Headlines News :
முகப்பு » » லயன் வாழ்க்கை மாற்றம் பெறுமா? - இரா.சிவலிங்கம்

லயன் வாழ்க்கை மாற்றம் பெறுமா? - இரா.சிவலிங்கம்

மலையகம்

தற்போது மலையகத்தில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் லயன் குடியிருப்புகளை அகற்றி விட்டு அவ்விடத்தில் புதிய வீடுகளை அமைக்கும் ஆலோசனைகள் முன்வைக்கப்படல் வேண்டும். 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 180 வருடங்களுக்கு மேலாக குடியிருக்கும் லயன் அறைகளுடன், அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் ஆராய்ந்துபார்த்தால் அதில் பலவிடயங்கள் மறைந்திருப்பதைக் காணலாம். லயத்து வாழ்க்கைமுறை என்பது தொடர்ந்து இம்மக்கள் மத்தியில் பல சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

இக்குடியிருப்புகளில் வாழ்ந்த பெரும்பாலானோர் வாழ்வுமுறை, வறுமை, நோய், பிணி, துன்பம், சுகாதாரம், தொற்று நோய்கள், கலாசார சீர்கேடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்கள், போதிய வருமானமின்மை, குறைந்த வருமானத்தில் திருப்தி காணும் நிலை, மந்தபோசணை போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் கொண்ட ஒரு வாழ்க்கை முறையாகக் காணப்படுகின்றது. இந்த லயன் அமைப்பு முறையானது ஒற்றை இரட்டை வரிசை லயன் என அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் (வரிசையில்) 12 லயன் அறைகளையும், இரண்டுவரிசையில் 24 லயன் அறைகளையும் கொண்டுள்ளன. இதில் ஒரு அறையின் நீளம், அகலம் 12x10 (120சதுர அடி) என்றுஅளவுதிட்டத்தில் ஆங்கிலேயர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வாழிடங்கள் ஆகும்.

ஒரு லயன் அறையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 57 பேர் வரை வாழ்கின்றார்கள். குறிப்பாக தாய், தந்தை, சிறுவர்கள், குழந்தைகள், பெரியோர்கள், பெண்பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளர்கள், கல்விகற்கும் பிள்ளைகள், திருமணவயது இளைஞர்கள், யுவதிகள், பருவவயதை தொடும் பிள்ளைகள் இந்தச் சிறிய இடப்பரப்பில் தினமும் தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுகின்றார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் தங்களுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யும்போது ஏற்படும் கடினங்கள் மிகமிக அதிகமாகும். இந்த 120 சதுர அடிப்பரப்பில் குடும்பத்திலுள்ள அனைவரும் உறங்குவதற்கும்,உடைமாற்றுவதற்கும், குடும்பம் நடத்துவதற்கும் தங்களுடைய அத்தியாவசியப் பொருட்களை வைப்பதற்கும், விறகு சேமிப்பதற்கும், செல்லபிராணிகள் வளர்ப்பதற்கும், வீட்டில் நடைபெறும் சுக துக்க நிகழ்வுகளுக்கும், விழாக்களுக்கும் என்று இந்தச் சிறிய இடப்பரப்பையே பயன்படுத்த வேண்டும். சர்வதேச ரீதியாக ஒரு தனிமனிதனுக்கு 46 சதுர அடி தேவையெனக் கூறப்படுகின்றது. இருப்பினும் இதில் வாழுகின்ற ஒவ்வொருவரும் தினமும் அனுபவிக்கும் பிரச்சினைகள் ஒன்றுக்குமேற்பட்டதாகக் காணப்படுகின்றதை அவதானிக்கலாம்.

உதாரணமாக ஒரு கர்ப்பிணித் தாயை எடுத்துக்கொண்டால் இக்காலத்தில் மிகவும் கவனமாகவும்,சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் அவர் பராமரிக்கப்படல் வேண்டும். ஆனால், அவர்களுக்குத் தேவைப்படும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் லயன் அமைப்பிலே இல்லை என்றே கூறலாம். குறிப்பாக, இவர்கள் குளிப்பதற்கு தங்களுடைய வீட்டு முற்றத்தையே பயன்படுத்துகின்றார்கள். குழந்தை பிறந்த பின்பும் குழந்தையையும் தாயையும் இதே இடத்திலேயே எவ்வித பாதுகாப்பும் இன்றி இவர்களின் சகல நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகின்றார்கள். எனவே தாய் கர்ப்பமாக இருக்கும்போது கருவில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய நல்ல ஆரோக்கியமான விடயங்கள் இவ்வீட்டுச் சூழலில் கிடைப்பது இல்லை. பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தால் தனியான அறையில் அவர்களை அமர்த்த வேண்டும் என்பது தமிழர் பாரம்பரியம். ஆனால் இவர்களுக்கு இருக்கின்றதோ ஓர் அறை இதில் தனி அறைக்கு எங்கே போவது? ஆனால், லயன் அமைப்பு முறையில் சமய சம்பிரதாயங்களுக்கு இடமில்லை.

கல்வி கற்கின்ற மாணவர்கள் இருக்கின்ற வீடுகளில் கற்பதற்காக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தொடர் லயன் அறைகள், இரைச்சல், படிக்கின்ற சூழல் இன்மை, வீட்டுச் சூழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஒரு சில மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள். இவர்களைச் சமூகத்தில் உள்ள அனைவரும் பாராட்டி ஊக்குவிக்கவேண்டும்

இச்சூழ்நிலையில் வாழ்ந்து பழக்கப்படாதவர்களுக்கு சில விடயங்கள் சாதாரண விடயமாகவும் இருக்கமுடியும். ஆனால் இச்சூழ்நிலையில் கடந்த பல தசாப்தங்களாக வாழ்கின்ற மக்களின் துன்பங்களும் வேதனைகளும் ஏராளம். இதற்கு யார் பொறுப்பு என வினா எழுப்பப்படும்போது விடைகள் மிக இலகுவாக கிடைக்காது என்பது உறுதி. இதற்குக் காரணகர்த்தாக்கள் ஆங்கிலேயர்களா? இம்மக்களா? அல்லது தோட்ட நிர்வாகங்களா? அரசாங்கமா? இவர்கள் சார்ந்து இருக்கின்ற தொழில் சங்கங்களா?

இவ்வாறு லயன் காம்பிராக்களில் வாழ்கின்ற மக்களில் புதிதாக திருமணம் முடித்தவர்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது. இவர்கள் சுதந்திரமாகப் பழகவும் வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்கவும் முடியாத சூழ்நிலையும் இந்த குடும்ப அமைப்பில் உள்ளது. இவர்கள் பிறந்ததற்காக வாழ்கின்றவர்களாகத் தங்களுடைய வாழ்க்கை கோலத்தை அமைத்துக் கொண்டுள்ளார்கள் என்பது மட்டும் தெளிவு. அனைவரும் ஒரே வீட்டில் வாழ்கின்றதால் சிறுவர்கள் மிகவிரைவாகவே சில ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கவழக்கங்களுக்கு ஆட்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

சிறுவர் துஷ்பிரயோகம் நெறிபிறழ்வான நடத்தை சிறுவயதிலேயே கூடாத பழக்கவழக்கங்கள் போன்றவற்றை பழகும் இடமாக இவ் லயத்து அமைப்புமுறை உள்ளது. இதனால் இதனை மாற்றியமைக்கவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். வயதுவந்த இளைஞர் யுவதிகள் தங்களுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு வரும்போது அவர்களை நல்லமுறையில் உபசரிக்க முடியாத நிலையும், இடப் பிரச்சினையும் காணப்படுகின்றது. இவ்வாறான நேரங்களிலும், திருமண வைபவம், மரண வீடுகள் நிகழும் போதும் பக்கத்து வீட்டார்களின் வீடுகளைப் பாவிக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முழு லயமும் ஒரு வீடுபோல இருக்கும். மலையகப் பிரதேசத்தை சொர்க்கம் என்று கூறிய வெளிநாட்டு அறிஞர்களும் இருந்தார்கள். ஆனால் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையானது அதற்கு முரணாகக் காணப்படுகின்றதை அவதானிக்கலாம். எனவே இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை தேசிய மட்ட சராசரி நிலைகளோடு எடுத்துச்செல்லக் கூடியவகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் அவசியம். மட்டுமன்றி புதிய வீடமைப்புத் திட்டங்களை இச்சமூகம் வரவேற்கும் அதேவேளை பல வருடங்களாக மலையகத்தின் அடையாளச்சின்னங்களாக இருந்து வரும் லயன் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கைகளையும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates