Headlines News :
முகப்பு » , , , , , » கொழும்பு திரையரங்குகளின் தோற்றம் - என்.சரவணன் - ( கொழும்பின் கதை - 17)

கொழும்பு திரையரங்குகளின் தோற்றம் - என்.சரவணன் - ( கொழும்பின் கதை - 17)

கொழும்பில் உள்ள சினிமா தியேட்டர்களின் தோற்றம் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறைக் கொண்டது. சுதேசிய கூத்து, நாட்டிய, நாடக வடிவங்களைக் கண்டு வந்த மக்கள் அசையும் படங்கள் ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்தபோது வியப்பாகப் பார்த்தார்கள். அதுவே பின்னர் சுதேசிய நாடக, நாட்டிய பண்பாட்டு மரபுக்கும் காலப்போக்கில் நெருக்கடிக்கும் உள்ளாக்கியது.

நாட்டிய நாடக அரங்குகளும் தகரக் கொட்டகைகளில் நடத்தப்பட்டது போலவே கொழும்பு நகரில் உள்ள பழைய திரையரங்குகளும் தகரக் கொட்டகைகளில் தான் ஆரம்பிக்கப்பட்டன. 1877ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி இலக்கம் 51 கெய்சர் வீதி, புறக்கோட்டையில், களுதந்திரிகே தொன் பஸ்தியன் ஜயவீர பண்டாரவினால் எழுதப்பட்ட முதலாவது சிங்கள நவீன நாடகம் தொடக்கம், டவர் திரையரங்கம் திறக்கப்படும் வரை கொழும்பில் உள்ள கலை / நாட்டிய / நாடக / அரங்குகள் தற்காலிக அல்லது நிரந்தரமான தகரக் கொட்டகைகளாகவே இருந்தன. புறக்கோட்டை இரயில் நிலையத்தில் இருந்து பார்த்தால் நேரெதிரில் தெரிகிற “மல்வத்தை வீதி”யில் பிளவர் மண்டபம் (Flower Hall), மலர் மண்டபம் இருந்தது.  சரஸ்வதி மண்டபம், பெவிலியன் மண்டபம், பொது மண்டபம் (Public Hall) கூடம் போன்ற பிரபல திரையரங்குகள் அனைத்தும் ஆரம்ப காலத்தில் தகரக் கொட்டகைகளாகவே இருந்தன.

இலங்கையில் அசையும் படத்தைக் காண்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை முதன் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டவர் அந்திரி (Adolphus William Andree).  அந்திரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தாயார் யாழ்ப்பாணத்தையும், தந்தை ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். ஒரு புகைப்படக் கலைஞரான அந்திரி “Hopetoun Studio” என்கிற பெயரில் கொழும்பு ஸ்லேவ் ஐலண்டில் (Slave Island) ஒரு புகைப்பட ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வந்தார்.  1903 இல் கொறிக் பயஸ்கோப் (Coric Bioscope) என்கிற ஒரு திரைப்படக் கம்பனியையும் ஆரம்பித்தார். சிங்கள சினிமா வரலாற்றுப் பதிவுகளில் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டவர் இவர். அப்போது வெளிவந்த மௌனப் படங்களைக் காண்பிப்பதற்கான ஒரு புரோஜெக்டரையும் வாங்கி ஒரு மண்டபத்ததில் திரையிட்டு வந்தார். சிங்கள, தமிழ் நாடகங்களைக் கண்டுகளித்து வந்த மேற்தட்டு மக்கள் பலர் இங்கே குவிந்து வந்தார்கள். 1910 இல் அவர் இறக்கும் வரை கோட்டையில் இதனை நடத்தி வந்தார்.

Adolphus William Andree).  அந்திரியின் “Hopetoun Studio”

இவ்வாறு கடந்த நூற்றாண்டின் முற்பாதியிலேயே இலங்கைத் திரைப்படத்துறைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்ட போதிலும், நாட்டில் திரைப்படத் தயாரிப்பு ஒரு வணிகமாக தோன்றவில்லை. இருப்பினும், இந்த புதிய வகை திரைத்துறை நாட்டின் பாரம்பரிய நவீன கலைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தன. ஆரம்பத்தில் இலங்கையில் குறும்பட, மௌனப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன.

கொழும்பின் நகரின் மிகப் பழமையான ஹோட்டல்களில் ஒன்றான கோல் ஃபேஸ் ஹோட்டலுக்கு அருகில் அசெம்பிளி ரூம்ஸ் நிறுவனத்தின் ஒரு தற்காலிக நாடக அரங்காக 1869 ஆம் ஆண்டிலிருந்து இயங்கத் தொடங்கியிருந்தது.

"பிளவர் ஹோல்" கொழும்பு புறக்கோட்டையில் உள்ள சாமஸ் தானியக் களஞ்சிய வளாகத்தில் அமைந்திருந்தது. மல்வத்த வீதிக்கும் இன்று புதிய இறைவரித் திணைக்களம் அமைந்துள்ள கட்டடத்துக்கும் நடுவில் உள்ள பகுதி தான் சாமஸ் தானியக் களஞ்சியம் இருந்த பகுதி. ஆங்கிலேய ஆளுநர் சாமஸ் (Robert Chalmers) ஆட்சிக் காலத்தில் காலத்தில் பிளேக் தொற்று உலகம் முழுவதும் பரவி பலர் மடிந்துகொண்டிருந்த போது நாட்டின் உணவுத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த 1914 இல் உருவாக்கிய களஞ்சியம் தான் இது. அப்போது ஐந்து லட்சம் மூட்டை நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்கக் கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் 1876 இல் இருந்து இந்த இடத்தில் பிளவர் ஹோல் இயங்கி வந்தது. அதுபோல இன்று சங்கிரிலா ஹோட்டல் அமைந்திருக்கிற இடத்தில் (அதற்கு முன்னர் இராணுவத் தலைமையகம்) 1880 இல் இருந்து த கரிசன் தியட்டர் (The Garrison Theater) இயங்கி வந்தது. அது தொடங்கி ஓராண்டுக்குப் பின் கொள்ளுபிட்டியில் லீ ஹெஜஸ் நிறுவனத்துக்கும் திரையரங்கை நடத்தும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கொழும்பு மல்வத்த வீதியில் 1883 இல் “பெவிலியன் கொட்டகை” என்கிற ஒரு அரங்கமும் தற்காலிகமாக இயங்கிவந்தது. மருதானை  இரயில்வே களஞ்சியத்திலும் 1884 இல் இருந்து ஒரு அரங்கம் இயங்கத் தொடங்கியது. அதே ஆண்டு ஹுனுபிட்டிய “பப்ளிக் ஹோல்” என்கிற பெயரில் ஒன்றும் ஆரம்பமானது, புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் 1889இல் “சரஸ்வதி மண்டபம்” ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மெசேஞ்சர் வீதியில் பற்காலத்தில் தொடக்கப்பட்ட “கொலீசியம் ஹோல்”, ஆமர் வீதியில் “கெப்பிட்டல் ஹோல்” கொச்சிக்கடையில் “ ஜிந்துப்பிட்டி ஹோல்”, சேதவத்தையில் “மினர்வா ஹோல்”, தெஹிவளையில் “புஷ்பா ஹோல்” என்பனவற்றை ஆரம்பகால பழமையான மண்டபங்கள் வரிசையில் குறிப்பிட முடியும்.

கொழும்பில் சினிமா கடவுட்கள் நிறுத்தப்பட்டிருந்த பிரபல இடம் மருதானை சந்தி

மருதானை டார்லி வீதியில் இயங்கிவந்த “நெஷனல் ஹோல்” தான் பிற்காலத்தில் “காமினி ஹோல்” என்கிற சினிமா தியேட்டராக ஆனது. இலங்கையில் பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்த கே.குணரத்தினத்தின் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த தியேட்டர் 1983 இனக்கலவரத்தின் போது முழுமையாக அழிக்கப்பட்டது.இத்தனைக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கூட தயாரிக்காத அவர் வாழ்நாள் முழுவதும் 20  க்கும் மேற்பட்ட சிங்களத்திரைப்படங்களை மட்டுமே தயாரித்தவர்.

கே.குணரத்தினம்

1909 அளவில் லண்டன் பாரிஸ் சினமாமொகிராப் நிறுவனம் இராணி வீதியில் அமைந்திருந்த நூலகக் கட்டிடத்தில் சினிமா காட்சிகளை காண்பித்திருக்கிறார்கள். அதுபோல யுனிவேர்சல் பயிஸ்கோல் நிறுவனமும் லண்டன் பயஸ்கோப் நிறுவனமும் புறக்கோட்டை மல்வத்தை வீதியில் தமது திரைப்படங்களை திரையிட்டிருக்கிறார்கள்.

வொர்விக் மேஜர் (Warwick Majors) என்கிற ஆங்கிலேயரும் உள்ளூர் திரைப்படத் துறையில் பங்களிப்பு செய்து வந்திருக்கிறார். இவர் தற்போது ரீகல் தியேட்டர் இருக்குமிடத்தில் தகரக் கொட்டகையில் படங்களைக் திரையிட்டு வந்தார். தகரக் கொட்டகைகளில் தொடங்கப்பட்ட “பப்ளிக் ஹோல்”, “எம்பயர் தியேட்டர்” என்பவற்றின் ஆரம்ப உரிமையாளராகவும் வொர்விக் இருந்தார்.

இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் பிரபல திரைப்பட நிறுவனமான மதன் தியேட்டர்ஸ் லிமிடெட், இந்தப் புதிய துறையில் மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை உணர்ந்து கொழும்புக்கு வந்து  திரைப்பட வணிகத்தில்  இறங்கியது. திரைப்படத் தயாரிப்புகளை மேற்கொள்ளும் அதேவேளை கொழும்பு நகரம் முழுவதும் திரையரங்குகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தது மதன் நிறுவனம். வொர்விக்கிடம் இருந்து எம்பயர் பேலஸ், பப்ளிக் ஹோல் ஆகிய தியேட்டர்களை மதன் நிறுவனம் வாங்கியது.

இதே காலத்தில் பெவிலியன் என்கிற சிறிய திரையரங்கையும் வொர்விக் வைத்திருந்தார். இது மருதானை சந்தியில் அமைந்திருந்தது. வொர்விக் அத்தியேட்டரை புதுப்பித்து அதற்கு "பெவிலியன் பேலஸ்" என்று பெயர் மாற்றினார். மருதானையிலும் ஒரு நல்ல சினிமா தியேட்டர் ஒன்றை ஆரம்பிப்பதற்கான இடத்தை தேடிக்கொண்டிருந்த மதன் நிறுவனம் வொர்விக்கிடம் இருந்து “பெவிலியன் பேலஸ்” தியேட்டரை வாங்கியது. அதை நவீனமயப்படுத்தி “எல்பின்ஸ்டன் பிக்சர்ஸ் பேலஸ்” என்கிற பெயரை வைத்தது. இன்று எல்பின்ஸ்டன் என்கிற பெயரில் இருக்கிற மண்டபம் அந்த அன்றைய பயஸ்கோப் தகரக் கொட்டகை தான். ஆக 1917க்கும் முந்திய வரலாற்றைக் கொண்டது அது. ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் கொண்டது. இன்று இந்த பழமையான தகர கொட்டகை எல்பினிஸ்டன் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, இந்த சினிமாவின் ஆரம்பம் 1917 காலகட்டத்திற்கு செல்கிறது என்று தெரிகிறது.


ஜே.எப்.மதன் (J F Madan) இந்தியாவிலும், பர்மாவிலும், இலங்கையிலும் திரைப்படத்துறையின் முன்னோடியாக கருதப்படுபவர். அவர் இந்தியாவிலும் எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கொம்பனி (Elphinstone Bioscope company) என்கிற நிறுவனத்தை நடத்தி வந்தார். எல்பின்ஸ்டன் என்கிற பெயரை இந்திய நிறுவனமான மதன் நிறுவனம் வைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. பிரிட்டிஷ் ஆளுநரான எல்பின்ஸ்டன் (Mountstuart Elphinstone 1779 - 1859) இந்திய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகராக கருதபடுபவர். நிர்வாக சட்டத்துறையிலும் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் முக்கியமானவை. அவரின் நினைவாகவே மதன் அப்பெயரை தனது கம்பனிக்கும், மருதானை தியேட்டருக்கும் வைத்தார்.

எல்பின்ஸ்டன் திரையரங்கின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் 1925 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி அப்போதைய கொழும்பு மேயர் எச்.இ.நிவ்ஹாம் (H.E.Newham) அவர்களால் மதன் திரைப்பட நிறுவனத்தின் சார்பாக நாட்டப்பட்டது. கட்டிடத்தை எச்..எப்.பில்லிமோரியா (H.F.Billimoria) வடிவமைத்தார்.

சிற்றம்பலம் ஏ கார்டினர்

சிற்றம்பலம் ஏ கார்டினர் பிற்காலத்தில் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக ஒலிம்பியா, ரீகல் போன்ற தியேட்டர்களை வாங்கிய போது, எல்பின்ஸ்டன் தியேட்டரையும் வாங்கினார்.

1980களில் ஜே.ஆர். ஆட்சியில் எல்பின்ஸ்டன் அரசுடமையாக்கப்பட்டது. அது நவீனமயப்பத்தப்பட்டு அன்றைய பிரதமர் பிரேமதாசவால் சரசவிபாய கலாசார மண்டபத்தையும் இணைத்து 1988 ஒக்டோபர் 09 அன்று அரச நிறுவனமாக மீளத் திறக்கப்பட்டது.

நன்றி - தினக்குரல் - 06.03.2022


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates