தமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இலங்கையின் ஊடகங்கள் இனத்துவ ஊடகங்களாகத் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இலங்கையிள் வெளிவரும் சிங்கள – தமிழ் தினசரிகளை எடுத்துப் பாருங்கள். ஒரே நாட்டில், அதே நாளில் வெளிவரும் பத்திரிகையின் செய்திகள் கட்டுரைகள் 90 சதவீதமாவது வேறுபட்டு இருப்பதைக் கவனிப்பீர்கள். இது ஒரு விசித்திரமாக இல்லையா? இரு வகை சிந்தனைப் போக்கையும், இரு வகை இரசனையையும், இருவகைத் தேவைகளையும், இரு வகை அபிலாசைகளையும் கொண்டதாக அவை இருப்பதை நீங்கள் காண முடியும்.
இனத்துவ கருத்தேற்ற விற்கும் செய்திகளுக்கும், கட்டுரைகளுக்குமே அந்தந்த இனம் சார்ந்த மொழிப் பத்திரிகைக்கு சந்தையில் கிராக்கி உண்டு என்கிற நிலை தோன்றி நெடுங்காலமாகிவிட்டன. ஆக தேசியவாதம், இனவாதமாகவும், பேரினவாதமாகவும், சமயத்தில் பாசிசமாகவும் கையாள்வதே சந்தையில் போட்டிமிக்க விற்பனை உபாயமாக ஆகியிருக்கிறது.
இலங்கையின் சிங்கள தேசிய தினசரி – வாரப் பத்திரிகைகளை தவிர்த்துப் பார்த்தால் மாற்றுப்பத்திரிகைகள் இதிலிருந்து சற்று விலகி இருப்பதைக் கவனிக்க முடியும்.
அந்த வகையில் ஆரம்பத்தில் ராவய, யுக்திய, லக்திவ, ஹிரு போன்ற பத்திரிகளின் தோற்றம் மாற்று சிந்தனைகளுக்கான களத்தையும், தேசிய நாளிதழ்கள் பேசாத விடயங்களை துணிச்சலுடன் பேசும் பத்திரிகைகளாக வெளிவந்தன. அவை இடதுசாரி பின்னணியைக் கொண்டவர்களால் நடத்தப்பட்டதும் அதன் சமூக பிரக்ஞைத்தனத்திற்கு காரணம் எனலாம். இதில் ஹிரு பத்திரிகையின் தோற்றத்தைப் பற்றி மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதற்கு இன்னொரு காரணமுமுண்டு ராவய, யுக்திய ஆகியவை ஆரம்பத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களால் தோற்றுவிக்கப்பட்டவை. லக்திவ போன்றவை ஊடக முதலாளிகளால் நடத்தப்பட்டவை. ஹிரு பத்திரிகை மக்களால் உருவாக்கப்பட்டது.
90 களில் தென்னிலங்கையில் வெளியான "லக்திவ" பத்திரிகை ஒரு சிறந்த சிங்கள மாற்றுப்பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது. பல நல்ல இடதுசாரி பத்திரிகையாளர்கள் அதில் இயங்கினார்கள். 1987-1989 காலபகுதியில் ஜே.வி.பி அழிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த தலைமறைவுகுள்ளான ஜேவிபி தோழர்கள் இதில் இயங்கினார்கள். இதற்கூடாகத் தான் விமலசிறி கம்லத் என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய விமல் வீரவன்சவும் இருந்தார். “லக்திவ”வை வெளியிட்டது ஒரு வியாபார நிறுவனம். பிரேமதாசவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அந்த பத்திரிகையின் முதலாளிக்கு பிரேமதாசவின் பினாமிகளுக்கு ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஆசிரியர் குழுவில் இருந்தவர்கள் சளைக்காமல் அந்த முதலாளியோடு முரண்பட்டுக்கொண்டு பத்திரிகையைத் தொடர்ந்தார்கள். திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் குழுவுக்குத் தெரியாமல் அச்சகத்தில் வைத்து முக்கிய சில அரசியல் பக்கங்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக விளம்பரப் பக்கங்களை நிரப்பி வெளியிட்டு விட்டார். அடுத்த நாள் அந்த ஆசிரியர் குழு முழுவதுமாக வெளியேறியது. இலங்கையின் வரலாற்றில் முழு ஆசிரியர் குழுவும் ஒரேயடியாக அவ்வாறு வெளியேறி முதல் சந்தர்ப்பம் என்று தான் கூற வேண்டும். சில மாதங்களில் அப்பத்திரிகையை வேறு வழியின்றி முதலாளி மூடிவிட்டார்.
வெளியேறியவர்கள் இலட்சியவாதிகளாக மட்டுமன்றி ஏழ்மைக்குப் பழக்கப்பட்ட பத்திரிகையாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சம்பளத்துக்காக பணியாற்றும் பத்திரிகையாளர்களாக இருக்கவில்லை. மாறாக பத்திரிகை என்பது அவர்களின் அரசியல் ஆயுதமாக வரித்துக்கொண்டார்கள். வேறொரு பத்திரிகையை தொடக்குவதர்காக அவர்கள் மக்கள் முன் சென்றார்கள். வீதி வீதியாக உண்டியலில் பணம் சேர்த்தார்கள். மக்கள் கலைவிழா என்கிற மாபெரும் நிகழ்ச்சியொன்றை பெரும் மைதானமொன்றில் நடத்தினார்கள். பல மக்கள் இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இடது சாரி இயக்கங்கள் பல பூரண ஆதரவு வழங்கின. அது மாபெரும் விழாவாக அமைந்தது.
நம்புங்கள் அந்த உண்டியல் பணத்தைக் கொண்டு 1993 செப்டம்பர் 26 அன்று "ஹிரு" என்கிற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார்கள். அந்தப் பத்திரிகை தான் தலைமறைவு ஜேவிபியின் தளமாக இருந்தது. அப்போது இரகசியமாகவும், தலைமறைவாகவும் இருந்த பலர் சந்திக்கும் இடமாகவும், ஜேவிபியை மீள கட்டியெழுப்பும் தளமாகவும் அந்த அலுவலகம் இயங்கியது. பின்னாளில் ஜேவிபியின் தலைவர்களாக அறியப்பட்டவர்கள் ஆரம்பத்தில் சந்தித்துக்கொள்ளும் இடமாக அது இருந்தது. அந்த அலுவகத்துக்குத் தேவையான தளபாடங்களை பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் செய்து அனுப்பினார்கள்.
எங்கள் “சரிநிகர்” பத்திரிகையின் அலுவலகம் அமைந்திருந்த கொள்ளுப்பிட்டி அலோ அவனியுவுக்கு அடுத்தத் தெருவில் தான் ஹிரு அலுவலகம் இருந்தது. பின்னேரங்களில் நான் அங்கே போய் விடுவேன். அங்கே வரும் ஆதரவாளர்கள் பலர் என்னைப் போலவே போகும் போது அரிசி, பால்மா, சீனி, பருப்பு, கருவாடு, தேயிலை போன்றவற்றை கொண்டுசென்று வழங்குவார்கள். அங்கேயே சமையலை முடித்துக்கொண்டு அங்கேயே தங்கி வாழ்ந்த பத்திரிகையாளர்கள் இருந்தார்கள். விமல் வீரவன்சவும் அங்கே தான் தங்கினார். பின்னேரங்களில் புரட்சிகர பாடல்கள் மட்டுமன்றி ஜனரஞ்சக பாடல்களையும் பாடி மகிழ்வோம். விமல் வீரவன்ச தமிழ் பாடல் பாடுவார் என்று கூறினால் இன்று பலர் வியப்பார்கள். நான் அதை அருகில் அமர்ந்து கேட்டு லயித்திருக்கிறேன். ரோஹித்த பாஷன கிட்டார் இசைப்பார். இரவு எங்களுக்கு பத்திரிகைகள் பாயாகும். பத்திரிகைக் கட்டுகள் தலையணையாகும். சில நாட்கள் கொள்ளுப்பிட்டி காலிவீதியில் நடந்தே திரிந்து வீதியோர மலிவு விலை மதிய உணவைக் கண்டுபிடித்து வேண்டி வந்து பலரும் பங்குபோட்டு உண்டிருக்கிறோம். நானும் விமல் வீரவன்சவும் சேர்ந்து எழுதிய தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள், கைது, காணாமல் போதள் பற்றிய கட்டுரை ஒரு முறை இரண்டு பக்க நடுக்கட்டுரையாக வெளிவந்தது.
ஹிரு பத்திரிகை தான் ஜேவிபியை 1993இல் அரசியலுக்கு மீண்டும் இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தது. ஜே.வி.பிக்குள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினை பற்றிய விவாதம் நடந்தது. கொள்கை ரீதியாக எடுத்து முடிக்க வேண்டிய முக்கிய விவாதமாக அது இருந்தது.
சுயநிர்ணய உரிமைக்கு எதிராகவும், ஆதரவாகவும் அணிகள் பிரிந்தன. எதிரான அணியில் விமல் வீரவன்ச போன்றோர் இருந்தார்கள். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருந்த அணி கட்சியில் இருந்து வெளியேறியது. வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் "ஹிரு" ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
“தமிழ் மக்களின் விடுதலையின்றி இலங்கையில் புரட்சிகர மாற்றம் சாத்தியமில்லை” என்கிற முடிவில் அவர்கள் இருந்தார்கள். ஜே.வி.பிக்கு இருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர் "ஹிரு"வுடன் கைகோர்த்து இயங்கினார்கள்.
1996இல் நிதி நிருக்கடி காரணமாக சில மாதங்கள் நின்றுபோனது. பின்னர் சஞ்சிகையாக வெளிவந்தது. சஞ்சிகையாக வெளிவந்த போது அது ஒரு தத்துவார்த்த விவாதங்களை நிகழ்த்தும் முக்கிய பத்திரிகையாக வடிவமெடுத்தது. குறிப்பாக மாக்சியத்தை இன்றைய நிலையில் எப்படி கையாள்வது என்பது பற்றிய சர்வதேச விவாதங்களை இலங்கை உதாரணங்களோடு உரையாடினார்கள்.
93க்குப் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதிகமாக சிங்கள மக்களுக்கு வெளிக்கொணர்ந்த பத்திரிகையாக "ஹிரு" விளங்கியது. தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அவர்கள் பல மக்கள் இயக்கங்களையும், முன்னணிகளையும் உருவாக்கினார்கள். பத்திரிகையாளர்களின் உரிமைக்காக பூஷிக் பரம்பரை (Fucik Generation) என்கிற அமைப்பை உருவாக்கினார்கள். (ஜூலியஸ் பூசிக் செக்கோஸ்லோவேகியா கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். நாசிகளால் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்.) சந்திரிகா அரசாங்கத்தின் போது ஊடகவியலாளர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதியை எதிர்த்து “ஊடக சுதந்திரம்” கொல்லப்பட்டதை குறியீடாகக் கொண்டு ஒரு சவ ஊர்வலத்தை இந்த அமைப்பு நடத்தியது. ஊடக சுதந்திரத்திற்கான அப்படியொரு பெரிய ஊர்வலத்தை நான் இலங்கையில் கண்டதில்லை. அந்த ஊர்வல முடிவில் பொதுநூலக மண்டபத்தில் நிகழ்ந்த கூட்டத்தில் ஒரு பேச்சாளர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். என்னுடைய உரை மாத்திரம் தமிழில் இருந்தது.
காணாமல் போனோருக்கான ஒரு அமைப்பு, மனித உரிமைகளுக்கு, மாணவர்களுக்கு, எம்பிலிபிட்டிய பெற்றோருக்கு (புதைகுழி சம்பவம்), என பல அமைப்புகளை இயக்கினார்கள். அவர்களை புலனாய்வுத்துறை துரத்திக்கொண்டே இருந்தது. அவர்கள் தமது செயல்பாடுகளை இரகசியமான இடங்களில் நடத்தும் நிலைக்கு உள்ளானார்கள். தமிழ் மக்களுக்காக அவர்கள் கொடுத்த குரல்; அவர்களை புலிகளின் ஆதரவாளர்களாக அரசு சந்தேகம் கொண்டது. இறுதியில் அவர்கள் உண்மையிலேயே விடுதலைப் புலிகளுக்காக இயங்கத் தொடங்கினார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்கு இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் எப்போதோ தலைமை கொடுத்திருக்க வேண்டும் என்றார்கள். இனியாவது இருக்கின்ற உறுதியான ஒரு அமைப்புக்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் விடுதலைப் புலிகளுக்கு தமது ஆதரவை அளித்தார்கள்.
அவர்கள் எத்தனை தீவிரமாக இருந்தார்கள் என்றால் இறுதியில் அவர்கள் விடுதலைப் புலிகளால் வெளிக்கொணர்ந்த சிங்களப் பத்திரிகையான "தேதுன்ன" என்கிற பத்திரிகையை தலைமறைவாக நடத்துமளவுக்கு தீவிரம் பெற்றிருந்தார்கள். அவர்களைத் தான் மகிந்த அரசாங்கத்தில் “சிங்கள கொட்டி” என்று பெயர் சூட்டியது.
சமாதானக் காலத்தில் 2003 ஒக்டோபர் 29 அன்று கொழும்பில் நிகழ்த்தப்பட்ட தமிழ் - சிங்கள கலைக்கூடலை முன்னின்று நடத்தியவர்கள் இவர்கள். சிங்கள இனவாதிகள் வந்து அந்த கூட்டத்தை அடாவடித்தனத்துடன் களைத்தார்கள். அந்த கூட்டத்தில் நிகழ்ந்த சண்டையில் இரு தரப்பினரும் மோதி பலத்த காயங்களுக்கும் உள்ளானார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் சிவத்தம்பி, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பிரமாண்டமான கூட்டம். அப்படி ஒரு கூட்டம் அதற்கு முன்னரும் நடக்கவில்லை. பின்னரும் நடந்ததில்லை. மேடையேறி தாக்குதல் நிகழ்த்தியவர்களில் ஒருவர் ஞானசார தேரர். அடியும் வாங்கினார். அவர் அப்போது ஜாதிக ஹெல உறுமயவின் செயற்பாட்டாளர். அந்தக் கூட்டத்தில் தான் அவர் அறியப்பட்டார்.
மகிந்த ஆட்சியில் கோத்தபாயவின் வேட்டையில் இருந்து தப்பி அவர்கள் நாலா திசைகளுகுக்கும் தப்பியோட நேரிட்டது. இன்று அவர்களில் பெரும்பாலானோர் நாட்டில் இல்லை.
வெளிநாடுகளில் இருந்துகொண்டும் தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். இன்று ஜெனிவாவில் போர்க்குற்றச்சாட்டு பற்றிய விவாதங்களும் அதன் மூலம் இலங்கைக்கு இனப்பிரசினைக்கு அரசியல் தீர்வு காணும் படி அழுத்தமும் கொடுக்கப்படுகிறது என்றால் அதற்கு முதன்முதற் காரணம் இவர்களே. “சனல் 4”க்கு ஊடாக போரில் நிகழ்ந்த அநீதிகள் தொடர்பான வீடியோக்களை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தவர்கள் இவர்களே. அதன் பின்னரும் தொடர்ந்தும் பல ஆதாரங்களை வெளியிட்டு ஜெனிவாவுக்கு அழுத்தம் கொடுத்த முக்கிய சக்திகள் அவர்கள் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த சிங்களத் தோழர்கள் இப்படி பலர் தமிழர்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்.
பிற்குறிப்பு:மேலே முகப்பு படம் பொரளையில் இருந்த “லக்திவ” அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். நின்று கொண்டிருப்பவர்களில் முகத்தைப் பொத்திக்கொண்டு இருப்பது விமல் வீரவன்ச, பின்னர் தர்மசிறி காரியவசம், வினி ஹெட்டிகொட (சிறந்த கேலிச்சித்திர ஊடகர், சிங்கள ஊடகங்களில் மதிக்கப்படுபவர்), சுனில் மாதவ பிரேமதிலக்க (இன்றும் சிங்கள பத்திரிகை உலகம் பெரிதும் மதிக்கும் ஒருவர், பல புரட்சிகரமான நூல்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்தவர்), டலஸ் அலஹப்பெரும (தற்போது மகிந்த அணியின் முக்கிய பேச்சாளராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்.), சுதத் கஹதிவுல்வெவ,
அமர்ந்திருப்பவர்கள்: ரோஹித்த பாஷன (ஹிரு குழுவின் பிரதான பாத்திரம், நாட்டிலிருந்து தப்பி ஐரோப்பிய நாடொன்றில் வசித்து வருகிறார்.), மெனுவல் ஜயசேகர, திம்பிரியாகம பண்டார.
நன்றி - அரங்கம் பத்திரிகை
+ comments + 1 comments
Great service!
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...