பிரதேச சபைகள் சட்டத்திருத்ததிற்கான பரிந்துரைகள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சேவை வழங்குவதில் தடையாக உள்ள சட்ட சரத்துகளை திருத்தம் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் கடந்த டிசம்பர் 23ம் திகதி மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வாறு சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தினால் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்த பரிந்துரைப்புக்களை வழங்குமாறு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சிடம் அமைச்சரவை கோரிக்கை விடுத்திருந்தது.
இதன் பிரகாரம் திருத்தம் செய்யப்படவுள்ள குறித்த சட்ட சரத்துகளுக்கான பரிந்துரைப்புகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இந்த முறை அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி பதில் அமைச்சராக கடமையாற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் குறித்த திருத்தம் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டதுடன் இன்றைய அமைச்சரவை கூட்டத்திலும் கலந்துகொள்வார்.
குறித்த ஆவணங்களை தயாரித்து அமைச்சர் இராதாகிருஸ்ணன் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை அமைச்சின் ஆலோசகர் எம். வாமதேவன் மற்றும் நுவரெலியா பாரளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். முன்னதாக இந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரனை ஒன்றை கொண்டுவந்தபோது
இச்சரத்துக்களை திருத்துவதற்கு மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...