Headlines News :
முகப்பு » » 'முகவரியற்ற கடிதங்கள்': மலையக தபால் சேவையின் அவலம் - பி.பி.சி

'முகவரியற்ற கடிதங்கள்': மலையக தபால் சேவையின் அவலம் - பி.பி.சி


இலங்கையில் மலையகப் பிரதேசங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட தோட்டங்களும் 1500க்கும் மேற்பட்ட தோட்ட உட்பிரிவுகளும் இருக்கின்றன.
இந்தத் தோட்டங்களுக்காக கடிதங்களைக் கொண்டு சேர்ப்பதற்காக இலங்கை அரசு 5 ஆண்டுகளுக்கு முன்னர் நியமித்த 400 தபால் ஊழியர்களில் 386 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை தான் நிரந்தர நியமனம் கிடைத்திருக்கிறது.
இவர்களில் 141 பேர் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

சுதந்திர இலங்கையில் மலையக தோட்டப்புற மக்களுக்கு உரிய முறையில் கடிதங்கள் கூட வந்து சேர்வதில்லை என்பது இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்துவருகிறது.

இந்தப் பிரச்சனையை தீர்த்துவைப்பதற்கான கோரிக்கைகளை மலையகத்தின் பிரதான அரசியல்கட்சியும் தற்போது அரசின் பங்காளியாகவும் உள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, 2007-ம் ஆண்டில் மலையகத் தலைவர்களில் ஒருவரான எம்.எஸ். செல்லசாமி துணைத் தபால்துறை அமைச்சராக இருந்தபோது தோட்டப்புற இளைஞர்களுக்கு முதற்கட்டமாக தற்காலிக தபால்காரர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

வீடுகளுக்கு இலக்கங்கள் இல்லை
'இரண்டு நூற்றாண்டுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதலாவது முயற்சி 2007-ம் ஆண்டில் தான் எடுக்கப்பட்டது. எனினும் அப்போது தேவையான அளவுக்கு நியமனங்களை வழங்க முடியாமல் போனது' என்று தமிழோசையிடம் பேசிய முன்னாள் தபால் துணை அமைச்சர் எம்.எஸ்.செல்லசாமி கூறினார்.

முகவரியை உறுதி செய்வதில் தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது: தபால்மா அதிபர்
'தோட்டங்களில் வீடுகளுக்கு இலக்கங்கள் கிடையாது, சீரான முகவரி கிடையாது, இப்படியான பிரச்சனைகள் பற்றி மீண்டும் ஆய்வு நடத்தி இந்தத் தபால் பிரச்சனையை அரசு தீர்க்க வேண்டும்' என்றும் செல்லசாமி தெரிவித்தார்.

நாட்டின் தபால் துறையை முன்னேற்ற வேண்டும் என்று தற்போதைய அரசாங்கத்தின் மகிந்த சிந்தனை கொள்கைத்திட்டம் கூறுகிறது.
ஆனால் மலையக தோட்டப்புறங்களில் தபால் ஊழியர்களை நியமிப்பதில் ஏற்பட்டுவரும் தாமதம் ஏன் என்று இலங்கையின் தபால் மா அதிபர் ரோஹண அபேரத்னவிடம் தமிழோசை வினவியது.

'தோட்டப்புற தபால் ஊழியர்களுக்களில் முதற்கட்டமாக 2007-ம் ஆண்டில் 400 பேருக்கான நியமனம் வழங்கப்பட்டது. இவர்களை நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்காக தனியான ஆட்சேர்ப்பு நடைமுறையை உருவாக்குவதில் தான் இந்தத் தாமதம் ஏற்பட்டிருந்தது' என்றார் இலங்கையின் தபால்துறைத் தலைவர்.

இலங்கையிலுள்ள எல்லாத் தோட்டங்களுக்கும் இந்த நியமனங்கள் போதாது. பல தோட்டங்களில் வீடுகளுக்கு இலக்கமில்லை. முகவரி சரியாக இல்லை என்பது போன்ற பிரச்சனைகளும் உள்ளன. அவற்றை எப்படி நீங்கள் தீர்ப்பீர்கள் என்றும் தமிழோசை வினவியது.

'மேலும் 100 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. தோட்டங்களுக்கு தபால் சேவையை வழங்குவதில் தாமதங்கள் இருந்துவருவது எங்களின் கவனத்திற்கும் வந்துள்ளது.,புதிதாக நாங்கள் நடத்திவரும் ஆய்வின் பின்னர் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்' என்றார் தபால் மா அதிபர்.
21-ம் நூற்றாண்டில் கடிதங்கள் கூட வந்துசேராத தோட்டங்களிலிருந்து தான் இலங்கையின் தேசியப் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நன்றி பி.பி.சி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates