Headlines News :
முகப்பு » , , , , » 1982: முதலாவது ஜனாதிபதித் தேர்தல் என்.சரவணன்

1982: முதலாவது ஜனாதிபதித் தேர்தல் என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 30

1982 ஆம் ஆண்டு இரண்டு முக்கிய தேர்தல்களை இரு மாத இடைவெளியில் நடத்தியது அரசாங்கம். அரசாங்கம் பதவியேற்று 5 ஆண்டுகளைக் கடந்திருந்தது.

எதிர்க்கட்சியிடமிருந்தும், தமிழ் கட்சிகளிடமிருந்தும் தற்காத்து ஆட்சியை நீடிப்பதற்கான சூழ்ச்சி அது. 78இல் கொணரப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அது நடத்தப்பட்டது. தேர்தல் முறைகேடுகளில் அரசாங்கம் தாரளமாக ஈடுபட்டது.  

அரசியலமைப்பின் படி 1978 பெப்ரவரி 04  அன்று  இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். பதவியேற்றுக்கொண்டார்.

அரசியலமைப்பின் ஆம் சரத்தின் மூன்றாம் பிரிவின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்குக் குறையாமலும் இரண்டு மாதத்துக்குக் கூடாத காலப்பகுதியிலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜே.ஆர்.  தான் நினைத்த வேளையில் அத தேர்தலை நடத்தவதற்கு முடியாத நிலைமை இருந்தது.  இந்த ஏற்பாட்டை மாற்ற வேண்டிய தேவை ஜே.ஆருக்கு வந்தது.

ஏனென்றால் பொதுத்தேர்தலையும் நடத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் பலமடைந்து வந்துகொண்டிருந்ததையும் ஜே.ஆரால் உணர முடிந்தது. குடியியல் உரிமை பறிக்கப்பட்டிருந்த சிறிமாவும் தனது சரிவில் இருந்து நிமிர்ந்துகொண்டிருந்தார். சுதந்திரக் கட்சி தலைதூக்கிவிட்டால் தனது கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏற்படக்கூடிய அபாயத்தையும் உணர்ந்திருந்தார். அதற்கு முன்னர் ஒரு வழியை மேற்கொண்டாக வேண்டும்.

ஜே.ஆரிடம் 5/6 பெரும்பான்மைப் பலம் இருந்தது.  அப்படிப்பட்ட பலத்தை அடுத்த தேர்தலில் பெற முடியாதுபோகும் என்பதையும் உணர்ந்து இருந்தார். அவரிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தது. அதைக் கவனமாக தக்கவைத்துக் கொண்டாலே ஆட்சியைப் பாதுகாக்க பல கைங்கரியங்களையும் செய்யலாம். 5/6 பெரும்பான்மை பலம் இருக்கும்போதே தனக்கு தேவையான அரசியலமைப்பு மாற்றங்களையும் கொண்டு வர முடியும். அரசியலமைப்பின் 30 (2) பிரிவின் பிரகாரம் ஜே.ஆரின் ஜனாதிபதிப் பதவி காலம் 1984 பெப்ரவரி  04 அன்று முடியவேண்டும்.

3வது திருத்தச் சட்டம் ஏன்?
ஆக அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைச் செய்து, தனது பதவிக் காலம் முடிவடையுமுன்னமே ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஜே.ஆர் முடிவெடுத்தார்.  அதனை செய்வதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகள் இடம்தராது. எனவே தான் 3வது திருத்தச் சட்டத்தை 26.08.1982 இல் கொண்டுவந்தார்.

பதவிக்காலம் முடிந்தும் இரண்டாவது பதவிக்காலத்துக்கான மக்களாணையை தேர்தல் மூலம் பெறுவதற்கான ஒரு பிரகடனமொன்றைச் செய்ய முடியும் என்பதே அந்த திருத்தம்.

இது மக்களின் இறைமையை மீறும் செயல் என்றும் இந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவுடன், மக்கள் தீர்ப்பையும் பெறவேண்டும் என்று கோரி சிவில் உரிமைகள் பாதுகாப்பு முன்னணி என்கிற அமைப்பு உயர் நீதிமன்றத்துக்கு ஒரு மனுவை கொடுத்தது. அது மக்களின் இறைமையைப் பாதிக்காது என்று தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம். 

இரண்டு வருடங்கள் மேலதிகமாக பதவியில் நீடிக்க முடிந்தும் கூட தனக்கு ஏதுவான புதிய திருத்தத்தை செய்து தேர்தலுக்குத் தயாரானார் ஜே.ஆர்.

இதற்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு பெரும் பிளவு நிகழ்ந்தது. மைத்திரிபால – அனுரா பண்டாரநாயக்க தலைமையில் தலைமையில் ஒரு குழுவும் சிறிமா தலைமையிலான ஒரு குழுவுமாக பிளவுபட்டிருந்தார்கள். சுதந்திரக் கட்சியும், அதன் சின்னமும், தலைமைக் காரியாலயமும் யாருக்குச் சொந்தம் என்கிற சண்டை நீதிமன்றம் வரை சென்றது. இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு ஒரு வாரம் இருக்கையில் 09.09.1982 அன்று சிறிமா குழுவினருக்கே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சாரும் என்று தீர்ப்பானது. இந்த பிளவை மேலும் மோசமடையச் செய்வதில் அரசாங்கமும் தனது பங்கை மேற்கொண்டது. இப்படி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் உள்ள சாதகத்தை ஜே. ஆர். உணர்ந்திருந்தார்.

ஜே.ஆருடன் இருப்பவர்கள் கொப்பேகடுவ, விஜேவீர, ரத்னசிறி விக்கிரமநாயக்க வேட்பு மனு தாக்கலின் போது
செப்டம்பர் 17 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன (ஐ.தே.க.), ஹெக்டர் கொப்பேகடுவ (ஸ்ரீ.ல.சு.க), வாசுதேவ நாணயக்கார (ந.ச.ச.க), கொல்வின் ஆர். டி சில்வா (ல.ச.ச.க), ஜீ.ஜீ.பொன்னம்பலம் (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), ரோகன விஜேவீர (ஜே.வி.பி) உட்பட 9 பேர் சமர்ப்பித்த வேட்புமனுக்களில் இந்த 6 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 சுயாதீன அபேட்சகர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஜே.வி.பி.யின் பாராளுமன்றவாத அரசியல் பிரவேசம் 1981மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின் மூலம் தொடங்கப்பட்டிருந்தது. அதேவேளை இந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜே.ஆரை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளின் போது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதற்கு ஜே.வி.பி பல கட்சிகளுடனும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அம்முயற்சி தோல்வியடைந்த நிலையில் விஜேவீர ஜே.வி.பி சார்பில் களமிறங்கினார்.

இது முதலாவது ஜனாதிபதித் தேர்தல். ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்களுக்கு புதிதாக இருந்தது. வழமையான பொதுத் தேர்தலை விட இது வேறு விதமாக அவர்களுக்கு இருந்தது. இலங்கை முழுவதும் ஒரே தேர்தல் தொகுதியாக கருதப்பட்டது. முதலாவது தடவையாக ஒரே இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது தடவையாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை மக்களுக்கு இதன் மூலம் அறிமுகமாகிறது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது விருப்பத்துக்குரியவர்கள் என்கிற விருப்புத் தெரிவு முறை அறிமுகமானது.

தேர்தலுக்கு முன்னரே அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தது. அந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. குறிப்பாக தமிழ் இயக்கங்கள் இந்தப் போக்கை வெறுத்தன.

தம்முடனான சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கும் கூட்டணியை மெதுவாக தமக்கு ஆதரவு தரும்படி கோரினார் ஜே.ஆர். அமிர்தலிங்கத்தை அந்த கோரிக்கை தர்மசங்கடத்தில் கொண்டு போய் நிறுத்தினாலும் தமிழ் மக்களின் எண்ணங்களை ஒரு கட்டத்திற்கு மேல் மீற முடியாத நிலை. 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கும் முடிவை எடுத்தது. தேர்தல் புறக்கணிப்பை கூட்டணி அறிவிக்காமல் ஜே.ஆருக்கு வாக்களிக்க கோரியிருந்தால் கூட்டணி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் போட்டியிட தீர்மானித்திருந்தார். வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியிலும் தமிழீழத்துக்கான மக்கள் ஆணையைப் பெற வேண்டும் என்றும், தமிழீழத்துக்கான மக்கள் ஆணையை பெற்ற கூட்டணி அதற்காக எதையும் செய்யவில்லை என்றும் கூறி அதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாக குமார் பொன்னம்பலம் அறிவித்தார்.

இந்தத் தேர்தலில் குட்டிமணியை கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை இன்னொரு புறம் இருந்தது. டெலோ இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான குட்டிமணி என்று பலராலும் அறியப்பட்ட  செல்வராஜா யோகசந்திரன் பொலிசார் மீதான தாக்குதல், வங்கிக் கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த நிலையில் 01.04.1981அன்று படகொன்றில் தமிழகத்துக்கு செல்ல முயற்சிக்கும் போது தங்கத்துரை, தேவன் ஆகியோருடன் சேர்த்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாகியிருந்தார்கள் அவர்கள். குட்டிமணி ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்ற 13.08.1982 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. குட்டிமணி நீதிமன்றத்தில் ஆற்றிய உரை பிரசித்தமானது.

எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு வாக்குமூலத்தை வழங்கினார்கள் என்பதையும் அதில் அவர் விளக்கினார். தான் சிங்கள மக்களின் மக்களின் எதிரி இல்லை என்பதையும் இந்த பயங்கரவாத சட்டம் நாளை சிங்கள இளைஞர்களையும் பாதிக்கும் என்பதையும் தெரிவித்த அவர் தனது இறுதி வேண்டுகோளையும் முன்வைத்தார்.

“என்னை தமிழீழத்திலேயே தூக்கிலிட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும். என்னுடைய கண்கள், கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நனவாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.


குட்டிமணி வேட்பாளராக..!?
இந்த நிலையில் தான் ஜனாதிபதி வேட்பாளராக குட்டிமணியை தெரிவு செய்யவேண்டும் என்கிற அழுத்தம் கூட்டணிக்குள் எழுந்தது. 78 அரசியல் யாப்பை புறக்கணித்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலையும் நிராகரித்துத் தான் ஆக வேண்டும் என்று அமிர்தலிங்கம் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நேரத்தில் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு இறந்துபோனார். வட்டுக்கோட்டை தொகுதியின்  அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கு குட்டிமணியை தெரிவு செய்யும் முடிவை கூட்டணி 14.10.1982 அன்று எடுத்தத்துடன் அதை தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்தது.

குடிமணியை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தோம் என்பது தொடர்பில் கூட்டணி வெளியிட்ட நீண்ட அறிக்கையில்..

“...குட்டிமணியின் நியமனமானது நாடெங்கிலும் அவ்வப்போது அரசாங்க முகவர்களான பொலிஸாரினாலும் அரசாங்கப் படைகளினாலும் தமிழ் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரசாங்க பயங்கரவாதத்துக்கு எதிரான எதிர்ப்புக்குரலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.   

மேலும், எல்லா நியாயங்களுக்கும் முரணாக ஜூரி முறை வழக்காடலை நிராகரிக்கும், நீண்ட தடுத்துவைப்பை ஏற்படுத்தும், ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளும், அதற்காக தமிழ் இளைஞர்களைப் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் கொடூரச் சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானதொரு அடையாள நடவடிக்கையாக இந்நியமனத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.

அத்தோடு, குட்டிமணி மற்றும் ஜெகன் மீது விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான குரலாகவும் இந்நியமனத்தைப் பார்க்கிறோம். மேலும், ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதற்காக பனாகொடை இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம் மற்றும் குருநகர் இராணுவ முகாம் ஆகியவற்றில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான குரலாகவும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்த நியமனத்தைக் காண்கிறது.

மேலும், தமிழ் இளைஞர்கள் அனைவரையும் அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கை எதிர்த்து அரசாங்கத்துக்கு நாம் வழங்கும் அழுத்தமாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்நியமனத்தைக் காண்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்தது.

ஆனால் மரண தண்டனைக் விதிக்கப்பட்ட கைதி நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு சிறைச்சாலை ஆணையாளர் அனுமது கொடுக்க மறுத்தார்.

குட்டிமணி நாடாளுமன்ற உறுப்பினராக தான் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு அனுமதி கோரி மேன்முறையீடு செய்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அது தொடர்பில் உத்தரவிடும் அதிகாரம் இல்லையென்று சிறைச்சாலை தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியில் குட்டிமணியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

நியமனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவேண்டும். அந்த மூன்று மாதங்கள் நிறைவடையுமுன் அந்த நியமனத்திலிருந்து விலகிக்கொள்வதாக குட்டிமணி அறிவித்தார்.

குட்டிமணியை பாராளுமன்ற உறுப்பினராக ஆக்குவதில் உள்ள சகல சட்டச் சிக்கல்களையும் ஒரு தேர்ந்த வழக்கறிஞரான அமிர்தலிங்கம் அறிந்திருந்தும் அவர் இந்த விளையாட்டில் இறங்கியது ஒரு அரசியல் நாடகமென பரவலாக விமர்சிக்கப்பட்டது.

புறக்கணிப்பின் சாதக பாதகம்
ஜனாதிபதித் தேர்தலில் தம்மால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்திருந்தாலும் ஒரு அடையாள நிமித்தம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதே இலக்காக இருந்தது. அது தவிர ஒரு தேர்தல் வந்துவிட்டாலே தேர்தல் காலத்தில் மக்களிடம் சென்று கொள்கைப் பிரசாரங்கள் செய்வதற்கான பல வாய்ப்புகள் திறக்கும். அந்த வாய்ப்புக்காகவே பாராளுமன்றப் பாதையை நிராகரிப்பவர்கள் கூட தேர்தலில் பங்குபற்றுவதாக அறிவித்துவிட்டு அதனை பயன்படுத்திக்கொள்வது வழக்கம்.

ஜே.ஆர். தனது வெற்றிக்காக ஊடகங்களை முழு அளவில் பயன்படுத்தினார். குறிப்பாக அரச வானொலி, தொலைகாட்சி, லேக் ஹவுஸ் நிறுவன பத்திரிகைகள் அனைத்தும் தனது பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியதுடன் டைம்ஸ், தவச, உபாலி நிறுவன பத்திரிகைகளும் ஜே.ஆரை ஆதரித்து செயற்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி “ஜனதின”, கொம்யூனிஸ்ட் கட்சி “எத்த”, ஜே.வி.பி “நியமுவா” ஆகிய தமது சொந்தக் கட்சிப் பத்திரிகைகளில் தங்கியிருக்க நேரிட்டது. அவை தேசிய அளவில் பரவலாக போய் சேரக் கூடிய பத்திரிகைகளாக இருக்கவில்லை.

இறுதியில் கூட்டணி ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதாக கூட்டணி விலகி நின்றது. ஜே.ஆர் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜே.ஆரை ஆதரித்தது. சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் கொப்பேகடுவ தொண்டமானுக்கு எதிரான துவேசம் மிக்க பிரசாரங்களை மலையகப் பகுதிகளில் முன்னெடுத்தார்.

வடக்கில் ஒரேயொரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்ட ஜே.ஆர். தமிழ் மக்களிடம் நீங்கள் எவருக்கும் வாக்களியுங்கள் ஆனால் கட்டாயம் வாக்களியுங்கள் என்றார். கூட்டணி தேர்தலை புறக்கணிக்கக் கோரியிருந்தது. தான் சொள்வதற்கு எதிர்மாறாக தமிழ் மக்கள் இயங்குவார்கள் என்று ஜே.ஆர். நம்பியிருக்கலாம். ஏனென்றால் தமிழ் மக்கள் புறக்கணிப்பது தனக்கு வாய்ப்பானது என்று ஜே.ஆருக்கு தெரியும்.  தமிழ் மக்களின் வாக்குகள் எதிர் வேட்பாளர்களுக்கு போய் சேருவதைவிட, அந்த வாக்குகள் எவருக்கும் போய் சேராமல் இருப்பது தனக்கான வாக்கு வீதத்தை அதிகரிக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.


தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தால் அது ஜே.ஆருக்கு சாதகமாக அமையும் என்றும் அதுதான் கூட்டணிக்குத் தேவை என்றும் வாக்களிப்பில் மக்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றும் குமார் பொன்னம்பலம் பிரச்சாரம் செய்தார். 

இந்தத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 81 சதவீதமாக இருந்தது அரசுக்கு ஒரு வெற்றி. ஜே.ஆர். 52.91% வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். அதேவளை அதன் மறு அர்த்தம் முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலேயே அவர்க்கு எதிராக 47.09% வாக்களித்திருக்கிறார்கள் என்கிற உண்மையும் உணரப்படவேண்டும். 

இந்த தேர்தல் காலத்தில் தமிழ் பிரதேசங்களில் நிகழ்ந்த பல்வேறு அரச அட்டூழியங்கள் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் கொப்பேகடுவைக்கு அதிகமான வாக்குகளை அளித்து ஜே.ஆருக்கு தமது எதிர்ப்பலையை வெளிக்க்காட்டினர் தமிழ் மக்கள்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜே.ஆரை விட கொப்பேகடுவ அதிகமான வாக்குகளைப் பெற்றார். அங்கு ஜே.ஆர் 44,780 (20.54%), கொப்பேகடுவ 77,300 (35.46%) ஆகிய வீதங்களில் வாக்குகளைப் பெற்றார்கள். குமார் பொன்னம்பலத்துக்கே யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான வாக்குகளாக  87,263 (40.03%) கிடைத்தன. ஜே.ஆருக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்த மாவட்டம் நுவரெலிய மாவட்டம். அங்கு அவருக்கு 109,017 (63.10%) வாக்குகள் கிடைத்திருந்தன. தொண்டமானின்றி அந்த வெற்றி ஜே.ஆருக்கு சாத்தியப்பட்டிருக்காது.

அந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இன்று உயிருடன் இருப்பவர்கள் வாசுதேவ நாணயக்கார மட்டுமே.

ஜே.ஆரின் ஒரு இலக்கு முடிந்தது. இனி அடுத்த முக்கிய இலக்கொன்றுக்கு தயாரானார். அது இந்தத் தேர்தலை விட விசித்திரமானது. இலங்கையின் வரலாற்றில் ஒரே தடவை தான் நிகழ்ந்தது.

அடுத்த இதழில்...

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates