Headlines News :
முகப்பு » , , , » முனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்

முனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்

இலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆங்கில இதழ். 1869 தொடக்கம் 1871 வரையான மூன்று ஆண்டுகள் மட்டுமே வெளியானது இது. ஒரு நையாண்டி இதழுக்கு ஒரு தமிழ் பெயரை ஆங்கிலேயர் ஒருவர் இட்டதன் காரணமென்ன. “முனியாண்டி”என்கிற தமிழ்ப் பெயர் நையாண்டிக்குரியவர்களாக கருதுகின்ற ஒரு உளவியல் அன்று இருந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. மலையகத்திலும், அதற்கு வெளியிலும் வாழ்ந்த இந்திய வம்சாவளியினரில் இந்தப் பெயர் மிகவும் பிரபல்யம். 

இதுவொரு நகைச்சுவை சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் சஞ்சிகையாகவும் இருந்தது.

ஆரம்ப காலங்களில் வெகுஜன காட்சிப்படுத்தல் கலாசாரத்தின் ஒரு ஊடக வகையாக அறிமுகமாகி அதன் பின் வளர்ந்து வந்தது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தனிக் காட்சிக் கார்ட்டூன்களாகவும், பின்னர் சித்திரக் கதைகளாகவும், காலப்போக்கில் தொலைக்காட்சி கார்டூன்களாகவும், பின்னர் இருபரிமாண, முப்பரிமாண கார்டூன்களாகவும் வளர்ந்து இன்று யதார்த்த சினிமா காட்சியுடன் போட்டிப்போட்டுக்கொண்டு கார்டூன் திரைப்படங்கள் சந்தையில் மட்டுமன்றி வெகுஜன இரசனையிலும் கோலோச்சுமளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. 

இலங்கையில் "முனியாண்டி" என்கிற பெயர் மலையகத்தில் பிரசித்தம் பெற்றது. “முனியாண்டி”என்கிற பெயர் இந்தியவம்சாவளியினர் பயந்து “பயபக்தியோடு” வழிபடும் தெய்வம். தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு இந்திய வம்சாவளியினர் கொண்டு வரப்பட்டபோது அங்கிருந்து விழிம்பு நிலைச் சாதியினரையே பெரும்படையாக கொண்டு வந்ததை நாமறிவோம். அப்பேர்பட்ட மலையகச் சமூகத்தில் கடவுள் வழிபாடென்பது விளிம்புநிலை சிறுதெய்வ வழிபாடுகளே வெகுஜன வழிபாட்டுப் பண்பாடாக நிலைத்திருந்தது. சுடலைமாடன், முனியாண்டி, கருப்புசாமி போன்ற தெய்வங்களையே அவர்கள் வணங்கினார்கள். அதுபோல அந்த குலதெய்வங்களின் பெயர்களை தமது பிள்ளைகளுக்கும் சூடுவதை பலர் வழமையாகக் கொண்டிருந்தனர். இந்த “முனியாண்டி”போன்ற பெயர்களைக் கொண்ட மலையகத் தொழிலாளர் பலர் அடிநிலை தொழில்களில் பணிபுரிந்தார்கள். ஆக துறைமாருக்கும், பெரிய கங்காணி அல்லது எஜமானர்களுக்கு “இளக்காரமான”வர்களாக இருந்தார்கள். அவர்கள் கேலிக்கும் ஆளானார்கள். ஜோன் கெப்பர் ஒரு துட்டத்துரையும் கூட. அப்பேர்பட்டவர் தனது அரசியல் கிண்டல் கவர்ச்சிக்கு இந்தப் பெயரை சூட்டியிருப்பதன் உளவியலை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

“முனியாண்டி”, ஆங்கிலத்தில் நகைச்சுவையான, விளக்கப்படங்களையும், நையாண்டி கேலிச்சித்திரங்களையும்  உள்ளடக்கிய இதழானது 1869 மூன்றே ஆண்டுகள் மட்டும் தான் தாக்குபிடித்தது. அதன் தீவிர அரச எதிர்ப்புப் போக்கின் காரணமாக ஆங்கிலேய அரசால் இறுதியில் தடை செய்யப்பட்டது. இரு வாரங்களுக்கொரு முறை பத்து பக்கங்களில் வெளியான “முனியாண்டி” ஒரு சில்லிங்குக்கு அப்போது விற்பனையானது.(1) அரசியல் நிகழ்வுகள், விவாதங்கள், துணுக்குகள், செய்திகள், சிறு கட்டுரைகள், வாசகர் கடிதம் ஆசிரியர் பதில் என பல ஆக்கங்கள் அதில் உள்ளடங்கியிருந்தது.

“முனியாண்டி”யில் இருக்கிற காலனித்துவ எதிர்ப்பையும் ஆதரவையும் பற்றி ஆராய்ந்த காஞ்சனகேசி வர்ணபால அது ஒரு முரண்நகையான போக்கென்கிறார்.

“முனியாண்டி”காலனித்துவ அதிகாரத்துவ ஆட்சியையும், அன்றைய உயர் குழாமினரின் பாசாங்குகளையும், முட்டாள்தனங்களையும் கேலி செய்து அம்பலப்படுத்தியது.

இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளியான இந்த “முனியாண்டி”இதழ் Fonseka’s Press என்கிற பதிப்பகத்தில் ஜோன் கேப்பரால் வெளியிடப்பட்டிருக்கிறது.(2)  கொழும்பு சதாம் வீதியில் (Chatham Street) அப்போது அதன் காரியாலயம் இருந்திருக்கிறது. 1870 இல் வெளியான Blue Book வெளியீட்டின் தகவலின்படி 2400 பிரதிகள் அன்றைய காலத்திலேயே விநியோகிக்கப்பட்டுள்ளது.

கெப்பர் ஏற்கெனவே லண்டனில் London Globe  மற்றும் Charles Dickens’ இன் பிரபல சஞ்சிகைகளிலும் பணியாற்றிய அனுபவமுடையவர்.

இலங்கையில் அன்றைய ஊடக வளர்ச்சி

19ஆம் நூற்றாண்டில் இலங்கைச் சமூகத்தில் ஊடக கலாசாரம், வாசிப்புப் பண்பாடு எல்லாம் எப்படி இருந்தது என்பதை வைத்தே “முனியாண்டி”யின் வகிபாகத்தையும் கவனித்தல் அவசியம். ஆங்கில வெளியீடுகளைப் பொறுத்தளவில் பெரும்பாலும் மதம், ஆட்சி நிர்வாகம் என்பவை தொடர்பாகவும், மற்றும்படி இலக்கணம், சோதிடம், மருத்துவம், விவசாயம் போன்றன தொடர்பான வெளியீடுகளே பெரும்பாலும் இருந்தன. பத்திரிகைகளின் வருகை இலங்கைச் சமூகத்தில் நிச்சயம் பெரும் மாற்றங்களைக் கொண்ட வந்தது. வாசிப்பு என்பது ஒரு வர்க்கத்தோடும், சாதியோடும், அந்தஸ்தோடும், கல்வி படைத்தவர்களோடும் மட்டுப்பட்டிருந்த நிலைமை மாறி அது பாமரர்களையும் படிப்படியாக அடைந்துகொண்டிருந்த காலம். எழுத்துக்களால் மட்டுமே குவிக்கப்பட்ட ஊடகங்கள் மெதுவாக காட்சிப்படுத்தலுக்குள் நுழையத் தொடங்கியது.

புகைப்படக் கருவிகள் வந்தடைவதற்கு முன்னர், அப்புகைப்படங்களை பதிப்புத் துறையில் பயன்படுத்துவதற்கு முன்னர் ஓவியங்களே காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஊடகமாக இருந்தன. அதிலும் குறிப்பாக கொட்டோவியங்களே அன்றைய ஆரம்ப தொழிநுட்ப வசதிகளுக்கு சாத்தியமாக இருந்தன. எனவே ஓவியங்களுடனான பதிப்புகளுக்கு பெரும் வரவேற்பிருந்தன. வெகுஜன காட்சிபடுத்தல் ஊடகமாக அது தான் விளங்கியது. 1737 இல் இலங்கையில் டச்சு ஆட்சியின் போது அச்சு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறு நூல் பதிப்புகளும் பிரசுரங்களும், அரச ஆவணங்களும் பதிப்பிக்கப்பட்டலும் பத்திரிகைகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

ஆனால் ஆங்கிலேய ஆட்சியில் பத்திரிகைகளுக்கு பெரும் மவுசு வந்தது. பத்திரிகைத்துறையின் வளர்ச்சியும் அந்த இடத்துக்கு வந்தடைந்திருந்தது. கோல்புறுக் – கமரூன் அரசியல் திட்டக் காலத்தில் இலங்கையின் பத்திரிகைத்துறையின் நுழைவுக்கான அவசியத்தையும், வாய்ப்பையும் உருவாக்கியது. கோல்புறுக் – கமரூன் அரசியல் திட்டத்தினால் உருவான சிவில் நிர்வாகம், நீதித்துறை, நிதித்துறை சார் ஏற்பாடுகள் பதிவுகளின் ஆவணப்படுத்தளுக்கும், தொடர்பாடலுக்கும் அச்சுப் பதிப்புத்துறையின் பரப்பை விசாலப்படுத்தியது. அதுபோல  அந்த ஆட்சிக்கு தகவல்களை பரப்புவதற்கும், பெறுவதற்கும் பத்திரிகைகளின் தேவையும் உணரப்பட்டது. கோல்புறூக் விசாரணைக் கமிஷன் வந்திருந்தபோது இலங்கையில் அரசாங்க அச்சகத்துறை சிறிய அளவில் தொடங்கி இயக்கிக்கொண்டு தான் இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலேயர் இலங்கையை முழுவதும் கைப்பற்றுவதற்கு முன்னரே அதாவது 1802 இலேயே அரசாங்க வர்த்தமானி பத்திரிகை (Government Gazette) ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 1831 இல் Colombo Journal தனியார் இதழ் ஆளுநரின் ஆதரவோடு வெளியாகத் தொடங்கிவிட்டது.

மேலும் The Observer and Commercial, Advertiser ஆகியவை 1832இலும், The Ceylon Chronicle (1837), The Ceylon Herald (1837), The Ceylon Times (1846), The Examiner (1846). என்பவை மட்டுமன்றி முதலாவது சிங்களப் பத்திரிகையான லங்காலோகய (1860) அதன் பின்னர் லக்மினிபான(1862). என்பவை வெளிவந்ததோடு யாழ்ப்பானியாத்தில் இருந்து இலங்கையின் முதலாவது தமிழ் பத்திரிகையான உதய தாரகையும் 1841 இல் வெளிவந்தது. பாலியர் நேசன் 1859 இலும் வெளியானது.

கலாநிதி விஸ்வவர்ணபால குறிப்பிடும்போது (3) இலங்கையின் கட்சி அரசியல் முறையின் வளர்ச்சிக்கும், சுதேசிகளின் அரசியல் ஆர்வத்துக்கும் இப்பத்திரிகைகளின் வகிபாகம் பெரிதும் இருந்தது என்கிறார். இப்படியே இதன் நீட்சியாக The Observer, The Ceylon Times ஆகிய இரு போட்டிப் பத்திரிகைகள் சுமார் ஐம்பது ஆண்டுகள் இலங்கையின் பத்திரிகைத்துறையிலும், அரசியல் நடத்தையிலும் பெரும் செல்வாக்கு செலுத்தின. இவற்றில் The Observer அரசையும், அரசின் பிழையான ஆட்சியையும் கடுமையாக விமர்சிக்கின்ற பத்திரிகையாக அன்று இருந்தபோதும் பிற் காலத்தில் தனது போக்கை மாற்றிக்கொண்டதை காண முடியும். அது அரச எதிப்பு பத்திரிகையாகவே பொதுவில் அடையாளப்படுத்தப்பட்டது. இதே காலத்தில் The Examiner பத்திரிகையும் ஒரு அரச எதிர்ப்பு பத்திரிகையாகத் தான் அடையாளம் காணப்பட்டது.  அதேவேளை The Ceylon Times பத்திரிகை அரசாங்கத்துக்கும், ஆளுனருக்கும் ஆதரவான பத்திரிகையாகவே இயங்கி வந்தது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து காட்சி ஊடகமாக கோட்டோவியங்கள் கார்டூன் வடிவில் அறிமுகமானதுபோல அதே நூற்றாண்டின் இறுதியில் புகைப்படங்களும் அறிமுகமாகின.

ஆங்கிலேயர்களின் பிரதான வருமானமாக பெருந்தோட்டத்துறை இருந்த போதும் 1869 கோப்பி பயிர்செய்கையின் அழிவின் காரணமாக ஆங்கிலேய அரசு பெரும் வருமான வீழ்ச்சியை சந்தித்தது. இதை சமாளிக்க அரசு வரிகளை உயர்த்தியது. அது சமூக அரசியல் காரணிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனால் விளைந்த சமூக நெருக்கடிகளை பத்திரிகைகள் பதிவுசெய்தன. விமர்சித்தன. இதே காலத்தில் வெளிவந்த Ceylon Independent, Ceylon Patriot போன்ற பத்திரிகைகளும் அரசை விமர்சிப்பதற்கு களமிறங்கின. இந்த சூழலில் சிங்களப் பத்திரிகைகளின் தோற்றமும் சாமான்ய வெகுஜன தகவல் தொடர்பாடலைத் திறந்தன. காலனித்துவத்துக்கு எதிரான கூட்டு மனநிலை உருவெடுத்தது. காலனித்துவத்துக்கு எதிராக மட்டுமன்றி, கிறிஸ்தவத்துக்கு எதிராகவும் இந்த மனநிலை ஒன்றுசேர்ந்தது. பல சிங்கள சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் தோன்றி பரவின. அது ஒரு தேசிய அலையையும் சுதேசிய வாதத்தையும், தேசியவாதத்தையும், ஈற்றில் சிங்கள பௌத்த வாதத்துக்கும் இட்டுச் சென்ற வரலாறை அறிவீர்கள்.

இங்கிலாந்தில் தான் இந்த பஞ்ச் வகை இதழ்கள் முதன் முதலில் தோற்றம்பெற்றன. இங்கிலாந்தில் 1841 இல் தொடக்கப்பட்ட “Punch, or The London Charivari” என்கிற  இதழ் தான் கேலிச்சித்திர இதழ்களுக்கெல்லாம் முன்னோடி.(4)  151 வருடங்களாக லண்டனில் வெளிவந்த இந்த இதழ் 1992 இல் மூடப்பட்டது. பின் மீண்டும் 1996 இல் தொடங்கப்பட்டு 2002 இல் மீண்டும் மூடப்பட்டுவிட்டது. இந்த பஞ்ச் இதழின் பாதிப்பில் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது, இங்கிலாந்தின் காலனித்துவ செல்வாக்குக்குட்பட்ட பல நாடுகளில் இதனையொத்த இதழ்கள் தொடங்கப்பட்டன.(5) சீனாவில் 1867 இல் இருந்து வெளிவரத் தொடங்கியது. இந்தியாவில் லக்னோவில் 1877 இல் அதாவது இலங்கையில் வெளிவரத் தொடங்கி எட்டு ஆண்டுகளின் பின்னர் உருது மொழியில்  “அவாத் பஞ்ச்” (Awadh Punch) என்கிற பெயரில் வெளிவரத் தொடங்கியது. அளவிலும், தோற்றத்திலும், தலைப்பிலும் கூட இவற்றுக்கிடைய சம ஒற்றுமை காணப்படுவதை இன்றும் அவற்றை நோக்கும் போது காண முடிகிறது. அவுஸ்திரேலியாவில்  “Melbourne Punch”, இந்தியாவில் “Awadh Punch” என்றெல்லாம் வெளிவந்த போது இலங்கையில் “முனியாண்டி” என்கிற பெயரில் 

பஞ்ச் இதழில் முதன்முதலாக கார்டூன் என்று அழைக்கப்படும் நகைச்சுவை கோட்டோவியங்கள் முதன்முதலில் 1943 இல் இருந்துதான் பயன்படுத்தப்பட்டன. அரசியல் கேலிச்சித்திரங்கள் அப்போது பஞ்ச் என்று தான் அழைத்தார்கள். (6)

“முனியாண்டி”யின் வருகை

இந்த சூழலில் தான் “முனியாண்டி”யின் வருகையும் நிகழ்ந்தது. இதே காலத்தில் பிரபலமாக இருந்த The Observer,  The Ceylon Times போன்றனவற்றில் கோட்டோவியங்கள் இருந்தபோதும் அவை கேலிச்சித்திரங்களாக பரிமாற்றமடையவில்லை. “முனியாண்டி”யில் வெகுஜன செய்திகள், அரசியல் வர்ணனை, அதிகாரிகளின் மோசடிகள், கிசுகிசு விடயங்கள் ஊழல்கள் என்பவற்றை எழுத்துக்களாலும், கேலிச்சித்திரங்களாலும் வெளிபடுத்தியது. அது ஒரு பெரும் வாசகர் பரப்பை பெருக்கியது. The Ceylon Times அதை ஆதரித்து பலப்படுத்தியது. “முனியாண்டி”யின் ஓராண்டு நிறைவின் போது அது பத்தாயிரம் சந்தாதாரர்களை எட்டியிருந்தது. 3.09..1870 அன்று, “முனியாண்டி” 9999 வாசகர்களை எட்டிவிட்டதாக அறிவித்தது.  சுமார் 150  ஆடுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட ஒரு நிலையை எண்ணிப்பாருங்கள். (7)

16 யூலை  1869 வெளிவந்த The Ceylon Times  பத்திரிகையில் “முனியாண்டி” இதழின் முதல் பதிப்பு தீர்ந்துவிட்டத்தையும் அதைக் கோரியவர்களுக்கு மீண்டும் கிடைக்கச் செய்வதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

The Ceylon Times  பத்திரிகைக்கும் “முனியாண்டி”க்கும் உள்ள உறவு என்னவென்பது இரகசியமல்ல. The Ceylon Times  ஐ வெளியிட்ட அதே ஜோன் கெப்பர் தான் “முனியாண்டி”யைத் தொடக்கி நடத்தி வந்தார். எனவே இதே காலத்தில் அவர் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். எனவே அரச எதிர்ப்பு விடயங்களுக்கு “முனியாண்டி”யை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்.(8)  எனவே அரச ஆதரவுப் பத்திரிகையான The Observer பத்திரிகை இந்த இரண்டுக்கும் உள்ள உறவைச் சாடி விமர்சித்தது. “முனியாண்டி” லாபம் சம்பாதிக்கும் பத்திரிகை இல்லை என்றும், அது கட்சியின் நிகழ்ச்சிநிரலுக்ககாக பேனை, பென்சில் கையாளும் திறமைபடைத்த சில கனவான்களால்  சிறிய சமூகப் பிரச்சினைகளை ஊதிப்பெருப்பிக்கும் பத்திரிகை என்று The Observer சாடியது. இதற்கு 22 யூன் 1869 வெளிவந்த The Ceylon Times  பத்திரிகையில் கெப்பர் பதிலடி கொடுக்கிறார்.  இப்படிப்பட்ட கிண்டல் காட்சி வடிவத்திலான எதிர்ப்பை ஆங்கிலேய அரசு முதற் தடவை சந்திக்கிறது.

வான் டோர்ட் (J.L.K. Van Dort – 1831-98)

“முனியாண்டி”பத்திரிகையின் பிரதான ஓவியராக இயங்கியவர் வான் டோர்ட் (J.L.K. Van Dort – 1831-98) அவர் இலங்கைவாழ் பரங்கி இனத்தவர். மிகப் பெரிய ஓவியர். அவரைப் பற்றிய தனிக் கற்கை வேண்டும் எனலாம். ஓவியங்களின் மூலம் இலங்கையைப் பதிவு செய்தவர்களில் முக்கியமானவர். இலங்கை நில அளவை காரியாலயத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் அவர். அதேவேளை அவர் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றுக்கு கோட்டோவியங்களை வரைந்து கொடுப்பதையும் ஒரு பணியாகக் கொண்டிருந்தார். உதாரணத்துக்கு A.M. Ferguson இன் Souvenirs of Ceylon (1868) and Capper’s Old Ceylon (1877) போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவர் லண்டனில் இருந்து வெளியாகும் ஊடகங்களுக்கும் ஓவியங்களை வரைந்து வந்தார். 

ஆங்கிலேய அரசின் மீது இருந்த விமர்சன உணர்வு அவரின் ஓவியங்களில் வெளிப்பட்டன. ஆங்கிலேய அதிகாரிகளை மட்டுமல்லாது உள்ளூர் சுதேசிய மேட்டுக்குடியினரையும் அவரின் ஓவியப் படைப்புகளின் மூலம் விமர்சித்தார். 1868 இல் Alistair MacKenzie Ferguson வெளியிட்ட Souvenirs of Ceylon என்கிற அவரின் நூலில் நீதிபதிகள், பதிவாளர்கள், ஜுரிகள், மொழிபெயர்ப்பாளர்கள், சாட்சிகள் போன்றோரை வான் டோர்ட் வரைந்திருப்பதைப் பார்ப்பவர்களுக்கு அவரின் அறச் சீற்றத்தைப் புரிந்துகொள்ள முடியும். வான் டோர்ட் வரைந்த பல ஓவியங்களில் அவரின் கையெழுத்தைக் காணமுடியாது. எனவே இன்றும் பலரும் அவரால் வரையப்பட்ட ஓவியங்களாய் அடையாளம் காண முடியாதுள்ளனர். அவர் ஒரு அரசாங்க ஊழியராக இருக்கும் நிலையில் அவை தனக்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்தும என்பதற்காகவே அவர் அவ்வாறு கையெழுத்துக்களைப் பயன்படுத்தவில்லை என்று பீரிஸ் குறிப்பிடுகிறார்.(9)

“முனியாண்டி”வான் டோர்ட்டுக்கு சிறந்த களமாக அமைந்தது. ஆனாலும் “முனியாண்டி”ஆங்கிலம் கற்ற படித்த ஆங்கிலேயர்களிடமும், உள்ளூர் மேட்டுக்குடி பிரமுகர்களிடமும் தான் சென்றடைந்தது. காலனித்துவ அரசை சாடும் ஒன்றாக இருந்தாலும்  அது சுதந்திரம் சுயராஜ்ஜியம் என்பவற்றை உந்தும் ஒன்றாக இருக்கவில்லை. காலனித்துவ ஆட்சிக்குள் சீர்த்திருத்த வசதி வாய்ப்புகளை பேணும் ஒன்றாகத் தான் அது இருந்தது. “முனியாண்டி”யின் விற்பனையும், விளம்பரமும் தான் அதைப் பேணி வந்தது. அதன் விளம்பரங்கள் The Ceylon Times இன் நான்காவது வாரத்திலும் வெளியாகிக்கொண்டிருந்தது.

“முனியாண்டி”யில் வெளியான வான் டோர்ட்டின் கேலிச்சித்திரங்களில் பெரும்பாலும் ஒரு குரங்கை குறியீடாக வைத்து கிண்டல் செய்வதைக் காணலாம். சில இடங்களில் அதை ஒரு அனுமாராகவும் சித்திரிக்கிறார். இதையே பேலிஸ் அப்புஹாமியின் கவட்ட கத்திகயா சஞ்சிகையிலும் காணமுடியும். அவரும் தனது முதலாவது சஞ்சிகையிலிருந்தே குரங்கைக் குறியீடாகக் கொண்ட கேலிச்சித்திரங்களை வெளியிட்டிருக்கிறார்.

“...தூர மேற்குத் திசையில் இருந்து வந்த நீங்கள் இங்கே எந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்? இந்த “காட்டுமிராண்டிகளுக்கு” (உங்கள் நாகரிகத்தை விட பழமையானது என்கிறீர்களா?) கற்பிக்க, ஐரோப்பாவில் உங்கள் மதத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்து சுத்திகரிப்பு செய்ய வந்தீர்களாக்கும்? பராக்கிரமபாகு கட்டிய பாரிய சமுத்திரத்தை விடவா உங்கள் கலையும், விஞ்ஞானமும் இலக்கியங்களும் பெரிதாகப் போகிறது. இல்லை! ஆனால் வெறுமனே உங்கள் சுயநல நோக்கங்களை இலக்காகக் கொண்டு, பணம் சம்பாதிக்கும் ஒரே இலட்சியத்துடன் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் மதம் பின்தொடர்வதற்கானது உங்கள் கடவுள் ‘சர்வ வல்லமையுள்ள ரூபாய்’, மற்றவர்கள் உங்களை பின்பற்றுவதற்காக உங்கள் சட்டம், உங்கள் லாபம் சதம் சதங்களாக. உங்கள் கொள்கை சுயநலம், மேலும் உங்கள் நம்பிக்கை பொதுவாகவே தாழ்மையானது...”

இப்படி குரங்குப் படத்துடன் உள்ள கேலிச்சித்திரத்துடன் ஒரு குறிப்பு வெளியாகியிருக்கிறது.

அந்த ஓவியத்தில் குரங்குக் கூட்டங்களுடன் உள்ள பெரிய குரங்கை “முனியாண்டி”அரசனாக சித்திரிக்கிறார் வான் டோர்ட்.

ஒரு ஜெனரல் தன் முன் மண்டியிட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மார்புகளை தன் ஒரு கையால் அழுத்திக்கொண்டு மறு கையால் தன் கண்களை மூடிக்கொண்டிருப்பதாகவும் இன்னொரு பெண் அவருக்குப் பின்னால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வந்த நகைகளை கொடுப்பதற்காக காத்திருப்பது போலவும் 19 யூன் 1869 வெளியான முனியாண்டியில் ஒரு ஓவியம்  காணப்படுகிறது. அந்த ஓவியத்தில் சில பெண்கள் அழுதபடி கண்களை துடைத்தபடி செல்வதையும் காட்சிப்படுத்துகிறது. ஒரு புறம் ஊழல் இன்னொரு புறம் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றை சித்திரிக்கும் ஒரு காட்சி அன்றைய ஊடகமொன்றில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருப்பதை இங்கே காணலாம்.

இந்த கேலிச்சித்திரம் அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக போட்டிப் பத்திரிகைகளான The Ceylon Times, The Observer ஆகியனவற்றுக்கு இடையில் காரசாரமான எதிர்வினைகளும் பரஸ்பரம் நிகழ்ந்திருக்கிறது.

இன்னொரு ஓவியத்தில் கண்டி கம்பளைக்கூடாக நாவலப்பிட்டி வரை இரயில்பாதையை விரிவாக்குவதற்காக மலையோன்றில் இருந்து நில அளவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒருவரையும் அவரின் எஜமான் கோர்ட்டும் தொப்பியுடனும் பெரிய பூட்ஸ் சப்பாத்துக்களை அணிந்தபடி, கைகளை கோர்ட்டின் இரு பைகலுக்குள் இட்டபடி, கால்கள் இரண்டையும் அகற்றி வைத்துக் கொண்டு கையிடுக்கில் ஒரு கைத்தடியையும் வைத்துக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்பால் கூலித் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். நில அளவையாளர் பார்த்துக்கொண்டிருக்கும் தூரக்கண்ணாடிகு முன்னாள் கீழியிருந்து ஒரு கூழித்தொழிலாளர் மண்வெட்டியைத் தூக்கி அதனை மறைத்துக்கொண்டிருப்பதாகவும் ஒரு காட்சி.

எவ்வாறிருந்தாலும் 1871 ஆம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேய அரசால் “முனியாண்டி”தடை செய்யப்பட்டது. “முனியாண்டி”ஒரு அரச எதிர்ப்பு சஞ்சிகையாகவே அது முடிவுசெய்தது. ஆங்கிலேய அரசு அப்போது பேச்சு சுதந்திரத்தின் பேரால் சகித்துவந்தாலும் ஒரு கட்டத்துக்கு பின்னர் பொறுமை தாளாமல் முனியாண்டியை நிறுத்தி தனது “கருத்துச் சுதந்திர ஜனநாயகம்” எப்பேற்பட்டது என்பதை வெளிக்காட்டியது. “முனியாண்டி”முடிவுக்கு வந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் இருந்துகொண்டு தான் இருந்தது. அதன் பாதிப்பில் “முனியாண்டி”நின்றுபோன அடுத்த ஆண்டே “கவட்ட கத்திகயா” என்கிற கேலிச்சித்திர சஞ்சிகை வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அதுபோன்ற பல சஞ்சிகைகள் தொடர்ந்து வெளிவந்தன.

சிரித்திரன்

தமிழில் சிரித்திரன் இதழ் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழ். அவர் மறையும் வரை 32 ஆண்டு காலம் அவரே தொடர்ந்து ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். அவரின் மறைவோடு அதுவும் நின்று போனது.

சிரித்திரனில் சிந்தனை மிகுந்த படைப்புகளைப் போல, அதில் வெளிவந்த தனிச்சிறப்புமிக்க கேலிச் சித்திரங்களும், கருத்தோவியங்களும் சிந்தனையைத் தூண்டக்கூடியன. சிரித்திரனின் வரலாற்றுத தனிச்சிறப்பின் காரணமாக அப்படியொரு இதழின் தேவையை அதன் பின்னர் எவரும் பூர்த்தி செய்யாத நிலையில் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் 2021 சனவரி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் அச்சுப்பிரதியாக  வெளியிடப்பட்டு வருகின்றது.

“கவட்ட கத்திகயா”

சிரித்திரன் 32 ஆண்டுகள் ஒரே ஆசிரியரைக் கொண்டு வெளிவந்ததைப் போலவே சிங்களத்திலும் 38 ஆண்டுகள் தனி ஆசிரியரால் வெளிக்கொணரப்பட்ட ஒரு கேலிச்சித்திர இதழ் உண்டு. சிங்களத்தில் இத்தகைய கிண்டல்களை “விகட்ட” என்பார்கள். அப்படி “கவட்ட கத்திகயா” (“நையாண்டிப் பேச்சாளன்”) 1872.01.01 அன்றிலிருந்து 40 ஆண்டுகள் வெளிவந்தது. அதாவது சிங்களத்தில் முதலாவது பத்திரிகை வெளிவருவதற்கு பத்தே ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பத்திரிகை அது. அப்போது அதன் விலை 6 சதங்கள். 


“கவட்ட கத்திகயா” இதழில் அதன் ஆசிரியர் பேலியகொட G.D.பேலிஸ் அப்புஹாமியின் (27.02.1847 – 04.09.1910) நையாண்டிக் கவிதைகள், துணுக்குகள், கட்டுரை என்பவற்றின் சுவாரசியத்துக்காகவே அதிக வாசகர்களால் கவரப்பட்டு பல வருடங்களுக்கு வெளியாகிக் கொண்டிருந்தது. அப்பத்திரிகையைத் தொடங்கியபோது அவரின் வயது 25 தான்.

அன்றைய அரசியல்வாதிகள், முக்கிய அறியப்பட்ட பிரமுகர்கள் போன்றோரின் தீய செயல்களை பரிகசிக்கும் வகையிலும், தாக்கும் வகையிலும் அந்த இதழின் உள்ளடக்கம் இருந்தது. 38 ஆண்டுகள் இலங்கையில் ஒரு பத்திரிகை ஆசிரியராக நீடித்த ஒரே ஒருவராக G.D.பேலிஸ் அப்புஹாமி இருக்கக்கூடும். இலங்கையின் ஊடகத்துறையில் அதுவொரு சாதனை தான்.

தெலங்கபாத என்கிற கிராமத்தில் பிறந்த பேலிஸ் அப்புஹாமி அங்குள்ள விகாரையில் கல்விகற்று ஆளானவர். பேலிஸ் அப்புஹாமியின் முகம் தாடி, மீசையால் நிறைந்திருக்கும். அவரின் வாழ்நாள் முழுவதும் அதே வளர்ந்த தாடி மீசையுடன் தான் காணப்பட்டார். அவரின் வாழ்க்கையில் எந்நேரமும் நகைச்சுவை உணர்வோடும், யாரையாவது நையாண்டி செய்வதுமாக இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாள் அவரை “விகட ரஜா” (நையாண்டி மன்னன்) என்று அவரை அழைத்தார்கள். ஒருவரை கிண்டல் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அவர் எப்பேர்ப்பட்டவர் என்றெல்லாம் பார்க்காமல் தன் வேலையைப் பார்த்துவிடுவார். “கவட்ட கத்திகயா” பத்திரிகையின் முகப்பில் “நையாண்டி பண்ண ஏற்பட்டால் தராதரம்  பார்ப்பதில்லை” என்று நிரந்தர சுலோகமொன்றை அவர் எப்போதும் பயன்படுத்தி வந்தார். அதையே வாழ்நாளிலும் கடைபிடித்தார்.



தான் வணங்கும்; தனது மதிப்புக்கு பாத்திரமான அன்றைய பிரபல பௌத்த தேரரான ஹிக்கடுவே சுமங்கள தேரரை கிண்டல் செய்ய வாய்ப்பு கிடைத்தபோது அதற்கும் அவர் தயங்கவில்லை. அவரின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை சிங்கள நூல்கள் குறிப்பிடுவது வழக்கம். ஒரு முறை அரச குடும்பத்தின் குறிப்பொன்றைக் கொண்ட கைக்குட்டைகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதனைப் பார்த்த அப்புஹாமி தனது கட்டுரையொன்றில் “ஆங்கிலேய அரச குடும்பம் கோவணமாகிவிட்டது.” என்று எழுதியதற்காக அப்புஹாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்துக்கு அவர் தனது வழக்கறிஞரையும் நிராகரித்துவிட்டு தானே பதிலளிக்க ஆஜரானார் அப்புஹாமி. வழக்கை காண்பதற்காக பலர் கூடியிருந்தார்கள். தனக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பம் வந்தபோது அவர் அங்குள்ள எவரையும் பொருட்படுத்தாது, தனது ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அங்குள்ளவர்களை சற்று வியப்புக்குள்ளாக்கிக் கொண்டிருந்தார். சுதந்திரமாக தனது கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் தனது கோவணத்தையும் கழற்றவேண்டும் என்று கூறிக்கொண்டே அவர் தனது கோவணத்தையும் கழற்ற முயற்சித்த வேளை நீதிபதி சத்தமிட்டு தடுத்தாராம். “நான் சுதந்திரமாக எனது கருத்தை வெளிப்படுத்தவே முயன்றேன் அதற்கு இடமளிக்கமாட்டீர்கள் என்று தெரிகிறது, அப்படிஎன்றால் இதோ பாருங்கள் கோவணத்துக்குள் அரச குடும்பம் என்று கூறி கோவணத்தை தூக்கிக் காட்டினாராம். “இந்தப் பைத்தியக்காரனை நீதிமன்றத்தை விட்டு விரட்டுங்கள்” என்று கூறி நீதிபதி அங்கிருந்து அவரை விரட்டச் செய்தாராம். அவர் வழக்கில் இருந்தும் விடுதலையானார். இது அப்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்ட கதை. அடுத்த இதழில் “அரச கோவணம் விடுதலை பெற்றது” என்கிற தலைப்பில் “கவட்ட கத்திகயா” பத்திரிகையில் ஒரு கட்டுரையையும் வெளியிட்டார்.(10)

சிங்களப் பத்திரிகைத்துறை வரலாற்றில் நகைச்சுவை இதழ்கள் என எத்தனையோ வெளிவந்து நின்று போயிருந்தாலும் “கவட்ட கத்திகயா” தனியிடத்தில் இன்றும் பார்க்கப்படுகிறது அதற்கான காரணம் அது வெளிவந்த காலம், வெளியான காலங்களின் அளவு, ஒரே ஆசிரியர், அதன் காட்டமான உள்ளடக்கம் என்பவை தான்.

G.D.பேலிஸ் அப்புஹாமி

முதலாவது நகைச்சுவைப் பத்திரிகை மாத்திரமல்ல, கேலிசித்திரம் வெளியான முதலாவது சிங்களப் பத்திரிகையும் இது தான். தேசிய விடுதலைக்கு பங்களித்தவர்கள் வரிசையில் வைத்து போற்றப்படுகிறார் அப்புஹாமி. அந்தளவு தனது பத்திரிகையை தேசிய உணர்வுக்காகவும், ஆங்கிலேய எதிர்ப்புக்காகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார். அப்புஹாமி 1910.09.04 அன்று அவர் மரணமடையும் வரை வெளியானது. 1903 ஆம் ஆண்டு பம்பாய் நகரில் நிகழ்ந்த பத்திரிகை ஆசிரியர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார். அவர் எழுதிய சில சிங்கள இலக்கிய நூல்களும் மிகவும் கவனத்துக்குரிய நூல்களாக திகழ்கின்றன.(11)

“கவட்ட கத்திகயா”வுக்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் இருந்தது நிச்சயம் “முனியாண்டி” இதழ் தான். “முனியாண்டி” நிகழ்த்தி வந்த காலனித்துவ அரச எதிர்ப்பை “கவட்ட கத்திகயா” தான் அதன்பின்முனியாண்டியின் பாணியில் முன்னெடுத்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அதைத் தவிர வேறொரு முன்னுதாரண சஞ்சிகையும் அவர் காலத்தில் இருந்திருக்கவில்லை. அப்புஹாமி மறைவுக்குப் பின்னரும் மூன்று ஆண்டுகள் அது டேவிட், ஜோர்ஜ் ஆகிய அவரின் இரு புதல்வர்களால் வெளிக்கொணரப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை. அதுவும் 1913 இல்   நின்றுபோனது. அவர் வாழ்ந்த காலத்திலேயே “கவட்ட தூத்தயா” என்கிற பெயரில் சீ.என்.த.சில்வா என்பவரால் 10.07.1889 இல் ஒரு நகைச்சுவைப் பத்திரிகை வெளிக்கொணரப் பட்டபோதும் அதுவும் அத்தனை காலம் தாக்கு பிடிக்கவில்லை.

ஆங்கிலேயர் காலத்தில் இப்படியான இருபதுக்கும் மேற்பட்ட நையாண்டி இதழ்கள் சிங்களத்தில் மாத்திரம் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் சில உதாரணத்திற்கு;

  1. கவட்ட கத்திகயா - பேலிஸ் அப்புஹாமி -1872.01.01
  2. கவட்ட மித்றயா - பி. பொன்சேகா - 1889.04.13
  3. கவட்ட தூதயா - சி. என் டி சில்வா - 1889.07.10
  4. லங்கா கவட்ட மித்றயா - 1890.08.10
  5. கவட்ட நரேந்திறயா - டி. டி. கோட்டை - 1891.08.15
  6. கவட்ட ராலஹாமி - எம். டபிள்யூ. சி. தர்மவர்தன - 1893.09.15
  7. கவட்டயா - பீட்டர் சில்வா - 1894.09.15
  8. தெனுமெதி கவட்டயா - அ. ஜெ. பெரேரா - 1895.07.12
  9. மொரட்டு நரேந்திறயா - டபிள்யூ. எச். பெர்னாண்டோ - 1899
  10. கவட்ட றால - 1910.01
  11. சிங்கள கவட்டயா -  ஆ. எம். ப்ரீரேரா - 1912.12.14
  12. கவட்ட அங்கன - 1914
  13. கவட்ட திலக்க - டபிள்யூ. எம். பெரேரா -
  14. லங்கா கவட்டயா - 1916
  15. கவட்ட ராஜ - டி. ஈ. எஸ். ஜெயசூரியா - 1918

அவரளவுக்கு விடாப்பிடியாகவும் சுறுசுறுப்பாகவும் அப்பேர்பட்ட பத்திரிகையை வெளிக்கொணர எவரும் இருக்காததால் மற்றவை எல்லாம் தோல்வியில் முடிந்தன. அவரே இப்படி எழுதியிருக்கிறார்...

சோம்பேறிதனத்தால் உறங்குவோரே

கொச்சிமிளகாய் சற்றெடுங்கள்

அரைத்து பின்னாடி வஸ்தி செய்யுங்கள்

சோம்பேறித்தனம் ஓடிவிடும்...

என்று சிங்களத்தில் கவித்துவத்துடன் எழுதியிருந்தார்.

“முனியாண்டி” மேலும் ஆழமாக பன்முகப்பட்ட கோணங்களில் ஆராயக் கூடிய ஒரு முக்கிய இதழ். அது பல கேலிச்சித்திர இதழ்களுக்கும் ஒரு முன்னோடி இதழ் மாத்திரமன்று; அது ஏற்படுத்திய சமூக அரசியல் அதிர்வுகள் நமது ஆய்வுப்பரப்புக்குள் கொண்டுவரவேண்டிய ஒரு இதழ். இக்கட்டுரை வெறும் அறிமுகம் தான்.

ஜோன் கெப்பர்


இலங்கையின் ஊடகத்துறையின் பிதாமகன் என்று சொல்லகூடிய ஜோன் பெர்குசனின் உறவினர் தான் ஜோன் கெப்பர் (John Capper - 1814-1898). இலங்கையின் வளர்ச்சியில் பங்களிப்பைச் செலுத்திய ஆங்கிலேய காலனித்துவவாதிகளில் ஒருவர் ஜோன் கெப்பர் எனலாம். குறிப்பாக ஆங்கில மொழி ஊடகத்துறையில் அதிலும் ஒரு ஆசிரியராக (Editorship) அவர் ஒரு முன்னோடி என்று இலங்கையில் அறியப்படுபவர். பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் மட்டுமன்றி, வரலாற்றுத் தகவல்களையும், குறிப்புகளையும் கொண்ட வெளியீடுகளை வெளியிட்டுக்கொண்டே இருந்தார்.

இலங்கை மட்டுமன்றி, இந்தியா, அவுஸ்திரேலியா பற்றியும் அதே வகை வெளியீடுகளை வெளியிட்டார். ஒரு அபுனைவாளனாக தனது பாத்திரத்தை ஆற்றிவந்த அவர் ஒரு கட்டத்தில் புனைவிலக்கியத்திலும் ஆர்வப்பட்டார். சார்ள்ஸ் டிக்கன்ஸ் போன்றோரது இலக்கியங்களின் பாதிப்பில் அவர் ஒரு முக்கிய பாத்திரங்களை மையமாக வைத்து இலங்கையில் ஒரு நாவலை எழுதிவந்தார். அது முடிவடையாமலே அவர் மரணமானார்.

கோப்பி தொகைவிற்பனை வியாபாரத்தில் அவர் இணைந்ததைத் தொடர்ந்து அவர்  Acland & Boyd என்கிற கம்பனியின் சார்பாக 1937 ஆம் ஆண்டு இலங்கை வந்து சேர்ந்தார். கூடவே கருவா, தேங்காய் எண்ணெய் தொழில் வளர்ச்சிக்காகவும் அனுபப்பட்டிருந்தார். புதிய கோப்பித் தோட்டங்களை நிறுவுவதற்காக அதிகளவிலான பூர்வீக தாவரங்களை அகற்றுவதை மேற்பார்வையிட்டார். அவர் இலங்கை வருவதற்கு முன்னர் நீராவி, சுரங்கவேலை என்பவற்றுடன் தொடர்புடைய ஒரு சஞ்சிகையில் ஒரு ஊடகவியலாளனாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்.

கெப்பர் The Mining and Steam Navigation Gazette இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய அனுபவமுடையவர். இலங்கையில் அவர் The Ceylon Magazine பத்திரிகையைத தொடங்கினார். அறிவார்ந்தவர்களின் படைப்புகளைக் கொண்ட ஒரு ஆய்விதழாக அது இயங்கி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் நீட்சியாகத் தான் அன்றைய இலங்கையின் புத்திஜீவிகளுடன் இணைந்து ராஜரீக ஆசிய கழகத்தின் இலங்கைக் கிளையை தொடங்கினார்கள். அதன் முதல் செயலாளராக கெப்பர் இயங்கினார். அது வெளியிட்ட “The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society” இலங்கையின் முதற்தர ஆய்விதழாக அன்று தொடக்கம் இன்று வரை இருந்து வருவதை அறிவீர்கள். 1846 இல் அவர் Bessell ஐ ஆசிரியராகக் கொண்டு உருவான Ceylon Examiner பத்திரிகையில் முக்கிய பங்காற்றினார். இந்த இடைக்காலத்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கான நீதவானாகவும் பணியாற்றினார்.

1847 இல் இலங்கையில் கோப்பித் தொழில் பெரும் வீழ்ச்சியடைந்தது. கெப்பர் பணியாற்றிய கம்பனி இலங்கையில் தனது தொழிலைக் கைவிட்டது. கெப்பரும் லண்டனுக்கு நாடு திரும்பினார். லண்டனில் அவர் தொடர்ந்தும் எழுத்துப் பணிகளில் தீவிரமாக இயங்கினார். ஏறத்தாள பத்தாண்டுகளுக்குப் பின் கெப்பர் 1858 இல் மீண்டும் இலங்கை வந்தடைந்தார். அவர் Ceylon Times பத்திரிகையை கொள்வனவு செய்து ஆண்டுகள் அதனை நடத்தி வந்தார். அது நட்டத்தில் இயங்கவே 1874 இல் அவர் அப்பத்திரிகையை மீண்டும் விற்றுவிட்டார்.

கெப்பர் இலங்கையையும் அதன் அரசியலையும் அறிந்த பிரமுகரானார். அதன் பின்னர் அவர் அரசாங்க சபைக்கு உத்தியோகபற்றற்ற உறுப்பினராக தெரிவானார். ஆனால் அப்போது ஆங்கிலேய அரசின் சில கொள்கைகளை எதிர்த்து  15 நவம்பர் 1864 அன்று அவரும் மேலும் ஐந்து உத்தியோகபற்றற்ற உறுப்பினர்களும் (இரு ஆங்கிலேயர்களும், மூன்று இலங்கையர்களும்) ஒன்றாக இராஜினாமா செய்தார்கள். அது மட்டுமன்றி அவர்கள் சிலோன் லீக் (Ceylon League) என்கிற ஒரு அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்கள். அது அப்போது புதிதாக நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர் சேர் ஹெர்குலஸ் ராபின்சனுக்கு (Sir Hercules Robinson) சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது.

இந்த காலப்பகுதியில் தான் அவர் “முனியாண்டி”இதழை நடத்தினார். “முனியாண்டி”இதழ் தனது அரசியல் பணிகளுக்கு நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். லண்டனில் மிகப் பிரபலமாக இருந்த பஞ்ச் இதழ்களின் அனுபவங்கள் அவருக்கு இலங்கைப் பத்திரிகையில் பிரயோகித்து புது ஊடக வடிவத்தை இயக்கிக் கட்டினார்.

1883 இல் அவர் கல்கத்தாவுக்குச் சென்று Handbook to the Ceylon Court,  Calcutta International Exhibition ஆகிய நூல்களைத் தொகுத்துவிட்டு இலங்கை வந்ததும் தனது இரு மகன்களான Frank Augustus Capper, Herbert Henry Capper ஆகியோரிடம் Ceylon Times பத்திரிகையை ஒப்படைத்தார். அப்பத்திரிகை The Times of Ceylon என்கிற பெயர் மாற்றம்பெற்று தினசரி மாலைநேரப் பத்திரிகையாக வெளிவந்தது. விரைவிலேயே அது இலங்கையின் முன்னணிப் பத்திரிகையாக ஆனது. அந்த இரு மகன்களே கெப்பருக்குப் பின் வெற்றிகரமாக The Times of Ceylon பத்திரிகையை நடத்தினார்கள்.(12)

கெப்பர் 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார். அங்கே மிடில்செக்ஸின் புல்ஹாம் என்கிற பிரதேசத்தில் 1898 இல் தனது 83வது வயதில் இறந்தார்.

ஜோன் கெப்பரின் சில பிரபல நூல்கள்

  • Capper. John - Old Ceylon Sketches of Ceylon Life in olden times
  • Capper. John, - The Duke of Edinburgh in Ceylon.
  • Capper, John.  - Pictures from the East. 1854
  • Capper, John.  - India and Ceylon: ,The Three Presidencies of India 1853
  • Capper, John.  - A Book of Elephant and Elk Sport 1871
  • Capper, John.  - A Full Account of the Buddhist Controversy, Held at Pantura, 1873

அடிக்குறிப்புகள் 

  1.  “முனியாண்டி”இதழ்களின் மூலப் பிரதிகள் பெரதேனிய பல்கலைக்கழகத்தில் உள்ள பிரதான நூலகத்தில் Ceylon Room என்கிற பகுதியில் இன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.
  2. Ceylon Blue Book for the year – 1869 – Colombo William Skeen, Government Printer, Ceylon - 1870
  3. Warnapala, W.A. Wiswa. 1975. Press and politics in Sri Lanka. Journal of Constitutional and Parliamentary Studies
  4. Marion Harry Spielmann, The History of "Punch", Cassell, limited, 1895
  5. ‘A Comic Empire: The Global Expansion of Punch as a Model Publication, 1841-1936’, International Journal of Comic Art, Volume 15, No.2, 2013
  6. "Punch, or, The London Charivari, 1841". Science in the 19th Century Periodical. Retrieved 29 September 2013
  7. 1869 இல் வெளியான Ceylon blue book இன் தகவல்களின்படி அந்த ஆண்டு ஒவ்வொரு முனியாண்டி இதழும் சராசரி 2400 இதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் யாழ்ப்பாணத்தில் உதயதாரகை சராசரி 462 பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்கிறது.
  8. இதேவேளை முனியாண்டி இதழை தொகுத்து வழங்கியவர் ஜோன் கெப்பரின் நண்பரான Lieut Edgecomb என்று 1976 இல் வெளியான Historical Essays: Primary Printed and Manuscript Sources for Sixteenth to Nineteenth Century Available in Sri Lanka என்கிற நூல்
  9. Pieris, H.O. Introduction. In Ceylon: The near past: Drawings by J.L.K. Van Dort. London: William Clowes & Sons. 1951.
  10. எஸ்.கொடகே – “ஊடகக் கலையில் நையாண்டியர்களின் வரலாறு” (පුවත්පත් කලාවේ කවටයන්ගේ ඉතිහාසය), திவயின (22.05.2013)
  11. දුනපරේවාදය, මහියංගණවර්ණාව, වල්පොළ පින්කම, කෝරළ ශාන්තිය, දශග්‍රහ ශාන්තිය
  12. John Capper: A life in old Ceylon - By Richard Boyle The Sunday Times, 21.08.2016

நன்றி - தாய்வீடு யூன் - 2021

Share this post :

+ comments + 1 comments

3:59 PM

விரிவான, தரமான ஓர் ஆய்வு கட்டுரை. நண்பருக்கு பாராட்டு

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates