Headlines News :
முகப்பு » , , , , , » ஜே.வி.பி: 83 கலவரத்தின் பலிக்கடா - என்.சரவணன்

ஜே.வி.பி: 83 கலவரத்தின் பலிக்கடா - என்.சரவணன்


83 கலவரம் ஒரு கலவரத்தை மாத்திரம் நடத்தவில்லை. இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னொமொரு பேரழிவுக்கான அத்திவாரத்தயும் இட்டது. இங்கு வடக்கைக் குறிப்பிடவில்லை. தெற்கைத் தான் குறிப்பிடுகிறேன்.

83 இனப்படுகொலை தொடர்பாக உலகக் கண்டனங்களிலிருந்து தப்புவதற்கு ஜே.ஆருக்கு ஒரே வழி வேறு சக்திகளிடம் பழியைப் போட்டுவிடுவதே. இதன் மூலம் அரசாங்கம் தமது அரசியல் எதிரிகளை நசுக்கி ஓரங்கட்டி, அரசியல் எதிரிகளை அரசியல் அரங்கிலிருந்து துடைத்தெறிய முயற்சித்தார்.

77க்குப் பின் அப்போது தான் மீளவும் ஜனநாயக அரசியலுக்கு பிரவேசித்து மக்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கிய ஜே.வி.பியையும், பலவீனமுற்றுகொண்டிருந்த பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் வெறும் சின்னக் கட்சியாக இருந்த ந.ச.ச.கவையும் சேர்த்து தடை செய்தது அரசாங்கம்.

83 காலப்பகுதியை எடுத்துக் கொண்டால் இடதுசாரிக் கட்சிகளின் பொதுப் போக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானதாகவும், தமிழ் மக்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ளாத போக்கும் தலை தூக்கியிருந்த போதும் நேரடியாக தமிழர் எதிர்ப்பு போக்கை அவர்கள் கைகொள்ளவில்லை. அப்படியிருக்க இந்தக் கலவரத்திற்கு அக்கட்சிகள் தான் காரணமென பழிபோடுமளவுக்கு சான்றுகள் இல்லாதபோதும் ஜே.ஆர் அதைச் செய்யத் துணிந்தார் என்றால் 83 கலவரம் அவரை எந்தளவு அரசியல் குருட்டுத் தனத்துக்கு இட்டுச் சென்றிருந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அரசாங்கத்தால் எந்த சாட்சியத்தையும் முன்வைக்க முடியவில்லை. எழுந்தமானமான குற்றச்சாட்டை சுமத்தி ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் மீது இன அழிப்புப் பழியைப் போட்டு தாம் தப்புவிக்கும் முடிவுக்கு வந்தது ஜூலை 29ஆம் திகதி தான்.

தடை அறிவிப்பு

1983 யூலை 30 அன்று வெளியான வரத்தமானியின் மூலம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), நவ சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுமே, நடைபெற்ற கலவரங்களுக்குக் காரணமென்றும், அவற்றை அவசரகால நிலை நிறைவடையும் வரை, தடை செய்வதாகவும், குறித்த கட்சிகளோடு எவ்வகையான தொடர்பையேனும் பேணுவோர் அல்லது குறித்த கட்சியினர் பற்றித் தகவல் வழங்காது மறைப்போர், மரண தண்டனை, ஆயுள் தண்டனை, சிவில் உரிமைகளைப் பறித்தல் உள்ளிட்ட கடுந்தண்டனைகளுக்கு ஆளாவார்கள் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தது.

இந்தத் தடை வெளியானதோடு அன்றைய அமைச்சரவை பேச்சாளரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அறிவித்தலை விடுத்தார். அதன் படி

யூலை கலவரத்திற்கு சிங்கள தமிழ் கலவரத்தை விட பாரதூரமான சதித்திட்டம் பின்னணியில் இருந்தது என்றும் நான்கு கட்டங்களாக அவை நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டிருந்தது என்றும் அறிவித்தார். முதலாவது கட்டம்; தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் இனக்கலவரத்தை உண்டுபண்ணி பரஸ்பர ஆத்திர உணர்ச்சியை ஏற்படுத்துவது. இரண்டாவது கட்டமாக சிங்கள-முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ணுவது,  மொன்றாவது கட்டம் பௌத்த – கிறிஸ்தவ முரண்பாடுகளை விளைவித்து சிங்கள மக்களுக்குள்ளேயே சிக்கலை ஏற்படுத்துவது, நான்காவது கட்டம் பாதுகாப்புத் துறைக்குள் பிளவுகளை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவது. இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் அந்நிய நாட்டுச் சதியும் உண்டு என்றும், அவர்கள் வடக்கிலுள்ள தமிழ் பயங்கரவாதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றும் அவரது ஊடகப் பேச்சில் வெளிப்படுத்தினார். வதந்திகளை நம்பாமல், பரப்பாமல், இந்த நேரத்தில் அரசாங்கத்தை ஆதரித்து நிற்குமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொள்வதாக இறுதியில் வேண்டுகோள் விடுத்தார் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ்.

அரச பயங்கரவாத வன்செயலை மூடி மறைத்து கற்பனா பூர்வமான குற்றச்சாட்டுக்களையும், வதந்திகளையும் பரப்பிய அரசு வதந்திகளை பரப்புவதையும், அட்டூழியங்களையும் புறச்சக்திகள் மீது சுமத்திவிட்டு பொறுப்புள்ள அரசாங்கமாக காட்ட பிரயத்தனப்பட்டது.

அதுவரை சுதந்திரக் கட்சிக்கு ஆரம்பத்திலிருந்தே பக்க துணையாக இருந்து வந்த இடதுசாரிக் கட்சிகளையும் அதே போல ஏதாவது வழியைக் கையாண்டு அழிக்க சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தது அரசாங்கம். 83 கலவரத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டது. அந்த வகையில் கொம்யூனிஸ்ட் கட்சியையும் ஒரு வழி பண்ணியது.

அன்றைய கெடுபிடிப்போரில் அமெரிக்க மற்றும் மேற்குல முதலாளித்துவ சார்பை வெளிக்காட்டுவதற்காகவும், சர்வதேச ரீதியில் தம்மை ரஷ்ய சார்பு சக்தியில்லை என்பதைக் காண்பிப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். இடது சாரிக் கட்சிகளின் மீதான தடையைக் காண்பித்து அமெரிக்கா, பிரித்தானியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற ஏகாதிபத்திய முகாமிடம் உதவி கோரியதும் இந்த வகைப்பட்டது தான். இடதுசாரிகள் மீது நெடுங்காலமாக ஜே.ஆருக்கு இருந்து வந்த ஒவ்வாமைக்கு (அலர்ஜி) உடனடி-தற்காலிக மருந்தாக இந்தத் தடையைப் பயன்படுத்திக் கொண்டார் என்றே இன்னொருவகையில் கூறவேண்டும்.


ஜே.வி.பி நிரபராதி!?

குறைந்தபட்சம் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பழி சுமத்தப்பட்டிருந்த அந்த மூன்று இடது சாரிக் கட்சிகளின் மீதாவது முறைப்படி விசாரணை செய்து சாட்சியங்களுடன் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் அதெப்படி செய்ய முடியும்.

இடதுசாரிக் கட்சிகளை தடை செய்ததோடு கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்று 31 பேரின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதுடன், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம். ஜே.வி.பி.யின் அன்றைய பொதுச் செயலாளர் லயனல் போபகே, உட்பட 30 பேர் கைதானார்கள். கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கைதானார்கள். ரோகண விஜேவீர, கமநாயக்க போன்றரின் தலைகளுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் சரணடைந்தனர். இந்த நடவடிக்கை இந்த மூன்று கட்சிகளும் தலைமறைவு அரசியலுக்குத் தள்ளப்பட்டது. 6 மாதங்களின் பின்னர் ந.ச.ச.க., கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தார்கள். வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் தலைமறைவாக மறைந்து வாழ்ந்து பின்னர் விஜய குமாரதுங்கவுடன் சென்று பொலிசில் சரணடைந்தார்கள்.

இந்தத்  தடை பற்றிய அரசின் நியாயங்கள் வெற்றியளிக்காது போகவே ந.ச.ச.க. மற்றும் கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியன மீதான தடைகள் நீக்கப்பட்டன. அப்படி நீக்கப்பட்டமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது அக் அக்கட்சிகளுக்கு கலவரத்துடன் தொடர்பில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது போலவும் ஜே.வி.பிக்கு நிரூபிக்கப்படவில்லை என்பது போலவும் அரசாங்கம் காட்டிக்கொண்டது. ஆகவே ஜே.வி.பி. மீதான தடையை மட்டும் அரசாங்கம் நீக்கவில்லை. 

தமது கட்சியின் மீதான தடையை நீக்கக் கோரி விஜேவீர பல முறை ஜே.ஆருக்கு கடிதம் எழுதியிருந்த போதும் அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஜே.வி.பி தலைமறைவு அரசியலுக்கு தள்ளப்பட்டது. காலப் போக்கில் ஜே.வி.பியினர் மீதான அடக்குமுறையும் கட்டவிழ்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜே.வி.பி.யினர் தமது தற்காப்புக்காக ஆயுதபாணிகளாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர்.

சர்வஜன வாக்கெடுப்பு முறைகேடானது என்று ஜேவிபி தொடுத்த வழக்கு ஜே.வி.பிக்கு சாதகமாக சென்று கொண்டிருந்தது. அந்த வழக்கில் ஜே.வி.பி வெற்றிபெற்றால் அரசாங்கத்துக்கு அது மிகப் பெரும் அவமானமாகவும், தோல்வியாகவும் முடியும். அரசாங்கம் கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தலுக்குப் போக நேரிடும். ஆக, ஜே.வி.பி தடை செய்யப்பட்டதன் மூலம் அவர்களை தலைமறைவுக்கு அனுப்பி வழக்கிலிருந்து தப்பியது அரசாங்கம்.

ஒரு வருடத்துக்குப் பின்னர் அத்தேர்தல் பற்றி தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் விஜேவீர முன்வைத்திருந்த பல குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டிருந்தன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இறுதியில் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சிக்கு வித்திட்டு 60,000கும் மேற்பட்ட இளைஞர்களை காவு கொடுத்தது அரசாங்கம்.

நன்றி - அரங்கம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates