரங்களை மகாவம்சம் என்றும், ஏனைய 38 இலிருந்து 100 வரையான அதிகாரங்களின் தொகுப்பை “சூளவம்சம்" (Culavamsa) எனவும் வகுத்து மொழி பெயர்த்துள்ளார். பாளி மொழியில் இருந்து ஐரோப்பிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது நூல் மகாவம்சம் தான்.

ஆக, மகாவம்சத்தின் 6 தொகுதிகளில் இரண்டாவது தொகுதியே “சூளவம்சம்” என்று அழைக்கப்படுகிறது.

"சூளவம்சம்” என்பது “சுளுவம்சம்” என்கிற பதத்திலிருந்து வந்தது. “சுளு” என்பது சிறு என்று அர்த்தம். “மகா வம்சம்” என்பது பெரிய வம்சக் கதையாகவும், “சுளு” என்பது சிறு வம்சக் கதையாகவும் “ராஜாவலிய” நூல் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. மேலும் முதலாவது தொகுதிக்கு வழங்கவேண்டிய புனிதத்தன்மைக்காகவும், கௌரவத்துகாகவும் அதை மகாவம்சமாகவே தனித்து அடையாளப்படுத்தும் நோக்கமும், தேவையும் சிங்களத் தரப்புக்கு இருந்து வந்திருப்பதை உணர முடிகிறது.

சூளவம்சம் ஒரே தடவையில் எழுதி முடிக்கப்பட்ட ஒன்றல்ல, ஒருவரால் எழுதப்பட்டதுமில்லை. அதுபோல தொடர்ச்சியாக கிரமமாக எழுதி முடிக்கப்பட்ட ஒன்றுமல்ல. பலரால் பல கால கட்டங்களில் அங்கும் இங்குமாக எழுதப்பட்டவற்றின் தொகுப்பே இது.

இதுவரையான மகாவம்சத்தின் அத்தனை தொகுதிகளையும் எழுதியவர்கள் பௌத்த பிக்குமார்களே. பிற்காலத்தில் அரசு மகாவம்சத்தை தொடர்ந்து எழுதுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் சிங்கள பௌத்த புலமையாளர்களை அப்பணியில் இணைத்துக்கொண்ட போதும் அப்பணியில் பௌத்த பிக்குமாரின் செல்வாக்கே அதிகமானது என்பதை அறிவீர்கள்.

கைகருக்கு முன்னரே மகாவம்சத்தை மொழிபெயர்த்த ஜோர்ஜ் டேனர் 101 அதிகாரங்களையும் ஒருங்கே மஹாவம்சம் (Mahavamsa) என்ற பெயரோடு மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். வில்ஹைம் கைய்கர் பாளியிலிருந்து முதலில் ஜெர்மனுக்கு மொழி மாற்றம் செய்துள்ளார். ஆனால், ஜோர்ஜ் டேனர் பாளியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருந்தார், அது பின்னர் முதலியார் விஜயசிங்க என்பவரால் மீளாய்வு செய்யப்பட்டு வெளிவந்தது. கைய்கர் மகாநாம தேரர் இயற்றிய மகாவம்சத்தை தனியாக பிரித்தெடுத்து அதை “மகாவம்சம்” என்றே அழைத்தார். எஞ்சிய பகுதியை சூளவம்சம் என்று பெயரிட்டு மகாவம்சத்தின் இரண்டாம் பாகமாக வெளியிட்டார். இதுவரையான மகாவம்சத்தின் 6 தொகுதிகளில் சூளவம்சம் தான் அதிக காலப்பகுதியை பதிவு செய்திருக்கிற தொகுதி எனலாம்.

புத்தரின் இலங்கை விஜயத்தோடு மகாவம்சத்தின் முதலாவது அதிகாரம் ஆரம்பமாகின்றது. கி.மு. 483 இலிருந்து கி.பி 362 ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றை இது விபரிக்கின்றது. இலங்கையின் முதலாவது மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயனிலிருந்து 58 வது மன்னனாகிய மகாசேனன் வரை மகாவம்சம் விபரித்துச் செல்கிறது. இன்றும் பலர் அறிந்திருக்கிற மகாவம்சம் என்பது இந்த முதலாவது மகாவம்சம் தான்.

மகாசேனன் மகன் ஸ்ரீ மேகவண்ணன் (கித்சிரிமெவன்) தொடக்கம் (கி.பி.362) ஸ்ரீ விக்கிரமசிங்கன் வரை (கி.பி..1815) சூளவம்சம் விபரிக்கின்றது. சுமார் பதினான்கு நூற்றாண்டு வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது சூளவம்சம்.

மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள பல கதைகளுக்கு தொல்லியல் சான்றுகள் போதுமானதாக இல்லை. அதில் உள்ள பல தகவல்கள் உண்மைக்குப் புறம்பான; விஞ்ஞானத்துக்கு ஒவ்வாத; நம்பகத்தன்மைக்கு நெருக்கமற்ற புனைகதைகள் என்பதை உணர முடியும். வாய்மொழிக் கதைகளையும்; ஆசிரியரின் சுய விருப்புவெறுப்புகளுக்கு உட்பட்டவை என்பதையும் உணர முடியும். ஆனால் அப்படியான வரலாற்று அவநம்பிக்கையைச் சூளவம்சத்தில் காண்பதற்கான ஏதுக்கள் குறைவு. ஏனெனில் சூளவம்சத்தில் கூறப்படுகின்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகளும்; கல்வெட்டு ஆதாரங்களும், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளும் நிரூபணமாக்குகின்ற மெய்மையைக் காணலாமென கைய்கர் உறுதிப்படுத்துகிறார்.

இதனால் தான் மகாவம்சத்தை ஒரு புராணமாகவும், சூளவம்சத்தை ஒரு காவியமாகவும் சில வரலாற்றாசிரியர்கள் அழைக்கிறார்கள். (L. H. Horace Perera, M. Ratnasabapathy, 1954)

சூளவம்சத்தின் 37 இலிருந்து 79 வரையிலான அதிகாரங்களைத் தொகுத்தளித்த தர்மகீர்த்தி தேரரின் (தம்பதெனியவில் வாழ்ந்தவர்) சூளவம்ச வருணனைகள் இந்தியக் காவிய மரபினை நினைவுபடுத்துவனவாக இருக்கின்றன என்பர். சூளவம்சம் மொத்தம் 64 அத்தியாயங்களைக் கொண்டது. அதில் 42 அத்தியாயங்கள் தர்மகீர்த்தி தேரர் ஆக்கியது எனலாம். இன்னும் சொல்லப் போனால் சூளவம்சத்தின் ஆசிரியர் ஒருவரல்ல. பலர்.

தர்மகீர்த்தி தேரர் ஒருவரா?

சூளவம்சத்தின் பெரும்பகுதியை எழுதிய தர்மகீர்த்தி தேரர் ஒரு தமிழர் என சிங்கள அறிஞர்களே ஒத்துக்கொள்கிறார்கள். அதே தமிழ் தேரர் தான் புத்தரின் தாதுப்பல் பற்றிய முக்கிய இதிகாச நூலான பௌத்தர்கள் போற்றும் “தாதாவம்ச” என்கிற பனுவலையும் (பராக்கிரமபாகுவின் வேண்டுகோளின் பேரில் பாளி மொழியில்(1)) இயற்றினார். (2) தர்மகீர்த்தி தேரர் சோழ நாட்டைச் சேர்ந்த தமிழ் பௌத்த துறவி. (3)

தர்மகீர்த்தி தேரரை சிங்கள நூல்கள் பலவற்றிலும், கட்டுரைகள் பலவற்றிலும் தம்மகித்தி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கைகர் உள்ளிட்டோர் பலர் ஆங்கிலத்தில் எழுதும்போதும் “Dhammakitti” என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் இலங்கை அரசால் இறுதியாக வெளியிடப்பட்ட மகாவம்சத்தின் 6ஆம் தொகுதியில் “தர்மகீர்த்தி” என்றே குறிப்பிடப்பட்டுள்ளதால் நானும் அதே பெயரை இங்கே பயன்படுத்துகிறேன்.

தர்மகீர்த்தியின் படைப்புகள் அத்தனையும் பாளிமொழியில் படைக்கப்பட்டமைக்கு இன்னொரு முக்கியமான காரணம்; உள்நாட்டு மொழியில் அது இயற்றப்பட்டால் அது ஒரு நாட்டுக்குள் தான் இருக்கும், ஆனால் பாளி மொழியில் இயற்றினால் அன்று பாளி மொழி பரவியிருந்த நாடுகள் அனைத்துக்கும் அது போய் சேரும் என்பதால் தான்.(4) ஆங்கிலத்தில் எழுதினால் சர்வதேச அளவில் அப்படைப்பு சேரும் என்று இன்று நம்புவதுபோல் அன்று பாளி மொழிக்கே ஆசிய கண்டத்தில் அதிக செல்வாக்கு இருந்ததை நாமறிவோம். ஆசியாவின் பெருவாரி நாடுகளில்; குறிப்பாக கற்றோர் மத்தியில் பாளி மொழி தான் செல்வாக்கு பெற்றிருந்தது. குறிப்பாக பௌத்த இலக்கியங்கள் பல பாளி மொழியில் இயற்றப்பட்டதன் பின்னணி இதுதான். அரசர்கள், ஆட்சி செய்தவர்கள், புலவர்கள், பௌத்த பிக்குகள் போன்றோர் தான் கல்வியறிவு பெற்ற குழாமினராக இருந்தனர். அவர்களில் பலர் பாளி மொழியை அறிந்திருந்தார்கள்.

சூளவம்சம் பிற்காலத்தில் மூன்று பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டது என்று கூறலாம்.

  1. கி.பி.362 இல் மகாசேனனின் மகன் ஸ்ரீ மேகவண்ணன் (கித்சிரிமெவன்) மன்னரின் ஆட்சிக் காலத்திலிருந்து ஆரம்பமாகி மகா பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலம் முடிவு வரையிலான கி.பி 1186 ஆம் ஆண்டு வரையும் மொத்தம் 884 வருட காலத்தை உள்ளடக்கியது தான் அந்த முதல் 42 அத்தியாயங்களும்.
  2. கிபி. 1186 இல் இரண்டாம் விஜயபாகு மன்னரின் ஆட்சிகாலத்திலிருந்து கி.பி. 1357 ஆம் ஆண்டு ஐந்தாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலம் வரையிலான மொத்தம் 171  ஆண்டுகால ஆட்சியை 11 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன.
  3. கி.பி 1357 இல் மூன்றாவது விஜயபாகு மன்னரின் ஆட்சிக் காலத்திலிருந்து கி.பி 1815  ஸ்ரீ விக்கிரமசிங்க மன்னரின் ஆட்சி வரையிலான; அதாவது ஆங்கிலேயர்கள் வசம் கண்டி இராச்சியம் வீழ்ச்சியுற்றது வரையிலான 441 ஆண்டுகாலத்தையும் பத்து அத்தியாயங்களில் முடிக்கப்பட்டிருக்கிறது.(5)

மகாவம்சத்தின் முதலாவது தொகுதியானது அது எழுதப்பட்ட காலத்துக்கு முன்னைய 9 நூற்றாண்டுகளை பதிவு செய்கிறது. அதுபோல சூளவம்சத்தின் முதலாவது பகுதி எழுதப்படும்போது மகாவம்சத்தின் முதலாவது பகுதி எழுதப்பட்டு 9 நூற்றாண்டுகள் கடந்திருந்தன என்பதையும் இங்கே குறிப்பிடமுடியும்.

ஆசிரியர்கள் பற்றிய குழப்பம்

இந்த மூன்று பகுதிகளையும் எழுதியவர்களும் முதல் தொகுதியை எழுதிய மகாநாம தேரரைப் போல பிக்குமார்கள் தான். ஆனால் அதை எழுதிய பிக்குமார் யார் யார் என்பது பற்றிய விவாதங்கள் இன்னமும் ஆய்வாளர்கள் மத்தியில் குழப்பகரமான கருத்துகளும் இருக்கவே செய்கின்றன.

மேற்படி முதல் பகுதியான 37 இலிருந்து 79 வரையிலான 42 அத்தியாயங்களையும் எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்பது வில்ஹைம் கைகரின் கருத்து. முதலாம் பராக்கிரமபாகுவின் கால ஆட்சியைப் பற்றி விரிவான ஆய்வைச் செய்தவர்களில் முக்கியமானவர் கலாநிதி சிறிமா விக்கிரமசிங்க (பேராசிரியர் சிறிமா கிரிபமுனே). அவரும் கைகரின் அக்கருத்தை உறுதி செய்கிறார். அதேவேளை மகாவம்சத்தின் மூன்றாம் தொகுதியைத் தொகுத்த யகிரல பஞ்ஞானந்த தேரர், பேராசிரியர் மங்கள இலங்கசிங்க போன்றோர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அவர் சூளவம்சத்தின் 38இலிருந்து 54 வரையிலான அத்தியாயங்களை மகாவிகாரையைச் சேர்ந்த சில பௌத்த துறவிகளாலும், 54இலிருந்து 79 வரையிலான அத்தியாயங்களை பொலன்னறுவையில் வாழ்ந்தவரும், பராக்கிரமபாகு குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தவருமான ராஜகுரு தர்மகீர்த்தி தேரரால் எழுதப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். அதுமட்டுமன்றி தர்மகீர்த்தி தேரர் பாளி, சமஸ்கிருதம், பிரகிருதம் போன்ற மொழிகளில்  தேர்ச்சிபெற்ற ஒருவராக இருந்திருப்பதுடன், தாதாவன்ச என்கிற நூலை ஆக்கியவர்.(6) தாதாவம்சத்தை இயற்றிய தர்மகீர்த்தி தேரரை “திம்புலாகல தர்மகீர்த்தி” என்று அழைக்கிறார் பிரபல தொல்லியல் ஆய்வாளரான சீ.ஈ.கொடகும்புற(7)  மேலும் அவர் கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தையும், மனுஸ்மிருதி, ரகுவம்சம் போன்றவற்றையும் ஆழமாக அறிந்த ஒருவர் என்பதை; அவர் சூளவம்சத்தில் பராக்கிரமபாகுவின் குழந்தைப்பருவம், கல்விப்பருவம், இளம்பருவம், வீரத்தனம் என்பவற்றை விபரிக்கும் வடிவத்தில் இருந்து உணர்ந்துகொள்ள முடியும் என்கிறார்.

தர்மகீர்த்தி (Dhammakitti / Dharmakirti) என்கிற பெயர் மகாவம்சத்தில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பாத்திரங்களாக இடம்பெற்றிருப்பதால் பலரும் இப்பெயரை குழப்பிக்கொண்டுள்ளதை, பல ஆய்வுக்கட்டுரைகளில் இருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது. மகாவம்ச தொகுதிகளில் காணப்படுகின்ற ஐந்து தர்மகீர்த்திகள் யார் என்கிற வேறுபாடுகளை விளக்கி 125 ஆண்டுகளுக்கு முன்னர் Don M. de Z. Wickremasinghe ஒரு சிறந்த கட்டுரையொன்றை ராஜரீக ஆசிய கழகத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் எழுதியிருகிறார். (8)

வம்சக்கதையின் (மகாவம்சத்தில்) பொலன்னறுவை காலப்பகுதியைப் பற்றி – குறிப்பாக மகாபராக்கிரமபாகுவின் காலப்பகுதியின் ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை தர்மகீர்த்தி தேரரால் எழுதப்பட்டிருக்கிறது என்கிற முடிவுக்கு நாம் வர முடியும் என்கிறார் பேராசிரியர் மங்கள இலங்கசிங்க. (சவிஸ்தர மகாவம்சம் அறிமுகம் – முதலாவது பாகம் - 2007).

அப்படியென்றால் சூளவம்சத்தின் முதலாவது பகுதியை யார் எழுதியிருக்கிறார்கள் என்று பேராசிரியர் மங்கள இலங்கசிங்க,  யகிரல பஞ்ஞானந்த தேரர் போன்றோர் கூறுகின்றார்கள்.

மகாபராக்கிரமபாகுவின் சமகாலத்தைச் சேர்ந்த மொக்கலான என்கிற பிக்குவால் அது எழுதப்பட்டிருக்கலாம் என்று பேராசிரியர் மங்கள இலங்கசிங்க,  யகிரல பஞ்ஞானந்த தேரர் போன்றோர் நம்புகிறார்கள். மகா பராக்கிரமபாகு பௌத்த சாசன வழிகாட்டலுக்காக நாடு முழுவதுமிருந்து ஆலோசனை பெறுவதற்காக பல பௌத்த துறவிகளை பொலன்னறுவைக்கு வரவழைத்து அவர்களை அங்கிருத்தி உபசரிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவரே அனுராதபுர தூபாராமவைச் சேர்ந்த மொக்கலான தேரர் என்றும் அவரை பொலன்னறுவை ஜேத்தவன  விகாரையில் தங்கவைத்து தேவையான வசதிகளை செய்துகொடுத்தார் என்று யகிரல பஞ்ஞானந்த தேரர் விளக்குகிறார். இந்த வாதத்துக்கு துணை சேர்க்க முயல்கின்ற பல சிங்களக் கட்டுரைகளை காண முடிகின்றன. அதேவேளை இரண்டாம் விஜயபாகுவின் ஆட்சியிலிருந்து இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலம் வரை எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்கிற கருத்தில் இவர்கள் முரண்பட்டதில்லை. (9)

ஆனால் இதுவும் ஒரு வாதம் மட்டுமே. ஏனென்றால் சூளவம்சத்தின் ஆசிரியர்கள் யார், யார் என்பது பற்றி நிலவுகிற பலமான வாதங்களைப் பற்றி விளக்குவதற்காகவே இதனையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மேற்படி குழப்பகரமான பல தரப்பட்ட வாதங்களை இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மகாவம்சத்தின் 6 வது தொகுதியில் (2016 இல் வெளியானது) பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் மகிந்த தீகல்ல என்கிற பௌத்த தேரர் 2006 இல் எழுதிய ஆய்வொன்றில் சூளவம்சத்தின் முதல் இரண்டு பகுதிகளையும் எழுதியவர்கள் தர்மகீர்த்தி என்கிற பெயரைக்கொண்ட இரு வேறு பிக்குகள் என்றும் ஒருவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பொலன்னறுவையில் வாழ்ந்த பிக்கு என்றும். மற்றவர் பதினான்காம் நூற்றாண்டில் குருநாகலையில்; நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் வாழ்ந்தவர் என்றும் கூறுவதுடன். அவர்கள் இருவருமே பெரும்பாலும் தென்னிந்தியாவில் பாண்டிய / சோழ நாட்டிலிருந்து வந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.(10) இந்த கருத்தை உறுதியாக நம்புகிற வரலாற்றாய்வாளர்கள் பலர் இருக்கிறார்கள். Ceylon and Indian History என்கிற நூலை எழுதிய ஹோரஸ் பெரேரா, ரத்னசபாபதி ஆகிய இருவரும் இதைத் தான் கூறுகிறார்கள்.(11) அதே வேளை சூளவம்சத்தின் முதலாம் பகுதியை எழுதிய தர்மகீர்த்தி (I); பர்மாவில் இருந்து இலங்கை வந்தவர் என்கிற வாதங்களும் உண்டு. ஆனால் அதன் இரண்டாம் பகுதியை எழுதிய தர்மகீர்த்தி(II); சோழ நாட்டிலிருந்து வந்தவர் என்கிற கருத்தில் பலரும் முரண்படுவதில்லை.

மேலும் இந்த வேறுபட்ட தர்மகீர்த்திகளின் பெயர் பட்டியலையும், அவர்கள் இயற்றிய இலக்கியங்களைப் பற்றியும் பிட்டிஷ் நூலகம் தொகுத்த Catalogue of the sinhalese printed Books intha Library of the British Museum என்கிற நூலில் காணக் கிடைக்கிறது.(12)

மகாவம்சத்தின் இந்த இரண்டாம் தொகுதியின் (சூளவம்சத்தின்) 79-90 வரையான கி.பி 1186-1357 பற்றிய பகுதிகளை எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்று மேற்படி அறிஞர்கள் உள்ளிட்ட பலரும் உடன்படுகிறார்கள். சூளவம்சத்தின் முதல் இரண்டு பகுதிகளையும் எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்று கைகர் கூறுவதை ஏற்காவிட்டாலும். இரண்டாம் பகுதியை எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்பதை பலர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

குறிப்பாக சூளவம்சத்தை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த ஹிக்கடுவே சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே தேவரக்ஷித்த பண்டிதர், பேராசிரியர் மங்கள இலங்கசிங்க ஆகியோர் அப்படி ஒத்துக்கொள்பவர்களில் முக்கியமானவர்கள்.

சூளவம்சத்தின் மூன்றாவது பகுதியான 91-100 வரையிலான அத்தியாயம் ‘செங்கடகல’வில் (அன்றைய கண்டி) வாழ்ந்த திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரர் அவர்களால் எழுதப்பட்டது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனின் காலத்தில் பௌத்த பீடங்களுக்கும், பௌத்த நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கியவர்  புத்தரக்கித்த மகாநாயக்க தேரர் இது மிகவும் பிந்திய நிகழ்வு என்பதால் அதற்கான ஆதாரங்களும், பதிவுகளும் ஸ்தூலமாகவே கிடைக்கின்றன.

சூளவம்சத்தின் இறுதிப் பகுதியான 101வது அத்தியாயமானது இராஜாதி இராஜசிங்கன், ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆகிய இருவரின் காலத்தைப் பற்றி பதிவு செய்திருக்கிறது. மிகவும் சுருக்கமாக 29 செய்யுள்களில் எழுதப்பட்டு 29 வது செய்யுளில் “சித்தி ரஸ்து” என்கிற சொற்களால் நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரர்; மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் காலத்திலேயே இறந்துபோனார் என்பதால் அவரால் இந்த இறுதி 101 வது அத்தியாயம் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அப்படியாயின் இந்த அத்தியாயத்தை எழுதியவர்கள் யார்?

சூளவம்சத்தை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டிதர் ஆகியோர் தான் இந்த இறுதிப் பகுதியை சேர்த்திருக்கிறார்கள் என்கிற முடிவுக்கே பல ஆய்வாளர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் தாம் அந்தப் பகுதிகளை சேர்க்கவில்லை என்று அவர்களின் மகாவம்சத்திலேயே கூறியிருக்கிறார்கள்.

அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகிற சொற்பதங்களைப் பார்க்கும்போது எப்படியோ கண்டியைச் சேர்ந்த பௌத்த துறவியொருவரால் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் மங்கள இலங்கசிங்க விளக்கியுள்ளார்.

கைகர் மகாவம்சத்தின் முதல் பாகத்தைத் தான் (கி.பி 301 வரைதான்) மொழிபெயர்த்தார் என்றே பலரும் நம்பி வருகிறார்கள். கைகர் சூளவம்சத்தையும் சேர்த்துத் தான் மொழிபெயர்த்தார். அதாவது 1815 வரையான காலப்பகுதியையும் சேர்த்துத் தான் அவர் முடித்தார். மகாவம்சத்தை தனியாகவும், சூளவம்சத்தை தனியாக இரண்டு தொகுதிகளாக அவர் பிரித்தார். சூளவம்சம் என்கிற பெயரில் எதுவும் எழுதப்பட்டதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அப்படி ஒரு பெயரை வைத்தவர் கைய்கர் தான். 

37-72 வது அத்தியாயம் வரை சூளவம்சத்தின் முதலாவது தொகுதி (1929இல்) என்றும், 73-101 வரையிலான அத்தியாயங்களை இரண்டாம் தொகுதியாகவும் (1953இல்) அவர் வெளியிட்டார்.

மகாநாம தேரரின் பிரதியை அவர் மகாவம்சம் என்று பிரித்ததுடன் அதன் பின்னர் பல பிக்குமார்களால் எழுதப்பட்டவற்றை தொகுத்து சூளவம்சம் என்று பெயரிட்டார். மகாவம்சம் எனும் போது பேரரசர்களின் வம்சாவளிக் கதை என பொருள்கொள்ளலாம். அதேபோல சூளவம்சம் எனும்போது சிறிய வம்சக் கதை எனப் பொருள்கொள்ள முடியும். இந்த “சூளவம்சம்” என்கிற பதத்துக்கான வரைவிலக்கணத்தை கைகர்  பூஜாவலியவில் இருந்து பெற்றார் எனலாம். பூஜாவலியவில் மகாவம்சத்துக்குப் பின்வரும் அரசர்களை சூளவம்ச அரசர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும்படி சூளவம்சம் என்று எங்கும் கண்டெடுக்கப்பட்டதில்லை.

சூளவம்சமானது;

  • தர்மகீர்த்தி (I) தேரரால் 37-79 வது அத்தியாயம் வரை அதாவது முதலாம் பராக்கிரமபாகு காலம் (1186) வரை தொகுக்கப்பட்டிருக்கிறது.
  • விஜயபாகு காலம் முதல் கி.பி 1332 ஆம் ஆண்டு நான்காம் பராக்கிரபாகு காலம் வரை 79-90 வது அத்தியாயம் வரை தர்மகீர்த்தி (II) தேரரால் இயற்றப்பட்டிருக்கிறது. சூளவம்சத்தின் 84 வது அத்தியாயத்தில் தர்மகீர்த்தி தேரர் தலைமையிலான பௌத்தத் துறவிகள் இரண்டாம் பராக்கிரமபாகுவால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மடப்பள்ளிகளைக் கட்டிக்கொடுத்தது பற்றிய விபரங்கள் உள்ளன.(13)
  • திப்பட்டுவாவே சுமங்கள தேரரால் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் காலம் வரை (1781) அதாவது 90-101 வது அத்தியாயம் வரை எழுதப்பட்டிருக்கிறது.
  • அதிலிருந்து ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டிதர் ஆகியோரால் ஆங்கிலேயர் 1815 இல் கைப்பற்றப்படும்வரை எழுதப்பட்டுள்ளது. (L. H. Horace Perera, M. Ratnasabapathy, 1954)

இதன் பிரகாரம் சூளவம்சத்தின் பெரும்பாகத்தை எழுதியவர்கள் தமிழ் பௌத்தத் துறவிகளே என்று கருத முடியும். தர்மகீர்த்திக்களால் எழுதப்பட்ட போது இல்லாத இனவாத கருத்துக்கள் அதன் பின்னர் அதிகம் எழுதப்பட்டுள்ளதை நாம் காணலாம். குறிப்பாக இலங்கை இறுதி மன்னனான ஸ்ரீ விக்கிரமசிங்க இராஜசிங்கனை ஒரு கொடியவனாகவும், அந்நியனாகவும் தென்னிந்திய வடுக நாயக்கனாகவும், தமிழனாகவும் காட்டி, நாடு கடத்தியதற்கு நியாயம் கற்பிக்கின்ற பகுதிகளையெல்லாம் அங்கே காணலாம். அதேவேளை சூளவம்சத்தை தர்மகீர்த்தி தேரர்கள் சுயத்துடன் எழுதினார்களா என்கிற கேள்வி நம்மிடம் தொக்கி நிற்கிறது. அரசனின் பணிப்பின் பேரில் அதை எழுதியுள்ளதை காண முடிகிறது. எனவே அன்றைய தென்னிந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான அவ்வரசர்களின் அபிலாஷைகளை இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்த நேரிட்டிருக்கிறது என்கிற முடிவுக்கும் நாம் வர முடியும்.

மேலும் இந்த பௌத்த அரசர்கள், பௌத்த பிக்குகளைக் கொண்டு எழுதுவித்திருக்கிறார்கள் என்றால் அன்றைய அந்த ஆக்கிரமிப்புகள் பௌத்த மதத்துக்கு ஏற்படுத்திய பாதிப்பையும், இந்து சமயத்தின் செல்வாக்கையும் ஒருவகையில் மத ஆக்கிரமிப்பாகத் தான் எதிர்கொண்டிருப்பார்கள். எனவே இந்த பௌத்த பிக்குகள் தென்னிந்திய தமிழ் அரசர்களின் படையெடுப்புகளையும், படையெடுப்பாளர்களையும் கடும் எதிர்ப்புணர்வுடனும், வெறுப்புணர்வுடனும் தான் பதிவு செய்திருப்பார்கள் என்பதை நம்மால் நிச்சயம் உணர முடியும். அதேவேளை சில தமிழ் அரசர்கள் பௌத்தத்துக்கு செய்த சேவைகளைப் பற்றியும் அதே சூளவம்சம் பதிவு செய்திருக்கிறது என்பதை மறுக்கவும் முடியாது.

ஹோரஸ் பெரேரா, ரத்னசபாபதி ஆகியோர் இலங்கை இந்திய வரலாற்றை ஒப்பீட்டாய்வு செய்யும் போது சூளவம்சத்தில் அதிக நம்பகத்தன்மையைக் கொண்ட பகுதி தர்மகீர்த்தியின் முதலாவது பகுதி தான் என்றும் அதேவேளை அவர் முதலாம் பராக்கிரமபாகு பற்றி தவிர்த்த பல விபரங்களை இந்திய வரலாற்றிலிருந்து பெற முடிகிறது என்பதையும், மேலும் அவர் இலங்கைத தீவின் ஏனைய பகுதிகளின் விபரங்களை அவர் தரவில்லை என்கிற விமர்சனத்தையும் முன் வைக்கிறார்கள். பராக்கிரமபாகு பற்றி அவர் தந்த தகவல்களில் இருந்து சற்று மாறுபட்ட விபரங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன என்கின்றனர். இன்றைய வரலாற்றாய்வுக்கு அந்த விபரங்கள் முக்கியமானவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சூளவம்சத்தின் மூன்றாவது பகுதி, தெளிவற்ற, ஸ்தூலமற்ற தகவல்களைக் கொண்டது என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.

வம்ச காவியங்களின் கதாநாயகர்கள்.

மகாவம்சத்தில் மாமன்னன் துட்டகாமினி (துட்டகைமுனு) எப்படிப் பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளப்பட்டாரோ அதுபோல சூளவம்சத்தில் மகா பராக்கிரமபாகு (முதலாம் பராக்கிரமபாகு) பாட்டுடைத் தலைவனாக கொள்ளப்படுகிறான். மகாவம்சத்தின் முதலாவது தொகுதியில் மொத்தம் 37 அத்தியாயங்களில் 11 அத்தியாயங்கள் துட்டகைமுனுவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதை விட அதிகமான அத்தியாயங்கள் பராக்கிரமபாகுவுக்கு சூளவம்சத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. சூளவம்சத்தின் முதலாவது பகுதியில் மொத்தம் 18 அத்தியாயங்களை; 33 ஆண்டுகள் மாத்திரமே ஆட்சி செய்த மகா பராக்கிரமபாகுவின் வீரதீரமிக்க ஆட்சியைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அதாவது அடுத்த எட்டு நூற்றாண்டுகளை (78 அரசர்களின் ஆட்சியை) அவர் 24 அத்தியாங்களில் முடித்துவிட்டார்.(14) இன்னும் சொல்லப்போனால் இதுவரை வெளிவந்துள்ள மொத்த மகாவம்சத் தொகுதிகளிலும் அதிக அத்தியாயங்கள் மகா பராக்கிரமபாகுவுக்கே உள்ளன எனலாம். தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த பாண்டிய மன்னர்களுக்கு எதிராக போரிட்டு விரட்டியடித்து பிளவுபட்டிருந்த நாட்டை எப்படி ஒன்று சேர்த்தார், லங்காபுர என்கிற படைத்தளபதியின் தலைமையில் படையனுப்பி மதுரையைக் கைப்பற்றியதையும், (ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வரையான சமர்களை அவர் அதில் விளக்கியிருக்கிறார்.)(15)  அதன் பின்னர் பௌத்த விகாரைகளையும், பாரிய வாவிகளையும் கட்டுவித்து நாட்டை வளப்படுத்தினார் என்கிற கதை தான் அப்பகுதி.

சூளவம்சத்தின் இரண்டாம் பகுதியை எழுதிய தர்மகீர்த்தி (II) தேரர்; இரண்டாம் பராக்கிரமபாகுவுக்கே அதிக இடம் கொடுத்திருக்கிறார். இரண்டாம் பராக்கிரமபாகுவுக்கும் அவரின் மகனுக்கும், விஜயபாகுவுக்கும் சேர்த்து மொத்தம் 37 ஆண்டு கால ஆட்சிக்கு எட்டு அத்தியாயங்கள் ஒதுக்கிய அவர் எஞ்சிய 53 ஆண்டுகால ஆட்சியை இரண்டே அத்தியாயங்களில் முடித்துவிட்டார்.

அதுபோல திபெட்டுவாவே சுமங்கள தேரோவின் கதாநாயகன் மன்னர் கீர்த்திஸ்ரீ இராஜசிங்கன். அம்மன்னரின் 33 ஆண்டுகால ஆட்சியை 45 பக்கங்களுக்கு அவர் அதே அளவு பக்கங்களில் தான் அடுத்த மூன்று நூற்றாண்டு ஆட்சி செய்த 24 அரசர்களின் ஆட்சியைப் பற்றி எழுதியிருக்கிறார்.

ஆக இந்த பிக்குமார் தமக்கான கதை மாந்தர்களை மையப்படுத்திக் கொண்டு தான் இந்த பனுவல்களை இயற்றியிருப்பதையும் ஏனைய ஆட்சிக்காலங்களை தமது விருப்புவெருப்புகளுக்கேற்ப கையாண்டிருப்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். “சொன்னவற்றை விட சொல்லப்படாமல் தவிர்க்கப்பட்டவற்றை தேடியறிவதே சிங்கள வரலாற்றில் சிரமமான காரியம்” என்று சும்மாவா சொன்னார் கைய்கர்.

தமிழில் இதுவரை சூளவம்சம் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டதில்லை. கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) மகாவம்சத்தின் முதலாவது பாகத்தை தமிழில் தந்தது நமக்குத் தெரியும் (2003). அதுபோல அவர் சூளவம்சத்தையும் தமிழுக்குத் தந்தார் (2008). துரதிர்ஷ்டவசமாக இவை இரண்டும் மிகவும் சுருக்கப்பட்ட சாரம்சமே. சுர்க்க்கப்பட்ட விளக்கவுரையே. முழுமையானவை அல்ல. கைகர் (Geiger) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த “சூளவம்சம்” இரு தொகுதிகளைக் கொண்டது. மொத்தம் 730 பக்கங்களுக்கும் மேற்பட்டது அது. ஆனால் செங்கை ஆழியானின் சுருக்கப்பட்ட தமிழ் பிரதி, பெரிய எழுத்துக்களில் 170 பக்கங்களுக்குள் மாத்திரம் உள்ளடங்கிவிட்டது. ஆனாலும் இது மட்டுமே தமிழ் மொழியில் எஞ்சியிருக்கிறது. சிங்களத்தில் சூளவம்சத்தின் பல விளக்க்வுரைகளைக் காண முடிகிறது. வெவ்வேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கூட புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. மகாவம்சத்தின் இந்த இரு பாகங்களைத் தவிர அடுத்த நான்கு பாகங்களில் எதுவுமே தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான சித்தாந்த தளம் அங்கிருந்து தான் ஊற்றெடுக்கின்றன என்கிற கருத்தை நாம் ஆழமாக காணவேண்டுமாயின் மகாவம்சப் பிரதிகளில் சூளவம்சத் தொகுதியின் வகிபாகம் அதி முக்கியமானது எனலாம்.

அடிக்குறிப்புகள்:

  1. Walpola Rāhula, History of Buddhism in Ceylon: The Anuradhapura Period, 3rd Century BC-10th Century AC, M.D.gunasena & Co. Ltd, 1956.
  2. Norman, Kenneth Roy, Pali Literature. Wiesbaden: Otto Harrassowitz, (1983).
  3. பிரபல சிங்கள தொல்லியல் அறிஞரான பேராசிரியர் ராஜ் சோமதேவ நுவன் என்கிற ஊடகவியலாளருடன் தொல்லியல் வரலாறு பற்றி யூடியுப்பில் தொடர் உரையாடல் ஒன்றை செய்து வந்தார். அதன் 60 வது பகுதி மே 2021 வெளியானது. அந்த உரையாடல் “இலங்கையில் தமிழ் பௌத்தர்” பற்றியது. அவர் அதில் குறிப்பிட்ட பல முக்கிய தகவல்களில் “மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியை எழுதிய தர்மகீர்த்தி தேரர் ஒரு சோழ நாட்டு தமிழ் பிக்கு என்றார். அந்தப் பொறி தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
  4. Walpola Rāhula, History of Buddhism in Ceylon: The Anuradhapura Period, 3d Century BC-10th Century-AC, M.D. Gunasena, 1956
  5. மகாவம்சம் 6ஆம் தொகுதி (சிங்களம்), இலங்கை கலாச்சார திணைக்களம், கலாசார அமைச்சு, 2016.
  6. Dhammkitti, “The Dathavansa”, or, the History of the Tooth-Relic of Gotama Buddha: The Pali Text and Its Translation Into English, With Notes by Mutu Coomara Swamy (mudeliar), Trubner & Co., London (1874)
  7. C. E. Godakumbura : Catalogue of Ceylonese Manuscripts (Catalogue of Oriental Manuscripts, Xylographs, etc., in Danish Collections. Vol. I, The Royal Library Copenhagen, 1980.
  8. Don M. de Z. Wickremasinghe, The Several Pali and Sinhalese Authors known as Dhammakitti Journal of the Royal Asiatic Society, Volume 28, Issue 01, January 1896
  9. ஹாந்துபெல்பொல புன்ஞாரசார ஹிமி, சூளவம்சம் – திவயின - 10.07.2021 (இக்கட்டுரை “විචිත්‍ර ශාස්ත්‍රීය සඟරාවේ 1966 නොවැම්බර් කලාපයෙනි” இலிருந்து மீள் பிரசுரிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  10. Mahinda Deegalle, Buddhism, Conflict and Violence in Modern Sri Lanka (Routledge Critical Studies in Buddhism), Routledge;(April 21, 2006)
  11. L. H. Horace Perera, M. Ratnasabapathy, Ceylon & Indian History from Early Times to 1505 A. D. W. M. A. Wahid & Bros, India, 1954
  12. Don, Martino De Zilva Wickremasinghe, Catalogue of the sinhalese printed Books intha Library of the British Museum, London British Museum, 1901
  13. Culavamsa: Being the More Recent Part of the Mahavamsa (Part II) Translated by Wilhelm Geiger, The Ceylon Government information Dept, Colombo, 1953
  14. Bimala Churn Law, A History of Pali Literature - Vol. II, Kegan Paul, Trench trubner & co., Ltd, London, 1933.
  15. Ruwan Rajapakse, Concise Mahavamsa, History of Buddhism in Sri Lanka, 2003

நன்றி: காக்கைச் சிறகினிலே - ஓகஸ்ட் - 2021
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates