Headlines News :
முகப்பு » , , , , » ஆராச்சிமார் ஆற்றிய பங்கு (1915 கண்டி கலகம் –29) - என்.சரவணன்

ஆராச்சிமார் ஆற்றிய பங்கு (1915 கண்டி கலகம் –29) - என்.சரவணன்


இலங்கைத் தீவுக்குள் தமக்கு எதிரான போக்கு அதிகரித்துவிடுமோ, தமக்கெதிரான சக்திகள் ஒன்றிணைந்து விடுவார்களோ, தமக்கெதிரான நாடுகளுடன் சேர்ந்து சதி செய்துவிடுவார்களோ என்கிற ஆங்கிலேயர்களின் பயம் மக்கள் மீதான இத்தகைய படுகொலைகளை புரியவைத்தது என்றும் கூறலாம்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இப்படி கலக்கமடைய உடனடிக் சர்வதேச காரணிகளாக இருந்தவை அன்றைய முதலாவது உலகப்போரும், தமது காலனித்துவ நாடுகளில் தொடங்கியிருந்த சுதந்திரப்போராட்டங்களும். இலங்கையில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நேரடியாக அப்படியான ஒன்றிணைவு அதுவரை இருக்கவில்லை. 1915 கலவரமும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தோன்றிய கலவரங்களும் தமக்கெதிராக திரும்பிவிடும் என்றே நினைத்தனர். அவர்களின் அறிக்கைகளில் தமக்கெதிராக திரும்பிவிட்டிருக்கிறார்கள் உடனேயே நசுக்க வேண்டும் என்றே அறிக்கையிட்டனர். இனிமேலும் அப்படி ஒரு நினைப்பே வரக்கூடாத அளவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற முடிவுக்கே வந்தார்கள். அதன் விளைவே இந்த பாரபட்சமற்ற கண்மூடித்தனமான படுகொலைகள். ஒட்டுமொத்த சந்தேகமும் சிங்களவர்கள் மீது மட்டுமே இருந்ததால் அவர்களையே இலக்கு வைத்தனர். கலவரத்தை ஒரு சாட்டாக பயன்படுத்திக்கொண்டனர். அந்த அழித்தொழிப்புக்கு முஸ்லிம்களை போடுதடியாக ஆக்கிக்கொண்டனர்.

ஆராச்சி
படுகொலைகளின் உதாரணங்களைப் பார்த்தோம். இந்த படுகொலைகளை நிறைவேற்றியவர்கள் ஆங்கிலேயர்கள் மாத்திரமல்ல. ஆராச்சிகளும் தான். ஆங்கிலேயர்கள் நிறைவேற்றிய உடனடி மரணதண்டனைகளில் பல; இவர்கள் அளித்த கதைகளின் பிரகாரம் தான் நிகழ்ந்தன. யார் இந்த ஆராச்சிமார்.

இலங்கையில் காலனித்துவ காலத்துக்கு முன்பிருந்தே ஆராச்சி எனும் பதவி இருந்து வந்தது. அவர்கள் தம்முடைய பிரதேசத்தில் அமைதியை பேணுவதுடன், வரி வசூலிப்பதையும் செய்தனர். ஒரு பொலிஸ்காரருக்குரிய கணிசமான அதிகாரங்களும் வழங்கப்பட்டு இருந்தன. எனவே கட்டைப்பஞ்சாயத்து பாணியில் அவர்கள் ஊர் விவகாரங்களில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு தனியான ராஜமரியாதை ஊர்களில் இருந்தது.
போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களின் அந்த பதவியை அப்படியே தமது பரிபாலன சேவைக்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின் வந்த ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் அப்படியே பேணினர். இவர்களில் பல படிநிலையையும் உருவாக்கிகொண்டனர். விதான, ஆராச்சி, கிராம ஆராச்சி, நகர ஆராச்சி, மடிகே ஆராச்சி என்றெல்லாம் இருந்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில் அரசாங்க அதிபர்களால் இவர்கள் நியமிக்கப்பட்டார்கள். குறிப்பாக அந்த பிரதேசத்தில் சொத்து படைத்த, அதிகாரம் செலுத்தக்கூடிய நிலச்சுவாந்திரர்களையே நியமித்தார்கள். அவர்கள் ஒருபோதும் இடம் மாற்றப்படுவதில்லை. ஆனால் அந்த பதவி அடுத்த பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆராச்சிமாரின் கீழ் விதானைமார் செயலாற்றினார்கள். ஆங்கிலேயர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் முதலியார், முகாந்திரம் போன்ற பதவிகளை இவற்றுக்குப் பதிலாக பிரதியீடு செய்துகொண்டார்கள். 1956 வரை இந்த பதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த விதானைமார் 1970 ஆண்டுக்குப் பின்னர் கிராம சேவகர் என்று அழைக்கப்பட்டார்கள்.

இனி சில சம்பவங்கள்...
ஏ.டீ.புஞ்சிபண்டா அளித்த சாட்சியத்தில் இப்படி கூறுகிறார்.

ஒரு வெள்ளையர் இப்படி கத்தினார். “ஆராச்சி கூறுகிறார் தெல்னுஸ் பொருட்களை கொள்ளையிடுவதற்காக ஆட்களை திரட்டினாராம். ஜேம்ஸ் சிறையிலிருந்து வந்தவராம். அவனும்கொள்ளையில் சமபந்தமாம் பொடி சிஞ்ஞோவும் மோசமான திருடனாம். இந்த மூவரையும் சுட்டுகொல்லும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று கூறி அங்கேயே மூவரும் கொல்லப்பட்டார்கள். அவ்வாறு கொல்லப்பட்டது கூட  கொள்ளையில் சம்பந்தப்பட்டதற்காக அல்ல ஆராச்சி கூறியதாலேயே அவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. ஆராச்சிமாருக்கு அன்றிருந்த அதிகாரம் அத்தகையது. அவர்களின் தனிப்பட்ட பலிதீர்ப்புக்கும், ஆங்கிலேய விசுவாசத்தை மிகையாக காட்டுவதற்காகவும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். ஆராச்சி போன்ற சிறு அதிகாரி நிலையிலுள்ளவர்கள் மட்டுமல்ல இப்பேர்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் அவரசர நிலை உள்ள காலங்களில்  அதிகாரத்தில் உள்ளவர்களால் நிறையவே வரலாற்றில் மீறப்பட்டிருப்பதை கண்டிருக்கிறோம்.

களுத்துறை – பேருவளையைச் சேர்ந்த எம்.கத்தோஹாமி சில்வாவின் முறைப்பாடும் தனது கணவர் அந்திரிஸ் சில்வாவின் கொலை நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற முறையை வெளிப்படுத்துகிறது. ஜூன் 08 அன்று முஸ்லிம்கள் சிலர் வெள்ளையர் இருவரை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர். உறங்கிக்கொண்டிருந்த தனது கணவரை எழுப்பினார்கள். அந்த முஸ்லிம் நபரின் குரலைக் கண்டுகொண்ட அந்திரிஸ் சில்வா “ஏன் முதலாளி இந்த ஜாமத்தில் அவசரமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டபடி சென்றார். அந்திரிஸ் சில்வாவைக் கண்டதும், அங்கிருந்தவர் “இவர் தான் அந்த ஆள்” என்று கூறி அவரைக் காட்டினார். எடுத்த எடுப்பில் அவரைச் சுட்டுக்கொன்றனர் படையினர்.

இலங்கை தேசிய சுவடிகூடத்தில் இன்னும் பார்க்கக் கூடியதாக இருக்கின்ற இந்த வழக்கு பற்றிய விபரங்கள் கம்பளை வழக்குகள் (Gampola case) என்றே இருக்கின்றன. அதில் கண்ட ஒரு ஆவணத்தில், மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்ட தனது சடலத்தை நல்லடக்கம் செய்வதற்கு தருமாறு கோரிய ஒரு கோரிக்கைக்கு வழங்கப்பட்ட பதில் கடிதமும் இருக்கிறது.
பேருவளை அந்திரிஸ் சில்வாவின் சடலத்தைப் புதைக்க பேருவளை விதான ஆராச்சிக்கு இத்தால் அனுமதியளிக்கின்றேன்.
டபிள்யு.டிக்சன்
லெப்டினன்ட் .சீ.எம்.ஆர்
09.06.15
இதன்படி சம்பவம் நிகழ்ந்து ஒருவாரமாகியும் அந்த சடலம் குடும்பத்தினரிடம் வழங்கப்படாமலிருந்தது என்று தெரிகிறது. மேலும் இன்னொரு பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிடலாம். இரத்தினபுரி, ஹிக்கஸ்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஏ.அப்புஹாமி இப்படி குறிப்பிடுகிறார்.
“ஜூன் 5 அன்று பிற்பகல் 1.30 அளவில் 50 வயதான எனது மாமியார் தோட்டத்தில் பயிரிட்டிருந்த மரக்கறிகளை பறித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்த இரயில் பாதை வழியாக போய்க்கொண்டிருந்த காக்கி நிற உடையணிந்த வெள்ளையின படையினர் இருவர் திடீரென்று மாமியாரை சுட்டனர். அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அங்கு அவர் தனியாக இருந்தார். இறந்த மாமியார் எனது மனைவியின் தாயார். எனது மனைவி சப்பிரகமுவ பிரதேச அரசாங்க அதிபரிடம் இதனை முறையிட்டார். அரசாங்க அதிபர் 50 ரூபாவை கொடுத்து விட்டு, தாயாரின் பராமரிப்பாளர் என்கிற வகையில் மேலதிகமாக 200 ரூபாவை மனைவியின் வங்கிக்கணக்குக்கு வைப்பிலிட்டார்”
இதன் மூலம் இந்த கொலை புரியப்பட்டது அரச அதிகாரியாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி இதனை உத்தியோகபூர்வ கையூட்டு மூலம் இதனை மூடுவதற்கும் முயற்சிக்கப்பட்டுள்ளது.

சேர் பொன். இராமநாதன் 24.10.1917 அன்று மக்களவையில் உரையாற்றுகையில் இந்த நிலைமைகள் குறித்து விவாதித்த்தார்.

“கேகாலை  மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், மக்களை கொன்றோளித்தமை குறித்தும், கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் வல்கம்பஹா வழக்கில் வெளியான உண்மைகளைக் கருத்திற் கொள்கின்ற போது எச்.எல்.டவ்ப்கின் அவர்களை தொடர்ந்தும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் வைத்திருப்பது அரசாங்கத்தின் நாமத்துக்கு  உகந்ததல்ல. அதுமட்டுமல்ல மனித உயிர்களுக்கு மேலதிக அச்சுறுத்தலும் கூட என்பதை இந்த மக்களவையின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.” என்றார்.

இன்னொரு உறுப்பினரான எச்.எம்.பெர்னாண்டோ வும் டவ்ப்கின்னின் கீழ் பொலிசாரின் நடத்தை குறித்து உரையாற்ற அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

ஒரு கலவரக் காலத்தின் போது உடனடி மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கும் கலவரம் இல்லாத சாதாரண காலத்தின் போது பயன்படுத்துவதற்குமுள்ள வித்தியாசத்தை டவ்ப்கின் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே பின்னர் நடத்தப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளில் உணர்த்தப்பட்டது. டவ்ப்கின்னால் கூறப்பட்ட கருத்துக்கள் கூட ஆங்கிலேய அதிகாரிகளைத் திருப்திப்படுத்தவில்லை.

விசாரணைக்குழுவின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு டொக்டர் பெர்னாண்டோ இப்படி குறிப்பிட்டார்.

“சட்டம் கற்றது மட்டுமன்றி நீதியின்படி நடந்துகொள்வேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்,  தேவைப்பட்டால் நீதிபதியிடமிருந்து ஆலோசனை  பெற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் அவர் கலவரத்தின் போது அப்படி நடந்துகொள்ளவில்லை.

Reginald Edward Stubbs
எனக்கென்றால் ஏதோ மனநிலை சமநிலையற்ற ஐரோப்பிய இளைஞர் குழுவொன்றிடம் பிரித்தானிய ஆட்சியில் இதுவரை இடம்பெறாத அளவுக்கு மேலேச்சத்தனமாக நடந்துகொள்வதற்கான வாய்ப்பை இராணுவ சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது என்றே தெரிகிறது. இல்லையென்றால் சாதாராண அப்பாவி மனிதர்களை வீடுகளுக்கு வெளியில் கொண்டுவந்து அவர்களின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் பார்த்திருக்க கொன்றிருக்க இயலுமா. மக்களை பீதியில் அல்லவா உறைய வைத்திருந்தார்கள்.”

மக்களவையில் இடம்பெற்ற இந்த விவாகாரங்கள் குறித்த விவாதத்தின் பொது இரத்தினபுரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கொல்லப்பட்ட சுபரத் எதனா என்கிற மேற்படி பெண் குறித்தும் காரசாரமாக  விவாதிக்கப்பட்டது. அன்றைய காலனித்துவ செயலாளரான ஸ்டப்ஸ் (Reginald Edward Stubbs) அவையில் தமது செய்கைகளை நியாயப்படுத்தினார்.

காலனித்துவ செயலாளர்:
கணம் உறுப்பினர் அவர்களே பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று கூறுகிறீர்களா?

டொக்டர் பெர்னாண்டோ:
அவர்களின் உறவினர்களின் முன்னால்

ஸ்டப்ஸ் :
கணவர் என்று தான் எனக்கு கேட்டது

டொக்டர் பெர்னாண்டோ :
ஜெர்மன் முறையைவிட கொடூரகரமான முறையை பின்பற்றினார்கள்.

கணவரின் எதிரில் கொல்லப்பட்ட பெண் என்று டொக்டர் பெர்னாண்டோ குறிப்பிட்டதை ஸ்டப்ஸ் நகைச்சுவை விவாதமாக மாற்றி திசை திருப்பிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நகைச்சுவை அதிக நேரம் நீடிக்கவில்லை. அங்கிருந்த இன்னொரு உறுப்பினரான திலகரத்ன இதனை இடைமறித்து பெண்கள் கொல்லப்பட்டதை கேட்கும்போது ஸ்டப்ஸ் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

திலகரத்ன: நான் அமர்வதற்குள் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். டொக்டர் பெனாண்டோ அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது காலனித்துவ செயலாளர் பெண்களுக்கு சுடவில்லை என்றார்.

ஸ்டப்ஸ்: நான் பெர்னாண்டோவிடம் கேட்டது, பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று உறுதியாக கூறுகிறாரா என்பதையே.

திலகரத்ன: பெண்ணொருவர் துப்பாகியால் சுடப்பட்டார் என்பதை நான் இங்கு பதிவுசெய்திருக்கிறேன்.

ஸ்டப்ஸ்: கௌரவ உறுப்பினர் அவர்கள் பதிவுசெய்தவற்றுக்கெல்லாம் நான் ஒன்றும் செய்யமுடியாது. எந்தவொரு பெண்ணும் கொல்லப்படவில்லை.

திலகரத்ன : நான் இப்போது கூறப்போகும் பெண்ணைச் சுட்டார்கள்

ஸ்டப்ஸ்: தவறுதலாக

திலகரத்ன : வயலில்

ஸ்டப்ஸ்: தவறுதலாக

திலகரத்ன : அது பற்றி நான் அறியேன்

ஸ்டப்ஸ்: கௌரவ உறுப்பினருக்கு அது குறித்து தெரியாவிட்டால் அதுபற்றி கதைக்கக்கூடாது.

திலகரத்ன : அது தவறுதலாக நடந்ததா என்பது பற்றி எனக்குத் தெரியாது

இந்த விவாதத்தை தனக்கு சாதகமாக ஸ்டப்ஸ் திருப்பிக்கொண்டார்.

பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரில் இருந்த ஐரோப்பியர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததிலேயே அப்பெண் கொல்லப்பட்டார் என்று ஒரு பொதுவான வதந்தி இந்த சம்பவம் பற்றி நிலவியிருந்தது. இது குறித்து எந்த நீதி விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்செயல் நிகழ்ச்சி என்று மூடிவிட்டார்கள். அப்படி என்றால் எந்த அடிப்படையில் கொல்லப்பட்ட பெண்ணின் மகளுக்கு பணம் வழங்கப்பட்டது. அதனை அப்படியே மூடிவிடுவதற்கு நடந்த எத்தனிப்பு அது. ஆனால் இங்கிலாந்தில் வெளியாகும் உத்தியோகபூர்வ அரச அறிக்கையில் (Bluebook) டவ்ப்கின் வெளியிட்ட பல தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெளிவுபடுத்தியது.

இந்த மிலேச்சத்தனங்களில் பங்கெடுத்த இந்திய பஞ்சாப் படையினர் பற்றி தனியாக வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.

அடுத்த இதழில்.


உசாத்துணையாக  பயன்பட்டவை

  • EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
  • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  • “කුලය හා සිංහල අන්තවාදය”- කුසල් පෙරේරා (Ravaya 20.09.2015)
  • “Execution of 27-year-old henry pedris 100 years ago in colonial Ceylon”  - T.V. Antony Raj
  • A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates