Headlines News :
முகப்பு » » பெருந்தோட்டப் பொருளாதாரமும் பெருகிவரும் வாழ்க்கைச் செலவும் - சு.நிஷாந்தன்

பெருந்தோட்டப் பொருளாதாரமும் பெருகிவரும் வாழ்க்கைச் செலவும் - சு.நிஷாந்தன்


இலங்கையின் பொருளாதாரம் கடந்த இரு ஆண்டுகளாக பாரிய வீதம் வீழ்ச்சியடைந்துள்ளமை நாட்டின் பொருளாதார அபிவிருத்திச் சுட்டியின் மூலம் யாவரும் அறிந்திருக்கக் கூடும். 2012ஆம் ஆண்டு 7.2வீதமாக இருந்த எமது பொருளாதரம் கடந்த 2014ஆம் ஆண்டில் 6.5வீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது.  தற்போதைய அரசு இலங்கையின் நாணயத்தை உலக சந்தையில் மிதக் விடப்பட்டிருப்பதால் பொருளாதாரம் மெல்ல மெல்ல நலிவடைந்து வருகிறது. இதன் தாக்கம் இலங்கையில் மத்தியதர வர்க்கத்திற்கே ஈடுகொடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. மத்தியதர வர்க்கமே இவ்வாறு அல்ல படும் நிலையில் வருமைக் கோட்டுக் கீழ் வாழும் மலையக சமூகம் எவ்வாறு ஈடுகொடுக்கும் என்று கடுகளவும் எண்ணிப் பார்க்க  முடியாதுள்ளது.

இந்திய வம்சாவளி மக்கள் இனத்துவ அடிப்படையில் இந்த நாட்டில் நான்காவது நிலையில் கணிக்கப்படுகின்றனர். இவர்களின் பொருளாதாரமும் நான்காம் தரத்தில்தான் உள்ளது. பொருளாதார ரீதியில் நோக்குமிடத்து ஏனைய சமூகங்களை விட முற்றிலும் மாறுப்பட்ட வித்தில் மலையக மக்களின் பொருளாதாரம் காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் தம்முடைய மாத சம்பளத்திலேயே தங்கியுள்ளது. பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியை முன்னிறுத்தி ஆரம்பித்த இந்த மக்களின் பொருளாதாரம் இன்று அந்தப் பயிர்களாலேயே வீழ்ச்சியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மிக நீண்டகாலமாக தொழிற்சங்கள் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை நிலையை தீர்மானித்தும், பாதுகாத்தும் வந்துள்ளன வருகின்றன. 1988ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் மீள வழங்கப்பட்டதன் பின்னரே அரசின் அபிவிருத்தித் திட்டங்களும், பார்வையும் இந்திய வம்சாவளி தமிழர்களின் பக்கம் திரும்பியதுடன்,  மக்கள் சார் நலனில் அக்கரையும் ஓரளவு செலுத்தப்பட்டது.

படிப்படியாகப் பெற்றுக்கொண்ட பிரதிநிதித் துவமும்,  பேரம் பேசும் தொழிற்சங்க சக்தியுமே இந்த மக்களை அரசின் பங்கு தாரர்களாகச்  சேர்த்துக்கொள்ள வழிவகுத்தது. தொழிற்சங்கள் அடிப்படையில்  மலையக மக்களை முன்னிறுத்தி பேரம் பேசும் சக்தியாக வலுவடைந்ததால் இவர்களின் பொருளாதார நலனில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பிரிக்க முடியாத சக்தியாக உருவெடுத்தன.

1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையின் காரணமாக இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதித்துவங்கள் மாகாண, உள்ளூராட்சி மட்டத்தில் ஓரளவு கிடைக்கப் பெற்றதால் காலங்காலமாகத் தட்டிக்கழிக்கப்பட்டுவந்த இந்த மக்களின் அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மாகாணசபை, உள்ளூராட்சிசபைகளில் கேள்வியெழுப்பட்டது.

1972முதல் 1992ஆம் ஆண்டுவரை தோட்டங்கள் அரசுடமையின் கீழ் காணப்பட்டமையால் இவர்களின் பொருளாதார நலன்களில் அரசு ஓரளவு அக்கரைக் கொண்டிருந்தது. வாக்கு வேட்டைக்காவது அரசு அவ்வப்போது ஒருசில திட்டங்களை முன்னெடுத்தது. 1992ஆம் ஆண்டின் பின்னர் முழுமையாகத் தோட்டங்கள் தனியார் முதலாளிமார்களிடம் ஒப்படைக்கபட்டமையின் காரணமாக அரசு இவர்களின் நலன் தொடர்பில சிந்திக்கவில்லை காரணம் அரசு வகித் இடத்திற்குத் தொழிற்சங்கள் தலைமைத்தாங்க தொடங்கின.

1977ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி உருவானதால் இங்கு முதாளிவதுத்தை முதன்மைப்படுத்திய பொருளாதாரத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாகத் தோட்டப்புற மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவைச் சந்தித்தனர். இக்காலப்பகுதியில் போசாக்கின்மை, ஊக்கச்சத்தின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மலையகத்தில் தலைவிரித்தாட தொடங்கின.  குறிப்பாக 1974ஆம் ஆண்டு தேசிய ரீதியில் இறப்பு வீதம் 8.5ஆக காணப்பட்ட போது மலையகத்தில் 15.5வீதத்தை கடந்திருந்தது.

இந்த நாட்டின் பொருளாõதரத்தின் முதுகோடிகளாக உள்ள பெருந்தோட்ட மக்கள் குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்தப் பின்னர் பாரிய சிக்கல்களை இன்றளவும் சந்தித்து வருகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 10 மாதங்கள் கடக்க உள்ள நிலையில் அரசும் சரி அல்லது வேறு எந்தவொரும் அமைப்பும் சரி  இதுவரை அக்கறைக் கொண்டுசெயற்படவில்லை.

வீடுகள், போக்குவரத்து, அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி எனப் பொருளாதார இருப்பைத் தக்கவைக்கும் எந்தவொரும் அம்சமும் மலையக மக்களுக்கு முறையாக ஒழுங்குப்படுத்தவும் இல்லை. அதற்கு அரசும் வழிகோலவும் இல்லை. இந்த மக்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கின்ற பொருளாதார ஒழுங்கமைப்புகள் அல்லது திட்டங்கள்  என்று ஒன்றும் இல்லை. நாட்டுக்கு உழைத்து கொடுப்பது மட்டுமே இவர்களுக்கும் தெரிந்ததாகும். கண்மூடித்தனமாக நாட்டுக்காக உழைத்து உழைத்து தங்கள் பொன்னான வாழ்வை அர்ப்பணம் செய்கின்ற இந்த மக்களின் வாழ்க்கைச் செலவை ஈடுக்கொடுக்க எந்தவொரு ஏற்பாடும் இல்லை.

தோட்டங்கள் தனியார் உடமையாக்கப்பட்டபோது  வெத்து மந்தாப்புக்காகத் தோட்டக் கம்பனிகள் தொழிலாளர் நலன் சார்ந்து செயற்படுவதுபோல் காட்டிக்கொண்டன. மறுபக்கத்தில் ஒட்டுமொத்த வருமானத்தையும் ஆங்கிலேய காலனித்துவத்தில் போல் சுரண்டிக்கொண்டன  சுரண்டிக்கொண்டிருக்கின்றன.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் இந்த மக்களின் பங்கு கணிசமாக உள்ள நிலையிலும் இன்றுவரை இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்திக்கொள்ள போதுமான பொருளாதார சக்தியை அரசும் கொடுக்கவில்லை, கம்பனிகளும் கொடுக்கவில்லை. கம்பனிகள் பாரிய வருமானத்தைப் பெற்றபோது அதற்கு வழிகோலிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்தவொரு ஏற்பாடும் செய்திருக்கவில்லை என்பதுடன், தாங்கள் பெற்ற வருமானத்தை மறைத்து  குறிப்பிட்டளவு வரியே கட்டியதாக அண்மையில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

இன்றைய சூழலில் கூட்டு ஒப்பந்தத்தில் முறையான பொருளாதாரத் திட்டமிடல் இல்லாத பட்சத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் மாற்றுத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியமானதாகும். தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டாலும் அதில் முறையான திட்டமிடலும், வழிக்காட்டலும் இருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

 தொழிசங்கள் மக்களிடம் வாக்கு பெருவதும், தொழிலாளர்களிடம் சந்தா பெருவதும், இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதும் மாத்திரம்தான் தங்களின் வேலை என்று எண்ணியுள்ளன. அந்த மமதையிலிருந்து அனைத்துத் தொழிச்சங்கங்களும் வெளிவர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பெருந்தோட்டங்களை மையப்படுத்தி உள்ளமையால் அதன் மூலம் அவர்கள் ஏனைய சமூகத்திற்கு இணையாக வருமானம் பெரும் வழியை காண்பிக்க வேண்டும்.

அதற்கு அரசினது தலைøத்தும் இன்றியமையாததாகும். மொரிஸியஸ், மலேசியா போன்ற நாடுகளில் ஏனைய மக்களின் வாழ் வாதாரத்துக்கு இணையான வாழ்வாதாரத்தைத் தோட்டப் புறங்களில் ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட தொழிலாளர் வர்க்கமும் பெருகின்றது. அங்கு மட்டும் எவ்வாறு சாத்தியமாகியுள்ளது? முறையானத் திட்டமிடலுடன் கூடிய பொருளாதாரக் கட்டமைப்பே காரணம்.   எனவே, ஒரு முறையான பொருளாதாரத் திட்டமிடல் என்பது அனைத்து மட்டத்திலும் அவசியமாக உள்ளது. பொருளாதார ரீதியில் வர்க்க பேதம் காணப்படுவதனால்தான் இன்று மலையக மக்கள் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலனை அனுபவிக்க முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.


எனவே, பெருந்தோட்டப் பயிர்களை முன்னிலைப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு மாற்றுப் பொருளாதார திட்டல் உருவாக்கப்படும் போதுதான் தற்போதைய வாழ்கைச் செலவுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியும். பொருளாதார அடிமை வாழ்விலிந்து மீளவும் முடியும். எனவே, அதற்கான வழியை அரசும், தொழிற்சங்கங்களும் காட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates