Headlines News :
முகப்பு » , » நாட்டார் தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங்கள் - தயானி விஜயகுமார்

நாட்டார் தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங்கள் - தயானி விஜயகுமார்

-தயானி விஜயகுமார் B.A (Hons) M.A (Reading)


மலையகத்தில் பெண் தெய்வ வழிபாட்டில் காட்டேறி மாரியம்மன்
நாட்டார் தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங்கள்

நாட்டுப்புற மக்களைப் பொறுத்தவரையில் நாட்டார் தெய்வ வழிபாடு என்பது மிக பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு நடைமுறையாக உள்ளது. அவற்றில் பெண் தெய்வ வழிபாடு என்பது அன்று தொட்டு இன்று வரை மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. 

நாட்டார் தெய்வங்கள் என அழைக்கப்படும் சிறுதெய்வ வழிபாடுகளில் பெண் தெய்வ வழிபாட்டில்  தாய்த் தெய்வங்கள், கன்னி தெய்வங்கள் என இரு பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகின்றது. தாய்த் தெய்வங்கள் எனும் வகைக்குள் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதியம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மாள் போன்ற தெய்வங்கள் உள்ளடக்கப்படுகின்றன. பெண்ணை தாய்மையின் வடிவமாக பார்த்தமையின் காரணமாகவும், சக்தியின் வடிவமாகவும் கருதுவதால் இத்தெய்வங்கள் அம்மனாக உருவகம் செய்து வழிபடப்படுகின்றது. கன்னி தெய்வங்கள் எனப்படும் போது திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் விபத்தினாலோ, கொலை செய்யப்பட்டடோ, தற்கொலை செய்து கொண்டோ இறக்கும் போது இந்த பெண்ணின் குடும்பத்தினர் அவளை கன்னி தெய்வமாக நினைத்து வழிபடும் போக்கு காணப்படுவதோடு அந்த கன்னி தெய்வத்தினை குல தெய்வமாகவும் வழிபடும் போக்கு இன்றும் காணப்படுகின்றது. அத்துடன் வீட்டு தெய்வம் எனப்படும் இல்லுறைத் தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இப்பெண் தெய்வ வழிபாட்டு முறைக்கான அடிப்படையை   தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலத்திலிருந்தே காணலாம். சங்க காலத்தில் வழிபடப்பட்ட கொற்றவை வழிபாட்டினை இதற்கு முன்னோடியாகக் குறிப்பிடலாம். அதனுடைய எச்சமாகவே இன்று வழிபடப்படும் பெண்தெய்வ வழிபாடுகள் அமைகின்றன. இப்பெண் தெய்வங்களை வழிபடும் போது எவ்வித தங்குதடையுமின்றி வழிபட வேண்டும். இல்லாவிட்டால் வேண்டுதல் நிறைவடையாது தெய்வம் கோபமடைந்து தீமை செய்யும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் நிலவுகின்றது. அத்துடன் இத்தெய்வங்களுக்கு நேர்த்திகடன்கள் செய்யும் நடைமுறையும் பின்பற்றப்படுகின்றது. 
மலையத்தில் பெண் தெய்வ வழிபாடு

மலையகத்தில் பெண் தெய்வ வழிபாட்டில்; தாய்த்தெய்வ வழிபாடே முதலிடம் பெறுகின்றது. அதில் குறிப்பாக, மாரியம்மன் வழிபாடு முக்கியமானதாகும். மலையகத்தில் வழிபடப்படுகின்ற சிறுதெய்வ வழிபாடுகளுள் மாரியம்மன் வழிபாடானது பொதுவாக எல்லா ஊர்களிலும் காணப்படுகின்றது.  மலையகத்தில் வழிபடப்படும் பெண் தெய்வ வழிபாடுகளாவன, காளியம்மன், காட்டேறியம்மன், பன்னீரம்மன், அங்காயி, மாரியம்மன், கன்னிமாரி, பிடாரி, பத்தினியம்மன், பேச்சியம்மன், உதிரக்காளி, ஏழு கன்னிமார், மோகினி  இவை போன்று இன்னும் பல தெய்வ வழிபாடுகளாகும். அரங்க நலங்கிள்ளி என்பவர் “பெண் தெய்வங்கள் அனைத்தும் ஆண் தெய்வங்களின் துணையுடனே படைக்கப்படுகின்றன” என்கின்றார்;. மேலும் இந்தப் பெண் தெய்வங்களை காவல் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் குலதெய்வங்கள் என இத்தெய்வங்களை வௌ;வேறு நோக்கம் கருதியே வழிபடுகின்றனர்.

மலையத்தில்  பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் வழிபாடு முதன்மை பெறுகின்றது. மாரியம்மனை மரத்தடியில் வைத்து வழிபாடும் நடைமுறைக் காணப்படுகின்றது.  மாரியானவள் மழையைத் தருபவளாகவும், செழிப்பைத் தருபவளாhகவும் எண்ணி வழிபடுகின்றனர்.  தற்போது மேல்நிலையாக்க சிந்தனையின் மூலம் மாரியம்மன் பெருந்தெய்வம் என்ற வகையில் வழிபடப்படுவதையும் காணலாம். இதனைப் போன்றே காளியம்மன் அச்சம் தரும் தெய்வமாகவும் பெண்களைத் தொடரும் தெய்வமாகவும் காணப்படுவதால் அதிலிருந்து பாதுகாப்பினைத் தேடும் நோக்கத்துடன் அவற்றுக்கு தேவையானவற்றை படையலாக வைத்து பலி கொடுக்கப்பட்டும்  வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்படுகின்றன.

இச்சிறுதெய்வங்கள் ஊர் எல்லையிலும், ஊரினுள்ளேயும் வைத்து வழிபடப்படுகின்றன. இப்பெண் தெய்வங்கள் அனைத்தும் அதிகமாக பெண்களை பின் தொடர்ந்து அவர்களை துன்புறுத்துபவையாகவும், அவர்களுக்கு தீமை செய்யக் கூடியதுமாகவே காணப்படுகின்றன. பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு பெண்களே அச்சமடையும் நிலையும் சமூகத்தில் காணப்படுகின்றது. பெண் தெய்வங்கள் பெரும்பாலும் அச்சம் தரக்கூடியதாகவும் அழிக்கும் ஆற்றல் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தினை பொறுத்தவரை ஒரு சில சிறுதெய்வ வழிபாடுகள் வழக்கிழந்தும் போய்விட்டன. பெண் தெய்வ வழிபாட்டில் கிராம தேவதைகளை வழிபடுகின்ற போக்கும் காணப்படுகின்றது. இந்த சிறு தெய்வ வழிபாடுகளில் காணப்படும் பெண் தெய்வங்களில் சில மயானத்திலும் சில நீர் நிலைகளிலும் இன்னும் சில மரத்தடி மற்றும் ஊர் எல்லையில் உறைவதையும் காணலாம்.

சாந்தகுணம் கொண்ட தெய்வங்களை ஊரினுள்ளேயும் அச்சத்தினை தரக்கூடிய தெய்வங்களை ஊருக்கு புறத்தேயும் வைத்து வழிபடுகின்றனர். பெண் தெய்வங்களை அவற்றின் பெயர்களைக் கொண்டே அதனுடைய  இயல்பு தன்மையை அறிந்துக் கொள்ளலாம். மாரியம்மன், பத்தினியம்மன், பன்னீரம்மன் போன்ற தெய்வங்களை அம்மனுடைய அவதாரமாக கருதி ஊரை பாதுகாக்கும் தெய்வங்களாகவும் மக்களுக்கு எவ்வித துன்பமும் இழைக்காத தெய்வங்களாகவும் கருதி ஊரினுள் வைத்து வழிபடுகின்றமையை குறிப்பிடலாம். காளி, உதிரக்காளி, அங்காயி, பிடாரி, காட்டேறி, மோகினி, கிராம தேவதைகள் போன்ற தெய்வங்களை அச்சம் தரக்கூடிய தெய்வங்களாகவும் மக்களுக்கு தீமை செய்பவையாகவும் மந்திரம் மற்றும் சூனியம் என்பவற்றுக்கு துணை நிற்கும் தெய்வங்களாகவும் கருதி ஊரின் காவல் தெய்வமாக  ஊருக்கு வெளியே வைத்து வழிபடுகின்றமையையும் குறிப்பிடலாம்.

காட்டேரி மாரியம்மன்  வழிபாடும் அதனுடன் தொடர்பான புராண கதைகளும்
வழிபாடு
காட்டேறி என்பதன் பொருள் “(காடு ூ ஏறி) என்பதாகும். அதாவது காட்டுக்கு ஏறியவர்கள் காட்டுக்குச் சென்று குடியேறியவர்கள்” என்று ச.பிலவேந்திரன் குறிப்பிடுகின்றார். உண்மையில் காட்டேறி என்பது சுடுகாட்டில்  உறையும் தெய்வம் என்றே பொருள்படும். பொதுவாக அச்சத்தினைத் தரக்கூடிய தெய்வங்களை உள்;ருக்குள் வழிபடுவதில்லை.  ஆனால் அச்சத்தினை தரக்கூடிய இத்தெய்வத்தினை மக்கள் ஊருக்குள் வழிபடுவதன் காரணமாகவும், மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தின் சென்றெகுலஸ் தோட்டத்தில் மாத்திரம் காட்டேறி அம்மனை வழிபடப்படுவதன் காரணமாகவும் பெண்தெய்வ வழிபாட்டில் காட்டேறியம்மன் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. அத்தோடு இலங்கையில் இரண்டு இடத்தில் மாத்திரம் இவ்வழிபாடு குறிப்பிட்டு கூறக்கூடிய அளவில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் தென்மராச்சியிலுள்ள பளை பிரதேசத்திலும் மலையகத்தில் சென்றெகுலஸ் தோட்டத்திலும் வழிபடப்படுகின்றமையை குறிப்பிடலாம்.

காட்டேறியம்மன் அச்சத்தினை தரக்கூடிய தெய்வமாக  காணப்படுவதனால் பெரும்பாலும் பாதுகாப்பு நோக்கிலேயே இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. காட்டேறியம்மன் வழிபாடானது இந்தியாவில்  சில இடங்களில் வழிபடப்படுகின்றது. குறிப்பாக புதுச்சேரி, திருச்சி, தஞ்சை, ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் ஆகிய இடங்களில் இவ்வழிபாடு சிறப்பிடம் பெறுகின்றது. அதனுடைய தொடர்ச்சியாகவே இலங்கையில் சென்றகுலஸ் தோட்டத்தில்  இவ்வழிபாடு இடம்பெறுவதைக் குறிப்பிடலாம்.

காட்டேறியம்மனுடைய இயல்பானது சூலுற்ற தாய்மார் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார் என்போரையும் குழந்தைகளையும் வலிந்து தாக்கும் எனக் குறிப்பிடப்படுகின்றது. காட்டேறியம்மனை குலதெய்வமாகவும், து~;டதெய்வமாகவும் வழிபடுகின்றார்கள். காட்டேறியம்மன் வழிபாடானது நாட்டார்த் தெய்வங்களுக்கே உரித்தான பண்புகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவையாவன,

  • தனியான ஆலயம் இல்லை. (மரத்தடி, மலையுச்சி, ஊர்எல்லை என்பவற்றில் உறையும்)
  • ஆகம விதிகளுக்கு புறம்பான பூசை முறைகள் நடைபெறல்.
  • மரத்தடியில் முக்கோண வடிவக்கல் போன்ற பதிவு காணப்படல்.
  • ஆடு, கோழி போன்றன பலியிடப்படல்.
  • குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வழிபடப்படல்.
  • பிடி மண்ணை அடிப்படையாக கொண்டு பரம்பரை பரம்பரையாக வழிபடப்படல்.


இவ்வாறான விடயங்களை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது காட்டேறியம்மனுக்கான வழிபாடானது முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

காட்டேறியம்மனை திருப்திபடுத்தும் நோக்கில் வருடத்திற்கு ஒரு முறை காட்டேறியம்மனுக்கான சென்றெகுலஸ் விழா நடைபெறுகின்றது. பொதுவாக வெயில் அதிகமாக காணப்படும் பங்குனி மாதத்தின் இறுதி காலப்பகுதியில் ஒவ்வொரு ஊரிலும் திருவிழா இடம்பெறுவது வழக்கமாகும். அதன் போதே சிறுதெய்வ வழிபாடான காட்டேறியம்மனுக்கான விழாவும் இடம்பெறுகின்றது. குறிப்பாக, சென்றெகுலஸ் தோட்டத்தினை பொறுத்தவரை ஊரின் திருவிழா இடம்பெறும் காலப்பகுதியில் இறுதி நாளன்று காட்டேறிக்கான விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

1934 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை வருடம் தோறும் தவறாது காட்டேறியம்மனுக்கான விழா இடம்பெறுகின்றது. இதன் காரணமாக ஆகமம் சாராத பெண் தெய்வ வழிபாட்டிலே காட்டேறியம்மன் போற்றக்கூடிய வழிபாடாக காணப்படுகின்றது. காட்டேறியம்மன் வழிபாட்டினை சில நம்பிக்கைகளின் அடிப்படையிலும் மக்கள் வழிபடுகின்றமையையும் காணக்கூடியதாக உள்ளது. திருமணமான பெண்களின் குழந்தைப்பேறு தொடர்பான நேர்த்திக்கடன்களும் செலுத்தப்படுகின்றன. அதாவது காட்டேறி என்பது து~;ட தெய்வமாக காணப்படுவதால் கருவிலுள்ள குழந்தைக்கு ஆபத்து எதுவும் நிகழாமல் இருப்பதற்கும் தாய்க்கும் எவ்வித துன்பமும் ஏற்படாமல் இருப்பதற்காகவும் நேர்த்திக்கடன் செலுத்தி மக்கள் வழிபடுகின்றார்கள். அத்தோடு நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாதவர்களும் நேர்த்திக்கடன்கள் வைப்பதோடு அது நிறைவேறினால் அதனை செலுத்துவதையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.

ஊரின் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கைகள் என்னும் போது, ஊரினை எல்லையில் இருந்து பாதுகாக்கும் தெய்வமாக  கருதி வழிபடுகின்றமை குறிப்பிடலாம். காட்டேறியம்மன் காவல் காப்பதால் ஊர் மக்களுக்கு எவ்வித துன்பமும் ஏற்படாது என்று மக்கள் தீவிரமாக நம்புகின்றார்கள். அத்தோடு எல்லா நேரத்திலும் காட்டேறியம்மன் தங்களை பாதுபாப்பதாகவும் எண்ணி அதற்காக காட்டேறியம்மனை திருப்தி படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் வருடா வருடம் காட்டேறியம்மனுக்கான வழிபாடுகளை நடத்துகின்றார்கள்.

குடும்ப பிரச்சினைகள் மற்றும் உறவுகளுக்கிடையிலான பிரச்சினைகள் என்பன தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையிலும் இவ்வழிபாடானது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நம்பிக்கைகளுக்காக நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படும் முறைகளாவன, பால், முட்டை, கோழி என்பனவற்றை வழங்குதல், கறுப்பு ஆடை, சலங்கை, வளையல்கள், தலைமுடி என்பவற்றை படையலாக வைத்தல், போன்ற முறைகளை குறிப்பிடலாம். காட்டேறியம்மன் வழிபாட்டின் போது காட்டேறியாக வேடமிட்டு நடித்துக் காட்டும் முறையும் காணப்படுகின்றது. எந்தவொரு சிறுதெய்வ வழிபாட்டிலும் இடம்பெறாத புதிய நடைமுறையாகவும் காரணப்படுவதால் காட்டேறியம்மன் வழிபாடு முக்கியத்துவம் பெறுகின்றது.

இவ்வழிபாட்டின் போது தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகளான தப்பு, உடுக்கு என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த தப்பு வாத்தியமானது இந்தியாவிலுள்ள பெரம்பூர் என்னும் இடத்திலிருந்து ஆரம்பக்காலத்தில் கொண்டுவரப்பட்டதாகும். அதனையே இன்றுவரை பயன்படுத்துகின்றார்கள். இவ்வாறான பல வித்தியாசமான அம்சங்களை கொண்டிருப்பதன் காரணமாகவும் மலையகத்தின் பெண் தெய்வ வழிபாட்டில் காட்டேறியம்மன் தனித்துவமான தெய்வமாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாகவும் காணப்படுகின்றது.

காட்டேறியம்மன் வழிபாட்டை தொடக்கி வைத்த பரம்பரையினரே அதனை தொடர்ந்து கொண்டு நடத்துவதனைக் காணலாம். இதற்கான காரணம் பழைய விடயங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அதனை கைவிட்டால் துன்பம் ஏற்படும் என்றும் அதன் மீது கொண்ட நம்பிக்கையும் மற்றும் காட்டேறி மீதான பயமும் தொடர்ந்து இவ்வழிபாட்டினை முறையாக கொண்டு நடத்துவதற்கு காரணமாகும்.

இவ்வாறே சென்றெகுலஸ் தோட்டத்திலும் பரம்பரை பரம்பரையாக காட்டேறியம்மன் வழிபாட்டினை கொண்டு நடத்துகின்றனர். அந்தவகையில் இத்தோட்டத்தில் இவ்வழிபாட்டினை தொடக்கி வைத்தவர் கருப்பண்ணன் கவுண்டர் என்பவர் ஆவார். அவருக்கு பின் அவருடைய மகன் செல்லக்குட்டி கவுண்டர் பின்னர் கிட்ணசாமி கவுண்டர் என்போர் தொடர்ந்து இவ்வழிபாட்டினை சிறப்பாக கொண்டு நடாத்தினார்கள். தற்போது காட்டேறியம்மன் வழிபாட்டினை கொண்டு நடத்துபவர்களாக பெரியசாமி கங்காணி, சுப்பிரமணியம் கங்காணி ஆகியோர் விளங்குகின்றனர்.

அத்துடன் காட்டேறியம்மன் வழிபாட்டில் தந்தைக்குப் பின் மகன் என்ற ரீதியில் நடாத்தி வருகின்றமையையும் குறிப்பிடலாம். தொடக்ககாலத்தில் காட்டேறியாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் நீண்ட காலமாக வேடமேற்று நடித்துவந்தார். இதற்குப் பின் கடந்த பத்து வருடங்களாக மாயழகு புஸ்பராஜ் என்பவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காட்டேறியம்மன் வழிபாட்டினை தவறாது நடத்துவதற்கு ஊர்மக்களன்  ஒத்துழைப்பும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.

சிறுதெய்வ வழிபாட்டு நடைமுறைகளிலிருந்தும் காட்டேறியம்மன் வழிபாடு வேறுபடுகின்றமையை குறிப்பிடலாம். பொதுவாக சிறுதெய்வ வழிபாடுகள் அந்தந்த தெய்வங்களின் உறைவிடங்களிலேயே இடம்பெறுவது வழக்கமாகும். அதாவது மரத்தடியில் பந்தல் இடல் ஆற்றங்கரைகளில் வழிபடல், ஊர் எல்லையில் வழிபடல் என்பவற்றை எடுத்துக்காட்டலாம். ஆனால் காட்டேறியம்மன் வழிபாடானது சற்று வித்தியாசமான முறையில் பெருந்தெய்வ ஆலயத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வழிபாட்டில் முனி, அம்மன் ஆகிய தெய்வங்களும் வழிபடப்படுகின்றன. அதாவது காட்டேறியம்மன் வழிபாடானது  முனீஸ்வரனுக்கான பூசையுடன் தொடங்கி அம்மனுக்கான பூசையுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதனடிப்படையில் நோக்கும்போது மலையக பெண்தெய்வ வழிபாட்டில் காட்டேறியம்மன் வழிபாடானது அதனுடைய குணாம்சங்கள், பூசை நடைமுறைகள் மற்றும் அதில் காணப்படும் சடங்கு சம்பிரதாயங்கள் என்பவற்றின் அப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பழைமையான சிறுதெய்வ வழிபாட்டு முறையாக விளங்குகின்றது எனலாம்.

புராணக் கதைகள்
காட்டேறியம்மன் பற்றி பல்வேறு வகையான கதை மரபுகள் நிலவுகின்றன. அந்தவகையில் காட்டேறி பற்றி வாய்மொழி மரபாக கூறப்பட்டு வருகின்ற கதைகளையும் நூல்களின் வாயிலாக கூறப்பட்டு வந்த கதை மரபுகளையும் காணப்படுகின்றன. ச.பிலவேந்திரன் என்பவர் தன்னுடைய “தமிழ் சிந்தனை மரபு” எனும்   நூலில் காட்டேறி தொடர்பான பல கதைகளை குறிப்பிடுகின்றார். காட்டேறியம்மனை அங்காளம்மனுடைய துணைத் தெய்வமாக கருதும் வழக்கமும் காணப்பட்டதாகவும் இதற்கான காரணம் வல்லாளக் கண்டன் என்ற அரக்கனின் மனைவியான நிசாசினி என்பவளை அவள் குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் அங்காளம்மன் தாயையும், குழந்தையையும் அழித்தார் என பிலவேந்தர் கூறுகிறார். அதாவது வல்லாள கண்டன் என்னும் அரக்கனும் அவனது சகோதரர்களும் அனைத்து தேவர்களையும் கடவுளர்களையும் கொடுமைப்படுத்தி வந்தனர். வல்லாள கண்டன் ஈஸ்வரனே தன்னுடைய மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். அதன் மூலம் மும்மூர்த்திகளையும் தனக்குப் பணிவிடை செய்ய வைக்க வேண்டும் என்றும் அடிமைப்படுத்த வேண்டும் என்றும் எண்ணியிருந்தான். இத்திட்டத்தினை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஈஸ்வரியே அங்காளம்மனாகப் பிறப்பெடுக்கின்றார். அவள் ஒரு மருத்துவிச்சியாக வருகின்றார். அவளே வல்லாள கண்டனின் மனைவி கருவுயிர்க்கும் காலத்தில் மருத்துவம் பார்ப்பதற்கு வருகின்றாள். மருத்துவிச்சி தாயையும் குழந்தையையும் அது பிறக்கும் முன்பாகவே கொன்று அழிக்கின்றாள். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே காட்டேறி அங்காளம்மனுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இவ்வாறு அவர்களை அழித்த போது அங்கு பெருகிய குருதி வெள்ளத்தினை போக்குவதற்காக அங்காளம்மன் தன்னுடன் துணைக்கு காட்டேறியம்மனை அழைத்துச் சென்றதாகவும் அங்கு பெருகிய இரத்தத்தினை காட்டேறியம்மன் பருகியதாகவும் அங்காளம்மனின் தோற்ற வரலாறு பற்றிய புராணக்கதையில் குறிப்பிடப்படுவதாக இவர் கூறுகின்றார். இந்த கதை மரபும் காட்டேறியின் உண்மை வாழ்வுடன் தொடர்புபடுவதாகவும் பிலவேந்திரன் கூறுகின்றார். அத்துடன் காட்டேறி மீமனித இயல்புகளுடன் தெய்வமாக  தோன்றியதாகவும்  குறிப்பிடுகின்றார்.

இதனைப் போலவே, காட்டேறியம்மனின் தோற்றம் பற்றி மற்றொரு புராண கதையும் நிலவுகின்றது. அதாவது, “காட்டேறி ஒரு காலத்தில் இப்புவியில் பிறந்து வாழ்ந்த ஒரு பெண் என்றும் இப்பெண் கருவுற்றிருந்த காலத்தில் குழந்தையைக் கருவுயிர்க்கும் போது து~;டர்களால் குழந்தையும் அவளும் கொலை செய்யப்பட்டவர்களாவும், இதனால் பூவுலக வாழ்வு இடையிலேயே தடைப்பட்டுக் கொடூரச் சாவு பெற்றவளாக இருந்திருக்கிறாள்.

இதன் காரணமாக நிறைவேறாத ஆசைகளுடன் மீவியல் களத்தில் கோபமுடன் ஓர் ஆவியாக உலவி வருகிறாள்”  என்றும் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் காட்டேறி மனித நிலையில் வாழ்ந்த பெண் எனக் கொள்ளலாம். இவ்வாறு காட்டேறியின் பூவுலக வாழ்க்கை முழுமையடையாது இடையிலேயே தடைப்பட்டு விட்டதால். மீவியல் களத்தில் கோபத்துடன் திரியும் காட்டேறியை கோபம், சாவு, அச்சம், வெறுப்பு போன்றவற்றின் குறியீடாகவே மக்கள் கருதுகின்றார்கள். பெரும்பாலான பண்பாட்டு விடயங்களில் காணப்படுவது போன்றே தமிழ்ப் பண்பாட்டிலும் கருப்பு நிறம் மேலே குறிப்பிட்ட பண்புகளின் அடையாளமாக காட்டப்படுகின்றது. இதன் காரணமாகவே, காட்டேறியம்மனுக்கான வழிபாட்டில் காட்டேறியாக வேடம் தரிப்பவர் கருப்பு வண்ணத்தைத் தன்மீது பூசிக்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு காட்டேறிக்கான படையல்களும்  கருப்பு நிறத்தில் அமைந்திருக்கின்றது. இவ்வாறான பல விடயங்களை ச.பிலவேந்திரன் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். 

மேற்கூறிய கதைகளின்  அடிப்படையில் காட்டேறிக்கு தெய்வத் தன்மை அளிக்கப் பெற்று காவல் தெய்வமாக வழிபடப்படுகின்றமையை காணலாம். இதன் காரணமாக து~;ட தெய்வமாகவும், தீங்கு விளைவிக்கும் தெய்வமாகவும் தீயவர்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட தெய்வமாகவும் கருதி வழிபடுகின்றார்கள் எனலாம். சு.சண்முகசுந்தரம் என்பவர் தன்னுயை நாட்டுப்புற தெய்வக்களஞ்சியம்” எனும் நூலில் “காட்டேறியானது முனீஸ்வரனின் மனைவி என்றும் அத்தோடு கறுப்பு வண்ணத்தில் வீற்றிருக்கும் அம்மன் என்ற தொன்மையான கதையையும்” குறிப்பிடுகின்றார்.

காட்டேறியம்மன் வழிபாடு இடம்பெறுகின்ற இடங்களில் மரபு வழியாக பேணப்படுகின்ற கதைகளும் காணப்படுகின்றன.   யாழ்ப்பாண தென்மராச்சியிலுள்ள பளை பிரதேசத்திலும் காட்டேறி வழிபாடு முக்கியம் பெறுகின்றது. அவர்களை இதனை அரக்கியம்மன் வழிபாடு என்றே கூறுகின்றார்கள். இங்கு பேசப்படுகின்ற கதை மரபானது சற்று வித்தியாசமானதாக உள்ளது. அதாவது உமை அம்மை தினமும் இரவில் சுடுகாட்டுக்குச் சென்று பிணங்களை தின்றதாகவும், அதனை கண்ட சிவபெருமான் இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உமையம்மை தினமும் செல்லும் வழியில் பெரிய பள்ளம் ஒன்றினை தோன்றி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. உமையம்மை செல்லும் வழியில் பள்ளம் இருப்பதனை அறியாது, உமை வழமைப் போலவே தான் சுடுகாட்டுக்கு செல்லும் போது சிவபெருமான் தோன்றிய பள்ளத்தில் விழுந்துவிடுகின்றார். அதன் காரணமாக கோபமடைந்து அந்த பள்ளத்திலேயே தங்கினார் எனவும் கூறப்படுகின்றது. இதனை நினைவு படுத்தும் வகையிலேயே அங்கு அரக்கி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கதையில் குறிப்பிட்டது போலவே பள்ளம் ஒன்றினைத் தோன்றி அதனை மெழுகி அதனுள்ளே வழிபாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு உமையே காட்டேறியாக கருதப்படுகின்றார்.  அத்துடன் காட்டேறியம்மன் ஊரினைக் காவல் காக்கும் தெய்வமாகவும் மக்களின் குறைகளை நீக்கும் தெய்வமாகவும் வழிபடப்படுகின்றது. இதனை விட சற்று வேறுபட்ட  விதமாக மலையகத்தில் காட்டேறியம்மன் தொடர்பான புராணக்கதை மரபு காணப்படுகின்றது.

மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் சென்றெகுலஸ் தோட்டத்திலேயெ இவ்வழிபாடு தனித்துவம் பெற்று விளங்குகின்றது. அங்கு மாத்திரமே வழிபடப்பட்டும் வருகின்றது. இங்கு முத்துமாரியம்மனுடைய ஆலயத்தினை அழிக்க து~;டர்கள் பல தடவை  முற்பட்ட போது அதனை பொறுத்துக் கொள்ள முடியாத அம்மன் தன்னுடைய பொறுமையை இழந்து அவர்களை அழிக்க முடிவு செய்கின்றார். இதன் போது அம்மன் து~;டர்களை அழிப்பதற்காக கொடூரமான காட்டேறியாக அவதாரம் எடுக்கின்றார். காட்டேறிக்கு அஞ்சி தப்பி ஓட முனைந்த அத்தனைப் பேரையும் அழித்ததாகவும் அந்த அம்மனே காட்டேறி என்றும் மக்கள் நம்புகின்றார்கள். இவ்வாறு து~;டர்களை அழிக்கும் போது காட்டேறியம்மன் மிகுந்த கோபத்துடனும் ஆவேசத்துடனும் காணப்பட்டமையால் மக்கள் ஒன்றிணைந்து வழிபாடு நடத்தி அதனை சாந்தப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு கூறப்பட்டு வந்த கதை மரபையே மலையகத்தில் நடைபெறுகின்ற காட்டேறியம்மனுக்கான விழாவின் போது செய்து காட்டுகின்றார்கள். இவ்விழாவின் போது காட்டேறியாக ஒருவரும் து~;டர்களாக பதினொரு பேரும் பங்கு பற்றி காட்டேறி அழித்தது போலவே அவர்களை துரத்தி ஊரைச்சுற்றி ஆடி வருவர். இவ்விழாவின் போது காட்டேறியம்மனின் மகிமையையும் அதனுடைய சிறப்பும்  போற்றப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். மலையகத்தினை பொறுத்தவரை இவ்வழிபாடானது கோபம் கொண்ட காட்டேறியம்மனை சாந்தப்படுத்தவும் திருப்திபடுத்தவுமே வழிபடப்படுகின்றது.

காட்டேறியம்மன் தொடர்பான கதை மரபுகளை வைத்து பார்க்கும் போது ஓரிடத்தில் அங்காளம்மனுடைய துணை தெய்வமாக கருதி காட்டேறியை வழிபடுவதையும், மற்றொரு வகையில்  மானிட பிறவியில் இருந்து தெய்வ நிலை அடைந்த பெண்ணின் மீவியல்பு நிலையை கொண்டதாவும், முனீஸ்வரனுடைய மனைவி என்ற நிலையில் வைத்து வழிபடப்படுகின்ற தன்மையும் காணப்படுகின்றது. அத்தோடு உமையம்மையின் அவதாரமாகவும், அம்மனுடைய அவதாரமாகவும் கருதி வழிபடுகின்றமையையும் குறிப்பிடலாம். 

அத்தோடு பல கதை மரபுகனினுடைய தொன்மமாகவும் காட்டேறியம்மன் காணப்படுகின்றாள். இவ்வாறு காட்டேறியம்மன் தொடர்பாக நிலவுகின்ற வௌ;வேறு கதை மரபுகளின் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திலும் வேறுபட்ட வகையில் பூசை விழாக்கள் இடம்பெற்று வருவதையும் குறிப்பிடலாம். குறிப்பாக, இலங்கையின் வடபகுதியில் அரக்கியம்மன் வழிபாடு என்ற ரீதியில் வழிபடப்படுவதையும், கிழக்கு பகுதியில் து~;ட தெய்வமாக வழிபடுகின்றமையையும் மலையகத்தில் காவல் தெய்வமாகவும் வழிபடப்படுவதையும் காணலாம். இவ்வாறே காட்டேறியம்மன் வழிபாடும் மற்றும் பெண் தெய்வ வழிபாட்டில் காட்டேறியம்மனின் முக்கியத்துவம் அதனுடன் தொடர்புடைய புராணக் கதைகள்;  என்பன காணப்படுகின்றன.

காட்டேறியம்மன் வழிபாட்டு நடைமுறைகள்
காட்டேறியம்மன் வழிபாட்டில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்ற போதிலும் பிரதான ஐந்து அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
  1. ஊர் பொது மயானத்தில் இருந்து மண் எடுத்து வருதல்.
  2. காட்டேறியாக வேடமிடல்.
  3. ரோதைமுனி வழிபாடு.
  4. காட்டேறியம்மனுடைய ஊர்வலம்.
  5. கோயில் பூசையும், நீராடலும். 

ஊர் பொது மயானத்தில் இருந்து மண் எடுத்து வருதல்.
காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் முக்கியமான நிகழ்வுகளாக இடம்பெறுபவை காட்டேறி வழிபாட்டுக்கான ஆயத்தங்களாகும். காட்டேறிக்கான வழிபாடு நடைபெறுவது ஊர்த் திருவிழா தொடங்கி அது நிறைவடையும் நாளான செவ்வாய்க்கிழமை ஆகும். அதற்கு முந்திய நாளான திங்கட்கிழமையிலிருந்தே வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதன் போது காட்டேறியாக வேடமிடுபவர் திங்கட்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் ஊர் பொது மயானத்திற்கு செல்வார். இவர் அங்கு செல்வதன் நோக்கம் மயான மண் எடுத்து வருவதற்கே ஆகும்.

காட்டேறியம்மன் வழிபாட்டினை பொறுத்தவரை மயான மண்ணானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனின் மயான மண்ணிலே காட்டேறியம்மனுக்கு சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதாவது காட்டேறியானது மயானத்தில் உறைவதால் மயானக் காளி என்று அழைக்கப்படுகின்றது. இதனால் அவள் உறையும் இடத்தின் மண் காட்டேறியம்மன் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதலாம். மேலும் மயானத்தில் உறைபவளை குறிப்பிட்ட நாளன்று ஊருக்குள் அழைத்து வரும் நிகழ்வாகவும் இதனைக் கொள்ளமுடியும். ஆரம்பக்காலத்தில் காட்டேறியாக வேடமிடுபவர் தனியாக மயானத்திற்குச் சென்று யாருக்கும் தெரியாது மண் எடுத்து வருவது வழக்கமாகும். ஆனால் தற்போது அவருடன் ஊர் பெரியவர்கள் சிலரும் செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் மயானத்தினை அண்மித்ததும் நின்று விடுவார்கள். அவர் தனியாகவே சென்று மண் எடுத்து வருவார்.

அவர் எங்கு மண் எடுக்கின்றார், எப்படி எடுக்கின்றார் என்பதனை இதுவரையில் யாருமே பார்த்தது கிடையாது. காட்டேறியம்மன் து~;டர்களை அழிப்பதற்காக பேய் சக்தியை பெற வேண்டியே மயான மண் எடுத்து வரப்படுவதாகவும், மயான மண்ணிலே காட்டேறி உருக்கொண்டு ஆடுவதாகவும் நம்பப்படுகின்றது. மேலும் இந்தியாவில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காட்டேறியம்மன் வழிபாட்டிலும் இதே போன்ற நடைமுறை அம்சங்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு முதல் நாள் இரவு கொண்டு வரப்பட்ட மண்ணை ஊர் பெரியவர்கள் சிலர் காலையில் ஒன்றாக கூடி அதனை சுத்தப்படுத்தி எடுத்து வைப்பர். காட்டேறியாக வேடமிட்டு ஆடுபவர் அந்த மண்ணை வைத்திருப்பார். காட்டேறியம்மன் வழிபாட்டில் இந்த நடைமுறையானது சிறப்பு வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

காட்டேறியாக வேடமிடல்.
காட்டேறியம்மன் வழிபாட்டில் மற்றொரு சிறப்பம்சம் வேடமிடுவதாகும். காட்டேறியம்மன் வழிபாட்டில் காட்டேறியாக ஒருவரும் து~;டர்களாக பதினொரு பேரும் வேடமிடுவார்கள். இவ்வழிபாட்டில் காட்டேறியாக வேடமிடுபவரே பிரதானமாக காணப்படுகின்றார். அவரை முன்னிறுத்தியே காட்டேறியம்மன் வழிபாடு இடம்பெற்று வருகின்றது. காட்டேறியாக வேடமிடுபவர் விரதம் மேற்கொள்வார். வழிபாடு முடிந்த பின்னரே விரதத்தினை இவர் முடிப்பார். இவர் நீண்ட கருப்புத் தலைமுடியை அணிந்திருப்பார். அத்தோடு கருப்பு நிற ஆடையும், பெரிய சலங்கையும்  அணிந்திருப்பார். மேலும் இவர் தன்னுடைய உடல் முழுவதும் கருப்பு நிறத்தினை பூசியிருப்பார்.

அத்தோடு கழுத்தில் தேசிக்காய் மாலை அணிந்திருப்பார். இடுப்பிலும் சலங்கை போன்று கட்டியிருப்பார். ஆட்டின் நாக்கு என்று சொல்லப்படுகின்ற நாக்கு போன்ற ஒன்றினைத் தொங்குவது போன்று வைத்திருப்பார். பார்ப்பதற்கு அச்சம் தருகின்ற தோற்றத்தில் அவர் காணப்படுவார். அவருடைய தோற்றமானது உண்மையில் காட்டேறி இவ்வாறு தான் இருக்கும் என்று எண்ணும் படியாக அமைந்திருக்கும். இவரை மக்கள் பயத்துடனும், பக்தியுடனும் வழிபடுவதனைக் காணலாம். இவ்வாறு வேடமிட்ட இவர் மிகுந்த ஆவேசத்துடன் ஆடி வருவார்.

காட்டேறியம்மன் போன்றே து~;டர்களாக  பதினொரு பேர் வேடமிடுவார்கள். இவர்கள் பார்ப்பதற்கு அரக்கர்களை போன்று தோற்றமளிப்பார்கள். இவர்களும் கருப்பு நிறத்தாலான ஆடைகளையும் பெரும் ஓசை எழுப்புகின்ற சலங்கைகளையும் அணிந்திருப்பார்கள். இவர்களும் தங்களுடைய உடல் முழுவதும் கருப்பு நிறத்தினை பூசியிருப்பதுடன் தலையில் கருப்பு பட்டி ஒன்றையும் கட்டியிருப்பார்கள். உடலில் பூசிய கருப்பு நிறத்தில் வெள்ளை நிற புள்ளிகளையும் வைத்திருப்பார்கள். காட்டேறியாக ஆடுபவர் கையில் முறம்(சுளகு) வைத்திருப்பார். து~;டர்களாக ஆடுபவர்கள் கையில் இடிப்பதற்கு பயன்படும் உலக்கையை வைத்திருப்பார்கள்.

இவர்கள் கையில் உலக்கை வைத்து ஆடுவது அம்மனுடைய ஆலயத்தினை து~;டர்கள் உடைப்பதற்காக சென்றமையை அடையாளப்படுத்துவதாக உள்ளது. காட்டேறியாக ஆடுபவர் கையில் முறம் வைத்து ஆடுவதற்கான காரணம் என்னவெனில் கெட்டவற்றையும் மற்ற தீயசக்திகளையும் விரட்டியடிக்கும் போது முறம் கொண்டு விரட்டுவதற்கான ஓர் அடையாளமாக காட்டேறியும் தீயவர்களை அழிப்பதற்காக முறம் வைத்து ஆடுவதாக கொள்ளலாம். காட்டேறியம்மன் வழிபாட்டில் இவ்வாறு இடம்பெறும் நிகழ்வானது மாதிரிச் செய்தல் என்னும் தன்மையினை வெளிப்படுத்துவதாகவும் கருதமுடியும்.

மேலும் இன்னும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் வேடமிட்டு ஆடுகின்றவர்கள் அனைவரும் ஆரம்பக் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக இவ்வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தந்தைக்கு பின் மகன் என்ற ரீதியில் அவர்கள் பங்குபற்றி வருகின்றார்கள். இந்த வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் பக்தியுடனும் மிகுந்த சுத்தமாகவும் இருப்பதுடன் வழிபாடு நடைபெறும் நாளன்று சைவ உணவை உண்பவர்களாகவும் இருப்பார்கள்.

ரோதைமுனி வழிபாடு
காட்டேறியம்மன் வழிபாட்டில் ஈடுபடுகின்ற பன்னிரண்டு பேரும் வேடமிட்டதன் பின்னர் முதலில் ஊர் எல்லையில் காணப்படும் ரோதைமுனிக்கான பூசைகளை செய்வார்கள். பொதுவாக ரோதைமுனிக்கான பூசைகள் கோழி, ஆடு என ஏதாவது ஒன்றை பலியிட்டு வழிபாடு நடாத்துவர்.  ஆனால் காட்டேறியம்மன் வழிபாட்டின் போது பலி கொடுக்கப்படமாட்டாது. ஏனெனின் காட்டேறியம்மன் வழிபாட்டில் அம்மனுடைய ஆலயமும் தொடர்புப் படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, வெறுமனே தீப ஆராதனை மட்டும் காட்டி பூசை செய்வார்கள்.

காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் முனிக்கான வழிபாடு முதன்மைப் படுத்தப்படுவதற்கு காரணம் காட்டேறியம்மனைப் போன்று முனியும் அச்சத்தினை தரக்கூடிய சிறுதெய்வமாக மக்களால் வழிபடப்படுகின்றார். மேலும் காட்டேறியம்மனுக்கான வழிபாடு நடைபெறும் போது எவ்விதமான தடங்கல்களும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் ஊரின் பிரதான காவல் தெய்வமாக ரோதைமுனி காணப்படுதனால் அனைவரையும் காத்து அருள்புரிய வேண்டும் என்பதற்காகவும் முனி வழிபாடு இடம்பெறுவதாக மக்கள் எண்ணுகின்றார்கள். காட்டேறியம்மன் து~;டர்களை அழிப்பதற்கு தேவையான அதீத சக்தியை பெறவேண்டியும் காட்டேறியம்மன் வழிபாட்டில் முனி வழிபாடு முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் நாட்டார்த் தெய்வங்களுக்கே உரித்தான முறையில்  முனிக்கான வழிபாடுகளும் நடைபெறுகின்றன. காட்டேறி வழிபாட்டில் பங்குபற்றுபவர்கள் ரோதைமுனியை வழிபடும் போது காட்டேறியாக வேடமிட்டவர் அருளாடுவதும் உண்டு. ரோதைமுனி பூசையின் பின்னரே காட்டேறி வழிபாட்டினைத் தொடங்க வேண்டும் என்ற நடைமுறையானது ஆரம்பக்காலத்தில் இருந்து இன்றுவரை எவ்வித வேறுபாடும் இன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருவதனையும் குறிப்பிடலாம். காட்டேறி வழிபாட்டில் ரோதை முனியை தொடர்புபடுத்துவதற்கான காரணங்களை ஊகிக்க முடிகின்றதே தவிர, அதற்கான சரியான நோக்கத்தினை முழுமையாக அறியமுடியவில்லை. ஊரில் காணப்படுகின்ற ரோதைமுனிக்கான வழிபாட்டிடம் கீழே காட்டப்பட்டுள்ளது.

 சென்றெகுலஸ் தோட்ட ரோதைமுனி ஆலயம்
காட்டேறி அம்மன் ஊர்வலம்
காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் ரோதைமுனிக்கான பூசை இடம்பெற்ற பின்னர் வேடமிட்டவர்கள் ஊரைச் சுற்றி ஊர்வலமாக ஆடிவருவார்கள். காட்டேறியாக வேடம் தாங்கியவர் கையில் முறம் வைத்துக் கொண்டு ஆவேசமாக ஆடிவருவார். அவருக்கு முன்னால் து~;டர்களாக வேடமிட்ட பதினொரு பேரும் கையில் உலக்கையை வைத்துக் கொண்டு ஆடிவருவர். காட்டேறியாக ஆடுபவர் அருளுடனே ஆடுவார். இவருக்கு முன்னால் ஆடி வருபவர்கள் காட்டேறியை கோபமடைய செய்வது போல ஆடுவார்கள். அவர்கள் கோயிலை இடிப்பது போல உலக்கையால் சைகை செய்து ஆடி வருவார்கள். இதன்போது கோபமடைந்த காட்டேறி அவர்களை   விரட்டிக் கொண்டு ஓடிவார். இதன் போது தன்னுடைய கையில் வைத்திருக்கும் முறத்தால் அவர்களை வீசியடிப்பார். இதன் போது சிலர் அடிவாங்குவதும் உண்டு. காட்டேறியாக ஆடிவருபவரை ஒருவர் பின்னால் பிடித்திருப்பார். இந்த காட்டேறியம்மன் ஊர்வலமானது ரோதைமுனி ஆலயத்திலிருந்து ஆரம்பித்து ஊரினை சுற்றி பின்னர் ஊரிலுள்ள பிரதான அம்மன் ஆலயத்தினை வந்தடைவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஊரின் மத்தியில் காணப்படும் வெட்ட வெளியில் நின்று நீண்ட நேரம் ஆடுவார்கள். இவ்வழிபாட்டினை கண்டுகளிப்பதற்காக பல ஊர்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் கூடியிருப்பார்கள் இவர்கள் ஆர்வத்துடனும் பக்தியுடனும் காட்டேறியம்மனை வழிபடுவதை காணலாம். இங்கு வந்திருப்பவர்களில் பெரும்பாலானோர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காகவும், இன்னும் சிலர் புதிதாக நேர்த்திக் கடன்களை முன்வைப்பதற்காகவும் கூடியிருப்பார்கள்.     இந்த காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் பல்வேறு காரணங்களுக்காக நேர்த்திக்கடன்கள் முன்வைக்கப்படுகின்றன.  பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய மனதால் காட்டேறியம்மனை வேண்டி நேர்த்திக்கடன்களை முன்வைக்கின்றார்கள். பொதுவாக நீண்ட நாள் நோய்வாய்பட்டவர்கள் நோய் குணமாக வேண்டியும், குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும், திருமணம் கைக்கூடாதவர்கள் விரைவாக நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் காட்டேறியம்மனை வழிபடுகின்றார்கள். முதல் வருடம் நேர்த்திக்கடன்களை முன்வைத்து வழிபட்டால் அடுத்த வருடம் அது நிறைவேறி அதற்கான நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக வருவதாகவும் பொது மக்கள் காட்டேறியை நேர்ந்துக் கொள்கின்றார்கள். காட்டேறியம்மன் ஊர்வலமாக ஆடிவரும் போது நேர்த்தி வைத்தவர்கள் பால், முட்டை, கோழி என்பவற்றை வழங்கி அதனை நிறைவேற்றுவதையும் காணலாம். காட்டேறியாக ஆடிவருபவர் இவற்றை பெற்றுக் கொள்வதுடன் வழிபடுகின்றவர்களுக்கு அருள்வாக்கு கூறி திருநீறு வழங்குவார். இவர் ஆடிவரும் போது ஏதாவது தீய சக்திகள் யாரையாவது பிடித்திருந்தால் அவர்களைத் தேடிப் பிடித்து அவர்களை அடித்து, அவர்களுக்கு திருநீறு வழங்கி ஆசிர்வதிப்பார். காட்டேறியாக ஆடிவருபவரை மக்கள் அம்மனுடைய அவதாரமாக கருதுவதுடன், காளியாகவும் எண்ணி மிகுந்த பயபக்தியுடன் வழிபடுவதையும் காணலாம். இதன் காரணமாகவே காட்டேறியை மயானக்காளி என்றும் ஊர் மக்கள் அழைக்கின்றார்கள். காட்டேறி ஊர்வலமாக ஊரைச்சுற்றி வருவதன் நோக்கம் ஊரையும் ஊர் மக்களையும் பாதுகாக்கவும் எந்த தீயசக்தியும் ஊரினுள் வந்துவிடாமல் அதனை தடுப்பதற்காகவுமே ஆகும்.

மேலும் காட்டேறியை வழிபட்டால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்று ஊர் மக்கள் மட்டுமன்றி அதனை பார்ப்பதற்காக வருகின்ற மக்களும் தீவிரமாக நம்புகின்றார்கள். இதனை பார்ப்பதற்காக வருகின்ற மக்கள் கூட்டம் வருடத்துக்கு வருடம் அதிகரித்து செல்வதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றார்கள். இந்தக் காட்டேறியம்மனுடைய ஊர்வலக் காட்சியை கண்டு களிப்பதற்காக ஆண்,பெண் இருபாலாரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கலந்து சிறப்பிப்பதனையும் சென்றெகுலஸ் தோட்டத்தில் காணலாம்.

காட்டேறியம்மனுடைய ஊர்வலத்தின் போது தப்பு வாத்தியம் மட்டுமே இசைக்கப்படும். இந்த தப்பு இசையானது இந்தியாவின் பெரம்பூர் என்னும் இடத்திலிருந்து ஆரம்பக் காலத்தில் கொண்டுவரப்பட்டதாகும். இந்த தப்பு இசைக்கு ஏற்பவே காட்டேறி உருக்கொண்டு ஆவேசமாக ஆடிவருவதனைக் காணலாம். காட்டேறியம்மனுடைய இந்த ஆவேசமானது து~;டர்களின் மீது கொண்ட கோபத்தின் அடையாளமாகவே கொள்ளப்படுகின்றது. ஏனைய பதினொரு பேரும் அதற்கு ஏற்றது போலவே ஆடிவருவார்கள். இவ்வாறாக காட்டேறியம்மன் ஊர்வலமானது ஊரிலுள்ள பிரதான அம்மன் ஆலயத்தினை வந்தடையும். இந்த ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொள்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த காட்டேறியம்மன் நடைமுறையானது ஆரம்பக் காலம் தொடக்கம் இன்றுவரை எவ்விதமான மாற்றங்களும் இன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை ஆரம்பக்காலம் தொட்டு இன்றுவரை ஒருகுழுவைக் கொண்டு நடத்துகின்றமையை குறிப்பிடலாம்.

கோயில் பூசையும், வேடமிட்டவர்கள் நீராடலும்
காட்டேறியாக ஊரைச்சுற்றி ஆடிவந்தவர்கள் இறுதியாக, ஊரிலுள்ள அம்மனுடைய ஆலயத்தினை வந்தடைவார்கள். இதன்போது ஆலயத்தினை ஒருமுறை சுற்றி ஆடிவருவார்கள். பின்னர் வேடமிட்டவர்கள் அனைவரும் ஆலயத்தினுள் சென்று அம்மனுக்கு முன்னால் நிலத்தில் வீழ்ந்து வணங்குவார்கள். இதன் போது ஆலயத்தில் அம்மனுக்கான பூசைகள் இடம்பெறும். இந்த ஆலயமானது எண்பது ஆண்டுக்கால பழமை வாய்ந்ததாகும். ஆரம்பக்காலத்தில் எவ்வாறு காணப்பட்டதோ அது போலவே இன்று வரை காணப்படுகின்றது. இவ்வாலயம் சிறிய அளவில் கட்டப்பட்ட ஆலயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

காட்டேறி வழிபாட்டின் இறுதியில் அம்மன் ஆலயத்தில் பூசைகள் இடம்பெறுவதற்கான காரணம் என்னவெனில் ஆலயத்தினை உடைக்க முற்பட்ட து~;டர்கள் அத்தனை பேரையும் காட்டேறியாக அவதாரம் எடுத்து அம்மன் அழித்ததன் பின்னர் அம்மனுயை கோபத்தினை சாந்தப்படுத்தவும், அவளை திருப்திபடுத்துவதற்காகவுமே இறுதியாக அம்மனுக்கான பூசைகள்;. நடைபெறுகின்றன. அதாவது து~;டர்களை அழித்த அம்மனை புனிதமாக்குவதற்காக இவ்வழிபாடு இடம்பெறுவதாகவும் மக்கள் கருதுகின்றார்கள். பூசை இடம்பெற்று முடிந்ததும் வழிபாட்டில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கப்படும். அத்தோடு காட்டேறியாக வேடமிட்டு ஆடியவரிடத்திலும் மக்கள் விபூதி பெறுவார்கள்

கோயில் பூசை முடிவடைந்ததும் வேடமிட்டவர்கள் அனைவரும் ஊரில் காணப்படும் நீர்நிலையில் நீராடுவார்கள். இதற்கான காரணம் காட்டேறி து~;ட தெய்வம் என்பதனாலும் அது அச்சத்தினை தரக்கூடியதாக இருப்பதனாலும் காட்டேறி பின் தொடரும் என்று அஞ்சியே அவர்கள் விழா முடிந்தவுடன் நீராடுகின்றார்கள். இவ்வாறு நீராடும் போது மயானத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணையும் நீரில் கரைத்துவிடுவார்கள். இதன் பின்னர் மீண்டும் ரோதைமுனி ஆலயத்தில் சூடம் ஏற்றி வழிபட்ட பின்னர் காட்டேறியாக வேடமிட்டவரின் வீட்டிற்கு பங்குபற்றிய அனைவரும் செல்வார்கள்.

இதன் போது வேடமிட்டு ஆடியவர்கள் அத்தனைப் பேருக்கும் கண்ணூறு கழித்து ஆரத்தி எடுத்ததன் பின்னரே வீட்டினுள் செல்வார்கள். வீட்டில் சுவாமி படத்தின் முன் சமைத்த உணவை படையல் வைத்து வழிபட்டதன் பின்னர் அனைவரும் உணவு உண்ணுவார்கள். இவ்வாறே காட்டேறியம்மனுக்கான வழிபாடு இடம்பெற்று பின்னர் இனிதே நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றுவரை எவ்விதமான மாற்றமும் இந்த நடைமுறையில் இடம்பெறவில்லை என்பதும் முக்கியமான விடயமாகும்.

முடிவுரை

பாரம்பரிய கலாசார முறைகள் மற்றும் பண்பாடுகள் தற்காலத்தில் அழிந்து வருவதாக கூறப்படுகின்றது. ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், விழுமியங்கள் என்பனவற்றினை விடுத்து நவீனத்துவத்திற்கு ஏற்ப தன்னை தயார் படுத்தக்கூடிய நிலைக்கு இளைய சமூகம் தன்னை இசைவாக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றது. இவ்வாறாதொரு காலக்கட்டத்தில் பாரம்பரியம், பண்பாடு என்பவற்றை தொடர்ச்தேர்ச்சியமாக பின்பற்றி வருகின்றவர்களை விரல் விட்டு எண்ண வேண்டி இருக்கின்றது. அதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை எவ்வித தடங்களுமின்றி இக்காட்டேரி அம்மன் வழிபாட்டை சிறப்பாக நடாத்தி வரும் சென்றெகுலஸ் தோட்ட மக்கள் பெருமைக்குரியவர்கள் என்றே கூறலாம். வரும் காலங்களில் இளையத்தலைமுறையினரும் இவ்வழிபாட்டினை தொடர்ந்தும் முன்னெடுத்து மலையக கலை, கலாசாரங்களை பாதுகாக்க வேண்டும். அத்துடன் அவ்வாறு முன்னெடுத்து செல்பவர்களுக்கு ஊக்கமளித்து தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதற்கான உற்சாகத்தினை வழங்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் காமன் கூத்து, அர்ச்சுணன் தபசு போன்ற கூத்து வகைகள் மலையகத்தில் பெரும்பாலான பாகங்களில் நடைபெற்று வந்தன. ஆனால் இன்று மிகக்குறைவான தோட்டங்களிலே இக்கூத்துக்கள் இடம்பெற்று வருவதை காணலாம். ஒரு இனத்தின் அடையாளம், பண்பாடுகள் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை உணர்ந்து இளைய தலைமுறையினர் செயற்பட வேண்டும்.

நன்றி - உவங்கள்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates