Headlines News :
முகப்பு » » வேட்பாளர்களும் வேடிக்கைகளும் - அருள்கார்க்கி

வேட்பாளர்களும் வேடிக்கைகளும் - அருள்கார்க்கி



உள்ளூராட்சி தேர்தல் காய்ச்சல் இன்று வேகமாகப்பரவி வருகிறது. மலையகத்தை­யும் ஆட்டிப்படைத்திருக்கும் இத் தேர்தல் காய்ச்சல் பிரதான பேசுபொருளாகக் காணப்படுகிறது. வாக்காளர் ஒரு புறமும் வேட்பாளர் மறுபுறமும் என்று தேர்தல் தொடர்பான மும்முரம் சூடுபிடித்துள்ளது.

மக்கள் சேவை செய்வதற்கு வரிசை­யில் நிற்கும் பேராளர்களைப் பற்றிய சமூகப்­புரிதல் எவ்வாறிருக்கும் என்பதை திட்டவட்டமாக வரையறுக்க முடியா­­துள்ளது. காரணம் சிறந்த நிலை வேட்பாளர் தெரிவு என விளம்பரப்படுத்­­தப்­­பட்டாலும், வழமையான நடை­முறையை போல அரசியல் வட்டாரங்­களில் செல்வாக்குள்ளோரையே இம்­முறை­யும் வேட்பாளர்களாகத் தெரிவு செய்திருக்கின்றனர்.

சாதாரண பிரஜைகளும், இளைஞர், யுவதிகளும் பங்குபற்ற முடியாத அளவிற்கு நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுகின்றன. அரசியலில் உள்ளவர்கள் வெளியார் வருகையை திட்டமிட்டு மழுங்கடிக்கின்றனர்.

மலையக அரசியல் வரலாற்றை எடுத்து நோக்குமிடத்து தொழிற்சங்க பலம், சாதி, சமூக அந்தஸ்து போன்ற காரணி­கள் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்­றன. உதாரணமாக எந்த ஒரு அரசியல் கட்சியோ? தொழிற்சங்கமோ? இக்காரணிகளை அடிப்படையாக வைத்தே சிந்தனை செலுத்துகின்றமையை இன்றுவரை காணலாம். காலங்காலமாக உயர்மட்ட சமூகத்திற்குள் காணப்படும் அரசியல் பிரதிநிதித்துவம்- ஏனையோரை வாக்காளர்களாகவே பார்க்கும் அவலம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

சாதாரண சமூகங்களைச் சேர்ந்த கற்றவர்கள் அரசியலில் பங்குபற்று­வது குறைவாகவே காணப்படுவதால் இந்தக்கூட்டத்தினரின் கூச்சல் ஊடகங்களை நிரப்பி வெற்றியடைகின்­றனர். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் ஒற்றுமையின்மையும், பிற்போக்குச் சிந்தனை­வாத­மும் கணிசமான அளவுக்கு சமூகத்தைக் கூறுபோடும் முக்கிய கருத்தியல்­களாகும். இன்றுவரை மீளமுடியாத ஒரு சமூகமாக நாம் அதே இடத்தில் இருப்பதற்குக் காரணமும் இவ்வாறான சமூக சமத்துவமின்மையும் சுயலாப அரசியலும்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

வாக்காளர் சமூகம் காலங்காலமாகவே தேர்தல் தினத்தில் மட்டும் அரசியல் பேசிவிட்டு அடுத்தநாள் தன் வேலை­யைப் பார்க்கப் போய்விடும். இதைத்தான் எதிர்பார்க்கின்றனர் அதிகாரத்திலுள்ளவர்களும். மக்கள் சேவையென்று அதிகாரத்தில் அமர்ந்த­வுடன் சுயலாப ஆசையால் தன்னை சூழவுள்ளோரைப் பாதுகாத்து வளர்த்து­­விடும் நடைமுறையையே பின்பற்று­கின்றனர்.

மறுபுறம் அடாவடி அரசியலும், பழிவாங்­கும் படலமும் மலையகத்தில் அதி­கரித்து வருவதும் கவனிக்கத்தக்கது. அரசி­யல் எனப்படு­வது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு என தமக்குள்ளேயே வரையறை செய்துகொண்டு வெளியார் தாக்கத்தினை அதிகாரத்தாலும், அடக்குமுறையாலும் கட்டுப்படுத்தும் நிலையானது பாரதூரமானது. குறிப்பாக தமக்கு சார்பானவர்களை தம்முடன் வைத்துக்கொள்வதும் தம்மை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதும் இன்று மலையக அரசியலில் வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாக படித்த இளைஞர்– யுவதிகள் தன்னிச்சையாக அரசியல் பேசுவதற்கும், அது சார்ந்து இயங்குவதற்கும் அச்சப்படு கின்றனர். இந்த உண்மை இம்முறை உள்ளூராட்சித் தேர்தலிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தோட்டப்புறங்களை மையப்படுத்தி தொழிற்சங்க கட்டமைப்பைக் கொண்டு நடத்துவதில் தோட்டத்தலைவர்களின் வகிபாகம் அளப்பரியது. மேல் மட்டத்தி­லிருந்து வரும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தொழிற்சங்க கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவதும் கட்சி­களுக்கு உறுப்பினர்களைக் கொள்வனவு செய்வதும் இவர்களின் முக்கிய கடமை­கள். உள்ளூராட்சி மன்றங்களில் போட்டி­யிடு­பவர்கள் முதற்கட்டமாக இந்தத் தோட்டத்தலைவர்களின் ஆதரவைப்பெறவேண்டும். அடுத்த­தாக அவர்களின் சிபாரிசும் பெறப்­படவேண்டியது அவசியமாகும். பின்னர்­தான் கட்சிகளுக்கு ஊடாக தேர்தலில் போட்டி­யிடலாம். இவையெல்லாவற்றுக்கும் மேலதிக­மாக பொருளாதார ஸ்திரத்தன்மை காணப்பட வேண்டும். மத்திய வருமானம் அல்லது மாதாந்தச் சம்பளம் பெறும் நபர்களுக்கு இது ஏற்புடையதாகாது. காரணம் தமக்கு ஆதரவானவர்களைத் திரட்டுவதற்கு பெருமளவு பணத்தையும் செலவு செய்வதற்­கான இயலுமை உடை­யோரையே கட்சித் தலைமைகள் அங்கீகரிக்கின்ற நிலைமை காணப்­படுகின்றது. வர்த்தகர்க­ளும் கொந்த­ராத்துக்காரர்களும் இதற்குப் பொருத்த­மானவர்களாக இனங்காணப்­பட்டுள்ளனர்.

தத்தமது கட்சிக்காக உழைத்தவர்­களுக்கும் தமது கொந்தராத்துக்களைச் செய்து லாப­மீட்டித் தந்தவர்களுக்கும் தமக்கு நிதி­யுதவி வழங்கிய வள்ளல்களுக்கும் தம் துதி­பாடிய அரசஊழியர்­களுக்­கும் மற்றும் காலாவதியான ஆசிரியர், அதிபர்களுக்கும் குறிப்பாக ஏற்கனவே பிரதேச சபைகளை அலங்­கரித்த­­வர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்­பட்டுள்ளன.

புதியவர்கள், கற்றவர்கள், சமூகநோக்கம் கொண்ட முற்போக்கானவர்கள் இம்முறை­யும் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் மட்­டுமே உள்வாங்கப்பட்டுள்ளனர். குறிப்­பாக சுயேச்சையாகக் களமிறங்கி தேர்தலைச் சந்திப்­ப­தற்கான வாய்ப்பையும் அதிகார பலத்­தால் அரசியல்வாதிகள் அடக்கு­கின்ற­னர். மறுபுறம் சமூக மட்டத்தில் செல்வாக்குடையோரையும் பேரம்பேசி விலைக்கு வாங்கும் கைங்கரியத்தை அரசியல் கட்சிகள் மேற்கொண்­டுள்ளன. எவ்வாறாயினும் வேட்பாளர் தெரிவுகள் கணிசமான அளவுக்கு நான்கு சுவருக்­குள்ளேயே நடந்துமுடிந்திருக்கின்றன.

பாடசாலைகளில் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் தன்னிறைவான சேவை­யைச் செய்துமுடித்து ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியர்­கள் அடுத்த கட்ட சமூக சேவைக்­குத் தயாராகி விட்டனர். இவர்களும் ஏதாவதொரு அரசியல் கட்சியைப் பிடித்துக் கொண்டு வேட்பாளர் ஆவதற்­கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் இன்னும் பல சுவாரசியங்­களும் நிறைந்திருக்கின்றன. மக்கள் சார்ந்தும் தூரநோக்கோடும் இருக்கின்ற எந்த ஒரு நபருக்கும் வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு குறைவு. மாறாக அதிகாரத்தின் அடிவருடிகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த வேட்பாளர்கள் நாளை மக்கள் பிரதிநிதி­களாகி வேலையை ஆரம்பித்து விடுவர். இவ்வாறான வேட்பாளர் நெரிசலில் சராசரி மலையக இளைஞன் ஒதுங்கிநிற்கிறான்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates