Headlines News :
முகப்பு » , » தெணியானின் “ஒடுக்கப்பட்டவர்கள்” ஒரு சுருக்கமான விமர்சனக் குறிப்பு - லெனின் மதிவானம்

தெணியானின் “ஒடுக்கப்பட்டவர்கள்” ஒரு சுருக்கமான விமர்சனக் குறிப்பு - லெனின் மதிவானம்

தெணியான்

தெணியான் இலங்கை தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக முற்போக்கு இலக்கியத்தின் பரிமாணத்திலும், அப்பரிமானம் ஆழமாகவும் அகலமாகவும் வளத்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் ஆழ்ந்த அக்கறையுடன் செயற்பட்டுவருபவர். கலை இலக்கிய அரசியல் துறைகளில் இன்று முனைப்புற்றுவருகின்ற குழு இழுபறிநிலை கலையப்படவேண்டும் என்பதிலும் அதற்கு மாறாக மார்க்சிய முற்போக்கு அணிகள் யாவருக்கும் பொதுவான எதிரிக்கு எதிராக அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் ஐக்கியப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக நின்று செயற்பட்டு வருகின்றவர். யாழ்பாண சமூகச் சூழலில் வேதனைமிக்க அனுபவங்களால் சுட்டுப் பொசுக்கப்பட்டது தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை. அத்தகைய குருரமும், கொடுமையும் நிறைந்த ஒரு சமுகச் சூழலின் நடுவே- தாழ்த்தப்பட்டவர்களின் மீது கருணைக்காட்டாத சமூகச் சூழலின் நடுவே தோன்றியவர்  தெணியான். மனித குல விடுதலைக்கான இடையாறாத போராட்டத்தில் இலக்கியத்திற்கும் முக்கிய பங்குண்டு என்ற நம்பிக்கையில் கடந்த நான்கு தசாப்தங்களாக எழுதிய சிறுகதைகளின் கதம்பமாக அவரது “ஒடுக்கப்பட்டவர்கள்” என்ற தொகுப்பு வெளிவந்தள்ளது. 
யாழ்பாண சமூகவமைப்பானது இந்துமத செல்வாக்கிற்குட்பட்டதொன்று என்ற வகையில் சதுர்வர்ண வேறுபாட்டினை கொண்டுள்ள போதும், சதுர்வர்ண வேறுபாட்டின் ஆதிக்க சக்தியான பிராமணர்கள் இங்கு இல்லை. மாறாக யாழ்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற வேளாளர் என்ற சாதியினரே பொருளாதார ஆதிக்கமும் அதனூடான சமூக ஆதிக்கமும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இவ்விடத்தில் யாழ்பாண சமூகவமைப்பில் நிலவுகின்ற சாதிய அடக்கு முறையை இந்திய சாதிய அடக்கு முறையுடன் ஒப்பு நோக்குகின்ற போது யாழ்பாணத்தில் நிலவுகின்ற சாதிய அடக்கு முறையே கொடுமையானதாக காணப்படுகின்றது. யாழ்பாண வேளாளர் என்ற சாதியினர் பொருளாதார ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுகின்ற அதே சமயம் சதுர்வர்ண அடிப்படையில் அவர்கள் பிராமணர்களை விட கீழானவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். இந்த தாழ்வு மனப்பான்மையும் யாழ்பாண சமூகவமைப்பில் சாதியம் இறுக்கமடைவதற்கு முக்கிய காரணமாகும்.

பொருளாதார ஆதிக்கம் பெற்றிருந்த வேளாளர் சாதியினர் தமக்கு தேவையான அடிமைகளை தென்னாட்டிலிருந்து இறக்குமதி செய்ததுடன் தத்தமது கிராமங்களில் வாழ்ந்து வந்த அடக்கியொடுக்கப்பட்ட மக்களையும்; தமக்கு அடிமைகளாக்கி கொண்டனர். அவர்களின் உழைப்பை ஈவிரக்கமின்றி சுரண்டினர். இதற்கு மாறாக பெண்களை திருமணம் செய்து கொடுககின்ற போதும் தமக்கு அடிமைகளாக வாழ்ந்த அடக்கியொடுக்கப்பட்ட மக்களை சீதனப் பொருட்களுடன் சேர்த்து வழங்குகின்ற முறையும் நிலவியது. இத்தகைய சமூகப் பின்புலத்தில் தன் பெண்சாதியின்ர தீட்டுத் சீலையை இன்னும் வெளுத்துக் கொண்டு வரவில்லை என்தற்காக முதியோருவரை தாக்கும் இடிமாடு போல நிற்கும் தடியன். அந்த கொடுமையை பார்த்து கைகட்டி நிற்கும் மக்கள். எதனையுமே கேட்கவிடாது தடுக்கும் குடிமை முறை இவற்றையெல்லாம் உணர்வு குன்றாத வகையில் சித்திரிப்பதாக “குடிமை” என்ற கதை அமைந்துள்ளது. அவ்வாறே பொருளாதார அதிக்கம் இல்லாத பிரமணர்களின் வாழ்வு எத்தகைய துயரகரமானது என்பதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை பயன்படுத்தி அதிக்க சக்திகள் எவ்வாறு தமக்கு சாதகமான வகையில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதையும் “காவல் அரண்கள்” என்ற கதையில் பதிவாக்கிருக்கின்றார். தமிழகத்தில் பிராமணர்களை வர்க்க எதிரியாக காட்டுவது போல   யாழ்பான சமூகத்தில் காட்டமுடியாது என்ற வகையில்  கோயில் முகாமையாளரான  வெள்ளாளருடன் தாழ்த்தப்பட்ட மக்களுடனான  மோதலை காட்டியமை இக்கதையாசிரியரின் தெளிந்த பார்வையை காட்டுகின்றது.  

மேலும், சாதியத்தின் முக்கிய குணாதியங்களில்;; ஒன்று தான் ஆதிக்க சாதி காரரொருவருக்கு தன்னை உயர்ந்தவனாக கருதும் பண்பையும்; அவ்வாறே தாழ்த்தப்பட்ட சாதிகாரரோருவருக்கு தன்னை தாழ்வவராக கருதும் பண்பையும்; வழங்கியதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளாக செல்லரித்துப் போன இக்கலாசார ஆதிக்கம் சமூகத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பது முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய தொன்றாகும். “உயர் மானம்” என்ற கதையில் தன மகள்; பாலியல் தேவையை ப+ர்த்தி செய்வதற்காக தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவருடன் உடலறவு கொண்டதை அறிந்த ஆசார சீலரான அவளது தந்தை “சீ ..உனக்கு எங்கடை ஓராள் கிடைக்கவில்லையா?” என தன்மகள் பாலியல் சோரம் போனாலும் அது சாதி புனிதத்தை பாதித்து விடக் கூடாது என ஏங்குவதைக்  காண்கின்றோம். அவ்வாறே காலக்கிரகத்தில் ஏற்பட்ட சமூகமாற்றங்கள் சாதிய சமூகத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை “சமூகங்கள் மாறும் போது…..” என்ற கதையில் தமது குடிமையான நல்லானை பார்த்து காறித்துப்பும் கமக்காரர் சிதம்பரபவ்பிள்ளையாரை பார்த்து அவனும் காறித்துப்பும் கலக உணர்வு படைப்பாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே “தொழும்பு” என்ற கதையில் உயர்சாதியினர் தமக்கு கையாளாக்கி பிரேதம் சுடுவதற்காக நியமிக்கப்பட்ட சிவலையன் பல சமயங்களில் தம் வர்க்கத்தினருக்கே துரோகியாக இருக்கின்றான். பின் தனக்கு வழங்கப்பட்டது அரசாங்க வேலை இல்லை என்பதை- தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சிதம்பரபிள்ளையாரை ஏசுகின்ற போது அவர் அவனை அடிக்க உலக்கையை தூக்கிகொண்டு ஆவேசமாக வர சிவலையன் தன் இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து நீட்ட சிதம்பரபிள்ளளையார் பின்வாங்கும் காட்சி தாழ்த்தப்பட்ட மக்களின் கலக உணர்வுகளை பிரதிப்பலிப்தாகவே உள்ளன.   இக்கதைகளில் பழிவாங்குகின்ற உணர்ச்சிக்கு பதிலாக இரு சாதிகளின் வர்க்கங்களின் பகையுணர்வ காட்டப்படுகின்றது. அந்தவகையில் இக்கதைகள் சோகத்தை இசைத்hதலும்  அவைக் கூட தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமையையும் போராட்டத்தையும் சமூமாற்றச் சக்திகளை நோக்கி கொண்டு செல்வதாகவே படுகின்றது. 

சாதிய உணர்வுகளும் வர்க்க வேறுபாடுகளுமே யதார்த்தமாகிவிட்டதோர் நசிவு தரும் சூழலில் நைந்து போன பரிமாணங்களையும் கல்வித் துறைச் சார்ந்தவர்களும் சந்திக்க தவறவில்லை. இத்தகைய சிதைவுகளின் பின்னணியில் மனித ஆளுமைகளின் கம்பீரமும் பங்களிப்பும் காலத்திற்கு காலம் வேறுப்பட்டும் மாறுப்பட்டும் வந்துள்ளது. அதிகார பீடங்களை சேர்ந்தவர்களுக்கு சௌகாரியங்களை ஏற்படுத்தும் புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் கல்வியலாளர்கள் இங்கே குறைந்தபாடில்லை. இந்த பின்னணியில் ”இனினொரு விதி செய்வோம் ” என்ற பாரதியின் நாகரிகத்தில்; கால் பதித்து – தம் கரங்களை உயர்த்தி கலகக் குரலை ஒலிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட எழுத்தாளர்கள் ஒடுக்குமுறையைஇ ஆதிக்கத்தை எதிர்த்து அம்பலப்படுத்துகின்ற எழுத்துக்களை வெளிக் கொணரத்தவறவில்லை.   தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்கு எதிரான சூழலையும் அனைவரக்கும் கல்வி நாகரிகம் என்றெல்லாம் புலம்ப்pத் திரியும் கல்வி துறைசார்ந்தவர்களிடமும் சாதிய உணர்வுகள் எவ்வாறு முனைப்புற்றிருந்தது என்பதனையும் இவ்வாசிரியர் அம்பலபடுத்த தவறவில்லை. “அவர்கள் விழித்துக் கொண்டார்கள்”, “ பொருந்தாத தீர்மானங்கள்”, “மாற்றம் வந்து விட்டது”, “இவன் மிச்சம் நல்லவன்” “எப்டியும் பெரியவன்தான்’ முதலிய கதைகள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும்.

யாழ்பாண சமூகவமைப்பில் நிலவிய சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வந்துள்ளன என்ற போதிலும் அதன் ஆரம்பபால போராட்டங்கள் யாவும் ஸ்தானப மயமாக்கப்பட்டவையாக அமையவில்லை. 1910 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற வட இலங்கை தொழிலாளர்கள் சங்கம் இத்துறையில் தோன்றிய முதலாவது ஸ்தாபனமாகும். அவ்வாறே சிறுபான்மை தமிழர் மகாசபை நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டங்களும் வரலாற்று முக்கியத்துவம் உடையவையாக காணப்படுகின்றன. இவை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை நடாத்தி சிறுசிறு வெற்றிகளை பெற்றிருந்தாலும் சாதிய ஒடுக்கு முறையின் ஆணிவேரை தொடமுடியாமல் போய்விட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும்.

இதன் அடுத்தக்கட்ட நகர்வான தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது மக்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ஒட்டியதாக இருந்தமை அதன் பலமான அம்சமாகும். சாதிய அமைப்பு முறையின் பிரதான மையங்களாக பெரும் ஆலயங்களும் தேனீர் கடைகளும் திகழ்கின்றன என்ற அடிப்படையில் அவற்றினுள் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் தெளிவான நிலைபாட்டினை கொண்டிருந்தது. அதனை தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் ~~அடிமை குடிமை முறை ஒழியட்டும், ஆலய தேநீர்க்கடை பிரவேசம் தொடரட்டும்|| என்ற நிலைபாட்டை முன்வைத்தது. மார்க்சியர்களாலும் ஜனநாயக சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்டபட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது சாதியையும் தீண்டாமையையும் குறி வைத்தே முன்னெடுக்கப்பட்ட போதினும் அப்போராட்டம் சகல விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் பலமான அம்சமாகும்.  அவ்வகையில் அக்காலக்கட்டத்தில் தோன்றிய கலை இலக்கிய வடிவங்களும் புரட்சிகரமான உள்ளடங்கங்களை கொண்டிருந்த அதே சமயம் மக்களை ஒட்டிய கலை வடிவில் அவை படைப்பாக்கி தரப்பட்டன.  

இந்தச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்லும் உரிமை என்பது தாழ்த்தப்பட்ட மக்களும் அவர் சார்ந்த ஜனநாயக சக்திகளினதும் போராட்டத்தின் வெளிப்பாடாகும். இக்கதையாசிரியரின் பல கதைகளில் கோயில் நூழைவுப் பற்றி பதிவாக்கப்பட்டுள்ளன .”எல்லைக் கோடுகள்”, “காவல் அரண்கள்” முதலிய கதைகள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும்.

அவ்வாறே இன்று சாதி ஒழிந்து விட்டதாகவும் அத்தகைய சமூவமைப்பை மாற்றியர்கள் தமிழ் தேசியர்கள் என்ற கருத்தும் நிலவுவதைக் காணலாம். சாதியின் பரிமாணங்கள் வெளிப்படையாகவே தொழிப்படுவதை அவதானித்தால் இன்றும் சாதியின் தாக்கம் எந்தளவு தமிழர் சமூவமைப்பில் தாக்கம் செலுத்தி ஒடுக்குமறைகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என்பதை அவதானிக்க முடியும். அதேசமயம் குறுந் தமிழ் தேசியம் வேர் விட்டு கிளைப்பரப்பியிருந்த காலத்திலும் சாதியத்தின் மோசமான பரிமாணங்கள் எப்படியிருந்தது என்பதை “இன்னுமா” என்ற கதை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. இக்கதை இவரது பரந்துப்பட்ட இதயத்தை மட்டுமல்ல நேர்மையையும் எடுத்துக் காட்டுகின்றது.  

தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்ற சமூகப் பெயர்ச்சியையும் அவவ்வாறே அதிக்க சாதியினரிடையே ஏற்;பட்டு(மிக குறைந்த வீதம்) வந்த பொருளாதார விழ்ச்சியையும் இவர் சுட்டிக்காட்டத்தவறவில்லை. “மூன்று தலைமுறைகள்”, “எப்படியும் பெரியவன் தான்”, “கரையை நோக்கி”, “சன்மானம்”, “அசல் யாழ்பாணத்து மனிதன்”, “வரப்புகள் உயர” முதலிய கதைகளில் இவ்வம்சத்தை காணலாம். ஐரோப்பிய சமூகச் சூழலைப் போல தாழ்த்தப்பட்ட ஒருவர் கல்விக் கற்று விட்டாலோ அல்லது வர்க்கநிலை மாற்றத்தை அடைந்து விட்டடாலோ அவருடைய சாதிய இழிவு மாறாது என்பதை எமது சாதிய சமூகத்தின் வரலாறு உணர்த்தி நிற்கின்றது. அப்படியாயின் இத்தகைய அமைப்பை மாற்றி நாகரிகமானதொரு சமூகவமைப்பை ஏற்படுத்துவதற்க  செய்ய வேண்டியவை யாவை என்ற வினா எழுகின்றது. தலித்தொருவரின் சுயசரிதையாக அமைந்த ஜூதான்(எச்சில்) என்ற நூலில் அந்நூலாசிரியர் ஓம்பிரகாஷ் வான்மீகியின் பின்வரும் கூற்று அவதானத்திற்குசியதாகும். 

“ ஒரு நீடித்த போராட்டம், உணர்வுப+ர்வமான போராட்டம், வெளிஉலகிலும், நம் உள்ளங்களிலும் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வரபோகின்ற ஒரு போராட்டம், சமூகமாற்றத்திற்கு வழிகாட்டுகின்ற உணர்வை நோக்கி நம்மை இட்;டுச் செல்கின்ற ஒரு போராட்டம் நமக்க தேவைப்படுகின்றது.” 

மேற்குறிப்பிட்ட இரத்தின சுருக்கமான வரிகளில் வெளிப்பட்டிருக்கும் பண்பாட்டுக்கான போராட்டத்தை வலியுறுத்தி நிற்பதில் இக்கதையாசிரின் கதைகளுக்கு முக்கிய இடமுண்டு எனத் துணிந்துக் கூறலாம்.

இவ்வருடத்தில் இவ்வெழுத்தாளர் மீது சில விமர்சனங்களும் எழுவது தவிர்க்க முடியாததொன்றாகும். சிறுபாண்மை தமிழர் மகாசபை சாதியத்திற்கு எதிராக முன் வைத்த சாத்வீக போராட்டங்களை படைப்பாக்கியதில் வெற்றிப் பெற்ற இக்தையாசிரியர் அதன் அடுத்தகட்டப் போராட்டமான தீண்டாமை வெகுசன இயக்கப் போராட்டத்தை படைப்பாக்க தவறிவிடுகின்றார். அவ்வாறே சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டுமன்று ஜனநாயக நல்லெண்ணங் கொண்ட ஆதிக்க சாதியினரும் தம்மை இணைத்துக் கொண்டதை  இவரது சிறுகதைகளில் காணமுடியாமை துரதிஸ்டவசமானதொன்றாகும். மேலும் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் முதலாளியானால் அல்லது தாழ்த்தப்பட்ட முதலாளியை எந்த வர்க்கத்தனுள் அடக்குவது. சாதி ஒழிப்பு போராட்டத்தில் மத்தியதர வர்க்க குணாதியம் கொண்டவர்களும், பொருளாதார வசதி வாய்ப்புகளுடன் இருந்தவர்கள் சிலரும் அப்போராட்டத்தை இழிவுப்படுத்தவும் தவறவில்லை. இத்தகையோரை தான் அம்பேத்கர் “தலித் பார்பனர்கள்” என விமர்சனத்திற்குட்படுத்தினார். இவைக் குறித்த பதிவுகளையும் இவரது கதைகளில் காண முடியாதுள்ளது. இவ்வம்சங்களை இக்கதையாசிரியர் கவனத்தில் கொண்டிருப்பாராயின்; சாதிய சமூகத்தின் பன்முகத் தன்னையை வெளிக் கொணர்ந்திருக்க முடியும் என்பது எனது தாழ்மையான விமர்சனமாகும்.

ஆக இக்கதையாசிரியரில்; வெளிப்பட்டு நிற்கும் அரசியல் பண்பாட்டுப் போராட்டம் என்பது தமது கை விலங்கைப் பார்த்து அழுது புலம்பிக் கொண்டிருக்கும் மனிதர்களின் குரலாக அமையவில்லை. சற்றே அந்நியப்பட்டு, உலக அரங்கில் வெற்றிபெற்று வரும் சக்திகளின் குரலாகவும் அமைந்திருக்கின்றது. சமூகத்தில் புறநிலைப்பட்ட வாழ்க்கை மட்டங்களிலுள்ளவர்கள் பற்றிய ஒரு புதிய தரிசனை தான் தமிழ் சிறுகதை இலக்கியத்தில் தெணியானின் வரவைப் பதிவு செய்தது. 

நன்றி: ஜீவநதி


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates