Headlines News :
முகப்பு » » சம்பள போராட்டத்திற்குள் செல்பி புள்ள - ஜே.வி.ஸ்டீபன்

சம்பள போராட்டத்திற்குள் செல்பி புள்ள - ஜே.வி.ஸ்டீபன்


போராட்டங்கள் வரவேற்கக்கூடியவை தான். இலக்கு ஒன்றினை எட்டுவதற்கு முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமானது இதய சுத்தியுடையதாகவும் அதே நேரம் உயிரோட்டம் உடையதாகவும் இருக்க வேண்டும். அதுவே நிலைபேரான வெற்றியும் திடமான நம்பிக்கையையும் உறுதிப்படுத்துவதாய் அமையும் எனினும்

தோட்டத் தொழிலாளர்களை பகடைக்காய்களாக வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சில்லறைத் தனமான சமகாலத்து செயற்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் வரலாற்றில் இழிசொல்லுக்கு இடம் வைத்தே செல்கின்றன.

இன்றைய நிலையில் தோட்டத் தொழி லாளர்களின் பிரச்சினையானது அதி கார வர்க்கத்தின் கௌரவப் பிரச்சினையாகவே உருவெடுத்து நிற்கிறது. தொழிலாளர்கள் தமது விதியை நொந்து கொண்டு ஒருபுரம் ஒதுங்கியிருக்கையில் தொழிற்சங்க, அரசியல் தலைமைகளே அதிகாரப் போட்டியில் தூண்டிலில் மாட்டிக் கொண்டிருக்கின்றன.

கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து 14 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த 14 மாதங்களில் மலையகத்தில் எந்தவொரு தொழிலாளியும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வாய்திறக்கவில்லை.

மலையகத் தலைமைகளின் மாய வலைக் குள் சிக்குண்டுள்ள அப்பாவித் தொழிலாளர்கள் இதைப்பற்றி சிந்திப்பதற்குக்கூட திராணியற்றவர்களாக இருந்து வருகின்றனர். நிலைமை இப்படியிருக்கையில் மலையகத்தில் எழுந்துள்ள அதிகாரப் போட்டி, அரசியல் இருப்பினை தக்கவைத்தலுக்கான தேவை, வரட்டுக் கௌரவம் என்று அனைத்து துர் மணங்களையும் சேமித்து வைத்திருக்கும் இத்தகைய தரப்பினரே தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.அது மாத்தி ரமின்றி 14 மாதங்கள் கடந்து விட்ட பின் னரும்கூட மேலும் 14 நாட்கள் கெடு விதிக் கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி 14 நாட்களுக்கான காலக்கெடுவா அல்லது காலத்தை இழுத்தடித்து வீணடிக்கும் கால கேடா என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. ஏனெனில் 14 மாத கால மலையகத் தலை மைகளினதும் தொழிற்சங்களினதும் முன் னெடுப்புகள் அவ்வாறு சிந்திக்கின்றன. 1000 ரூபா சம்பளம் பெற்றுத் தரப்படும் என்று கூறியதும் அதற்குப் போட்டியாக 2500 ரூபாய் பெற்றுத்தருவோம் என்றும் அதாவது நாள் ஒன்றுக்கு 100 ரூபாவீதம் பெற்றுத் தருவோம் என்று கூறியதும் மலையகத்தின் அதிகார வர்க்கத்தினரேயாவர்.

1000 ருபா, 2000 ருபா என்ற கோரிக் கைகள் பாதகமில்லை என்கின்ற போதும் அதற்கான போராட்டங்கள் சாதகங்களை ஏற்படுத்தவில்லை. எல்லாமே மாயா மாயா என்றாகிவிட்டது. தோட்டத்தொழிலாளர்கள் தலைமைகள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்த போதி லும் மலையகத் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை.

1000 ரூபாவுக்கான நள்ளிரவுப் போராட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்த பின்னர் மல்லியப்பு சந்தியில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பதிலுக்கு போராட்டம் நடத்தியது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் தீக்குளிப்பு என்று போராட்டம் கையொடிந்து போக இறுதியாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் என்றதொரு போராட்டம் நடத்தப்பட்டது. இப்படியான வரிசைக்கிரம அடிப்படையிலான போராட்டங்கள் சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் எந்தளவு பேசப்பட்டதோ அதிலும் ஒருபடி மேலே சென்றுதான் கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி யின் சத்தியாக்கிரகப் பேராட்டம் இன்று பேசப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது.

தோட்டத் தொழிலாளருக்கு 100 ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத் தருவதற்கென்ற வகையிலும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட்டதான மேற்படி சத்தியாக்கிரகப் போராட்டம் கேளிக்கைப் போராட்டமாக மாற்றப்பட்டுவிட்டது.

உண்மையாகவே தோட்டத் தொழிலாளியின் நிலைமை உணரப்பட்டிருந்தால் உண்மையாகவே அவர்களுக்கு அதிகரித்த சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற இதய சுத்தியுடனான எண்ணம் இருந்திருந்தால் போராட்டமும் மெய்யானதாக இருந்திருக்கும்.

தோட்டத் தொழிலாளியின் வியர்வை மணம்கூட அறியாது தலை நகரிலே மையம் கொண்டிருப் போருக்கு போராட்டத்தின் தாற்பரியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்றைய தினம் ஒட்டு மொத்த மலையகமும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த விடயமானது தலைநகரிலே கூடுகின்ற தலைமைகள் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் எத்தகைய செய்தியைக் கொடுக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பே ஆகும்.

அதே போன்று தோட்டத் தொழிலாளர்க ளாகிய தமக்கு எத்தகைய ஆறுதலை இவர்கள் தரப்போகின்றனர் என்பதும் மக்களது எதிர்பார்ப்பாக இருந்தது. இருந்த போதிலும் அனைத்துக் கனவுகளையும் தவிடு பொடியாக்கிய போராட்டக்காரர்கள் தலை நகருக்கு சுற்றுலா வந்தது போன்று தங்களது கையடக்கத் தொலைபேசிகளினூடாக செல்பி எடுத்து அதாவது தனது கையடக்கத் தொலைபேசியில் தம்மையே படமெடுத்து அதனை முகப்புத்தகத்திலும் தரவிறக்கம் செய்து குதுகலம் கண்டதை காணமுடியும். செல்பி எடுப்பது உங்களது இஸ்டம் தான் அதனை மறுக்கவில்லை. ஆனால் உங்களுக்கு இஸ்டமானது மக்களுக்கு கஷ்டமாகி விட்டது.

தலைநகரில் முன்வைக்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கான சத்தியாக்கிரகம் இறுதி யில் செல்பி கொண்டாட்டமாக தோற்றம் பெற்றது சகித்துக்கொள்ள முடியாததாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியைப் பொறு த்தவரை அதன் கடமை முடிந்து விட்டது. சொன்னபடி அதாவது திட்டமிட்டவாறு சத்தியாக்கிரகமும் நடந்து விட்டது. அதேபோன்று ஊடகங்களும் முன்னிலைப்படு த்தி செய்திகளாக பிரசுரித்து விட்டன. அந்த வகையில் அவர்களது கடமையும் பொறுப்பும் நிறைவேறி விட்டது என்ற ரீதியில் பெருமூச்சு விட்டவர்களாக சென்று விட்டனர்.

சத்தியாக்கிரகம் என்று கூறி செல்பி எடுத்து போராட்டத்தை கொச்சைப்படுத்திய தைப் போன்றல்லாது தோட்டத் தொழிலா ளர்களுக்கான சம்பள அதிகரிப்பினை விலியுறுத்துமாற்றையும் திருக்க முடியும்.

2500 ரூபா சம்பள அதிகரிப்பு என்பது தனியார் துறைக்கான அரசாங்கத்தின் பரிந்துரையாக இருந்து பின்னர் அது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக தோற்றம் பெற்றது. தனியார் துறைக்கு 2500 ரூபாய் கொடுக்கப்பட்டதால் அவ்வாறு தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2500 ரூபா பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றே தமிழ் முற்போக்கு கூட்டணி கூறியது. இதனை தொழில் அமைச்சரும் ஏற்றுக் கொண்டவராக செயற்பட்டு எழுத்து மூலமல்லாத வாய்மொழி வழியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபா அதிகரித்த சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். எப்படி இருப்பினும் இது பாராளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிவிப்பு என்பதால் அது உத்தியோகபூர்வமானதாக ஏற்றுக் கொள்ள வேண்டியதொன்றாகி விட்டது.

எனினும் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட 100 ரூபா அதிகரித்த சம்பளம் இதுவரையிலும் தொழிலாளர்களை எட்டவில்லை.

இந்நிலையில்தான் பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதி அமர்வின் காலப்பகுதியில் தனி யார் துறைக்கான 2500 ரூபா அதிகரிப்பு சட்டமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

நிலைமை இப்படியிருக்க இன்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், பாராளு மன்ற உறுப்பினர்களான அறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ், வேலுகுமார், திலகராஜ் ஆகியோர் இணைந்தோ அல்லது ஆலோசனைகளை மேற்கொண்டோ மேற்படி 2500 ரூபா சம்பள அதிகரிப்பு சட்டமாகியதில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் தோட்டத் தொழிலாளர்களின் பங்கீட்டுத் தன்மையையும் வலியுறுத்தியிருக்க முடியும். இடையிட்டு மனுபிரேரணை ஒன்றை உட்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்க முடியாம் ஆனால் அது தவறவிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி நாட்டில் வாழ்க்கைச் செலவு யாவருக்கும் சமமானது என்ற காரணத்தை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றையோ அல்லது ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றையோ கொண்டு வந்திருக்க முடியும்.

இப்போது தான் பாராளுமன்றத்தில் மலையகம் பற்றி பேசப்படுவதாக அடிக்கடி ஞாபக மூட்டும் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், வேலுகுமார் ஆகியோர் ஏன் இது பற்றி சிந்திக்கவில்லை என்பதற்று அவர்கள் பதில்கூற கடமைப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை யும் ஆறுமுகன் தொண்டமானையும் வம்புக்கு இழுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இதுபற்றி ஆலோசனை வழங்கியிருக்கலாமே.

அதிகமான அதேநேரம் போதுமான பாரா ளுமன்ற உறுப்பினர்களையும் மூன்று அமைச்சர்களையும் கொண்டிருக்கும் மலையகம் சார்பில் பாராளுமன்றத்துக்குள் சாதித்துக்கொள்வதற்கான சாதகத்தன்மைகள் காணப்படுகின்ற போதிலும் அதனை சாணக்கியமாகச் சாதித்துக் கொள்ளாது வெறுமனே ஊடகங்களுக்காக போராட்டம் என்று கூறி பேயாட்டம் காட்ட நினைப்பது அருவருக்கத் தக்கதானது.

அதிகமான அமைச்சுப்பதவிகள், உறுப்பினர்கள் என்பதெல்லாம் மக்களுக்காகவே ஆகும். இத்தகைய பதவிகளைக் கொண்டு மக்களின் குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும். மாறாக கையில் அதிகாரங்களை வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாதோரை ஆர்ப்பாட்டக் களத்தில் இறக்கிவிடுவதும் அப்பாவித் தொழிலாளர்களை வருமானம் இழக்கச் செய்து வீதிக்கு இழுப்பதும் கிடைக்கப்பெற்றிருக்கும் அதிகாரத்துக்கு நாகரிகமற்றது என்றே கூற வேண்டும்.

பாராளுமன்றம் அங்கீகரித்தால் தற்போதுள்ள தோட்டத் தொழிலாளர்களினதும் அவர்களது தொழிற் துறையினையும் மாற்றியமைக்க முடியும். இன்று தோட்டங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்ற கம்பனிகளையும் விரட்டியடிக்க முடியும். அதற்கு மலையகத் தலைமைகளின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், முன்னெடுப்புகள் அவசியமாகின்றன.

இன்று மலையகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியிலான வெட்டுக் குத்தும், சச்சரவுமே மலிந்து கிடக்கின்றன. இந்நிலைமை மாறவேண்டும். மிக விரைவிலேயே பெருந்தோட்டங்களை நிருவகிக் கும் கம்பனிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை அளிப்பதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

மலையகத்தின் அனைத்து பெருந்தோட்டங்களையும் பொறுப்பேற்கும் அளவில் இரு செல்வந்த நாடுகள் முன்வந்திருப்பதாக அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையானது இன்றைய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மாத்திரமின்றி மலையக அரசியல் வாதிகளுக்கும் வயிற்றில் புளியை கரைப்பது போலாகப்போவது உறுதிதான்.

மலையகத் தலைமைகளே! மலையக அரசியல் வாதிகளே! உங்களைப் போன்று உள்நாவில் ஒன்றும் வெளிநாவில் வெறொன்றும் என்று மாறிப்பேசும் வல்ல மையை அப்பாவித் தொழிலாளர்கள் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஏமாற்றமடைந்ததும் போதும். அவர்களை ஏமாற்றியதும் போதும். எனவே உங்களால் ஆனதை சொல்லுங்கள். முடிந்ததைச் செய்யுங்கள் வீம்புக்காக கதையளந்து பின்னர் திக்குமுக்காடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இதனூடாக இன்னொன்றையும் கூறி வைக்க வேண்டும். உங்களால் முடியாத ஒன்றைப் பெறுவதற்கு தோட்டத் தொழி லாளர்களை இழுத்து தெருவில் விடுவதற்கு நினைக்க வேண்டாம்.

விபரித்துக் கூறுவதென்றால் தொட்ட தெற்கெல்லாம் மலையகத்தின் ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் அணிதிரட்டி வீதியில் இறக்கி போராட்டம் நடத்துவோம் என்ற அழகான பசப்பு வார்த்தையை இனி யேனும் பிரயோகிக்காதிருங்கள் ஏனெனில் அவர்களை வீதிக்கு இழுப்பதால் உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது. மாறாக அவர்களின் வேலையும் இழந்து வருமா னமும் இழக்கப்படுகிறது. இது பாவச் செய லாகும்.

மலையகத்தின் இளைஞர்யுவதிகளே! சம காலத்து நிலைவரங்கள் தொடர்பில் விழிப்பாக இருங்கள்.கண்மூடிகளாகவும் குருடர்களாகவும் ஊமைகளாகவும் இருக்கத் துணியாதீர்கள்.எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்ற வாக்கினைப் போல் நாளைய மலையகம் இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. ஆக்கபூர்வமான காரியங்களில் தலையீடு செய்யுங்கள். வளமானதை பெருகச் செய்யுங்கள். நஞ்சானதை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். சிந்தித்துச் செயலாற்றுங்கள்.
நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates