Headlines News :
முகப்பு » , » 70 களின் மனித உரிமை முன்னோடி போல் கெஸ்பஸ் அடிகளார் காலமானார்

70 களின் மனித உரிமை முன்னோடி போல் கெஸ்பஸ் அடிகளார் காலமானார்


வணக்கத்துக்குரிய பிதா போல் கெஸ்பஸ் அடிகளார் ஏப்ரல் 25 காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் 28 வெள்ளி மாலை 5மணிக்கு இடம்பெறவுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை உக்கிரமம் பெற்றுக்கொண்டிருந்தபோது அதன் தீர்வுக்காக இயங்கும் நோக்கில் அவர் 1979இல் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தை (மேர்ஜ் - MIRJE - Movement for Inter-Racial Justice and Equality) ஆரம்பிப்பதில் முன்னோடியாக இருந்தார். இந்த அமைப்பின் பல்வேறு வேலைத்திட்டங்களின் ஒன்றாகத்தான் யுக்திய என்கிற சிங்கள மாற்றுப் பத்திரிகையும், தமிழில் "சரிநிகர்" மாற்றுப் பத்திரிகையும் வெளியானது.

மேர்ஜ் இயக்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் அவர் இயங்கினார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜே.ஆர்.அரசாங்கம் தமது இரும்புக் கரங்கள் கொண்டு ஒடுக்கியவேளை அதை எதிர்த்து சுதந்திர இயக்கமாக அன்று களத்தில் இயங்கியது மேர்ஜ் இயக்கம். அந்த போராட்டங்களுக்கு போல் கெஸ்பஸ் அடிகளார் தலைமை தாங்கியவேளை அவருடன் ரெஜி சிறிவர்த்தன, பாலா தம்பு, சார்ல்ஸ் அபேசேகர, சுனிலா அபேசேகர, ஜோ செனவிரத்ன போன்றோரும் ஒன்றிணைந்தனர். 

அப்போதெல்லாம் தந்திச் செய்திகள் தான் சாத்தியம். வடக்கு கிழக்கு பகுதிகளில் நேர்ந்த அரச அடக்குமுறைகளை எதிர்த்து அவர் ஜே.ஆருக்கு தந்தி மூலம் அனுப்பிய கண்டனங்கள் நூற்றுக்கணக்கானவை. அவற்றை அறிக்கைகளாக பல சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தியவர்.

1979 இல் அவரசகால சட்டத்தை அமுல்படுத்தி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட அரச அடக்குமுறைகளை எதிர்த்து போல் கெஸ்பஸ் அவர்களின் தலைமையிளான மேர்ஜ் தூதுக் குழுவினர் "1979 அவசரகாலச் சட்டம்" என்கிற ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை ஜே.ஆர் அரசாங்கம் பதவி ஏற்று இரு வருடங்களிலேயே மீறிய மனித உரிமைகளை உலகுக்கு எடுத்துரைத்தது.

அந்த காலப்பகுதியில் மேர்ஜ் நிறுவனத்துக்கு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அலுவலகங்கள் இயங்கின. இந்த அலுவலகங்கள் தமிழ் மக்கள் தாம் எதிர்கொண்ட அடக்குமுறைகளை எடுத்துச் சொல்லும் இடமாக திகழ்ந்தன.

அந்த இயக்கத்தின் பணிகளை ஏனைய சக செயற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் மலையகத்தில் இயங்கத் தொடங்கினார். மலையக மக்களின் துன்பங்களை பதிவு செய்வது, வெளியுலகுக்கு எடுத்துச் சொல்வது அதற்கான சக்திகளை ஒன்றிணைப்பது என்று பாரிய பணியாற்றினார். தொழிற்சங்கங்கள், அரசியல கட்சிகள், சிவில் அமைப்புகள் என்பனவற்றை ஒன்றிணைத்து கணிசமான அளவு அவர் பணியாற்றியிருக்கிறார்.

கண்டியில் அவர் பிஷப் லியோ நாணயக்காரவுடன் சேர்ந்து 1972இல் தொடங்கிய "சத்யோதய" (Satyodaya) நிறுவனம் மலையகம் பற்றிய ஆய்வாளர்களுக்கு கைகொடுக்கும் மிகவும் முக்கியமான கேந்திர நிலையம்.

இலங்கையின் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டைப் பொறுத்தவரை 1970 களின் நடுப்பகுதியிலிருந்து ஒரு மனித உரிமை முன்னோடியாக வரலாற்றில் பதிவானவர் போல் கெஸ்பஸ் அடிகளார்.

நமது மலையகம் இணையத்தளம் நன்றியுடன் அவருக்கு அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்துகிறது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates