Headlines News :
முகப்பு » , , , » முத்து கடத்தியதால் பதவியிழந்த யாழ்ப்பாண டச்சு தளபதி யொஹான் நியூஹொப் - என்.சரவணன்

முத்து கடத்தியதால் பதவியிழந்த யாழ்ப்பாண டச்சு தளபதி யொஹான் நியூஹொப் - என்.சரவணன்

யாழ்ப்பாணத்தில் இருந்து முத்து கடத்தலுக்காக தண்டனை பெற்று பதவியிழந்த யாழ்ப்பாணத்துக்கான டச்சு தளபதி யொஹான் நியூஹொப் (Johan Nieuhof - 1618 -1672 ) ). இவர் மிகவும் பிரசித்தம் பெற்ற ஒரு நாடுகாண் பயணி. ஆரம்பத்தில் டச்சு மேற்கிந்தியக் கம்பனியின் (WIC) அதிகாரியாக பணிபுரிவதற்காக பிரேசில் சென்றிருந்த அவர் பின்னர் அங்கிருந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 1649 ஆம் ஆண்டு அங்கிருந்து புறப்பட்டு தனது நாடுகாண் பயணத்தை நிறுத்திக்கொண்டு டச்சு கிழக்கிந்திய கம்பனியில் (VOC) சேர்ந்து அதன் தலைமையகமாக அன்று இருந்த பத்தாவியாவில் பணிபுரிந்தார்.

சீனாவில் அக்கம்பனியின் பிரதிநிதியாக பணிபுரிந்துகொண்டிருந்த போது தான் அவருக்கு இலங்கையில் பணிபுரிவதற்காக பரிந்துரை செய்யப்பட்டது. 1663 ஆம் ஆண்டு அவர் தொடக்கம் அவர் யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்தார். போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் இலங்கையின் வட பகுதியை முத்துக்குளிப்பு, யானை ஏற்றுமதி என்பவற்றுக்கு தான் பயன்படுத்தி வந்தார்கள். அவை தான் வடபகுதியின் பிரதான ஆதாயமாக இருந்தன.

யொஹான் நியூஹொப் யாழ்ப்பாணத்தில் 1669 வரை பணிபுரிந்தார். இந்த காலத்தில் அவர் தனிப்பட்ட ரீதியில் முத்துக் கடத்தலை மேற்கொண்டதை டச்சு அரசாங்கம் கண்டுபிடித்தது. அக்குற்றத்துக்காக அவரை ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து, அவரை மீள அழைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார்கள். அப்போது டச்சு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிப்பதற்காகவே ஒரு தனி அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். அவ்வாறு யோஹானை மீள அழைத்தவர் Hendrik van Rheede என்கிற ஊழல் விசாரணை அதிகாரி தான்.


இலங்கையின் முதலாவது ஆங்கிலேய ஆளுநரான பிரெடெரிக் நோர்த் இலங்கையை ஆண்டபோது அவர் தனக்கென மூன்று மாடிகளைக் கொண்ட கிரேக்க கட்டிட அமைப்பிலான ஒரு பெரிய மாளிகையைக் கட்டினார். (1827 இல் அவர் இறந்தபோது அவரை கிரேக்க முறையில் தான் அடக்கம் செய்தார்கள்.) அந்த மாளிகையை அவர் கொழும்பிலோ, யாழ்ப்பாணத்திலோ கட்டவில்லை. அவர் மன்னார் தீவில் தான் கட்டினார். கடற்கரையில் மேடான ஒரு பகுதியை தெரிவு செய்து அதைக் கட்டினார். ஏன் தெரியுமா? முத்துக்குளிப்பு மேற்கொள்வதை கண்காணிக்கக் கூடியவாறு அந்த மாளிகையைக் கட்டினார். அப்போது இலங்கையிலேயே மிகவும் அழகான மாளிகை அதுதான் என்று பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.



அந்த மாளிகை தான் இன்றும் வெறும் கட்டிட எச்சங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிற மன்னார் டொரிக் பங்களா. அக்கட்டிடம் சிலாபத்துறை அரிப்பு வீதியில் களிமண் ஓடைக்கு மேற்காகவும், வீதிக்கு தெற்கிலும் கடற்கரைப்பக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டிடம்  அமைக்கும் போது கடல் தூரத்தில் இருந்ததாக அறிய முடிகின்றது. இன்று இக்கட்டிடம் கடல் அலையால் மோதப்பட்டு கட்டிடத்தின் ஒரு பகுதி கடலில் விழுந்து அழிந்துகொண்டிருக்கிறது. இன்றும் மன்னார் வாழ் மக்கள் அதனை “அல்லிராணிக்கோட்டை என்று அழைக்கின்றனர். முத்துக்குளிப்பு இலங்கையில் அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது என்பதை இங்கே புரிந்துகொள்வதற்காக இங்கே கூறுகிறேன்.


யொஹான் நியூஹொப் தனது கடற்பயணம் குறித்து பின்னர் எழுதிய Het gezantschap der Neêrlandtsche Oost-Indische Compagnie, aan den grooten Tartarischen Cham, den tegenwoordigen keizer van China என்கிற நூல் பயண இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது. அதிகமாக தனது சீன அனுபவங்களைத் தான் பதிவு செய்திருந்தாலும் சுமார் 570 பக்கங்களைக் கொண்ட அந்த நூலில் அதற்கு வெளியிலும் பல விபரங்களைத் தந்திருக்கிறார். அந்த நூல் 1665 இல் ஆம்ஸ்டர்டாமில் வெளியானது. அதாவது அவர் யாழ்ப்பாணத்தின் தளபதியாக இருந்த காலத்தில் தான் அது வெளியானது. வெளியாகி சில ஆண்டுகளுக்குள் அதுவும் அவர் இலங்கையில் இருந்த காலத்துக்குள் பிரெஞ்சு, லத்தீன், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுவிட்டது. ஆங்கிலத்தில் வெளிவந்தது 1669 இல் தான். அதன் பின்னர் பல்வேறு மொழிகளில் அந்த நூல் வெளியிடப்பட்டுவிட்டது.

ஏறத்தாள இதே காலப்பகுதியில் இலங்கைப் பற்றியும், யாழ்ப்பாணத்தைப் பற்றியும் பல பதிவுகளைச் செய்த பால்தேயுவின் (Philippus Baldaeus) நூலில் இடம்பெற்ற படங்களுக்கு நிகராக இவரின் நூலில் இடம்பெற்றுள்ள நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கோட்டோவியப் படங்கள் பார்க்கப்படுகிறது. இலங்கை பற்றிய விபரங்களும் அந்த நூலில் அடங்குகின்றன. இலங்கை என்றாலே அப்போது வாசனைத் திரவியங்களுக்கு பேர் போனது தானே. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையில் இருந்து அதைத் தானே அள்ளிக்கொண்டு சென்றார்கள். எனவே அவர் இலங்கைப் பற்றி எழுதியதில் கறுவா பற்றி அதிகமாக விதந்துரைத்திருக்கிறார். இலங்கையின் கறுவா உற்பத்தி பற்றிய ஒரு கோட்டோவியமும் அந்நூலில் இடம்பெற்றிருக்கிறது.


தூத்துக்குடியில் முத்துக்குளிப்பு மேற்கொண்டு முத்துக்குளிப்பவர்கள் படகுகளில் வந்து கரையிறங்கி முத்து சிப்பிகளை கடலில் கொண்டு வந்து சேர்கின்ற காட்சியைக் கொண்ட ஒரு ஓவியமும் இந்த நூலில் உள்ளது.

எகிப்திய அரசியும் பேரழகியுமான கிளியோப்பட்ரா காதினிலே அணிந்திருந்த காதணியில் முசலிக் கடலில் (மன்னார்) இருந்து கொண்டுவரப்பட்ட முத்து பதிக்கப்பட்டிருந்ததாக கூறுகிறது, 

சிலாபம் தொடங்கி பாக்குநீரிணையின் மன்னார் வளைகுடாவும், அன்றைய மலபார் கரையோரங்கள் என்று கூறப்படுகின்ற தூத்துக்குடி, கொச்சின் வரையான கடற் பரப்பு உலகின் தரமான முத்துக்களுக்கு பேர்போயிருந்தது. சங்கு குளிப்புக்கும் இப்பகுதிகள் சிறந்து விளங்கின. கரையோர வாழ் பரதவர் சமூகம் இதில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அதன் பின்னர் முஸ்லிம்களும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாக்கு நீரிணைக் கடற்பகுதிகளில் நிலவும் தனித்தன்மை வாய்ந்த பருவநிலையும் சூழலியலும் பல்லுயிர் வளத்துக்குச் சாதகமாக அமைந்திருக்கின்றன. உலகிலேயே கடலுயிர்ச் செறிவு மிகுந்த இடங்களின் பட்டியலில் மன்னார் கடல்பகுதி ஐந்தாவது இடத்திலுள்ளது. பவளத்திட்டுகளும் கடற்கோரைகளும் பாலூட்டி இனங்களும் இங்கே மிகுந்துள்ளன. அதுபோலவே, சங்குகளும் முத்துச்சிப்பி இனங்களும் அமைந்துபட்டன. முடியரசுகளும் காலனியரும் மிஷனரிகளும் முத்துக் குளித்துறையைக் கைப்பற்றப் போட்டியிட்டது முத்து, சங்கு, சலாபத்தை முன்னிட்டுத்தான்.

பிரபல வெனிசிய கடற்பயணி மார்க்கோபோலோ; 14ம் நூற்றாண்டில் மலையாளக் கரைகளில் மன்னார் முத்துக்கள் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் மாறி மாறி கடலில் முத்துக்களை வழித்து அள்ளிச் சென்றதில் முத்துகுளிப்புத் துறைகளுக்குப் பேர் போன பாக்குநீரிணைக் கடலில் முற்றாக முத்துச்சிப்பிகள் அழிந்தே போய்விட்டன. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக அன்னிய காலனித்துவ நாடுகள் தொடர்ச்சியாக சுரண்டிச் சென்ற முத்து தொழிலில் அவ்வதிகரிகளின் ஊழல் நமக்கு ஆச்சரிமளிக்காது. ஒல்லாந்தர்கள் தமது நிர்வாகத்தில் இத்தகைய துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவதற்காகான இறுக்கமான பொறிமுறைகளைக் கொண்டிருந்தும் யொஹான் நியூஹொப் போன்ற தளபதி தரத்தில் இருந்த அதிகாரிகளே கையும்களவுமாக பிடிபட்டு பல மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து பதவியிழந்துள்ளனர்.

முத்து விடயத்தில் என்பது அப்படி சர்வசாதாரணமாக மன்னித்துவிட்டு போகும் விடயம் அல்ல என்கிற அளவுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்த வருமானத்துறையாக அவர்களுக்கு இருந்தது.

நன்றி - ஜீவநதி - பெப்ரவரி 2022


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates