Headlines News :
முகப்பு » » தமிழர் அரசியலில் தலைமைகளின் அரசியல் போதாமையும், தலைமைத்துவ தோல்வியும் - பா.நடேசன்

தமிழர் அரசியலில் தலைமைகளின் அரசியல் போதாமையும், தலைமைத்துவ தோல்வியும் - பா.நடேசன்


ராஜபக்ச அரசினை வீட்டுக்கு அனுப்புவதையே தலையாய கடமையாக தூக்கி திரிந்த அமைப்புகளும், தலைவர்களும் தற்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். இறுதி கட்ட போரின் இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன என எல்லோருக்கும் வாக்கு கேட்டார்கள். இலங்கையின் பெரும் வலதுசாரிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கே (ஐ.தே.க) பெரும்பாலும் ஆதரவு அளித்து வந்த தமிழ் தலைமைகள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பிரிவின் தலைமைத்துவத்திலான கூட்டணிக்கு ஆதரவு வழங்கினர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இலங்கை சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிங்க கொடியை ஏந்தினார். அரசு கொண்டு வந்த,மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டங்கள் அனைத்திற்கும் இணக்க அரசியல் என்று ஆதரவளித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இவை அனைத்திற்கும் அவர்கள் கூறிய காரணங்கள் இரண்டு. 

  1. தமிழ் மக்களுக்கு திரும்ப பெறமுடியாத அதிகார பகிர்வினை பெறுதல்.
  2. ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுத்தல்.

இவை இரண்டும் நடைபெறவே இல்லை. ஆனால் இன்று ராஜபக்ச அரசு மீதான வெகு மக்களின் எதிர்ப்பு தெற்கில் மக்களையும் இளைஞசர்களையும் வீதிக்கு கொண்டு வந்திருக்கிறது. தன்னெழுச்சியாக இடம்பெறும் இந்தப் போராட்டங்கள் மூலம் ராஜபக்ச தரப்பினை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் தமிழர் தரப்புக்கோ அல்லது அவர்கள் ஆதரவு அளித்த தெற்கின் ஆளும் தரப்புகளுக்கோ அறவே இல்லை.

தெற்கில் ஏற்பட்டிருக்கும் வெகு மக்கள் எதிர்ப்பில் சிறு பகுதியினர் தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகளை ஆதரிக்க முன்வந்துள்ளனர். இந்த சூழ்நிலையை கையாண்டு அனைத்து மக்களையும் திரட்டுவதன் ஊடாக  இனவாத சக்திகளை விரட்ட முடியும். இதன் மூலம் உண்மையான நல்லிணக்கத்தினை நாட்டில் ஏற்படுத்த முடியும். ஆனால் நல்லிணக்க வேடம் போட்ட  யாரையும் இப்போது காணவில்லை. அரசுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக அணிதிரள்வது எந்த ஆளும் தரப்புக்கும் உவப்பானது இல்லை. அதுவும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என நாட்டின் பலபாகத்தினரும் திரள்வது  இலங்கையை ஆளும் தரப்புக்கு ஏற்புடையது அல்ல.SLPP,UNP, SLFP என அனைத்து தரப்புகளும் இனவாதத்தின் அடிப்படையில் தான் தமது அதிகாரத்தை தங்கவைத்து வைத்து வருகின்றன. இடதுசாரி கட்சியாக கூறி கொள்ளும் JVP யும் இதற்கு விதிவிலக்கல்ல. 24மணி நேரமும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையே எமது சித்தம் எனக் காட்டி கொள்ளும் தமிழ் தலைமைகளது நிலைப்பாடு, அவர்களின் ஆளும் தரப்பு நட்பு சக்திகளின் நிலைப்பாட்டில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. 

 இந்த இணக்க அரசியலின் நோக்கம், "எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களிடம்  நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வினைப் பெறுவதே" என தாம் செய்த சகல செயல்களுக்கும் வியாக்கியானம் கொடுத்து வந்தார்கள் தமிழ் பேசும் மக்களின் தலைமைகள். அவர்கள் செய்து வந்த நல்லிணக்க அரிசியல் ஏற்படுத்தாத விளைவினை தற்போது உள்ள ஏற்படுத்தி உள்ளது. தமிழ் தலைமைகள் இத்தருணத்தில் தமது முழு ஆதரவையும் வழங்க மறுப்பதோடு அல்லாமல், பிரதான கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பபுக்குள் (TNA) சில பிரிவினர் தமிழர்களை போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தீவிரமாக பிரச்சாரமும் செய்கிறார்கள். ‘இது சிங்கள மக்களின் அரசாங்கத்தை மாற்றுவதற்கான போராட்டம், தமிழர்கள் இதில் ஈடுபட வேண்டியதில்லை. ‘தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஒரு சிங்களவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் தமிழர்கள் வீதிக்கு வரமாட்டார்கள்’ என்பதையே இவர்களை போன்றோர் மக்களிடம் திரும்ப திரும்ப முன்வைக்கிறார்கள்.

இனப்படுகொலைக்கு உள்ளான சமூக மக்கள் அனுதாபத்திற்கு உள்ளாகுவதும், அவர்கள் கசப்புணர்வை வெளிப்படுத்துவதும் இயல்பானது. நாம் கொல்லப்படும் போது நமக்கு உதவவோ, குரல் கொடுக்கவோ யாரும் முன்வரவில்லை.இங்கிலாந்து உட்பட பல புலம் பெயர்நாடுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வீதிக்கு வந்தபோது, பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி என்று கூறிக்கொள்ளும் ஜே.வி.பி, ராஜபக்சே ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போரை மறைமுகமாக ஆதரித்தன. தமிழ் சமூகத்தினுள் இருந்த பல புலிகளுக்கு எதிரான பிரிவுகளும் மௌனம் காத்ததுடன், போராட்டக்காரர்களை புலி ஆதரவாளர்கள் எனக் கூறி ஒதுக்கிவிட்டனர். 

உலகெங்கிலும் உள்ள வெகுஜன ஊடகங்கள் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த படுகொலைகளை கண்டும் காணாமல்  புறக்கணித்தன. இந்தப் பிரச்சினையில் ஐநா நிறைவேற்றிய முதல் தீர்மானம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பாதக இருந்தது. பிரித்தானியாவில் போருக்கு எதிரான கூட்டமைப்பு கூட தனது மாநாட்டில் போருக்கு எதிராக ஒரு வலுவான சாதாரண தீர்மானத்தை நிறைவேற்றுவதை மறுத்தது. இலங்கை அரசு போர் பகுதியில் தமிழர்களை சுற்றி வளைத்து சிறு நிலப்பகுதிக்கு அடக்கி கொன்று குவித்த நேரத்தில், ஈழ தமிழ் மக்கள் இவ்வாறான கையறு நிலையில் இருந்தனர்.  ஆனால் புலம்பெயர் தேசங்களிலும், இலங்கையிலும் தம்மை தலைவர்களாகவும், அடுத்த புலிகளாகவும்  பிரகடனப்படுத்திக் கொண்டோர் அப்போது தோன்றிய வெகு மக்கள் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. பிரித்தானிய பாராளுமன்றமும் ஐ.நாவும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று பலர் போராட்டக்காரர்களுக்கு எதிராக வாதிட்டனர். போர் முடிவடைந்த பின்னர், அவர்கள் ஐ.நா மற்றும் மேற்கு பாராளுமன்றங்களின் லாபியை மட்டுமே ‘போராட்டத்தின்’ வழிமுறையாகக் அறிவித்துக் கொண்டனர்.

இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் எதுவித போராட்டத்தையும் நடத்த இலங்கையில் யாரும் முன்வரவில்லை. அவர்களைத் தடுத்து நிறுத்தியது இராணுவ அடக்குமுறை பயம் அல்ல - மாறாக அவர்களின் போராட்ட மறுப்பு அரசியல். போருக்கும் இடம்பெற்ற இனப்படுகொலைக்கும் எதிராக இலங்கையில் பேராட்டத்தை இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல முன்வந்த ஒரே அமைப்பு  USP (ஐக்கிய சோசலிசக் கட்சி)  என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.  தற்பொது தமிழ் சொலிடாரிட்டி என்ற பெயரில் இயங்கும் அமைப்பு, 2009 காலகட்டங்களில் "தமிழர்கள் மீதான படுகொலையை நிறுத்து" என்ற பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாகும். இந்த இயக்கத்தை அமைத்து செயலாற்றியதில் USP முக்கிய பங்காற்றியது. இன்னும் சில சிறிய ட்ரொட்ஸ்கிச அமைப்புக்கள் போர் மற்றும் படு கலைக்கு எதிராக வலுவாக நின்றன, ஆனால் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

தமிழ்த் தலைவர்கள் மற்றும் பிற வலதுசாரி நபர்களும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விடும் நீலிக்கண்ணீருக்கும் மக்கள் உணர்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  தற்போதைய நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் தான் என்பதை இந்த அறிவிலிகள் மக்களிடம் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை தமிழர்கள் ஏற்று பட்டினியால் வாட வேண்டுமா? இந்த நெருக்கடியால் தமிழர்கள் பாதிக்கப்படவில்லையா? தற்போதைய பொருளாதாரச் சீரழிவு பற்றிக் குரல் கொடுக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு உபதேசம் செய்வது ஏன்? பிறகு எப்படி அடுத்த தேர்தலில் வாக்களிக்கச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? அத்தியாவசிய சேவைகள் மற்றும் தேவைகள் அரசின் திட்டமிடல்கள் மூலம் மீது ஏற்கனவே நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கும் தாக்குதல் இன்னும் அதிகரிக்க போகிறது என்பது இவர்களுக்கு தெரியாத? ஏற்கனவே போரின் கோர தாண்டவத்தால் மீள முடியாமல் அழிந்து போய் கிடக்கும் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதரம் இன்னும் மோசமடைய போவதை இவர்கள் அறியவில்லையா? ஏற்கனவே இலங்கையிலையே மிக வறிய பகுதிகளாக தமிழர் வாழும் பிரதேசங்களே காணப்படுவதாக வெளிவந்த சர்வதேச அறிக்கைகளை அவர்கள் பார்க்கவில்லையா? இல்லை இவை யாவும் தெரிந்தும் மக்கள் புலம் பெயர் தேசத்துவர் புண்ணியம் தேட செய்யும் தொண்டு உதவிகளை இரந்த வண்ணம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா?

மக்கள் இவ்வாறு இரந்து வாழ, சிங்கள தேசம் என்று இவர்களே அழைக்கும் தேசத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடரும் தமிழ்த் தலைவர்கள் ஏன் இன்னும் அங்கு சம்பளம் வாங்குகிறார்கள்? "தெற்கு அரசியலில்" தமிழர்களுக்கு வியாபாரம் இல்லை என்று வாதிடுபவர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதற்காக இலங்கை நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதை மட்டும் குறிக்குமா? நாடாளுமன்றத்தில்  முன்னெடுக்கப்படும் எந்தவொரு கொள்கையிலும் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கக் கூடாதா? கூடாது என்றால், சிங்கள தேசத்து தேர்தலில் பங்குகொள்ள ஏன் உங்களுக்கு தேர்தல் கட்சி?  தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘தலைவர்களில்’ மிகச் சிலரைத் தவிர, பெருபான்மையானவர்களுக்கு ஒரு பொது தன்மை ஒன்று உண்டு . அது அவர்கள் தொடர்ந்து தெற்கில் தங்களுடைய பாரம்பரிய வலதுசாரி கூட்டாளிகளுடன் நின்று தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளைத் தாக்கும் கொள்கைகளுக்கு வாக்களித்தனர். அதனை தமிழர்களுக்கு தீர்வு வாங்கி வரும் இராஜதந்திர நடவடிக்கை என இன்னமும் வக்காலத்து வாங்குகிறர்கள். சமீப காலமாக சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதுவே பல தசாப்தங்களாக தமிழ் நாடாளுமன்றவாதிகளின் வரலாறாக  இருந்து வருகிறது. அவர்களுக்கான தமிழ்த் தேசியச் சொல்லாடல்கள் அவர்தம் வலதுசாரி அரசியல் நிலைப்பாடுகளை மறைப்பதற்கு ஒரு திரைச் சீலையாக மட்டுமே பயன்படுத்தபடுகின்றன. 

போராட்ட திட்டமிடல்கள் 

வல்லரசுகளை வளைத்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் இராஜதந்திரிகள் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. எந்தவொரு போராட்டத்தையும் ஆதரிப்பதை விட - அல்லது உண்மையான எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதைக் விட மேற்கத்தைய அரசாங்கத்தின் ஒரு அங்கமகா இருப்பதில் இவர்கள் பெருமை கொள்கின்றனர். தமிழகம் ஈழ போராட்டத்தின் ஆதரவு பின்தளமாக தொடக்க காலம் முதல் இயங்கிவருகிறது. ஈழப் போராட்டத்தின் பெரும் தோழமை சக்தியாக விளங்கும் தமிழகம், மோடியும், பாஜக வும் தமிழர்களின் எதிரிகளாகவே கருதுகிறது. ஆனால் புலத்தின் so called தலைமைகள் பாஜக வுக்கு வாழ்த்து செய்தி அனுப்புகிறர்கள். அர்ஜுன சம்பத்தை அழைத்து வந்து கூட்டம் போடுகிரார்கள். டொனால்ட் ட்ரம்ப் சனாதிபதியாக இருந்த போது சிலர் ட்ரம்புக்கான தமிழர்கள் என ஓர் பிரச்சார அமைப்பை தொடங்கி வேலை செய்ய கூட இவர்கள் தயங்க வில்லை. ஈழத் தமிழர்கல மத்தியில் செயற்படும் அரசியல் போதாமை கொண்ட தலைமைத்துவத்தின் வெளிப்பாடு தான் இவை.

தமிழ் மக்களின் அரசியல் விடயத்தில், புலம்பெயர் தேசத்தில் பலர் கற்பனை உலகிலேயே வாழ்கிறர்கள். இந்த கற்பனாவாத அரிச்சுவடி அரசியலை, கொஞ்சம் வசதி படைத்த குடும்ப பின்னணி கொண்ட, சில மத்தியதர வர்க்க இளையோரும் தொடர்கிறார்கள். மக்களின் பிரச்சனைகளுக்கு சரியான திட்டமிடல்களுடன் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய புலம்பெயர் இளையோர்களின் இடத்தை இத்தரப்பு ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் பெருபான்மையாக இருக்கும் உழைக்கும் வர்க்க இளையோர் அரசியல் களங்களில் புறம் தள்ளப்படுகிறார்கள்.  ஆனாலும் தமிழ் சமூகத்தில் சாதராண மக்கள் மத்தியில் உள்ள போராட்ட உணர்வினால் போராட்ட அரசியலுக்கு எதிரான நிலைப்பட்டை இவர்கள் வெளிப்படையாக பேச மாட்டர்கள். ஏற்கனவே 2009ற்கு பின்னர் மக்களின் ஆதரவை பெரிதும் இழந்து நிற்கும் இந்த தரப்புகள் இருக்கும் மிச்ச சொச்சத்தையும் இழக்க வழியில்லை. அதானல் எஜமான்களுக்கு வலிக்காமல் போராட்டங்களின் பக்கம் நிற்பது போல் காட்டி கொள்வார்கள். இவர்களின் செயற்பாடுகளையும் , கருத்துகளையும் ஆழமாக நோக்கினால், 2009 ற்கு பின்னர் போராட்ட அரசியலை தமிழ் சமூகத்தில் இருந்து அகற்ற இவர்கள் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் தெளிவாகும்.

தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் போராட்டங்கள் பெரிதாக இடம்பெறவில்லை. அடையாள போராட்டங்களும் பல்கலைகழக மாணவர்களும் செய்த போராட்டங்ளும் ஆங்காங்கே நிகழ்ந்தன. தமிழ்த் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள இதுவரை கோட்டாபய ஆட்சிக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவோ அல்லது மக்களை திரட்டுவதற்கான முயற்சி எடுக்கவோ இல்லை. இவர்களில்  பெரும்பாலானோர்  வெகுமக்கள் இயக்கத்தை ஒருபோதும் நம்பியதில்லை.  எந்தவொரு கோரிக்கைகள் தொடர்பாகவும் தமிழர்கள் மத்தியில் வெகு மக்கள்  இயக்கத்தைக் கட்டியெழுப்ப இந்த தரப்புகள் எதையும் செய்ததில்லை. தற்போதும் இவர்களின் இந்த நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 

தமிழ் மக்கள் தற்போதைய இந்த போராட்டங்களை கண்டும் காணாமலும் கடந்து போகும் இந்த நிலை சரியானது என வாதிடவும் இவர்கள் தயங்கவில்லை. தமிழ் மக்களின் பொதுவான இந்த அரசியல் பிரக்ஜையை பற்றி அவர்களுக்கு எவ்வித பிரச்சனையையும் இல்லை. தமக்கு வாக்களித்து விட்டு இவ்வாறு தான் மக்கள் இருக்கவேண்டும்  என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு. “தமிழர்கள் சந்தேக கண்ணோடு தான் இந்த போராட்டதை பார்க்கிறர்கள்”  என்று புழகாங்கிதப்பட்டு எழுதுகிறது வலதுசாரிகள் ஆதிக்கம் கொண்ட ஊடகமான தமிழ் கார்டியன். தமிழ் பகுதிகள் அமைதியாக உள்ளது சரி என பெருமிதத்துடன் ஆய்வு காணொலிகளும், கட்டுரைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ராஜபக்ச தரப்புக்கு எதிரான இந்த போராட்டத்தில், தமிழ் மக்கள் இணைய தேவை இல்லை எனக்கூறும் இந்த தரப்பு, இந்த போராட்டதிற்கு ஆதரவாகவோ  அல்லது இந்த எதிர்ப்பு இன்னும் வலுப்பட வேண்டும் என்றோ வாதிடுவதும் இல்லை. 

தமிழர் பிரதேசங்களில் ராஜபக்ச தரப்புக்கு  எதிராக பாரிய கோபம் நிலவுகிறது. இந்தக் கட்டத்தில் இந்த கோபம் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி  நிலைமைகளால் இன்னும் வலுபெறுள்ளது. இந்த கோபம்  இதுவரை மக்களிடம் இருந்து வெளிப்பட தொடங்கவில்லை. விரைவில் வெளிவரும் சாத்தியம் உள்ளது. போராட்டத்தை தடுக்க இந்த தலைமைகள் முயற்சிகள் செய்த  போதிலும், பலர் இந்த தலைவர்கள்  என அழைக்கப்படுபவர்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  தமிழ் பேசும் மக்கள் மீதான தாக்குதலின்றி இந்த இயக்கம் மேலும் வளர்ச்சியடையும் பட்சத்தில், இது வடக்கு கிழக்கு முழுவதும் பரவ வாய்ப்புள்ளது (மலையகப் பகுதிகளில் பாரிய போராட்டங்கள் இடம்பெற்றன). இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்பு அலையானது ஒரு வலுவான இயக்கமாக மாற இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். இதுவரை இந்த போராட்டங்களின் மையமாக தலைநகர் கொழும்பு இருந்தது. வடக்குப் பகுதி மட்டுமல்ல, நாட்டின் பல பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க மக்கள் திரட்சி இல்லை.  தலைநகரில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் கணிசமான அளவில் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த இயக்கம் வளர்ச்சியடையும் போது, வடக்குப் பகுதியிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறலாம். 

அவசியமான நடவடிக்கைகள் 

எவ்வாறாயினும், தமிழ் பிரதேசம் அமைதியாக இருப்பதைக் கண்டு குதூகலிக்காமல், தமிழ் மக்களை எவ்வாறு இந்த வெகு மக்கள் எதிர்ப்பு இயக்க நோக்கி அழைப்பது என்பதே முக்கியமானது. தமிழ்த் தலைமைகள் என்று அறிவித்து கொண்டவர்கள் மக்களை வழிநடத்தத் தவறியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த பலமனா தமிழ் இளைஞர் குழுவான தமிழ் இளையோர் அமைப்பு (TYO), சமீபத்தில் அரசியல் உள்ளடக்கம் எதுவும் அற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற வழமையான கோரிக்கையைத் தவிர வேறு எதுவும் அவர்களின் அறிக்கையில் இல்லை. எல்லோருக்கும் வாய்ப்பட்டு ஆகிப்போன சர்வதேச சமூகம் நீதி வழங்க,  அழைப்பு விடுக்கவும்  அவர்கள் மறக்கவில்லை. வடக்கில் உள்ள இளைஞர்கள் பல விடயங்களில் தலைமையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் சிலர், வெளியில் வந்து போராட்டம் நடத்தினால், இலங்கை அரசுக்கு ஆதரவானவர்களாக - சிங்களர்களுக்கு ஆதரவானவர்களாக முத்திரை குத்தப்பட்டு விடுவோம் என்று நினைக்கும் அளவுக்கு மிரட்டப்படுகிறார்கள். இதற்கிடையில்,  இது தான் சாட்டு என இலங்கை தேசிய விசுவாச புலி எதிர்ப்பு கும்பல் மீண்டும ஸ்ரீலங்கா கொடியை தூக்குகின்றனர். 2009 இல் ‘போரை முடித்து வைத்தற்கு நன்றி’ என கூட்டம் போட்ட இந்த கும்பல், இப்போது ராஜபக்ச தரப்பினை வீட்டிற்கு அனுப்ப ஒரு கூட்டமும் போடவில்லை. 

இந்த நிலைமை இலங்கையில் நிலவும் தேசிய பிரிவினையின் உச்சத்தையும் பிரதிபலிக்கிறது. முற்போக்குவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள், கொழும்பு மேல்தட்டு வர்க்கங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் அமைப்பு என்று தம்மை அடையாள படுத்தி கொள்பவர்கள் என பலரும் ஒத்த குரலில் தற்போது ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை போதிக்கின்றனர். ‘நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் அல்லது சிங்களவர்கள் அல்ல, நாங்கள் இலங்கையர்’ என்ற முழக்கம் அவர்களில் பலருக்கு மிகவும் முற்போக்கானதாகத் தெரிகிறது. ‘அபி ஸ்ரீலங்கன்’ (நாங்கள் இலங்கையர்கள்) என்பது சிங்கள தேசியவாதிகளிடமிருந்து உருவான ஒரு முழக்கம். 2009ற்கு பின்னர் இது ராஜபக்சே தரப்பால் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் உண்மை நிலை வேறு. இலங்கையில் அத்தகைய சமத்துவம் இல்லை. முழு நாடும் ராஜபக்ச தரப்பை வெறுக்கும் போது கூட, "முற்போக்குவாதிகள்"  என்று அழைக்கப்படுபவர்கள் ராஜபக்ச தரப்பு இனப்படுகொலையாளிகள்  என்று கூறுவதைத் தடுப்பது எது? தேசிய உரிமைக் கோரிக்கையை இப்போது பேசாது விட்டாலும் ,  இன்னும் ஏன் பலர் தமிழ் பேசும் மக்கள் மீது கண்முன்னே மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஏற்றுக்கொள்ள  மறுக்கிறார்கள்? தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் ஏன் கவனமாக தவிர்க்கப்படுகின்றன? 

முன்னோக்கு அரசியலுக்கான கோரிக்கைகள் 

போராட்டகாரர்கள் இதுவரை தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு தன்மையை காட்டவில்லை. போராட்ட களங்களில் இருக்கும் முஸ்லிம்கள்  ரமலான் நோன்பினை கடைபிடிக்க உதவுவது.  போராட்டங்களில் இருக்கும் மக்களுக்கு உணவுகள் மற்றும் பானங்களை வழங்கி உதவுவது என பல விடயங்களை குறிப்பிட்டு சொல்லலாம். ஒவ்வொரு வெகு மக்கள் இயக்கமும் மேன்மையான மனித தன்மையை இந்த சமூகத்திற்கு கொடுக்கின்றது.  சூடான் , சிலி,  மியான்மர் ஈறாக பல இடங்களில் சுய-ஒழுங்கமைத்தல், ஒருவரையொருவர் பாதுகாத்தல், சமூகத் தேவைகளை ஒழுங்கமைத்தல் போன்ற பல உதாரணங்களை நாம் காண்கிறோம்.  இவை  முன்னோக்கு அரசியலை நோக்கிய முக்கிய செயற்பாடுக்கள்தான், ஆனால் இவை மட்டும் போதாது. 

அந்தத் தருணம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் எவ்வாறான அமைப்பியல் ரீதியான நடவடிக்கை எடுக்கிறது என்பது, இந்த  இயக்கத்தின் நீட்சிக்கும் வலிமைக்கும் முக்கியமானது. அனைவரையும் உள்ளடக்கிய கோரிக்கைகள் மற்றும் திட்டங்களுடன் முன்வருவதன் மூலம் மட்டுமே ஒற்றுமையை உருவாக்க முடியும். முரண்பாடுகளுடன் கூடிய உடன்படே சாத்தியம்.  இளைஞர்கள் மத்தியில் இது போன்ற விவாதம் உடனடியாக தொடங்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, சில பெரிய "மார்க்சிச" அமைப்புக்கள் ஒரு தடையாக மத்தியில் நிற்கின்றன. எடுத்துக்காட்டாக ஜே.வி.பி. அதன் பழைய வழியில் இருந்து மாற மறுக்கிறது. ஒற்றையாட்சி இலங்கை அரசைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களின் பெரும்பாலான பிரச்சாரங்கள் பெளத்த தேசியவாத உணர்வுகளுக்கு இணங்குவதை மையமாகக் கொண்டுள்ளன. இலங்கை இடதுசாரிகளில் பெரும்பான்மையினர் தமிழ் போராளிகளை (குறிப்பாக விடுதலைப் புலிகளை) "பயங்கரவாதிகள்" அல்லது "பாசிசவாதிகள்" என்று கருதுவதுடன், கடந்த காலப் போராட்டத்தின் மீதான எந்தவொரு அனுதாபத்தையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இதன் விளைவாக, தமிழர்கள் மத்தியில் JVP யால் மக்களிடம் செல்ல முடியவில்லை .  பொதுவாக தமிழ் மக்களால் மிக அதிகமாக வெறுக்கப்படும்  சிறு சமூக விரோத குழுவின் ஆதரவினையே இவர்கள் பெற முடிந்துள்ளது. 

முன்னாள் போராட்ட இயக்கங்களில் இருந்தோர,  'புத்திஜீவிகள்' என்று அடையாளபடுத்தும் போலிகள்,  கலைஞர்கள் என்று விடுதலைப் புலிகள் எதிர்ப்பை முன்னிறுத்தும் இந்த சிறிய தரப்புகளே தமிழ் சமூகத்தில் இவர்களின் ஆதரவு தளம்.  இந்த குறுங்குகுழுவாத புலியெதிர்பு தரப்புகள், மக்களால் வெறுக்கப்படுவதற்கு காரணம் அவர்கள் கொள்ளும் அரசியல் கூட்டும் தம்மை முதன்மை படுத்தி இயங்குதலும் ஆகும். ஆனால் பிற்போக்கு தமிழ் தேசியவாதிகள் இவர்களை “தூரோகிகள்” என்று சொல்வதிலேயே தாம் வெறுக்கப்படுவதாக இவர்கள் கதை அழப்பார்கள். தம்மை முற்போக்குவாதிகளாக கட்டிக்கொள்ள இந்த வாதம் அவர்களுக்கு உதவுவதாக அவர்கள் நம்புகிறார்கள். 'சிங்கள இடது' இந்த சிறிய மற்றும் மோசமான கூறுகளைத்தான் தனது ஆதரவு தளமாக நம்புகிறது. மேலும் தமிழ் குட்டி முதலாளித்துவ கூட்டமும் இவர்களுக்கு பெரும் தலைஇடியாக இருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி, தமிழ் சமூகத்திற்க்குள் இருக்கும் வினைத்திறன் கொண்டவர்களை நோக்கி நகர சிங்கள இடதுசாரிகளுக்கு முடியவில்லை. 

விடுதலைப் புலிகளின் கொடி இரத்தம் தோய்ந்து என்று   தீண்டாமையைக் கடைப்பிடித்து வருவோர் இலங்கைக் கொடியைப் பிடிப்பதில் (இந்த சிங்கள இடதுசாரிகள்) மிகுந்த மகிழ்ச்சி அடைந்துவருகின்றனர்.  போருக்குப் பிறகு பிறந்த பல இளைய தலைமுறையினரால் போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது புலிக்கொடி. போரின் முடிவில் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் எப்படி கொன்று குவித்தது என்பது இதற்கு மேலும் வலு சேர்க்கிறது. இந்தக் கொடி கடந்த காலத்தில் சிங்கள மக்களுக்கு எதிரான தாக்குதல், நாட்டைப் பிளவுபடுத்துதல் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. ஆனால் இலங்கையின் தேசியக் கொடியின் வரலாறு மிக கேவலமான ஓன்று. 

உண்மையில், சிங்கள பௌத்த தேசியவாதிகளின் தலைமையில் உருவாக்கிய வெறுப்பு தான்,  தமிழ் போராளிகளுக்கு எதிராக இத்தகைய வெறுப்பை உருவாக்கியது. இந்தக் காயங்கள் ஆற்றுப்படுத்த பட வேண்டும். தமிழ் இளைஞர்கள் கடந்த கால இராணுவவாதம் மற்றும் தவறுகளுக்கு எதிராக இருக்கும் முரண்பாடுகளுக்கான கலந்துரையாடல்களுக்கு தயராக இருக்கவேண்டும். கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் முன்னேற முடியாது. அதேபோன்று, சிங்கள இளைஞர்கள் தமிழர்களின் அவலநிலையையும் அவர்களின் கோரிக்கைகளையும் புரிந்துகொள்வதற்கு முன்வர வேண்டும். மற்றும் கடந்த கால போராட்டங்களின் சில மரபுகளை இன்னும் பேணுவது ஏன் முக்கியம் என்பதை தமிழ்  மக்களின் நிலையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் சமூகத்தில் வர்க்க அடிப்படை பற்றிய நிலைப்பாடு இன்றி, சமரச அரசியல் செய்யும் தரப்புகளை நோக்கியே JVP இன் செயற்பாடுகள் இருக்கிறது.  இவ்வாறு சமரச அரசியல் செய்யும் தரப்புகள் மக்களின் அபிலாஷைகளுக்கும், போராட்டங்களுக்கும் எதிராக நின்றதே வரலாறு. அந்த வரலாறு இன்னமும் தொடரவே செய்கிறது. தங்களை மார்க்சியவாதிகள் அல்லது இடதுசாரிகள் என பலர் சொல்லிக்கொள்வர். ஆனால் அதற்கும் அவர்கள் செயற்பாடுகளுக்கும்  இம்மியளவும் தொடர்பு இல்லை. சொல்லபோனால் மார்க்சிஸத்தை இவர்களிடிடம் இருந்து காத்துக் கொள்ளவேண்டி இருக்கிறது. 

எந்த ஒரு தேசிய கொடியை ஏந்தும் போதும் அது உண்டாக்கும் முரண்பாட்டை புரிந்து கொள்ளவேண்டும்.  இடதுசாரிகள் , முற்போக்குவாதிகள் என தம்மை அடையாளம் இட்டு கொள்பபவர்கள் எல்லோரும் இந்த முரண்பாட்டை விளங்கிக்கொள்ள வேண்டும்.  மார்க்சிச கட்சி என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சி, தமது நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களில் தேசிய கோடியை ஏந்தி செல்வது இலங்கையில் மட்டுமே எனலாம். பௌத்த பிக்குகளுக்கு முன்னுரிமை தந்து, ஸ்ரீலங்கா தேசிய கொடியையும் ஏந்திய வண்ணம் இருந்தால் எப்படி தமிழ் இளையயோர்களை வெல்ல முடியும்? JVPா இன்னும்  சிங்கள தேசியத்தில் இருந்து தன்னை முற்று முழுதாக விடுவித்து கொள்ளவில்லை. JVP உருவாக்கி வைத்துள்ள இந்த நடைமுறை முழுவதுமாக உடைக்கப்பட வேண்டும்.

தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின்  செயற்பாடுகளும் நிலைப்பாடும் 

கடந்த காலத் தவறுகள், கொடிப்பிரச்சினைகள்,  சிங்கள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தமிழ் சொலிடாரிட்டி (TS)  பல திறந்த விவாதங்களை செய்துவந்திருக்கிறது. நாம் இன அடிப்படையில் யாருடனும் வேலை செய்யவதிலை. மாறாக அவர்களின் அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் இணைவு சாத்தியமாகும் என தொடர்ந்து பேசி வருகிறோம்.  TS முக்கியமாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தான் அதிகமாக இயங்கினானலும் , பல சிங்கள செயற்பாட்டாளர்களுடன் மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. TS ஒரு சோசலிச அமைப்பு அல்ல, ஆனால் அது இங்கிலாந்து, வேல்ஸில் உள்ள சோசலிஸ்ட் கட்சி, இலங்கையில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பல சோசலிச அமைப்புகளுடன் நெருக்கமாக செயல்படுகிறது. தமிழ் பேசும் மக்கள் மத்தியில்   ஒருங்கிணைந்த போராட்டத்தின் அவசியத்தை பிரச்சாரபடுத்தும் அதே வேளை  அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் போது  கொண்டிருக்க வேண்டிய நெகிழ்வு தன்மையின் முக்கியத்துவத்தையும் TS தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது.

ஜே.வி.பி போன்ற அமைப்புகளால் சிங்கள தொழிலாள வர்க்கத்தினரிடையே தமிழர் உரிமைகளுக்காக ஒருபோதும் வாதிட முடியவில்லை. ஒரு சிறிய மாவோயிஸ்ட் அமைப்பு உட்பட, இந்த மார்க்சிய அமைப்புகள் என்று அழைக்கப்படுபவை எதுவும், தேசியப் பிரச்சினையில் லெனினிசக் கருத்துக்களையும் கொள்கைகளையும் ஏற்கத் தயாராக இல்லை. தமிழர் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டால் சிங்கள தொழிலாள வர்க்கத்தை இழக்க நேரிடும் என்ற ஒரு போலியான அச்சத்தாலும்  சாக்கு போக்குகள் சொல்கிறார்கள்.  இந்த அமைப்புகள் நோக்கி திரும்பும் இளைஞசர்கள் இன்னும் உரையாடல்களுக்கு தயாராகவே உள்ளனர்.  இளைஞர்கள் இவர்களின் வழிமுறைகளை  நிராகரித்து, தெளிவான கண்ணோட்டத்துடன் தொலை நோக்குடைய  மார்க்சிய அமைப்பை உருவாக்க முன்வர வேண்டும்.  

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவு அளிக்கிறது.  இனவாத கூறுகள் இருந்தாலும்,  அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் மற்றும் ராஜபக்ச அரசிற்கு எதிரான போராட்டங்களிற்கும் ஆதரவளிப்போம் என நாம் வாதிட்டோம். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரகூடிய தூய்மையான போராட்டங்களை கட்டுவது கடினம் என்பதை நாம் புரிந்துகொண்டோம். போராட்டத்தில் இலங்கை கொடியை தாங்கி வருபவர்கள் இந்த போராட்டத்தில் மற்றவர்கள் இணைந்து கொள்ள தடையாக பார்க்க படக்கூடாது. உதாரணமாக  தேசிய கோடியை ஏந்தி வந்தாலும்  விவசாயிகள், தொழிலாளர்கள்,  மற்றும் ஏழைகளுக்கு மீதான  எந்தத் தாக்குதலையும் TS ஆதரித்ததில்லை. மாறாக ஒன்றிணைந்த போராட்டத்தை கட்டியெழுப்புவதற்கு முயற்சி எடுக்கிறது. 

கோட்டவை வீட்டுக்கு அனுப்பிய பின்னர் என்ன செய்வது 

கோட்டாவின் ஆட்சியையும் அவரது குடும்ப ஆதிக்கத்தையும்  முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற முக்கிய கோரிக்கையானது,அனைத்து மக்களுக்கும்  சிறந்த வாழ்வாதாரத்தை கொண்டு வருவதுடன் தொடர்புபட்டுள்ளது. இது IMF, உலக வங்கி, இந்திய மற்றும் சீன அரசுகள் அல்லது எந்த வலதுசாரி எதிர்ப்பு சக்திகளுக்கும் ஆதரவாக எழுப்பப்பட்ட கோரிக்கை அல்ல. மக்கள் அதிகாரம் கொண்ட,  தொலைநோக்கு திட்டங்களுடன் கூடிய புதிய வெகுஜன சக்திகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்று TS உறுதியாக நம்புகிறது, அதற்காக நாங்கள் தொடர்ந்து வாதிடுகிறோம். 

இதனை இடதுசாரிகளின் ஒன்றிணைவு மூலம் மட்டும் கட்டமைக்க முடியாது. இது பரந்த எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் ஏற்படும் பிரதிநித்துவத்தின்  அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.  இந்த கட்டமைப்பு அனைத்து மக்களினதும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்ப்பதாகவும்  தீர்வு திட்டங்களை முன்னெடுப்பதாகவும் இருக்க வேண்டும். சாதி, பாலினம், மதம் மற்றும் இன அடிப்படையிலான அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் எதிர்க்கப்பட வேண்டும் என்ற உடன்படிக்கை எட்டப் படவேண்டும். தமிழ் பேசும் மக்கள் மீது, சிங்கள மக்களின் பெயரால் , இலங்கை பேரினவாத அரசு மேற்கொண்ட படுகொலைகளுக்கு இலங்கை அரசே சகல விதங்களிலும் பொறுப்பேற்க வேண்டும்.

வலதுசாரிகள் தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள, உழைக்கும் சிங்கள மக்களின் வாழ்வாதாரம் சிதைவடைந்து போவதற்கு, தமிழ் பேசும் மக்களே காரணம் என்ற விஷம பிரச்சாரத்தை நம்பி சிங்கள மக்கள் பலர் ஏமாந்து போயுள்ளனர். வெகுஜன இயக்கங்கள் இந்த அரசாங்கங்களின் கடந்தகால குற்றங்களில் இருந்து விலகி செயற்ப்பட வேண்டும்.   ராஜபக்சக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ராஜபக்சக்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு ,  அவர்கள் செய்த மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு தீவிரமான இயக்கமும் அனைத்து சனநாயக உரிமைகளையும் ஆதரிக்க வேண்டும். உழைக்கும் மக்களால் வழிநடத்தப்படும் ஒரு சோசலிச அரசாங்கத்தால் மட்டுமே இதை வழங்க முடியும். ஆனால், ஒரு தொடக்கமாக, உழைக்கும் மக்கள் மற்றும் வெகுஜன இயக்கத்தின் பிரதிநிதித்துவ அரசாங்கம், நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் புரட்சிகர அரசியலமைப்பு பேரவையை கூட்டப்பட்டு,  அனைவருக்கும் அனைத்து உரிமைகளையும் சிறந்த நிலைமைகளையும் வழங்குவதற்கான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

முஸ்லிம் மக்களின் சிறப்பு (அல்லது தேசிய) உரிமைகள் உட்பட தேசிய உரிமைகளுக்கான கோரிக்கைகள் கட்டுப்படுத்தப் படக்கூடாது. தமிழர்கள் தாமாக முன்வந்து இலங்கையின் அங்கமாக இருக்குமாறு கோரலாம். ஆனால் அவர்கள் மீது அதனை திணிக்க முடியாது. கூட்டாட்சி அல்லது சுயாட்சி உரிமைகள் மட்டுமல்ல, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தின் இயக்கத்தின் அடிப்படையில், அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்ட நிலையில், தமிழர்கள் தானாக முன்வந்து அனைவருக்கும் வளங்களைப் பயன்படுத்துவதை  திட்டமிட கூட்டமைப்பில் அங்கம் வகிக்க முடியும். அத்தகைய ஒற்றுமையைக் கொண்டு வருவது முற்றிலும் சாத்தியம் மட்டுமல்ல, முழு தெற்காசியப் பிராந்தியத்திலும் இந்த கட்டமைப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதான்  தெற்காசிய சோசலிச நாடுகளின் கூட்டமைப்பு திட்டமிடலை நோக்கி நகர வழிவகுக்கும். 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates