Headlines News :
முகப்பு » , , , , , » “தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது! - என்.சரவணன்

“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது! - என்.சரவணன்


சக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந்தவார பேசுபொருளாக ஆகியிருந்தது. அந்த சூடு இன்னமும் தணியவில்லை. அதாவுல்லா இன்னமும் அது குறித்து எதுவித வருத்தமும் தெரிவிக்காததும் அதற்குக் காரணம். இந்த விவாதத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அதாவுல்லா அப்படியான வார்த்தைப் பயன்படுத்தியது தவறு என்றும் அதனை திரும்பப்பெறுமாறும் கூறி ஆத்திரப்பட்டு எழுந்து தனது கிளாசில் இருந்த தண்ணீரை அவரின் மீது எறிந்ததையும் சக்தி தொலைக்காட்சி வெளியிட்டது. இத்தகைய தொலைக்காட்சிகளைப் பொறுத்தளவில் இந்தக் காட்சிகளையெல்லாம் காட்டுவதன் மூலம் அதிகளவு பார்வையாளர்களை ஈர்க்கச் செய்யும் வஞ்சக உத்தி தான். 

ஆனால் இந்த பிரச்சினையின் உட்கிடக்கை என்பது அவ்வளவு சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல. இந்தப் பிரச்சினையை மலையகத்தோடு மாத்திரம் குறுக்காமல் பொதுத்தளத்தில் இத்தகைய நிந்தனைச் சொற்களின் பரிமாணம் எத்தகையது என்று பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். 

ஒருவரை அல்லது, ஒரு குழுமத்தைச் சொற்களால் காயப்படுத்துவதற்கும், ஏளனம் செய்து இழிவுணர்வுக்குத் தள்ளுவதற்கும் அந்தந்த பண்பாடுகளைப் பொறுத்து பல சொற்கள் உலகம் முழுவதும் பேச்சுவழக்கில் உள்ளன. 

நிந்தனை 
இன - சாதி - மத - வர்க்க - பால் - நிறம், அங்கவீனம் என அனைத்து பிரிவினரையும் நிந்திக்கும் சொற்கள் புழக்கத்தில் இருக்கவே செய்கின்றன. நமது எதிர்ப்பு என்பது இந்த அத்தனை நிந்தனைகளுக்கும் எதிராகத் தான் இருக்க வேண்டும். சக மனிதனை வேறு கடும் சொற்களால் நிந்திப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் தனக்கு எதிராக அப்பேர்பட்ட நிந்தனையைப் புரியும்போது மாத்திரம் வெகுண்டெழுவதில் எந்தவிதத் தார்மீகமும் இல்லை. நம் கண் முன் காண்கின்ற, கேட்கின்ற சகல நிந்தனைச் சொற்களையும் எதிர்த்து நிற்பதன் மூலமே அனைவரும் அந்தத் தார்மீகத்தைக் கைவரப் பெறுகின்றனர். மற்றும்படி வேற்று சுயநல கோஷமாகக் குறுகிவிடும். 

உதாரணத்துக்கு சாதியை எடுத்துக் கொள்வோம். ஆயிரக்கணக்கான சாதிகளைக் கொண்ட சாதிய படிநிலை அடுக்கில் மேலே உள்ள சாதி x கீழே உள்ள சாதி என்பதைத் தவிர மிச்சம் எல்லாமே இடை நிலைச் சாதிகள் தான். ஆகப் பெருமளவான இந்த இடைநிலைச் சாதியினர் அத்தனையுமே தமக்கு மேலே இருக்கிற ஒரு சாதி தன்னை ஒடுக்குவதாகப் பதறிக்கொண்டு குத்துதே, குடையுதே, இடிக்குதே, உதைக்குதே என்று புலம்புமாம். அதே வேளை தனக்குக் கீழே உள்ள சாதியினரை இடித்துக் கொண்டும், மிதித்துக் கொண்டும், உதைத்துக் கொண்டும் இருக்குமாம். ஆக இத்தகைய சாதியினர் தனக்குக் கீழ் உள்ளோரை ஒடுக்கிக்கொண்டே மேலிருப்போர் ஒடுக்கிறார்கள் என்று புலம்ப என்ன யோக்கியம் இருக்க முடியும்? என்ன தார்மீகம் இருக்க முடியும்? இத்தகைய சமூக நீதி குறித்த கோஷம் சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக இருத்தல் அவசியம். 

காயப்படுத்தும் ஆயுதம் “நிந்தனை” 
ஒரு கட்டுரையொன்றுக்காகப் பல வருடங்களுக்கு முன்னர் சமூகத்தில் புழக்கத்திலுள்ள சகல தூசனங்களையும் பட்டியலிட்டு ஆராய முற்பட்டேன். அப்போது ஒன்றை இனங்காண முடிந்தது பெரும்பாலும் அத்தனை தூஷண சொற்களுமே பெண்களுக்கு எதிரானதாகத் தான் இருக்கிறது. ஒரு ஆணைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் தூசனம் கூட அந்த ஆணுக்கு நெருக்கமான பெண்ணின் பாலியலையோ, பாலுறுப்பையோ, பாலியல் நடத்தயையோ சாடும் ஒன்றாக அமைவதை அவதானிக்கலாம். ஒருவரை வார்த்தையால் காயப்படுத்த வேண்டுமெனில் அவருக்கு நெருக்கமான பெண்ணை இகழ்ந்துவிட்டால் அதி உச்ச மனக்காயங்களுக்கும், ஆத்திரத்துக்கும் உள்ளாக்கி விடலாம் என்கிற நம்பிக்கை புழக்கத்தில் உள்ளது. பெண்கள் பற்றிப் புனையப்பட்டுள்ள புனிதம், தூய்மை, கற்பு, போன்ற சமூக பண்பாட்டு ஐதீகங்களே காலப்போக்கில் அவற்றுக்கு நேரெதிரான நிந்தனைகளைப் பிரயோகிப்பதன் மூலம் இந்த உயர் எதிர்ப்பையும், வெறுப்பையும் வெளிப்படுத்தி விட வழி செய்திருக்கிறது. 

“தோட்டக்காட்டான்” 
மலையக மக்களுக்கு எதிரான நிந்தனைச் சொல்லாக “தோட்டக்காட்டான்” மட்டுமல்ல “கள்ளத்தோணி” போன்ற சொற்களும் ஏற்கெனவே புழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இன்றும் இவை புழக்கத்தில் உள்ளன. “தோட்டக்காட்டான்” தமிழ் மொழிச் சமூகத்திலும், “கள்ளத்தோணி” என்கிற சொல் சிங்கள சமூகத்திலும் மலயகத்தவருக்கு எதிராக அதிகம் பயன்படுத்தப்படும் சொற்கள். சிங்களவர்களைப் பொறுத்தளவில் இந்திய வம்சாவளிச் சமூகத்தினரை அந்நிய ஆக்கிரமிப்பாளராக பார்க்கும் பொறுப்புணர்ச்சியின் பால் இருந்து “கள்ளத் தோணிகள்” என்கின்றனர். 

அப்படி என்றால் தோட்டக்காட்டான் என்று தமிழ் மொழிச் சமூகங்கள் மத்தியில் பயன்படுத்தப்படுவதன் அர்த்தமென்ன? “காட்டான்” என்கிற சொல்லுக்குப் பின்னால், காட்டில் வசிப்பவன், நாகரிகமாகப் பழகும் இயல்பு இல்லாதவன்; முரட்டுத்தனமாக நடந்துகொள்பவன், அறிவற்றவன் என அகராதிகள் வரைவிலக்கணப்படுத்துகின்றன. அப்படி என்றால் “தோட்டக்காட்டான்” என்கிற நிந்தனைக்குப் அடித்தளமாக எத்தகைய ஐதீகம் கட்டமைக்கப்பட்டு இதுவரை காலம் கடத்தப்பட்டிருக்கிறது என்பதையே நாம் கவனிக்க வேண்டும். 

ஆக “தோட்டக்காட்டான்” என்பது வெறும் நிந்திக்கிற வசவுச் சொல் மாத்திரமல்ல. அச்சமூகம் எழ விடாதபடி புனைந்து, ஐதீகமாகப் பரப்பி, நிறுவி வரப்பட்ட சொல் அது. அப்படிப்பட்ட ஒரு ஐதீகத்தை தக்கவைப்பதன் மூலம் லாபமடையும் ஆழும் வர்க்க அதிகாரத்துவ கூட்டு இருக்கவே செய்கிறது. பலமான தடைகளை மீறி எழுந்து வரும் இன்றைய மலையகம் இதையும் தகர்த்துக் கொண்டு தான் நிமிர்ந்துகொண்டிருக்கிறது. அப்பேர்பட்ட சூழலில் எவராவது இனியும் “தோட்டக்காட்டான்” என்று அழைப்பதை இந்த தலைமுறை வன்மையாக எதிர்த்து நிற்கிறது. அந்த மலையக கூட்டு மனநிலையைத் தான் மனோ கணேசனும் பிரதிபலித்தார்.

அடையாளம் 
காலனித்துவத்தின் பெரும்பகுதி காலத்தில் இலங்கை வாழ் தமிழர்களை ஒட்டுமொத்தமாக “மலபாரிகள்” (Malabars) என்றே அழைத்தார்கள். ஆண்டுதோறும் இலங்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுவந்த “தி ப்ளூ புக்” (The Blue books of Ceylon) 1880 வரை தமிழர்களை அப்படித்தான் குறிப்பட்டது. இந்தியாவிலிருந்து தமிழர்கள் தோட்டத் தொழிலுக்காக இறக்குமதி செய்த காலத்தில் அவர்களை அடையாளப்படுத்த “மலபார் கூலிகள்” (Malabar Coolies) என்று அழைத்தார்கள்.  தோட்டத் தொழிலைத் தவிர துறைமுகம், இரயில் சேவை, சுத்திகரிப்புத் தொழில் போன்ற பணிகளுக்கும் இந்தியர்கள் இறக்கப்பட்டதனால் “இந்தியக் கூலிகள்” என்றே பொதுவாக அனைவரையும் அழைத்தார்கள். தோட்டத் தொழிலாளர்களும் அதே அடையாளத்தில் தான் குறிக்கப்பட்டார்கள். அவர்கள் இயற்றிய சட்டங்கள் கூட “கூலிச் சட்டங்களாகத் தான் இருந்தன” உதாரணத்திற்கு
  • Indian Coolies' Bill, 1909,
  • Report of a meeting to discuss Coolie Emigration to the Colonies, Revenue and Agriculture Department, 1882,
  • Coolie conditions on arrival, medical?, Estates, vital statistics/births/deaths - Administration Reports 1869 – 1924,
  • Cooly Immigration 1907 - Sessional Paper
1881 இல் வெளியான குடித்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் இந்தியாவில் பிறந்த தமிழர்களை “இந்தியத் தமிழர்” என்று பதிவு செய்தனர். 

இந்திய வம்சாவழித் தமிழர்களின் சனத்தொகை இலங்கை வாழ் சனத்தொகையை விட அதிகரித்த காலத்தில் தான் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவமும் அறிமுகமானது அப்போது தான் அவர்கள் “இந்தியர்கள்” என்று தரம் பிரித்தார்கள். ஒரு நூற்றாண்டும் கடந்து வாழ்ந்துவந்த காலத்தில் தான் “இந்திய வம்சாவளியினர்” என்கிற பெயரைப் பெறமுடிந்தது. அரச ஆவணங்களிலும், குடித்தொகை விபரங்களிலும் “இந்தியத் தமிழர்” என்கிற அறிமுகத்தைப் பெற்றார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியப் பின்னணியைக் காரணம் காட்டி உரிமைகளைப் பறித்து, நாட்டை விட்டும் துரத்தும் அநியாயம் நிறைவேறிய போது தான் இந்தியாவுக்கும் எங்களுக்கும் இனி எந்தவிதத் தொடர்பும் இல்லையென்று உரத்துக் கூறி “மலையகத் தமிழர்” என்கிற அடையாளத்தை நிறுவிக் கொண்டார்கள். 

இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களைப் போல “மலையக மக்களும் தனியான தேசிய இனம்” என்கிற கருத்தாக்கம் கால் நூற்றாண்டாகப் பேசுபொருளாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக வடக்கில் போர் உக்கிரமம் பெற்றுக்கொண்டிருந்த காலத்தில்  இத்தகைய அடையாளங்களை முன்னிறுத்துவதை “பயங்கரவாதக் கோரிக்கையின்” அங்கமாகப் பேரினவாதம் பார்க்கத் தொடங்கிய போது. இந்த “மலையக தேசியத்துக்கான” அடையாளமும் பின் வாங்கப்பட்டது என்றே கூற வேண்டும். 

ஒவ்வொரு இனமும் தன்னை எப்படி அழைக்க வேண்டும் எப்படி அழைக்கப்படக் கூடாது என்பதை அறிவிக்கும் இறைமையைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நிந்திப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த சொல்லொன்றை வெறுப்பதற்கும், நிராகரிப்பதற்குமான உரிமையைக் கொண்டிருக்கிறது. 


சட்டமுண்டா?
நிந்தனைக்கு எதிரான சட்டங்கள் இலங்கையில் அத்தனை வலுவாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நம் அண்டைய நாடுகளில் கூட மத நிந்தனைகளுக்கு எதிரான சட்டங்களாவது உண்டு. 

அப்படி இயற்றும் போது எது நிந்தனை என்பது குறித்து வரைவிலக்கணப்படுத்துவதோ, பட்டியலிடுவதோ ஒரு சிக்கல் உண்டு. சட்டவாக்க நிபுணர்கள் தான் இதற்கான சரியான வரையறைகளை வகுக்க முடியும். 

இலங்கையைப் பொறுத்தளவில் பொலிசார் அளவுக்கு நிந்தனைச் சொற்களையும், தூசன சொற்களையும் பயன்படுத்துவது வேறு யாருமில்லை என்றே கூற வேண்டும். எனவே இப்படியான சட்டங்கள் அதிகாரத்துவ மட்டங்களில் உள்ளவர்களையும் வழிக்குக் கொண்டுவர வழிவகுக்கும். 

இலங்கையில் அவதூறு, நிந்தனை என்பவற்றுக்கு எதிரான வழக்குகளுக்கு அரசியலமைப்பின் மூன்றாவது அத்தியாயமான அடிப்படை உரிமைகள் பகுதியிலுள்ள 11, 12வது உறுப்புரை கூறுகின்ற “சட்டத்தின் முன் அனைவரும் சமம்”, “இழிவுபடுத்துதல் தண்டனைக்குரிய குற்றம்” போன்ற ஏற்பாடுகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டம் என்கிற அளவில் அதில் இதற்குத் தீர்வு சொல்லப்பட்டிருந்தாலும் நிந்தனைகள் குறித்த தெளிவான வரைவிலக்கணங்களையும், அதன் வரையறைகளையும், அவற்றின் வித்தியாசங்களையும் தன்மைக்கேற்ப அவற்றுக்கான தண்டனைகளையும் வரையறுக்க பிரேத்தியக சட்டத்தால் தான் இயலும். இலங்கையில் அது இன்னமும் இல்லை. அப்படி ஒரு சட்டத்தை இயற்ற நிர்ப்பந்திக்கிற ஒரு சம்பவமாக “அதாவுல்லா சர்ச்சையை” எடுத்துக்கொள்ள வேண்டும். 

அத்தாவுல்லாக்களைக் களைவது. 
முஸ்லிம்களுக்கும் மலையக சமூகத்துக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையைக் கொண்டுவர இந்த ஒரு வாரம் பல்வேறு சக்திகள் முயன்றும் தோற்று போயின. இன்றைய தலைமுறையினர் பரஸ்பர புரிதலுடனும், நிதானத்துடனும் அணுகியதைக் காண முடிந்தது. 

இன்றும் கூட அங்கவீனர்களைச் செவிடன், நொண்டி, குருடன் போன்ற இன்னோரன்ன சொற்களால் அழைப்பது சாதாரண பேச்சு வழக்கில் அங்கீகாரம் பெற்றுள்ளது ஒரு சாபக் கேடு. 

இன்றும் மற்றவர்களைத் திட்டச் சாதிப்பெயர்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் வழக்கமாக உள்ளது. அத் திட்டலுக்கு ஆளாபவர் எந்த சாதியாக இருந்தாலும் அந்த வசவு குறிப்பிட்ட அந்த சாதிச் சமூகத்தினரை இழிவாகப் புனைந்து பரப்பி நிலைபெறச்செய்யக் காரணமாகி விடுகிறோம். இப்படி நாமறியாமலேயே நம் தலைகளில் ஏறிக் குந்திக்கொண்டிருக்கிற ஆதிக்க நிந்தனைச் சொற்கள் ஏராளம். சக மனிதரைத் தூற்றுவதும், தூற்றுவதை வேடிக்கைப் பார்ப்பதையும் செய்துவந்த நாம் நாளை அதே நிந்தனைகள் நம் வீட்டு வாசலைத் தட்டும் போது மட்டும் நமக்கு ஏன் ஆத்திரம் மேலிடவேண்டும்? 

"சகல விதமான நிந்தனைச் சொற்களையும் எதிர்ப்போம்" என்கிற கோஷத்தை தூக்கியெழுப்ப இந்த சூழலை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்வோம்! 

சகல விதமான ஒடுக்குமுறைகளை வலுப்படுத்தும் ஆதிக்க சித்தாந்தங்கள் நிருவனமயப்பட்டுள்ள ஒரு சமூக அமைப்பில் இத்தகைய நிந்தனைச் சொற்களுக்கான வாய்ப்புகள் திறந்தே இருக்கிறது. நவீன உலகில் சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் போன்றவை குறித்து தெளிவுபெறுகிற சமூகம் இன்று வளர்ந்து வருகிறது. இவற்றை விளங்கப்படுத்துவதும் அதனால் சாத்தியம் கண்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில் இருந்து அடுத்த மட்டத்திற்கு வளர்த்தெடுக்க பிரக்ஞை பூர்வமான அகக்களையெடுப்பு அவசியமாகிறது. அதன் மூலம் மட்டுமே பண்பாடுமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப நம்மால் முடியும். 

நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான அக-அத்தாவுல்லாக்களை களைவதன் மூலம் மட்டுமே பிற- அத்தாவுல்லாக்களை விமர்சிக்கும் தகுதியைப் பெறுகிறோம். எதிர்ப்பதற்கான தார்மீகத்தைப் பெறுகிறோம். நமது கடமையைச் செய்யாது உரிமையை மட்டுமே எதிர்பார்ப்பது என்ன வகை நீதியாக இருக்க முடியும்? 

பின்னிணைப்பு

என்டன் ஜோன்ஸ்
சிங்களத்தில் “கள்ளத்தோணி” பற்றிய பல ஐதீகங்கள், புனைவுகள், புனைகதைகள், பழமொழிகள் என உண்டு. இவை சாதாரண மக்கள் மத்தியில் “கள்ளத்தோணிகள்” பற்றிய வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி நாளடைவில் அவர்களுக்கு எதிரான அரசியலாகவே வேரூன்றிவிட்டது.

இந்த வெறுப்பை ஜனரஞ்சகப்படுத்தி இந்திய வம்சாவளியினருக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு பாடல் சிங்கள சமூகத்தில் 80-90களில் பிரபலமாக இருந்தது. இப்போதும் அப்பாடலுக்கு இருக்கும் மவுசு குறையவில்லை என்றே கூறவேண்டும்.மலையக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி மிகுந்த ஒரு பாடல் இதை விட வரலாற்றில் இருக்க முடியாது.
இந்தப் பாட்டை இயற்றிப் பாடியவர் பிரபல பொப் பாடகர் என்டன் ஜோன். அவரின் பாடல்கள் அத்தனையும் சமூகக் கதைகளைப் பேசும் பாடல்கள் என்பதால் சிங்களப் பாடகர்களில் தனித்த இடம் அவருக்கு உண்டு. லுமும்பா, மனம்பேரி, இந்திரா காந்தி, ஹிட்லர், கொப்பேகடுவ போன்றவர்களைப் பற்றியும் பாடல்கள் பாடியிருக்கிறார்.

அவரின் மேடைகளில் எல்லாம் ஒலித்த; கரகோஷம் பெற்ற புகழ் பெற்ற பாடல் “கள்ளத்தோணி” பாடல். வானொலி, சீடிக்கள், கசட்டுகள் என கலக்கிய பாடல் இது. ஆனால் இதுவரை இதன் உள்ளடக்கம் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டதில்லை. இதைவிட வெறுப்பின் உச்சத்தை உமிழ்ந்த வேறெந்த சிங்கள ஜனரஞ்சக பாடலையும் கேட்டிருக்க முடியாது. இத்தனைக்கும் இதன் சொந்தக்காரர் என்டன் ஜோன் ஒரு பறங்கி இனத்தைச் சேர்ந்தவர். போர்த்துக்கேய வம்சாவளியினரான அவர் தனது மூதாதையரும் இலங்கைக்கு கப்பல்களில் அத்துமீறி வந்து நாட்டை சூறையாடி, கைப்பற்றி அடிமைப்படுத்திய கூட்டத்தைச் சேர்ந்தவர் தான் என்பதை அவரும் மறந்து போனார். சிங்கள பேரினவாத கூட்டு மனநிலையின் நினைவுகளையும் உலுப்பியிருக்காது.

சமீபத்தில் ரோஹீங்கியா அகதிகளளை இலங்கையில் இருந்து விரட்டுவதற்காக எடுக்கப்பட்ட இனவாத பிரச்சாரங்களின் போதும் இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. (யூடியுப் சானலில் Allaganna Anton Jones) என்று தேடிப்பாருங்கள் இந்தப் பாடலை கேட்க முடியும். முதலில் பாடலைப் பாருங்கள்.

பிடிச்சுடு - அதோ பாய்ஞ்சு வாறார்கள் கள்ளத்தோணிகள்
பிடிப்பது எப்படி? ஒளிந்திருக்கிறார்கள்!
நல்லதம்பி - மொளகதண்ணி - சாம்பிராணிகள்
நமது எதிர்கால முதலாளிகள்!

தாரா போன்ற வெளிர்நிற கட்டழகானவர்கள்
கடலில் குதித்து வழியைக் கண்டார்கள்
வழியில் போராடி  இக்கரைக்கு வந்தவர்கள் - பின்னர்
நாங்களே பிரஜைகளென முரண்டு பிடிப்பவர்கள்!

தின்ன வழியின்றி இந்தியாவில் இருந்த அண்ணன்மார்
தோணிகளில் கள்ளத்தனமாக ஒளிந்து வந்தவர்கள்
இப்போ சுரண்டிவிட்டு
எங்கள் தோளைத் தட்டிப் போகிறார்கள் - இனி
எங்கள் நாட்டில் இருக்கிறார்கள் -ஐயகோ
கள்ளத் தோணிகள்
வரும்போது இரண்டு மூன்று, நான்காக வளைந்து வருகிறார்கள்
போகும்போது எங்கள் காதுகளையும் திருகிவிட்டு போகிறார்கள்
பதவிகளையும், வசதிகளையும் கொடுத்து
அவர்களைக் கெடுத்தது எங்கள் அண்ணன்மார்களே

வெட்கித் தலைகுனிந்து தலையில் பெட்டிகளுடன் வந்தவர்கள்
போத்தல் மூடிகளையும் கடதாசிகளையும் மலிவாக பெற்று - பின்னர்
சாக்கு உரிமையாளர்கள் ஆகிறார்கள் கள்ளத்தோணிகள்

உடுக்கவும் தின்னவும் குறைவாக செலவழிக்கிறார்கள்
எங்கு தங்குவதற்கும் தயார்.
பொழுது போக்கே பணம் சம்பாதித்தல் - இறுதியில்
அவர்கள் பிரஜைகள் - நாங்கள் கள்ளத்தோணிகள்

பெற்றோர், உறவுகள், நட்புகளை கைவிட்டுவிட்டு
லங்காவை பார்த்தபின்னர் அதுவே சொர்க்கம்!
அந்தக் கனாவுடன் - நாட்டைவிட்டு தப்பி
உறுதியுடன் வந்து சேர்கிறார்கள் - இந்த
கள்ளத்தோணிகளால் பெரும் பிரச்சினை

ஜனத்தொகையைப் பெருக்கும் - புதுவகைத் திருடர்கள்
கிடைக்கும் நிவாரணத்தையும் இழக்கும்
எங்களுக்கு பெரும் கவலை

நாட்டை அழிக்கும் கள்ளத்தோணிகள்
நாட்டுக்கு பெரும் சுமை
லங்கா எங்கள் நாடு - இப்படி ஆகலாமா

எவ்வளவு இருக்கிறார்களோ -அத்தனை
கள்ளத்தோணிகளையும் சேர்த்து பிடித்து - பட்டினிபோட்டு
உயரமான ஒரு மலையுச்சிக்கு கொண்டு சென்று
கழுத்தை நெறித்து தள்ளிவிடுவோம்
யாரும் கேட்டால் சொல்வோம்
பாய்ந்து செத்துப் போனார்கள் என்று...!


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates