Headlines News :
முகப்பு » , , » தனிவீட்டுத்திட்டங்களும் மேலதிக வருமானமும் - அருள்கார்க்கி

தனிவீட்டுத்திட்டங்களும் மேலதிக வருமானமும் - அருள்கார்க்கி


மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தனிவீட்டுத்திட்டங்கள் மலையகமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே.

07 பேர்ச்சஸ் காணி என மட்டுப்படுத்தப்பட்ட நிலவுரிமையுடன் பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. சுமார் 198 வருட லயன் வாழ்க்கை முறைக்கு விடுதலை அளித்து கௌரவமான வாழ்க்கை முறைக்கு எம்மக்கள் முன்னேறும் காலமிது.

பெருந்தோட்ட பொருளாதாரத்தின் அடிப்படையாக தேயிலையை மட்டுமே நம்பியிருந்தது போக எம்மவர்களின் பொருளாதாரத்தை லயன்களைச் சுற்றியிருந்த நிலங்களே தீர்மானித்தன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுயதொழில்கள் என எம்மவர்களின் பொருளாதாரம் சற்று ஸ்திரமானது. குறிப்பாக விவசாயம் மூலம் மேலதிக நேரத்தை பயனுடைய வகையில் எம்மக்கள் இன்றும் மாற்றியமைத்து நன்மையடைகின்றனர்.

பெருந்தோட்டத்தில் வேலை நாட்கள் குறையும் சந்தர்ப்பங்கள், போதிய சம்பளம் கிடைக்காத நிலைமைகளில் இவ்வாறான மேலதிக வருமானங்கள் குடும்பங்களின் வாழ்க்கைச் சுமையை சமாளிக்க இன்றியமையாதவையாகும். தோட்டங்களில் வேலை செய்யாதோரும், ஓய்வு பெற்றவர்களும் முழு நேரமாக மரக்கறி, கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களின் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.

அதாவது காடாகிக் கிடந்த நிலங்களை பணத்தை முதலீடு செய்து விளைநிலங்களாக ஆக்கி வருமானம் தேடுகின்றனர். குறிப்பாக வடிகால் வசதிகள், பாத்தி அமைப்பு போன்றவற்றுக்கு அதிகமான பணம் முதலீடுச் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல் கால்நடை வளர்ப்புக்கு தொழுவங்கள் அமைத்தல், பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான தேவைகளுக்கும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் பால் உற்பத்தி, (மிருகக்கழிவுகள்) சேதனப்பசளை உற்பத்தி போன்ற செயற்பாடுகள் மூலம் சாதகமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இவையனைத்தும் லயன் குடியிருப்புகளை அண்டியே அமைந்திருந்தமையால் சாதகமாக இருக்கின்றது. மறுபுறம் தனிவீட்டுத்திட்டங்கள் மூலம் நிலப்பரப்பு மட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான தொழில்களை செய்வது சாத்தியமற்றதாக மாறலாம். குறிப்பாக தனிவீட்டுத்திட்டங்களுக்கான காணிகளை ஒதுக்கும் போது பெருந்தோட்டக் கம்பனிகள் தேயிலை விளைச்சல் குறைவாக அல்லது தரிசாக காணப்படும் நிலங்களே வழங்கப்படுகின்றன. இவ்வாறான பிரதேசங்களில் குடியிருப்பு தொகுதிகளை அமைக்கும் போது வீதி, குடிநீர், பாதுகாப்பு போன்ற விடயங்களுக்காக அதிகமாகச் செலவு செய்ய வேண்டியேற்படுகின்றது.

தனிவீட்டுத்திட்டங்களை காரணம் காட்டி பெரும்பாலான தோட்டக்கம்பனிகள் மக்களை தோட்டங்களினுள், மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மட்டும் கட்டுப்படுத்தி வைக்க முற்படுகின்றன.

லயன்களையும் அது சார்ந்த நிலங்களையும் விட்டு வெளியேறும் தொழிலாளர்களின் விவசாய நிலங்களையும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் விபரீதமும் ஏற்பட வாய்ப்புண்டு.

சில பெருந்தோட்டக்கம்பனிகள் மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களில் காணப்படும் லயன்கள் மற்றும் விவசாய நிலங்களில் நெடுங்கால மரங்களை பயிரிட திட்டமிட்டு வருகின்றன. இது மண்சரிவுக்கு மாற்றீடான யோசனையாக இருப்பினும் கூட, தேயிலை மலைகளைப்போலவே விவசாய நிலங்களிலும் எம்மவர்களின் உழைப்பு உண்டு என்பதை உணர வேண்டும். எனவே எம்மவர்களின் மேலதிக வருமானத்துக்கான அடிப்படைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.

நிச்சயத்தன்மை அற்ற பொருளாதாரமாக இன்று பெருந்தோட்டத் தொழில் துறை பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. பெரும்பாலான தோட்டங்கள் மூடப்பட்டும், திட்டமிட்டு காடாக்கப்பட்டும் வருகின்றன. தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மாற்றுப்பொருளாதார வாய்ப்புகள் மிகவும் அவசியமாகும். அதேபோல் நாட்டின் உணவு உற்பத்தி, பசும்பால் சார்ந்த உற்பத்திகளுக்கும் மலையக மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதால் அவர்களின் முயற்சிகள் அரசினால் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அதே போல் சுயதொழில்கள் மூலமும் எம்மவர்கள் வருமானம் ஈட்டுகின்றனர்.

அதற்கு நிலமும், நீர் போன்ற அடிப்படைத் தேவைகளும் இன்றியமையாததாகும். மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் (தனிவீடு) இவ்வாறான சுயதொழில்களை செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால் அங்கு அவர்களுக்கு சுயதொழில் மானியமும், உதவுத்தொகைகளும் இழப்பீடுகள், காப்புறுதி என்பனவும் வழங்கப்படுகின்றன. ஆனால் எம் இளைஞர் யுவதிகளுக்கு அவ்வாறான எந்த சலுகைகளும் இதுவரை வழங்கப்பட்டதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டன. சுயதொழில்களில் ஈடுபட்டவர்களுக்கான எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நடைமுறைகள் மூலம் எம் பொருளாதாரம் ஸ்திரமற்று காணப்படுவது குறித்து எம் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். பெருந்தோட்ட கம்பனிகள் எம்மை வந்தேறு குடிகளாகவே இன்னும் வைத்திருக்க முனைவது இதன் மூலம் புலப்படும். வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய பெருந்தோட்ட நிலங்களை மீட்பதும் கடினமானது. எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

தனிவீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு பிரத்தியேகமான நிலம் வழங்கப்பட வேண்டும். லயன்களை இடித்து தள்ளுவதற்கு புறம்பாக கால்நடை வளர்ப்புக்கு அவற்றை உபயோகப்படுத்தலாம். கிராம அபிவிருத்தி எண்ணக்கரு மூலம் சுயதொழில் புரியும் இளைஞர் யுவதிகளுக்கு தனியான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.

மலையகம் என்பது வெறுமனே மக்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அது எம் நிலத்துடனான உரிமையையும் இருப்பையும் வெளிக்காட்டுகின்றது. எம் தேவை வாழ்வதற்கு 07 பேர்ச்சஸ் நிலம் மட்டுமல்ல. எம் சொந்த நிலத்தில் நாம் சுதந்திரமாக சமூக பொருளாதார ரீதியாக ஸ்திரமான இருப்பை உறுதி செய்யும் உரிமையாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates