Headlines News :
முகப்பு » , » கௌரவமான வாழ்வும் மலையக அதிகார சபையும்!

கௌரவமான வாழ்வும் மலையக அதிகார சபையும்!


பெருந்தோட்டப்பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதானது ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. அதே வேளை, பெருந்தோட்ட பிரதேச மக்களின் அபிவி ருத்திக்கு கடந்த 30 வருடங்களாக தடையாக இருந்த 1987 ஆம் ஆண்டின் 33 ஆவது இலக்க ஷரத்தும் (பிரதேச சபை சட்டமூலம்) திருத்தப்பட்டிருக் கின்றமையானது, இத்தனை காலமும் தேர்தல்களில் பங்களிப்புச் செய்து அதன் மூலம் பயன் எதையும் பெறாது இருந்த மக்களுக்குக் கிடைத்த வெற்றியா கவும் கருதலாம். இந்நாட்டில் உழைக்கும் வர்க்கமாக குடியேறி இருநூறு வருடங்களைப் பூர்த்தி செய்யவிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்டச் சமூகத்தின் ஆறாவது தலைமுறையினருக்கே இந்த வரப்பிரசாதம் கிடைத்திருக்கின்றது.

பெருந்தோட்ட மக்களின் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தவே பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக இச்சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் பங்கு கொண்டு பேசிய உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தி ருந்தார். கடந்த காலங்களில் பெருந்தோட்டப்பகுதி களின் உட்கட்டமைப்பில் எந்தவித தாக்கத்தையும் செலுத்த முடியாதவாறு பிரதேச சபை சட்டமூலம் ஒரு தடையாகவே இருந்த வந்தது. பிரதேச சபை தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்தாலும் கூட அப்பிரதிநிதிகளால் பெருந்தோட்ட பிரதேச மக்களுக்கு குடிநீர்க்குழாய் வசதி ஒன்றைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமையே இருந்தது.

அதேவேளை இதற்கு அப்பாற்பட்டு மலையக மக்களுக்கான வீடமைப்பு உட்பட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பெருந் தோட்ட மனித வள நிதியம் மட்டுமே முனைப்பு காட்டியது. ஆனால் காணிகளை பெற்றுக்கொள்ளும் அதிகாரம் இதற்கு இருக்கவில்லை. தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மலையகப் அதிகார சபையின் மூலம் மத்திய அரசாங்கத்திலிருந்து ஒதுக்கப்படும் அனைத்து வளங்களும் நேரடியாக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது, மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட மூல திருத்தம் பற்றிய விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மலையக பிரதிநிதிகள் மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள இவை வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால், இவ்விவாதத்தில் உரையாற்றிய மலையகத்தைச் சாராத பிரதிநிதிகளில் குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் இம்மக்களின் வாழ்வாதார பிரச்சினையான ஊதியம் பற்றி பேசியிருந்தமை முக்கிய விடயம்.

பெருந்தோட்ட பிரதேச வாழ்விடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளின் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டும் அவர்கள் கௌரவமான வாழ்க்கை நிலைக்கு வந்து விடப்போவதில்லை என்பதாக அவரது உரை அமைந்திருந்தது. அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 32 ஆயிரமாக இருக்க தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளம் வெறும் 500 ரூபா வாகவே இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் கடந்த 19 வருடங்களில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 300 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ள தாக புள்ளி விபரங்களை முன்வைத்திருந்தார்.

இதை ஏனைய மலையக பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு இனி அடுத்த தேர்தல்கள் வரை மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்டத்திருத்தம் பற்றியே பேசிக் கொண்டிராமல், தொழிலாளர்களின் ஊதியம் பற்றியும் பாராளுமன்றில் விவாதம் நடத்தி அதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள வழிசமைக்க வேண்டும். தொழிலாளர்களின் உண்மையான கெளரவம் அவர்களின் வருமானத்திலேயே தங்கியுள்ளது என்பதை அரசாங்கத்துக்கு உணர்த்தல் அவசியம். எவ்வித கெளரவமும் பாராது இந்நாட்டின் உயர்விற்காய் தமது வாழ்க்கையை அர்ப்பணித்து வரும் இம்மக்களுக்கு இத்தனை காலம் கடந்தும் சில நல்ல விடயங்கள் இடம்பெறுவதை வரவேற்கத்தான் வேண்டும். அதே போன்று அவர்களின் ஊதிய விடயத்திலும் பிரதிநிதிகள் தமது அக்கறையை செலுத்துவார்கள் என்று நம்புவோமாக!

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates