Headlines News :
முகப்பு » , , , » இலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்

இலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்


இலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுருவாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது.

அது போலவே இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற வரலாறு பற்றிய குறிப்புகள் போதிய அளவு பதிவு செய்யப்பட்டதில்லை என்பதை அறியக் கூடியதாக இருக்கிறது. ஒரு வகையில் சிங்களத்தில் கூட அது பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழில் முதலாவது அச்சான நூல் எது என்கிற கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதில்லை.


“தம்பிரான் வணக்கம்” தான் முதலில் அச்சிடப்பட்ட தமிழ் நூல் என்பதை நாமறிவோம். ஆனால் அது தென்னிந்தியாவில் வெளியானது. இந்திய மொழிகளியே முதன்முதலில் அச்சு வடிவம் பெற்ற மொழி தமிழ் மொழி தான் (20.10.1578). அந்த நூலுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கியிருந்தவர் ஜோன் கொன்கல்வஸ் (John Goncalvez). 

1578 இல் அது தென்னிந்தியாவில் கொல்லத்தில் அந்த நூல் வெளியான போது அன்றைய உலகின் மிகப்பெரிய செல்வந்த நாடுகள் பலவற்றில் கூட தத்தமது மொழியில் அச்சில் நூல்கள் வெளிவராத காலம். இதன் மூலம் இந்திய - இலங்கை மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சிடப்பட்ட மொழியாக தமிழ்மொழி அமைந்தது.


ஆனால் 1554இலேயே தமிழ் நூல் வெளிவந்தது விட்டது என்கிற பதிவையும் பல இடங்களில் காண முடியும். “கார்த்தீயா ஏ லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues - தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த திருமறைச் சிற்றேடு") என்கிற தலைப்பில் வெளியான அந்த நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. அதாவது இன்றைய அர்த்தத்தில் Transliteration வடிவத்தில் அது வெளியாகியிருந்தது. நேரடி தமிழ் எழுத்துக்களில் வெளியாகாதாதால் அதனை முதல் நூல் என்று கணக்கிற்கொள்வதில்லை. எழுத்து உருவாக்கப்பட்டு (movable type) அச்சாக்கம் பெற்ற முதன்மை மொழிகளில் தமிழும் அடங்கும்.


அச்சு இயந்திரம் வந்து சேர்ந்தது
இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலனித்துவ நாடுகள் மாறி மாறி தலா ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்துவிட்டுப் போனார்கள். போர்த்துக்கேயரை விரட்டிவிட்டு ஒல்லாந்தர் கரையோரங்களைக் கைப்பற்றி ஆளத் தொடங்கியபோது இலங்கையை ஆள்வதற்கு சுதேசிய மொழியின் அவசியத்தை அதிகம் உணர்ந்துகொண்டார்கள். புதிய விதிகளையும், சட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல படாதுபாடுபட்டனர். குறிப்பாக அவர்களின் வரி தொடர்பான அறிவித்தல்களை உள்ளூர் சிங்களவர்களின் உதவியுடன் விளம்பர அட்டைகளை சிங்களத்திளும், தமிழ் பிரதேசங்களில் தமிழிலும் எழுதி மக்கள் கூடும் இடங்களில் ஒட்டினார்கள். ஒட்டிய அறிவித்தல்களை பொதுமக்கள் கூடிய இடத்தில்; வாசிக்கத் தெரிந்த ஒருவர் உரத்து வாசிக்க மற்றவர்கள் அதனை அறிந்து செல்வார்கள். இப்படித்தான் ஒரு நூற்றாண்டு கழிந்தது.

ஆனால் இப்படி ஒரேவகையான ஏராளமான அறிவித்தல்களை எழுதி எழுதி நாளடைவில் இதற்கு ஒரு சிறந்த தீர்வை காண்டடைய எண்ணினார்கள். அப்போதுகேரளாவில் - கொல்லத்தில் ஏற்கெனவே அச்சு இயந்திரம் கொண்டுவரப்பட்டு அச்சாக்கம் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. “நெதர்லாந்தில் என்றால் இதெற்கெல்லாம் அச்சு இயந்திரம் இருக்கிறது.” என்பதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்கள். ஆளுநரும் இலங்கைக்கு அச்சு இயந்திரத்தை கொண்டுவரப் பணித்தார்.


தமிழ் சிங்கள எழுத்து வார்ப்பு
விதிகளையும், வரி விபரங்களையும் அச்சடிப்பதற்கு அடுத்ததாக அவர்களுக்கு இன்னொரு பெரிய தேவையும் இருந்தது. அது தான் தமது மதப் பிரச்சாரம். சமய நூல்களையும், துண்டுப் பிரசுரங்களையும் வெளியிடும் தேவை அதிகமாக இருந்தது. அவர்கள் நடத்திய பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு தேவையான சிறு வெளியீடுகளை அச்சடிக்கும் தேவையும் இருந்தது.

அன்றைய டச்சு காலனித்துவ சக்திகள் போர்த்துகேயர் அளவுக்கு மத நிர்ப்பந்தங்களை செய்யாத போதும் அவர்கள் தமது புரட்டஸ்தாந்து மதத்தை பரப்புவதில் கவனம் செலுத்தவே செய்தார்கள். போர்த்துக்கேயர் துரத்துப்பட்டுவிட்டாலும் கூட போர்த்துக்கேயர் பரப்பிய மதத்துக்கு மாற்றீடாக புரட்டஸ்தாந்து மதத்தை பரப்புவதும், புதியவர்களை மத மாற்றம் பண்ணுவதும் அவர்களது வேலைத்திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அந்த சவாலை சரிகட்டும் ஆயுதமாக ஒரு அச்சு இயந்திரத்தை இலக்கு வைத்ததில் ஆச்சரியமில்லை.

சிமோன் கட் (Simon Kat), யோஅன்ன ருவல் (Joannes Ruel), வில்ஹெம் கொனின் (Wilhelm Konyn) போன்ற டச்சு சீர்திருத்த சபையின் (Duch Reformed Church) மதகுருமார் ஆரம்பத்தில் புனித பைபிளின் பகுதிகளை சிங்கள மொழியில் வெளிக்கொணர பிரதான பாத்திரம் வகித்தவர்கள். இவர்களில் வில்ஹெம் கொனின் பெரும்பங்கை ஆற்றியிருந்தார். அவர் 1739 இல் சுவிசேஷ நூல்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து அவற்றை ஓலைச்சுவடிகளில் பதிவுசெய்தார்.

கிழக்கிந்திய கம்பனியின் ஆயுதப் பொறுப்பாளராக இருந்த கேபிரியேல் ஷாட் (Gabriel Schade) என்பவரிடம் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணியை ஆளுநர் ஒப்படைத்தார். அவர் தான் நுணுக்கமான உலோக வேலைகள் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்தார் ஷாட்..

இந்தப் பணி இலகுவாக இருக்கவில்லை. இந்த பணி 1720 இலிருந்து இழுபறிபட்டுகொண்டே சென்றது. 

1726-1729 காலப்பகுதியில் புதிய ஆளுனராக Petrus Vuyst என்பவர் பதவியேற்கிறார். வந்ததுமே இலங்கைக்கு அப்படியொரு அச்சுப்பணிகள் தேவையில்லை என்று கூறி ஷாட்டை சிறையில் அடைத்துவிடுகிறார். அந்தப் பணிகள் நின்று விடுகின்றன. ஆளுநரும் இறந்து போனார். 1734இல் கொழும்பில் அச்சகம் உருவானது. கிழக்கிந்திய கொம்பனியும், டச்சு சீர்த்திருத்த சபையும் (Dutch Reformed Church) இணைந்து இந்த அச்சகத்தை நிறுவினார்கள்.

1736-1740 வரையான காலப்பகுதியில்  குஸ்தாப் வில்லம் (Gustaaf Willem Baron van Imhoff) என்பவர் ஆளுநராக வருகிறார். இந்தப் பணிகளை அவர் முன்னெடுக்கிறார். ஷாட்டுக்கும் வயதாகி விட்டது. சிறையில் இருந்து மிகவும் நலிந்து போயிருந்தார். ஆனாலும் விட்ட இடத்தில் இருந்து அந்தப் பணிகளை மீண்டும் தொடங்கினார். 

பழைய ஓலைச் சுவடிகளில் இருந்து இந்த எழுத்துக்களை குறிப்பாக அடையாளம் கண்டு அதனை பல்வேறு ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துக்களுடன் ஒப்பிட்டு இந்தப் பணிகளை செய்வது லேசான காரியமில்லை. ஏற்கெனவே “சிங்கள இலக்கண எழுத்து நுட்பம்” (Grammatica, of Singaleesche Taal-Kunst) என்கிற ஒரு நூல் டச்சு மொழியில் Johannes Ruell என்பவரால் எழுதப்பட்டு 1699இல் 190 பக்கங்களில் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அதில் சிங்கள எழுத்துக்களின் வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விபரமான ஆராயப்பட்டிருக்கிறது. எழுத்துக்களுக்கு சரியான வடிவம் கொடுப்பதற்கு இந்த நூல் நிச்சயம் பெரும்பங்காற்றி இருக்கவேண்டும்.  

Johannes Ruell இன் நூலில் பயன்படுத்தப்பட்டிருந்த சிங்கள எழுத்துக்களும், ஏற்கெனவே பால்டேஸ் 1672இல் வெளியிட்ட “The Coromandel Coast and Ceylon'' என்கிற நூலில் வெளியிட்டிருந்த தமிழ் எழுத்துக்களும் மரப்பலகையில் வெட்டப்பட்டு செதுக்கப்பட்டு அச்சு செய்யப்பட்டிருந்தது.

இறுதியில் சிங்களத்திலும், தமிழிலும் பலகைகளில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் அச்சுக்குத் தயாரானது.  அவற்றைக் கொண்டு அச்சு வேலையும் தொடங்கப்பட்டது. அதுவரை பனையோலையில் சுருங்கியிருந்த எழுத்துக்கள் கடதாசிக்கு வந்தது. அதுபோல அதுவரை குறிப்பிட்ட, வர்க்கத்துக்கும், குறிப்பிட்ட சாதிகளுக்கும் குறிப்பிட்ட குழாமினருக்கும் மட்டுபடுத்தப்பட்டிருந்த எழுத்து, வாசிப்பு, என்பவையெல்லாம் பாமர மக்களுக்கும் மெதுமெதுவாக போய் சேரத் தொடங்கின.

இந்த அச்சு இயந்திரம் தான் பல வருடங்களாக தமிழிலும், சிங்களத்திலும், டச்சு, ஆங்கில மொழிகளிலும் பல ஆண்டுகளாக வெளியீடுகளைத் தந்துகொண்டு இருந்திருக்கிறது.

 ஷாட்டுடன் இந்தப் பணிகளில் அருகில் இருந்து ஒத்துழைத்தவர்கள் J. W. Konyn மற்றும் J. P. Wetselius என்கிற பாதிரியாரும் தான். இவர்கள் இருவரும் இணைந்து எழுத்துக் கோர்ப்பதையும், அச்சு செய்வதையும் எனயோருக்குப் பயிற்சியளித்தார்கள். இறுதியில் முதற் தடவையாக 05.04.1737 அன்று சிங்களத்தில் முதலாவது தடவையாக அச்சில் அறிவித்தல் அட்டைகள் (Plakkat) வெற்றிகரமாக அச்சு செய்யப்பட்டன. மாத்தறை பிரதேசத்தில் மிளகுச் செய்கை தொடர்பான ஆணை அது.  ஆனால் அவர்களின் இலக்கு மதப்பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான நூல். தமிழில் முதலாவது அறிவித்தல் பலகை 1741இல் வெளியிடப்பட்டதாக ராஜ்பால் குமார் டீ சில்வா தனது ஆய்வில் கூறுகிறார் (Illustrations and Views of Dutch Ceylon 1602-1796) 

முதன் முதலாக சிங்கள, தமிழ் எழுத்துக்களுக்கு இன்றைய வடிவத்துக்கு உயிர்கொடுத்த ஷாட் அந்த நூலைப் பார்க்கு முன்னமே 1737 நடுப்பகுதியில் இருந்துபோனார். பல ஆண்டுகளாக அந்த வார்ப்புக்காக பாடுபட்ட கேப்ரியேல் ஷாட் தனது; உழைப்பின் பெறுபேறு வெளிவர ஒரு சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்


சிங்களத்தில் முதல் நூல்
அவர்களின் இலக்கின்படியே “The Singaleesch Gebeede-Boek” (சிங்கள பிரார்த்தனை புத்தகம்) என்கிற நூல் 06 செப்டம்பர் 1737 இல் வெளியிடப்பட்டது. 19.5 × 13 சென்டிமீட்டர் அளவில் 43 பக்கங்களில் அது வெளியானது. சிகப்புத் துணியால் மூடப்பட்ட அட்டையின் மத்தியில் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின்  VOC லட்சினை (Vereenigde Oost Indische Compagnie, V.O.C.) பொறிக்கபட்டிருக்கிறது. மேன்மைமிகு கொம்பனியின் சார்பில் அச்சு செய்யப்பட்ட வருடம் 1737 என்று அதில் தொடங்குகிறது. அது தான் சிங்களத்தில் அச்சான முதலாவது நூலாக வரலாற்றில் இடம்பெறுகிறது. அது வெளிவந்தது 280ஆண்டுகளைக் கடந்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலரால் அச்சுப் பணிகள் தொடங்கப்பட்டது இதற்குப் பின் நூறாண்டுகள் கழிந்து தான் என்பதையும் இங்கு பதிவு செய்தல் அவசியம்.

காலை, மாலை செய்ய வேண்டிய பிரார்த்தனைகள், ஆகாரத்துக்கு முன்னரும் பின்னரும் செய்ய வேண்டியவை, மற்றும் பத்துக் கட்டளைகள் என்பவற்றின் சுருக்கம் இதில் அடங்கியுள்ளது.


தமிழில் முதல் நூல்
“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) என்கிற நூல் கூட அதற்குப் பின்னர் தான் 1739 இல் கொழும்பில் வெளியாகியிருக்கிறது. 1847இல் நெதர்லாந்தில் வெளியிடப்பட்ட நூல்களின் பட்டியல் தொகுப்பான “Catalogus Van De Bibliotheek Der Maatschappij Van Nederlandsche Letterkunde, Te Leiden, Volume -2” என்கிற டச்சு நூலில் இருந்து ஆரம்பத் தகவல்களை திரட்ட முடிந்தது பின்னர் அந்த நூலையும் இந்தக் கட்டுரைக்காக தேடிக் கண்டு பிடிக்க முடிந்தது. இலங்கையில் அச்சு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதான் பின் ஆரம்பத்தில் வெளியான சிங்கள, தமிழ் நூல்களின் பட்டியலை மேற்படி நூலில் உறுதியாக காணமுடிக்கிறது. மேலும் புதிய ஏற்பாடு (Rev. Philip De Melho) பிலிப் டீ மெல்ஹோ என்கிற பாதிரியாரின் மொழிபெயர்ப்பில் 1748இலும் 1759இலும் வெளிவந்ததாக அதில் தகவல்கள் காணப்படுகின்றன. 

“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” நூலின் தொடக்கப் பக்கத்தில்;  
“கிறிஸ்தவர்களுடய உண்மையான வேதப்படிப்பினையின் அத்திபாரமான முகனையைக் கொண்டு சுருக்கமாகப் பிரித்த கேள்விகளும் உத்தாங்களும் அத்துடனெ பிரதானமான அஞ்சுவணக்கமும் கிறிஸ்தவர்களுடய விசுவாசத்தின் பன்னிரண்டு பிரிவுகளும் சருவெசுபானருளிச் செய்த பத்துக் கற்பினைகளும் இந்தப் பொஸத்தகத்திலெ அடங்கியிருக்குது
பிரகாசம் பொருந்திய உத்தம கொம்பஞ்ஞியவாலெ அச்சிலெ பதிக்கபட்டது:”
“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” நூலில் “சிங்கள பிரார்த்தனை நூலில்” உள்ளது போலவே
“உதய காலம் ஓதும் வணக்கம்”,
“இராத்திரி காலம் ஓதும் வணக்கம்”
“ஆசனம் பண்ணுமுன் ஓதும் வணக்கம்”
“ஆசனம் பண்ணின பிறகு ஓதும் வணக்கம்”
“பத்துக் கற்பினை” (பத்துக் கட்டளைகள் – Ten Commandments)
போன்ற தலைப்புகளில் அத்தியாங்களைக் காண முடிகிறது.

“எங்கள் கிறிஸ்தவர்களுடைய சந்தேகமற்ற விசுவாசத்தின் பன்னிரண்டு பிரிவுகள்” என்கிற தலைப்பில் வரும் அத்தியாயத் தில் “வானத்தையும் பூமியையும் படைத்த சருவத்துக்கும் வல்ல பிதாவாகிய தம்பிரானையும்...” என்று போகிறது. கொல்லத்தில் 1578 இல் வெளியான முதல் தமிழ் நூலின் தலைப்பும் தம்பிரான் வணக்கம். “தம்பிரான்” என்பது “கடவுள்” என்பது அர்த்தம். அதுவே பிற்காலத்தில் நாவலரின் வேதாகம மொழிபெயர்ப்பில் “ஆண்டவர்” என்று குறிக்கப்படுவதையும் கவனிக்க.

“தம்பிரான் வணக்கம்” வெளிவந்து 161 வருடங்களின் பின்னர் தான் இலங்கையில் முதல் தமிழ் நூல் வெளியாகிறது. ஆனால் தம்பிரான் வணக்கத்தில் எங்கும் முற்றுப்புள்ளி, காற்புள்ளி போன்ற புள்ளிகள் எப்படி எங்கும் இடப்படவில்லையோ அதுபோலவே இந்த “தமிழ் சமய பிரார்த்தனை புத்தகம்” நூலிலும் எங்கும் அப்படி இடப்படவில்லை. 

தமிழில் ஏற்கனவே “தம்பிரான் வணக்கம்” நூல் வந்திருந்ததால் தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் அவர்களுக்கு சிரமம் இருக்கவில்லை. “தமிழ் பிரார்த்தனை புத்தகத்துடன்” ஒப்பிடும்போது அதில் உள்ள வடிவ ஒற்றுமைகளைக் காண முடிகிறது.

தமிழில் தவறவிடப்பட்ட வரலாற்று செய்தி
“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” பற்றிய செய்திகள் பிற்காலங்களில் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

தமிழில் அச்சான நூல்களின் பட்டியலை ஆராய்பவர்களுக்கு மிகவும் துணையாய் இருப்பவை
  1. 1. Classified Catalogue Of Tamil Printed Books, with Introductory notices. Compiled By John Murdoch.  Christian Vernacular Education Society, MADRAS 1865
  2. Catalogue of the Tamil Books in the Library of the British Museum edited by L. D. Barnett, George Uglow Pope – London - 1909
இந்த இரு நூல்களும் கூட இந்த விபரத்தைத் தவற விட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

டச்சு மொழியில் வெளிவந்ததாலேயோ என்னவோ இந்த தகவல்கள் இலங்கை மொழிகளில் சரியாக பதிவு செய்யப்படவில்லை போல் தெரிகிறது. குறிப்பாக தமிழ் ஆய்வாளர்களின் (அல்லது தமிழ் மொழி, அரசியல், வரலாறு குறித்த ஆய்வாளர்களின்) கவனத்தைப் பெறவில்லை. முதல் அச்சகத்தை நிறுவியவர்கள் என்கிற வகையில் இந்த விடயத்தில் டச்சுக்காரர்களின் இந்தக் காலத்து ஆவணங்கள் நமது கவனத்தைப் பெற்றிருக்கவேண்டும். நெதர்லாந்தில் 1847இல் வெளியான நூல் பட்டியலில் 430, 431,432 ஆகிய பக்கங்களில்; ஆரம்பத்தில் வெளியான தமிழ், சிங்கள நூல்களின் பட்டியலை தொகுத்திருப்பதை காண முடிகிறது.


இந்த நூல் 1739இல் வெளிவந்தபோதும் சிங்களத்தில் வெளிவந்த அதே காலத்தில் இதையும் திட்டமிருந்திருக்கிறார்கள் என்று ஆளுனர் குஸ்தாப் 1737இல் எழுதிய குறிப்புகளில் காண முடிகிறது.

“...எனது ஆட்சிக் காலத்தில் மிகப் பிரயோசமிக்க அந்த கருவி இயக்கப்பட்டது. “சிங்கள பிரார்த்தனை நூல்” வெளியிடப்பட்டுவிட்டது. மலபார் மொழியிலும் (தமிழில்) வேத புத்தகத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்கிறார்.

ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த அதுவும் டச்சு மொழி நூல் என்பதாலேயோ என்னவோ இந்தத் தகவல் எவரது பார்வைக்கும் அகப்படவில்லை. அது மட்டுமன்றி அப்போதெல்லாம் தமிழ் பிரதேசங்களை மலபார் என்றும், தமிழர்களை மலபாரிகள் என்றும், தமிழ் மொழியை மலபார் மொழி என்றும் பல ஆவணங்களிலும் நூல்களிலும் பதிவாகியுள்ளன.

இந்த நூல் கூட “மலபாரிகளின் பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) என்று தான் தலைப்பிடப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். தேடல்களில் இருந்து தவறியமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அடுத்தது தமிழ் மொழியை சில இடங்களில் “Tamil”, “Tamul” என்றும் தான் குறிப்பிடுகின்றன. எனவே குறிப்பாக நாம் இரு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆவணங்களைத் தேடுகின்ற போது இந்த புரிதலோடு தேடுவது ஆய்வுகளுக்கு உதவும். வெளியிடப்பட்ட இடம் கூட “Kolombo” என்று தான் காணப்படுகிறது.

டக்ளஸ் கிராவ்போர்ட் (Douglas Crawford McMurtrie) என்பவர் 1931 ஆம் ஆண்டு உலக நாடுகளில் முதலாவது அச்சு வெளிவந்தவை பற்றிய பட்டியலைக் கொண்ட சிறு சிறு நூல்களை வெளியிட்டார். அந்த வரிசையில் அவர் இலங்கைப் பற்றியும் 10 பக்கங்களில் தனி நூலை வெளியிட்டார் (Memorandum on the First Printing in Ceylon: With a Bibliography of Ceylonese Imprints of 1737-1760).  அதில் நூல்களில் பட்டியல் 4 பக்கங்களில் மாத்திரம் உள்ளது. அந்தப் பட்டியலில் 1739 இல் வெளிவந்ததாக மேற்படி “தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” என்கிற நூலையும் பட்டியல்படுத்தியிருக்கிறார். ஆனால் அவர்  “Catechism and Prayers” என்று தலைப்பை ஆங்கிலப்படுத்தியிருக்கிறார். வந்திருந்த மொழியிலேயே  Mallebaars Catechismus- en Gebede-Boek என்று அவர் பதிவிட்டிருந்தால் கூட மேலதிகமாக தேடுவோருக்கு அந்த நூல் எட்டியிருக்கக் கூடும்.

இலங்கையில் அச்சான முதலாவது தமிழ் நூல் எது என்பது பற்றி இப்போது திரட்டியிருக்கும் தகவலைத் தவிர வேறு ஏதும் வெளிவந்ததாத எதுவித தகவல்களும் இல்லை. 1841 இல் வெளியான “உதயதாரகை” பத்திரிகையே இலங்கையில் முதலாவது பத்திரிகை என்று அறிந்துவைத்திருக்கிறோம். ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழில் நூல் அச்சாகி வெளியாகியிருக்கிறது.

1909இல் பிரிட்டிஷ் நூலகம் நூலாக தொகுத்த அதுவரை வெளியான தமிழ் நூல்களின் பட்டியலின்படியும் இந்த காலத்துக்கு முன்னர் தமிழ் நூல்கள் அச்சானதாக ஆதாரங்களைக் காண முடியவில்லை.

மேலும் சிங்களத்தில் முதன் முதலில் வெளியிட்ட அதே பிரார்த்தனை நூலையே தமிழுலும் வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கலாம். இந்த சிங்களத்தில் எப்படி எழுத்துக்களை வார்த்திருக்கிறார்களோ, அதே போலவே தமிழிலும் செய்யப்பட்டிருப்பதை இரு நூல்களையும் ஆராய்கிறபோது உறுதிசெய்துகொள்ள முடிகிறது. சிங்கள நூல் 40 பக்கங்களிலும் தமிழில் 96 பக்கங்களிலும் காண முடிகிறது.

இந்த இரு மொழி நூல்களிலும்; வெளியிடப்பட்ட ஆண்டின் இலக்கத்தை தமிழிலும், சிங்களத்திலும் எழுத்துக்களாக இட்டிருக்கிறார்கள். தமிழில் இலக்கங்களை குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தை நாம் அறிந்திருக்கிறோம். சிங்களத்திலும் அதுபோலவே இலக்கங்களைக் குறிக்க சிங்கள எழுத்துக்கள் உண்டு. அதனை இங்கே காண முடியும்


 “சத்தியத்தின் வெற்றி” (Triumph der Waarheid) என்கிற நூலும் தமிழில் 1753இல் கொழும்பில் வெளியாகியிருக்கிறது. 

அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழிலும் சிங்களத்திலும் பல கிறிஸ்தவ சமய நூல்கள் வெளிக்கொணர்ந்திருப்பதை நெதர்லாந்தில் வெளியான நூல் பட்டியல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த நூல்களில் பலவற்றை பெயர்களாக மட்டுமே அறிந்திருக்கிறோம். சில நூல்கள் மட்டுமே இலங்கையின் சுவடிகூடத்தினைக்களத்தில் பார்வையிட முடிகிறது. ஏனையவற்றில் சில நெதர்லாந்திலுள்ள டச்சு நூலகத்தில் இன்றும் காணப்படுகின்றன.

இலங்கையில் வெளியான முதலாவது சுதேசிய மொழிப் பத்திரிகை தமிழ் பத்திரிகையான “உதயதாரகை”. 1841 இல் உதயதாரகை வெளியானது. அது போல இலங்கையில் வெளியான முதல் சிங்களப் பத்திரிகை 1860இல் வெளியான “லங்காலோக” என்கிற பத்திரிகையே. 

ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையின் ஆட்சியதிகாரம் ஆங்கிலேயர்களின் வசம் கைமாறியபின் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இந்த அச்சு இயந்திரமும் அச்சகமும் ஆங்கிலேயர்களின் பயன்பாட்டுக்கு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 15.03.1802 இல் முதன் முதலில் வர்த்தமானிப் பத்திரிகையை (No. 1 of The Ceylon Government Gazette) இந்த அச்சகத்தில் இருந்து தான் வெளியிட்டார்கள். 

முதன்முதலில் இலங்கை மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற கதை அது தான். அந்த வடிவத்தைப் பின்பற்றியே இன்றைய நவீன அச்சுவேலைகளுக்கான கணினி எழுத்து வடிவங்கள் வரை உருவாக்கப்பட்டு ஒப்பேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் அச்சுக் கலைத் தோற்றம் பெற்ற அதே காலப்பகுதியில் சுதேச மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட்டு வளர்ச்சியுற்று வந்த வரலாறு மேலும் விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்று. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு. மறக்கக் கூடாத நிகழ்வு. நாம் தவறவிட்ட வரலாற்றுப் பதிவு.


நன்றி - தினக்குரல்

Share this post :

+ comments + 2 comments

அரிய பல தகவல்களை தந்திருக்கிறீர்கள், கொழும்பில் ஆரம்பிக்கப்ட்ட அந்த அச்சகம் இன்னமும் இயங்குகிறதா?
ஏன் தமிழ் மொழியை மலபார் மொழி என அழைக்கிறார்கள்? அதனை பற்றி கூறமுடியுமா?

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates