Headlines News :
முகப்பு » , , , , » முகத்துவாரம் விஸ்ட்வைக் பங்களாவில்: வுயிஸ்டின் ஆவி! (கொழும்பின் கதை - 8) என்.சரவணன்

முகத்துவாரம் விஸ்ட்வைக் பங்களாவில்: வுயிஸ்டின் ஆவி! (கொழும்பின் கதை - 8) என்.சரவணன்

ஆளுநர் வுயிஸ்ட் இலங்கையில் மேற்கொண்ட குற்றங்களுக்காக டச்சு இராணுவ நீதிமன்றம் (Heeren XVII) நிறைவேற்றிய கொடூரமான மரண தண்டனையைப் பற்றிப் பார்த்தோம்.

வுயிஸ்ட் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரின் மனைவி பார்பரா வுயிஸ்டைக் காப்பாற்றுவதற்காக ஒல்லாந்திலிருந்த Heeren XVII இடம் சென்று உதவி கோரினார். ஆனால் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  யொஹான் (Johan de Mauregnauld) என்பவர் தலைமையில் விசாரித்து முடிக்கப்பட்ட இந்த வழக்கின் அறிக்கை 400 பக்கங்களை விட அதிகமானது.

சட்டவிரோதமாக இராணுவ நீதிமன்றத்தை அமைத்தது, அதற்குத் தன்னைத் தானே தலைவராக நியமித்துக்கொண்டது, தண்டனை நிறைவேற்றுபவராக தன்னை ஆக்கிக்கொண்டது, அதன் மூலம் அப்பாவிகள் 19 பேரை ஈவிரக்கமின்றி கொன்றது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கு அன்றைய டச்சு நீதித்துறைக்கு ஒரு பெருமதிப்பைக் கொடுத்தது. இதைப் பற்றி 1735 இல் ஒல்லாந்திலுள்ள ரோட்டர்டாமில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. "ஆளுநர் பெட்ரஸ் வுயிஸ்ட் இலங்கையில் சட்டவிரோதமாக நீதியைக் கையாண்டார். அப்படிப்பட்ட ஆளுநருக்கு பத்தாவியா நீதித்துறை தகுந்த தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டியது.” 

இந்த வழக்கின் விளைவாக இனிமேல் எந்தவொரு நாட்டு டச்சு ஆளுநரும், தளபதியும் நீதிச்சபையின் கூட்டங்களில் பங்குபற்றக்கூடாது என்றும், நீதித்துறை விவகாரங்கள் உயர் அதிகார தலையீடு இன்றி இயங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையில் வுயிஸ்டின் அக்கிரமங்களுக்கு ஆதரவளித்த இராணுவ நீதிமன்றத்தைச் சேர்ந்த பதினைந்து பெரும் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அவர்களை விடுவிக்கக் கோரி போராடிய போதும் அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள். சிலர் சிறையிலேயே இறந்துபோனார்கள். சிலர் தொடர்ந்தும் சிறையில் சில வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அரசின் பொது மன்னிப்பு பெற்று 1736 ஆம் ஆண்டு எஞ்சிய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

வுயிஸ்டின் மனைவி பார்பராவும், மகள்மாரும் 1733 ஆம் ஆண்டு வுயிஸ்டின் சொந்த இடமான ஒல்லாந்திலுள்ள ஹார்லம் (Haarlem) திரும்பினார்கள். பார்பரா 1746ஆம் ஆண்டு அவரின் 53 வது வயதில் இறந்தார். 

பொதுவாக ஆளுநர்கள் இடமாற்றம் பெற்று இன்னும் சில நாடுகளை ஆளும் தகுதியையும் பெற்று ஆள்வார்கள். ஆனால் வுயிஸ்ட் இளம் வயதிலேயே தனது கொடுங்கோல் ஆட்சியின் காரணமாக தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார். அவ்வளவு ஆஸ்தியும், அந்தஸ்தும் இருந்தும் தனது குற்றங்களால் அவர் 41 வயதிலேயே அவர் கொல்லப்பட்டுவிட்டார்.இலங்கையை அவர் மூன்றே மூன்று ஆண்டுகள் மட்டும் ஆளுநராக வாழ்ந்தார். வுயிஸ்டின் ஆட்சிக் காலத்தை டச்சு ஆட்சிக்காலத்தின் கறைபடிந்த பக்கம் என்று குறிப்பிடுவார்கள். 

இலங்கையின் சரித்திரத்தில் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஆளுநர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆட்சிசெய்துள்ளனர். அவர்களே அதிகாரம் படைத்த முதன்மை ஆட்சியாளர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களில்; இப்படி விசாரணை செய்யப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, கொல்லப்பட்ட ஒரேயொருவர் பேத்ருஸ் வுயிஸ்ட் தான். இலங்கையில் பல ஆளுநர்கள் கொடுங்கோலர்களாக இருந்திருகின்றனர். ஆனால் இங்கே தமது அதிகார வரம்புகளை மீறியதற்காவும், சொந்த அதிகாரிகளையே துன்புறுத்திக் கொன்றமைக்காகவும் அதிகமாக அவர் சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்துக்கு உள்ளானார்.

Kasteel Batavia - வுயிஸ்ட் சிறை வைக்கப்பட்டிருந்த அன்றைய பத்தாவியா கோட்டை.

வுய்ஸ்ட் விக் ஆவி

வுய்ஸ்ட் தனது ஆட்சிக் காலத்தில் காலத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்மாவத்தை வழியாக மட்டுக்குளி சென்றடையும் பாதையை வுயிஸ்ட் தான் அமைத்தார். 1720களில் அமைக்கப்பட்ட அந்த வீதியின் வரலாறு இப்போது முன்னூறு ஆண்டுகளை எட்டுகிறது. கொழும்பின் நீளமான  வீதிகளில் ஒன்று அது. இன்று அது ஒரு முக்கியமான பாதையாக ஆகியிருப்பதை அறிவீர்கள். கொழும்பு - மட்டக்குளியில் காக்கைத்தீவு வழியாக களனி கங்கையின் முகப்பு வரை செல்லுகிறது வுய்ஸ்ட்விக் வீதி (Vuystwyk Road).  வுயிஸ்ட் அளுத்மாவத்தை முடிவில் தனக்கான ஒரு பங்களாவைக் கட்டினார். நீச்சல் தடாகத்துடன் அமைக்கப்பட்ட அந்த பங்களாவில் உல்லாசமாக களித்தார் அவர். அதற்கு  Vuystwijk என்கிற பெயரைச் சூட்டியிருந்தார். வுய்ஸ்ட் கிராமம் என்று அதற்குப் பொருள். அந்த பங்களாவுக்கு குதிரை வண்டிலில் செல்வதற்கு சரியான பாதை இருக்கவில்லை. அதற்காகவே போடப்பட்ட வீதி தான் அது.

முகத்துவாரத்தில் (Mutwal) அழகான காட்சி அமைப்புடன் கூடிய இடமாக அப்போது அவருக்கு பிடித்திருந்த இடத்தில் தான் அவர் அந்த பங்களாவைக் கட்டினார். கோட்டையிலிருந்து முகத்துவாரம் வரையிலான பாதையை உருவாக்குவதற்காக கற்களை கைமாற்றி கைமாற்றி இரு மருங்கிலும் பாதையோரங்கள் அமைக்கப்பட்டது. இன்றும் கொழும்பில் விஸ்ட்வைக் பார்க்கை (பூங்கா) அறியாதவர்கள் வெகு சிலராகத் தான் இருப்பார்கள். ரசமுன கந்த என்கிற மேட்டில் தான் வுயிஸ்டின் பங்களா அன்று அமைக்கப்பட்டிருந்தது. இன்று பல வீடுகளும், கடைகளும், தொழிற்சாலைகளும் நிறைந்த சூழல் அது.

வான் டோர்ட் (Van Dort) இலங்கையின் முக்கியமான ஓவியர்களில் ஒருவர். இலங்கையின் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் வெளிவந்த கேலிச்சித்திர சஞ்சிகையான “முனியாண்டி” சஞ்சிகையில் அவர் வரைந்த ஓவியங்களும் கட்டுரைகளும் இன்று பேசப்படுகின்றன. அதில் அவர் எழுதிய கட்டுரையில் 

பதினாறு வயதையுடைய கொழும்பு அக்காடமி மாணவன் வுயிஸ்ட் முன்னர் வாழ்ந்த வீட்டிலிருந்து சுமார் 300 யார் தூரத்தில் அமைந்திருந்த நீச்சல் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.

"இரவும் பகலும் புலம்பல்களும் பெருமூச்சுகளும், அழுகையும் கேட்கின்றன" என்று உள்ளூர்வாசிகள் அந்த இளைஞனுக்குத் தெரிவித்ததை வான் டோர்ட்திடம் தெரிவித்திருக்கிறார். தனிமையும், கடற் காற்றின் சலசலப்பும் குளத்தைச் சுற்றி வளரும் மூங்கில்களால் உருவாகும் சத்தமாக அது இருக்கக்கூடும் என்று வான் டோர்ட் எண்ணினார். அவர் 1894 இல் Vuyst Wyk ஐ சென்று பார்வையிட்டபோது, கிணறும் குளமும் சிதைந்து கிடப்பதைக் கண்டார், மேலும் மூங்கில்கள் கூட எப்போதோ இல்லாமல் போயுள்ளன. அப்படியிருக்க எவ்வாறு இந்த சத்தம் வருகின்றன என்று சற்று வியப்புற்றார்,

உள்ளூர்வாசிகள் சிலர் அவரிடம், கவர்னர் வுயிஸ்ட்டின் ஆவி எழுப்புகின்ற சந்தம் தான் அவை என்றும் உறுதியாக நம்புகின்றனர். வுயிஸ்ட் அங்கே தனது  மலே நாட்டு சமையல்காரருடன் சேர்ந்து மனித இறைச்சிகளை உண்டதாக அதற்கு முன்னர் ஒரு கதையும் நிலவிருக்கிறது. அது உண்மையோ பொய்யோ. ஆனால் அவரின் காணியில் இருந்து மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதை வான் டோர்ட் பதிவு செய்திருக்கிறார்.

வுய்ஸ்ட் வைக் பகுதியில் ஆவிக் கதைகளை நம்புபவர்கள் இன்றும் உள்ளார்கள்.

அவர் கண்மூடித்தனமாக செய்த அராஜகங்களின் இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிட வேண்டும்.

1738 இல் சிங்களத்தில் வெளிவந்த முதலாவது நூல் Singaleesch belydenis boek - 

சிங்கள எழுத்துருவாக்கத்துக்கு தடை

இலங்கையில் முதன் முதலில் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணி குறித்து இதற்கு முன்னர் விரிவாக  எழுதியிருக்கிறேன். கிழக்கிந்திய கம்பனியின் ஆயுதப் பொறுப்பாளராக இருந்த கேபிரியேல் ஷாட் (Gabriel Schade) என்பவரிடம் தான் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணியை ஆளுநர் ஜாகோப் (Jacob Christian Peilat) 1725 ஆம் ஆண்டு கேபிரியேல் ஷாட்டிடம் ஒப்படைத்திருந்தார். நுணுக்கமான உலோக வேலைகள் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்தார் ஷாட்.

1726 இல் வுயிஸ்ட் ஆளுனராக பதவியேற்றதும் இலங்கைக்கு அப்படியொரு அச்சுப்பணிகள் தேவையில்லை என்று கூறி ஷாட்டை சிறையில் அடைத்துவிட்டார். சுதேச மொழி எழுத்துவார்ப்புப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. பல சித்திரவதைகளுக்கும் உள்ளானர் ஷாட். அந்தப் பணிகள் நின்று விடுகின்றன. வுயிஸ்டுக்குப் பின் ஆளுநர் Gustafi Willem Baron Van Imhoff பதவியேற்றதன் பின்னர் தான் ஷாட் விடுதலையானார். சிறை-சித்திரவதையை அனுபவித்துவிட்டு விடுதலையான ஷாட் அதன் பின் வந்து உருவாக்கிய எழுத்து வார்ப்புக்களைக் கொண்டு தான் 1737 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சிங்கள நூல் (“The Singaleesch Gebeede-Boek”) வெளியானது.  இன்னும் சொல்லப்போனால் அது தான் இலங்கையின் முதலாவது சுதேச மொழி நூல் எனலாம். சில வேளை வுயிஸ்ட் ஷாட்டை சிறையிடாமல் இருந்திருந்தால் இலங்கையின் முதலாவது சுதேசிய மொழி நூல் 1720களிலேயே வெளிவந்திருக்கக் கூடும். கேபிரியேல் ஷாட் தான் இலங்கையில் முதலாவது அசையும் சிங்கள எழுத்துக்களின் பிதா என்று தான் கூற வேண்டும். பின்னாட்களில் இதைப் பற்றிய விபரங்களை பதிவு செய்த Dutch Burgher Union வெளியிட்ட சஞ்சிகையில் வுயிஸ்ட் ஒரு பயங்கரவாத ஆட்சியாளன் என்று வர்ணித்தது.

அடுத்த இதழில் கொழும்பின் புதிய கதை.

நன்றி - தினகரன் - 19.12.2021
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates