Headlines News :
முகப்பு » » பாட நூல்களில் உள்வாங்கப்படாத மலையக வரலாறு- - சி.சிவகுமாரன்

பாட நூல்களில் உள்வாங்கப்படாத மலையக வரலாறு- - சி.சிவகுமாரன்


மலையகம் எமது தேசியம், மலையகத்தின் தந்தை, மலையக கல்வியின் பிதாமகன், மலையகத்தின் காவலன்,தளபதி இன்னும் என்னென்னவோ பெயர்களை தமக்கு சூடிக்கொண்டும் மேடைகளில் முழங்கியும் தமது அருகில் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் எத்தனையோ அரசியல்வாதிகளை மலையகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதில் எத்தனைபெருக்கு மலையக வரலாறு தெரியும்? அது குறித்த எத்தனை ஆவணங்களை இவர்கள் சேகரித்து வைத்திருக்கிறார்கள்? அல்லது மலையக வரலாறு தொடர்பான ஆவணங்களை சேகரிக்க ஏதாவது முயற்சிகளை செய்ய முன்மொழிவுகளை கூற இவர்களில் எத்தனைப்பேர் முன்வந்திருக்கின்றனர்? தேடிப்பார்த்தால் பூஜ்யமே விடையாக கிடைக்கிறது. ஏனென்றால் இவர்களுக்கு அரசியல் செய்யவும் , அடிப்படை உரிமைகளின்றி இருக்கும் மக்களை சந்திக்கவுமே நேரமில்லாத போது வரலாறு பற்றி எங்ஙனம் தேடி அறிவர்? 

பேசப்படும் மலையக இலக்கியம்
இன்று தமிழ் இலக்கியங்களை உலகளாவிய ரீதியில் எடுத்துப்பார்த்தால் இந்திய இலக்கியங்களில் தமிழ் நாட்டு இலக்கியம், ஈழத்து இலக்கியம், மலையக இலக்கியம், மலேசிய தமிழ் இலக்கியம் என வரிசைப்படுத்தலாம். இலண்டனின் வதியும் மலையக எழுத்தாளரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளருமான பதுளை மண்ணின் மைந்தன் மு.நித்தியானந்தன் கூலித்தமிழ் என்ற அற்புதமான மலையக இலக்கியம் தொடர்பான ஆய்வு நூலில் 1869 இல் ஆபிரகாம் ஜோசப் என்ற தோட்ட கண்டக்டரால் வெளியிடப்பட்ட கோப்பி காலத்து கும்பி பாடல் தொகுப்பான "
கோப்பி கிரிஷி கும்மி என்ற கோப்பி காலத்து கும்மி பாடல் தொகுதியே முதலாவது மலையக இலக்கியம் எனக்கொள்ளப்படுகின்றது.

அதற்குப்பிறகு 1930 களில் மஸ்கெலியாவைச் சேர்ந்த போல் என்பவரால் எழுதப்பட்ட சுந்தரமீனாள் என்ற நாவல் மலையக இலக்கியத்தின் முதலாவது நாவலாக அறியப்படுகிறது. அதற்கு பிற்பட்ட காலத்தில் சி.வி.வேலுப்பிள்ளையிலிருந்து ஆரம்பித்த இலக்கிய பாரம்பரியம் இன்று தமிழ் உலகம் மெச்சத்தக்க கவிதை.சிறுகதை.நாவல் இலக்கியங்களாக பரிணமித்து தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பேசப்படுகிறது.

ஆகவே முதலாவது இலக்கிய படைப்பிலிருந்து பார்க்கும் போது மலையக இலக்கியத்தின் வயது ஒன்றரை நூற்றாண்டுகளாகின்றது ஆனால் இதை வரலாற்று ரீதியான பதிவாக்கவும் எதிர்கால மாணவர் சமூகத்திற்கு மலையக இலக்கியம் தொடர்பில் ஆர்வத்தை விதைக்கவும் பாட புத்தகங்களில் மலையக இலக்கிய செல்நெறியை வளர்த்தெடுக்கவும் உரியோர் முன்வருவதில்லை. தேசிய கல்வி நிறுவனம் கூட புதுப்பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை மலையகப்பகுதிகளில் நடத்தினாலும் மலையக வரலாறு மற்றும் அது தொடர்பான இலக்கியங்களை பாடத்திட்டங்களில் புகுத்துவது குறித்து மூச்சு விடுவதே இல்லை.

பாட ஆலோசனை குழுவினரில் கூட மலையக சமூகத்தை சேர்ந்தவர்களை இணைப்பதிலும் அவர்களின் ஆலோசனைகளை பெறுவதிலும் மாற்றாந்தாய் மனப்பான்மையே உள்ளது. ஏனைய பிரதேச இலக்கியங்கள் தொடர்பில் தமிழ் பாட புத்தகங்களில் காட்டப்படும் அக்கறை ஏன் மலைய இலக்கியங்களில் புறந்தள்ளப்படுகிறது என்பது குறித்து கடந்த காலங்களில் எவருமே பாராளுமன்றத்தில் கூட பேசியதில்லை ஏனென்றால் பாராளுமன்றத்திற்கே வருகை தராத பிரதிநிதிகளையே கடந்த கால மலையகம் கண்டு வந்தது. இப்போது பிரதிநிதிகள் அதிகரித்துள்ளனர். இலக்கியம்,கல்வி தொடர்பான பின் புலத்தில் வந்த மலையக பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றில் மலையக சமூகம் தொடர்பில் அக்கறையாக செயற்பட்டு வருகின்றனர். உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் மற்றும் வேலு குமார் ஆகியோரை இங்கு குறிப்பிடலாம். மட்டுமன்றி மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்திலும் தமிழ் உறுப்பினர்கள் கணிசமாக இருக்கின்றனர். இது வரை இவ்விவகாரம் தொடர்பில் எவருமே கதைத்திருக்கவில்லை. தமிழ் பாடபுத்தகங்களில் காணப்படும் தவறுகள் பற்றி கூட எவரும் அக்கறை காட்டுவதில்லை. இந்நிலையில் ஒரு சமூகத்தின் இலக்கியம் தொடர்பில் கதைக்க எவர்தான் முன்வருவார்கள் என இவ்விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட முடியாது. மலையக இலக்கியமானது தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றும் பல விருதுகளுக்கும் உரித்தாகியுள்ளது. ஆனால் இன்னும் அது மாணவர்களுக்கு பாடமாக ஏன் அங்கீகாரம் பெறவில்லை என்பது தெரியவில்லை. 

1997 ஆம் ஆண்டிற்குப்பிறகு க.பொ.த சாதாரண தர உயர்தரத்திற்கு முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை சாதாரண மற்றும் உயர்தரத்திற்கு தமிழ் மொழி இலக்கியம் மாற்றத்திற்குள்ளானாலும் குறிப்பிடும்படியாக அதில் மலையக இலக்கியம் பற்றி எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. 1997 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் சி.வி.வேலுப்பிள்ளையின் தேயிலைத்தோட்டத்திலே என்ற கவிதை உள்ளடக்கப்பட்டிருந்தது. அதே போன்று 2007 ஆம் ஆண்டில் குறிஞ்சித்தென்னவனின் சம்பள நாள் என்ற கவிதையும் சிறுகதை எழுத்தாளர் என்.எஸ்.எம். ராமையாவின் ஒரு கூடை கொழுந்து என்ற சிறுகதையும் இடம்பெற்றிருந்தன இருப்பினும் சுமார் 200 வருட கால வாழ்வியல் வரலாற்றையும் ஒன்றரை வருட கால இலக்கிய வரலாற்றையும் கொண்டிருக்கும் மலையக சமூகத்திற்கு இந்த இடம் போதுமா என்ற கேள்வியெழுப்பத்தோன்றுகிறது. 

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் மலையகம் தொடர்பில் ஒன்றுமே இல்லை என்கின்ற போது சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது. 

மலையக பிரதிநிதிகள் இது குறித்து பாராளுமன்றிலும் மாகாணசபையிலும் உரிய தரப்போடு பேசுவார்களா?

நன்றி - சூரியகாந்தி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates