உலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களும் கலவரங்களையும் கூட நாம் நினைவுக்கு கொண்டுவரவேண்டியிருக்கிறது. அது முதலாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமல்ல இலங்கையின் முதலாவது மதக் கலவரமும் அது தான். கொட்டாஞ்சேனைக் கலவரம் என்று அன்றைய ஆங்கிலேயர்கள் அதற்குப் பெயரிட்டார்கள்.
கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் ஆலயத்தில் ஈஸ்டர் தின பூஜைகள் 1883 மார்ச் 25 நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் கொட்டாஞ்சேனை தீபதுத்தாறாமய பன்சலையின் பெரஹரவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பொலிசாரின் எச்சரிக்கையும் மீறி நிகழ்ந்த இந்த ஊர்வலம் இறுதியில் பெரும் கலவரத்தை உண்டுபண்ணி நாட்டின் பரவலான பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் இறுதியில் வெளியிட்டது.
இது கலவரமாக வெடிப்பதற்கு அடிப்படைக் காரணம் அன்றே சிங்கள பௌத்தர்கள் மத்தியிலும், கத்தோலிக்கர்கள் மத்தியிலும் பரஸ்பரம் வளர்த்தெடுக்கப்பட்டிருந்த வெறுப்புணர்ச்சியும், பீதியும் தான். அதேவேளை உடனடிக் காரணி என்ன என்பதைத் தான் இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய புள்ளி. அந்தக் காரணி வதந்தியைத் தவிர வேறொன்றுமில்லை.
எரிக்க ஒரு தீப்பொறி போதும்! அணைக்க?
மருதானையிலிருந்து கொட்டாஞ்சேனையை நோக்கி வந்து கொண்டிருந்த பெரஹரவில் கொண்டுவரப்பட்டபெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று பெரஹர ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள்.
பெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கி பெரும் கலவரத்தை உண்டு பண்ணினர். மேலும் தொடர் வதந்திகளால் நாட்டில் வேறு பகுதிகளிலும் கலவரங்கள் நிகழ்ந்தன.
136 ஆண்டுகள் கழித்து அதே குருத்தோலை ஞாயிறண்டு 21/4/2019 இலங்கையைக் கலங்கடிக்க வைத்திருக்கிறது isis தாக்குதல்கள்.
1915ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரத்தின் போது தலதா மாளிகையை முஸ்லிம்கள் தாக்கி தகர்த்துவிட்டார்கள், பௌத்த, கிறிஸ்தவ வணக்கஸ்தளங்களை தாக்கிக்கொண்டு வருகிறார்கள், கொழும்பில் புனித லூசியாஸ் தேவாலயம் டைனமைட் வைத்து தகர்த்துவிட்டார்கள், முஸ்லிம்கள் தமது வீடுகளில் பணிபுரிந்த பெண்களை பாலியல் வல்லுவரவு செய்து கொன்றுவிட்டார்கள் என்பது போன்ற வதந்திகள் வேகமாக பரப்பட்டன. இந்த வதந்திகளை உறுதிசெய்வதற்கு எந்த வழிகளும் இல்லாத அந்த காலத்தில் உறுதிசெய்வதற்கான தேவையும் இல்லை என்று நம்புமளவுக்கு மக்களிடம் இனவெறுப்புணர்ச்சி ஏலவே ஏற்படுத்தப்பட்டிருந்தது.
வதந்திகளின் வரலாறு
தமிழர்களும், சிங்களவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முதலாவது கலவரமாக கொள்ளப்படுவது 1939 ஆம் ஆண்டு கலவரம். நாவலப்பிட்டியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆற்றிய வீராவேச உரையின் போது "சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல்... விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அரசர்கள் தமிழர்களே" எனக் கூறியதோடு மகாவசத்தையும் விமர்சித்திருந்தார். தமது பிறப்பையும் இனத்தூய்மையையும் அசிங்கப்படுத்திவிட்டார் என்றும் தமது புனித நூலான மகாவம்சத்தை கேலி செய்து விட்டார் என்கிற வதந்தியுடன் நாடளாவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான துவேச பிரச்சாரங்களின் விளைவு அந்தக் கலவரம்.
1977ஆம் ஆண்டு கலவரத்தின் பின் அதை ஆராய்ந்து விசாரித்து வெளியிடப்பட்ட சன்சோனி அறிக்கையில் வதந்திகளும், காவற்றுறையின் பொறுப்புணர்ச்சியற்ற போக்கும், அரசியல்வாதிகளின் பேச்சுக்களுமே காரணமென்பதை 336 பக்கங்களில் விளக்கப்படுத்தியிருந்தார்.
1981இல் யாழ் நூலக எரிப்பும், தமிழர்களின் மீதான அழித்தொழிப்பின் பின்னணியில் சிறில் மெத்தியுவின் வகிபாகத்தை அறிந்திருப்போம். நேரடியாம அறைச்யல்வாதிகளும், அரச படைகளும் தான் அதனை மேற்கொண்டிருந்து என்று தோன்றினாலும் கூட அதற்கான கருத்துவாக்கத்தை விதைத்து பெரு வதந்தியையும், புனைவுகளையும் வளர்த்தெடுத்து பரப்பியிருந்தவர் சிறில் மெத்தியு. அவர் எழுதிய “கவுத கொட்டியா?” (புலிகள் யார்? - 1980), “சிஹளுனி! புதுசசுன பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!) போன்ற தமிழர்களை மோசமாக சித்திரிக்கும் நூல்கள் அப்போது சிங்களவர்கள் மத்தியில் பிரபல்யம்.
1983 இல் யூலை 23 அன்று யாழ் – திருநெல்வேலி பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் 13 பேர் கொல்லப்பட்டார்கள். ஆத்திரமுற்ற இராணுவமும் பின்னர் வெறித்தனமாக அந்தப் பகுதியில் நடத்திய சூட்டில் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால் இந்தத் தாக்குதலை ஊதிப்பெருப்பித்து, குரூரமான கதைகளுடன் தென்னிலங்கையில் வதந்திகளை பரப்பிவிட்டனர்.
இராணுவத்தினரின் பிய்ந்த உடல்களை துண்டுதுண்டாக பொலித்தீன் பேக்குகளில் விமானம் மூலம் இரத்மலானை விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன என்கிற வதந்தியால் சிங்களவர்கள் மத்தியில் வெறித்தனமான ஆத்திரம் கொள்ளவைத்தது. பொரளை கனத்தைக்கு அடக்கம் செய்ய வருமென காத்திருந்த கூட்டம் உரிய நேரத்தில் வராமல் நேரம் கடந்துகொண்டிருந்தது. இந்த கொஞ்ச நேர இடைவெளிக்குள் கூடியிருந்தவர்கள் மத்தியில் பல கட்டுக்கதைகளால் ஆத்திரமேறியிருந்தார்கள். சடலங்களை குடும்பத்தினரிடமே கையளிப்பதற்காக நேராக இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதாக பரவிய செய்தியால் ஆத்திரத்தின் உச்சத்தை அடைந்திருந்த கூட்டத்தினர் பொரளை பகுதியில் இருந்த தமிழர்களின் கடைகள், வீடுகள், சொத்துக்களை தாக்கி துவம்சம் செய்ததில் ஆரம்பித்தது தான் 83 கலவரத்தின் ஆரம்பம்.
இலங்கையில் நிகழ்ந்த 1883, 1915, 1939, 1953, 1956, 1958, 1977, 1981, 1983 போன்ற காலங்களில் நிகழ்ந்த பிரதான கலவரங்களிலும், ஏனைய கலவரங்களிலும் உடனடிக் காரணமாக இருந்தவை வதந்திகள் தான். பல்லாண்டுகாலமாக வளர்த்தெடுக்கப்பட்டிக்கிற பரஸ்பர வெறுப்புணர்ச்சியும், புனைவுகளும் சந்தேகங்களும் வதந்திகளை வந்த வேகத்தில் நம்பவைத்துள்ளன.
முதல் மூன்று வாரங்களாக எந்த கலவரத்துக்கும் இட்டுச் செல்லாமல் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் காத்த போதும் இலங்கையின் இனப்பீதி கட்டமைப்பு அதற்கு மேலும் தாக்குகொள்ள இயலவில்லை. எங்கெங்கு ஆத்திரமூட்டக்கூடிய கதைகளும், இனவெறுப்புணர்ச்சிக்கும் வழிகள் திறக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல்களுக்கான வாய்ப்புகளும் திறக்கப்படுகின்றன. 12,13,14 ஆம் திகதி தாக்குதல்கள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல.
ஹஸ்மர் சம்பவம் உதாரணம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWt8yijElNlzwDRm1kwgROOPdTYNLUZGz8MdlScbl3gEepb6-p392vha7LBGlsou_DT5Bz9jKrGYsaoSljeaQEg1m4ohEKAQdrumhQfne-F6slstELsMmOaLm-Ihpc3weWOa-i/s400/60352719_10156573366748759_2116073487012462592_n.jpg)
முகநூல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து முதலில் கத்தோலிக்கர்களை திரட்டிக்கொண்டு ஒரு பாதிரியாரையும் அழைத்துக்கொண்டு போய் சிலாபம் பொலிசில் அது குறித்து முறையிடச் சென்றுள்ளனர். குறித்த முறைப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு பொலிசார் மருத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆட்களைத் திரட்டிக்கொண்டு கூட்டமாக கூடிச் சென்று ஹமீத்தின் உடைகள் விற்கும் கடைக்குச் சென்று உடைத்து நொறுக்கியுள்ளனர். ஹமீத்தையும் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளனர்.
இதன்போது கலவரத்தில் ஈடுபட்ட எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை. மாறாக தாக்கப்பட்ட ஹஸ்மரை கைது செய்து சிறையில் அடைத்தனர் பொலிசார். இனங்களுக்கு இடையிலான பதட்டத்தை உருவாக்கக்கூடிய கருத்துக்களை ஸ்மோக்க வலைத்தளத்தில் வெளியிட்டார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். முகநூலில் வெளியான கருத்தை அதே முகநூலில் திரித்து வேகமாக பரப்பி, ஆட்களைத் திரட்டுக்கொண்டு ஹஸ்மரின் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து தாக்குதளை நடத்துமளவுக்கு வெற்றிபெற்றுள்ளனர் என்றால் இந்த வகை போக்கின் ஆபத்தை நாம் அலட்சியம் செய்து விட முடியாது.
- அதே முகநூலில் அந்தக் கருத்தின் சரியான அர்த்தத்தை எவரும் சரி செய்து கட்டுப்படுத்த முடியவில்லை.
- முகநூல் வதந்தியை நம்பி வேகமாக அணிதிரண்டு ஒரு அட்டூழியத்தை மேற்கொள்ள சாத்தியங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
- அரச இயந்திரம் காடையர்களுக்கு பாதுகாப்பையும், பாதிக்கப்பட்டவருக்கு மேலும் அநீதியை இழைத்திருக்கிறது.
இந்த சிலாபம் சம்வத்திலிருந்து தான் வட மேல் மாகாணத்திற்கு தாக்குதல்கள் பரவின. அவற்றில் சில பல இடங்களில் பொலிசார்/படையினரின் உதவியுடன் வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. அதுவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதே தாக்குதல் நிகழ்கின்றன. வேறு சில இடங்களில் சிறிய எண்ணிக்கையான பொலிசார்; அளவில் பெரிய காடையர் கும்பலை கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இருக்கின்றனர்.
மூன்று வாரங்களுக்குப் பின்னர் சிங்களவர்களின் தாக்குதல்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் ஈஸ்டர் படுகொலை நிகழ்ந்த சுற்றுவட்டத்தில் நிகழவுமில்லை, அதில் பாதிக்கப்பட்ட சமூகத்தவராலும் நிகழவில்லை. எங்கோ ஒரு தொலைவில் - பாதிப்பை எற்படுத்தாதவர்கள் மீது – பாதிப்புக்கு உள்ளாகாதவர்களால் இது நிகழ்ந்தது என்பதன் அரசியல் பின்னணி என்பதையும் ஆராய வேண்டும்.
சிவிலியன்களிடம் அதிகாரம்
13 அன்று நிக்கவரெட்டிய பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் கடையை துவம்சம் செய்துவிட்டு அதன் உரிமையாளர் அப்துல் என்பவரை அடித்து காயப்படுத்துகின்றனர். பொலிசார் அவரைக் காப்பாற்ற தூக்கிக்கொண்டு வாகனங்களைத் தேடி ஓடுகின்றனர். அந்த இடையிலும் தாக்குகின்றனர். அவனை அடி... அடி என்று கத்துகிற குரல்களையும் கேட்கமுடிகிறது. இப்படி நடந்துகொள்பவர்களுக்கு பிணைமறுக்கப்பட்ட 10 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்போவதாக அரசு அறிவித்திருந்தும் அப்படி எல்லா இடங்களிலும் கைதுகள் நிகழவில்லை. வழமைபோல கண்துடைப்புக்கு சில கைதுகள் நிகழ்ந்துள்ளன. சிவில் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்து செயற்படுவதை தடுத்து நிறுத்த அரசு கடும் சட்டங்களை பிரயோகிக்க வேண்டும். வெறும் அறிக்கையோடு கடமையை முடித்துக்கொள்கிறது அரசு.
சக பொதுசனத்தை விசாரணை செய்யும் அதிகாரம் இன்னொரு குடிமகனுக்கு இல்லை என்பதை அரசு அறிவித்தல் வேண்டும். சாதாரண சிவில் மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு அடாவடித்தங்களில் ஈடுபடுவது தாம் “சிங்கள பௌத்தர்கள்” என்றும் உண்மையான தேசபக்தர்களான தமக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்கிற கோதா தான். இலங்கையில் நிகழ்ந்த கடந்தகால கலவரவங்களில் அது தான் அதிக பங்கு வகித்தது.
இந்த போலி புனைவுச் செய்தியைப் பரப்பி இனவாதத்தைத் தூண்டிய பல முகநூல் பக்கங்களைப் பார்த்தால் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது.
பெரும்பாலான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்ட சிங்கள கத்தோலிக்கர்கள் அல்லர். இந்த அடாவடித்தனங்களில் அதிகம் ஈடுபடுவோர் சிங்கள பௌத்தர்கள். குறிப்பாக மகிந்தவாதிகள். இந்த வெசாக் மாதத்தில் சிங்கள பௌத்தர்கள் எப்படி ஆசி பெறமுடியும்? எப்படி விமோசனம் பெற முடியும்?
வதந்தி புரியும் ஆட்சி
இந்த நாட்டை கொஞ்ச காலத்துக்கு ஆளப்போவது வதந்திகள் தான். Isis என்பது நேரடியாக தெரியாத எதிரி. நாடளாவிய வலைப்பின்னல், சர்வதேச பயங்கரவாதத்துடன் கைகோர்த்தது. ஆனால் கோரிக்கைகள் இல்லை, சமரசங்கள் இல்லை, யாரோடு தான் பேசுவது என்பதும் தெரியாது. அவர்கள் தொடர்ந்து தாக்குவார்கள் என்கிற பீதி மட்டும் தான் நம்மிடம் உண்டு.
இலங்கையில் யுத்தத்தை முடித்து புலிகளின் நிலப்பகுதியைக் கைப்பற்றி அதன் தலைவர்களைக் கொன்றதுடன் கதை முடிந்துவிட்டது என்கிற முடிவுக்கு இலங்கை அரசு வரமுடிந்தது. ஆனால் isis இயக்கத்தை அப்படி முடித்துவிட்டதாக அரசால் கூறத் தான் முடியுமா? இந்தப் பீதியே சகல முஸ்லிம்களின் மீதும் சந்தகத்தையும், பதட்டத்தையும், வெறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்த இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் இனி இந்த நாட்டை கொஞ்ச காலத்துக்கு ஆளப்போவது வதந்திகள் தான். இந்த வதந்திகளே பல்வேறு இடங்களில் பதட்டங்களையும், கெடுபிடிகளையும், சிறிய-பெரிய சண்டைகளையும், கலவரங்களையும் உருவாக்க வல்லவை.
35வருட கால யுத்த காலத்தில் இந்த சந்தேக சூழலை சிங்கள இனவாதிகள் பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தை கையிலெடுத்திருந்தார்கள். சாதாரண சிவிலியன்களும் வீதிகளில் தமிழர்களை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தார்கள். அடையாள அட்டைகளை, பொலிஸ் பதிவுகளைக் கேட்டார்கள். கொள்ளையும் அடித்தார்கள். மாட்டிவிடாமல் இருக்க கப்பம் கேட்டார்கள். சந்தேகத்தின் பேரின் மாட்டி விடுவதற்கும், விடுவிப்பதற்கும் என்று ஒரு தொழிலே இயங்கியது. இதற்கென்று இடைத்தரகர்கள் பலர் உருவாகி இருந்தார்கள். அந்த நிலைமை இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகவும் உருவாகத் தொடங்கியிருக்கிறது.
முஸ்லிம்களின் பொறுப்பு
மற்றவர்கள் தலையிடும் வரை ஏன் காத்திருந்தீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. இஸ்லாத்தை பிழையாக வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால் அதை சொல்லவைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பயங்கரம் வரும்வரை காத்திருக்க வந்தது ஏன்? இத்தனை காலம் அதை செய்யாததன் விளைவை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கண்டனத்தையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும் வெளியார் செய்யுமளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது முஸ்லிம் தலைவர்களின் தவறு. அதை வெளியார் செய்யவும் கூடாது, வெளியாருக்கு அப்படி செய்ய தார்மீகமும் இல்லை.
- ஜிகாத்தை பிழையாக விளங்கி வைத்திருக்கிறார்கள்
- ஷரியா சட்டத்தை பிழையாக வியாக்கியானம் செய்திருக்கிறார்கள்.
- தவ்ஹீத்தை தவறாக போதித்து வந்திருக்கிறார்கள்
- குர்ஆனுக்கு பிழையான வரைவிலக்கணம் கொடுத்து வந்திருக்கிறார்கள்
என்றெல்லாம் இப்போது கூறுபவர்கள்; இத்தனை காலம் பொறுத்திருந்ததன் விளைவு
முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதல்களைக் காரணம் காட்டி சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தை நசுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யத் துணிந்திருக்கின்றனர். இது இலங்கையில் மாத்திரமல்ல உலக அளவில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த அட்டூழியங்களுக்கான முன்கூட்டிய நியாயத்தையும், அனுமதியையும் இந்த isis பயங்கரவாதம் உருவாக்கி விட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்த பயங்கரவாதத்துக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று தாண்டிச் செல்வதோடு மாத்திரம் முஸ்லிம்களின் பொறுப்பு முடிந்துவிடக்கூடாது. அவற்றுக்கு எதிராக வெளிப்படையாக எதிர்வினையாற்றி அவர்களின் மதச் சகிப்பற்ற போக்கையும், காட்டுமிராண்டித்தனத்தை இஸ்லாத்துக்கு ஊடாக நியாயப்படுத்தும் போக்கையும் எதிர்த்து இயங்குவது முக்கிய கடமை.
பிரபல அரசியல் விமர்சகரும் சரவதேச பயங்கரவாத ஒழிப்பு நிபுணருமான ஜோனா பிளங்க் (Jonah Blank) என்பவர் சமீபத்தில் ஸ்ரீ லங்கா கார்டியனுக்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறுகிறார், “isis இலங்கையைத் தெரிவு செய்யவில்லை. இலங்கையில் இருந்த இயக்கம் தான் isisஐ தெரிவு செய்திருக்கிறது.” என்கிறார். கூடவே
“தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய மோசமான நடவடிக்கைகளால் புலிகளைப் பலப்படுத்தியது போல, முஸ்லிம் சமூகத்திடமும் அதே தவறை பிரயோகித்து பயங்கரவாதிகளைப் பலப்படுத்திவிடக் கூடாது” என்கிறார் அவர்.
முஸ்லிம்களுக்கு எதிரான புனைவுகள்
உலகில் பாசிச எழுச்சிகளைக் கவனித்தால் “அந்நியர்”கள் (வந்தேறு குடிகள்) மீதான மண்ணின் மைந்தர்களது (தேச பக்தர்கள்) சகிப்பற்ற வெறுப்புணர்ச்சியின் பால் எழுந்ததைக் கவனிக்கலாம். இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் பாசிச வடிவத்தை எட்டுவதும் இந்த அர்த்தத்திலேயே புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. 1900களின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு எதிரான சுலோகமாக “அந்நியர்கள்” என்று பயன்படுத்தப்பட்டபோதும் ஏக காலத்தில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் சமாந்திரமாக பயன்படுத்தப்பட்டது. அதுவே வளர்த்தெடுக்கவும்பட்டது. ஆக இந்த மூன்று சக்திகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட இனவாத கருத்தாக்கம் காலப்போக்கில் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்பு தமிழர்களுக்கும் (அதாவது ஈழத் தமிழர் - இந்திய வம்சாவளியினர்) மற்றும் முஸ்லிம்களுக்கும் எதிராக மையம்கொண்டது.
பின் வந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தாக்கங்கள் வரிசையாக புதியன சேர்க்கப்பட்டாலும் கூட 1900ஆரம்ப காலப்பகுதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவை ஒரு நூற்றாண்டு சென்ற பின்பும் கூட இன்றும் அந்த வரிசையிலிருந்து நீங்கவில்லை. அப்படிப்பட்ட ஐதீகங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
- வந்தேறி குடிகள், புலால் உண்பவர்கள், மாடு அறுப்பவர்கள்,
- சிங்களக் கடைகளிலேயே பொருட்களை வாங்குங்கள், முஸ்லிம் கடைகளைப் புறக்கணியுங்கள்
- புர்காவை தடை செய்யுங்கள்
- ஹலால் முறையை நிறுத்துங்கள்
- மதரசா பள்ளிக்கூடங்களை தடை செய்யுங்கள்
- அரபு கற்கைகளை நிறுத்துங்கள்
- மத மாற்றம் செய்கிறார்கள்
- இனப்பெருக்க வேகத்தை திட்டமிட்டு அதிகரிக்கிறார்கள்
- கருத்தடை மருந்துகளை முஸ்லிம் அல்லாதவர்கள் மீது பிரயோகிக்கிறார்கள்.
- மாட்டிறைச்சி வெட்டுவதை தடை செய்யுங்கள்
- வாள்கள் வைத்திருகிறார்கள்
- இலங்கையின் போதைப்பொருள் ஏகபோக சந்தை முஸ்லிம்களிடம் தான் இருக்கிறது.
- Isis தீவிரவாதத்துடன் தொடர்பு
முஸ்லிம் கடைகளை புறக்கணியுங்கள் என்கிற பிரச்சாரங்களின் விளைவு தான் அவர்களின் வியாபாரஸ்தளங்களை தேடித்தேடி நாசம் செய்வது.
![]() |
ஷரியா தொடர்பான சகலவற்றையும் தடை செய்யாக கோரும் பட்டியல் |
முஸ்லிம் கடைகளை பகிஸ்கரிப்பவர்கள் இலங்கையை இயக்கிக் கொண்டிருக்கும் எண்ணெயில் 65% வீதமானவை முஸ்லிம்/அரபு நாடுகளில் இருந்து வரும் எண்ணையை நிராகரிப்பார்களா? வெளிநாடுகளில் பணிபுரிவோரில் 85% வீதத்தினர் மத்திய கிழக்கிலேயே பணிபுரிகின்றனர். பிரதான வருவாயில் ஒன்றாக மாறியுள்ள அதைப் பகிஸ்கரிக்கத் தான் முடியுமா? இலங்கையின் வருவாயில் முக்கிய இடமான தேயிலையை அதிக அளவு கொள்வனவு செய்கின்ற அரபு நாடுகளில் இருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியை வேண்டாம் என்று நிறுத்திக் கொள்வீர்களா? அனைத்தையும் விடுங்கள் இந்த மாதம் வெசாக் மாதம். மொகிதீன் பேக்கின் பாடல் இல்லாத ஒரு வெசாக்கை நினைத்துத் தான் பார்க்க முடியுமா?
முஸ்லிம்களுக்கு எதிரான பெருங்கதையாடல்களையும், கற்பிதங்களையும், போலிப் பிரச்சாரங்களையும் சமூகத்தில் புனைந்து, பரப்பி, அதன் பேரில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளைத் தான் நாம் இப்போது எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. இதில் விளைவுகளுக்கு பதில் கொடுக்க முனையாமல் இந்த வெறுப்புணர்ச்சி சித்தாந்தத்தை பிரக்ஞைபூர்வமாக கட்டுடைக்கும் வழியைத் தான் நாம் தேட வேண்டும்.
எதிரிக்கு தோல்வியைக் கொடுங்கள்
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களையும் கட்டுகதைகளையும் கடந்த 7 ஆண்டுகளுக்குள் வதந்திகளாக சிங்கள சமூகத்தில் ஆழ வேரூன்றவைத்தவர்கள் பொதுபல சேனா, சிஹல ராவய, இராவணா பலய, சிங்களே இயக்கம் போன்ற அமைப்புகள் தான். அந்த அமைப்பின் கருத்துக்களால வளர்க்கப்பட்டு அவற்றின் முன்னணிப் படையணிகளுக்கு தலைமை தாங்கிய டன் பிரசாத், அமீத் வீரசிங்க, நாமல் குமார ஆகியோரை தற்போது கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது. இவர்களால் இனவெறியூட்டப்பட்ட சிங்களவர்கள் உசுப்பேற்றப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடலாம் என்று தான் அந்த கைது நிகழ்ந்தது என்கிறது அரசு.
சஹ்ரானுக்கு தேவைப்பட்டது அழிவு. அழிவு மட்டுமே. சஹ்ரானுக்கு அந்த வெற்றியை பேரினவாதிகள் இலகுவாக கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். isis பயங்கரவாதிகள் ஒரு நாள் தான் தாக்கி அழிவை ஏற்படுத்தினார்கள். இப்போது ஒவ்வொரு நாளும் பல இடங்களில் தாக்கி அந்தப் பயங்கரவாதிகளுக்கு இலகுவான வெற்றியை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது பேரினவாதம்.
ஏற்கெனவே கூறியதுபோல isis தாக்குதல் சிலவேளைகளில் நின்றே போயிருக்கலாம். ஆனால் இனியும் எப்போதும் தாக்குவார்கள் என்கிற பீதியே பதட்டத்தையும், சந்தகங்களையும். பரஸ்பர வெறுப்புணர்ச்சியையும் அதன் நீட்சியாக கெடுபிடிகளையும், கலவரங்களையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கப் போகிறது. கலவரத்தை செய்து எதிரிக்கு வெற்றியை அளிக்கப் போகிறோமா? அல்லது அழிவுகளுடன் சம்பந்தமில்லாத மக்களுக்கு அன்பைப் பகிர்ந்து எதிரிக்கு தோல்வியைக் கொடுக்கப் போகிறோமா?
+ comments + 1 comments
"தமிழர்களும், சிங்களவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முதலாவது கலவரமாக கொள்ளப்படுவது 1939 ஆம் ஆண்டு கலவரம். நாவலப்பிட்டியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆற்றிய வீராவேச உரையின் போது "சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல்... விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அரசர்கள் தமிழர்களே" எனக் கூறியதோடு மகாவசத்தையும் விமர்சித்திருந்தார். தமது பிறப்பையும் இனத்தூய்மையையும் அசிங்கப்படுத்திவிட்டார் என்றும் தமது புனித நூலான மகாவம்சத்தை கேலி செய்து விட்டார் என்கிற வதந்தியுடன் நாடளாவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான துவேச பிரச்சாரங்களின் விளைவு அந்தக் கலவரம்"
ஜீ.ஜீ.பொன்னம்பலம் சொல்வதற்கு முன்னமே மகாவம்சத்தில்
அவர்களின் வழித்தோன்றல்கள் சிங்கத்துடன்தானே தொடங்கியது என்றுதானே குறிப்பிடப்படுகிறது .
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...