Headlines News :
முகப்பு » , , » புகலிட இலக்கிய சந்திப்பு : இருப்பின் இரகசியம் - என்.சரவணன்

புகலிட இலக்கிய சந்திப்பு : இருப்பின் இரகசியம் - என்.சரவணன்

“உன் கருத்தில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அந்த கருத்தை நீ சொல்வதற்கான உரிமையைப் பாதுகாக்க என் உயிரையும் கொடுப்பேன்”

 என்பார் பிரெஞ்சு அறிஞர் வோல்டயர். அந்த வழியில், மிகவும் எதிரும் புதிருமான முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களும் ஒன்று கூடி கருத்துக் களமாடும் அரங்காக இலக்கிய சந்திப்பு இருந்து வருகிறது.

1988 ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மனில் தொடங்கப்பட்ட இலக்கிய சந்திப்பு 36 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 51 வது இலக்கிய சந்திப்பு கடந்த மார்ச் 30, 31 ஆகிய நாட்களில் பாரிஸ் நகரில் நடந்து முடிந்திருக்கின்றது.



இலக்கிய சந்திப்பு ஈழத்து எழுத்துப்பரப்பில் கனதியான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. யுத்தம் சிதைத்த வாழ்வுக்குள் தள்ளப்பட்டு புகலிடம் தப்பிச் சென்ற பலரின் இலக்கிய, அரசியல், சமூக வெளிப்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் தளமாக மட்டுமன்றி அனைத்துவித அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் களமாகவும், கண்டனங்களை பதிவு செய்யும் களமாகவும் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது.

புகலிட சிறு சஞ்சிகைகள் அதிகம் வெளிவந்த 80கள் 90களில் அந்த சஞ்சிகையாளர்களை ஒன்று கூட்டும் ஆன்மாவாகவும் இருந்துவந்துள்ளது. பல அராஜக அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபடி இத்தனை இலக்கிய சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது.

இலக்கிய சந்திப்பு என்பது எந்தவித சட்டாம்பித்தனங்களுக்கும் இடம்கொடுக்காமல், அனைத்து வித அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் (பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்டவர்களும்) கருத்தாடுவதற்கான கருத்துச் சுதந்திரத்துக்கான களமாக இயங்கி வருகிறது. ஈழத்து தமிழ் இயங்குதளத்தில் அது ஒன்றே இதுவரை நீண்ட காலமாக நின்றுபிடித்து நீடித்து வரும் ஒரே ஜனநாயகக் களமாகவும் நாம் கருத முடியும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தனிநபர்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மீதோ கொள்கின்ற முரண்பாடுகள் காரணமாக சிலர் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்து ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். அல்லது எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான எதுவும் இலக்கிய சந்திப்பின் இருப்பைப் பாதித்ததில்லை.

அதற்கான அடிப்படை காரணம் இந்த இலக்கிய சந்திப்பு எந்த ஒரு தனி நபரிடமோ அல்லது எந்தவொரு குழுவிடமோ நிரந்தரமாக சிக்கியதில்லை என்பதுதான். இலக்கிய சந்திப்பு என்பது ஒரு நிறுவனம் அல்ல. அதற்கென்று ஒரு நிர்வாகமோ கட்டுப்படுத்தும் யாப்போ கூட இல்லை. உரிமை கோர எவருமில்லை. இவை தான் இலக்கிய  சந்திப்பின் இருப்புக்கான வெற்றியின் இரகசியம். இவற்றில் ஏதாவது ஒரு விடயம் இருந்திருந்தாலும் அது உடைந்து சுக்கு நூறாக அழிந்து போயிருக்கும். இலக்கிய சந்திப்பு என்றும் எவர் கைகளுக்கும் நிரந்தரமாக போகமுடியாதபடி அதன் திறந்த ஜனநாயகப் பொறிமுறை பேணப்பட்டு வருகிறது.

இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்பவர்களின் தனிப்பட்ட அரசியல், நடத்தை சார்ந்த விடயங்களை விசாரிப்பதற்கோ, தண்டிப்பதற்கோ, தீர்மானம் நிறைவேற்றுவதற்கோ எந்த அதிகாரமோ இலக்கிய சந்திப்புக்கு இல்லை. விதிகளுக்கு ஊடாக கட்டுப்படுத்துவதற்கான யாப்போ அவற்றை வியாக்கியானப்படுத்துவதற்கான பொறிமுறையோ இலக்கிய சந்திப்பிடம் கிடையாது. ஆனால் சில சந்திப்புகளில் அதில் கலந்துகொள்பவர்களின் பரிந்துரைகளின் பேரில் கண்டனத் தீர்மானங்கள் சில சந்தர்ப்பங்களில் நிறைவேற்றப்பட்டிருகின்றன. அரசுக்கெதிரான கண்டனங்கள், பரிந்துரைகள் கூட தீர்மானங்களாக சில தடவைகள் நிறைவேற்றப்பட்டிருகின்றன. 


பரா மாஸ்டர் அன்று சொன்னது
1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோர்வே வந்து சேர்ந்த நான் 2000ஆம் ஆண்டு ஜெர்மனில் – ஸ்டுட்கார்ட் நகரில் நடந்த இலக்கிய சந்திப்பில் முதற் தடவையாக கலந்து கொண்டேன். இலக்கிய சந்திப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான “சிந்தனை” சஞ்சிகை ஆசிரியர் தோழர் பரா என்று அழைக்கப்படும் பரராஜசிங்கம் அவர்களும் அங்கே கலந்து கொண்டிருந்தார். அப்போது நான் தமிழீழ, மாக்ஸிய இயக்க அரசியலில் இயங்கிய காலமாதலால் புரட்சிகர சமூக மாற்றத்துக்கு கட்சியின் அவசியம் பற்றி நான் வகுப்பெடுத்த காலமும் கூட. எனவே அமைப்பாதலின் அவசியத்தையும், அரசியலையும் நான் உறுதியாக நம்பிய காலம்.

தோழர் பரா அவர்களிடம் ‘இலக்கிய சந்திப்பை ஒரு நிறுவனமாக்காமல், ஏன் இவ்வளவு தளர்வாக வைத்திருக்கிறீர்கள்?’ என்று அவரிடம் விவாதித்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்; இதன் இருப்பு நீடிக்க வேண்டுமென்றால் இது ஒரு அமைப்பாக ஆகாமல் இருப்பது தான் சரியானது என்று பரா உறுதியாக வாதிட்டார். அவர் தனது அனுபவத்திலிருந்து தீர்க்கதரிசனமாக அன்று கூறியது மிகச் சரியானதே என்பதை அடுத்த ஓரிரு வருட ஐரோப்பிய வாழ்க்கை உணர்த்தியது. இலக்கிய சந்திப்பு இன்று உயிருடனும், உயிர்ப்புடனும் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அது அமைப்பு வடிவம் பெறாதது தான்.

இலக்கியச் சந்திப்பானது பலவிதமான கருத்துக்களையும், பலவிதமான அரசியலையும் கொண்ட பலரையும், அவர்களின் வெளிப்பாடுகளையும் மையப்படுத்திய ஒரு இடமாக இருந்திருக்கிறது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது. ஒரு வகையில் சொல்லப்போனால் அமைப்பாகியும், அமைப்பாகாமலும் இருந்துவந்த ஒரு செயல்பாடாக இலக்கியச் சந்திப்பு இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் இது தமிழ்த்தேச அரசியலின் பிற்போக்குத்தன்மையை கண்டிப்பதாக, விமர்சிப்பதாக, அதன் மறுசீரமைப்பு தொடர்பான வாதங்களை எழுப்புவதாகவும், பல்வேறு தேடல்களை நோக்கியதாகவும் கூட அமைந்தது.

அதுவும் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சும்மா இருக்கமாட்டர்கள் என்பது இயல்பு. "எதையாவது செய்ய வேண்டும்" என்கிற மன நிலை எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். எனவே சமூக அக்கறையுடன் திட்டவட்டமான ஒரு இலக்கு இருக்கிறதோ இல்லையோ எதையாவது செய்தாக வேண்டும். புகலிடச் சூழலில் சுய அடையாளத்திற்கான அல்லது சுயவிளம்பரத்திற்கான போராட்டமும் சில-பல சந்தர்ப்பங்களில் கூடவே இருப்பதுவும் ஒரு காரணம். 

போராட்ட அவலங்களையும், தொடர்ச்சியான போராட்டத்தையும் எதிர்கொண்டிருக்கும்; குறிப்பான தமிழ்ச் சூழலில் இவ்வகையான அரசியல் இலக்கிய சூழலை பலப்படுத்தியிருக்கிறது. அத்துடன் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளர்களை சும்மாயிருக்காமலிருக்கப் பண்ணியிருக்கிறது.


எனவே தான் இலக்கிய சந்திப்பானது வெறும் இலக்கியத்துடன் அதன் சந்திப்புகளை குறுக்கியதில்லை. மாறாக அது ஒரு மாற்று அரசியல், இலக்கிய சமூகநீதிக்கான களமாக இருந்திருக்கிறது. இச்சூழல் தம்மை புடம் போடுவதற்கான அரங்காக பலரால் ஆக்கப்பட்டிருக்கிறது. இலக்கிய சந்திப்பு நிகழ்ந்த இந்த 36 வருட காலத்துக்குள் பல்வகையான தத்துவக் கருத்தாக்கங்களும் அறிமுகமாகி முட்டி மோதி பேருரையாடலாக தமிழ் இலக்கிய பரப்புக்குள் பரப்பி இருக்கிறது. உதாரணத்துக்கு, பின் நவீனத்துவம், அமைப்பியல்வாதம், தலித்தியம் போன்றவை ஒருவகை மோஸ்தராக (Fasion) ஆகிவிட்டிருந்த காலங்களில் இச் சந்திப்புகளில் உரையாடலாக மேலெழுந்து படைப்புகளில் கலக்கச் செய்துள்ளன.

ஒற்றைச் சிந்தனை, சகிப்பின்மை, தனிப்பட்ட பகைமை, வெறுப்பு போன்றவற்றின் பாத்திரம்; இலக்கிய சந்திப்பின் மீதான எதிர்ப்புக்கான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

எதிர்ப்பிலக்கியங்கள், எதிர்ப்பரசியல், பாசிச எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சியோனிச எதிர்ப்பு, பிரதேசவாத மறுப்பு, பெண்ணியம், மார்க்சியம், தேசியம், தலித்தியம், விளிம்புநிலை கதையாடல் என இலக்கிய சந்திப்பு ஒடுக்கப்பட்டோருக்கான களமாக தனது பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் இவ்வகையான உரையாடல்களை உரையாடுவதற்கான கள வாய்ப்பு இலங்கையில் இருக்கவில்லை. மேலும் 80 - 90களில் புகலிடம் வந்தடைந்த இளம்பருவ ஈழ இயக்க அரசியல் போராளிகளாகவும், செயற்பாட்டாளர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தவர்கள் பலர் தம் தேசத்துக்கான பணிகளை புகலிடத்தில் இருந்து மேற்கொள்ளவென பல்வேறு அமைப்புகளாகவும், குழுக்களாகவும் இயங்கத் தொடங்கியிருந்தனர். இலக்கிய செயற்பாடுகளுக்காக பல சஞ்சிகைகள் இக்காலத்தில் தான் எழுச்சியுற்றன. வானொலிகளை நடத்துதல், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளிக்கொணர்தல், துண்டுப்பிரசுரங்களை வெளியிடுதல், எனத் தொடங்கி ஈற்றில் தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் என்பவற்றை நடத்துவது வரை வளர்த்தெடுத்தனர்.

இத்தகையவர்களின் தாகத்தின் நீட்சியாகவே இவ்வாறான இலக்கியச் சந்திப்புகளையும் தமக்கான வடிகாலாகப் பயன்படுத்த விளைந்தனர் எனலாம். அவர்களின் அரசியல் கருத்துக்களை, தமது நினைவுகளை, தமது துயரங்களை, எதிர்காலம் பற்றிய தேடல்களை வெளிப்படுத்தும் களமாக அவர்கள் இலக்கியச் சஞ்சிகைகள் தொடங்கி அரசியல் குழுக்களாக, இலக்கியச் சந்திப்புகளாக, பெண்கள் சந்திப்புகளாக அரசியல் கூட்டங்களாக, கலை இலக்கிய நிகழ்வுகளுக்கூடாக வெளிப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

ஒருபுறம் விடுதலைப் புலிகள் பலமாக இருந்து தமக்கு வெளியில் இயங்கிய அனைத்து சக்திகளையும் தமக்கு எதிரானவையாக பிரகடனப்படுத்தி இயங்கிக் கொண்டிருந்த காலம் ஆதலால், அவ்வாறு அவர்களுக்கு வெளியில் இயங்கிய சக்திகளின் மீது வன்முறையைப் பிரயோகித்து வந்த இருண்ட காலம் அது. ஒரு புறம் இலங்கை அரசுக்கு எதிராக இயங்கிக்கொண்டே மறுபுறம் விடுதலைப் புலிகளின் நசுக்குதல்களுக்கும் புகலிடத்தில் எதிர்கொள்ள நேரிட்ட காலம் அது. அப்படிப்பட்ட காலத்தில் மாற்றுத் தளமாக ஆனது தான் இலக்கிய சந்திப்பு.

ஆரம்பத்தில் பல இலக்கிய சந்திப்புகள் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மத்தியில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இலக்கிய சந்திப்போடு தொடர்புடன் இயங்கி வந்த சபாலிங்கம் பாரிசில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். பல நாடுகளில் மாற்று அரசியலைக் கொண்டிருந்தவர்கள் பகிரங்கமாகத் தாக்கப்பட்டார்கள்.

அப்பேர்பட்ட சூழலில் ஜனநாயகத்துக்காக ஒன்று திரளவும், குரல்கொடுக்கவும், எதிர்த்து நிற்கவும், தொடர்ந்து இயங்கவும், தம்மை அதற்கான பலமான கூட்டாக ஆக்கிக் கொள்ளவும் கூட இலக்கிய சந்திப்பு அரணாக இருந்த காலமொன்று இருந்தது. தமது அரசியல் – சமூக உணர்வின் ஓர்மத்தையும் பேணிக்கொள்ள இச்சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது உண்மையே.

மு.நித்தியானந்தன் அவர்கள் ஆரம்பகாலத்தில் இருந்து இலக்கிய சந்திப்புடன் தொடர்புடையவர். அவர் ஒரு கட்டத்தில் இப்படி குறிப்பிட்டார். ‘நம்மைப் போன்றோர் கலியாண வீடு, சாமத்திய வீடு, சடங்குகள் என்பவற்றில் கலந்து கொள்வதில்லை. இந்த இலக்கிய சந்திப்பு தான் நாம் ஒன்றுகூடி நமது, அன்பு, நட்பு, அறிவு எதையும் பரிமாறிக் கொள்ளும் இடமாக இருக்கிறது’ என்பார்.

இந்த இலக்கிய சந்திப்பு ஏற்படுத்திய நட்பு வலைப்பின்னல் பலமானது. அந்த வலைப்பின்னலில் இருந்து காலத்துக்கு காலம் சிலர் விட்டுச் சென்றிருக்கிறார்கள், மரணித்து இருக்கிறார்கள் அதேவேளை புதியவர்களால் அந்த வலைப்பின்னல் நிரப்பப்பட்டிருக்கிறது. அந்த வலைப்பின்னல் பேணப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வலைப்பின்னலில் எவரும் அதிகாரிகள் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.

எனவே எதிர்ப்பவர்கள், மறுப்பவர்கள், விமர்சிப்பவர்கள் எவரும் "இலக்கிய சந்திப்பின்" மீது விமர்சனம் வைக்க இயல்வதில்லை. ஏனென்றால் அத்தகைய குற்றச்சாட்டுக்களை ஏற்பதற்கு அங்கே அப்படி எவரும் கிடையாது. எந்த அமைப்பும் நிர்வாகமும் கிடையாது. கூடியபட்சம் குறிப்பிட்டதொரு இலக்கிய சந்திப்பை நடத்திய குழுவின் மீதோ, அல்லது அதில் கருத்து வைத்தவர்கள் மீதோ மட்டுமே விமர்சனங்களை முன்வைக்கலாம். அக்குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பு  கூட்டம் தொடர்பான அறம், ஜனநாயகம் சார்ந்த கேள்விகளுக்கு அக்குழு பதில் அளிக்க கடமைப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அக்குழு இலக்கிய சந்திப்பை அடுத்து நடத்தப்போகும் குழுவிடம் ஒப்படைத்து கடந்துவிடும்.


ஒவ்வொரு இலக்கிய சந்திப்பின் இறுதியில் இன்னொரு நாட்டில் அடுத்த சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை விடுப்பார். இலக்கிய சந்திப்பை நடத்தும் பொறுப்பு எந்தத் தனிநபரிடமும் ஒப்படைக்கப்படுவதில்லை. கோரியவர் அந்த நாட்டில் உள்ள இலக்கிய செயற்பாட்டாளர்களையும் சேர்த்து ஏற்பாட்டுக் குழுவொன்றை அமைத்துக் கொள்வார்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டவர்கள் தாமும் நடத்தக் கேட்டால், அங்கே வாக்குக்கு விடப்படும். அங்கு வந்திருப்பவர்கள் பெரும்பாலும் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்பவர்களாக இருப்பதால் அவர்களின் விருப்பும் அந்த வாக்கெடுப்பின் மூலம் அறியப்பட்டு எளிதாக முடிவெடுக்கப்படும். இலக்கிய சந்திப்பின் இந்த இறுதி நிகழ்ச்சியில் அந்த இலக்கிய சந்திப்பின் வரவு செலவு கணக்கையும் வெளியிடுவது வழக்கம். கலந்துனர்கள் இச்செலவுகளை பகிர்ந்துகொள்வது வழக்கம். சிலவேளை இதில் பணம் ஏதும் மிஞ்சினால் குறிப்பிட்ட ஒரு வேலைத்திட்டத்துக்கு உதவியாக அதனை வழங்க அக்குழுவால் தீர்மானம் எடுக்கப்படும். அத்தோடு அவர்களின் பொறுப்பு முடிந்தது. அக்குழு இயல்பாகக் கலைந்துவிடும். இதுவே நடைமுறை.

இன்றைய நவீன போக்கில் மாக்ஸிய இயக்கங்களின் உதிர்வுக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக, இறுக்கமான விதிகளையும், ஒழுக்க கட்டுப்பாடுகளையும் காரணமாக முன்வைத்து வருகிறார்கள். பெரும்பாலான அமைப்புகளில் அமைப்பின் மூலோபாய, தந்திரோபாயங்களை நோக்கிய வேலைத்திட்டங்கள் பற்றிய உரையாடல்கள், விவாதங்களுக்குப் பதிலாக அரைவாசிக்கும் மேற்பட்ட சக்தியும், நேரமும், உழைப்பும் அமைப்புத்துறை சார் விவகாரங்களிலேயே ஓடி விடுகிறது என்கிற விமர்சனம் இங்கு கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய விவாதங்கள் பெரும்பாலும் சிக்கலை தீர்ப்பதற்குப் பதிலாக ஈற்றில் உடைவுகளையே தந்திருக்கிறது என்கிற விமர்சனத்தை உதாசீனம் செய்து விட முடியாது.

குறிப்பாக புகலிடத்தில், பண்பாட்டு அமைப்புகள், சமூக, அரசியல், இயக்கங்கள் எல்லாமே குறைந்த ஆயுளைக் கொண்டதாக ஆனமைக்கும், துண்டு துண்டுகளாக சிதறுவதற்கும் அமைப்புத்துறை சார் சிக்கல்களே காரணமாக ஆகி இருக்கின்றன.

அப்பேர்பட்ட நிலையில் எத்தகைய விவாதங்களையும் நடத்தக்கூடிய களமாக மிஞ்சி இருப்பது இலக்கிய சந்திப்பு ஒன்று தான். எந்தக் கடும் விவாதங்களை நடத்துவதற்கான வாய்ப்புள்ள வேறு ஒரு களமும் தமிழ்ச் சூழலில் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய காரசாரமான விவாதங்கள் இடம் இருப்பதால் தான் அது வெளியில் சர்ச்சைக்குரியதான ஒன்றாகவும் எளிதில் இனங்காணப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அத்தகைய விவாதங்களை பதிவு செய்யவும் வெளிக்கொணரவும் சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் தான் இருந்தன. அதுவும் வாரங்களின் பின்னர், அல்லது மாதங்களின் பின்னர் தான் அவை வெளிவந்தன. ஆனால் இன்று உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பே செய்யப்படுகிறது. எனவே இலகுவாக அவை கருத்தாடல் களத்துக்கு வந்து சேர்ந்து விடுகின்றன.

இம்முறை பாரிசில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் குழப்புவதற்காகவே சிலர் கலந்து கொண்டிருந்தனர். இல்லாத சாதியப் பிரச்சினையை ஊதிப்பெருப்பிக்கிறார்கள் என்பதே அவர்களின் சாரம்சம்.  ஒருவர் கருத்து கூறி, அடுத்தடுத்து கருத்து கூறுபவர்களுக்கு வழிவிட்டு தமது அடுத்த கருத்தை வரிசையில் தெரிவிப்பதற்குப் பதிலாக; கூட்ட ஒழுங்கை மீறி அவர்கள் தொடர்ச்சியாக குறுக்கிட்டுக் கொண்டிருந்ததை கட்டுபடுத்த இயலாமல் போனதைத் தொடர்ந்து அங்கே சர்ச்சை எழுந்தது. அங்கே கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் பரஸ்பரம் உடன்படாத கருத்தாக இருந்த போதும் அவர்களுக்கு அங்கே கருத்தைக் கூறும் உரிமையை இலக்கிய சந்திப்பு மறுக்காது. ஆனால் அவர்கள் அந்த உரிமை துஷ்பிரயோகம் செய்வதற்காகவே வந்திருந்தார்கள். அவர்கள் ஒரு ஜனநாயக ஒழுங்குக்கு கட்டுப்பட முடியாத, அராஜக பாணியிலான அணுகுமுறையாளர்களாக அங்கே இருந்தார்கள். எனவே கலந்துனர்கள் அவர்களின் கருத்து சுதந்திரத்தை  அல்ல அவர்களின் அற மீறலை எதிர்த்து கூட்டத்தை கட்டுப்படுத்தி வழிநடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானார்கள். ஆனால் இலக்கிய சந்திப்பின் முடிவில் இந்த சம்பவம் இலக்கிய சந்திப்பின் அராஜகமாக வெளியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

சகல விதமான பன்முகப்பட்ட; மாற்றுக் கருத்துக்களுக்குமான ஜனநாயகக் களமாகவும் பேணப்படும் இலக்கிய சந்திப்பின் மீது கடும் விமர்சனங்களை வைப்பவர்கள் அதை ஒட்டு மொத்த இலக்கிய சந்திப்பின் மீதும் வைக்கும் போது; அவ்வாறு வைப்பதே ஒரு சுத்த அபத்தம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது. இவ்வாறு விமர்சிப்பவர்களில் சிலர் ஏற்கெனவே இலக்கிய சந்திப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் இலக்கிய சந்திப்பின் மரபையும், இயல்பையும் அறிந்தவர்கள் என்பது தான் வேடிக்கை. எவரெவரெல்லாம் இலக்கிய சந்திப்புடன் தொடர்பறுந்து போனார்களோ அவர்கள் வசதியாக இத்தகைய விமர்சனங்களை வைப்பதன் உள்நோக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. தனி நபர்கள் மீது வைக்க வேண்டிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் இல்லாத “அமைப்பின்” மீது வைப்பது பகுத்தறிவற்ற அபத்தமே.

ஒரு முன்மாதிரியான சுதந்திர கருத்துக் களமாக தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலக்கிய சந்திப்பை பாதுகாப்பதும், பேணுவதும் தமிழ் சமுதாயத்தின் கடமையாகும்.

இதுவரையான இலக்கிய சந்திப்புகள்


நன்றி - ஜீவநதி - மே - 2024

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates