Headlines News :
முகப்பு » , , , , » அரங்கேறிய படுகொலைகள்! (1915 கண்டி கலகம் –28) - என்.சரவணன்

அரங்கேறிய படுகொலைகள்! (1915 கண்டி கலகம் –28) - என்.சரவணன்


ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நீதியற்ற படுகொலைகள் அத்தனையும் இராணுவச் சட்டத்தின் பேராலேயே அரங்கேற்றப்பட்டன. அந்தக் கொடுமைகளுக்கு இராணுவச் சட்டம் பூரண வழி விட்டது.

இதற்கு முன்னர் 1848இல் இலங்கையில் குறிப்பாக மத்திய மலைநாட்டு பகுதிகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க பாரிய படுகொலைகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டிருந்தனர். இராணுவச் சட்டம் போடாமலேயே அந்த அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான ("මාතලේ කැරැල්ල") கிளர்ச்சியை அடக்கவே அந்த படுகொலைகள் நடந்தன. “மாத்தளை கிளர்ச்சி” என்றும் “1848 புரட்சி” என்றும் மிகவும் பிரபலமாக சிங்களத்தில் அழைக்கப்படுகின்றன. அந்தக் கிளர்ச்சியின் போது கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து பகிரங்க தண்டனை நிறைவேற்றினர். சுடுவது, கழுத்தை வெட்டுவது, தூக்கிலிடுவது போன்ற தண்டனைகளை மக்கள் பார்த்திருக்க நிறைவேற்றினர். பலர் நாடு கடத்தப்பட்டு ஆங்கிலேய காலனித்துவத்துக்கு உட்பட்ட மொறீசியஸ், அந்தமான் போன்ற தீவுகளில் சிறைவைக்கப்பட்டனர்.

ஆனால் இம்முறை அவ்வாறு அல்ல சம்பவத்துடன் தொடர்பில்லாத அப்பாவிகள் பலர், அதுவும் கலவரம் முடிந்ததன் பின்னர் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். 1915 கலவரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆனைக்குழுவின் முன்னால் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் குறிப்பிடத்தக்க சம்பவங்களை இராமநாதன், ஆர்மண்ட் டி சூசா போன்றோர் பதிவு செய்திருக்கிறார்கள். அதே வேளை “த சிலோன் மோர்னிங் லீடர்” (The Ceylon Morning Leader) பத்திரிகை போன்றவை விரிவாக செய்தி வெளியிட்டிருந்தன. அந்த செய்திகளை ஆதராமாகக் கொண்டு ஈ.டபிள்யு.பெரேரா எழுதிய “இலங்கையில் நிகழ்ந்த சமீபத்தேய குழப்பங்கள் பற்றிய குறிப்பாணை” (Memorandum upon Recent Disturbances in Ceylon) என்கிற நூல் பல உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது.

உதாரணங்களுக்கு சில சம்பவங்களை சென்ற இதழில் பார்த்தோம். மேலும் சில சம்பவங்களை உதாரணத்திற்காக பாப்போம்.

கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.ஏ.எஸ்.ஜேன் நோனா என்பவர் அளித்த சாட்சியத்திலிருந்து. நகரப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் கரத்தை வண்டியை தள்ளிக்கொண்டு சென்ற இருவரை துப்பாக்கிமுனையில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். அதே வேளை வயதான ஜேன் நோனாவின் கணவர் வாசலிலுள்ள விளக்குகளை எற்றிகொண்டிருந்தார். அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் அந்தப் படையினர். அந்த கரத்தையைத் தள்ளிக்கொண்டு சென்றவர்களை நோக்கி ஓடிச் சென்று அவர்களையும் நோக்கி சுட்டனர். ஒருவர் ஸ்தலத்திலேயே படுகாயமுற்று முனகிக் கொண்டிருந்தார். மற்றவர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்தது ஜூன் 5ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு. படுகாயமுற்றவர் இறக்கும் போது மாலை 4 இருக்கும். இராணுவச் சட்டத்தின் படி காயப்பட்டவர்களை காப்பாற்றுவதும் மரணதண்டைக்குரிய குற்றமாக இருந்ததால் எவரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. இவர் அளித்த சாட்சியமும் ஜேன் நோனா அளித்த சாட்சியத்தை உறுதிசெய்தது. இந்த பிரதேசத்தில் ஜூன் 3 ஆம் திகதிக்குப் பின்னர் எந்த வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

கல்எலிய பிரதேசத்தைச் சேர்ந்த பொடிநோனா அளித்த சாட்சியத்தில்...

‘எனது கணவர் சைமன் அப்பு புஞ்சி கடையொன்றை நடத்தி வந்தார். ஜூன் 5 அன்று பொலிஸ் அதிகாரி ஆட்டிகலவுடன் வெள்ளையின படையினரும், பொலிசாரும் சீனி மொகமட்டுடன் கடையினுள் புகுந்தனர். சீனி மொகமட் அந்த படையினரிடம் அரிசி மூடைகளைக் காட்டி “சேர் இதோ எனது சாமான்கள்” என்றதும் பதட்டமடைந்த எனது கணவர் அவர்களிடம் “இந்த மனிதர் கூறுவது பொய். இவை கடைக்கு கொள்வனவு செய்யப்பட்டவை. இதோ நான் ரசீதுகளையும், கணக்குப் புத்தகத்தையும் காட்டுகிறேன்” என்றார். ஆனால் அதிகாரி ஆட்டிகல கோபத்துடன் “உனது கணக்குப் புத்தகத்தைப் பார்க்க நான் இங்கு வரவில்லை.” என்று கூறிக்கொண்டிருக்கும் போது உள்ளே வந்த இன்னும் சில முஸ்லிம்களும் சீனி மொகமட் கூறுவது உண்மை தான், அவை அவரின் பொருட்கள் என்றனர். இதனை விசாரித்து பார்க்கும்படி எனது கணவர் படையினரிடம் கேட்டார்.  ஆனால் அவர்கள் எதையும் கேட்கவில்லை. எனது கணவரையும் அருகில் இருந்த பீரிஸ் அப்புவையும் சுவற்றில் சாய்த்து சுட்டுகொன்றனர். அவர்கள் இருவரும் அங்கேயே இருந்துபோனார்கள்.” செர்ணலிஸ் அப்புவின் சாட்சியமும் பொடி நோனாவின் இந்த சாட்சியத்தை உறுதி செய்தன.


இந்த விடயங்களைப் பற்றி ஆர்மண்ட் டி சில்வா தனது நூலி விளக்குகையில் “தனிப்பட்ட பகையை தமது பழிவாங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர் பலர். முஸ்லிம்கள் பலர் பொய் சாட்சியமளித்து பலருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் கூறியவை உண்மையாக இருந்தாலும் இப்படி எந்த விசாரணையுமின்றி அந்த இடத்திலேயே சுட்டுகொல்ல முடியுமா” என்று கேள்வி எழுப்புகிறார்.

மங்கள திரிய எனும் பிரதேசம் எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறாத பிரதேசம். சுற்றி உள்ள பிரதேசங்களில் சில சின்ன சம்பவங்கள் அறியக் கிடைத்தாலும், அவை ஜூன் 3ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்திருந்தன. ஜூன் 5 ஆம் திகதி ஜே.கே.எலிஸ் நோனா அவரது கணவர் எ.ஏ.புஞ்சிநிலமேவுடன் மதிய உணவை உண்டுகொண்டிருந்தார். அந்த நேரத்தில் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் படையினருடன் உள்ளே புகுந்தனர். அந்த முஸ்லிம் வெள்ளையரின் காதுகளில் எதையோ கூறிக்கொண்டிருந்தார். உடனேயே வெள்ளையரின் ஆணையின்படி பஞ்சாப் படையினர் அவரது கணவரை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். எலிஸ் நோனா 7 குழந்தைகளுடன் அனாதயானார். எந்த விசாரணையும் நடக்கவில்லை.

கேகாலை மாவட்டத்தில் அம்பே பிரதேசத்தைச் சேர்ந்த எல்.பீ.பெரேரா இவாறு சாட்சியமளித்தார். “ஜூன் 4 அன்று அந்த பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தது. ஜூன் 8  அன்று போலீசார் அங்கு வந்து 27 பேரைக் கைது செய்தனர். முஸ்லிம் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாடு ஒன்றின் பேரிலேயே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்த அன்று அந்த பிரதேசத்திலேயே இருந்திராத எனது மகன் ரொமானிசம் அந்த 27 பேரில் அடங்குவர். ஆனால் ரொமானிஸ் குறிப்பிட்ட சம்பவ தினத்தன்று அவிசாவளையில் ஒரு வழக்குக்காக சென்றிருந்தார். கைது செய்யப்பட்டவர்களும், கிராமத் தலைவரும் கூடி பார்த்துக் கொண்டிருக்க ரொமானிசை மரத்தில் கட்டி வைத்து சுட்டுக்கொன்றனர். ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போது ரொமானிசை எந்த வித கேள்வி கூட கேட்டிருக்கவில்லை. ஒரு வாக்குமூலத்தையேனும் எடுக்கவில்லை.

இதில் உள்ள கொடுமை என்னவென்றால். நினைத்தபடி தண்டயளிக்கும் அதிகாரம் படையினருக்கு மட்டுமல்ல வெள்ளையின தோட்ட உரிமையாளர்கள் பலருக்கும் கூட வழங்கப்பட்டிருந்தது. குமாரி ஜெயவர்த்தன தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி என்கிற தனது நூலில் தோட்ட உரிமையாளர்கள் தொழிலார்கள் பலரை தாம் விரும்பியபடி சுட்டுக்கொன்றதை விளக்குகிறார். ஐரோப்பியர்கள் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளை பணக்காரர்களாக இருந்தாலும் இலங்கையர்கள் எனில் அவர்கள் தம்மிடம் வைத்திருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையளிக்கவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

கேகாலை ஹிங்குரல கந்த பிரதேசத்தை சேர்ந்த அல்லிசா இப்படிக் குறிப்பிடுகிறார்.

“ஜூன் 10 அன்று நான் அறிந்த தோட்ட உரிமையாளர் ஒருவர் இன்னும் சிலருடன் வந்துகொண்டிருந்தபோது ஆற்றில் குளிப்பதற்காகச் சென்று கொண்டிருந்த எனது அப்பாவை நோக்கி சுட்டனர். முதல் குண்டு தவறியது. இரண்டாவது தடவை சுட்டதில் அவர் அந்த இடத்திலேயே விழுந்து இறந்தார். அது குறித்து எந்த விசாரணையும் நடக்கவில்லை.”

கேகாலையை சேர்ந்த உக்கு பிட்டா இப்படி கூறுகிறார்.

“எனது மகன் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த வெள்ளையின தோட்ட உரிமையாளர் ஒருவர் சுட்டதில் இறந்துபோனான். அது குறித்து எந்த விசாரணையும் நடக்கவில்லை”

ஹிங்குரல பிரதேசத்தை சேர்ந்த டபிள்யு.ஏ.சுத்தப்பு சாட்சியமிளிக்கையில்,

“ஜூன் 13 சீருடை அணிந்த ஒரு வெள்ளையர் தனது சகோதரர் செராஹாமியை சுடும்படி பஞ்சாப் படையினருக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டார். என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து எவருக்கும் தெரியாது. அந்த பிரதேசத்தில் அனைத்தும் ஓய்ந்து பல நாட்களின் பின்னர் இது நிகழ்ந்தது.”

கேகாலை துன் கோரலையைச் சேர்ந்த அலகொட தோன ஜயசிங்க ஹாமினே தனது கணவருக்கு நேர்ந்த சோகத்தை கதறியபடி சாட்சியமிளித்தார். “ஜூன் 10 அன்று காலை 6 மணிக்கு தெஹியோவிட்டவை சேர்ந்த ஆராச்சி; பஞ்சாப் படையினருடன் வீட்டுக்குள் நுழைந்து கணவரை எழுப்பி கை, கால்களைக் கட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் 8 மணியளவில் திரும்பி வந்த ஆராச்சி எனது கணவர் பொடி சிங்ஞோ சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாகவும். வந்து உடலை உடனடியாகப் புதைக்கும்படி கூறினார். உடலை வீட்டுக்கு கொண்டு சென்றால் என்னையும் சுட்டுக் கொல்வதாக மிரட்டினர். நான் எனது கணவரின் உடலைக் காண சென்றபோது அங்கு வேறு இரு உடல்களையும் கண்டேன். எனது கணவரை தன்னந்தனியாக என்னால் முடிந்த அளவு குழியைத் தோண்டி புதைத்துவிட்டு வந்தேன்.” என்றார் 4 குழைந்தைகளுடன் அவரும் அனாதரவாக்கப்பட்டார். 

எல்கொட டேவிட் ஹாமி எனும் பெண் சாட்சியளிக்கையில்..

“ஜூன் 10 அன்று வெள்ளையர் சிலர் பஞ்சாப் படையினருடன் வந்து எங்கள் வீட்டைக் கொள்ளையடித்தனர். வீட்டிலிருந்த 100 ரூபா பணமும், 300 ரூபா பெறுமதியான ஆபரணங்களையும் அவர்கள் கொள்ளையடித்ததுடன் எனது கணவரை தூரத்துக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர். எந்த விசாரணையும் கூட நடக்கவில்லை.”

டேவிட் சிங்ஞோ அளித்த சாட்சியத்தில்..

“எனது மைத்துனருடன் வந்த வெள்ளயினரும், பஞ்சாப் படையினரும் என்னைக் கைது செய்து ஆற்றங்கரையோரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் ஏற்கெனவே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். ஒரு வெள்ளையர் ஒரு பட்டியலை வாசித்தார். அதன்படி மூவரை அங்கேயே சுட்டுக் கொன்றுவிட்டு ஏனையோரை விடுவித்தனர். நாணும் விடுவிக்கப்பட்டு அங்கிருந்து போய்க் கொண்டிருக்கும்போது மீண்டும் என்னை மீண்டும் அழைத்து அந்த மூன்று உடல்களையும் புதைக்கும் படி கட்டளையிட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாமேல் அப்பு அவர்களை சபித்தபடி அழுதுகொண்டிருந்தார். ஒரு வெள்ளையின படையினன் அவரின் தலையில் துப்பாக்கியால் அடித்து விழுத்தினார்...” என்றார்.

தொடரும்


உசாத்துணையாக பயன்பட்டவை
  1. EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
  2. Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  3. Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  4. “කුලය හා සිංහල අන්තවාදය”- කුසල් පෙරේරා (Ravaya 20.09.2015)
  5. “Execution of 27-year-old henry pedris 100 years ago in colonial Ceylon”  - T.V. Antony Raj
  6. A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  7. The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  8. Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  9. “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  10. “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  11. “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  12. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  13. ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates