Headlines News :
முகப்பு » , , , , » ஆளுநர் வுயிஸ்ட்டுக்கு வழங்கப்பட்ட கொடூரமான மரண தண்டனை (கொழும்பின் கதை - 7) - என்.சரவணன்

ஆளுநர் வுயிஸ்ட்டுக்கு வழங்கப்பட்ட கொடூரமான மரண தண்டனை (கொழும்பின் கதை - 7) - என்.சரவணன்

வுயிஸ்ட்டை கைது செய்வதற்காக ஒல்லாந்திலிருந்து ஒரு குழு இலங்கைக்கு வந்தது.  அவர் 3ஆம் திகதி மே, 1729இல் கொழும்பில் சிறைபிடிக்கப்பட்டு பத்தாவியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு தொடர் விசாரணைகள் நடந்தன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை அது. மே 1729 இல் உச்சநீதிமன்றம் மூன்றாண்டுகாலம் ஆளுநர் பதவி பதவி வகித்த வுயிஸ்டை அப்பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டது. 1730 பெப்ரவரி 28 அன்று வுயிஸ்ட் 19 பேர் கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையில் இருந்து விசாரணைக்காக பத்தாவியாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவரின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரபல ஓவியர் Simon Fokke இந்த தண்டனை பற்றி அன்றே வரைந்த ஓவியம் இது.

இரண்டு ஆண்டுகள் வுயிஸ்ட் இரும்பு விலங்குகளால் கட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தார். வுயிஸ்ட் மீது நடந்த விசாரணை பற்றிய நான்கு விரிவான ஆவணங்களை டச்சு அரசாங்கம் வெளியிட்டது. தமது கண்டிப்பான நீதித்துறைக்கு முன்னுதாரணமாக டச்சு அரசாங்கம் இந்த வழக்கு பற்றியும், அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு, நிறைவேற்றப்பட்ட தண்டனை என்பவற்றை உள்ளடக்கிய ஆவணத்தைத் தயாரித்து வெளியிட்டது. சிறு நூல் வடிவில் அமைந்த அறிக்கைகள்; பல விபரங்களை உள்ளடக்கியது. அந்த மூல ஆவணங்களை இந்தக் கட்டுரைக்கான ஆய்வின் போது தேடிக் கண்டெடுக்க முடிந்தது. (1, 2, 3) 

1. Sententie gewezen by den wel ed: RAADE van india, tegens den heere en mr. Petrus Vuyst, gewezene gouverneur van Ceylon. Geëxecuteert tot Batavia, den 19 mey, 1732. Waar agter gevoegt is de lyst der opontboden en particuliere perzoonen, die met deze in den jare 1733. Ingekomene elf Oost-Indische retourschepen zyn gerepatriëert., 1733. – என்கிற தலைப்பைக் கொண்ட ஆவணம் இது. மே 19, 1732 அன்று பேத்ருஸ் வுய்ஸ்டுக்கு எதிரான மரணதண்டனைத் தீர்ப்பு, பத்தாவியா நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்டது. வூயிஸ்ட் 19 அப்பாவி மக்களுக்கு மரண தண்டனை விதித்தது, இன்னும் பலரைத் தவறாக நடத்தியது, பலரை சித்திரவதை செய்தது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரணையை எதிர்கொண்டார், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அதன் விளைவாக 3 ஜூன், 1732 அன்று பத்தாவியாவின் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

தீர்ப்பை வழங்கிய எட்டு ஜூரிகளின் பெயர்களும் இறுதியில் உள்ளன.

  • Mr.Gualter Schutten.
  • Mr. Jacob Van Den Bosch.
  • Mr. Jan Blaaukamer.
  • Mr. Jan Rudolph Sappius
  • Mr. Jacob Lakeman.
  • Mr. Bernard Jacob De Lavaille.
  • Mr. David Joan Bake, 
  • Mr. Joan Sautyn.

2. De onregveerdige justitie, uytgevoert door den gouverneur petrus vuyst, tot Ceylon, nevens het regtveerdig vonnis en regt, aan hem gouverneur gedaan, door den achtbaren Raad van Justitie, des casteels Batavia. (gedrukt naar de origineele copye), 1733. – அநீதி வழங்கிய இலங்கை ஆளுநர் பேத்ருஸ் வுயிஸ்ட் தொடர்பாக பத்தாவியா கோட்டையில் கனம்பொருந்திய நீதிக்கவுன்சில் வழங்கிய தீர்ப்பு. – 1733

3. Sententie gepronuncieert ende geëxecuteert op ende jegens mr. Petrus Vuyst op dingsdag den 3. Juny 1732. Tot Batavia in Oost-Indien. (na een origineel copy van Batavia zoo ende gelyk het den gevange is voorgelese, getrouwelyk gedrukt 1733.), 1733. – என்கிற தலைப்பைக் கொண்ட ஆவணம் இது. பேத்ருஸ் வுய்ஸ்டுக்கு எதிரான மரணதண்டனைத் தீர்ப்பை, பத்தாவியா நீதி மன்றத்தில் அறிவிக்கப்பட்டது பற்றியும் வூயிஸ்ட் 19 அப்பாவி மக்களுக்கு மரண தண்டனை விதித்தது, இன்னும் பலரைத் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரணையை எதிர்கொண்டு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு பின்னர் 3 ஜூன், 1732 அன்று பத்தாவியாவின் கோட்டையில் தூக்கிலிடப்பட்டது பற்றியது.

4. Kort en naauwkeurig verhaal, van ’t leven en opkomst van den heer en mr. Petrus Vuyst. Gewezene gouverneur op ’t eiland Ceilon. Als mede een waaragtig berigt, van alle zyne gepleegde gruwelstukken : als ook de namen van die geene die door hem onschuldig ter dood zyn gebragt, 1732. இலங்கைத் தீவின் முன்னாள் ஆளுநர் பேத்ருஸ் வுயிட்ஸ் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய கொடூரங்கள் பற்றியும் விளக்கும் நூல். – 1732 (டச்சு தேசிய நூலகம்) (4)


இறுதியில் மூன்றாண்டுகளின் பின் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று கண்டறிந்து 1732 மே 22ஆம் திகதி அவரின் குற்றங்களை தேசத்துரோகக் குற்றமாக அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. அந்தத் தண்டனை மிகக் கொடூரமான தண்டனையாக இருந்தது. மேற்படி மூன்றாவது அறிக்கையில் வுயிஸ்டுக்கு எப்படிப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டது என்பது பற்றி விபரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்த 19 அப்பாவிகள் மீது அவர் மேற்கொண்ட சித்திரவதைகள், மரணதண்டனைகள் பற்றிய தீர்ப்பு இது.(5) இலங்கைத் தீவு அவரின் ஆட்சியின் கீழ் மோசமான கொடுங்கோன்மைக்கு உட்பட்டது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.(6)

வுயிஸ்டுக்கு அளிக்கப்பட்ட அந்த மரண தண்டனையை நேரில் கண்ட சாட்சியொருவரின் பதிவை பிற்காலத்தில் E.C.Buultjens மொழிபெயர்த்தார்.(7)  1732 யூன் 3 ஆம் திகதி பத்தாவிய நகரத்தில் குழுமியிருந்த பொது மக்கள் முன்னிலையில் இந்த மரண தண்டனையை நிறைவேற்ற பிரேத்தியேகமாக செய்யப்பட்டிருந்த மேடையில் ஒரு நாற்காலி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை நான்கு மணியிலிருந்து இதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இறுதி நேரத்தில் வுயிஸ்ட் தான் செய்த அத்தனையும் கம்பனியின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காக்கவுமே செய்தேன் என்று தெரிவித்தார். காலம் கடந்துவிட்ட அறிவிப்புகளாக அவை இருந்தன. மதப் பிரார்த்தனை முதலில் நிகழ்ந்தது. அது முடிந்ததும். ஜூரிகளும், மக்களும் பார்த்திருக்க அவரை நிர்வாணப்படுத்தி, மேடையில் இருந்த கதிரையில் அமர்த்தி இறுகக் கட்டினார்கள். பின்னர் கத்தியுடன் வந்த தண்டனை நிறைவேற்றுபவர் வுயிஸ்டின் தலையை பின்புறமாக இழுத்துப் பிடித்து தொண்டையை அறுத்தார். வுயிஸ்ட் துடித்து இறந்தார். அதன்பின் அப்படியே கழுத்தெலும்போடு அறுத்து துண்டித்தார். அதன் பின் உடல் ஒரு பலகையின் மேல் எறியப்பட்டது. உடல் பாகங்களை வெட்டி கீழே வைக்கப்பட்டிருந்த ஒரு வாளியில் அப்பாகங்களை இட்டார். 

அப்பாகங்கள் அங்கிருந்த அடிமைகளிடம் கொடுக்கப்பட்டன. அவர்கள் அங்கே எரிந்துகொண்டிருந்த தீயில் அவற்றை எறிந்தனர். அதே தீயில் அக்கதிரையும், பலகையும் உடைத்து போடப்பட்டன. வுயிஸ்டின் உடைகளும் அதிலேயே போட்டு எரிக்கப்பட்டன. இவையணைத்தும் காலை எட்டு மணிக்கு முன்னர் முடிந்துவிட்டன. மதியம் வுயிஸ்ட் இருந்த இடமும் தெரியாமல் சாம்பலாகிப் போயிருந்தார். எரித்த அஸ்தி கூட ஒல்லாந்துக்கு போகக்கூடாது என்று அந்த அஸ்தியை அள்ளிக்கொண்டு சென்று அன்றே பத்தாவியா கடலில் கொட்டினார்கள். அவரின் மனைவி பிள்ளைகளும் பத்தாவியாவில் தான் தங்கியிருந்தனர். கிறிஸ்தவ முறைப்படி வுயிஸ்தை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு அவரின் சாம்பலைக் கூடக் கொடுக்கவில்லை. (8)

தொடரும்

அடிக்குறிப்புகள் :
  1. Sententie, gewezen by den Wel Ed: Raade van India, tegens den Heere en Mr. Petrus Vuyst, gewezene gouveneur van Ceylon, Geexecuteert tot BATAVIA, den 19 mey, 1732. – Netherland, 1732
  2. De onregtveerde justitie, uytgevoert door den Gouverneur Petrus Vuyst, tot Ceylon, nevens het regtveerdig vonnis en regt, aan hem Gouverneur gedaan, door den Achtbaren Raad van Justitie des Casteels Batavia, Samperman -1733
  3. Kort en naauwkeurig verhaal van ʹt leven en opkomst van... Petrus Vuyst, gewezen Gouverneur op ʹt Eiland Ceilon: alsmede een waaragtig berigt, van alle zijne gepleegde gruwelstukken, Volume 1, 1732
  4. இந்த மூன்று நூல்களும் அன்றைய பழைய டச்சு மொழியைக் கொண்டவை. இன்று புழக்கத்தில் இல்லாதவை. அவற்றை இன்றைய நெதர்லாந்து மக்கள் புரிந்துகொள்ளக் கடினப்படுவார்கள். இதனை நெதர்லாந்திலிருந்து எனக்காக நாட்கணக்காக கடின உழைப்புடன் பொறுமையாக வாசித்து விளக்கம் பல தந்த Cornolis Broers அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
  5. வுயிஸ்டுக்கு வழங்கப்பட்ட தண்டனையை சித்திரிக்கின்ற ஒரு ஓவியத்தை அதே காலத்தில் வரைந்தார் பிரபல ஓவியர் சிமோன் பொக்க (Simon Fokke - 1712–1784). பத்தாவியாவில் கிழக்கிந்திய டச்சுக் கம்பனியினர் 1729-1739 இடப்பட்ட பத்தாண்டு காலப்பகுதிக்குள் பொதுவெளியில் மேற்கொண்ட தண்டனைகள் பற்றிய ஒரு ஆய்வை A Distant Mirror: Violent Public Punishment in the VOC Batavia, 1729-1739” என்கிற தலைப்பில் Leiden பல்கலைக்கழகத்திற்காக Muhammad Asyrafi என்பவர் 2020 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் சிமோன் பொக்கவின் ஓவியங்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. 
  6. இந்த ஆவணங்கள் எல்லாமே டச்சு ஆவணக் காப்பகத்தில் தொகுக்கப்பட்டிருப்பதையும், அவை எந்தெந்த இலக்கங்களைக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிக்கின்றன என்பது பற்றி ஒரு தொகுப்பை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். அதில் இலங்கை தொடர்பான பல ஆவணங்களின் பட்டியல் உள்ளன. அங்கே செல்ல வாய்ப்புள்ளவர்கள் சென்று அவற்றைப் பார்வையிடலாம். - Inventaris van het archief van de Verenigde Oost-Indische Compagnie (VOC), 1602-1795 (1811) Versie: 25-09-2018 -
  7. P.E.Pieris, sinhale and the Patriots, 1815-1818, Sri Lanka Apothecaries Company, Limited, colombo, 1950.
  8. Henry Charles Sirr, Ceylon and the Cingalese, Vol. 1: Their History, Government, and Religion, the Antiquities, Institutions, Produce, Revenue, and Capabilities of the Island, London, William Shoberl Publisher, 1850.
நன்றி - தினகரன் 12.12.21


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates