
இலங்கையில் இருந்த முடியாட்சிகளை கைப்பற்றி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என மாறி மாறி அவர்களின் முடியாட்சிக்குள் இலங்கைத் தீவை 450 ஆண்டுகளுக்கும் மேல் வைத்திருந்தார்கள். இலங்கை முடியாட்சிலிருந்து முற்றாக நீங்கி குடியாட்சிக்கு மாறிய நாள் தான் குடியரசு நாளான மே.22.
இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் 1505 – 1948 வரையான 443 ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது என்று கூறப்பட்டாலும், உண்மையில் 443 ஆண்டுகள் அல்ல. மொத்தமாக 467 ஆண்டுகள் என்றே கூற வேண்டும். ஏனென்றால் இலங்கை பிரித்தானிய முடியிடம் இருந்து முழுமையாக விடுதலை அடைந்தது 1972 குடியரசாக ஆனதன் பின்னர் தான். அதுவரை பிரித்தானிய முடியின் கீழ் தான் இலங்கை ஆளப்பட்டது. 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறினாலும் பிரித்தானியா டொமினியன் அந்தஸ்தைத் தான் வழங்கியது. பூரண சுதந்திரத்தை அல்ல. “சுதந்தர”த்தின் பின்னர் 24 ஆண்டுகள் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் தான் இலங்கை இருந்தது. 1795 – 1948 வரை பிரித்தானிய ஆண்டது என்பது பிழையான கணக்கு. 1795 – 1972 வரை பிரித்தானியாவின் முடியின் கீழ் இருந்தது எனும் போது மொத்தம் 178 ஆண்டுகள் பிரித்தானியா ஆண்டது என்று தான் கூற முடியும்.
இந்து சமுத்திரத்தில் பிரித்தானியாவின் பெரிய காலனித்து நாடான இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் அது அப்படியல்ல. டொமினியன் அந்தஸ்தைத் தான் இந்தியாவுக்கும் 1947 ஆம் ஆண்டு கொடுத்தார்கள். பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தான் இந்தியா டொமினியன் அந்தஸ்திலிருந்து முழுமையாக விடுதலை அடைந்தது. இந்தியா ஆண்டு தோறும் ஓகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாகவும், ஜனவரி 26ஐ குடியரசு தினமாகவும் கொண்டாடி வருவதை அறிவீர்கள்.
ஆனால் இலங்கை அவ்வாறு குடியரசாவதற்கு அதை விட காலம் எடுத்தது. இந்தியா பூரண சுதந்திரம் வேண்டி கடுமையான சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த நாடு. ஆனால் இலங்கையில் பூரண சுதந்திரம் என்பது வீரியமாக இருக்கவில்லை. அரசியல் சீர்திருத்தங்களைத் தான் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கோரினார்கள். சுதேசிகளுக்கு அதிக அதிகாரங்களுடனான பிரித்தானிய முடியின் ஆட்சியை ஏற்றிருந்தார்கள். எனவே பிரிட்டிஷாருக்கும் இலங்கையின் மீதான வல்லாதிக்கத்தை இன்னொரு முகமூடியுடன் தொடர வாய்ப்பு கிட்டியது. அது தான் டொமினியன். டொமினியன் என்பது முடியின் அதிகாரத்தின் கீழான ஆட்சியைத் தான்.
பிரித்தானிய முடியின் கீழான ஆளுநரின் பிடி இருந்தது. அரச தலைவராக பிரித்தானிய மகாராணி தான் இருந்தார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநரின் கையெழுத்துடன் தான் சட்டங்கள் அமுலுக்கு வந்தன. இலங்கையின் உச்ச நீதிமன்றம் என்பது பிரித்தானியாவின் கோமரைக் கழகம் (பிரிவிக் கவுன்சில்) தான் இருந்தது. பிரிட்டன் படைகள் வரலாம், அனுமதியின்றி வான் பரப்பை பயன்படுத்தலாம் என்பது உட்பட பிரித்தனியாவின் அதிகாரங்கள் பல நடைமுறையில் இருந்தன.
1948 இல் பூரண சுதந்திரம் அடையவில்லை
சிறிமா பண்டரநாயக்காவின் ஆட்சி காலமான 1973 - 1977 வரை பிரித்தானியாவிடமிருந்து முழுமையாக விடுதலையடைந்த குடியரசு நாளை ஆண்டு தோறும் குடியரசு நாளாகவும், தேசிய வீரர்கள் தினமாகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த நாள் அரச பொது விடுமுறையாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி இக்காலப்பகுதியில் பெப்ரவரி 4ஆம் திகதியை சுதந்திர தின விழாவாக கொண்டாடுவதை நிறுத்தியிருந்தது.
1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஆட்சிக்கு வந்ததும் மே 22 குடியரசு கொண்டாட்டத்தை நிறுத்தினார். விடுமுறை நாளையும் இரத்து செய்தார். அதற்குப் பதிலாக மீண்டும் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதியையே சுதந்திர நாளாக விமரிசையாக கொண்டாடும் வழிமுறையைத் தொடர்ந்தார். இதனால் பலருக்கு குடியரசு தினமே மறந்து போனது. அதேவேளை இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம் எப்பேர்பட்ட கொண்டாட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
முடியின் கீழ் 1972 வரை
72 வரையான அரசு பிரித்தானிய இராணியின் கீழான அரசாக இருந்ததால் 1962 ஜனவரி 24 அன்று இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் சில அரசியல் தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த அரச கவிழ்ப்புச் சதியைக் கூட இராணியின் ஆட்சிக்கு எதிரான சதியாகவே அது உலகெங்கும் அழைக்கப்பட்டது. அந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்தது. அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் அது தொடர்பான மேன்முறையீடு பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் நடந்தது. அங்கே இராணியின் நீதிமன்றத்தில் (பிரிவிக் கவுன்சிலில்) அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்வது முக்கியம்.
இந்த தோல்வியுற்ற சதியில் சந்தேகநபராக கருதப்பட்டவர்களில் ஒருவர் அன்றைய பிரித்தானிய ஆளுநர் ஒலிவர் குணதிலக்க. அவருக்குப் பின் அந்த இடத்துக்கு ஆளுநராக தெரிவான வில்லியம் கொபல்லாவ நியமிக்கப்படுவதை 26.02.1962 அன்று இங்கிலாந்தில் பகிங்க்ஹோம் மாளிகையில் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தான் இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவாலும் அதே அறிவித்தல் விடுக்கப்பட்டது. இப்படித்தான் டொமினியன் ஆட்சி இலங்கையில் இயங்கியது.
1971 ஜே.வி.பி. கிளர்ச்சியில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய போது கூட இராணியின் சட்டத்தை மீறியமைக்காக ஜே.வி.பி.யினருக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டது.
அதுவரையான அரசாங்கமும், அமைச்சரவையும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும் போது மகாராணிக்கு விசுவாசமாக இருப்பதாகவே உறுதிமொழி எடுத்தனர். 1972 குடியரசின் பின்னர் தான் இலங்கை ஜனநாயக சோசலிசக் “குடியரசுக்கு” விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்கும் சந்தர்ப்பம் வரலாற்றில் முதல் தடவை வாய்த்தது.
சகல இராணுவ பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளிலும், தொப்பியிலும் பிரித்தானிய அரச சின்னம் கட்டாயமாக அணியப்படிருந்தது. கடும் மழையில் கூட எந்தவொரு இராணுவத்தினரும், பொலிசாரும் குடையொன்றை வைத்திருக்கும் அனுமதியைக் கூட கொண்டிருக்கவில்லை. அது பிரித்தானிய அரச முடியை அகௌரவப்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டது.
1970 ஆம் ஆண்டு தேர்தல்1970 ஆம் ஆண்டு 7வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமமாசக் கட்சி போன்ற இடது சாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி கூட்டணியை உருவாக்கிக்கொண்டு தேர்தலில் களம் இறங்கியது.
ஐக்கிய முன்னணிக் கூட்டணியை உருவாக்கிக் கொள்வதற்காக 06.06.1968 அன்று கண்டி போகம்பரை மைதானத்தில் வைத்து அக்கட்சிகள் மூன்றும் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுக் கொண்டனர். 27 விடயங்களைக் கொண்ட அந்த கொள்கைத் திட்டத்தில் ஒன்று தான் புதிய அரசியலமைப்பை உருவாக்கி பிரித்தானியாவிடமிருந்து பூரணமாக விடுதலை பெறுவது என்கிற ஒப்பந்தம். 1935 இல் என்.எம்.பெரேரா தலைமையில் நவ சமசமாஜக் கட்சி தோற்றுவிக்கபட்டபோதே இலங்கையை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து நீக்குவது என்கிற கொள்கையுடன் தான் ஆரம்பித்தார்கள் என்பதையும் இங்கே நினைவுக்கு கொண்டு வரலாம்.
1970 தேர்தலில் வெற்றி ஈட்டினால் இங்கிலாந்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்கிற வாக்குறுதியை அந்தக் கூட்டணி மக்களுக்கு அளித்திருந்தது. இறுதியில் ஐக்கிய முன்னணி மூன்றில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
![]() |
அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களின் கையெழுத்து |
குடியரசின் அரசியலமைப்புருவாக்கம்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 1970 ஆம் ஆண்டு யூலை 19 ஆம் திகதி கொழும்பு றோயல் கல்லூரியின் நவ ரங்கஹால மண்டபத்துக்கு வரும்படிசகல பாராளுமன்றப் பிரதிநிதிகளிடமும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். சகல உறுப்பினர்களையும் கொண்ட அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்கினார். அதற்கு நீதி அமைச்சரான கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவை தலைவராக நியமித்தார்.
அடுத்த பத்தாவது நாளான யூலை 29 ஆம் திகதியும் அச்சபை கூடியது. இடையில் யூலை 22ஆம் திகதி தேசிய அரசுப் பேரவையின் விவாதத்தில் அவர் உரையாற்றும் போது
“ பிரித்தானிய முடியுடன் எவ்வித தொடர்பும் இன்றி எமது நாட்டில் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஆட்சி முறையை நிறுவுவதற்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள. இந்த ஆண்டின் இறுதிக்குள், சுதந்திரமான, இறையாண்மையுள்ள ஒரு தேசமாக நாம் அங்கீகரிக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்.” என்றார்.
இலங்கை பொதுநலவாய உறுப்பு நாடாக செயற்பட்ட போதிலும் இறைமையும் சுதந்திரமும் கொண்ட நாடாக இருந்தது. குடியரசாக ஆனதிலிருந்து இலங்கை அரசியல் ரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிற்கு தலைமை தாங்கிய கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா, அரசியலமைப்புச் சபையை உருவாக்குவது தொடர்பாக கருத்து கூறியபோது
“இதுவரை காலம் மக்களாக நாம் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அந்நிய சக்தியான பிரித்தானியாவும் இராணியும் தான் அந்த வீட்டை அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பதிலாக இன்று நாம் முழுமையாக புதிய அத்திவாரமிட்டு நமக்குத் தேவையான வீட்டைக் கட்டி அதில் குடிபுகுவதற்கான கட்டமைப்பைத் தான் இந்த அரசியலமைப்பு உருவாக்கச் சபையின் மூலம் மேற்கொள்ளப் போகிறோம்” என்றார்.
இந்த அரசியலமைப்பு நிர்ணய சபை மொத்தம் 35 தடவைகள் கூடி பல்வேறு அமைப்புகள், கட்சிகள் என்பவற்றின் அபிப்பிராயங்களையும் அறிந்தது.
1971 யூலை 10ஆம் திகதி அரசியலமைப்பு முழுவதும் தயாரிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட்டும் விட்டது. அதனை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தி அறிவிக்க்கப்பட்ட நாள் தான் 1972 மே 22.
புதிய அரசியலமைப்பை உருவாக்க உபகுழுக்களும் அமைக்கப்பட்டன. 1972 மே 4 ஆம் திகதி இந்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மே 22, 1972 இல் "குடியரசு அரசியலமைப்பு" தேசிய அரசுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
“சுப முகூர்த்தத்தில்” குடியரசு
குடியரசுக் கட்சியின் அரசியலமைப்பை கொழும்பு ரோயல் கல்லூரி “நவ ரங்கால” மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது. பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் தலைவர் மைத்திரிபால சேனாநாயக்கவும், அரசியலமைப்பு வரைவு அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வாவும் வருகை தந்தனர்.
அன்றைய தினம் மதியம் சரியாக 12.43 மணியளவில் புதிய அரசியலமைப்பை முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிவித்த அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் தலைவர் ஸ்டான்லி திலகரத்ன 12.43க்கு கையெழுத்திட்டு அறிவித்தார். மங்கள மேளதாள பேரிகை முழக்கங்களுடன் இது நிகழ்ந்தது. அதன் பின்னர் புதிய அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் முதலாவது குடியரசின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க பகல் 12.56க்கு பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சோதிடரின் பஞ்சாங்கத்தின் பிரகாரம் அந்த நேரத்தை அவர் தெரிவு செய்திருந்தார் என்று அன்று பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. சுபநேரம், சுபமுகூர்த்தம் பார்த்து பக்தி சிரத்தையுடன் அது நடைபெற்றது உண்மை. அரசியலமைப்பின் கீழ் தனது முதல் கடமையை நிறைவேற்றியதாக அறிவித்து, வில்லியம் கோபல்லவவை குடியரசின் முதல் ஜனாதிபதியாக நியமித்தார் பிரதமர்.
புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொண்டதன் மூலம், பிரித்தானியாவின் பல காலனி நாடுகளைப் போலவே இலங்கையும் குடியரசாக மாறியது. குடிகளின் ஆட்சியாக ஆனது.
1956 இல் பண்டாரநாயக்கவின் முயற்சி
1956ல் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த போது பிரதமர் எஸ் டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையில் கட்டுநாயக்கா விமானத்தளமும் கொழும்பில் உள்ள பிரித்தானிய கடற்படைத் தளங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. அதுவரை இலங்கையின் விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் பிரிட்டிஷ் முடியின் கட்டுப்பாட்டில் தான் (Royal Navy) இருந்தன. அப்போதிருந்தே காலனி ஆதிக்கத்தில் இருந்து முற்றாக விடுதலை பெற வேண்டும் என்கிற வேட்கை மீண்டும் தலைதூக்கியிருந்தது. ஆனால் அது பத்தாண்டுகளுக்கு பின்னர் தான் பண்டாரநாயக்கவின் துணைவியின் தலைமையிலான ஆட்சியில் சாத்தியப்பட்டது. பிரதமர் பண்டாரநாயக்க மூன்றில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்காத போதும் சோல்பரி அரசியலமைப்பை திருத்தி குடியாட்சி அரசிலமைப்பை உருவாக்குவதற்காக செனட் சபை, பிரதிநிதிகள் சபை என்பவற்றின் கூட்டுக் குழுவொன்றை 07.11.1958 அன்று நியமித்தார். ஆனால் ஓராண்டு ஆவதற்குள் அவர் கொல்லப்பட்டுவிட்டார்.
1972 குடியரசு தின வைபவத்தை கொண்டாடுமுகமாக 24 ஆம் திகதி புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில் விசேட ஆராதனைகளை செய்து விட்டு வெளியே வந்து உரையாற்றிய பிரதமர் சிறிமா,
“எனது கணவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தக் குடியரசு எப்போதோ உதயமாகியிருக்கும். 1956 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் இலங்கைக் குடியரசாக்கும் அபிப்பிராயத்தை அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். அதன் பின்னர் அவர் கஷ்டப்பட்டு எடுத்த முயற்சிகள் நிறைவேறவில்லை. அதைத் தான் 1970 ஆம் ஆண்டு எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களுக்கு தெரிவித்திருந்தோம். இன்று அவரின் கனவு நனவாகியுள்ளது. இக்குடியரசின் மூலகர்த்தாவான அவருக்கு கிடைக்கவேண்டியது இந்தக் கௌரவம்...” என்றார்.
1972 வரை, மேல்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலால் தான் தீர்மானிக்கப்பட்டன. குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த நிலையும் மாறியது.
சிலோன் ஸ்ரீ லங்கா ஆனது
குடியரசு தினம் பிரகடனப்படுத்தப்பட்ட அன்று சிலோன் என்று காலனித்துவம் சூட்டிய பெயரை நீக்கியதன் நினைவாக 15 சத பெறுமதியுள்ள ஒரு முத்திரையும் வெளியிடப்பட்டது. அது வரை சிலோன் என்று இருந்த முத்திரைகள் அன்றிலிருந்து “ஸ்ரீ லங்கா” என்று மாறியதன் நினைவாக அதில் ஸ்ரீ லங்கா என்று குறிக்கப்பட்டது.குடியரசு தினம் தமிழர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஏனென்றால் சுதந்திர தினமும் கூட அவர்களுக்கு பொருட்டாக இருந்திருக்கவில்லை.
ஆனால் இலங்கை முடியாட்சியில் இருந்து முற்றாக விடுபட்ட நாள் எனும் அர்த்தத்தில் இலங்கை மக்களுக்கு குடியரசு தினம் ஒரு முக்கியமான தினம். அது அரசியல் சித்து விளையாட்டுகளின் காரணமாக இலங்கை மக்களால் முக்கியமிழந்து போயிருக்கிறது.
2022 அதன் பொன்விழா கொண்டாடப்படாமைக்கு இலங்கை எதிர்நோக்கியிருந்த பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடியைக் காரணமாகக் கூறிக்கொள்ளலாம். ஆனால் அந்த நாளுக்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச முக்கியத்துவத்தை ஊடகங்கள் கூட கொடுத்திருக்கவில்லை.
வழித்தடம்
- 15.08.1947 - டொமினியன் அந்தஸ்தின் கீழ் முதல் தேர்தல் நடத்தப்பட்டது
- 25.11.1947 - பாராளுமன்றம் திறக்கப்பட்டது
- 04.02.1948 – சுதந்திர பிரகடனம்
- 07.11.1958 - அரசியலமைப்பு சீர்திருத்த குழுவொன்று பண்டாரநாயக்கவால் உருவாக்கம்.
- 06.06.1968 - கண்டி போகம்பரையில் ஐக்கிய முன்னணி தோற்றமும், குடியரசாக ஆக்கும் பிரகடனமும்
- 27.05.1970 - பொதுத் தேர்தல்
- 19.07.1970 - அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கம்
- 10.07.1971 - அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டது.
- 04.05.1972 - அரசியலமைப்பு வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு
- 22.05.1972 - குடியரசு தின பிரகடனம்
நன்றி - "சாளரம்" தினகரன் - 25.05.2025