Headlines News :
முகப்பு » » நிலைமாறும் மலையகம் - துரைசாமி நடராஜா

நிலைமாறும் மலையகம் - துரைசாமி நடராஜா


மலையக பெருந்தோட்டங்களின் நிலை தொடர்பில் இப்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டு வருகின்றமை தெரிந்த விடயமாகும். பெருந்தோட்டங்களின் எதிர்காலம் மற்றும் தொழிலாளர்களின் இழுப்பு என்பன தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின் றது. இதற்கிடையில் பெருந்தோட்டங்களில் நிலவும் கலாசாரச் சீர்கேடுகள் மற்றும் சமூக சீரழிவுகள் தொடர்பிலும் புத்திஜீவிகள் தமது விசாலப் பார்வையினை செலுத்தியிருக் கின்றனர். இதனால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பிலும் எடுத்து கூறியிருக்கின் றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையக பெருந்தோட்டங்களுக்கும் மக்களுக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது. இந்த வரலாறு மிகவும் நீண்டதாகும். தமிழக வரலாற்றின் முன்னைய கால கட் டங்களில் காணப்படாத அளவிற்கு 19 ஆம் நூற்றாண்டில் லட்சோபலட்ச தமிழ் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு மிக அண் மையில் உள்ள இலங்கையில் மட்டுமன்றி, நூற்றுக்கணக்கான அல்லது பல்லாயிரக்க ணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் தீவுகளுக்கும் கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டதாக கலாநிதி க அருணாசலம் தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு தமிழ் தொழிலா ளர்கள் குடியேற்றப்பட்ட தீவுகள், நாடுகளுள் வியட்னாம், அந்தமான், சுமத்ரா, சிங்கப்பூர், மலேஷியா, பிரெஞ்சு கயானா, சென்ட் வின்சென்ட் தென் ஆபிரிக்கா, மொரீசியஸ் என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன.

இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மக்கள் கொடு ரமான சுரண்டல்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். அவர்களது வரலாறு சோகம் மிகுந்து, துயரம் கசிந்து, இருள் படிந்து, குருதி நிறைந்து, வேதனைகள் மலிந்து காணப்படுவதாகவும் கலாநிதி க. அருணா சலம் வலியுறுத்தி இருக்கின்றார்.

அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய, பிரான்ஸிய ஆட்சியாளர்களினாலும் பின்பு சுதேச ஆட்சியாளர்களினாலும் அங் தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும் தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தமிழர்களாலும் ஏனைய இந்தியர்களினாலும் வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள், பிற அலுவலர்களாலும் கொடுரமாக சுரண்டப் பட்டனர், சுரண்டப்பட்டும் வருகின்றனர் என்று கவலை வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் மலையக பகுதி பகுதிகளில் குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட தமிழ் தொழிலாளர்கள் மிக அண்மைக் காலம் வரை சூழ்நிலை நிர்ப்பந்தங் களால் இலங்கையில் காலம் காலமாக வாழ்ந்து வந்த சிங் கள தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருந்து தனிமைப்ப டுத்தப்பட்ட அவர்களது அலட்சியத்துக்கு ஆளானவர்களாக விளங்கியதாகவும் கலாநிதி க.அருணாசலம் சுட்டிக்காட்டுகின்றார் கூலிகள், கள்ளத் தோணிகள் வடக்கத் தையார் தோட்டக் காட்டான், இந்தியக் காரர் என்று பலவாறு அழைக்கப்பட்டு அவம திக்கப்பட்டு இம்சிக்கப் பட்டனர். ஆயினும் இன்று நிலைமைகள் மிக வேகமாக மாறி கொண்டு வருகின்றன.

தமிழ் தொழிலாளர்களின் துயரங்களும் இன்னல்களும், சுரண்டல் கொடுமைகளும் தொடர்கதை யாகி கொண்டிருக்கின்ற போதிலும் கூட, தோட்டத் தொழிலாளர் மத்தியில் நாம் இது காலவரை கண்டிராத அளவிற்கு விழிப்பும் எழுச்சியும் உரிமை வேட்கையும் முன்னேற் றமும் அதிகரித்து வருவதும் கவனிக்கத் தக்கதாகும் என்றும் கலாநிதி அருணாசலம் 1994 இல் தான் எழுதிய ஒரு நூலில் கூறி பெருமைப்பட்டு கொள்கின்றார்.

கலையும், கலாசாரமும்

ஒரு சமூகத்தின் கலை, கலாசார பண் பாட்டு விழுமியங்கள் மிகவும் முக்கியத் துவம் மிக்கதாகவும் பெறுமதி வாய்ந்ததா கவும் கருதப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த எமது மூதாதையர்கள் கலை, கலாசார பண்பாட்டு விழுமி யங்களையும் கூடவே எடுத்து வந்திருக்கின் றனர். மனிதனது அனுபவ உணர்வு இரு சக் திகளாக வெளிப்படுத்துவதாக கூறுவார்கள் அதில் முதலாவது உற்பத்திக் கருவிகள் இரண்டாவது கலை வடிவங்கள் உற்பத்திக் கருவிகள் அவனது புறத்தேவைகளான உணவு, பாதுகாப்பு, உடை, வீடு, நுகர் பண்டங்கள் ஆகியவற்றை ஆக்கி மேலும் படைக்க உதவுகின்றன. கலை வடிவங்கள் அவனது அக உணர்வு தேவைகளைப் பூர்த்தி செய்து அவனது ஆக்க சக்திக்கு மேலும் உந்து சக்தியளிக்க உதவுகின்றன. மனிதர் ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே படைப்பாற்றல் உள்ளது என்றும் கூறுவார்கள்.

இதேவேளை கலாசாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூ கத்துக்கு பெற்றுக் கொடுப்பதே கல்வி என்று கலாசாரத்தை முக்கியத்துவப்படுத் துகின்றதையும் நாம் கூறியாதல் வேண்டும். இந்த வகையில் இந்திய வம்சாவளி மக் களின் கலை, கலாசார விழுமியங்கள் பொருள் பொதிந்தவைகளாகவும் முக்கியத் துவம் மிக்கவைகளாகவும் விளங்குவதனை எம்மால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. எமது கலை, கலாசார விழுமி யங்களை பின்வரும் சந்ததிகள் பின்பற்றக் கூடிய வகையில் நாம் உரியவாறு வழிப்ப டுத்துதல் வேண்டும் இல்லையேல் இவை யாவும் தடமிழந்து போகின்ற ஒரு அபாயக ரமான சூழ்நிலையே உருவாகும். இந்நிலை யானது சமூக ரீதியில் பல்வேறு பாதிப்புக ளுக்கும் இட்டுச் செல்வதாக அமையும்.

சமகாலப் போக்குகள்

ஒவ்வொரு சமூகத்தினதும் கலை, கலா சாரப் பண்பாட்டு விழுமியங்கள் முக்கியத் துவம் மிக்கதென்று முன்னர் கண்டோம் எனவே இவ் விடயங்களை குறித்த சமூ கத்தினர் உரியவாறு பயன்படுத்துவ தற்கு ஏனைய சமூகத்தினர் இடையூறாக இருத்தல் கூடாது. அவ்வாறு இடையூறாக இருப்பார்களானால் அது மனிதாபிமான மாகாது. அது மாத்திரமன்றி மற்றவர்களின் சுதந்திரத்தை மீறுகின்ற செயலாகவும் இது அமையும் என்பதே உண்மை. நாம் நமது கலை கலாசாரங்களுக்கு மதிப்பளிப்பதனை போன்று ஏனையோரின் கலை, கலாசாரங்க ளுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும் இவ்வாறு மதிப்பளிக்காத சந்தர்ப்பங்களில் முரண்பாட்டு சூழ்நிலைகள் மேலோங்கி காணப்படுவதனையும் நாம் குறிப்பிட் டாதல் வேண்டும்.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் களின் கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமி யங்கள் அர்த்தம் பொதிந்தனவாக விளங்கு கின்றன. கதைகள் சமூகத்திற்கு ஒரு படிப் பினையாக அமைகின்றன. காமன்கூத்து, பொன்னர் சங்கர் போன்றவைகள் தோட்டத் துக்கு தோட்டம் முறையாக இடம்பெற்று வங் தன. பெரியோர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் இந் நடவடிக்கைகளை மேற்கொண்டு வங் தனர். இன்று நிலைமை தலைகீழாகி இருக் கின்றது. ஏதோ அங்கொன்றும் இங்கொன் றுமாக ஒரு சில தோட்டங்களில் காமன் கூத்து நிகழ்வு இடம்பெற்று கொண்டிருக் கின்றது. இளைஞர்கள் எமது பாரம்பரியங் களை பேணுவதில் காட்டுகின்ற அக்கறை குறைவாகவே உள்ளது. சினிமா மோகம், தொழில்நுட்ப வளர்ச்சி என்பன பாரம்பரிய கலைகளின் மேம்பாட்டிற்கு ஒரு தடைக்கல் லாக விளங்குவதாக புத்திஜீவிகள் விசனப் பட்டு கொள்கின்றனர்

தோட்டங்களில் திருவிழா நிகழ்வுகள் இடம்பெறும் போது முன்பெல்லாம் நாட கங்கள் அரங்கேற்றப்படுவதனை நாம் பார்த்திருக்கின்றோம். இத்தகைய நாடகங்களில் நடித்தும் இருக்கின்றோம். மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததாக இந் நாடகங்கள் இருக்கும். தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் கூட நாடகங்களில் வெளிப்படும். நடிகர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து தனது பாத்திரத்தின் வெற் றிக்கு வலுசேர்ப்பார்கள். ஆனால் இன்று தோட்டங்களில் நாடகங்கள் அரங்கேற்றப் படுவது அபூர்வமாகி இருக்கின்றது. நாட கங்களின் இடத்தை சினிமாப் படங்கள் இப்போது பிடித்திருக்கின்றன. அதிலும் அடிதடி, சண்டை காட்சிகளை கொண்ட படங்களை இன்றைய இளைஞர்கள் அதி கமாக நேசிக்கின்றார்கள் சினிமா படங் களில் வருகின்ற கதாநாயகனை போன்று தன்னையும் சித்திரித்துக் கொண்டு அடிதடிகளில் ஈடுபட்டு கை, கால்களை உடைத்துக் கொள்ளும் இளைஞர் கூட் டமும் எம்மிடையே இருக்கத்தான் செய் கின்றது.

மரண வீட்டில் ஒப்பாரி இல்லை

ஒப்பாரி பாடல்கள் நெஞ்சை உருக்கும் தன்மை கொண்டனவாக விளங்குகின்றன. மனைவி, கணவன் இறந்த பின் பாடும் ஒப்பாரி, தந்தைக்காக மகள் பாடும் ஒப் பாரி, தாய்க்காக மகன்பாடும் ஒப்பாரி, அண்ணனுக்காக தங்கை பாடும் ஒப்பாரி என்று ஒப்பாரி பாடல்கள் பல வகையாகும் பாடலோடு தொடங்கும் மனிதனின் வாழ்க்கை பாடலோடுதான் முடிகின்றது ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என் பார்கள். இதுபோலவே ஆரம்பமாவதும் பாட்டிலேதான். ஆடி அடங்குவதும் பாட் டிலேதான் என்கிறார் டாக்டர் சு.சண்முக சுந்தரம் ஒப்பாரியின் சொற்கள் எல்லாம் சோகச் சுமையுடன் விளங்குகின்றன "தாலியின்னாத் தாலி தங்கத்தால் பொன் தாலி தாலி கழற்றி விட எந்தன் தர்மருக்கே சம்மதமோ" என்று மனைவி கணவனின் இறப்பின் போது பாடும் பாடல் நெஞ்சை வருடுவதாக அமைகின்றது. 

மலையக மரண வீடுகளில் முன்பெல்லாம் ஒப்பாரிக்கு பஞ்சமில்லை. யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் பெண்கள் மரண வீட்டிற்கு வந்து ஒப்பாரி பாடுவர். ஆனால் இப்போது மலையக மரண வீடுகளில் ஒப்பாரிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மூத்த பெண்கள் ஒப்பாரி பாட முன்வருகின்ற போதும் இளம் தலைமுறையினர் இதனை ஒரு ஒவ்வாமை யாக கருதுகின்றனர். ஒப்பாரி என்பது அவர் களுக்கு பிடிக்காத ஒரு விடயமாக உள் ளது கெளரவ குறைச்சலாகவும் இதனை சிலர் கருதுகின்றனர். இவையெல்லாம் எமது சமூகத்தின் பாரம்பரியங்களை நாமே மழுங்கடிக்க செய்கின்ற ஒரு நிலையினை ஏற்படுத்தி இருக்கின்றது. இது போன்றே தாலாட்டுப் பாடல், தெம்மாங்கு பாடல், அம்மன் குழலைப் பாடல் இவையெல்லாம் கூட மெது மெதுவாக அருகிக் கொண்டு வருவதனைக் காணலாம்

இசைக்கருவிகள்

இசைக்கருவிகள் வரிசையில் தப்பு, உடுக்கு, உறுமி என்பவற்றுக்கு எப்போ துமே ஒரு தனித்துவமான இடம் உள்ளது தப்பின் ஒலி பலரையும் ஆகர்ஷித்திருக் கின்றது. வெள்ளையர்கள் கூட தப்பின் ஒலியை மெய் மறந்து ரசித்திருப்பதனை பார்த்திருக்கின்றேன். இவர்கள் தப்பினை வியந்து பாராட்டி இருக்கின்றார்கள் எனினும் தப்பை தொடுவதே தப்பு என்கி றது மரண வீடுகள், கோயில் திருவிழாக்கள் என்பவற்றின் போதும் இன்னும் சில முக்கிய நிகழ்வுகளின் போதும் தப்பின் ஒலி எம்மை யெல்லாம் ஈர்க்கும். எனினும் இப்போது இந்த நிலை மாறி தப்பு மெது மெதுவாக மறைந்து வருவது வேதனைக்குரியதாகும் இதனைப் போன்றே உடுக்கு, உறுமி உள் ளிட்ட இன்னும் சில இசைக்கருவிகளும் சமூகத்தில் இருந்தும் மறைந்து செல்கின் றன. சமூகத்தின் பொக்கிஷங்கள் இவ்வாறு மறைந்து செல்வதென்பது ஒரு சமூகத்தின் தனித்துவம் இழக்கப்படுவதற்கு உந்து சக் தியாக அமையும்.

நாட்டுப்புற பண்பாட்டியல் என்பது கிரா மாந்திர மக்களின் அனுபவத்தின் பொக் கிஷம். மனிதனோடு மனிதனை அது நேரடியாக மட்டுமல்லாது இதயத்தோடு இதயத்தை பிணைத்து வைக்கின்றது. அவர் களுடையதனித்தன்மையைக் குலைக்காமல் ஒற்றுமையை வளர்க்கின்றது. இயற்கை யோடு இணைந்து வாழும் சமூகத்தின் ஒட்டு மொத்தமான அல்லது தனிப்பட்ட உணர்ச்சிகளை அது பிரதிபலிக்கின் றது என்கிறார் சங்கர் சென் குப்தா. குப் தாவின் கூற்றினை உன்னிப்பாக நோக் குதல் வேண்டும். எமது பொக்கிஷங்கள் அழிவடைவதற்கு நாமே காரணகர்த்தாவாக இருந்து விடுதல் கூடாது.

சமூக சீரழிவுகள்

சமூகம் என்பது திடகாத்திரமானதாக இருத்தல் வேண்டும். ஆளுமை மிக்கதாகவும் சகல துறைகளிலும் முன்னேறிச் செல்லும் போக்கினையும் கொண்டிருக்க வேண்டும் கல்வி பல எழுச்சிகளுக்கும் உந்து சக்தி யாக அமைகின்றது. இந்நிலையில் கல்வி மையச் சமூகம் தொடர்பில் இப்போது அதி கமாகவே பேசப்பட்டு வருகின்றது. திட்ட மிட்ட முன்னெடுப்புகளால் திடகாத்திரமான ஒரு சமூகத்தை வலுவிழக்கச் செய்யும் கைங்கரியங்களும் உலக வரலாறுகளில் இடம்பெறாமல் இல்லை. இனவாத சிந்த னையாளர்கள் பிழையான எண்ணங்களை சமூகத்தில் விதைத்து வேரூன்றச் செய்து சமூக இருப்பினை தகர்த்தெறியவும், வலு விழக்கச் செய்யவும் பல்வேறு நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகின்றனர் இனவாதிகளின் குரூர எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் சமூகத்தில் உள்ள புல்லுருவிகள் சிலர் நடந்து கொள்வதால் முழுச்சமூகமும் சீரழிந்து சின்னாபின்ன மாகும் நிலைமை ஏற்படுகின்றது. பிறர் சமூ கத்தைப் பார்த்து எள்ளி நகைக்கும் துர்ப் பாக்கிய நிலைமையும் உருவாகின்றது

இந்த வகையில் மலையக சமூகத்தின் சீரழிவுக்கும் இச்சமூகத்தைச் சார்ந்த சிலரே உடந்தையாக இருப்பது வெட்கக்கேடான செயற்பாடாகும். பல்துறை சார்ந்தவர்களும் இதில் உள்ளடங்குகின்றார்கள்.

லயத்து சூழல்

வீடு என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாகும். தனியே வெயிலுக்கும் மழைக்கும் மட்டுமே ஒதுங்குகின்ற ஓர் ஒதுக்கிடம் அது அல்ல. அது சமூக நிறு வனமும் கூட அங்கே தான் சமூக நாகரி கத்தின் அஸ்திவாரம் இடப்படுகின்றது எனவே வீடு என்பது குறைந்தபட்ச தகு திகளையாவது கொண்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் மா. செ.மூக்கையா தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த வகையில் மலையகத்தின் வீட்டுச் சூழல் தொடர்பில் நாம் சிந்திக்கின்றபோது திருப்தி கொள்ள முடியவில்லை. பாரம்பரிய மாக லயத்து சூழலில் எமது மக்கள் முடங்கி கிடக்கின்றனர் வாழ்வதற்கு பொருத்தமில் லாது, இடிந்து விழும் அபாயத்தை லயன்கள் எதிர்நோக்கி இருக்கின்றன. இந்த லயத்து சூழல் சமூக சீரழிவுகளுக்கு வலுச் சேர்ப்ப தாக புத்திஜீவிகள் விசனப்படுகின்றனர்.

போதிய இடவசதி இன்மை, நெருக்க மாக உறுப்பினர்கள் வாழுகின்ற சூழ்நிலை போன்ற பல விடயங்கள் சமூக சீரழிவுக ளுக்கு வலுச்சேர்க்கின்றன. பொருத்தமில் லாத வயதில் திருமண பந்தத்தில் ஈடுப டுதல், கலாசார முறைமைகள் மீறப்படுதல் என்பவற்றுக்கு லயத்து வாழ்க்கை அடித்தள மாகின்றது. இவற்றோடு லயத்து வாழ்க்கை முறையின் காரணமாக சுகாதார நிலைமை களும் மோசமடைந்து காணப்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கை களில் உரியவாறு ஈடுபடுவதற்கு தடைக் கல்லாக லயத்து சூழல் அமைவதாக ஏற்க னவே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டுள்ளமை தொடர்பிலும் நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். இத்தகைய விடயங்கள் தொடர்பில் நாம் விசாலமான பார்வையினை செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின் றது.

குடிப்பழக்கத்துக்கு அடிமை

ஒரு நாட்டை அழித்து விடுவதற்கு ஆயுதங்கள் தேவையில்லை. ஒரு நாட்டின் இளை ஞரை போதைப் பொருளில் மாட்டி விட்டால் அந்நாடு முழுவதும் திக்கற்று துன்பத்தில் அல்லல்படும். பெளதீக அழிவுகளின் சிதை வுகளில் இருந்து ஒரு நாட்டினை கட்டியெ ழுப்பலாம். ஆயின் உள ரீதியாக இளைஞர் அழிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு எவ்விதத் திலும் விமோசனம் கிடைக்க மாட்டாது என் பது ஆர்.எம்.கல்றாவின் கூற்றாகும். இக் கூற்றில் எத்துணை உண்மை இருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ளுங்கள் திடகாத்திரமான ஒரு சமூ கத்தை போதைப்பொருளில் மாட்டிவிட்டு அவர்களை சகல துறைகளிலும் நிர்க்கதி யாக்கும் முனைப்பில் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமைக்கு உலக வரலா றுகள் சான்று கூறும்.

இந்த வகையில் மலையகத்தை பொறுத் தவரையில் அதிகளவிலான தொகையினர் மதுபாவனையில் ஈடுபடுவதனை அவதா னிக்க கூடியதாக உள்ளது. இளைஞர் குழாம் தீவிர சிரத்தையுடன் இதில் ஈடுபட்டு வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு பாதக விளைவுகளும் இடம்பெற்று வரு வதனையும் எம்மால் அறியக் கூடியதாக உள்ளது. இளைஞர்கள் மற்றும் குடும்பங் களுக்கிடையே விரிசல், நோய்கள், கல்வி பாதிப்பு, இளவயதில் மரணம் உள்ளிட்ட பல்வேறு பாதக விளைவுகளையும் எம்மால் குறிப்பிட்டு கூறுவதற்கு இயலும் போதைப் பழக்கம் பலரது பாதையை மாற்றி இருக் கின்றது. குடியினால் பல குடும்பங்கள் கண்ணிரில் தள்ளாடி வருகின்றன. பல்வேறு வளர்ச்சிப் படிகளை எட்டிப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ள மலையக சமூகத்துக்கு குடிப்பழக்கம் உகந்ததல்ல. சமூகமானது மேலும் மேலும் சீரழியும் ஒரு நிலைக்கே இது இட்டுச் செல்வதாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை

வெளிநாட்டு தொழில்வாய்ப்பு

வருடாந்தம் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண் களின் தொகை கணிசமாக அதிகரித்து வரு வதனை காணலாம். இவர்களுள் மலையகப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வா றாக பெண்கள் வெளிநாடு செல்வதால் பல கணவர்கள் "சின்ன வீடு" செட்டப் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் உரிய காப்பு கணிப்பு இல்லாது துன்பப்படுகின்றனர். கல்வி உரிமையும் இதனால் பாதிக்கப்ப டுகின்றது. வெளிநாடு சென்று மனைவி அனுப்பிய பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு கணவன் ஒட்டாண்டி யாக உட்கார்ந்திருக்கின்றான். பெண்கள் வெளிநாடு செல்வது சமூகச் சீரழிவுக்கு உந்து சக்தியாகின்றது.

பேராசிரியர் சோ சந்திரசேகரனின் கருத்து

ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்தவர்களி னதும் கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமி யங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் சந்திரசேகரன் வலியுறுத்தி கூறினார். சந்திரசேகரன் இது தொடர்பில் மேலும் கூறுகையில், கலாசாரம் என்பது தனித்துவம் மிக்கதாகும். ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினருக்கு உரியவையாக இது விளங்குகின்றது. இந்த வகையில் மலையக மக்களுக்கு என்று தனித்துவமான பாரம்பரியங்கள், கலைகள், மரபுகள் என பலவும் உள்ளன. ஒன்று கலந்து வாழ்தல் என்று முன்னர் ஒரு சம்பிரதாயம் இருந்தது.

எனினும் இப்போது அந்தந்த சமூகத்தினரின் சகலவித உரிமைகளையும் பாதுகாப்பதற் கான முன்னெடுப்புகள் இருந்து வருகின் றன. குறிப்பாக சிறுபான்மையினரின் கலை, கலாசாரங்கள் உள்ளிட்ட பலவற்றையும் பேணுவதற்காக அரசும் சர்வதேச நிறுவனங் களும் கூட ஆதரவு வழங்கி வருகின்றன.15 இலட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் இந்நாட்டில் வாழுகின்றனர். இவர்களுக்கென்று இரண்டு தெரிவுகள் காணப்படுகின்றன. தமது தனித்துவத்தை பேணி முன்னேறி செல்வது என்பது முதல் தெரிவாகும். ஏனைய இனங்களுடன் கலந்து வாழுதல், அவர்களது நடவடிக்கைகளை பின் பற்றுதல் ஏனையதாகும். மலையக இளை ஞர்களிடத்தில் சிங்கள பாணி ஒன்றே தென் படுகின்றது. சிங்களவர்களின் கலாசார மரபுகளின் ஆதிக்கத்தால் எமது இளைஞர்கள் அடித்துச் செல்லப்படும் நிலை ஒன்றும் காணப்படுகின்றது. அறியாமை காரண மாக அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு போகின்ற தன்மையும் காணப்படுகின்றது.

நாம் எவ்வளவு தான் சிங்கள பாணிக்கு மாறினாலும் சிங்களவர்கள் எம்மை சிங் களவர்களாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதனை மலையக மக்களும் இளைஞர்களும் நன்றாக விளங்கி செயற்பட வேண்டும். சிங்களத்தில் பேசி அவர்களது பாணியை பின்பற்றுவதால் நாம் சிங்களவர் ஆகி விடமுடியாது. இந்த நிலையில் எமது தனித்துவத்தை பேணுவ தற்கு ஒரே வழி எமது பாரம்பரிய கலைகளைப் பேணி மதிப்பளிப்பதாகும். கூத் துகள், நாடகங்கள், விளையாட்டுகள், இசைக்கருவிகள், பழமொழிகள், விடுகதைகள், பாடல்கள், ஆடல்கள், நம் வழிபாடுகள், கைவினை கலைகள், புராணங்கள், கதைகள் எனப் பலவும் உரியவாறு பாதுகாக்கப்பட்டு மதிப் பளிக்கப்படுதல் வேண்டும். சுமார் இரு நூறு வருட காலமாக இந்திய வம்சாவளி மக்கள் பாரம்பரிய கலைகளைப் பேணி வந்திருக்கின்றனர். இனியும் தொடர்ச்சியாக நாம் இவற்றை பேணுவதிலேயே எமது தனித்துவம் தங்கியிருக்கின்றது.

வடக்கு, கிழக்கிலே போராட்டங்கள் இடம் பெற்றன. எதற்காக இந்த போராட்டங்கள் இடம் பெற்றன என்று சிந்திக்கின்ற போது தமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை, மரபுகளை, உரிமைகளை, பாரம்பரிய வாழ்விடத்தினை பாதுகாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்குடனேயே அவர்கள் போராட்டங்களில் குதித்தனர். இவற்றை நாம் ஒரு போதும் மறந்து விடுதல் கூடாது. நாம் யார்? எமது அடையாளம் என்ன? என்கிற கேள்வி எப்போதுமே தொக்கி நிற்கும். கலாசாரத்தை நாம் இடமாற்றம் செய்ய முடியாது. எங்களது அடிப்படையான சில அடையாளங்களை நாம் ஒரு போதும் மாற்றவே முடியாது. இதனை நாம் நன்றாக புரிந்து கொள்ளுதல் வேண்டும். அரசாங்க மட்டத்தில் தமிழர்களின் பண்பாடு கலைகளை பேணுபவர்களுக்கு பட்டங்களையும், விருதுகளையும் வழங்குகின்றார்கள். அரசாங்கமே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது மலையக மக்களும் அந்த உணர்வுடன் செயற்படுவது மிகவும் அவசியமல்லவா? 

கோயில்கள் கூட ஒரு கலாசார நிலையங்களேயாகும். கலாசார மையங்களாக இவை விளங்குகின்றன. கோயில்களிலும் பல கலாசார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனவே கோயில்களை நாம் உரியவாறு பேணுவதன் அதன் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் ஊடாகவும் கலாசாரத்தையும், தனித்து வத்தினையும் பேணுவதற்கு முடியும். பாரம்பரியங்களை மறந்து செயற்படுவதன் காரணமாக சமூக சீரழிவுகள் பலவும் இடம்பெறுகின்றன என்பதனையும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். தமிழ்ப் பாரம்பரியங்களை பின்பற்றி கிரியைகள் இடம்பெறுதல் வேண்டும். எனினும் இன்று நிலைமை மாறிச் செல்வதாக பலரும் ஊடாகவும், விசனப்பட்டு கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது. கலாசாரத்தை நாம் இழந்து விடுவோமாயின் எல்லாவற்றையும் இழந்து விடுவோம். நாங்கள் வலிந்து சென்று எங்களது கலாசாரத்தை இழக்கின்றோம் என்பது வருந்தத்தக்க விடயமாகும். அவரவர்களின் கலாசாரத்தை அவரவர்கள் பின்பற்றுதல் வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தோட்டப்புறங்களில் ஸ்தாபன ரீதியான ஒழுங்கமைப்பு காணப்படுகின்றது. இந்த ஒழுங்கமைப்பினை பயன்படுத்தி மலையக மக்களின் சகலதுறை சார் எழுச்சிக்கும் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படுதல் வேண்டும். புத்திஜீவிகளின் பங்களிப்பு அவசியமாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates