Headlines News :
முகப்பு » , , , , » நாடு பரவிய கலவரம் (1915 கண்டி கலகம் –21) - என்.சரவணன்

நாடு பரவிய கலவரம் (1915 கண்டி கலகம் –21) - என்.சரவணன்


இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த அத்தனை கலவரங்களின் போதும் ஒரு கட்டத்துக்கு அப்பால் அக்கலவரத்தை பெரிதாக வளர்த்துச் சென்றவர்கள் கொள்ளையர்களும், காடையர் கூட்டமும் தான். 1915 கலவரமும் இதில் விதிவிலக்கல்ல. அன்று விடியற் காலை வேலையிலிருந்து திரும்பிய தொழிலாளர்கள் முஸ்லிம் கடைகளின் மீது சிறிதாக தொடங்கிய கள் வீச்சுக்களும், உடைப்புகளும் இந்த கொள்ளையர் கூட்டத்திற்கு சாதகமாக அமைந்தன. 2000 க்கும் மேற்பட்டவர்கள் புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம், சிங்கள, தமிழ் கடைகளை சூறையாடினர். கலவரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. கையில் கிடைத்த கன ஆயுதங்களுடன் வீதிகளில் நிறைந்தார்கள் கொள்ளையர்கள். புதுக்கடை, வாழைத்தோட்டம், பழைய சோனகத் தெரு. போன்ற முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடங்களில் இரு இனங்களைச் சேர்ந்தவர்களும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டதில் இரு தரப்பிலும் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் காயங்களுக்கும் உள்ளானார்கள். உயர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள் கூட கொள்ளையிடப்பட்டன.

உலகப்போரின் காரணமாக இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிப்புக்கும் விரக்திக்கும் ஆளாகியிருந்த சாதாரண அடித்தட்டு மக்கள் அதிகமாக இந்தக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்டது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல.

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பிரதேசங்களில் கடைகள் சேதமாகின. அவர்கள் சேதப்படுத்திய கடைகளை கொள்ளையர்கள் சூறையாடினர். பொலிசார் செய்வதறியாது இருந்தனர். காடையர் கூட்டத்திற்கு இது சாதகமாக அமைந்தது. எந்த தடையுமின்றி அவர்கள் புறக்கோட்டையில் பெருமளவு கடைகளை நாசம் செய்தனர். கலவரத்தை அடக்க வாய்ப்பு இருந்தும் கூட பொலிசார் எதையும் கணக்கில் எடுக்கவில்லை. பெண்களும் சிறுவர்களும், முதியவர்களும் கூட பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு முன்னால் இந்த கொள்ளைகளில் ஈடுபட்டார்கள். எதனால் பொலிசார் இத்தனை அலட்சியமாக இருந்தார்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமளித்தன. முஸ்லிம்களுக்கு சாதகமாக இருப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்கிற கருத்தும் பரவலாக பரவியிருந்தது.

கலவரம் சிறிது சிறிதாக பல்வேறு இடங்களுக்கும் பரவியது. முஸ்லிம்கள் தமது வீடுகளில் பணிபுரியும் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்து வெட்டிக்கொலை செய்கிறார்கள் என்கிற பொய் வதந்தியால் மேலும் ஆத்திரத்துக்குள்ளானார்கள் சிங்களவர்கள். பௌத்தர்களதும், கிறிஸ்தவர்களினதும் மதஸ்தலங்களை தாக்கியழித்தபடி சிங்களவர்களை பழிவாங்கும் வெறியுடன் முஸ்லிம்கள் இப்போது அடுத்த இலக்குகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் வதந்தி பரவியது. இன்று போல் அன்று தூர இடங்களில் என்ன நடக்கின்றன என்பதை உடனடியாக உறுதி செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கவில்லை. எனவே தலதா மாளிகை தாக்கி தரைமட்டமாகிவிட்டது, புனித லூசியாஸ் தேவாலயம் டைனமைட் வைத்து தகர்த்து விட்டார்கள், முஸ்லிம்கள் பேரழிவை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறார்கள் போன்ற வதந்திகள் எங்கெங்கும் இலகுவாகப் பரவி வந்தன (The Ceylon Morning Leader – 01.06.1915). அப்போது கரையோர முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான பல துப்பாக்கி ரவைக்கான தூள் விற்கும் கடைகளில் டைனமைட்டும் துப்பாக்கிகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன என்பதும் இந்த வதந்தி நம்பப்படுவதற்கு காரணமாக இருந்தன. 

சாதாரண மக்கள் இந்த வதந்திகளால் பீதியுற்று ஒன்றாக கூடி குழுமியிருந்தார்கள். சில வெளிப் பிரதேசங்களில் தமக்கு அருகாமையிலுள்ள காடுகளுக்கு சென்று பாதுகாப்பு தேடிக்கொண்டார்கள். வெறும் கரையோர முஸ்லிம்கள் மாத்திரம் அல்ல உள்நாட்டு முஸ்லிம்களின் சொத்துக்கள், வீடுகள் கூட சண்டியர்களால் சேதத்துக்குள்ளாக்கப்பட்டன. முஸ்லிம்களின் சொத்துக்களை பாதுகாக்க முடியாத பல இடங்களில் அந்த குடும்பங்களை சிங்களவர்கள் தமது வீடுகளில் பாதுகாத்த சம்பவங்களும் நிகழ்ந்தன.

அம்பிட்டிய பகுதியில் முஸ்லிம்களால் கொள்ளை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று வழக்கறிஞர்களால் நீதவானுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு போலீசார் அனுப்பப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். இதுவும் அதே பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

யூன் 3ஆம் திகதி வெளியான “The Ceylon Morning Leader” பத்திரிகையில் இப்படி ஒரு செய்தி வெளியாகியிருந்தது. “...மருதானை, பொரல்லை - கொட்டா வீதி, வெலிக்கடை பிரதேசங்களில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திக்கொண்டு வந்த கூட்டத்தினரிடம் இருந்தது தப்ப பெண்களும், சிறுவர்களும் பல்வேறு இடங்களில் அடைக்கலம் புகுந்தனர். கொட்டா வீதியிலுள்ள பிரபல முஸ்லிம் பிரமுகரான அபுபக்கரின் வீட்டைத் தாக்கி கொள்ளையிட்டபோதும் அங்கிருந்த காவலாளியால் எதிர்க்க முடியவில்லை. வீட்டிலிருந்த தளபாடங்களையும், பொருட்களையும் சேதப்படுத்தி இழுத்து வெளியில் வீசினார்கள். அங்கு வந்து சேர்ந்த பொலிசார் அந்த கூட்டத்தை நோக்கி சுட்டதில் காயப்பட்டவர்கள் உயிர் ஊசலாடிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சூட்டின் போது என்ன நடக்கிறது என்பதை பார்க்க தனது வாசல் கதவை திறந்து வெளியே வந்த ஆர்.ஏ.மிரண்டோ என்பவரும் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி பலியானார்...”

புதுக்கடை பகுதியில் சிங்களப் பெண்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள் என்று பரவிய வதந்தியால் அந்த பகுதியிலும் சண்டைகள் நடந்து இரத்தக் கறைகள் இருந்தன என்று The Ceylonese (03.06.1915)  பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதே பத்திரிகையில் அடுத்த நாள் செய்தியில் இப்பிடி இருந்தது.

“முஸ்லிம்கள் கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்தை தாக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வதந்திபரவியதைத் தொடர்ந்து பல இளைஞர்களும், வயதானவர்களும் சந்திக்கு சந்திக்கு குழுமி நின்று அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் காத்திருந்தார்கள். பல மணி நேரங்கள் காத்திருந்ததில் அது வெறும் வதந்தி என்று உணர்ந்துகொண்டார்கள்”

யூன் 4 ஆம் திகதி வெளியான அதே பத்திரிகையில் அதுவரை “நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும், காயப்பட்டும் இருக்கிறார்கள். கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டுமல்ல படையினரால் கொல்லப்பட்டவர்களும் இதில் அடக்கம்” என்றிருந்தது. 

கலவரத்தில் இணைந்து கொள்வதற்காக 700 பேரளவில் வெள்ளவத்தை விக்டோரியா பாலத்தை கடந்து வர முயற்சிக்கையில் எச்சரிக்கை செய்தும் நிற்காததால் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் காயப்பட்டனர். பலர் ஆற்றில் குதித்து நீந்தி தப்பித்தனர்.

பதட்ட நிலையிலிருந்த பல நகரங்களில் இராணுவ அரண்கள் நிறுவப்பட்டன. நகரக் காவல் படையில் இருந்த பஞ்சாபியர்கள் அந்த படையில் இருந்தனர்.
கொழும்பு மெயின் வீதியிலிருந்து கொட்டாஞ்சேனை, முகத்துவாரம் பகுதியில் 4 ஆம் திகதி நூறு நூறாக அணிவகுத்து வந்த படைப்பிரிவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டு சில வீடுகளில் கத்தி, வாள்கள் ஆயுதங்கள் போன்றவற்றையும் கைப்பற்றினர். மூடியிருந்த வீடுகளை உடைத்து சென்றனர். கொட்டாஞ்சேனைக்கும் ஊறுகொடவத்தை பகுதிக்கும் இடையில் சண்டியர்களின் அடாவடித்தனத்தால் பதட்ட நிலை நிலவியது.

இறுதியில் இந்த கலவரம் உச்ச கட்டத்தை அடைந்தபோது கலவரத்தில் ஈடுபடுவோரை சுட்டுத்தள்ளுவதற்கான ஆணை கிடைக்கப்பெற்றது. பொலிசாரும் இராணுவமும் வீதிகளில் குவியத் தொடங்கினார்கள். கலவரமும் அதன் பின்னர் தான் சிறிது சிறிதாக அடங்கத் தொடங்கிற்று. கண்ட இடத்தில் சுட்டுத்தள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி பரவியது தான் அதற்கான காரணம்.

நகர்ப் பாதுகாப்பு படை கொழும்பு கோட்டை, புறக்கோட்டைப் பகுதிகளில் சுற்றிவளைத்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். 

இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக கண்டியிலும் அடங்கியது. இரண்டு தினங்களில் கொழும்பும் அடங்கியது. யூன் 5ஆம் திகதியளவில் பெருமளவு பிரதேசங்களில் அடங்கியது. முஸ்லிம்களுக்கு அரசு ஆதரவழித்து பாதுகாப்பளிக்கிறது என்கிற ஒரு நம்பிக்கை  பரவலாக நிலவியதும் இதற்கு இன்னொரு காரணம்.

இப்படி ஒரு நம்பிக்கை நிலவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பல இடங்களில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் பலர் சிங்களவர்கள். கைது செய்யப்பட்டவர்களும் சிங்களவர்கள்.
மிகப் பழமையான கம்பளை – கலதெனிய விகாரைச் சேர்ந்த தலைமை பஸ்நாயக்க நிலமே  எப்.பி.வல்கம்பஹா பஞ்சாப் படையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது இறந்த உடல் கண்டியில் கண்டெடுக்கப்பட்டது.

யூன் 5 ஆம் திகதியளவில் நிலைமை சீராக வந்து கொண்டிருந்தது. இராணுவச் சட்டம் முதன் முதலில் யூன் 2 ஆம் திகதி மேல் மாகாணத்தில் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. 3 ஆம் திகதி சப்பிரகமுவா, மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஊவா, வட-மத்திய மாகாணங்களில் 17 ஆம் திகதி அதாவது எதுவித அசம்பாவிதங்களும் நடக்காத காலத்தில் இராணுவச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசியமில்லாத காலத்தில், அவசியப்படாத பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது தவிர இராணுவச் சட்டத்தின் பேரால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளும், இராணுவ அராஜகமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள்.

பெரேராவின் நூல்
இவை குறித்த விலாவாரியான தகவல்கள் “இலங்கையில் சமீபத்தேயே குழப்பங்கள் பற்றிய குறிப்புகள்”  (Memorandum Upon Recent Disturbances in Ceylon) எனும் 75 பக்கங்ககளைக் கொண்ட நூலில் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. எட்வர்ட் டபிள்யு பெரேரா எழுதிய இந்த நூல் காலனித்துவ செயலாளருக்கு 1915 ஆம் ஆண்டு எழுதிய பரிந்துரை என்று தெரிய வருகிறது. பெரேரா பரிஸ்டர் பட்டம்பெற்ற வழக்கறிஞர்.  பொன்னம்பலம் இராமநாதனும் பெரேராவும் சேர்ந்து இரகசியமாக தீட்டிய திட்டத்தின் பிரகாரம் தான் இங்கிலாந்துக்கு இருவரும் சென்று உண்மையை எடுத்துக் கூறினார்கள். அந்த கதை மிகவும் சுவாரசியமானதும் கூட. தனியாக அவரைப் பற்றி பின்னர் தெரிந்துகொள்வோம்.

கண்டி கலவரம் பற்றிய வழக்குகளில் பலரை விடுவிப்பதற்காக வாதிட்டு போராடியவர் பெரேரா.  கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், நடந்த சம்பவங்கள் பற்றிய நீதி விசாரணை கோரியும் அவர் தொகுத்த நூல் இது. சட்டவிரோதமாக அரங்கேற்றிய  “இராணுவச் சட்டம்” குறித்து விலாவரியாக எழுதியிருக்கிறார். பலருக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளின் விபரங்கள், முறைப்பாடுகள், கடிதங்கள் என்பன பற்றிய விபரங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதே அடிப்படையில் தான் பொன்னம்பலம் இராமநாதன், மற்றும் ஆர்மண்ட் டி சூசா ஆகியோர் எழுதிய நூலும் வெளிவந்திருந்தது. இந்த மூன்றும் 1915 இல் தான் வெளிவந்துள்ளது. மூன்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதுடன் ஏறத்தாழ பரஸ்பரம் பெருமளவு ஒற்றுமைகள் நிறைந்த நூல்கள் இவை. பெரேரா எழுதிய இந்த நூலில் திகதிவாரியாக அன்றைய நாளிதழ்களை ஆதாரம் காட்டி சம்பவங்கள் தொகுக்கப்பட்டது ஒரு சிறப்பு.

தொடரும்...


இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
  • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  • Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates