Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இலங்கையின் சுதந்திரம்! 1948? 1972? - என்.சரவணன்


இலங்கையில் இருந்த முடியாட்சிகளை கைப்பற்றி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என மாறி மாறி அவர்களின் முடியாட்சிக்குள் இலங்கைத் தீவை 450 ஆண்டுகளுக்கும் மேல் வைத்திருந்தார்கள். இலங்கை முடியாட்சிலிருந்து முற்றாக நீங்கி குடியாட்சிக்கு மாறிய நாள் தான் குடியரசு நாளான மே.22.

 இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் 1505 – 1948 வரையான 443 ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது என்று கூறப்பட்டாலும், உண்மையில் 443 ஆண்டுகள் அல்ல. மொத்தமாக 467 ஆண்டுகள் என்றே கூற வேண்டும். ஏனென்றால் இலங்கை பிரித்தானிய முடியிடம் இருந்து முழுமையாக விடுதலை அடைந்தது 1972 குடியரசாக ஆனதன் பின்னர் தான். அதுவரை பிரித்தானிய முடியின் கீழ் தான் இலங்கை ஆளப்பட்டது. 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறினாலும் பிரித்தானியா டொமினியன் அந்தஸ்தைத் தான் வழங்கியது. பூரண சுதந்திரத்தை அல்ல. “சுதந்தர”த்தின் பின்னர் 24 ஆண்டுகள் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் தான் இலங்கை இருந்தது. 1795 – 1948 வரை பிரித்தானிய ஆண்டது என்பது பிழையான கணக்கு. 1795 – 1972 வரை பிரித்தானியாவின் முடியின் கீழ் இருந்தது எனும் போது மொத்தம் 178 ஆண்டுகள் பிரித்தானியா ஆண்டது என்று தான் கூற முடியும்.

இந்து சமுத்திரத்தில் பிரித்தானியாவின் பெரிய காலனித்து நாடான இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் அது அப்படியல்ல. டொமினியன் அந்தஸ்தைத் தான் இந்தியாவுக்கும் 1947 ஆம் ஆண்டு கொடுத்தார்கள். பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26  தான் இந்தியா டொமினியன் அந்தஸ்திலிருந்து முழுமையாக விடுதலை அடைந்தது. இந்தியா ஆண்டு தோறும் ஓகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாகவும், ஜனவரி 26ஐ குடியரசு தினமாகவும் கொண்டாடி வருவதை அறிவீர்கள்.

ஆனால் இலங்கை அவ்வாறு குடியரசாவதற்கு அதை விட காலம் எடுத்தது. இந்தியா பூரண சுதந்திரம் வேண்டி கடுமையான சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த நாடு. ஆனால் இலங்கையில் பூரண சுதந்திரம் என்பது வீரியமாக இருக்கவில்லை. அரசியல் சீர்திருத்தங்களைத் தான் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கோரினார்கள். சுதேசிகளுக்கு அதிக அதிகாரங்களுடனான பிரித்தானிய முடியின் ஆட்சியை ஏற்றிருந்தார்கள். எனவே பிரிட்டிஷாருக்கும் இலங்கையின் மீதான வல்லாதிக்கத்தை இன்னொரு முகமூடியுடன் தொடர வாய்ப்பு கிட்டியது. அது தான் டொமினியன். டொமினியன் என்பது முடியின் அதிகாரத்தின் கீழான ஆட்சியைத் தான்.

பிரித்தானிய முடியின் கீழான ஆளுநரின் பிடி இருந்தது. அரச தலைவராக பிரித்தானிய மகாராணி தான் இருந்தார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநரின் கையெழுத்துடன் தான் சட்டங்கள் அமுலுக்கு வந்தன. இலங்கையின் உச்ச நீதிமன்றம் என்பது பிரித்தானியாவின் கோமரைக் கழகம் (பிரிவிக் கவுன்சில்) தான் இருந்தது. பிரிட்டன் படைகள் வரலாம், அனுமதியின்றி வான் பரப்பை பயன்படுத்தலாம் என்பது உட்பட பிரித்தனியாவின் அதிகாரங்கள் பல நடைமுறையில் இருந்தன.


1948 இல் பூரண சுதந்திரம் அடையவில்லை

சிறிமா பண்டரநாயக்காவின் ஆட்சி காலமான 1973 - 1977 வரை பிரித்தானியாவிடமிருந்து முழுமையாக விடுதலையடைந்த குடியரசு நாளை ஆண்டு தோறும் குடியரசு நாளாகவும், தேசிய வீரர்கள் தினமாகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த நாள் அரச பொது விடுமுறையாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி இக்காலப்பகுதியில் பெப்ரவரி 4ஆம் திகதியை சுதந்திர தின விழாவாக கொண்டாடுவதை நிறுத்தியிருந்தது.

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஆட்சிக்கு வந்ததும் மே 22 குடியரசு கொண்டாட்டத்தை நிறுத்தினார். விடுமுறை நாளையும் இரத்து செய்தார். அதற்குப் பதிலாக மீண்டும் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதியையே சுதந்திர நாளாக விமரிசையாக கொண்டாடும் வழிமுறையைத் தொடர்ந்தார். இதனால் பலருக்கு குடியரசு தினமே மறந்து போனது. அதேவேளை இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம் எப்பேர்பட்ட கொண்டாட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முடியின் கீழ் 1972 வரை

72 வரையான அரசு பிரித்தானிய இராணியின் கீழான அரசாக இருந்ததால் 1962 ஜனவரி 24 அன்று இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் சில அரசியல் தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த அரச கவிழ்ப்புச் சதியைக் கூட இராணியின் ஆட்சிக்கு எதிரான சதியாகவே அது உலகெங்கும் அழைக்கப்பட்டது. அந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்தது. அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் அது தொடர்பான மேன்முறையீடு பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் நடந்தது. அங்கே இராணியின் நீதிமன்றத்தில் (பிரிவிக் கவுன்சிலில்) அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்வது முக்கியம்.

இந்த தோல்வியுற்ற சதியில் சந்தேகநபராக கருதப்பட்டவர்களில் ஒருவர் அன்றைய பிரித்தானிய ஆளுநர் ஒலிவர் குணதிலக்க. அவருக்குப் பின் அந்த இடத்துக்கு ஆளுநராக தெரிவான வில்லியம் கொபல்லாவ நியமிக்கப்படுவதை 26.02.1962 அன்று இங்கிலாந்தில் பகிங்க்ஹோம் மாளிகையில் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தான் இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவாலும் அதே அறிவித்தல் விடுக்கப்பட்டது. இப்படித்தான் டொமினியன் ஆட்சி இலங்கையில் இயங்கியது.

1971 ஜே.வி.பி. கிளர்ச்சியில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய போது கூட இராணியின் சட்டத்தை மீறியமைக்காக ஜே.வி.பி.யினருக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டது.

அதுவரையான அரசாங்கமும், அமைச்சரவையும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும் போது மகாராணிக்கு விசுவாசமாக இருப்பதாகவே உறுதிமொழி எடுத்தனர். 1972 குடியரசின் பின்னர் தான் இலங்கை ஜனநாயக சோசலிசக் “குடியரசுக்கு” விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்கும் சந்தர்ப்பம் வரலாற்றில் முதல் தடவை வாய்த்தது.

சகல இராணுவ பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளிலும், தொப்பியிலும் பிரித்தானிய அரச சின்னம் கட்டாயமாக அணியப்படிருந்தது. கடும் மழையில் கூட எந்தவொரு இராணுவத்தினரும், பொலிசாரும் குடையொன்றை வைத்திருக்கும் அனுமதியைக் கூட கொண்டிருக்கவில்லை. அது பிரித்தானிய அரச முடியை அகௌரவப்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டது. 

1970 ஆம் ஆண்டு தேர்தல்

1970 ஆம் ஆண்டு 7வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமமாசக் கட்சி போன்ற இடது சாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி கூட்டணியை உருவாக்கிக்கொண்டு தேர்தலில் களம் இறங்கியது.

ஐக்கிய முன்னணிக் கூட்டணியை உருவாக்கிக் கொள்வதற்காக 06.06.1968 அன்று கண்டி போகம்பரை மைதானத்தில் வைத்து அக்கட்சிகள் மூன்றும் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுக் கொண்டனர். 27 விடயங்களைக் கொண்ட அந்த கொள்கைத் திட்டத்தில் ஒன்று தான் புதிய அரசியலமைப்பை உருவாக்கி பிரித்தானியாவிடமிருந்து பூரணமாக விடுதலை பெறுவது என்கிற ஒப்பந்தம். 1935 இல் என்.எம்.பெரேரா தலைமையில் நவ சமசமாஜக் கட்சி தோற்றுவிக்கபட்டபோதே இலங்கையை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து நீக்குவது என்கிற கொள்கையுடன் தான் ஆரம்பித்தார்கள் என்பதையும் இங்கே நினைவுக்கு கொண்டு வரலாம்.

1970 தேர்தலில் வெற்றி ஈட்டினால் இங்கிலாந்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்கிற வாக்குறுதியை அந்தக் கூட்டணி மக்களுக்கு அளித்திருந்தது. இறுதியில் ஐக்கிய முன்னணி மூன்றில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களின் கையெழுத்து

குடியரசின் அரசியலமைப்புருவாக்கம்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 1970 ஆம் ஆண்டு யூலை 19 ஆம் திகதி கொழும்பு றோயல் கல்லூரியின் நவ ரங்கஹால மண்டபத்துக்கு வரும்படிசகல பாராளுமன்றப் பிரதிநிதிகளிடமும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். சகல உறுப்பினர்களையும் கொண்ட அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்கினார். அதற்கு நீதி அமைச்சரான கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவை தலைவராக நியமித்தார்.

அடுத்த பத்தாவது நாளான யூலை 29 ஆம் திகதியும் அச்சபை கூடியது. இடையில் யூலை 22ஆம் திகதி தேசிய அரசுப் பேரவையின் விவாதத்தில் அவர் உரையாற்றும் போது

“ பிரித்தானிய முடியுடன் எவ்வித தொடர்பும் இன்றி எமது நாட்டில் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஆட்சி முறையை நிறுவுவதற்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள. இந்த ஆண்டின் இறுதிக்குள், சுதந்திரமான, இறையாண்மையுள்ள ஒரு தேசமாக நாம் அங்கீகரிக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்.” என்றார்.

இலங்கை பொதுநலவாய உறுப்பு நாடாக செயற்பட்ட போதிலும் இறைமையும் சுதந்திரமும் கொண்ட நாடாக இருந்தது. குடியரசாக ஆனதிலிருந்து இலங்கை அரசியல் ரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிற்கு தலைமை தாங்கிய கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா, அரசியலமைப்புச் சபையை உருவாக்குவது தொடர்பாக கருத்து கூறியபோது 

“இதுவரை காலம் மக்களாக நாம் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அந்நிய சக்தியான பிரித்தானியாவும் இராணியும் தான் அந்த வீட்டை அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பதிலாக இன்று நாம் முழுமையாக புதிய அத்திவாரமிட்டு நமக்குத் தேவையான வீட்டைக் கட்டி அதில் குடிபுகுவதற்கான கட்டமைப்பைத் தான் இந்த அரசியலமைப்பு உருவாக்கச் சபையின் மூலம் மேற்கொள்ளப் போகிறோம்” என்றார்.

இந்த அரசியலமைப்பு நிர்ணய சபை மொத்தம் 35 தடவைகள் கூடி பல்வேறு அமைப்புகள், கட்சிகள் என்பவற்றின் அபிப்பிராயங்களையும் அறிந்தது.

1971 யூலை 10ஆம் திகதி அரசியலமைப்பு முழுவதும் தயாரிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட்டும் விட்டது. அதனை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தி அறிவிக்க்கப்பட்ட நாள் தான் 1972 மே 22.

புதிய அரசியலமைப்பை உருவாக்க உபகுழுக்களும் அமைக்கப்பட்டன. 1972 மே 4 ஆம் திகதி இந்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மே 22, 1972 இல் "குடியரசு அரசியலமைப்பு" தேசிய அரசுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


“சுப முகூர்த்தத்தில்” குடியரசு

குடியரசுக் கட்சியின் அரசியலமைப்பை கொழும்பு ரோயல் கல்லூரி “நவ ரங்கால” மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.  பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் தலைவர் மைத்திரிபால சேனாநாயக்கவும், அரசியலமைப்பு வரைவு அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வாவும் வருகை தந்தனர்.

அன்றைய தினம் மதியம் சரியாக 12.43 மணியளவில் புதிய அரசியலமைப்பை முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிவித்த அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் தலைவர் ஸ்டான்லி திலகரத்ன 12.43க்கு கையெழுத்திட்டு அறிவித்தார். மங்கள மேளதாள பேரிகை முழக்கங்களுடன் இது நிகழ்ந்தது. அதன் பின்னர் புதிய அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் முதலாவது குடியரசின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க பகல் 12.56க்கு பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சோதிடரின் பஞ்சாங்கத்தின் பிரகாரம் அந்த நேரத்தை அவர் தெரிவு செய்திருந்தார் என்று அன்று பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. சுபநேரம், சுபமுகூர்த்தம் பார்த்து பக்தி சிரத்தையுடன் அது நடைபெற்றது உண்மை. அரசியலமைப்பின் கீழ் தனது முதல் கடமையை நிறைவேற்றியதாக அறிவித்து, வில்லியம் கோபல்லவவை குடியரசின் முதல் ஜனாதிபதியாக நியமித்தார் பிரதமர்.

புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொண்டதன் மூலம், பிரித்தானியாவின் பல காலனி நாடுகளைப் போலவே இலங்கையும் குடியரசாக மாறியது. குடிகளின் ஆட்சியாக ஆனது.

1956 இல் பண்டாரநாயக்கவின் முயற்சி

1956ல் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த போது பிரதமர் எஸ் டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையில் கட்டுநாயக்கா விமானத்தளமும் கொழும்பில் உள்ள பிரித்தானிய கடற்படைத் தளங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. அதுவரை இலங்கையின் விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் பிரிட்டிஷ் முடியின் கட்டுப்பாட்டில் தான் (Royal Navy) இருந்தன. அப்போதிருந்தே காலனி ஆதிக்கத்தில் இருந்து முற்றாக விடுதலை பெற வேண்டும் என்கிற வேட்கை மீண்டும் தலைதூக்கியிருந்தது. ஆனால் அது பத்தாண்டுகளுக்கு பின்னர் தான் பண்டாரநாயக்கவின் துணைவியின் தலைமையிலான ஆட்சியில் சாத்தியப்பட்டது. பிரதமர் பண்டாரநாயக்க மூன்றில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்காத போதும் சோல்பரி அரசியலமைப்பை திருத்தி குடியாட்சி அரசிலமைப்பை உருவாக்குவதற்காக செனட் சபை, பிரதிநிதிகள் சபை என்பவற்றின் கூட்டுக் குழுவொன்றை  07.11.1958 அன்று நியமித்தார். ஆனால் ஓராண்டு ஆவதற்குள் அவர் கொல்லப்பட்டுவிட்டார். 

1972 குடியரசு தின வைபவத்தை கொண்டாடுமுகமாக 24 ஆம் திகதி புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில் விசேட ஆராதனைகளை செய்து விட்டு வெளியே வந்து உரையாற்றிய பிரதமர் சிறிமா,

“எனது கணவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தக் குடியரசு எப்போதோ உதயமாகியிருக்கும். 1956 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் இலங்கைக் குடியரசாக்கும் அபிப்பிராயத்தை அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். அதன் பின்னர் அவர் கஷ்டப்பட்டு எடுத்த முயற்சிகள் நிறைவேறவில்லை. அதைத் தான் 1970 ஆம் ஆண்டு எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களுக்கு தெரிவித்திருந்தோம். இன்று அவரின் கனவு நனவாகியுள்ளது. இக்குடியரசின் மூலகர்த்தாவான அவருக்கு கிடைக்கவேண்டியது இந்தக் கௌரவம்...” என்றார்.

1972 வரை, மேல்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலால் தான் தீர்மானிக்கப்பட்டன. குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த நிலையும் மாறியது.

சிலோன் ஸ்ரீ லங்கா ஆனது

குடியரசு தினம் பிரகடனப்படுத்தப்பட்ட அன்று சிலோன் என்று காலனித்துவம் சூட்டிய பெயரை நீக்கியதன் நினைவாக 15 சத பெறுமதியுள்ள ஒரு முத்திரையும் வெளியிடப்பட்டது. அது வரை சிலோன் என்று இருந்த முத்திரைகள் அன்றிலிருந்து “ஸ்ரீ லங்கா” என்று மாறியதன் நினைவாக அதில் ஸ்ரீ லங்கா என்று குறிக்கப்பட்டது.

குடியரசு தினம் தமிழர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஏனென்றால் சுதந்திர தினமும் கூட அவர்களுக்கு பொருட்டாக இருந்திருக்கவில்லை. 

ஆனால் இலங்கை முடியாட்சியில் இருந்து முற்றாக விடுபட்ட நாள் எனும் அர்த்தத்தில் இலங்கை மக்களுக்கு குடியரசு தினம் ஒரு முக்கியமான தினம். அது அரசியல் சித்து விளையாட்டுகளின் காரணமாக இலங்கை மக்களால் முக்கியமிழந்து போயிருக்கிறது.

2022 அதன் பொன்விழா கொண்டாடப்படாமைக்கு இலங்கை எதிர்நோக்கியிருந்த பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடியைக் காரணமாகக் கூறிக்கொள்ளலாம். ஆனால் அந்த நாளுக்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச முக்கியத்துவத்தை ஊடகங்கள் கூட கொடுத்திருக்கவில்லை.

வழித்தடம்

  1. 15.08.1947  - டொமினியன் அந்தஸ்தின் கீழ் முதல் தேர்தல் நடத்தப்பட்டது
  2. 25.11.1947 - பாராளுமன்றம் திறக்கப்பட்டது
  3.  04.02.1948 – சுதந்திர பிரகடனம்
  4. 07.11.1958 - அரசியலமைப்பு சீர்திருத்த குழுவொன்று பண்டாரநாயக்கவால் உருவாக்கம்.
  5. 06.06.1968 - கண்டி போகம்பரையில் ஐக்கிய முன்னணி தோற்றமும், குடியரசாக ஆக்கும் பிரகடனமும்
  6. 27.05.1970 - பொதுத் தேர்தல்
  7. 19.07.1970 - அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கம்
  8. 10.07.1971 - அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டது.
  9. 04.05.1972 - அரசியலமைப்பு வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு
  10. 22.05.1972 - குடியரசு தின பிரகடனம்

நன்றி - "சாளரம்" தினகரன் - 25.05.2025


தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தடை செய்யப்பட்டிருந்த கொழும்பு (1747-1832) - என்.சரவணன்

இலங்கையின் காலனித்துவ வரலாற்றில் 1656 இல் போர்த்துகேயர்களை விரட்டிவிட்டு ஒல்லாந்தர் (டச்சு) அந்த இடத்தில் நிலைகொண்ட வரலாற்றை அறிவோம். போர்த்துகேயர்களை விட சட்ட ரீதியிலான அமைப்பை நிறுவியவர்கள் ஒல்லாந்தர். அச்சட்டங்கலையே ஆங்கிலேயர்களும் திருத்தங்களுடன் ரோமன் டச்சு சட்டம் எனும் பேரில் நடைமுறைப்படுத்தினர். 

போர்த்துக்கேயர் இலங்கையில் காலடி எடுத்து வைத்த வேளை முஸ்லிம்களின் வர்த்தக செல்வாக்கை முறியடித்து வலுவிழக்கச் செய்தனர். அப்போது கொழும்பில் வர்த்தக ரீதியில் செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தவர்கள் முஸ்லிம்களும், தமிழர்களுமே. முஸ்லிம்கள் வியாபார வர்த்தக நடவடிக்கைகளில் அப்போதும் ஈடுபட்டு வந்தார்கள். கொழும்பில் அதற்கடுத்தபடியாக செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தவர்கள் தமிழர்கள். குறிப்பாக சொல்லபோனால் செட்டி சமூகத்தினர். பெரிய கடன்களை வழங்கும் சக்தியாக அவர்கள் இருந்தனர். கறுவா வர்த்தகத்தை ஏகபோகமாக்குவதற்காகவும் தங்கள் வணிக உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் டச்சுக்காரர்கள், கொழும்பின் பொருளாதார இதயத்தில் ஐரோப்பியரல்லாதவர்களின் செல்வாக்கை மட்டுப்படுத்த முயன்றனர்.


அன்றைய பிரதான வருவாயாக இருந்த கறுவா செய்கையி ல் ஈடுபட்ட பலர் செட்டியார்களிடம் வட்டிக் கடன்களை பெற்று அத்தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர். சோனகர்கள் தென்னிந்தியா மற்றும் அரபு வர்த்தகர்களுடன் தொடர்புகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதையும் அவதானித்த ஆங்கிலேயர்கள் அரசியல் ரீதியில் அஞ்சினர். நகர்ப்புற மையங்களிலிருந்து அவர்களை விலக்குவது என்பது கூட்டு பேரம் பேசும் சக்தியைக் குறைப்பதற்கும் அரசியல் அழுத்தத்தை தடுப்பதற்கும் ஒரு உத்தியாக இருந்தது.

இவ்விரு சமூகத்தினரும் கொழும்பில் ஒல்லாந்தரின் பொருளாதார பலத்தையும், ஈற்றில் அரசியல் அதிகார செல்வாக்கை அடைந்து விடக்கூடும் என்கிற பீதி எழுந்தது. இதன் விளைவாக அவர்கள் 1747 பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.


சோனகர்கள் (முஸ்லிம்கள்) மற்றும் மலபார்கள் (தமிழர்கள்) ஆகியோரை இலக்கு வைத்த மேற்படி ஆணையின்படி கொழும்பின் பிரதான நகர்ப்புற வலயங்களில், குறிப்பாக கோட்டை மற்றும் புறக்கோட்டையில் சொத்துக்களை வைத்திருப்பதை தடை செய்தன. 

சோனகர்களும், தமிழர்களும்  கறுவாப்பட்டை உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள், புடவை போன்ற வர்த்தகங்களில் ஒல்லாந்தருடன் போட்டியிடும் சக்தியினராக இருந்தனர். இவர்களது வளர்ச்சி ஐரோப்பிய வர்த்தகங்களுக்கு சவாலாக இருந்தது.

தென்னிந்தியாவுடனும் அரபு நாடுகளுடனும் இவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் டச்சு அதிகாரத்திற்கு ஆபத்தாகக் கருதப்பட்டது. நகரங்களில் இருந்து இவர்களை விலக்கி வைப்பதன் மூலம் அவர்களின் அரசியல் வலிமையை குறைக்கலாம் என்று நம்பினர். அதன் விளைவாகவே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணையின் மூலம் இன்னொன்றும் தெளிவாகின்றது. சிங்களவர்கள் அந்தளவு பொருளாதார ரீதியில் பலமானவர்களாகவோ, டச்சு அரசாங்கத்தின் செல்வாக்குக்கு சவாலானவர்களாகவோ இருக்கவில்லை என்றும் ஊகிக்க முடிகிறது. அப்படி இருந்திருந்தால் அவர்களும் இத்தடைக்கு உள்ளாகியிருப்பார்கள். எவ்வாறாயினும் குறிப்பாக ஐரோப்பியர் அல்லாத - கிறிஸ்தவரல்லாத சுதேசிய சமூகங்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.


1747 பிப்ரவரி 3 அன்று, இலங்கையில் உள்ள டச்சு கவுன்சில் ஒரு தீர்மானத்தை வெளியிட்டது. சொத்துரிமை யாருக்கு உண்டு என்பதைப் பற்றிய வரைவிலக்கணங்களை பிரகடனப்படுத்தியது. அதன் மூலம் சோனகர்கள் மலபாரிகள் (தமிழர்) கோட்டைக்குள்ளும், புறக்கோட்டையிலும் நிலங்களை கையகப்படுத்துவதை பகிரங்கமாகத் தடை செய்தது. காலனியப் பாதுகாப்பும், பொது ஒழுங்கைப் பேணுவதும் இதற்கான நியாயப்படுத்தலாக முன்வைக்கப்பட்டன. இந்தியப் பெருங்கடல் வர்த்தக வலையமைப்பில் வர்த்தகர்களாகவும் இடைத்தரகர்களாகவும் இருந்த இந்த சமூகங்களின் கடல்கடந்த தொடர்புகளும் மத அடையாளங்களும் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டன. ஈற்றில் கோட்டையிலும் புறக்கோட்டையிலும் சோனகர்களும் தமிழர்களும் சொத்து வைத்திருப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது.

ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் கீழ் இருந்த கொழும்பு கோட்டையானது காலனித்துவ அதிகாரத்தின் நிர்வாக, வணிக மற்றும் குறியீட்டு மையமாக இருந்தது. கோட்டைக்கு புறமாக இருந்த புறக்கோட்டைப் பகுதியை பெட்டா (Pettah)  என்று அழைத்தார்கள். “பேட்டை” என்பதையே அவர்கள் அவ்வாறு “பெட்டா” என்றார்கள்.

“பெட்டா” பரபரப்பான வர்த்தக மையமாக செயல்பட்டது. அங்கே நிலத்தின் மீதான கட்டுப்பாடு என்பது காலனியப் பொருளாதாரம், வளங்கள், அதிகாரம் ஆகியவற்றுக்கான மையமாக திகழ்தது. இதன் விளைவாக, அங்கு யார் சொத்து வைத்திருக்க முடியும் என்கிற தீர்மானம் வெறும் சட்ட விவகாரம் மட்டுமல்ல, அன்றைய அதிகார இயக்கவியலைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் முடிவும் கூட.

1815 ஆம் ஆண்டு முழு இலங்கையையும் ஆங்கிலேயர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒல்லாந்தர் 1747 ஏற்படுத்திய தடையை 1817 ஆம் ஆண்டு ஜூன் 2, அன்று, ஆளுநர் சேர் ரொபர்ட் பிரவுன்ரிக் (Sir Robert Brownrigg) உறுதி செய்ததுடன் சில பகுதிகளை மட்டும் தளர்த்தும் வகையில் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். கோட்டை – புறக்கோட்டை பெரும்பகுதிக்குள் அதுவரை சோனகர்களாலும் தமிழர்களாலும் கொள்வனவு செய்யப்பட்ட எந்த சொத்தும் செல்லுபடியாகாது என்றும் அறிவித்தார். ஆனால் மீன் சதுக்கம் (Fishers’ Quarte), பேங்க்ஷ்சல் பகுதி, ஏரிக்கு அருகிலுள்ள இரண்டு தெருக்கள் என்பன இதில் விதிவிலக்கு. அதாவது இப்பகுதிகள் அவர்களின் சொத்துக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டன.

பிரிட்டிஷ் ஆட்சியையும் நகர்ப்புற அதிகார மையத்தில் அரசியல், வர்த்தக போட்டியாளர்கள் காலூன்றுவதை இதன் மூலம் தடுக்க முயன்றிருக்கிறது. முஸ்லிம் - தமிழ் வர்த்தகர்களின் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி குறித்த அன்றைய காலனிய அச்சத்தையே இந்தக் கொள்கை பிரதிபலித்தது.


1832 இல் இரண்டும் இரத்து

1832 ஆம் ஆண்டு 5 மே அன்று, பிரித்தானியர் “1832 ஆம் ஆண்டின் சட்ட ஒழங்கு - எண் 2” (Regulation No. 2 of 1832) என்கிற ஆணையைப் பிறப்பித்தனர். 1832 யூன் 1 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், கொழும்பு கோட்டை, புறக்கோட்டைக்குள் உள்ள வீடுகளையும் காணிகளையும் சொந்தமாக வைத்திருக்கவும் வசிக்கவும் சோனகர்களுக்கும் தமிழர்களுக்கும் முழு உரிமைகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் சுமார் 85 ஆண்டுகால பாகுபாட்டிற்கு சட்டபூர்வ முடிவு காணப்பட்டது. பேரவையின் செயலாளர் பி.அன்ஸ்ட்ரூதர் (P.Anstruther) என்பவரால் பிரகடனப்படுத்தப்பட்ட ஆணையின் பிரகாரம் 1747, 1817 ஆகிய இரு ஆணைகளும் இரத்து செய்யப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கொள்கையில் பரந்த தாராளவாத போக்குகளை பிரதிபலித்தது, இதில் சட்ட சமத்துவம் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் ஆகியவை அடங்கும். காலனிய வர்த்தகமும், நிர்வாகமும் பரிணாம வளர்ச்சியடைந்து வந்த நிலையில், முந்தைய விதிமுறைகள் நடைமுறைக்கு ஒவ்வாததையும், நியாயமற்றவையையும் காலனித்துவ அரசு ஒப்புக் கொண்டது.

கொழும்பில் தமிழர்களும், சோனகர்களும் தமது வாழ்வு இருப்பை இதன் பின்னர் தான் உறுதி செய்துகொள்ளத் தொடங்கினர். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இன்றும் வியாபார வர்த்தக ரீதியில் செல்வாக்கு செலுத்தும் பிரதான சமூகங்களாக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் திகழ்கின்றன.

Notes

  1. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியர் வெசாக் தினப் பண்டிகையை அனுமதித்து இயற்றிய சட்டத்தை A Collection Of Legislative Acts Of The Ceylon Government From 1796 to 1833 என்கிற நூலில் தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாக இச்சட்டத்தை காணக்கிடைத்தது
  2. போர்த்துகேயர்களும், ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்கள் வரை இலங்கைத் தமிழர்களையும், தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்களையும் அப்போது “மலபாரிகள்” (Malabars) என்றே அழைத்தனர்.
நன்றி - சாளரம் (தினகரன்) - 18.05.2025


வெசாக் தினத்துக்காக போராடிய இரு தமிழ் தலைவர்கள் - என்.சரவணன்

இலங்கையில் பௌத்தத்தைக் கொண்டு வருவதற்காக தமிழ் பௌத்தத துறவிகள் பாரிய பங்காற்றியிருக்கிறார்கள். கண்டி ராஜ்ஜிய காலத்தில் பௌத்தத்தைப் பாதுகாத்ததில் தமிழ் நாயக்க மன்னர்களின் வகிபாகம் பற்றி பல நூல்கள் உள்ளன. அது போல பிற்காலத்தில் போயா தினம், வெசாக் தினம் என்பவற்றை ஏற்படுத்துவதில் இரு தமிழர்கள் ஆற்றிய பங்கை இங்கே நினைவு கொள்வோம்.

வெசாக் நாள் என்பது புத்தர் பிறந்த நாள். அவர் பண்டைய இந்தியாவின் கபிலவஸ்து என்கிற இடத்தில கி.மு. 623 பிறந்தார். வெசாக் என்பது இறந்த நாளும் கூட. அதேவேளை புத்தர் விஜயனிடம் அடுத்த 5000 வருடங்களுக்கு இலங்கை தான் பௌத்தத்தைக் காக்கும் என்று கூறி விஷ்ணு கடவுளுக்கு ஊடாக விஜயனுக்கு பிரித் நூலைக் கட்டி பௌத்தத்தை ஒப்படைத்த நாளாகவும் வெசாக் நாளை குறிப்பிடுகிறார்கள். அன்றிலிருந்து தான் “சிங்கள பௌத்த” இனம் தோற்றம் பெற்றதாகக் சிங்கள பௌத்தர்களால் கூறப்படுகிறது. அப்பேர்பட்ட “சிங்கள பௌத்த புனித நாள்” சிங்களத்தையும் பௌத்தயும் இணைக்கின்ற ஒரு சிங்கள – பௌத்த பண்பாட்டு மரபு நாளாக பொருள் கொள்ளப்படுகிறது. 

இன்னும் சொல்லப்போனால் மகாவம்ச காப்பியத்தின்படி “தம்மதீப” கோட்பாட்டாக்கம் பெற்ற நாளென இந்த நாளை நாம் பொருள்கொள்ளலாம். கௌதம புத்தர் துறவறம் பூண்டு எட்டாவது ஆண்டில் இலங்கைக்கான தனது மூன்றாவது விஜயத்தை செய்து களனியை வந்தடைந்ததும் இத்தகைய வெசாக் நாளில் என்கிறது அதே மகாவம்சம்.

புத்தர் பிறந்த தினத்தை எவராலும் அறுதியிட்டு கூற முடியாத நிலையில். அதுவொரு பௌர்ணமி நாள் என நம்பப்படுவதால் பௌர்ணமியில் அது கொண்டாடப்படுகிறது.

வெசாக்கின் ஆரம்பம்

இலங்கையில் வெசாக் நாளானது தேவநம்பியதீச மன்னர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னர் வெசாக், பொசன், எசல போன்ற பௌர்ணமி தினங்களையும் பௌத்தர்கள் நினைவுகூறுவது மரபாக்கப்பட்டது. நெடுங்காலமாக தொடரப்பட்ட இந்த மரபை போர்த்துகேயர் ஆக்கிரமித்தபோது சகல பௌத்த மத சடங்குகளையும், திருவிழாக்களையும் தடை செய்தனர். ஒல்லாந்தர் காலத்தில் மத இறுக்கங்களில் சற்று தளர்வு இருந்தது. ஆனால் 1770 ஆம் ஆண்டு நவம்பர் அன்றைய டச்சு கவர்னர் போல்க் (Falk) போயா விடுமுறை, வாராந்த ஞாயிறு விடுமுறை என்பவற்றை தடை செய்தார். ஞாயிறு நாட்களில் பௌத்த உபதேசங்கள் பூஜைகளை செய்யும் மரபு இருந்து வந்தது. ஆங்கிலேயர் இலங்கையை கைப்பற்றியபின்னர் மீண்டும் ஞாயிறு நாளை விடுமுறை தினமாக அறிவித்தார்கள்.

நூறு வருடங்களுக்கு முன்னர் 1815 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் பௌத்தத்தை பாதுகாப்பதற்கும் பௌத்த மதத் திருவிழாக்களை இடையூறின்றி நடத்துவதற்கான உடன்பாடும் காணப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் தமது நாட்காட்டியில் வெசாக் தினத்தையும் குறித்து வந்தார்கள். 

1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் நிகழ்ந்தபோது பௌத்தர்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கோரி 1884 இல் இங்கிலாந்து சென்ற கேணல் ஒல்கொட் பெப்ரவரி மாதம் அங்கே 6 கோரிக்கைகளை காலனித்துவ செயலாளரிடம் முன்வைத்தார். அதில் ஒன்று தான் வெசாக் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக்க வேண்டும் என்பது. இதன் மூலம் புத்தரின் பிறந்த நாளான வெசாக் பௌர்ணமி தினத்தை பொது விடுமுறையாக்குவதற்கும், பௌர்ணமி பெரஹரக்கள் நடத்துவதற்கும் வழிசமைக்கப்பட்டது.

இலங்கையில் இராமநாதனின் வகிபாகம்

இதற்கான விவாதங்கள் அரசாங்க சபையில் நடைபெற்றன. 100 வருடங்களுக்கு முன்னர் சேர் பொன் இராமநாதன் பௌத்தர்களின் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக்கும்படி இலங்கையின் அரசாங்க சபையில் போராடியதை இன்றும் பல சிங்களத் தலைவர்கள் போற்றி வருவதைக் காண்கிறோம்.

இராமநாதன் வெசாக் விடுமுறைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த வேளை கரையோரச் சிங்களவர்களின் பிரதிநிதிகள் அதற்கு ஆதரவு வழங்க மறுத்திருந்தார்கள். இறுதியில் 1885இல் விடுமுறைச் சட்டத்தின் மூலம் வெசாக் தின விடுமுறை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் இராமநாதன் இந்துக்களின் நாளொன்றிலும் அப்படியொரு விடுமுறை வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசாங்க சபையில் உத்தியோகபற்றற்ற உறுப்பினராக இருந்த பறங்கி இன பிரதிநிதி ஜே.ஆர். வைன்மேன் (J. R. Weinman) ஏப்ரல் 11ஐ இந்துக்களுக்கான விடுமுறையாகவும், ஏப்ரல் 28 ஆம் திகதியை பௌத்தர்களுக்கான வெசாக் நாள் விடுமுறையாகவும் முன்மொழிந்தார். வைன்மேன் பிரம்மஞான சங்கத்தின் செயற்பாட்டாளராக ஒல்கொட்டுடன் சேர்ந்து பணியாற்றி வந்தவர்.

அதுவே பின்னர் 1886 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்கச் சட்டமாக அரச விடுமுறைச் சட்டத்தை பிரகடனப்படுத்தியது. அந்த ஏப்ரல் 11 தான் பின்னர் சிங்கள – தமிழ் புத்தாண்டு விடுமுறையாக பின்னர் ஆனது. இராமநாதன் பின்னர் 1888ஆம் ஆண்டு பன்சலைகளையும், வெஹர விகாரை ஆகியவற்றையும் பாதுகாப்பதற்கான அழுத்தங்களை பிரயோகித்து அதனை வெற்றி பெறச்செய்திருந்தார். 

ஆனால் கரையோர சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.எல்.அல்விஸ் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த வெசாக் விடுமுறைக்கு ஆதரவாக அன்று பொன்னம்பலம் இராமநாதன் முக்கிய உரையை ஆற்றியிருந்தார். “அரசாட்சி காலத்திலிருந்து புத்தர் பிறந்த வெசாக் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக அனுஷ்டித்து வந்தார்கள். மீண்டும் அந்த நாளை அரச விடுமுறை நாளாக்க வேண்டும்.” என்று சேர் பொன் இராமநாதன் உரையாற்றினார்.  கூடவே பௌத்தர்களுக்காக மட்டும் இப்படி விடுமுறை அளிக்கும் அதேவேளை இந்துக்களுக்கும் விடுமுறை நாளொன்றை வழங்க வேண்டும் என்றும அன்றைய Times of ceylon (11.08.1885) பத்திரிகையில் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் 15.01.1886 அன்று சட்டசபையிலும் ஒலித்தது. அந்த காரசாரமான விவாதத்தின் விளைவாக தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினமும் உருவானது. இந்துக்களுக்கு விடுமுறை வேண்டும் என்று உறுதியாக குரல் கொடுத்தவர்கள் பலர் அன்றைய ஆங்கில பிரதிநிதிகளே.


1886 ஆம் ஆண்டு இராமநாதன் ஐரோப்பிய பயணத்தை மேற்கொள்ள தயாராகிக் கொண்டிருந்த வேளை பௌத்தர்களுக்கு தலைமை தாங்கிய ஹிக்கடுவே சுமங்கள தேரரும், பிரம்மஞான சங்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவரான ஏ.பி.தர்ம குணவர்த்தனவும் இராமநாதன் வெசாக் தினத்தை பொதுவிடுமுறையாக்குவதற்காக அரசாங்க சபையில் மேற்கொண்ட விவாதத்துக்காக நன்றி தெரிவிப்பதற்காக கூட்டம் ஒன்றை பெப்ரவரி 8  திகதியன்று நடத்தினர். அதுமட்டுமன்றி பௌத்த சீர்திருத்தவாதியும், பிம்மஞான சங்கத்தின் ஸ்தாபகருமான கேணல் ஒல்கொட்டும் இராமநாதனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். 

28.04.1885 அன்றிலிருந்து வெசாக் பௌர்ணமி தினம் அரச பொது விடுமுறையாக ஆனது. அது உத்தியோகபூர்வமாக 1886 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க சட்டமாக (No. 4 of 1886. An Ordinance to provide for Public and Bank Holidays) பிரகடனப்படுத்தப்பட்டது.


கேணல் ஒல்கொட் ஒரு முன்னோடி

வெசாக் தினத்தன்று பௌத்த கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்றும் அதற்கான ஒரு கொடியை உருவாக்குவது என்றும் பௌத்த பாதுகாப்பு சபை தீர்மானித்தது. பௌத்த கொடியை உருவாக்கும் குழுவில் சுமங்கல தேரர், குணானந்த தேரர், கரோலிஸ் ஹேவவிதாரன (அநகாரிக்க தர்மபால) போன்றோரும் உள்ளடக்கம். ஒல்கொட்டின் வழிகாட்டுதலில் கரோலிஸ் குணவர்தன என்பவரால் பௌத்த கொடி தயாரிக்கப்பட்டது. 

கேணல் ஒல்கொட்டின் தலைமையில் உருவாக்கப்பட்ட பல்வர்ண பௌத்த கொடி இன்றும் சர்வதேச பௌத்த கொடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1885 மார்ச் 27 அன்று அன்றைய ஆளுநர் ஹெமில்டன் கோர்டன் வெசாக் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தார். அடுத்த மாதம் 1885 ஏப்ரல் 28 அன்று வெசாக் தினம் கொண்டாடப்பட்ட அதே நாள் முதலாவது தடவையாக அந்த பௌத்த கொடி ஏற்றப்பட்டது.

முதலாவது தடவையாக தீபதுத்தாமாறாம  விகாரையில் குணானந்த தேரர் தலைமையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 1885 ஏப்ரல் 28 அன்று கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமவில் முதல் தடவை ஏற்றப்பட்டது. இந்தக் கொடியே 1956ஆண்டிலிருந்து சர்வதேச பௌத்த கொடியானது. 1956இல் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டின் போது உலக பௌத்த கொடியாக ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.

சிங்களப் பத்திரிகையான 'சரசவி சந்தரெச' இவ்வாறு எழுதியது: "ஒரு தேசிய இனக் குழுமம் என்ற வகையில் பௌத்தர்கள் திரு.இராமநாதனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். வெசாக் விடுமுறை மற்றும் பௌத்த விகாரைகள் சட்டமூலம் (Buddhist Temporalities Ordinance) பற்றிய பிரச்சினையில் அவர் கொண்டிருந்த ஆர்வம், பாலி கல்லூரி மற்றும் பிரம்மஞான சங்கத்த்துக்கு ஊடாக பௌத்த பாடசாலைகளை அமைப்பதற்கு அவர் செய்த நன்கொடை, பௌத்த மதத்திற்கான ஆற்றிய பிற சேவைகள் ஆகியவை அவரை இலங்கையின் பௌத்தர்கள் அதிகம் நேசிக்கச் செய்தன.” 


வெசாக்கை சர்வதேச நாளாக்கிய லக்ஷ்மன் கதிர்காமர்

1998 நவம்பர் மாதம் இலங்கையில் உலக பௌத்த மாநாடு நடைபெற்றது. அங்கே வருடந்தோறும் மே மாத பௌர்ணமி நாளை சர்வதேச வெசாக் நாளாக பிரகடனப்படுத்தினார்கள். ஆனால் அதற்கு சட்டபூர்வமான சர்வதேச அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையே வழங்க முடியும். அதனைத் தொடர்ந்து லக்ஷ்மன் கதிர்காமர் ஐக்கிய நாடுகள் சபையில் வெசாக் பௌர்ணமி தினத்தை சர்வதேச விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தும்படி கடும் முயற்சிகளை மேற்கொண்டார். 1999 செப்டம்பர் 23  அன்று அவர் ஐ.நா.பொதுச்சபையில் இது குறித்து உரையாற்றினார். அங்கிருந்த ஏனைய நாட்டு பிரதிகளைச் சந்தித்து அந்தப் பிரேரனைக்கு ஆதரவு திரட்டினார். டிசம்பர் 13 அன்று பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, சிலி, சைப்ரஸ், கிரெனடா, ஐஸ்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு, மாலைத்தீவு, மங்கோலியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், கொரிய குடியரசு, ரஷ்யா, சீஷெல்ஸ், ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், இலங்கை, சுரினாம், தாய்லாந்து, உக்ரைன். கிரீஸ், மொரீஷியஸ், நோர்வே, துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தம்மை இக்கோரிக்கைக்கான ஆதரவு நாடுகளாக இணைத்துக்கொண்டன. அந்நாட்டுத் தலைவர்களில் பலர் ஆதரித்து ஆற்றிய உரைகள் ஐ,நா. வின் 54 வது கூட்டத் தொடரின் கூட்ட அறிக்கையில் முழுமையாக உள்ளன.

இறுதியில் கதிர்காமரின் கடும் முயற்சியால் வெசாக் நாளை சர்வதேச விடுமுறை நாளாக்கும் பிரேரணை 1999 டிசம்பர் 15 அன்று ஐ.நா. வில் எந்த வாக்கெடுப்புமின்றி நிறைவேறியது.  இந்தப் பிரேரணையின் படி விரும்பிய நாடுகள் அந்த விடுமுறையை அமுல்படுத்தலாம். இந்த வெற்றியினால் சிங்கள பௌத்தர்கள் கதிர்காமரை இன்றும் கொண்டாடுகிறார்கள்.

இலங்கை மட்டுமன்றி மலேசியா, மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, ஹொங்கொங், தைவான் ஆகிய நாடுகள் வெசாக் தினத்தை பொது விடுமுறை தினமாக அனுஷ்டிக்கின்றனர்.

மொத்தத்தில் வெசாக் நாளை இலங்கையிலும், சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெறச் செய்தவர்கள் பௌத்தர்கள் அல்லாதவர்களே. கேணல் ஒல்கொட் கத்தோலிக்க மதத்தவராக இருந்து பௌத்தத்துக்கு மாறி பின்னர் சர்வமதத்தவராக ஆனவர். அதேவேளை சேர் பொன் இராமநாதன் சைவ மதத்தை சேர்ந்தவர். லக்ஸ்மன் கதிர்காமர் ஒரு கத்தோலிக்கர். இலங்கையின் பன்முகத் தன்மைக்கும், பன்மத உறவுகளுக்கும் இது ஒரு வரலாற்று ரீதியிலான எடுத்துக்காட்டு எனலாம்.


நன்றி - தினகரன் - சாளரம் பகுதி - 11.05.2015

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates