இலங்கையின் காலனித்துவ வரலாற்றில் 1656 இல் போர்த்துகேயர்களை விரட்டிவிட்டு ஒல்லாந்தர் (டச்சு) அந்த இடத்தில் நிலைகொண்ட வரலாற்றை அறிவோம். போர்த்துகேயர்களை விட சட்ட ரீதியிலான அமைப்பை நிறுவியவர்கள் ஒல்லாந்தர். அச்சட்டங்கலையே ஆங்கிலேயர்களும் திருத்தங்களுடன் ரோமன் டச்சு சட்டம் எனும் பேரில் நடைமுறைப்படுத்தினர்.
போர்த்துக்கேயர் இலங்கையில் காலடி எடுத்து வைத்த வேளை முஸ்லிம்களின் வர்த்தக செல்வாக்கை முறியடித்து வலுவிழக்கச் செய்தனர். அப்போது கொழும்பில் வர்த்தக ரீதியில் செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தவர்கள் முஸ்லிம்களும், தமிழர்களுமே. முஸ்லிம்கள் வியாபார வர்த்தக நடவடிக்கைகளில் அப்போதும் ஈடுபட்டு வந்தார்கள். கொழும்பில் அதற்கடுத்தபடியாக செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தவர்கள் தமிழர்கள். குறிப்பாக சொல்லபோனால் செட்டி சமூகத்தினர். பெரிய கடன்களை வழங்கும் சக்தியாக அவர்கள் இருந்தனர். கறுவா வர்த்தகத்தை ஏகபோகமாக்குவதற்காகவும் தங்கள் வணிக உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் டச்சுக்காரர்கள், கொழும்பின் பொருளாதார இதயத்தில் ஐரோப்பியரல்லாதவர்களின் செல்வாக்கை மட்டுப்படுத்த முயன்றனர்.
இவ்விரு சமூகத்தினரும் கொழும்பில் ஒல்லாந்தரின் பொருளாதார பலத்தையும், ஈற்றில் அரசியல் அதிகார செல்வாக்கை அடைந்து விடக்கூடும் என்கிற பீதி எழுந்தது. இதன் விளைவாக அவர்கள் 1747 பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
சோனகர்களும், தமிழர்களும் கறுவாப்பட்டை உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள், புடவை போன்ற வர்த்தகங்களில் ஒல்லாந்தருடன் போட்டியிடும் சக்தியினராக இருந்தனர். இவர்களது வளர்ச்சி ஐரோப்பிய வர்த்தகங்களுக்கு சவாலாக இருந்தது.
தென்னிந்தியாவுடனும் அரபு நாடுகளுடனும் இவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் டச்சு அதிகாரத்திற்கு ஆபத்தாகக் கருதப்பட்டது. நகரங்களில் இருந்து இவர்களை விலக்கி வைப்பதன் மூலம் அவர்களின் அரசியல் வலிமையை குறைக்கலாம் என்று நம்பினர். அதன் விளைவாகவே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆணையின் மூலம் இன்னொன்றும் தெளிவாகின்றது. சிங்களவர்கள் அந்தளவு பொருளாதார ரீதியில் பலமானவர்களாகவோ, டச்சு அரசாங்கத்தின் செல்வாக்குக்கு சவாலானவர்களாகவோ இருக்கவில்லை என்றும் ஊகிக்க முடிகிறது. அப்படி இருந்திருந்தால் அவர்களும் இத்தடைக்கு உள்ளாகியிருப்பார்கள். எவ்வாறாயினும் குறிப்பாக ஐரோப்பியர் அல்லாத - கிறிஸ்தவரல்லாத சுதேசிய சமூகங்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் கீழ் இருந்த கொழும்பு கோட்டையானது காலனித்துவ அதிகாரத்தின் நிர்வாக, வணிக மற்றும் குறியீட்டு மையமாக இருந்தது. கோட்டைக்கு புறமாக இருந்த புறக்கோட்டைப் பகுதியை பெட்டா (Pettah) என்று அழைத்தார்கள். “பேட்டை” என்பதையே அவர்கள் அவ்வாறு “பெட்டா” என்றார்கள்.
“பெட்டா” பரபரப்பான வர்த்தக மையமாக செயல்பட்டது. அங்கே நிலத்தின் மீதான கட்டுப்பாடு என்பது காலனியப் பொருளாதாரம், வளங்கள், அதிகாரம் ஆகியவற்றுக்கான மையமாக திகழ்தது. இதன் விளைவாக, அங்கு யார் சொத்து வைத்திருக்க முடியும் என்கிற தீர்மானம் வெறும் சட்ட விவகாரம் மட்டுமல்ல, அன்றைய அதிகார இயக்கவியலைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் முடிவும் கூட.
1815 ஆம் ஆண்டு முழு இலங்கையையும் ஆங்கிலேயர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒல்லாந்தர் 1747 ஏற்படுத்திய தடையை 1817 ஆம் ஆண்டு ஜூன் 2, அன்று, ஆளுநர் சேர் ரொபர்ட் பிரவுன்ரிக் (Sir Robert Brownrigg) உறுதி செய்ததுடன் சில பகுதிகளை மட்டும் தளர்த்தும் வகையில் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். கோட்டை – புறக்கோட்டை பெரும்பகுதிக்குள் அதுவரை சோனகர்களாலும் தமிழர்களாலும் கொள்வனவு செய்யப்பட்ட எந்த சொத்தும் செல்லுபடியாகாது என்றும் அறிவித்தார். ஆனால் மீன் சதுக்கம் (Fishers’ Quarte), பேங்க்ஷ்சல் பகுதி, ஏரிக்கு அருகிலுள்ள இரண்டு தெருக்கள் என்பன இதில் விதிவிலக்கு. அதாவது இப்பகுதிகள் அவர்களின் சொத்துக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சியையும் நகர்ப்புற அதிகார மையத்தில் அரசியல், வர்த்தக போட்டியாளர்கள் காலூன்றுவதை இதன் மூலம் தடுக்க முயன்றிருக்கிறது. முஸ்லிம் - தமிழ் வர்த்தகர்களின் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி குறித்த அன்றைய காலனிய அச்சத்தையே இந்தக் கொள்கை பிரதிபலித்தது.
1832 இல் இரண்டும் இரத்து
1832 ஆம் ஆண்டு 5 மே அன்று, பிரித்தானியர் “1832 ஆம் ஆண்டின் சட்ட ஒழங்கு - எண் 2” (Regulation No. 2 of 1832) என்கிற ஆணையைப் பிறப்பித்தனர். 1832 யூன் 1 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், கொழும்பு கோட்டை, புறக்கோட்டைக்குள் உள்ள வீடுகளையும் காணிகளையும் சொந்தமாக வைத்திருக்கவும் வசிக்கவும் சோனகர்களுக்கும் தமிழர்களுக்கும் முழு உரிமைகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் சுமார் 85 ஆண்டுகால பாகுபாட்டிற்கு சட்டபூர்வ முடிவு காணப்பட்டது. பேரவையின் செயலாளர் பி.அன்ஸ்ட்ரூதர் (P.Anstruther) என்பவரால் பிரகடனப்படுத்தப்பட்ட ஆணையின் பிரகாரம் 1747, 1817 ஆகிய இரு ஆணைகளும் இரத்து செய்யப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கொள்கையில் பரந்த தாராளவாத போக்குகளை பிரதிபலித்தது, இதில் சட்ட சமத்துவம் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் ஆகியவை அடங்கும். காலனிய வர்த்தகமும், நிர்வாகமும் பரிணாம வளர்ச்சியடைந்து வந்த நிலையில், முந்தைய விதிமுறைகள் நடைமுறைக்கு ஒவ்வாததையும், நியாயமற்றவையையும் காலனித்துவ அரசு ஒப்புக் கொண்டது.
கொழும்பில் தமிழர்களும், சோனகர்களும் தமது வாழ்வு இருப்பை இதன் பின்னர் தான் உறுதி செய்துகொள்ளத் தொடங்கினர். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இன்றும் வியாபார வர்த்தக ரீதியில் செல்வாக்கு செலுத்தும் பிரதான சமூகங்களாக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் திகழ்கின்றன.
Notes
- 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியர் வெசாக் தினப் பண்டிகையை அனுமதித்து இயற்றிய சட்டத்தை A Collection Of Legislative Acts Of The Ceylon Government From 1796 to 1833 என்கிற நூலில் தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாக இச்சட்டத்தை காணக்கிடைத்தது
- போர்த்துகேயர்களும், ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்கள் வரை இலங்கைத் தமிழர்களையும், தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்களையும் அப்போது “மலபாரிகள்” (Malabars) என்றே அழைத்தனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...