Headlines News :
முகப்பு » , , , » உலக அழிவில் இந்தோனேசியாவின் வகிபாகம் - என்.சரவணன்

உலக அழிவில் இந்தோனேசியாவின் வகிபாகம் - என்.சரவணன்

செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! – 6 

உலக செம்பனை எண்ணெய் சந்தையில் முதலிடம் வகிக்கிறது இந்தோனேசியா. உலகில் அதிகளவு செம்பனை எண்ணெயை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது இந்தோனேசியா.

அங்கு 1870இல் ஒல்லாந்து முதலீட்டாளர்கள் நிலங்களை குத்தகைக்கு எடுத்து செய்றிய அளவில் மேலுக்கு தயாரிப்பை மேற்கொண்டனர். ஆனால் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளில் 1911இல் தான் முதன் முதலாக வர்த்தக நோக்கத்துக்காக இறப்பர் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அத்ரியன் ஹல்லட் (Adrien Hallet) என்பவரால் செம்பனை எண்ணெய் உற்பத்திச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் செம்பனைத் தொழிலை நம்பி 50 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 18.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணியாக இந்தோனேசியா பெற்றிருக்கிறது. இந்தோனேசியாவிலிருந்து செம்பனை எண்ணெயைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில்முதலிடம் வகிப்பது இந்தியா. அடுத்ததாக ஐரோப்பிய நாடுகள், சீனா, பாகிஸ்தான் என்கிற வரிசையில் இறக்குமதி இடங்களை வகிக்கின்றன. உலக சமையல் எண்ணெயில் 30% வீதத்தை செம்பனை எண்ணெய் வகிக்கிறது.

உலகின் எச்சரிக்கை

உலக சுற்றுச்சூழல் நிறுவனமான கிரீன் பீஸ் அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் மேகாகார்யா ஜெயராயா (Megakarya Jaya Raya) என்கிற பகுதியில் மாத்திரம் 4000 ஹெக்ராயர் பசுமைக் காடு 2015-2017க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் செம்பனை உற்பத்திக்காக அழிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியது. இதுபோன்ற கண்டங்களின் போதெல்லாம் இந்தோனேசியா மறுத்துவந்த அனுபவத்தின் காரணமாக கிரீன்பீஸ் அமைப்பு செட்டலைட் படங்களையும் ஆதாரங்களாக வெளியிட்டிருந்தது. உலகிலேயே காடழிப்புக்கும் முதன்மை காரணமாக எண்ணெய் உற்பத்தித்துறை ஆகியிருக்கிறது என்று கிரீன்பீஸ் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி சர்வதேச நிறுவனங்களும், பல உலக நாடுகளும் இந்தோனேசியாவை நிலைபேறான முறையில் செம்பனை உற்பத்தியை மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டதுடன் நிபந்தனைகளையும் விதித்தன. அப்படி மேற்கொள்ளாவிட்டால் இறக்குமதியை நிறுத்துவோம் என்றும் எச்சரித்தன. அப்படியான எச்சரிக்கைகளை கண்டித்து முதலில் இந்தோனேசியா கருத்து வெளியிட்டாலும் பின்னர் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதன்படி செய்யவில்லை. மாறாக வழமையான உறபத்தியை மேற்கொள்வதும், அதனை பெருப்பிப்பதும், காடழிப்பு போன்றவற்றைத் தொடர்வதுமாக இருந்தது. இந்த போக்குதான் இறுதியில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுகூடி ஐரோபிய பாராளுமன்றமும், ஐரோப்பிய ஒன்றியமும் 2020 இலிருந்து மட்டுப்படுத்தப்போவதாக முடிவுசெய்தது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் ஏற்கெனவே 50% வீதமான பொருட்கள் பாமாயில் கலந்த பொருட்களாகவே இருக்கின்றன. அந்தளவு பாமாயிலில் தங்கியுள்ள நிலையில் பாமாயில் இல்லாத ஐரோப்பா என்பது பெரும் சவாலுக்குரிய ஒன்றே.

கூடவே சமீபத்தில் எரிபொருளுக்காக தயாரிக்கப்படும் செம்பனை எண்ணெயின் கழிவுகள் புதைக்கப்பட்டும், கடல்களில் கொட்டப்படும் போக்கையும் எதிர்த்த ஐரோப்பிய யூனியன் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெரும் வரியை அறிவித்தது. ஆனால் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இந்தோனேசியா அதற்கான தீர்வையை குறைத்துக்கொண்டது. அது இந்தோனேசியாவுக்கு கிடைத்த வெற்றி ஆனால் சூழலியலாலர்களுக்கு கிடைத்த தோல்வி.

உலக நாடுகளின் நிபந்தனைகளை இந்தோனேசியாவுடன் ஒப்பிடுகையில் மலேசியா கணிசமான அளவு ஏற்றுக்கொண்டதுடன் நடைமுறையிலும் ஓரளவு செய்து காட்டியிருக்கிறது. செம்பனை விடயத்தில் நிலைபேறான உற்பத்தியில் ஒப்பீட்டு ரீதியில் மலேசியா முதன்மை இடம் வகிக்கிறது என்றே கூறலாம்.

உலக அழிவில் இந்தோனேசியாவின் பங்கு

ஒவ்வொரு 25 செகண்டுகளுக்கும் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு செம்பனைக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. 1990 - 2015 க்கும் இடைப்பட்ட 25 வருட காலத்துக்குள் இந்தோனேசியாவில்  மாத்திரம் 24 மில்லியன் ஹெக்ராயர் பசுமைக் காடு அழிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இலங்கை போன்று நான்கு மடங்கு பரப்பளவு அது.

இந்தோனேசியாவின் 84 சதவீத பசுமைக் காடுகளைக் கொண்ட நாடாக 1900 இல் இருந்தது. அதாவது கிட்டத்தட்ட 170 மில்லியன் ஹெக்ராயர் நிலம். நூறு ஆண்டுகளில் அது 100 மில்லியன் ஹெக்ரயர்களாக சுருங்கியிருக்கிறது.


செம்பனை உற்பத்திக்காக மட்டும் இந்தக் காடுகள் அழிக்கப்படவில்லை கடுதாசி உற்பத்திக்காகவும் கடந்த காலங்களில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன. உலக கடுதாசி உற்பத்தியில் 11 இடத்தில் இந்தோனேசியா திகழ்கிறது.

மேலும் அதிக அளவில் காட்டுத்தீ நிகழும் நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. செம்பனை செய்கைக்காக காடுகளை அழிப்பதற்கும் இப்படி தீயிடுவது சர்வசாதாரணமாக இருக்கிறது. அதைவிட இந்த செம்பனை செய்கை நிகழும் இடங்களில் பெருமளவு தீ பரவி பெரும் சூழல் நாசத்தை எற்படுத்தியிருக்கிறது.


1997-1998 ஆண்டுகளில் இந்தோனேசியாவில் சுமாத்திரா, களிமந்தன் பகுதிகளில் ஏற்பட்ட தீ உலகிலேயே ஏற்பட்ட மிகப்பெரும் காட்டுத்தீயாகக் கருதப்படுகிறது. அருகில் இருந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், புருனே, தாய்லாந்து, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் கூட இதன் தாக்கத்தை அனுபவித்தன. புகைமண்டலம் பல மாதங்கள் சுற்றிலும் இருந்தன. மலேசியாவும் இத்தீயை அணைக்க தமது படைகளை அனுப்பி உதவியது. மலேசியாவின் பொருளாதாரத்திலும் அது பாதிப்பை செலுத்தியது. இறுதியில் 8 மில்லியன் ஹெக்ராயர் பகுதி தீக்கு இரையாகியது. இலங்கையின் பரப்பளவை விட அது அதிகம் என்பதைக் கவனித்திற்கொள்க. அப்படியென்றால் அது சூழலுக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடிய பன்முக விளைவுகளை எண்ணிப் பாருங்கள். 2.57 ஜிகா தொன் கார்பனை அந்தத் தீ இந்தச் சுற்றுச் சூழலில் விட்டுச் சென்றது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு நிகழ்ந்தும் தற்போதைய செம்பனை உற்பத்தியை 2050 ஆகும் போது மூன்று மடங்காக பெருக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது இந்தோனேசியா என்பது தான் கவலைக்கிடமான செய்தி. இது இந்தோனேசியாவை விட உலகைத் தான் பெரும் பாதிப்புக்கு கொண்டு செல்லப் போகிறது என்பது தான் முக்கிய சமிக்ஞை.

வருடாந்தம் இந்தோனேசியா எதிர்கொள்ளும் காட்டுத்தீ பற்றி “பற்றியெரியும் பருவகாலம்” (The Burning Season 2008) என்கிற ஒரு ஆவணப்படம் வெளியாகி பல சர்வதேச விருதுகளைக் குவித்தது.


காடழிப்பினால் உராங்உட்டான் குரங்குகளின் எண்ணிக்கை வேகமாக சரிபாதியாகக் குறைந்திருக்கிறது. 'உராங்உட்டான்’ என்றால் காடுகளின் மனிதன் என அர்த்தம். ஏனென்றால், இதன் 97 சதவிகித செயல்பாடுகள் அப்படியே மனிதனைப்போலவே இருக்கும். பாலூட்டுவதில் இருந்து கூட்டுக்குடும்பமாக வாழ்வது வரை அப்படியே மனிதனைப்போலவே வாழும். குரங்கு வகையிலேயே அதிக புத்திசாலி இனமாக கருதப்படுகிறது. காடுகளில் தீ வைப்பதால் வருடத்துக்கு 2,000 குரங்குகள் அழிந்துவிடுகின்றன. சுமாத்திரா தீவில் உராங்உட்டான் மொத்தமே 6,300 தான் இருக்கின்றன. அது வருடத்துக்கு 1,000 என்ற அளவில் அழிந்துவருகின்றன. இதே வேகத்தில் போனால், இன்னும் 10 ஆண்டுகளில் உரான்உட்டான் குரங்குகளே இருக்காது’ என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.


இந்த காடழிப்பில் பிரதான பாத்திரத்தை வகித்தவர்கள் சுதேசிகள் அல்லர், மாறாக செம்பனை உற்பத்தியில் முதலிட்ட பல்தேசிய கொம்பனிகளே. அரசின் அனுசரணை மறைமுகமாக இதில் இருந்தாலும் சட்டவிரோதமாகவே பெரும்பாலும் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறிக்கைகள் விளக்குகின்றன.

இந்தோனேசியா வேகமாக ஜனத்தொகை பெருகும் நாடுகளில் ஒன்று, இன்னொரு பக்கம் காடழிப்புசார் பக்க விளைவுகள், எண்ணைக்கிணறுகள், நீர் மாசடைந்திருப்பது போன்ற பல்வேறு சிக்கல்களுக்கும் அந்நாடு முகம் கொடுக்கும் நிலையில் இந்த செம்பனைப் பணம் தான் நிலைமையை சமப்படுத்தும் என்று நம்புகிறது.

உலகில் அரிய உயிரினங்கள் வாழ்ந்த காடுகள் எரிக்கப்பட்டதால் பல உயிரினங்கள் அழிந்து போயின. அந்த உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக அங்கே சமநிலை பாதிக்கப்பட்டு பெருமளவு விலங்குகள் இடம்பெயர்ந்தன. அதுபோல அழிந்தும் போயின. செம்பனைக்கு எதிரான குரல்களில் இப்படி விலங்குகளின் அழிவு முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்தோனேசியா இந்த விடயத்தில் அதிக கண்டனத்துக்கு உள்ளாகிவரும் நாடு.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates