Headlines News :
முகப்பு » » மலையகத்தில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மகளிர் தினம்

மலையகத்தில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மகளிர் தினம்


ஆண்டு தோறும் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் மிகவும் அர்த்தபுஸ்டியானதாக அமையவேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனின் வருடாந்தம் இச்சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை ஒரு களியாட்ட நிகழ்வாக நடத்தி கொண்டிருப்பது எமது பெண் சமுதாயத்தின் விடிவெள்ளிக்கு மற்றுமோர் தடைக்கல்லாக அமைவதுடன் பெண்கள் எதிர்நேக்கும் சமூக பிரச்சினைகளில் இருந்தும் விடுபடுவதற்கு ஏதுவாக அமையாது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும்.

உழைக்கும் பெண்கள் தாம் எத்தகைய சவால்களை சந்திக்கின்றனர்? அது குடும்பமாகவும் இருக்கலாம் அல்லது சமூகமானதாகவும் இருக்கலாம். அதை தகர்த்தெரிந்து தாம் விரும்பும் வாழ்க்கைக்கு அடித்தளத்தை அமைத்துக்கொள்ளும் உரிமை அவர்களினாலே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.

அதனை விடுத்து மலையகத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் மகளிர் தினம் ஆண் தலைவர்களினால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுவதுடன், அன்றைய தின நிகழ்வுகளிலும் ஆண் தலைமைகள் கௌரவிக்கப்படுவதும் மேடைகளில் அவர்களது முழக்கத்தையுமே  அதிகமாக காணமுடிகின்றது. பொதுவாக மகளிர் தின திட்டமிடலைகூட ஆண் தலைவர்களே தங்கள் வசம் முன்னிலைப்படுத்திவருவது இதன் முக்கியத்துவமாகும்.

கடந்த பல வருடங்களாக மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட உழைக்கும் பெண்கள் தினத்தில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் என்ன? அவைகளுக்கு நடந்தது என்ன என்பது பற்றி திருப்பி பார்க்கும்போது அது ஒரு நிகழ்வாகவே காணப்படுவதுடன், ஆழமான அல்லது தெளிவான சிந்தனையை தூண்டக்கூடிய நிகழ்வுகள் மிகவும் குறைவு என்பதையே சுட்டிக்காட்டமுடிகிறது.

தொழிற் சங்கங்களினாலும் அரச சார்பற்ற அமைப்புக்களினாலும்  சிவில் சமூகங்களினாலும் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தினங்கள் தங்களது நிறுவன மயப்படுத்தலின் நோக்கத்திற்காகவும் தங்களை வெளியுலகிற்கு அடையாளம் காட்டிக்கொள்ளக் கூடியதான நிகழ்வுகளே அதிகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இன்று உழைக்கும் பெண்கள் தினத்தில் கலந்து கொள்ளும்  பெண்களில் எத்தனை பேருக்கு மகளிர் தினம் தொடர்பான விடயம் புரிந்திருக்கின்றதென்ற கேள்வியை தொடுக்கக் கூடிய ஓர் துர்ப்பாக்கிய நிலைகூட அதிகமாக இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அன்று பெருந்தோட்ட தொழில் முறையில் காணப்பட்ட சம்பள முரண்பாட்டிற்கு 17.50 பஞ்சப்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்பு இருபாலாருக்கும் சம சம்பளம் கிடைத்த பின்பு இருபாலாரும் சமநிலையை அடைந்துள்ளதாக சிலரால் கூறப்படும் கருத்து எந்த வகையில் நியாயமானது என்பது தெரியவில்லை. ஏன்னென்றால் இன்றும் கூட ஆண்களும் பெண்களும் சம சம்பளத்தையே நாட்சம்பளமாக பெறுகின்றனர் ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமான வேலை நேரம் எவ்வாறு காணப்படுகின்றது,

பெண்களை மேற்பார்வை செய்பவர்கள் மற்றும் அவர்களுக்கான வேலைப்பளு போன்றவற்றை  தீர்மானிப்பது யார் என்பதை கவனத்தில் கொள்வதில்லை அத்துடன் அனைத்து குடும்பங்களிலும் முடிவெடுக்கும் பொறுப்பும் ஆண் தலைமைகளிடமே காணப்படுகின்றது. அந்த வகையில் உழைக்கும் பெண்களின் சம்பளத்தைக் கூட அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்னும் பெருந்தோட்ட தொழிலாளர்களிடையே காணப்படுகின்றது.

 எல்லா நிகழ்வுகளிலும் மலையக பெண்கள் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களாகவும் தலைவர்களுக்கு மாலை அணிவிப்பவர்களாகவும் வீட்டிலுள்ள ஆண் தலைமைகளின் அனுமதியோடு வெளியில் செல்லும் நிலை இன்னும் மாற்றமடையவில்லை. அத்துடன் சமூக நிறுவனங்களில் பெண்களின் தலைமைத்துவம் என்பது  எட்டாக் கனியாகவே காணப்படுகின்றது. உதாரணமாக தொழிற்சங்கங்கள், சமூக நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், பொது அமைப்புகளில் பெண்களின் பங்கு எத்தகையது அவர்களின் தலைமைத்துவம் போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடைகாண வேண்டிய மாபெரும் பொறுப்புக்களை எம்மிடையே வைத்துக்கொண்டிருக்கின்றோம்.

தோட்டங்களில் அதிகமாக தொழில் செய்பவர்கள் பெண்கள்,அதிக வருமானத்தை ஈட்டுபவர்கள் பெண்கள், அதிகமாக தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் வகிப்பது மற்றும் சந்தா செலுத்துவது பெண்கள். அதேபோல பொது நிகழ்வுகளுக்காக நன்கொடைகளும் இவர்களினாலே அதிகளவு வழங்கப்படுகின்றது. உதாரணமாக தோட்டங்களில் அமைக்கப்பட்டுவரும் கோயில்கள். ஏனைய மத ஸ்தாபனங்களுக்கு இவர்களது பொருளாதார பங்களிப்பு இன்றியமையாதவொன்றாகும். இருப்பினும் இவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை, தலைமைத்துவம் பங்கீடு, சமவுரிமை என்பது விரல் விட்டு எண்ணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் ஏனைய துறைசார் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் உரிமைகள் பெருந்தோட்ட தொழில்சார் பெண்களுக்கு மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது. அதாவது தொழிற்சார் உரிமைகள், வேலைத்தள சுகாதார பாதுகாப்பு போன்ற விடயங்களில் பெருந்தோட்ட பெண்கள் மிகவும் பின் தள்ளப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.

இவைகளுடன் பெருந்தோட்டப் பெண்கள் குடும்ப வன்முறைகள், சமூக வன்முறைகள் போன்றவற்றுக்கும் பெரிதும் முகம்கொடுக்கும் அதே வேளை, கலாசார பின்னடைவையும் எதிர்நோக்கி வருவது இவர்களின் மற்றுமொறு வளர்ச்சிப்படியின் தடைகளாக அமைகின்றது. இவைகளுடன் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட சில வேலைகளில் தட்டிப்பறிக்கப்படுகின்றது. ஆகவே சமூக பொறுப்புவாய்ந்த நிறுவனங்களாக செயற்படும் தொழிற்சங்கங்கள், சமூக மற்றும் சமய பொது நிறுவனங்கள் இவர்களில் அக்கறை செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

அத்துடன் வெறுமனே தோட்ட தொழிலாளர்கள் அல்லது சந்தா செலுத்துபவர்கள் என்றில்லாது எமது சமூகத்தைச் சேர்ந்த ஏனைய பெண்கள் தொழில் புரியும் தொழில் நிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் தனிநபர் சாலைகள் பற்றியும் எமது கவனத்தை செலுத்துவது அவசியமானது. அந்தவகையில் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த பெண்கள் ஈடுபாடு காட்டிவரும் ஆடைதொழிற்சாலை, தனியார் நிறுவனங்கள், சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களில் தங்கியிருக்கும் பெண்களின் நிலைப்பாட்டிலும் அக்கறை காட்டவேண்டியது சமூகத்தின்பால் நாம் செலுத்தும் அக்கறையாகும்.

இதைவிட  இன்று மலையகத்தில் இருந்து வீட்டு வேலைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்லும் பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது இவைகள் பற்றிய அண்மைக்கால பத்திரிகை மற்றும் ஏனைய  ஊடகங்களின் செய்திகள் எம்மை மிகவும் சிந்திக்கவும்  செயற்படவும் தூண்டுகின்றது. இவர்களுக்கு தொழில் உரிமைகள், தொழில் பாதுகாப்பு சம்பளம் என்பன இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அத்துடன் இன்றுவரை இவர்கள் முறைசாரா தொழிலாளர்களாகவே கணீப்பீடு செய்கின்றனர் ILOஇன் 2008 ஆம் ஆண்டு அறிகக்கையின்படி 15.5% பெண்கள் மட்டுமே சம்பளம் பெறுகின்ற வேலையாட்களாக உள்ளனர் 2010 ஆண்டு புள்ளி விபரத்தின்படி இலங்கையில் முறைசார தொழிலாளர்கள் 62.6% ஆக காணப்படுவதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளனர். சர்வதேச தொழில் ஸ்தாபனம் தனது 100 ஆவது அமர்வில் கடந்த 16.06.2011 இல் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அன்றைய அச்சூழலில் இலங்கை அரசும் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றது ஆனாலும் இன்னும் இலங்கை அரசாங்கம் இவர்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்காத நிலை காணப்படுகின்றது. அத்துடன் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான சங்கம் இலங்கையில் கடந்த 2012.03.05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு இயங்கிவருகின்றது. இதன் பதிவு இலக்கம் 8242 இது செங்கொடி சங்கமும் செங்கொடி பெண்கள் இயக்கமும் அயராது எடுத்த முயற்சியின் வெற்றியாக காணப்பட்டது. தொடர்ந்தும் இவர்களை சட்டரீதியான தொழிலாளர்களாக அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் முறைசாரா தொழிலாளர்களுடைய  நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம்,           ஊழியர் சேமலாப நிதி/ஊழியர் நம்பிக்கை நிதி, அடிப்படை சம்பளம், தொழில் ஒப்பந்த நிர்ணயம்,  தொழில் பாதுகாப்பு, பாதுகாப்பான வேலை தள சூழல் என்பன இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். ஆகவே இதன் விளைவு பாரதூரமானதாகவும் சமூக பிரச்சினைகளாகவும் உருவாக்கப்பட்டதுடன் இத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களில் அதிகமானோர் பெண்களாகவும் கணீப்பீடு செய்யப்பட்டுள்ளது மற்றுமோர் முக்கிய விடயமாகும். 

முறைசாரா தொழிலாளர்களில் வீட்டு வேலை செய்பவர்கள் மாத்திரமன்று பராமரிப்பு வேலை, விவசாயம், மீன்பிடி, வீட்டுத்தோட்டம் போன்ற கடினமான தொழில்களில் ஈடுபடுபவர்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்க விடயம். பெண்களுக்கான உரிமை 
சாசனம் 1840 ஆம் ஆண்டளவில் இலண்டனில் நடைபெற்ற அனைத்துலக அடிமைத்தனத்திற்கு எதிரான மாநாடு இடம்பெற்றபோது முதலாவது பெண்கள் உரிமை சாசனம் முன்மொழியப்பட்டதாக வரலாறு கூறினாலும் மலையக பெருந்தோட்ட துறைசார் மற்றும் ஏனைய துறை சார்ந்த பெண்கள் இன்னும் அடிப்படை உரிமை தொடர்பாகவும் அவர்களை இதில் விழிப்புணர்வு அடையச் செய்தலிலும் கவனம் செலுத்தக் கூடிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் சமூக நீரோட்டத்தில் எமது பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான வலுவான நடவடிக்கைகள் அத்தியாவசியமானவை. இதில் மற்றுமொரு பக்கத்தை மறந்துவிட முடியாது. அதுதான் ஜனநாயகத்தில் பங்குபற்றவும் பேரம் பேசவும், ஆண்களோடு அதிகார வெளியை பகிர்ந்துகொள்ளவும் எமது பெண்கள் வலுவான நிலையை அடைய வழியமைக்கவேண்டும்.

அதன் அடிப்படையில் பிரதேச சபையில், மாகாண சபையில் மற்றும் பாராளுமன்றத்தில் எமது பெண்களின் பங்குபற்றுதல் எந்தளவு என்பது சொல்லித் தெரிந்துகொள்ள தேவையில்லை. இதைவிடவும் பெருந்தோட்டத் துறையில் 60% இற்கு மேல் பெண் தொழிலாளர்கள் வேலை செய்தாலும் அவர்களது ஊதியத்தை தீர்மானிக்கும் சம்பளவுயர்வு கைச்சாத்திடும் ஒப்பந்த அமர்வில் பெண் பிரதிநிதித்துவம் என்பது பூச்சியமாகவுள்ளதையும் மறந்துவிட முடியாது.

அத்துடன் சமூக மட்டத்திலான நிறுவனங்களில் அதாவது கூட்டுறவுச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், சமய நிறுவனங்கள், மரண உதவிச் சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் என்பவற்றில் பெண்களின் உறுப்புரிமை எந்தளவு காணப்படுகின்றது என்பது முதலில் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இவைகளுடன் சம்பந்தமான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதுடன் அங்கு பால்நிலை, பால்நிலை பாகுபாடு, பால்நிலை சமத்துவம் என்பன பற்றிய வேலைத் திட்டங்களை சமயாசமயத்தில் கவனிக்கப்படுவதுடன், திட்டமிடப்பட்டுள்ள சகல வேலைத்திட்டங்களிலும் பால்நிலை சம்பந்தமான விடயம் காணப்படுகின்றதா என்பதை கண்காணித்தல் தற்போதைய நிலையில் அத்தியாவசியமாகின்றது.

வெறுமனே குடும்ப பொறுப்புக்கள் பெண்களுக்கு மட்டுமே உரித்தானதாகக் கருதப்படும் பாரம்பரியமான ஓர் எதிர்பார்ப்பும் மனப்பதிவும் எவ்விதமான கேள்விகளுக்கும் உட்படுத்தப்படாமல் அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலை மாற்றியமைக்கப்பட்டு சமூக ரீதியிலான பங்குபற்றல் என்பது பெண்களுக்கு அத்தியாவசியமானது. இது பெண்களின் இயல்புக்கும், ஆற்றலுக்கும் முக்கியமானது என்பதை புரிந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது. ஏங்கல்ஸ்  குறிப்பிட்டது போல பெண்கள் மீதான அடக்குமுறையானது உண்மையில் வர்க்க சமூகத்தின் விருத்தி நிலையுடன் தொடர்புபட்டதாகும். எனவே மலையகம் முன்னெடுக்கும் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் மிகவும் அர்த்தபுஷ்டியானதாக அமையவேண்டும் என்பதே முடிவான எதிர்பார்ப்பாகும்.

எஸ். டி. கணேசலிங்கம் 

பிரதி பொதுச் செயலாளர், 
செங்கொடிச் சங்கம். 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates