Headlines News :
முகப்பு » , , , » புகைப்படங்களால் இலங்கையை பதிவாக்கிய வில்லியம் ஸ்கீன் - என்.சரவணன்

புகைப்படங்களால் இலங்கையை பதிவாக்கிய வில்லியம் ஸ்கீன் - என்.சரவணன்

(அறிந்தவர்களும் அறியாதவையும் - 9)

சென்ற தடவை லொவினா பற்றி எழுதும் போது ரொடி சாதிப் பெண்கள் தமது மார்புகளை மறைப்பதற்காக பட்ட துன்பங்கள் பற்றியும் சில அடிப்படையான குறிப்புகளை வெளியிட்டிருந்தேன்.

ரொடி மக்கள் பற்றி நாம் இணையத்தில் தேடுகிற போதும், ஏன் இலங்கை பெண்கள் பற்றி தேடுகிற போதும் மார்புகளை வெளிக்காட்டியபடியான பழைய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் பல உடனே வந்து நிற்பதை அவதானித்து இருப்பீர்கள். நமது பெண்களை இப்படி அரைநிர்வாணமாக படங்களை அன்று எடுத்துத் தள்ளியது ஏன்? யார் இதனை செய்தார்கள். அவர்களின் நோக்கம் தான் என்ன? அன்றைய காலத்து ப்ளேபோய் வகையறாவை சேர்ந்ததா இது என்கிற சந்தேகம் கூட பல தடவை எழுந்திருக்கிறது.

அப்படி தேடும் போது தான் வில்லியம் ஸ்கீன் பற்றிய அறிய தகவல்கள் கிடைத்தன. அவர் 150 வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஐந்து நூல்களைக் கூட கண்டெடுக்க முடிந்தது.


இலங்கையின் பழமைவாய்ந்த புகைப்பட ஸ்டூடியோவாக ஸ்கீன் (W.L.H. Skeen & Co.) நிறுவனம் இருந்து வந்திருக்கிறது. இங்கிலாந்துப் பேரரசின் காலனித்துவ நாடுகளாக இருந்த இலங்கை, இந்திய  நாடுகளை புகைப்படங்களுக்கு ஊடாக பதிவு செய்தவர்கள் இவர்கள். இலங்கையின் முதன் முதல் தொழில்முறைசார் அரசாங்க அச்சகம் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான். பிரித்தானிய காலனித்துவத்தின் போது இலங்கை சார் அரசாங்க வெளியீடுகள் பலவற்றை இதன் மூலம் தான் வெளியிடப்பட்டன. அன்றைய காலத்தில் மிகவும் புகழ்பெற்ற புலமைத்துவ சஞ்சிகையான “Ceylon Asiatic Society”ஐயும் இவர்களால் வெளியிடப்பட்டு வந்திருக்கிறது. அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதே பெரும் கௌரவமாக கருதப்பட்ட காலப்பகுதியில் ஸ்கீனும் அதன் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

லண்டனில் பிறந்த ஸ்கீன் (William Skeen 1822-1872) அரசாங்க அச்சகராக (Printers) இலங்கைக்கு 1849 நியமனமானார். அவரது தகப்பனார் ரொபர்ட்டும் இங்கிலாந்தில் ஒரு அச்சகர். லண்டனில் பிறந்த ஹென்றி, எட்வர்ட், ஜோர்ஜ் ஆகிய அவரது புதல்வர்கள் மூவரும் கூட அச்சகர்களாக ஆகி தகப்பனின் தொழிலையே இலங்கையில் மேற்கொண்டதுடன் அவர்களும் இலங்கை பற்றிய ஆய்வு நூல்களை வெளிக்கொணர்ந்தார்கள். வில்லிய தனக்கு உதவியாக அவரின் சகோதரர் ஹென்றியை 11.07.1852 இல் இலங்கைக்கு அழைத்துக்கொண்டார். ஆனால் ஆறே மாதத்தில் 26.12.1852 இல் ஹென்றி மரணமானார். அன்று ஆங்கிலேயர்கல் பலரைப் புதைத்த காலி முகத்திடல் மயானத்தில் அவர் புதைக்கப்பட்டார்.

லண்டனில் புகைப்படத்துறையை கற்றுக்கொண்டிருந்த வில்லியத்தின் மகன் ஹென்றியை (William Louis Henry Skeen 1847–1903) தயார்படுத்தினார். ஹென்றி இலங்கை திரும்பியதும் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த “S. Slinn & Co” என்கிற ஸ்டூடியோவை 1860 ஆம் ஆண்டு வாங்கி ஹென்றியிடம் ஒப்படைத்தார் வில்லியம். ஹென்றி ஸ்கீன் 1868இல் “W.L.H. Skeen & Co” என்று அதன் பெயரை மாற்றினார். இவர் தான் இலங்கை பற்றிய புகைப்படங்கள் பலவற்றை எடுத்தவர். தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் மாத்திரம் வில்லியம் ஸ்கீனின் 5927 புகைப்படங்கள் தொகுப்பாக இருப்பதாக அறியக் கிடைக்கிறது. (Guide to Collections of Photographs of Ceylon, circa 1850-­1915 Compiled by Benita Stambler)

இவர்களில் எட்வர்ட் (Frederick Albert Edward) 1887 வரை சகோதரனுக்கு உதவியாக இருந்து விட்டு பர்மாவுக்கு சென்று ரங்கூனில் ஒரு ஸ்டூடியோவை நடத்தினார். 1903 இல் ஹென்றியின் மரணத்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய எட்வர்ட் ஸ்டூடியோவை பொறுப்பேற்று அதற்கு “F. Skeen and Co” என்று பெயரை மாற்றிக் கொண்டார். 

இவர்கள் அனைவருமே புகைப்படக் கலைத்துறையில் ஜாம்பவான்களாக இருந்திருக்கிறார்கள். அச்சகர்களாகவும், ஆய்வாளர்களாகவும் இருந்தபோதும் அவர்கள் இன்றளவிலும் புகைப்படக் கலைஞர்களாகத் தான் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்த ஸ்டூடியோ 1920கள் வரை இயங்கியிருக்கிறது.

w.l.h.-skeen-&-co.-1870
ஜோர்ஜ் (George J.A. Skeen) எழுதிய கொழும்புக்கான வழிகாட்டி (Guide to Colombo - 1898), கண்டிக்கான வழிகாட்டி (A guide to Kandy - 1903) ஆகிய நூல்களும் கூட மிகவும் சுவாரசியமான தகவல்களையும், பல அறிய புகைப்படங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமன்றி அவர் ஒரு அரசாங்க அச்சகராக ‘ராஜாவலிய”. “பூஜாவலிய” போன்றவற்றையும் ஆங்கிலத்தில் முதன் முதலாக வெளியிட்ட பதிப்பாளர். இலங்கையின் அச்சுத் துறை வளர்ச்சியில் ஸ்கீன் குடும்பத்தவர்களின் பங்கு அளப்பரியது என்று தான் கூற வேண்டும். ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னர் அவர்களால் பதிக்கப்பட்ட நூல்கள் பலவற்றில் விளம்பரங்களைக் கையாண்டிருக்கிற விதத்தைப் பார்த்தால் இன்றும் அதே வடிவமைப்பையே பல சஞ்சிகைகள் தொடர்கின்றன என்பதை கண்டு கொள்ள முடிகிறது. அந்த பாணியை உருவாக்கி பரவ விட்டது இவர்களாக இருக்கலாம். இந்த நூல்களெல்லாம் பல பதிப்புகளை கண்டவை என்று அறிய முடிகிறது.

இவர்களால் வெளிக்கொணரப்பட்ட புகைப்படங்களுக்கு ஊடாகத்தான் நம் மக்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. இன்று இலங்கையர் பற்றி இணையங்களில் தேடுகின்ற போது கிடைக்கின்ற பல பழைய புகைப்படங்கள் இவர்களால் எடுக்கப்பட்டது தான் அதிகமாக காணக் கிடைக்கின்றன.
கொழும்பு 1881-82 இப்புகைப்படம் பின்னர் J N Daltonஆல் (1839-1931) தொகுக்கப்பட்டு  4வது ஜோர்ஜ் அரசருக்கு பரிசளிக்கப்பட்டது. இப்புகைப்படத்தில் இந்த மரங்களை ஊடறத்து கொழும்பு துறைமுகத்தினூடே தொலைவில் கோட்டை மணிக்கூண்டு கோபுரமும் தெரிவதைக் காணலாம்
903-1906 இல் வெளியான 1533 பக்கங்களைக் கொண்ட “பெர்குசன் டிரக்டரி” (Ferguson's Ceylon Directory 1903-6) வெளியிட்ட தகவல்களின் படி இவர்கள் மேலும் சில அரசாங்க தொழில்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். உதாரணதிற்கு களஞ்சிய பொறுப்பாளர்களாகவும் (Store keeper) இருந்து வந்திருக்கிறார்கள்.
இதே 19ஆம் நூற்றாண்டில் Julia Margaret Cameron, Joseph Lawton, Charles Scowen போன்றோரும் இலங்கையை புகைப்படங்களின் மூலம் பதிவு செய்த கலைஞர்கள் என்பதை இங்கு குறிப்பிடவே வேண்டும்.

ஆங்கிலேயர்கள் பலர் நமக்கு தமது எழுத்துக்களின் மூலம் நமது வரலாற்றை மீட்டுத் தந்தார்கள் என்றால் ஸ்கீன் போன்றோர் 150 வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோரும், நமது நாடும், மக்களும், சூழலும் வாழ்க்கையும், அமைப்பும் எப்படி இருந்தன என்பதை புகைப்படமாக நமக்கு விட்டுச் சென்ற பெருமை ஸ்கீனைச் சாரும்.

19 ஆம் நூற்றாண்டில் மலையக மக்கள், அவர்கள் மேற்கொண்ட கூலி உழைப்பு, அவர்கள் ஈடுபடுத்தப்பட்ட துறைகள், ரயில் பாதைகள் அமைத்தல், ரயில் சுரங்கங்கள் அமைத்தல், கோப்பி பயிர்செய்கையிடுதல், என்பன பற்றி நாம் இன்று காணும் பல அரிய புகைப்படங்கள் பல கூட ஸ்கீனால் அன்று வெளியிடப்பட்டவையே.

புகைப்படத்துறையில் செய்த சாதனைக்காக 1990 இல் பாரிஸ் சர்வதேச தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். கொழும்பு சதாம் வீதியில் 41 வது இலக்கத்திலும், கண்டியில் இல.21 - வார்ட் வீதியிலும் ஸ்டூடியோவும், புகைப்படக் காட்சிக் கூடமும் நெடுங்காலமாக இயங்கி வந்துள்ளது. 

ஸ்கீன் மேலாடை மறுக்கப்பட்ட ரொடி சாதிப் பெண்களை தனது ஸ்டூடியோவுக்கு அழைத்து பலவிதமான பின்னணிகளுடன் ஏராளமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை “ரொடியோ பெண்கள்” ('Ceylon Observer', Colombo) என்கிற தலைப்பிட்டு தபால் அட்டைகளாக அச்சிட்டு விற்பனை செய்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேயர்கள் பலர் இந்த தபால் அட்டைகளை உலகெங்கிலும் தமது கடித அட்டைகளாக தபாலிட்டிருக்கின்றனர்.

“நக்கிள்ஸ் மலைத்தொடர் மேலிருந்து  கவிதை : இலங்கையில் மலை வாழ்க்கையும் கோப்பி பயிர்ச்செய்கையும்” என்கிற 186 பக்கங்களைக் கொண்ட நெடுங்கவிதைகளின் தொகுப்பொன்றை முதன் முதலில் வெளியிட்டார். தான் கண்ட அனுபவங்களையும் மலையக மக்களைப் பற்றியும் கூட கவித்துவமாக படைத்திருக்கிறார். அந்த நூலின் இறுதி 22 பக்கங்களில் வரும் பெருமதி மிக்க வரலாற்றுக் குறிப்புகளையும் பல தகவல்களையும், தரவுகளையும் உள்ளடக்கியது.

"Adam's Peak" ஆதாமின் சிகரம் (நாம் சிவனொளி பாத மலை என்று அழைக்கின்றோம்) என்கிற அவரின் நூல் அந்த மலை பற்றிய முக்கிய ஆய்வுகளின் ஒன்று. 1860இல் அவர் முதற்தடவையாக அம்மளைக்குச் சென்று அதன் சூழலில் சொக்கிப்போன அவர் அதன் பின்னர் பல தடவை அங்கு சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களைத் தான் அவர் தகவல்பூர்வமாக நூலாக்கினார். அம்மலை பற்றிய ஐதீகங்கள், வரலாறு, அமைவிடம், சுற்றுச் சூழல், அவற்றின் விளக்கப் படங்கள் என பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய 408 பக்கங்களைக் கொண்ட அந்த நூல் 1870 ஆம் ஆண்டு வெளிவந்தது. இன்றும் பல வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரமாக பயன்படுத்தும் நூல் அது. சிங்களத்தில் கொடகே பதிப்பகம் அதன் மொழிபெயர்ப்பை 2006 இல்  (ශ්‍රී පාද සමනල : ජනප්‍රවාද පුරාවෟත්ත හා ඓතිහාසික තොරතුරු) வெளியிட்டது. அம்மலையின் வரைபடத்தைக் கூட முதற்தடவையாக அந்த நூலில் வெளியிட்டிருந்தார்.

“இந்த ‘ஆதாம் மலை’ அளவுக்கு சிறப்பு வாய்ந்த ஒரு மலை உலகில் இருக்க முடியாது, இதுவரை இங்கு உலகெங்கிலும் இருந்து வந்துபோனவர்கள் இம்மலை பற்றி பதிவு செய்திருப்பது மிகமிக குறைவானதே” என்றும் அந்த நூலில் குறிப்பிடுகிறார். அதன் குறைப்பட்டையே இயன்றளவு ஸ்கீன் நிரப்ப முற்பட்டிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

வில்லியம் ஸ்கீன் எழுதிய “பண்டைய அச்சுக்கலை” (Early Typography) என்கிற நூல் 15ஆம் நூற்றாண்டு தொடக்கம் அச்சுக்கலையும், எழுத்துருவங்களும் கடந்து வந்த வரலாற்றுப் பாதை பற்றிய விளக்கங்களைக் கொண்ட 435 பக்கங்களைக் கொண்ட விரிவான நூல் 1872 இல் வெளியிட்டார். இந்த நூல்களெல்லாம் பல தடவைகள் பல நாடுகளில் பல பதிப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் கண்டவை.

புகைப்படத்துறை, ஆய்வுத்துறை, அச்சகத்துறை ஆகியன ஒன்று சேர கைவரப் பெற்றதால் இந்த முத்துறையையும் ஒன்று சேர்த்த அவர்களின் படைப்புகள் வெற்றியளித்துள்ளன. இன்று நாமும் அதனை அனுபவிக்கிறோம். ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னரே ஆயிரக்கணக்கான நம்மவர் முகங்களை உலகத்துக்கே அறியத்தந்தவர்கள்  அவர்கள். இன்று அவர்களின் முகத்தைக் கொண்ட ஒரு புகைப்படத்தைக் கூட கண்டெடுக்க முடியாதது தான் இதில் உள்ள பெரிய சோகம்.

ஆதாம் மலை (சிவனொளி பாதமலை) பற்றிய நூலை கீழே உங்களுக்காக இணைத்திருக்கிறேன்.

வில்லியம் ஸ்கீனின் மூன்று நூல்கள்
  1. Mountain Life and Coffee Cultivation in Ceylon - A Poem on the Knuckles Range, with Other Poems – 'Ceylon Observer', Colombo - 1868
  2. ADAM'S PEAK: Legendary Traditional and Historic Notices of the Samanala and Srí-Páda with a Descriptive Account of the Pilgrims' Route from Colombo to the Sacred Foot-print - W.L.H. Skeen & Company - 1870
  3. Early Typography - William Skeen – Government Printer - 1872


Share this post :

+ comments + 1 comments

நமது நாடு

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates