Headlines News :
முகப்பு » » மலையகமெங்கும் தொடர் போராட்டம்! வீதிகளை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மலையகமெங்கும் தொடர் போராட்டம்! வீதிகளை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நியாயமான சம்பளத்தை வழங்குமாறு கோரியும் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மலையகமெங்கும் நேற்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாகவும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் மேற்கொண்டனர்.

இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் ஒப்பாரி வைத்தது போன்றே நேற்று ஐந்தாம் நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து மறியல் போராட்டத்தை நடத்திய தொழிலாளர்கள் ஒப்பாரி தமது அவலத்தினை பறைசாற்றினர். 

அத்துடன் உருவ பொம்மையை எரித்து தமது எதிர்ப்பினை வெ ளியிட்ட தொழிலாளர்கள், வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் குறுக்காக படுத்தும் தமது எதிர்ப்பினை வெ ளிப்படுத்தினர். இதனால் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

கடந்த ஐந்து தினங்களாக இவ்வாறு வீதிகளில் இறங்கிய தோட்டத் தொழிலாளர்கள் தமது கடுமையான ஆட்சேபத்தையும் முதலாளிமார் சம்மேளனத்தின் மீதான வெறுப்பினையும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான ஆதங்கத்தினையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி வருகின்றனர்.

நேற்றுக் காலை 9 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பூ சந்தியில் கூடிய 2000இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீதியை முற்றாக மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதானியொருவரது உருவபொம்மையை வீதியின் நடுவே நிறுத்தி தீ வைத்துக் கொழுத்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

கொட்டகலை, பத்தனை ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட 42 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே இவ்வாறு மல்லியப்பூ சந்தியில் ஒன்றுகூடினர். இதனால் இங்கு போக்குவரத்துமுற்றாக தடைப்பட்டதுடன் நெரிசலான நிலையும் ஏற்பட்டது. 

இதேபோன்று பூண்டுலோயா பகுதியிலும் தொழிலாளர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை ரம்பொடை, பெரட்டாசி தோட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

அதேபோன்று நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் டேவோன் மற்றும் சென்ட் கிளேயர் வீதியையும் மறித்த தொழிலாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதத்தில் தமது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை கினிகத்தேனையில் கெனில் வத்த தோட்ட மக்கள் தமக்கு நியாயமான சம்பளம் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இரத்தத்தை மண்ணிற்கு உரமாக சிந்தும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே என்று கோஷமிட்டவாறு தமது எதிர்ப்பினை அவர்கள் வெளியிட்டு பேரணியாக சென்றனர்.

இதேபோன்று ஹேவாஹெட்ட ஹோப் தோட்டத் தொழிலாளர்களும் ராஹாத்துங்கொட, முல்லோயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பதாகைகளை ஏந்தி எதிர்ப்புக் கோஷங்களை வெளியிட்டு பேரணியாக சென்று தமது எதிர்பினை வெளிக்காட்டும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்த கூட்டு ஒப்பந்தம் 17 மாதங்களாகியும் புதுப்பிக்கப்படவில்லை. அத்துடன் பத்து தடவைகள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் வெற்றியளிக்கவில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் சாதகமான தன்மை ஏற்படாததுடன் இழுத்தடிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 இந்நிலையிலேயே தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக உணர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்த தொடங்கினர். கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை அட்டனில் முதலாவதாக தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாகவும் வீதிகளை மறித்தும் டயர்களை எரித்தும் உருவ பொம்மைகளை எரித்தும் பேரணிகளை நடத்தியும் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். 

அதுமாத்திரமின்றி கம்பனிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தோட்டத் தொழிலாளர்கள் தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

இதன்போது " முதலாளித்துவமே வேலைக்கேற்ற சரியான நிரந்தர ஊதியத்தை கொடு ", "தொண்டா எங்கே ஆயிரம் ரூபா" "கூட்டு ஒப்பந்தம் வேண்டாம்", "நெருப்புடா நெருங்குடா வைச்சிட்டாங்க ஆப்புடா"

 "1000 ரூபா சம்பளம் கொடு", "கம்பனி பொறுப்பாளர்களே சுகபோகம் அனுபவிப்பது நீங்கள், சுமை எம்மீதா?உடன் உயர்த்து சம்பளத்தை"

 "எங்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடு", "பதவியை மட்டும் பார்க்காது வாக்களித்தை மக்களையும் நிமிர்ந்து பாருங்கள்", "18 மாதம் கடந்தும் சம்பளம் ஏன் இன்னும் தாமதம்"

 "நாங்களும் இந் நாட்டு மக்களே நல்லாட்சி எங்கே", "அரசே நிம்மதி எப்போது மலையகத்துக்கு" "எங்களை பழிவாங்குவது கம்பனியா அரசா", "அடிமை என்று நினைத்தாயா அக்கினியாய் எழுந்திடுவோம்" 

"ஏழையின் இரத்தத்தை உறிஞ்சாதே", "முதலை தோல் போத்திய முதலாளியே எமக்கு 1000 ரூபா சம்பளம் கொடு," 

உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி தமது எதிர்ப்பினை காட்டினர். 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates