Headlines News :
முகப்பு » » சமூகத்திற்கு விடிவெள்ளியாக மலையக அதிகார சபை உருவாக வேண்டும் - சிவலிங்கம் சிவகுமாரன்

சமூகத்திற்கு விடிவெள்ளியாக மலையக அதிகார சபை உருவாக வேண்டும் - சிவலிங்கம் சிவகுமாரன்


மலையக மக்களுக்கான அபிவிருத்தியானது கடந்த காலங்களில் பல தடங்கல்களுக்கும், இழுபறிகளுக்கும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வந்தமைக்கு பிரதான காரணம் சட்டரீதியாகவும், தனிநபர்கள் மற்றும் அரசியல் தலையீடின்றியும் அவற்றை முன்னெடுத்துச்செல்ல ஒரு அதிகார அமைப்பு இல்லாததாகும். அந்த வகையில் நல்லாட்சியில் அவர்களுக்கு கிடைத்திருக்கும் முக்கிய அம்சமே பெருந்தோட்டப்பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை. ஆனால் இதை சட்டமாக்கி பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் பல தடைகளை கடக்க வேண்டியதாயிற்று. இதை யார் கொண்டு வந்தார் என்பதை விட எதற்காக கொண்டு வரப்பட்டது, எதிர்காலத்தில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித்திட்டங்களில் எந்தளவிற்கு இது தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது? என்பன குறித்து ஆராய்தல் அவசியம். ஏனெனில் இந்த அதிகார சபையானது எந்த அரசாங்கம் வந்தாலும் நிலைத்து நிற்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, மலையக மக்களின் அபிவிருத்தி எண்ணக்கருக்களை தேசிய நீரோட்டத்தோடு இணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அமைச்சர் பி.திகாம்பரம் மூலம் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல கட்ட முயற்சிகளுக்குப்பிறகு ஜுன் மாதம் 25 ஆம் திகதி இத்திட்டமானது மசோதாவாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டமையும் முக்கிய விடயம். சட்டரீதியான விடயங்களை உள்ளடக்கி சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெறப்பட்டே இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாயினும் தற்போது இச்சட்டமூலத்திற்கு முன் உள்ள பிரதான சவால் என்றால் பாராளுமன்றில் இதற்கு சட்டரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இது உயரிய மன்றத்தின் சட்டமாகும். அப்படியான எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக பண்புகளில் ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் அதை தவிர்த்து செயற்பட முடியாது.

தேவைக்கான காரணம்

மலையகப்பெருந்தோட்டப்பகுதிகளில் நலன்புரி விடயங்களை முன்னெடுக்க பல திட்டங்கள் அவ்வப்போது அமுல்படுத்தப்படுகின்றன.குறிப்பாக வீடமைப்புத்திட்டங்கள் கூட நலன்புரி விடயமாகவே பார்க்கப்படுவதற்குக்காரணம் குடியிருப்புகள் இல்லாதவர்களுக்கு அதை அமைத்துக்கொடுப்பது ஓர் அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் என்பன வேறுபட்டது. முதலில் நலன்புரி திட்டங்கள்,சலுகைகள் ,அபிவிருத்தித்திட்டங்கள் போன்றவற்றிற்கிடையேயான வித்தியாசங்களை மக்கள் புரிந்து கொள்ளல் அவசியம். வீடமைப்பு என்றால் குடியிருப்புகளை மட்டும் அமைத்துக்கொடுத்தல் என்ற விடயத்தில் மட்டுமே அக்கறை செலுத்துவதாக அமைகிறது. அக்குடியிருப்பில் வாழ்ந்து வருவோரின் தேவைகள் ,எதிர்காலம் குறித்த அக்கறை இத்திட்டத்துக்குள் அடங்குவதில்லை. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிகார சபையானது பல விதங்களில் செல்வாக்கு செலுத்துகிறது.  

பெருந்தோட்டப்பகுதி குறித்த அக்கறை

1997 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இப்பிரதேசம் மற்றும் இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை உருவாக்கியிருந்தார். ஏனெனில் அது வரை இம்மக்களின் நலன்புரி விடயங்களும் சலுகைகளுமே மாறி மாறி வந்த அரசாங்கங்களால் வழங்கப்பட்டிருந்தன.

இம்மக்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றி பெரும்பான்மை சமூகத்தினர் கூட அறியாதிருந்த நிலைமைகளே இருந்தன. இந்தக்குழுவினரின் சிபாரிசுகளுக்கு அமையவே இம்மக்களின் அபிவிருத்தியை அடிப்படையாக வைத்து அமைச்சொன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் வீடமைப்பு, சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த திட்டங்களை கிரமமாக முன்னெடுத்துச்செல்ல ஒரு பொறி முறை இருக்கவில்லை. இதன் காரணமாக திட்டங்கள் தாமதமடைந்தன. பல இடையூறுகளும் ஏற்பட்டன. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையில் முதன் முறையாக அதிகார சபை என்ற விடயம் உள்ளடக்கப்பட்டது.

அதில் ‘பெருந்தோட்ட பகுதிகளுக்காக உட்கட்டமைப்பு,அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்காக ஒரு உயர் சக்திமிக்க அதிகார சபை ஒன்று நிறுவப்படும் என கூறப்பட்டிருந்தது ஆனால் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் 2005ஆம் ஆண்டு உருவான பின்னர் இந்த அதிகார சபையை உருவாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மட்டுமன்றி அப்போதைய மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய மலையக பிரதிநிதிகளும் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவான பின்னரே மீண்டும் இந்த அதிகார சபை விடயம் பற்றி அக்கறை செலுத்தப்பட்டது. ஏற்கனவே மலையக அபிவிருத்திக்கென தயாரிக்கப்பட்ட பத்தாண்டு திட்டத்தில் பங்காற்றியிருந்த மலையகத்தைச்சேர்ந்த புத்திஜீவிகள், அமைச்சு ஆலோசகர்கள் இவ்விடயத்தில் அக்கறை காட்டி செயற்பட்டனர். இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைபுக்கு அமைச்சரவையானது 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அங்கீகாரம் வழங்கியமை ஒரு மைல்கல்லாக அமைந்தது. எனினும் வரைபு குறித்த தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் காணி அமைச்சு,நிதி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட அமைச்சு என்பன வழங்கியிருந்தன. ஆகவே அவற்றையும் உள்ளடக்கி மீண்டும் ஒரு முழுமையான மசோதாவை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தைப் பெற இரண்டு வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. எனினும் இடைவிடாத முயற்சி மற்றும் சமூக நோக்கம் கருதிய அழுத்தங்களால் தற்போது அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

என்ன கிடைக்கப்போகின்றது?

இந்த அதிகார சபையின் மூலம் பெருந்தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பானது குடியிருப்பு,சுகாதாரம்,கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல விடயங்கள் ஆராயப்படவுள்ளன. மட்டுமன்றி தீர்வுகளும் கிடைக்க வழிவகுக்கின்றன. இந்த அதிகார சபையின் மூலம் அடையக்கூடிய பிரதான இலக்குகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு குறிக்கோள்கள்

1) இச்சமுதாயத்தினரை சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதினை உறுதிப்படுத்தல்.

2 ) மலையக சமூகத்தினரை தேசிய அபிவிருத்தி செயன்முறைக்கு பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தல்

 இந்தநோக்கங்களை அடைவதற்காக இந்த அதிகாரசபையினுடைய பணிகள் இம்மசோதாவிலே எடுத்துக்கூறப்பட்டுள்ளன. முதலாவது மலைநாட்டின் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதலாகும்.

இந்த அமைச்சு வீடுகளை அமைப்பதை பிரதான பணியாக மேற்கொண்டு வருகிறது. இந்த வீடுகளை மையமாகக் கொண்டு அவற்றை புதிய கிராமங்களாக மாற்றியமைக்கக்கூடிய பொறுப்பு இந்த அதிகாரசபையை சார்ந்த ஒன்றாக இருக்கும்.இதற்காக இந்த அதிகாரசபை தேசிய மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களிலுள்ள நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து செயற்படும்.

அத்தோடு சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் இது பங்குபற்றுதலையும் உறுதிப்படுத்தும். இன்று அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பது இந்த மக்களுக்கான வீட்டுரிமையை வழங்குதலாகும். இந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்காக தோட்டங்களில் வாழும் சட்டரீதியான குடியிருப்பாளர்களுக்கு தெளிவான காணி உறுதிகளை வழங்கலை இந்த அதிகாரசபை வசதிப்படுத்தும்.

கல்வி மற்றும் வாழ்வாதார வசதிகள்

அத்தோடுதோட்டத்துறை இளைஞர்களுக்கு கல்வி முன்னேற்றத்துக்காக மூன்றாம்நிலை உயர்கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியை அதிகரிப்பதற்கு உதவிகளை வழங்கும். தோட்ட சமுதாயத்தினருக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் இந்த அதிகாரசபை கவனம் செலுத்தும். அத்தோடு பலவீனமானகுழுக்களாகஅடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்கள் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியாக தோட்டங்களில் வாழுகின்ற குடியிருப்பாளர்களுக்கு எல்லா வசதிகளையும் உறுதிப்படுத்தும். இந்தப் பிராந்தியங்களில் சூழலை பாதுகாப்பதற்கு எல்லா நடவடிக்கைகளையும் இதுமேற்கொள்ளும். இடர் பாதுகாப்பு தோட்டப்பகுதிகளில் ஏற்படும் மண்சரிவு போன்ற அபாயங்களை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு மாற்று நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்துவதற்கு முயற்சிகள்செய்யும்.

மேலும் பிரதான பிரச்சினையாக காணப்படும் வறுமை ,வேலையின்மை போன்ற விடயங்களுக்கு தீர்வு காணும் ஓர் அதிகாரமிக்க அமைப்பாகவும் இது விளங்கும். ஆகவே மலையக சமூகத்தை வலுப்படுத்த கிடைத்திருக்கும் இவ் வரப்பிரசாதத்தை பயன்படுத்திக்கொள்வதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது. 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates