Headlines News :
முகப்பு » , , , » கேணல் ஒல்கொட்டின் வருகை ஏற்படுத்திய திருப்புமுனை - (1915 கண்டி கலகம் – 10) - என்.சரவணன்

கேணல் ஒல்கொட்டின் வருகை ஏற்படுத்திய திருப்புமுனை - (1915 கண்டி கலகம் – 10) - என்.சரவணன்

ஒல்கொட், எலேனா ப்லாவட்ஸ்கி ஆகிய இருவருக்கும் சுமங்கள தேரரால் பஞ்சசீல தீட்சையளிக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டில் பௌத்த மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்ட நிகழ்வுகளில் பஞ்ச மகா விவாதங்களின் பாத்திரம் குறித்து சென்ற வாரம் அறிந்தோம். அன்றைய சிலோன் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜோன் கெபர் பாணந்துறை விவாதம் பற்றி எழுதிய தொடர் பின்னர் பிரசித்திபெற்ற நூலாக 1878 இல் அமெரிக்காவில் வெளிவந்தது (The great debate – buddhism and christianity – face to face). பௌத்த எழுச்சியில் இந்த நூலுக்கு பெரும் பாத்திரம் உண்டு. இந்த நூலை வாசித்த அமெரிக்காவை சேர்ந்த கேணல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் இந்த நூலின் மீதும், அந்த விவாதத்தின் மீதும் அந்த விவாதத்தை நடத்தியவர்களின் மீதும் ஈர்ப்புகொண்டார்.

அதன் பின்னர் அவர் விவாதத்தில் தொடர்புடைய மிகெட்டுவத்தே குணானந்த  தேரர், ஹிக்கடுவே சுமங்கல தேரர் ஆகியோருடன் கடிதத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார். இந்தத் தொடர்பு அவரை இலங்கை வருகைக்கு வித்திட்டது. இலங்கையின் பௌத்த புத்துயிர்ப்பின் பிதாமகராக போற்றப்படும் ஒல்கொட் இலங்கையரும் அல்ல, பௌத்த பின்னணி கொண்டவரும் அல்ல என்பது சுவாரஸ்யமான தகவல். அவர் ஒரு அமெரிக்க ப்ரொட்டஸ்தாந்து கிறிஸ்தவர். எனவே தான் இலங்கை வரலாற்றில் ஒல்கொட்டின் பாத்திரத்தை அனைவரும் போற்றும் அதே நேரம் அவரை வெறுக்கும் சிங்கள பௌத்த புத்திஜீவிகளும் இருக்கிறார்கள்.

பிரபல சிங்கள பௌத்த தேசியவாதியாக அறியப்படும் நளின் டி சில்வா “ஒல்கொட் பௌத்தம்” என்றே பல இடங்களில் இந்த வெறுப்பை கொட்டித் தீர்த்திருக்கிறார். சிங்களத்தனம் இல்லாத பௌத்தர்கள், பௌத்தத் தனம் இல்லாத சிங்களவர்கள் என்று அவர் விமர்சிக்கும் போது “சிங்களத்தனம்” இல்லாத பௌத்தர்களை ஒல்கொட் பௌத்தர்கள் என்றே கிண்டல் செய்கிறார் பல இடங்களில். ஒல்கொட் சிங்கள பௌத்தர் அல்லாதவர் என்றும் மேற்கத்தேயவர் என்றும் அவரின் பணிகள் அத்தனையும் மேற்கத்தேய சதி என்றும் நளின் வெவ்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டு வந்திருக்கிறார். ஆனால் ஒல்கொட் சிங்கள பௌத்தர்களின் எழுச்சியில் மிகப்பெரிய பாத்திரத்தை ஆற்றியவர் என்பது தான் வரலாற்று விளைவுகள் நமக்கு வெளிப்படுத்தியுள்ள செய்தி.
கேணல் ஒல்கொட், எலேனா ப்லாவட்ஸ்கி

கேணல் ஒல்கொட் (1832 - 1907)
ஒல்கொட் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி, பத்திரிகையாளர், வழக்கறிஞர். 1865 இல் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் படுகொலை விசாரணைகளிலும் பங்கேற்றவர். ஆன்மிகம் குறித்த அவரின் சுய தேடலின் விளைவாக பௌத்தத்தில் நாட்டம் கொண்டார். அமெரிக்காவில் முதலாவதாக பௌத்தத்துக்கு மாறியவராக அறியப்பட்டவர் அவர். இந்த நிலையில் தான் பாணந்துறை விவாதம் குறித்த நூலை அறிகிறார். இலங்கை வர தீர்மானிக்கிறார். 1875 ஆம் ஆண்டு அவர் நியுயோர்க்கில் பிரம்மஞான சங்கத்தை (Theosophical Society) எலேனா ப்லாவட்ஸ்கி என்பவருடன் இணைந்து தொடங்கினார். சங்கத்தின் தலைமையை புத்தர் பிறந்த பூமிக்கு மாற்றுவதற்காக  இந்தியாவில் பல இடங்களைத் தேடியலைந்து இறுதியில் சென்னை அடையாரில் 1882 இல் பிரம்மஞான சங்கம் நிறுவப்பட்டது. அதன் பின்னர் 1880, மே 17 அன்று காலியில் பெரும் வரவேற்புடன் இலங்கை வந்தடைந்தார். ஜூன் 17 இல் பிரம்மஞான சங்கத்தை காலியில் அமைத்தார்.

பௌத்தத்தில் இணைந்ததாக அமெரிக்காவிலேயே அவர் அறிவித்துக்கொண்டபோதும் காலியில் உள்ள விஜயானந்தா விகாரையில் ஒல்கொட் மற்றும் எலேனா ப்லாவட்ஸ்கி ஆகிய இருவருக்கும் பஞ்சசீல தீட்சையளிக்கப்பட்டது. அவர் பௌத்த ஒழுக்க பிரமாணங்களை எடுத்து பௌத்தத்தை தழுவிக்கொண்டார்.
பஞ்சமர்களுக்காக ஒல்கொட்டினால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பாடசாலை

சென்னையில் ஆன்னி பெசென்ட் மற்றும் அயோத்திதாசர் ஆகியோருடன் இணைந்து ஒடுக்கப்பட்ட பஞ்சமர்களுக்கான  சிறுவர் பள்ளிகளை அமைப்பதில் ஒல்கொட் ஈடுபட்டார். அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்று அங்கு சுமங்கல தேரரின் மூலம் பஞ்சசீல தீட்சையளித்து (1890) இல் பௌத்தராக்கினார். அதுபோல தனது சிஷ்யனான அநகாரிக தர்மபாலவையும் சென்னைக்கு அழைத்துச்சென்று பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தினார். 

இலங்கையில் அவர் அறிந்துகொண்ட பௌத்த அனுபவங்களை ஆங்கிலத்தில் நூல்களாக எழுதி மேற்கத்தேய ஆங்கிலேயர்களுக்கு பரப்பினார்.. அவர் எழுதிய “பௌத்த மறைக்கல்வி“ (The Buddhist Catechism - 1881) நூல் பிரசித்திபெற்றது. பிற்காலத்தில் இலங்கையின் கலாச்சார அமைச்சு இந்த நூலை பல தடவை பதிப்பிட்டது. அம்பேத்கார் தனது பௌத்தம் குறித்த ஆய்வுகளின் போது ஒல்கொட்டின் சிந்தனைகளின் பாதிப்பும் இருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அநகாரிக்க தர்மபாலாவை வழிநடத்துவதில் பாரிய பங்கை ஆற்றினார் ஒல்கொட். எட்வர்ட் ஹேவாவிதாரன எனும் சிறுவனுக்கு (அநகாரிக தர்மபாலவின் இயற்பெயர்) மிகெட்டுவத்தே குணானந்த தேரர் ஒல்கொட், ப்லாவட்ஸ்கி ஆகியோரின் சேவைகள் பற்றி பெரிதாக எடுத்துக்கூறி வந்திருக்கிறார். அவர்களின் அறிமுகமும் எட்வர்டுக்கு தனது 14 வயதில் கிடைத்தது. அவர்களின் நேரடி வழிகாட்டலில் அரச சேவையை பிற்காலத்தில் விட்டுவிட்டு பரம விஞ்ஞான சங்கத்தின் பணிகளில் ஈடுபடத்தொடங்கினார் எட்வர்ட். சில வருடங்களில் பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் முழுநேரமாக ஈடுபட்டார் எட்வர்ட். எட்வர்ட் என்கிற தர்மபால; சிங்கள பௌத்தர்களுக்கு சிங்கள பௌத்தரல்லாதவர்கள் மீது வெறுப்புணர்ச்சியை போதித்த போதும் அவரை உருவாக்கிய ஞானத்தந்தை ஒரு சிங்கள பௌத்தரல்லாத அந்நியரே என்பது ஒரு முரண்நகை.

பௌத்த கல்வியின் தந்தை
ஒல்கொட் இலங்கையில் பௌத்த கல்விமுறையை உருவாக்கி வளர்த்தெடுத்தார். பௌத்த கல்விமுறையின் தந்தையாகவும் பௌத்தர்களால் அழைக்கப்படுகிறார் ஒல்கொட். ஆங்கிலேய காலனித்துவத்தால் உருவாக்கப்பட்ட பல கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு நிகராக இலங்கை முழுவதும் பௌத்த பாடசாலைகளை நிறுவியதில் ஒல்கொட்டின் பாத்திரம் முக்கியமானது. ஆனால் அந்த பாடசாலைகள் தூய சிங்கள பௌத்த பாடசாலைகளாக ஆகிவிடும் என்று ஒல்கொட் கற்பனையும் செய்திருக்கமாட்டார். அவை ஏனைய இன-மதத்தவர்களுக்கு தீட்டாக அமைந்து விடுமென்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்.


கொழும்பிலுள்ள ஆனந்தா, நாலந்தா உள்ளிட்ட 460 பெரிய பிரபல பாடசாலைகள் இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒல்கொட்டின் வழிகாட்டலால் உருவாக்கப்பட்டன. இன்றும் அவை 100 வீத சிங்கள பௌத்த பாடசாலைகளாக இயங்குகின்றன. அதுமட்டுமன்றி ப்லாவட்ஸ்கியும் ஒல்கொட்டும் சேர்ந்து பௌத்த பெண்களின் கல்வியையும் உயர்த்துவதற்காக பெண்கள் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மருதானை சங்கமித்த பெண்கள் கல்லூரி, மியுசியஸ் கல்லூரி, விசாகா கல்லூரி போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்க உதாரணங்கள்.

உலக மதங்களின் கூட்டமைப்பில் பௌத்தத்தையும் இணைத்துக்கொள்ள பாடுபட்டதுடன் அநகாரிக்க தர்மபாலவை சிக்காகோ மாநாட்டுக்கு அனுப்பிவைத்தார். அந்த மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் பிரசித்திபெற்ற உரையை போலவே சிங்கள பௌத்தர்களும் தர்மபாலாவின் உரை முக்கியத்துவமுடையது என்று கருதுகின்றனர். அந்த உரை பௌத்த மதம் குறித்தும் தேரவாதம் குறித்தும் பல விளக்கங்கள் முதல் தடவையாக கலந்துகொண்ட பலரையும் சென்றடைந்தது என்றே நூல்கள் பல கூறுகின்றன.
சிக்காகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தருடன் அநகாரிக தர்மபால

இதே காலப்பகுதியில் இவற்றுக்கு நிகராக வடக்கில் ஆறுமுக நாவலரின் தலைமையில் சைவ மறுமலர்ச்சியும், தமிழ் சைவ பாடசாலைகளின் தோற்றமும், தமிழ் அச்சகங்களும், தமிழ் பத்திரிகைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் தனிப் பௌத்த பாடசாலைகளின் தோற்றம் பௌத்த மறுமலர்ச்சியில் ஒரு பாய்ச்சல் என்றே கூறவேண்டும். கத்தோலிக்க மத மாற்றத்திலிருந்து பௌத்தர்களை மீட்பதற்கும், சிங்கள பௌத்தர்களின் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதற்கும் இந்த பாடசாலைகளின் உருவாக்கம் பாரிய பாத்திரம் வகித்தது. அத்துடன் ஒரு உற்சாகமான நம்பிக்கையையும், துணிச்சலையும் பௌத்தர்களுக்கு ஏற்படுத்திற்று.

இந்த வளர்ச்சிப் போக்கு சிங்கள பௌத்தர்களை அடுத்த நிலைக்கு கண்டு சென்றது. அடுத்த சில வருடங்களில் ஒல்கொட்டின் தலைமையில் முக்கிய வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள் நிகழ்ந்தன. அந்த நிகழ்வுகள் அனைத்தும் சிங்கள பௌத்த அடையாளத்தை வலியுறுத்துவத்தில் பாரிய பாத்திரமாற்றின. அதனை அடுத்த வாரம் பார்ப்போம்.

 (தொடரும்)

இக்கட்டுரைக்கு உசாத்துணையாக பயன்பட்டவை
  1. ධනේශ්වරය හා සිංහල බෞද්ධ ආධිපත්‍යය - 5 (நளின் டி சில்வா – திவய்ன 13.03.2011)
  2. The Buddhist Catechism - Colonel Henry Steel Olcott (1881)
  3. தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட் - http://www.jeyamohan.in/20835#.VmDq03arRhE
  4. அயோத்திதாசர், கர்னல் ஆல்காட், தர்மபாலா, லட்சுமி நரசு – ஒரு சிறு குறிப்பு – அ.மார்க்ஸ் http://amarx.org/?p=923
  5. The Great Debate: Buddhism and Christianity Face to Face - J.M. Peebles (1878)
  6. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
  7. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
  8. ධර්මපාල ලිපි - අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි - (Guruge , Ananda W. P – 1991)
நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates