Headlines News :
முகப்பு » » இலக்கியத்தின் புது எழுச்சி "நித்தியச் சோலை" - பெருமாள் மகாலிங்கம்

இலக்கியத்தின் புது எழுச்சி "நித்தியச் சோலை" - பெருமாள் மகாலிங்கம்


மலையகத்தில் கவிதை, சிறுகதை என வருடம் தோறும் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம் சமூகத்தின் நிலையை படைப்பாளிகள் படம் பிடித்து காட்டுகின்றனர்.

மலையகத்தின் நாவல் இலக்கியமானது அவ்வப்போது பேசும் இலக்கியங்களாகவே காணப்படுகிறது. தூரத்துப் பச்சை, காலங்கள் சாவதில்லை, மூட்டத்தின் உள்ளே போன்றே நாவல்கள் பதுளை மண்ணின் பெருமைக்குரிய படைப்புக்களாக காணப்படுகின்றன. கவிதை, நாவல், சிறுகதை என்ற சகல துறையிலும் பதுளை சிறந்த படைப்புக்களையும், படைப்பாளிகளையும் பெற்ற பூமியாக காணப்படுகிறது. கவிதைக்கு தமிழோவியன், சிறுகதைக்கு சேனாதிராஜா, நாவலுக்கு தெளிவத்தை ஜோசப் என்று குறிப்பிடமுடியும்.

பண்டாரவளை பூனாகலை பிரதேசத்தில் அதிபராக கடமையாற்றும் என்.நித்தியஜோதி கவிதை, சிறுகதை, கட்டுரையாக்கம், விமர்சனம் என பன்முக ஆளுமையுள்ள எழுத்தாளராகக் காணப்படுகிறார். இவரிடம் இலக்கிய துறைக்கான பங்களிப்பும் மிக அதிகமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, கண்டி என பல பிரதேச இலக்கிய அமர்வுகளில் கலந்து கொண்ட அனுபவமும் விடயதான தேடலும் கொண்டவராகக் காணப்படுகிறார்.

இவர் வாழ்க்கைச் சோலை என்ற நவீன நூலின் முதலாம் பாகத்தை அண்மையில் வெளியிட்டுள்ளார். பதுளை மொழிவரதன், பிபிலை ஜெயபாலன், தெமோதரை வெங்கடேஸ்வரன் வரிசையில் நித்தியஜோதியும் இணைந்து கொண்டுள்ளார். இதே வேளை ஏனைய சமூக, பிரதேச படைப்பிலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் பதுளை எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே கல்வி கற்ற சமூகத்தையும் வர்த்தகப் பிரமுகர்களையும் நம்பியே நூல்களை வெளியிட வேண்டியுள்ளது.

நாட்டில் சில அமைப்புகள் சில இலக்கியவாதிகளின் கவிதை, சிறுகதைகள் போன்றவற்றை அச்சடித்து சந்தைப்படுத்துகின்றன. நூலின் பின் அட்டையிலோ அல்லது இடைநடுவிலேயோ சிரிக்கும் முகத்துடன் காணப்படும் எழுத்தாளன் பசை உள்ள கைகளிடம் சிக்கி தமது படைப்புரிமையை வேறு காவலருக்கு கையளித்துவிடும் நிலை காணப்படுகிறது. இது கொழும்பு, மலையகமென பேதம் கண்டு வருவதில்லை. வெளியீட்டு விழாவின் போது எழுத்தாளன் ஓரம் கட்டப்படுவதும், சில சுரண்டல் மனிதர்களால் கொச்சைப்படுத்தி விமர்சிக்கப்படுவதும் மேடையில் முன்வரிசை சபையோருக்கு பலமுறை கேட்டுதான் உள்ளது.

கவிஞர் நித்தியஜோதி தனது கவிதைகளிலும் சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் சமூகம் சார்ந்த கருப்பொருளை வாசகரின் எண்ணவோட்டங்களுக்கு அமைய எழுத்துக் கோவையாக்கும் வல்லமை கொண்டவர். அவரின் கவிதைகளில் நகைச்சுவை இருக்கும். அவரின் சிறுகதைகளில் சமூக பிரஞ்ஞை இருக்கும். அவரின் கட்டுரைகளில் தகவல்களும், தரவுகளும் இருக்கும்.

வாழ்க்கைச் சோலை நூலானது பிரதேசம் கடந்த, பல மதங்களை சார்ந்த மக்களிடையே மனித விழுமியங்களை விதைத்து தேசங்களில் சமாதானம் விளைவதை காட்டுவதாகவும், அவ்வமைதி தேயிலைத் தோட்டங்களில் உருவாவதாகவும் காட்டுகிறார். விஞ்ஞானம் கற்ற கணினியுக இளைஞர்களால் மலையகத்தை நிமிர்த்திக் காட்ட முடியுமென நாவல் பாத்திரங்கள் மூலம் கூறும் கவிஞர், சிங்களம், ஆங்கில மொழிபெயர்ப்பு, வரிகள் மூலம் மலையக நாவல் படைப்பை புதியவெளிக்கு அழைத்துச் செல்கிறார். மதங்கள் மனிதரை தூய்மைப்படுத்துவதற்காகவே என சொல்லவரும் கவிஞர், மனிதர்களின் உயரிய செயற்பாடுகள் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள மதங்களையும் உயர்த்தி விடுகிறது என்கிறார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்ட நாவலானது நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்துப் பிரதேச வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் நாவலாக அமையும் என்று கூறலாம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates