Headlines News :
முகப்பு » , , » தேயிலையின் எதிர்காலம்? மாற்றுப்பயிர்ச்செய்கையின் அவசியம் - அருள்கார்க்கி

தேயிலையின் எதிர்காலம்? மாற்றுப்பயிர்ச்செய்கையின் அவசியம் - அருள்கார்க்கி


தொழிலாளர் வேதனம் தொடர்பான கருத்தாடல்கள் சூடுபிடிக்கும் இக்காலப்பகுதியில் தேயிலையின் எதிர்காலம் குறித்தும் பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரம் குறித்தும் மாறுபட்டுச் சிந்திப்பது அவசியம். கம்பனிகள் காலங்காலமாக சொல்லும் நட்டக்கணக்கும் அசாத்தியத்தன்மையும் ஒருபுறம் இருக்க, தேயிலையின் வீழ்ச்சிப்போக்கும் உற்பத்திச் செலவினமும் கவனத்திற்கொண்டு மாற்றுப்பயிர்ச் செய்கைகள் இனங்காணப்பட வேண்டியது அவசியம். தேயிலையை அழித்து விட்டுத்தான் இதனை செய்யவேண்டுமென்பதில்லை. இன்று அநேகமான பெருந்தோட்டங்களில் தரிசு நிலங்கள் வெறுமனே பயனற்றுக்கிடக்கின்றன. அதே போல் உற்பத்திக்குத் தேவையான நீர், தொழிலாளர் என்பனவும் சாத்தியமான இயற்கையும் மலையகத்தில் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் பயன்படுத்தும் முறை ஒன்றை காலத்தின் தேவை கருதி இனங்காண வேண்டும்.

தேயிலை உற்பத்தியானது காலத்திற்குக் காலம் குறைவடைந்து செல்கின்றது. பராமரிப்பின்மை, மீள்நடுகை இன்மை, அலட்சியம், அதிகரித்தச் செலவினம், காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் உற்பத்தியானது வீழ்ச்சியடைந்துள்ளது. பெருந்தோட்டக்கம்பனிகள் தொழிலாளர்கள் பற்றாக்குறை, உற்பத்திச்செலவு,கேள்விக்குறைவு போன்றனவற்றைக் காரணம் காட்டி இத்தொழில் துறையை சவாலான ஒன்றாக காட்டுகின்றன. எனினும் இவற்றுக்கான மாற்றுத்திட்டங்களை கம்பனிகளோ, அரசாங்கமோ, தொழிற்சங்கங்களோ முன்வைப்பதில்லை. முடிந்தளவு இலாபம் கிடைத்தால் போதும் என்று கம்பனிகளும், தேயிலையின் அழிவோடு இனத்தின் செறிவையும் குறைக்கலாம் என்று அரசாங்கமும் சந்தா கிடைத்தால் போதும் என்று தொழிற்சங்கங்களும் இருக்கின்றன. எனினும் இலாபகரமான முறையில் தேயிலைத் தொழிற்துறையை மாற்றியமைக்கக் கூடிய திட்டங்களை பலர் முன்வைக்கின்றனர். தொழிலாளர்களும் இதன்மூலம் பலனடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான ஒரு முன்மொழிவே மாற்றுப்பயிர்ச் செய்கையாகும். குறிப்பாக, சாத்தியப்பாடான மாற்றுப்பயிர்கள் தொடர்பான பரீட்சார்த்த நடவடிக்கைகள் பற்றி ஆராய வேண்டும். மலையகத்தின் மாறுபட்ட காலநிலை, மண் மற்றும் இயற்கை வளங்களை அடிப்படையாக வைத்து இவை முன்னெடுக்கப்படல் அவசியம்.

எனவே, பயிரிடப்படும் மாற்றுப்பயிருக்கு தகுந்த பிரதேசம் இனங்காணப்பட வேண்டும். விஷேடமாக மாற்றுப்பயிர்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வியாபார பெறுமதியும், உள்நாட்டு,வெளிநாட்டு சந்தை வாய்ப்பும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அரசு தலையிடுவதன் மூலம் உற்பத்திகளின் அறுவடையை பன்னாட்டு சந்தைகளுக்கும் விஸ்தரிக்க முடியும். இன்றளவில் மிளகு, கறுவா, மரமுந்திரிகை, அன்னாசி, கற்றாளை, பப்பாசி, தோடம்பழம், மெகடாமியா, செம்பனை போன்றன சில பிரதேசங்களில் சிறியளவில் பயிரிடப்படுகின்றன. இவற்றில் செம்பனை (palm tree) உற்பத்தி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. போதுமான ஆளணி, முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை போன்ற காரணங்களினால் இவை பெரியளவில் முன்னேற்றம் அடையவில்லை. இவற்றை அபிவிருத்திச் செய்ய வேண்டியதும் கட்டாயமாகும்.

கோப்பி, கொக்கோ, கரும்பு,வாழை, வெனிலா, டிராகன் பழம் ((dragan fruit)

 கொய்யா, ஸ்ரோபரி, போன்றனவும் ஏற்றுமதி நோக்கத்தோடு சில பெருந்தோட்ட கம்பனிகளும் சிறுதோட்ட உரிமையாளர்களும் உற்பத்திச் செய்கின்றனர். தேயிலையின் ஊடுபயிராக மிளகு மற்றும் பிரத்தியேகமான நிலப்பரப்பில் மேற்குறிப்பிட்ட பழப்பயிர்ச்செய்கைகளும் பயிரிடப்படுகின்றன. சில பெருந்தோட்டக் கம்பனிகளால் டிராகன் பழப் பயிர்ச்செய்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையிலும் இப்பழங்களுக்கு அதிக கேள்வி நிலவுவதாக அறியமுடிகின்றது. இதன் அலகொன்றுக்கான உற்பத்திச் செலவு ரூ. 2000.00 (ஆகக்கூடியது) ஆகவும் மரமொன்றின் ஆயுட்காலம் சுமார் 25 வருடங்களாகவும் இருக்குமென்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பராமரிப்பைப் பொறுத்து டிராகன் பழ அறுவடையை அதிகரித்துக்கொள்ள முடியும். உள்நாட்டு சந்தையிலும் பல்பொருள் அங்காடிகளிலும் இப்பழத்துக்கு அதிக கேள்வி நிலவுகின்றது. இவ்வாறான முயற்சிகளில் முதலிடுவதற்கு பெருந்தோட்டக்கம்பனிகள் முன்வர வேண்டும்.

மாற்றுப்பயிர்ச் செய்கைகளுக்கான அரச தனியார் முதலீடுகள் அவசியமானதாகும். காலங்காலமாக தேயிலை விலைவீழ்ச்சி என மக்களை ஏமாற்றும் கம்பனிகள் கைவிட்ட நிலங்களில் எந்த முயற்சிகளும் முன்னெடுக்காததும் அரசுக்கு சாத்தியமான மாற்றுப்பயிர் யோசனைகளை முன்வைக்காமையும் வருந்தத்தக்கன.

இவ்வாறான முறைகள் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வர். அதே போல் பெருந்தோட்டங்களில் உள்ள ஆளணியையும் பயனுள்ள வகையில் மாற்றியமைக்கலாம்.

மலையக இளைஞர், யுவதிகள் தோட்டங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு தினக்கூலிகளாக செல்லும் நிலைமை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. கைவிடப்படும் பெருந்தோட்டக் காணிகளை இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளித்து மாற்றுப்பயிர்ச் செய்கைகளுக்கான ஆலோசனைகளையும் முதலீடுகளையும் வழங்குவதன் மூலம் அவர்களை நிலவுடைமையாளர்களாகவும் சுயதொழில் முயற்சியாளர்களாகவும் உருவாக்கலாம். தொழிற்சங்கங்கள் செய்யக்கூடிய நன்மைகளில் இது பிரதானமானது.

மொனராகலை மாவட்டத்தில் இறப்பர் பயிர்ச்செய்கைக்கு மாற்றீடாக கரும்பு, பப்பாசி, வாழை என்பன பயிரிடப்படுகின்றமை வழக்கம். அதே போல் தனியார் நிறுவனங்கள் பல மொனராகலைப் பிரதேசத்தில் நிலங்களை குத்தகைக்கும், உபகுத்தகைக்கும் பெற்று இப்பயிர்களை பயிரிடுகின்றன. இதன்மூலம் சொற்ப தொகையினருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கின்றது. எனினும் நிலங்களை முன்னிறுத்திச் சிந்திக்கும் போது நிலங்கள் தனியார் மயமாகும் அபாயம் இருக்கின்றது. பெருந்தோட்டப்பிரதேசங்களில் ஒருசில தோட்டக்கம்பனிகள், தேயிலையின் வீழ்ச்சிப்போக்கு தொழிலாளர் பற்றாக்குறை, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றைக் காரணம் காட்டி மாற்றுப்பயிர்களாக கருப்பந்தேயிலை ((Turpentine Tree) ஊசியிலை மரம் ((Pine Tree) போன்ற நெடுங்கால மரங்களை பயிரிடுகின்றன. இவ்வாறான மரங்கள் மூலம் தொழிலாளருக்கு எவ்வித நேரடி வருமானமும் இல்லை. அறுவடைப்பருவம் வந்ததும் கம்பனிகள் அம்மரங்களை வெட்டி விற்று இலாபமடைகின்றன. இதன்மூலம் கொள்ளை இலாபம் ஈட்டப்படுகின்றது. தோட்டக்காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளித்து மாற்றுப்பயிர்களையோ அல்லது தேயிலையையோ பயிரிடலாம் என்று அவ்வப்போது கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவை நடைமுறைச் சாத்தியமாவது குறைவு. அவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களில் அவர்களின் அனுபவத்திற்கும் அறிவிற்கும் ஏற்ற வகையில் மரக்கறிகளையாவது பயிரிட்டு வருமானம் ஈட்டுகின்றனர். கம்பனிகள் நிலங்களை வைத்துக்கொண்டு அவற்றை காவல் காத்துக்கொண்டு இருப்பதில் எவ்வாறான உற்பத்திகள் முன்னெடுக்கப்பட்டாலும் இந்நிலங்களின் உரிமையாளர்களாக எம்மவர்களே இருக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates